Sunday, September 17, 2006

"அலையும் ஒருவன்" [ஒரு உருவகக் க[வி]தை]

"அலை"யும் ஒருவன்" [ஒரு உருவகக் க[வி]தை]


கடலில் குளிக்க மறுத்து ஒருவன் கரையினில் கத்தி நின்றான்!
"அலையே! நீ நில்லு! உன் பேயலைகளின் சத்தம் என் காதைக் கிழிக்கிறது!


அவற்றின் சீற்றம் என்னைப் பயமுறுத்துகிறது!
நான் குளிக்கவேண்டும்!நீ நில்லாமல் நான் குளிக்க முடியாது!"


அலைகள் கேட்கவில்லை!
அவை பாட்டுக்கு அடித்துக் கொண்டே இருந்தன!

இவன் சத்தமும் நிற்கவில்லை!
கத்திக் கொண்டே இருந்தான்!

ஒரு சிற்றலை வந்து அவ்ன் காலைத் தொட்டது!
சிலீரென்று எழுந்து நின்றான்!

"இதோ பார்! அலைகளின் சீற்றம் இப்போதைக்கு அட்ங்காது!
அடங்கியதாகவும் வரலாறு இல்லை!"

"அப்போது ஏன் என்னிடம் வந்து அதைச் சொல்லுகிறாய்!
நான் தான் அவைகளின் சத்தம் நிற்காமல் குளிப்பதில்லை எனச் சபதம் செய்திருக்கிறேனே!"

"அவை நின்று, நீ குளிக்கவேண்டுமென ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய்?
நீ குளிக்க வேண்டுமா, இல்லையா, சொல்!"

"அதெப்படி? அவை நிற்க வேண்டும்!
இல்லாவிடில் நான் குளிக்க முடியாது!"

"ஏனப்படிச் சொல்லுகிறாய்?அவை நிற்பதற்கும்,
நீ குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்?"

"என் பாட்டன் அலை அடித்து மாண்டான்.
என் அப்பனைக் கடல் இழுத்துச் சென்றது!"

கலங்கி நின்றான் அந்த மானுடன்!
சிற்றலை அவனைப் பார்த்துக் கனிவுடன் சொன்னது

"கடலில் குளிக்க ஆசையிருந்தால் என்னிடம் வா!
மணல்களைக் குவித்து, மரபை உடைத்து, மேடு கட்டியிருக்கிறேன்.

அலைகளின் சீற்றம் அங்கே செல்லாது.
கவலையின்றிக் குளிக்கலாம் நீ!"

"ஏமாற்றுகிறாயே, நீயும் கடல்தானே!
உன்னை எப்படி நான் நம்புவது!?"

அவன் மீண்டும் கத்தினான்!
சிற்றலை பரிவுடன் அவனைப் பார்த்தது.

"என்னிடம் ஆழம் இல்லை, அலையும் மெல்லவே வீசும்.
உன்னை விழுங்க மாட்டேன்! உல்லாசமாய் என்னுடன் இருக்கலாம்!"

"அதெல்லாம் சரிதான்! ஆனால் நீ மாறி வருவாயா?
அலைகளைத் துறந்து என் போல ஆவாயா?"

அலை நான்; உன்னை அணைக்கத் தயக்கமில்லை!
என்னை ஏன் மறுத்து ஒதுங்குகிறாய்?"

மனிதன் திரும்பினான்; மணலை நோக்கினான்.
"மக்களே யாரும் கடலில் குளிக்கப் போக வேண்டாம்.

அலைகளின் சீற்றம் உங்களுக்குத் தெரியாது
சிற்றலை நாடகத்தை நம்பவேண்டாம்."

கடலலை எப்போதும்போல் ஆர்ப்பரித்து நின்றது
மகிழ்வுடன் சென்று மக்கள் குளித்தனர்

பேரலைபக்கம் பயமின்றி சிலர் சென்றனர்
சிற்றலை மேட்டில் குழந்தைகள் குதூகலித்தன!

சிற்றலை மீண்டும் அவனிடம் வந்தது
"நாடகம் எனச் சொல்லி எத்தனை நாள் மயங்குவாய்?

கடலில் குளிக்க ஆசையிருந்தும், வழியுமிருந்தும்,
மனது மயங்கி மகிழ்வை ஏன் துறக்கிறாய்?"

அவன் கேட்காமல் கத்திக் கொண்டிருந்தான்
"மனிதர்களே அலை நில்லாமல் கடலில் குளிக்க வேண்டாம்"

மனிதர்கள் மகிழ்வுடன் குளித்துத் திரும்பினர்
கடலில் குளிக்க மறுத்து அவன் மட்டும் கரையினில் கத்தி நின்றான்!

சிற்றலை அவனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP