Wednesday, May 28, 2008

"அ.அ. திருப்புகழ்" -- 27 "திமிர வுததி யனைய நரக"

"அ.அ. திருப்புகழ்" -- 27 "திமிர வுததி யனைய நரக"



****** பாடல் ******

ராகம்: பைரவி
தாளம்: திஸ்ர ஏகம் [3]

தனன தனன தனன தனன
தனன தனன....... தனதான

திமிர வுததி யனைய நரக
செனன மதனில் விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு மணுகாதே

அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் வரவேநின்

அருள தருளி எனையு மனதொ
டடிமை கொளவும் வரவேணும்

சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள மிகவே நீள்

சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை விடுவோனே

வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே

மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.



****** பொருள் விளக்கம் ******

[வழக்கம் போல் பின் பார்த்து முன்]
[சிறிய பாடலுக்கு நீட்டி முழக்க வேண்டியிருக்காது என நினைத்தேன்! முழக்கித்தானிருக்கிறேன்!:))]


"சமர முக வெல் அசுரர் தமது
தலைகள் உருள
மிகவே நீள் சலதி அலற
நெடிய பதலை தகர
அயிலை விடுவோனே"

நிலையான தவம் செய்து
அழியாத வரம் பெற்று
எவராலும் வெல்லாத
திறன் கொண்ட இராக்கதரின்
தலைகளெல்லாம் உருண்டிடவும்,

வற்றாத நீருடைய
பரந்திருக்கும் நீளமுடை
கடலினிடை சூரன் ஒளிய
முற்றாக அது வற்றி
அற்றாது அது கதறிடவும்

மாயங்கள் புரிகின்ற
கிரௌஞ்சமெனும் மலையாக
தாரகனும் உருமாற
நெடிதுயர்ந்த அம்மலையை
பொடியாக்கிப் பிளந்திடவும்


அன்னைதந்த வேல் விடுத்து
அரக்கர்குலம் அழித்தவனே!

"வெம் அரவு அணையில் இனிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே"


கொடிய விஷம் கக்குவதால்
வெப்பப் பெருமூச்சினை நா வழியே
வீசுகின்ற ஆதிசேஷன் எனும்
பாம்பணையில் பள்ளி கொண்டு
பங்கயம் போலும் கண்மலர் கொண்ட
நாராயணனின் மருகோனே!


"மிடறு கரியர் குமர"

அமுதம் எடுக்க அசுரரும் தேவரும்
பாற்கடலைக் கடைந்த வேளை
வெப்பம் தாளாது வருந்திட்ட
வாசுகி எனும் பாம்பின் வாயினின்று
புறப்பட்ட கொடும் விஷமாம்
ஆலகாலத்தைத் தான் வாங்கி
தன் கண்டத்தில் வைத்ததினால்
"கரியர்" எனப் பெயர்பெற்ற
சிவனாரின் திருக்குமாரனே!


"பழநி விரவும் அமரர் பெருமாளே"

தேவர் குறை தீர்த்துநின்ற
பெருமைமிகு பழனியிலே
எழுந்தருள் செய்கின்ற பெருமை மிக்கவரே!


"திமிர உததி அனைய நரக செனனம்"

பிறவியும் கடலும் ஒன்றெனச் சொல்வார்
அறிந்தவர் அதனை ஆமென உணர்வார்


கருநீலம் கொண்ட கடல் இருளுற்று இருக்கும்
அறியாமை என்னும் இருள் பிறவியிலே உண்டு

அலைகள் கடலில் அடுக்கடுக்காய் வந்து ஓய்வதே இல்லை
ஆசை பாசம் என்னும் அலைகள் பிறவியில் என்றும் ஓய்வதும் இல்லை

மீனும், மலையும், திமிங்கிலமும் கடலில் வாழும் உயிர்வகைகள்
எண்ணம், பாவம், மதங்கள் என்னும் பல்வகை உணர்வுகள் பிறவியிலே

கரையின்றி நீண்டிருக்கும் கடல்நடுவே நின்றிருந்தால்
கரைகாணா நிலையென்றே பிறவியினைச் சொல்லிடுவார்

கடல் போலும் பிறவியினை தொல்லையெனச் சொல்லிடுவார்
நரகமென நலிந்திருக்கும் தொல்லைகளே இதிலுண்டு!


"அதனில் விடுவாயேல்"

இத்தனை தொல்லைகள் நிறைந்திட்ட
நரகவாழ்வு எனும் பிறவிப் பெருந்துயரில்
எனை ஆழ்த்திட நீ திருவருள் புரிகுவாயேல்

"செவிடு"

'செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்'
என்கின்ற தமிழ்மறையின் வாக்கொப்ப,

கண் இல்லாவிடினும் உணர்ந்து தெரிந்திடலாம்
சுவையுணர்வு இல்லாவிடினும் விழுங்கி உயிர் வாழ்ந்திடலாம்
மணம் உணராவிடினினும் சுவையிருப்பின் பயனுண்டு
தொடுவுணர்வு இல்லையெனினும் செவி வழியே உணர்ந்திடலாம்

பிறந்தவுடன் பெயர் ஓதுவதும் செவியிலேயே
முதலாண்டு அணிகலனும் செவித் தோடே
'தோடுடைய செவியன்' என சிவனாரைப் புகழ்வதுவும் செவிவழியே
எழுத்தறிவு உணர்ந்திடும்முன் கேட்பதுவும் செவிவழியே
'ஓம்' என்னும் வரிவடிவில் அமைவதுவும் செவியேதான்
மரிக்கையிலே வழியனுப்ப மந்திரம் சொல்லுவதும் செவியிலேதான்
இத்தகைய செவியுணர்வு நன்கருளி செவிடில்லாமலும்,

"குருடு"

அருள்மேனி காண்பதற்கு அருளுவதுவும் கண் வழியே
திருவாளர் துணை காணத் தேவையிங்கு கண்கள் இங்கே
'கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க' எனக் கோதை
சொன்னதுவும் கண் குறித்தே என்பதினால் குருடில்லாமலும்,

"வடிவு குறைவு"

இறைவனாரை,
வாழ்த்துதற்கு வாய் வேண்டும்
வணங்குதற்குத் தலை வேண்டும்
அருச்சிக்கக் கைகள் வேண்டும்
வலம் வந்திடக் கால்கள் வேண்டும்
எனவே,
என் வடிவினில் எக்குறையும் இல்லாமல்
சுத்தமாகப் படைத்திடவும்,

"சிறிது மிடியும் அணுகாதே"

'கொடிது கொடிது வறுமை கொடிது' என்கின்ற
தமிழ் மூதாட்டி அவ்வை சொன்னது போல்
வறுமை,
வனப்பை அழித்து உலர்த்தி வாட்டும்
உறவினிடை கலகத்தை உண்டாக்கும்
சோம்பல் மிக வளர்க்கும்
கஞ்சகுணம் மிகவாகும்
பொய், பேராசை, அவமானம் என்கின்ற
தீயவையை நம்முள் வளர்க்கும்
எனவே,
சிறிதளவும் வறுமையென ஒன்று என்னை
அணுக வேண்டியதே கூடாதென வேண்டுகின்றேன்


"அமரர் வடிவும் அதிக குலமும்
அறிவு நிறையும் வரவே"


மருவற்ற தேகமுடைய
தேவர்போலும் வடிவும்
நன்நெறியில் திகழ்கின்ற
மேன்மைக் குணங்கள்
நிறைந்திருக்கும் குலத்தினிலே
யான் பிறந்து நல்லறிவும்
நிறைவான குணங்களும்
எனக்கு வந்திடவே


"நின் அருள் அது அருளி எனையும் மனதொடு
அடிமை கொளவும் வரவேணும்"


நினது திருவருளை எனக்கு மிகவருளி
என்னை மட்டுமல்லாமல் என் மனத்தினையும்
நீ அடிமை செய்து, நினது வசமாக்கி
தடுத்தாட்க்கொண்டிட வந்தருள வேண்டும்!
*************************************************


அருஞ்சொற் பொருள்

திமிரம் - இருள்
உததி - பெருங்கடல்
மிடி - தரித்திரம்
சமர முகம் - போர்க்களம்
சலதி - கடல்
பதலை - மலை
தகர - உடைய
அயில் - வேலாயுதம்
வெம் - வெப்பம்
அரவு - பாம்பு
அணை - மஞ்சம்
மிடறு - கண்டம், தொண்டை
மிடறு கரியர் - விடம் உண்டதால் கரிய தொண்டை உடைய சிவன்
விரவும் - எழுந்தருளியிருக்கும்
******************************************


வேலும் மயிலும் வாழ்க!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
*******************************

Read more...

Sunday, May 25, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 8

"பாரதி" --சில காட்சிகள் -- 8


முந்தைய பதிவு இங்கே

'இனி எப்போதும் உரைத்திடேன்; இதை நீ மறவாதிருப்பாய்; மடமை நெஞ்சே! கவலைப் படுதலே கருநரகமம்மா! கவலையற்று இருத்தலே முக்தி! சிவன் ஒருமகன் இதை நினக்கு அருள் செய்கவே!'
என்ன செய்ய வேண்டும் இந்த மனம்! இந்த மக்கள்!
விடுதலை பெற?
[அடுத்த பதிவில்]


'விடுதலை' பெற, ' செய்க தவம்! செய்க தவம், நெஞ்சே! ' என மனதுக்குச் சொல்லித் தருகிறான்.

'தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்' எனவும் உற்சாகப் படுத்துகிறான்.

'அன்பிற் சிறந்த தவமில்லை. அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு.' என முடிக்கிறான்.

இந்த அன்பென்னும் ஒன்றே மனிதரின்..... அவர்கள் மனங்களின் 'இயல்பு'; இதைத் தவிர வருகின்ற மற்றதெல்லாமே, எம்முடைய இயற்கை குணம் இல்லையெனவும் வலியுறுத்துகிறான். அப்படி வருகின்ற மற்ற குணங்களை எல்லாம் எப்படி வெல்வதாம்? சொல்கிறான் பாரதி!

'இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்.'

எம்முடைய செய்கைகள் எல்லாமே இந்த மனத்தின் ஆசையினால் விளைகின்ற ஒன்று. இதுதான் இந்த மனத்தின் இன்னொரு இயல்பு.

'செயல் இங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்'

எனவே உனது ஒரே இயல்பான அன்பு கொள்வதை, அன்பு செலுத்துவதை, அன்பைக் காட்டுவதை, ஏன் செய்ய மறுக்கிறாய் எனவும் சாடுகிறான்.

'சீர்மிகவே பயிலு நல்லன்பை இயல்பு எனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்'

ஆம்! இவனுக்குத்தான்,,.... இவனது மனமே முப்பது கோடி ஆயிற்றே! அவர்களுக்கும் சேர்த்தேதான் சொல்லுகிறான்!

'முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே!'

ஆத்மாவே விநாயகன் தான் எனச் சொல்லியவன், அந்த விநாயகனை அனுதினமும் நினைத்து, விடுதலை பெறவேண்டுமாயின் அன்பெனும் தவத்தை அயராமல் செய்து, அன்பு ஒன்றே உன் இயல்பு என்பதை உணர்ந்து செயல்படுவாய் enkiRaan

[moympu (p. 828) [ moympu ] , s. strength, valimai; 2. the shoulder, tol.]

இயல்பு என்பதே ஒரு வலிமை, உன்னோடு உடன் வரும் ஒரு துணை என்பதை மிகவுமே அழுத்தமாகச் சொல்லுகிறான் பாரதி!

இந்தத் துணையின் உதவியோடு நிகழ்கின்ற கலியை நீக்கி, வரப்போகும் கிருத யுகத்தினை எம்மால் கொண்டுவர முடியும் என்பதைச் சொல்ல வந்து, அதற்கு என்ன செய்யவேண்டும்? எனச் சொல்லப் புகுகிறான் பாரதி.

வரிசையாகச் சொல்லுகிறான் நோய் தீர்க்கும் ஒரு மருத்துவரின் மருந்துச் சீட்டு போல!

'மொய்க்கும் கவலை போக்கி;


முன்னோன் அருளைத் துணை ஆக்கி;

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி;

உடலை இரும்புக்கு இணை ஆக்கி;

பொய்க்கும் கலியை நான் கொன்று;

பூலோகத்தார் கண் முன்னே;

மெய்க்கும் கிருத யுகத்தினையே;

கொணர்வேன்; தெய்வ விதி இஃதே'

இதைச் செய்தால் எவரால்தான் வெல்ல முடியாமல் போகும்?

நிறையச் சொல்லிவிட்டான் பாரதி!
நிறையவே கேட்டு விட்டான் விநாயகனிடம் பாரதி!
அவனுக்கே பாவமாய் இருக்கிறது விநாயகனை நினைத்து!
முடிக்கும் முன் கொஞ்சம் வாழ்த்தி இவனைப் பாடலாமே என எண்ணுகிறான்!
சொற்களுக்கா பஞ்சம் இவனிடம்?
பொழிகிறான்!

'விதியே வாழி!
விநாயகா வாழி!
பதியே வாழி!
பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே போற்றி!

இச்சையும் கிரியையும் ஞானமும் என்று ஆக்கும்
மூல சக்தியின் முதல்வா போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி!
காலம் மூன்றையும் கடந்தான் வாழி!

சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி!
வீரம் வாழி!
பக்தி வாழி!
பலபல காலமும் உண்மை வாழி!
ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை அமரர் பதங்களாம் கண்டீர்!
பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் கொண்டனன்!
வெற்றி தரும் சுடர் விநாயகன் தாள் இணை வாழியே!'


ஏன் கிருத யுகம்?
கலி யுகத்திற்கு என்ன கேடு!

பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு வேறு சான்றே தேவையில்லை!
இந்த விநாயகர் நான்மணிமாலை ஒன்றே போதும்!

1920 - 1930
வெள்ளையர் ஆட்சியை அடியோடு ஏற்று மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்ற அவலம்.
இன்னமும் காந்தி என்கின்ற மகானின் அருமையை முழுதுமாக மக்கள் அறியாத நேரம்!

இது கலியின் நிகழ்வு என நினைக்கிறான் பாரதி!
சிந்திக்கிறான்!
கலி முடிந்தால் அடுத்து வரவிருப்பது கிருத யுகம்!
கலி ஏன் முடியவேண்டும்? நாமே அதை முடித்தால் என்ன என அலறுகிறான்!
ஏ மனம் மயங்கிய மக்களே! அன்பைக் கொள்ளுங்கள்! அனைவரிடமும் அன்பு பாராட்டுங்கள்! கலியுகம் முடிந்து கிருத யுகம் தானே மலரும் எனக் கதறுகிறான்.
உங்களது ஆன்மாவான விநாயகனின் அடி பணிந்தால் அன்பு தானே மலரும் என அடித்துச் சொல்லி முடிக்கிறான் பாரதி!

நான்மணிமாலை என்றால் என்ன?
வெண்பாவில் தொடங்கி, கலித்துறையில் பா ஒன்றை அடுத்து வைத்து, மூன்றாவதாக ஒரு விருத்தம் பாடி, கடைசியாக ஒரு அகவல் பாடி நான்கு விதமாக ஒரு கவியை அளிக்கிறான் இங்கு!

இப்படி நான்கு நான்காக பத்து பாடல்கள்!

ஆக மொத்தம் 40 பாடல்கள்.

விநாயகனுக்கு இந்த வகையில், ஒரு நான்மணி மாலையால் அணி செய்கிறான் பாரதி!

இத்துடன் இந்தக் காட்சி நிறைவடைகிறது.

நான்மணிமாலை முழுதும் இன்னும் ஓரிரு நாட்களில் இடுகிறேன்.

அடுத்த சில காட்சிகள் வேண்டுமா என இதுவரை படித்தவர்கள் சொன்னால், தொடரலாம்.

இல்லையேல், இத்துடன் நிறை செய்கிறேன்.

நன்றி! வணக்கம்!

Read more...

Tuesday, May 20, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 7

"பாரதி" -- சில காட்சிகள் -- 7

முந்தைய பதிவு இங்கே!

'சரி, எதற்காக இவ்வளவு பீடிகை போடுகிறான் பாரதி?

அப்படி என்ன வரம் கேட்கப் போகிறான்?
[அடுத்த பதிவில்]'...................


மணக்குள விநாயகனை நெருங்குகிறான்.
தான் கேட்கப்போகும் வரத்தின் சுமை அவனுக்குப் புரிகிறது.
ஆகவே, சற்றுத் தயங்குகிறான்!

என்ன! பாரதிக்குத் தயக்கமா? எதற்கும் அஞ்சாதவனுக்கும் தயக்கமா! வியக்கிறார் கணபதி!

என்ன விஷயம் என்பதுபோலப் பார்க்கிறார்! மெதுவாக ஆரம்பிக்கிறான்.....,

'யாரும் இதுவரைக்கும் உன்னிடம் சொல்லாத ஒன்றைச் சொல்லப் போகிறேன், விநாயகரே! இதுவரை யாரும் உன்னிடம் கேட்டுகூட இருந்திருக்க மாட்டார்கள்!' எனத் துவங்குகிறான்.

விநாயகர் புருவங்களை உயர்த்தியபடியே வியப்பு கலந்த சிரிப்புடன் பாரதியை மேலும் சொல்லத் தூண்டுகிறார்!

"பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்" என்கிறான் பாரதி.

அப்படி என்னதான் கேட்கப் போகிறான் பாரதி? பொன்னா?.. பொருளா? இல்லை வேறு ஏதாவதா?..... அதையெல்லாம் என்னிடம் கேட்கமாட்டானே! வழக்கமாக என் அம்மாவிடம்தானே கேட்பான்! இப்போது என்னிடம் வந்து 'ஏதேதோ சொல்லத் துணிகிறேன்' என வேறு சொல்கிறானே என கணபதிக்கு இப்போது மெய்யாகவே வியப்பு மேலோங்குகிறது.

'மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள், யாவும் "என் வினையால்" இடும்பை தீர்ந்தே இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவதேவா!' என ஒரு போடு போடுகிறான்!

அதாவது, இவன் செய்யப்போகும் செயல்களின் மூலமாகவே இந்த அனைத்துச் செயல்களும் நிகழ வேண்டுமாம். அதையும் தான் எப்படிச் செய்வேன் என, விநாயகரிடம் நிபந்தனை போடுகிறான்!

'ஞான ஆகாசத்து நடுவே நின்று நான், "பூமண்டலத்தில் அன்பும், பொறையும் விளங்குக: துன்பமும், மிடிமையும், நோவும், சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க" என்பேன்! இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி, "அங்ஙனே ஆகுக" என்பாய் ஐயனே!'

எப்போது இது நிகழ வேண்டுமாம் இவனுக்கு?

இப்போது முழுத் தைரியமும் திரும்ப வந்துவிட்டது! தயக்கம் விடை பெற்றுச் சென்றுவிட்டது! கேட்கிறான்!

'இந்நாள் இப்பொழுது எனக்கு இவ்வரத்தை அருள்வாய்; ஆதிமூலமே! அநந்த சக்தி குமாரனே! சந்திர மவுலீ நித்தியப் பொருளே! சரணம் சரணம் சரணம் இங்கு உனக்கே' என கணபதி தாளில் வீழ்கிறான்!

என்ன ஒரு உள்ளம் பாருங்கள்! இவ்வுலகம் செழித்திருக்கவே இவ்வளவு நேரமாக கணபதியிடம் மன்றாடியிருக்கிறான். அது தன்னால் நிகழ வேண்டும்... நிகழ்த்த முடியும்... என்னும் திடநம்பிக்கையுடன்!

'உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன்; மனக் கேதம் யாவினையும் மாற்றி, எனக்கே நீ நீண்ட புகழ் வாழ்நாள், நிறைசெல்வம், பேரழகு வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து' என உடனே அடுத்ததாகக் கேட்கிறான்!

இது கொஞ்சம் வியப்பாக இருக்கிறதல்லவா? இவ்வளவு நேரம் நம் அனைவருக்குமாக வேண்டியவன், என்னடா! இப்போது இவையெல்லாவற்றையும் கேட்கிறானே! என்று முகம் சுளிக்க வைக்கிறானோ?!!!

சற்றுப் பொறுங்கள்! பாரதியின் உள்ளம் விரைவில் புரியும்!

'விரைந்து உன் திருவுளம் என்மீது இரங்கிட வேண்டுமைய்யா! குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன், அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா! வரங்கள் பொழியும் முகிலே! என் உள்ளத்து வாழ்பவனே!' என்று, காக்கும் கடவுள் திருமாலையும் சேர்த்தழைத்து, கூடவே இலக்குமியையும் வைத்துப் பாடுகிறான்.

நம் வியப்பு இன்னமும் அதிகமாகிறது!

இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்பது போல விநாயகர் பார்க்கிறார்!
அதற்கும் உடனே ஒரு பதில் தயாராக வைத்திருக்கிறான் பாரதி!

'வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத பணிமலரே!' என் உள்ளத்தில் சலனமில்லாது முதலில் நீ வந்து உட்கார்! இந்தப் பரந்த வெளி முழுவதும் அன்பினால் சூழட்டும்! எல்லாத் துயர்களையும் தொலைத்துவிடு! தொலையாத இன்பத்தை விளைத்துவிடு! இந்தக் கலிகாலத்தின் கொடுமையெல்லாம் வீழ்ந்து போகச் செய்! கிருத யுகத்தை எங்களுக்குக் கொடு!' எனக் கட்டளையிடுகிறான்!

'ஆழ்க உள்ளம் சலனமிலாது! அகண்ட வெளிக்கண் அன்பினையே சூழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக! வீழ்க கலியின் வலியெல்லாம்! கிருத யுகந்தான் மேவுகவே!'

எனப் பாடியவனின் கவனம் உடனே தன் நெஞ்சத்தின் மீது படிகிறது!

நடப்பது எதுவும் புரியாமல், உணராமல் அது இன்னமும் அச்சத்துடன் நடுங்கிக் கொண்டிருக்கிறது! பாரதிக்குக் கோபம் வரத் தொடங்குகிறது!

'நான் தான் இங்கே உனக்காகக் கேட்டுக் கொண்டிருக்கின்றேனே... பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்! இன்னமும் உனக்கு ஏன் அச்சம்?' என்பதுபோலக் கடிகிறான்!

யார் இந்தப் பாரதியின் 'உள்ளம்"?
கவனமாகக் கேளுங்கள்! பாரதியின் உள்ளம் புரியும்!

'மேவி, மேவித் துயரில் வீழ்வாய்; எத்தனை கூறியும் விடுதலைக்கு இசையாய்! பாவி நெஞ்சே!'
பார்மிசை நின்னை இன்புறச் செய்வேன்; எதற்கும் இனி அஞ்சேன்; ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் அபயம் இங்கு அளித்தேன்.....நெஞ்சே!'
என்று அதற்கு தைரியம் கொடுக்கிறான்!

நாடு என்பதற்கு இரு பொருள் கொடுத்திருந்தான் சற்று நேரம் முன்னர்! இந்தப் பரந்த நாடு, நமது விரிந்து பரந்த உள்ளம் இரண்டையும் பார்த்தே இந்த சாடலைச் செய்கிறான் பாரதி.

'நான் சொன்ன சொல் தவறாதவன். இப்போது உனக்கு நான் சொன்னதை நிலை நிறுத்துவதற்காக, தீயில் குதிப்பேன்; கடலினில் விழுவேன்; விடம் கூட உண்பேன்; இந்த உலகத்தையே அழிக்கவும் தயார்; எது வேண்டுமானாலும் செய்து உன்னைக் காப்பேன்' எனச் சொல்லிவரும் பாரதி, ஒரு அற்புதமான சொல்லைச் சொல்லி, தான் யார்? தன் உள்ளம் எத்தகையது என நிரூபிக்கிறான்........ இல்லை, இல்லை!....... அவன் யாருக்கு நிரூபிக்க வேண்டும்?...... தன் உள்ளத்தைத் திறந்து காட்டுகிறான்!

"மூட நெஞ்சே! முப்பது கோடி முறை உனக்கு உரைத்தேன்; இன்னும் மொழிவேன்" என்கிறான்.

பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவின் ஜனத்தொகை முப்பது கோடி என்பது இங்கு நினைவுகொள்ளத் தக்கது!

ஆம்! அந்த முப்பது கோடி மக்களையும் தன உள்ளமாகப் பாவித்துத்தான், இதுவரை இவன் விநாயகரிடம் மன்றாடிக் கொண்டிருந்தான்!

மன விடுதலை, நாட்டு விடுதலை இரண்டையும் தன்னால் நிகழ்த்த முடியும்.... கணபதி அருளோடு எனத் திடமாக நம்பினான்!

உன் தலையில் இடி விழுந்தால்கூட கவலைப் படாதே...... விடுதலையை நாடு!
எது நிகழ்ந்தாலும் நமக்கேன் என்றிரு!...... விடுதலையை மட்டுமே நாடு!
பராசக்தி பார்த்துக் கொள்வாள்! ...... விடுதலை!!

"நான் என்றோர் தனிப்பொருள் இல்லை; நான் எனும் எண்ணமே வெறும் பொய்" என்றான் புத்தன்; இறைஞ்சுவோம் அவன் பதம்!'

மிக மிகக் கவனமாக சொற்களை வைக்கிறான் பாரதி!

முதலில் காக்கும் கடவுளைக் கூப்பிட்டான்....... தன் தேவைகளுக்கு!

இப்போது விடுதலை பற்றிப் பேசுகையில், நிர்வாணா எனும் தத்துவத்தைப் போதித்த புத்தனை வணங்குகிறான்.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், தன் சுய விடுதலை பற்றிய தோத்திரம் போல இது தெரிந்தாலும், அவன் வேண்டுவதெல்லாம் இந்த நாட்டு விடுதலை ஒன்றை மட்டுமே!

ஒரே கவியில் இரு பொருள் வைத்துப் பாடுகிறான்.

புதுவையில் தஞ்சம் அடைந்திருந்த நேரத்தில் பாடிய பாடல் இது! அதிகம் சொல்ல அவனால் இயலாது!

எனவே, சொல்கிறான்!

'இனி எப்போதும் உரைத்திடேன்; இதை நீ மறவாதிருப்பாய்; மடமை நெஞ்சே! கவலைப் படுதலே கருநரகமம்மா! கவலையற்று இருத்தலே முக்தி! சிவன் ஒருமகன் இதை நினக்கு அருள் செய்கவே!'

என்ன செய்ய வேண்டும் இந்த மனம்! இந்த மக்கள்!
விடுதலை பெற?

[அடுத்த பதிவில்]

Read more...

Sunday, May 18, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 6

"பாரதி" -- சில காட்சிகள் -- 6


முந்தையப் பதிவு இங்கே!





'அடுத்து, 'நாட்டிற்கு உழைத்தல்' என்பது பற்றி ஒரு புதுமை விளக்கம் கொடுக்கிறான் பாரதி!
அடுத்த பதிவில்!'
எனச் சொல்லியிருந்தேன்.
அது என்னவெனப் பார்ப்போம்!


"நாட்டிற்குழைத்தல்" என்னவெனச் சொல்லப் புகும் முன், அதற்கு முதலில் பொறுமை மிகவும் அவசியம் எனச் சொல்ல வருகிறான். சட்டென, தன்னிடம் இல்லாத அதை எப்படி வரவழைப்பது என ஒரு ஐயம் பாரதிக்குத் தோன்றுகிறது. அதே வேகத்தில் பதிலும் கிடைக்கிறது.

ஆம்! கணபதியைப் பணிந்தால்தான் எதுவுமே கிடைத்துவிடுமே! அவரையே கேட்போம் எனத் துவங்குகிறான்.

'எனை நீ காப்பாய், யாவுமாம் தெய்வமே!
பொறுத்தார் அன்றே பூமி ஆள்வார்?
யாவும் நீ ஆயின், அனைத்தையும் பொறுத்தல் செவ்விய நெறி. அதில் சிவநிலை பெறலாம். பொங்குதல் போக்கிப் பொறை எனக்கு ஈவாய்!
மங்கள குணபதி; மணக்குள கணபதி;
நெஞ்சக் கமலத்து நிறைந்து அருள் புரிவாய்;
அகல்விழி உமையாள் ஆசை மகனே!'


முன்னம் என் ஆன்மாவே நீதான் எனச் சொல்லிய கணபதியிடம் இப்படி வேண்டிய அவன், தொடர்கிறான்.
நாடு என்பதற்கு அவன் அளிக்கும் விளக்கம் இது!

'நாட்டினைத் துயரின்றி நன்கு அமைத்திடுவதுவும்' 'உளம் எனும் நாட்டை ஒரு பிழையின்றி ஆள்வதுவும்' பேரொளி ஞாயிறே அனைய சுடர்தரு மதியொடு துயர் இன்றி வாழ்தலும்' 'நோக்கமாக் கொண்டு நின் பதம் நோக்கினேன்!'

நாம் வாழ்வது நாடு என்றால், நம் உயிர் வாழ்கின்ற இந்த உடல் தாங்கிய உள்ளமும் ஒரு நாடே எனப் புதுப் பார்வை வைக்கிறான்!

சுற்றியிருக்கும் இந்த நாட்டைத் திருத்துவது எவ்வளவு தலையாய பணியோ, அதே போலத்தான், நம் உள்ளத்தைச் செம்மையாக வைத்திருத்தலும் எனப் பாடம் புகட்டுகிறான்!

'காத்தருள் புரிக கற்பக விநாயகா! காத்தருள் புரிக கடவுளே! உலகெலாம் கோத்து அருள் புரிந்த குறிப்பரும் பொருளே! அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்! எங்குல தேவா போற்றி! சங்கரன் மகனே! தாள் இணை போற்றி!' எனப் போற்றி முடிக்கிறான்.

தன் தொழில் இன்னதென்று தெரிந்துவிட்டதால், இப்போது ஒரு பெரிய செய்தி சொல்ல விழைகிறான் பாரதி! அதற்கு வாணி சரஸ்வதியின் அருள் தனக்குக் கிட்ட வேண்டும் ; அப்போதுதான் கவிதைத் தொழிலைச் செவ்வனே செய்ய முடியும் என நினைத்து, வேண்டுகிறான்..... கணபதியைத்தான்!

'போற்றி! கலியாணி புதல்வனே!' என அடுத்த பாடலைத் துவங்கி,
'பாட்டினிலே ஆற்றல் அருளி அடியேனைத் தேற்றமுடன் வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்!' என்கிறான்!

என்ன வேண்டுமாம்?

'வாணியருள் வீணையொலி என் நாவில் விண்டு' வைத்துவிட அருள் செய்யப்பா! என மனமுருகி வேண்டுகிறான்!

அப்படி 'விண்டு' வைத்தால், ஏ! 'புதுவை விநாயகனே!' இதோ உனக்கு விளக்கமாகச் சொல்கிறேன்!

'தொண்டு உனது அன்னை பராசக்திக்கு என்றும் தொடர்ந்திடுவேன்' எனச் சொல்லி விநாயகனைக் குளிர்விக்கிறான்.

நமக்கு ஒரு காரியம் நடக்கவேண்டுமென்றால், அதை நிறைவேற்றக்கூடிய ஆளுக்கு நெருக்கமானவரைக் கவனிப்போம் என்பதுபோல, 'உன் அம்மாவை.... ஏனென்றால், இவர்தான் அகல்விழி உமையாளின் ஆசை மகனாயிற்றே!.... நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்!' என இவரைக் குஷிப்படுத்துகிறான்!

அது மட்டுமா! 'பண்டைச் சிறுமைகள் போக்கி, என் நாவில் பழுத்த சுவைத் தண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே!' எனவும் ஒரு கூடுதல் விண்ணப்பம் வைக்கிறான்.

ஒரு வரம் கேட்க எண்ணுகிறான் கணபதியிடம்! நிச்சயம் தந்துவிடுவான் என நம்புகிறான்!

இவனது முப்பெரும் தொழில்களான, 'கவிதை செய்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல், நாட்டிற்குழைத்தல்' இவை மூன்றுக்கும் உதவ முப்பெரும் சக்தியரைத் துணைக்கழைக்கிறான்....கூடவே, அதில் கணபதியையும் வைத்துப் பாடுகிறான்!

பொருள்நலம் அளிக்கும் இலக்குமி, இவளைச் 'செந்தாமரையில் சேர்ந்திருக்கும் செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி' எனப் போற்றி, 'தான் செய்ய வேண்டிய செயல்களை எல்லாம் இவனே எனது "கையாள்" போலச் செய்கிறானே என அவள் மனமகிழ்ந்து, 'அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து செய்வாள்' எனச் சொல்லுகிறான்.

இந்தச் 'செய்தொழில்' என்னும் வினைத்தொகைச் சொல் மிகவும் ஆழ்ந்த பொருளுடையது. தான் 'இதுவரையில் செய்த, இப்போது செய்கின்ற, இனிச் செய்யப் போகின்ற', என எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து பெரிதாக அடிபோடுகிறான் பாரதி!

'புகழ்சேர் வாணியும் என்னுள்ளே நின்று தீங் கவிதை பெய்வாள்' எனவும்,
'சக்தி துணை புரிவாள்' எனவும் சொல்லிவிட்டு,

இதெல்லாம் எப்போது நிகழும் தெரியுமா, ஓ, மணக்குள கணபதியே!,'பிள்ளாய் நின்னைப் பேசிடிலே' என ஒரு போடு போடுகிறான்..... ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் அடிப்பது போல!

சரி, எதற்காக இவ்வளவு பீடிகை போடுகிறான் பாரதி?
அப்படி என்ன வரம் கேட்கப் போகிறான்?

[அடுத்த பதிவில்]

Read more...

Friday, May 16, 2008

"தாய்க் கனவுகள்"

"தாய்க் கனவுகள்"

அன்னையர் தினத்தை ஒட்டி பலரும் சிறப்பாக எழுதிவிட்டார்கள்! இனி என்ன எழுத இருக்கிறது என நினைத்தபோது, ஒரு எண்ணம் வந்தது. ஏதேதோ காரணங்களுக்காகத் தங்கள் பிள்ளைகளைப் பிரிந்து, அவர்கள் மீண்டு[ம்] வரும் நாளை எதிர்நோக்கி வாழ்நாளைக் கழித்துவரும் அனைத்து அன்னையர் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக என் எண்ணத்தில் உதித்த இந்தச் சந்தக் கவிதையை இவர்கள் எல்லாருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.


"இந்த உலகில் தவறான[அன்பில்லாத] பிள்ளைகள் இருக்கலாம்; ஆனால் தவறான [அன்பில்லாத] தாய் என எவரும் உண்டோ அம்மா!" என ஆதி சங்கரர் கதறிய சொற்களை முன் வைத்து இந்தக் கவிதையைச் சமர்ப்பிக்கின்றேன்!


எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புடன் வாழ்க!
வாழ்க அன்னையர்!

கடலி னின்று மேகங்கள் எழும்பும்; காற்றுடன் கலந்து கார்முகில் ஆகும்!
காற்றலை அதனை வானத்தில் நடத்தும்; குளிரலை சேர்ந்து மழையும் பொழியும்!
விண்ணில் இருந்து மண்ணை நோக்கி சரமாய் மழையும் தரையினை நாடும்!
மழைநீர் வெள்ளம் ஆறாய் மாறிச் செல்லும் வழியெலாம் சோலையை விரிக்கும்!
மண்ணின் உயிர்கள் மகிழ்ந்தே வாழ்ந்திட மழைநீர் தன்னின் பங்கினைச் செய்யும்!
தன்பணிமுடித்து கசடினை வழித்து கடலினைத் தேடி நதியும் விரையும்!
பிறப்பிடம் தேடிச் சென்றிடும் ஆறினைத் தாய்க்கடல் தாவித் தன்னில் கொள்ளும்!
மீண்டும் இயக்கம் இதுபோல் தொடங்க தாயின் கண்ணீர் மழையாய் மாறும்!

அன்பே! நீயும் அதுபோல் கண்ணே! என்னில் பிறந்து, என்னுள் வளர்ந்து,
என்னில் கிளம்பி, எங்கோ சென்று, பண்ணும் செயல்கள் பண்புடன் ஆற்றி,
மண்ணின் மானம் தன்னில் வளர்த்து, மாண்புகள் பலவும் நின்னில் கொண்டு,
சொல்லிய சொல்லின் துயரினைத் துடைத்து, கள்ளில் ஊறிய மலர்போல் சிரித்து
என்னைத் தேடி ஒருநாள் வருவாய்! இறையவன் ஈந்த நல்வரம் நீயே!
கண்ணைவிட்டுப் பிரிந்திருந்தாலும், கண்ணே நின்னை நினைத்தே இருந்தேன்!
என்னில் நின்னைக் கூட்டும் நாளை உள்ளில் வாழும் இறையிடம் கேட்டேன்!
''தருவேன்! தருவேன்! எல்லாம் தருவேன்! கவலை உனக்கேன்!'' எனவே சொல்ல...

யானும் சிரித்தேன்!

Read more...

Wednesday, May 14, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 20 "இன்னா செய்யாமை"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 20 "இன்னா செய்யாமை"

"என்னப்பா வருத்தமா இருக்கற மாரி கீறே! இன்னா சமாச்சாரம்? ஆராச்சும் இன்னாவாவுது சொன்னாங்களா? சொல்லு!" என மயிலை மன்னார் மூன்றாம் முறையாக என்னைக் கேட்டான்!

நான் பதில் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தேன்!

"இப்ப, நீ சொல்லப் போறியா இல்லியா? இல்லேன்னா கிளம்பு. எடத்தைக் காலி பண்ணு!" எனச் சற்று கோபத்துடன் அதட்டவே, அவனைப் பார்த்து,

'சரி, சொல்றேன். ஆனா, நீ என்னைக் கோவிச்சுக்கக்கூடாது! நான் செஞ்ச ஒரு காரியம் எனக்குப் பிடிக்கலை. அதான்!' எனத் தயக்கத்துடன் இழுத்தேன்!

'எனக்குத் தெரியும் நீ இன்னா சொல்லப்போறேன்னு! நானே ஒன்னியக் கேக்கணும்னுதான் இருந்தேன்! நீ அப்பிடியாப்பட்ட ஆளில்லியே! இவன் ஏன் இதுலெல்லாம் போயி வாயைக் கொடுக்கறான்னு நெனைச்சேன்! சரி, பட்டுன்னு விசயத்தைச் சொல்லு' என்றான்.

'ஒண்ணுமில்லேப்பா! எம்மனசுக்கு சரின்னு பட்ட கருத்தை .. கவனிச்சுக்கோ.. கருத்தை மட்டும் தான் சொன்னேன். அதைத் தனிப்பட்ட முறையிலே எடுத்துகிட்டு, நான் அவங்களை தாக்கினதா கொஞ்சப்பேரு நினைக்கறாங்க! அதான் இன்னா பண்றதுன்னு உங்கிட்ட கேட்டா நீ எதுனாச்சும் சொல்லுவியேன்னு வந்தேன்' என்றேன்.

'முதல்ல நீ ஒன்னோட நண்பங்க ஆருன்னு ஒரு வரையறுத்துக்கணும். முடிஞ்சா அவங்க கூட மட்டுமே ஒன்னோட கருத்தையெல்லாம் வைச்சுகிட்டேன்னா, ஒனக்கு நல்லது! அல்லார்கிட்டியும் போயி, சொல்றியா, சொல்லு... வேணாங்கலை! ஆனா, அது அவிங்களுக்குப் புடிக்கலியா... டக்குன்னு கழண்டுக்க. மேக்கொண்டு வாதம் பண்ணிகிட்டு நிக்காத! போகாமலே இருந்தா இன்னும் விசேசம்! நீயும் ஒனக்கு தோணிணத எளுதறதுக்கு நேரம் கிடைச்ச மாதிரியாவும் இருக்கும். ஆனா, அடுத்தவன் இன்னா செஞ்சாலும், நீ நெதானத்த விடவே கூடாது! அடுத்தவங்க இன்னா சொன்னாலும், நீ பதிலுக்கு பதில் சொல்லிக்கினே நிக்காம 'ஜூட்' வுட்டுறணும்! இத்த நல்லா நெனைப்புல போட்டுக்கோ! இத்தப் பத்தி ஐயன் செம சூடா சொல்லியிருக்காரு! இப்ப ஒனக்காக அதச் சொல்றேன். கேட்டுக்கோ!' என ஒரு பெரிய சொற்பொழிவே ஆற்றிவிட்டான்! மயிலை. மன்னார்!

இனி வருவது குறளும் அதற்கு மயிலை. மன்னார் அளித்த விளக்கமும்!

"அதிகாரம் - 32" "இன்னா செய்யாமை

'சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.' [311]


இப்ப ஒரு காரியம் செஞ்சேன்னா, ஒனக்கு நெறைய துட்டு கிடைக்கும்னு வைச்சுக்கோ! அதும் மூலமா, நீ பெரிய பணக்காரனாக் கூட ஆயிறலாம்னும் வைச்சுக்கோ! ஆனாக்காண்டி, அந்தக் காரியத்தப் பண்ணினா, மத்தவங்களுக்கு கஸ்டம் வரும்னா, அத்தச் செய்யாமலியே இருக்கறதுதான் ரொம்ப நல்லது. அதான் மனசு சுத்தமா இருக்கறவங்களோட கொள்கைன்னு ஐயன் சொல்றாரு.


'கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.' [312]


அத்தோட வுடலை வள்ளுவரு. இந்த மாரி மனசு சுத்தமா இருக்கறவங்களுக்கு இன்னோரு கொள்கையும் இருக்குதாம்! அத்து இன்னான்னா, அடுத்தவங்க வந்து ஒரு கஸ்டத்தைக் கொடுத்தாகூட, அதை சகிச்சுகிட்டு, பொறுமையாப் போயிருவாங்க. திருப்பி அவங்களுக்கு ஒரு தொல்லையும் கொடுக்காம..!! புரியுதா?


'செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும்.' [313]


இப்ப, நீ ஒண்ணுமே பண்ணலைன்னு வைச்சுக்குவோம். ஆனா, அடுத்த ஆளு ஒருத்தர் வந்து உனக்குத் தொல்லை கொடுத்து வருத்தத்தைக் கொடுக்கறாரு. இப்ப ஒனக்கு இன்னா தோணும்? பதிலுக்கு இன்னா சொல்லலாம்... இல்லாக்கட்டி.. இன்னா செய்யலாம்னுதானே! அத்தான் கூடாது! அப்பிடி நீயும் திருப்பிச் செஞ்சியானா, அது ஒன்னியப் போட்டு வருத்திக்கிட்டே இருக்கும்னு எச்சரிக்கை பண்றாரு ஐயன்!


'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.' [314]


இது ஒனக்கு மட்டுமில்ல... நம்ம ஆளுங்க அல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு குறளுதான்! ஒவ்வொருத்தனும் ஒரு ஆயிரம் வாட்டியாவது கேட்டிருப்பாங்க! கேட்டு இன்னா புண்ணியம்? அப்பிடி செய்யறவங்க ரொம்பக் கம்மி!

ஒருத்தர் ஒரு கஸ்டத்தை ஒனக்குக் கொடுத்தார்னா, திருப்பி அவனுக்கு நீ ஒரு கஸ்டத்தைக் கொடுக்காதேன்னு முந்தின குறள்ல சொன்னாருல்ல? இப்ப அதுக்கும் மேல ஒரு படி போயி, அது மட்டுமில்லைடா மவனே! திருப்பி செய்யறதா இருந்தா, நீ அவஙளுக்கு ஒரு நல்ல காரியத்தைப் பண்ணிருன்னு புத்தி சொல்றாரு. நல்லாக் கேட்டுக்கோ!



'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.' [315]


இப்ப வீதியில நடந்து போய்க்கினே கீறே நீ! ஒரு ஆளு அடிபட்டு விளுந்து கிடக்கான். ரெத்தமாக் கொட்டுது. அத்தப் பாத்துகினே, நம்ம சோலியப் பாக்கப் போவோம்னு போயிராதே! ஒடனே, அது ஒங்குடுமத்துலியே ஒருத்தருக்கு நடந்த மாரி நெனைச்சுகினு, அந்த ஆளுக்கு வேண்டிய ஒதவியை நீ செய்யணும்! அப்பத்தான் ஒனக்கு ஆண்டவன் கொடுத்த அறிவு இருக்குதுன்னு அர்த்தமாம். அறிவில்லாதவந்தான், நமக்கென்ன போச்சுன்னு போயிருவான்னு சொல்லாம சொல்லி வெளங்க வைக்கறாரு. புத்தர், ஏசுநாதர், அல்லான்னு எல்லா பெரிய மனுசங்களும் சொல்லிகினே இருக்கற ஒரு சமாச்சாரம் இது!


'இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்.' [316]


கஸ்டம்னா இன்னான்னு ஒனக்குப் புரியுந்தானே? வருத்தம்னா இன்னான்னு தெரியுந்தானே? அப்போ அது மாரி விசயம்லாம் மறந்துங்கூட அடுத்தவனுக்குப் பண்ண நெனைக்காதேன்னு கறாராச் சொல்றாரு இதுல!

'எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.' [317]


மேலே சொன்னதையேத்தான் இங்கியும் அழுத்தந் திருத்தமாச் சொல்றாரு, மறுபடியும்!
தனக்குத் துன்பம்னு மனசுல பட்ட எதையும் பிறத்தியாருக்குச் செய்யாம இருக்கறதுதான் ஒலகத்துலியே தலை சிறந்த அறம்.. தருமம்னு திரும்பவும் சொல்றாரு.



'தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.' [318]


ஒருத்தன் கொடுக்கற வருத்தம் எப்பிடியாப்பட்டதுன்னு ஒனக்குத் தெரியுமில்ல! இப்ப நான் ஓங்கி 'பளார்'னு ஒரு அறை விட்டேன்னா எப்பிடி இருக்கும் ஒனக்கு! எம்மாம் வலிக்கும்! அந்த வலி ஒனக்குத் தெரியுமின்னா, நீ அதே போல, அடுத்தவனுக்குச் செய்யாதேன்னு இன்னும் ஒரு தபா சொல்றாரு. இன்னாடா, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்றாரேன்னு நெனைக்காம, நம்ம மரமண்டையில ஏத்தறதுக்காவத்தான் இப்பிடி சொல்றாருன்னு புரிஞ்சுகிட்டா ஒனக்கு நல்லது! சரியா!


'பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.' [319]

ஏன் இத்தினி தபா ஐயன் சொன்னாருன்றதுக்கான காரணத்த இங்க சொல்றாரு. நீ ஒருத்தனுக்கு ஒரு துன்பத்தைக் கொடுத்தியானா, ஒனக்கு ஒரு பெரிய கஸ்டம் கொஞ்ச நேரத்துலியே பின்னாடியே வந்து நிக்குமாம்! அத்த எப்பிடி சொல்றாருன்னா, நீ காலையில கொடுத்த கஸ்டம் சாயங்காலமே ஒன் வூட்டாண்டை வந்து கதவைத் தட்டுமாம்! நான் சொல்றதை நீ ஒனக்கு மட்டும் எடுத்துக்கோ! அவனுக்கு வரலியே, இவனுக்கு ஒண்ணும் ஆவலியேன்னு மயங்காத! அவனவன் கஸ்டம் அவனவனுக்குத் தெரியும். நீ நெதானமா நடந்துக்கோ! இன்னா நா சொல்றது!


'நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.' [320]


முன்ன சொன்ன அதேதான்! நீ கொடுத்த கஸ்டம் ஒன்னியவே வந்து சேரும்! அதுனால, ஒனக்கு ஒரு துன்பமும் வரக்கூடாதுன்னு நெனைக்கிறியா, அப்படீன்னா, வேற யாருக்கும் நீ அத்தச் செய்யாம இரு.
ஒனக்கு இந்த வியாதி வேணாம்னா, இந்த வியாதியைத் தேடிப் போகாதே!


"இன்னா! நா சொல்றது எல்லாம் புரிஞ்சுதா! ஒனக்குப் பிடிக்கலியா, பேசாம போய்க்கினே இரு. இந்த ஒலகத்துல ஆரும் தன்னோட தப்பை அடுத்தவன் சொல்லிக் காட்டறத விரும்பறதில்ல. அவன் அப்பிடி செய்யறதுல ஒரு தப்பும் இல்லேன்னுதான் நானும் சொல்லுவேன்! ஏதோ அவனுக்குப் பிடிச்சிருக்கு; செய்யறான். ஒனக்கு அதுனால, ஒரு பேஜாரும் இல்லேன்னா, 'கம்'முனு கண்டுக்காம போயிரு. ஒன்னியக் கேட்டா மட்டும் சொல்லு. அப்பவும் தன்மையா சொல்லு. இப்பிடி இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்குமோன்னு சொல்லிப் பாரு. அப்பிடி நீ சொன்னது அவனுக்குப் பிடிக்கலியா... வுடு ஜூட்!
இப்ப நா சொன்னது ஒனக்குப் பிடிச்சுதா, பிடிக்கலியா?'
எனக் கேட்டுச் சிரித்தான் மயிலை மன்னார்.

'நீ என்னோட நண்பண்டா! நீ சொன்னா, எனக்குப் பிடிக்காமப் போகுமா!' எனச் சொல்லியபடியே இன்னும் 2 மசால் வடையும் 'டீ'யும் தரச் சொல்லி நாயரைக் கேட்டேன்!

Read more...

Tuesday, May 13, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 5

முந்தையப் பதிவு இங்கே!


"கணபதி புகழ் பாடி அவன் அடி பணிந்தால் எல்லா மேன்மைகளும் வந்து எமை அடையும் என இயம்புகிறான் பாரதி!
இப்படி வருகின்ற மேன்மை எத்தகையது?"

சொல்லுகிறான் பாரதி!

'விண்ணின் இடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே.
பயத்தால் ஏதும் பயனில்லை,
........ கோடிமுறை இன்னும் கோடி முறை சொல்வேன்,
ஆன்மாவான கணபதியின்
அருளுண்டு; அச்சமில்லையே.'


ஆம்! பான்மை..... உன்னுடைய இயல்பு தாண்டி நடுங்காதே! கணபதி என்பது உன்னுடைய ஆன்மா! அவன் உன்னுடன் இருக்கும்வரை உனக்கு அச்சமென்பதே இருக்கக் கூடாது எனக் கோடி முறை சொ ல்லிவிட்டேன்! இன்னும் பல கோடி முறை சொல்லுகின்றேன்! நீ மேன்மையுறுவாய் என்கின்றான்!

இந்த அச்சமில்லாமல் இருப்பதால் என்னென்ன பயன் என விவரிக்கத் தொடங்குகிறான்!

வரகவி அல்லவா இவன்! தமிழ் வெள்ளமெனப் பொங்கி வழிகிறது! நம்மையும் நனைக்கிறது.... இல்லை மூழ்கடிக்கிறது!


'அச்சமில்லை, அமுங்குதல் இல்லை, நடுங்குதல் இல்லை, நாணுதல் இல்லை, பாவம் இல்லை, பதுங்குதல் இல்லை.

எது நேரினும் இடர்ப்பட மாட்டோம்; அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்; கடல் பொங்கி எழுந்தால் கலங்கமாட்டோம்; யார்க்கும் அஞ்சோம்; எதற்கும் அஞ்சோம்; எங்கும் அஞ்சோம்; எப்பொழுதும் அஞ்சோம்.

வானமுண்டு; மாரியுண்டு; ஞாயிறும், காற்றும், நல்ல நீரும், தீயும், மண்ணும், திங்களும், மீன்களும், உடலும், அறிவும் உயிரும் உளவே.

தின்னப் பொருளும், சேர்ந்திடப் பெண்டும், கேட்கப் பாட்டும், காண நல் உலகமும், களித்து உரை செய்யக் கணபதி பெயரும் என்றும் இங்கு உளவாம்!

சலித்திடாய்; ஏழை நெஞ்சே! வாழி! நேர்மையுடன் வாழி! வஞ்சக் கவலைக்கு இடம் கொடேல் மன்னோ! தஞ்சம் உண்டு சொன்னேன்; செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே!'


இதைப் படித்தாலே போதும்! விளக்கம் தானே உள்ளில் புரியும்! அப்படி எளிமையாக எழுதியிருக்கிறான்!

'நமக்கே' என முடித்தவுடன் தன்னை அலைக்கழிக்கின்ற மனத்தைப் பற்றிய எண்ணம் வருகிறது பாரதிக்கு! திரும்பவும் மனதுக்குச் சொல்கிறான்!

ஒரு மூன்று செயல்களை இடைவிடாது செய்துகொண்டு வா!

'உமைக்கு இனிய மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்' என அதற்குத் தெம்பூட்டுகிறான்!

அவை என்ன மூன்று செயல்கள்!


'நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்'!

இவைதான்! திரும்பத் திரும்ப, 'அஞ்சாதே! சோர்ந்து போய் விடாதே! பொதுநலம் பேணி, உனக்கு இயல்பாக வருகின்ற ஒன்றைச் செய்துவா! கணபதி காப்பான்!' என அறிவுறுத்துகின்றான்!

மேலும், ஒவ்வொன்றையும் விரித்துக் கூறுகின்றான்!

'நமக்குத் தொழில் கவிதை' என்றான்! இதைத் தருவது யாராம்!?


'செய்யும் கவிதை பராசக்தியாலே செயப்படும் காண்! வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி!'

அவளது அருள் உன்னிடம் பூரணமாக நிறைந்திருக்க, உன்னுடைய திறமைகளை எல்லாம், 'வீண் ஐயத்திலும், துரிதத்திலும் சிந்தி அழிவதென்னே!' என மனத்தைச் சாடுகிறான்!

பொறுமையாக...
'பையத் தொழில் புரி நெஞ்சே!'.... அப்படியே, 'கணாதிபன் பக்தி கொண்டே' அதைச் செய்வாயாகில், ஒரு குறையும் இல்லாது செழிக்கும் என தெம்பூட்டுகிறான்!

அடுத்து, 'இமைப்பொழுதும் சோரதிருத்தல்' என்றால் என்ன என்று விளக்குகிறான்!

ஒரு கணம் கூட சோம்பித் திரியாமல், கொண்ட செயலே கொள்கையென அனவரதமும் அதைப் பற்றியே உழைத்திருத்தல் தான் இதன் பொருள் எனச் சொல்லுகிறான்!

இதன் முதல் படியாக என்ன இருக்கவேண்டும் எனவும் செப்புகிறான்! செய்யும் தொழில் மீதும், கணபதி மீதும் பக்தி மிகவும் அவசியம் என வலியுறுத்துகிறான்.


'பக்தி உடையார் காரியத்தில் பதறார்' என்கிறான்! அதற்கு ஒரு உதாரணமும் கொடுக்கிறான்!

ஒரு விதை நடப்படுகிறது. மறுநாளே அது முளைத்து வந்துவிடுவதில்லை. ஒரு சில நாட்கள் ஆகின்றன. ஆனால், அதுவரைக்கும் அந்த விதை சும்மா இருப்பதில்லை. நீரை உண்டு, நிலத்தில் இருக்கின்ற வளத்தை உண்டு, தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு தேவையான அளவு சக்தியும் உரமும் கிடைத்ததும், நிலத்தைக் கிழித்துக் கொண்டு முளை விடுகிறது!


'வித்து முளைக்கும் தன்மைபோல், "மெல்லச்" செய்து பயன் அடைவார்'

இதெல்லாம் நிகழ ஏது காரணம்?

'சக்தி தொழிலே அனைத்துமெனில், சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்?' என பலம் கொடுக்கிறான்!

'வித்தைக்கு இறைவா! கணநாதா! மேன்மைத் தொழிலில் பணி எனையே!' என, முடிக்கிறான்!

அடுத்து, 'நாட்டிற்கு உழைத்தல்' என்பது பற்றி ஒரு புதுமை விளக்கம் கொடுக்கிறான் பாரதி!


அடுத்த பதிவில்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP