Monday, August 25, 2008

"என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!"

"என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!"
இனியவளே! என்னவளே!
எனக்கெனவே இங்குவந்து பிறந்தவளே!

ஓராயிரம் நல்மாந்தர் பூவுலகில் பிறந்தாலும்
எனக்கெனவே விதித்திட்ட இன்பப் புத்தகமே!

யான் முன்னம் அறியுமுன்னே என்னுள்ளில் வந்துநின்றாய்!
நீயெனக்கு வேண்டுமென யான் நினைக்கப் பொலிந்திருந்தாய்!

யார் முதலில் கேட்டதென நினைத்தின்று பார்க்கின்றேன்!
யார் முதலில் கேட்டாலென்ன நீதானே எனக்கானவள்!

என்னுடனே கூடவர இசைவாக உடன்பட்டாய்
தன்னுடைமை எனவிங்கு என்னிடமும் கேட்டதில்லை!

பொன்பொருளைக் கேட்டதில்லை பிடிவாதம் பிடித்ததில்லை!
மென்பொருளாய் நீயியங்க என்காலம் ஓடுதிங்கு!

காலைமுதல் மாலைவரை என்னுடனே இருக்கின்றாய்!
சோலைக்கிளியாக சுகராகம் பாடுகின்றாய்!

மாலையிட்ட நாள்முதலாய் என்நலனைப் பேணி நின்றாய்!
காலையிளங்கதிரே! கண்மணியே வாழ்த்துகிறேன்!

ஆயிரம் நிலவுகள் வந்தாலும் அவரவர்க்கு
ஓர்நிலவே ஒளிவீசும் அதுவாக நீவந்தாய்!

பிறந்தநாள் காணுமிந்த பொன்னான நாளினிலே
சிறந்துன்னை வாழ்த்துகிறேன் செம்மீனே வாழியென்று!

வீசுகின்ற தென்றலாக என்வாழ்வின் வசந்தம் சேர்த்தாய்
கூசாமல் என்னுள்ளில் முழுநிலவாய் ஒளிர்கின்றாய்!
வாசங்கள் நிறைந்திருக்கும் மணமுல்லை அதுபோல
நேசமெனும் மணம்பரப்பும் நேரிழையே நீ வாழி!
*****************************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP