Tuesday, October 21, 2008

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 2

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 2

முந்தைய பதிவு

2. "தமிழச் சாதி" [தொடர்கிறது]

"ஏனெனில்,

'சிலப்பதிகாரச்' செய்யுளைக் கருதியும்,

'திருக்குறள்' உறுதியும், தெளிவும், பொருளின்

ஆழமும், விரிவும், அழகும் கருதியும்,

'எல்லையொன்றின்மை' எனும் பொருள் அதனைக்

கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்

முயற்சியைக்கருதியும் முன்பு நான் தமிழச்

சாதியை "அமரத் தன்மை வாய்ந்தது" என்று

உறுதி கொண்டிருந்தேன். ஒரு பதினாயிரம்

சனி வாய்ப்பட்டும் தமிழச் சாதிதான்

உள்ளுடைவின்றி உழைத்திடு நெறிகளைக்

கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன்;

ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்ப் புறத்துள்ள

பற்பல தீவினும்பரவி இவ்வெளிய


தமிழச்சாதி தடி உதை உண்டும்

கால் உதை உண்டும் கயிற்றடி உண்டும்

வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடும் செய்தியும் பசியால் சாதலும்

பிணிகளால் சாதலும் பெருந்தொலை உள்ள தம்

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்


இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;

'தெய்வம் மறவார்; செயுங்கடன் பிழையார்;

ஏதுதான் செயினும், ஏதுதான் வருந்தினும்,

இறுதியில் பெருமையும், இன்பமும் பெறுவார்'

என்பது என் உளத்து வேர் அகழ்ந்து இருத்தலால்!


பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதனைத் தெளிவுறக் காட்டும் வரிகள் இவை

என்பதைத் தவிர இதில் சொல்ல வேறு என்ன இருக்கிறது!

இன்றைக்கும் பொருந்தும் இவ்வரிகளைப் படிக்கும்போது நடக்கும் நிகழ்வுகள்
ஒரு கணம் நம் கண்முன் நிழலாடித்தான் செகின்றன.

இத்தனையையும் மீறி, ஒரு நம்பிக்கை வரியையும் சொல்லித்தான் செல்கிறான் பாரதி!

என்னதான் நடந்தாலும், கடவுளை நம்பி, நேர்மைச் செயல்கள் செய்து வரின், வெற்றி நிச்சயம்!

இப்படிச் சொன்ன பாரதியை விதி பார்த்துச் சிரிக்கிறது!

'எதனால் இப்படி ஒரு நிலைமை என அறிவாயா?' என்கிறது!

'தெரியும் எனக்கு! சொல்கிறேன் கேள்' எனத் தொடங்குகிறான் பாரதி.

எனினும்,

இப்பெரும் கொள்கை இதயமேற் கொண்டு

கலங்கிடாது இருந்த எனைக் கலக்குறுத்தும்

செய்தி ஒன்றதனைத் தெளிவுறக் கேட்பாய்!

ஊனமற்று எவைதாம் உறினுமே பொறுத்து,

வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,

தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து,

ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி,

சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம்;

சாத்திரமின்றேல் சாதியில்லை.

பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்

பொய்ம்மையாகிப் புழுவென மடிவர்;


இரு பிரிவினராய்த் தமிழச்சாதி பிரிந்து நிற்பதைக் காண்கிறான் பாரதி

சாதிக்குள்ளே சாத்திரம் புகுந்து அது பொய்யாகத் திரிக்கப்பட்டு

மக்களை அலைக்கழிப்பதைப் பார்த்து மனம் பொருமுகிறான்.

நால்வகையாகச் சாதிகள் பிரிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு சாதியிலும்

தானே அறிவாளி எனச் சொல்லுகின்ற தலைவன் ஒருவன் புகுந்து

எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறார்கள் என்பதை மேலும் விவரிக்கின்றான்:

**************************************

[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP