Thursday, May 10, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 12 "நலம் புனைந்துரைத்தல்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 12 "நலம் புனைந்துரைத்தல்"

"ஸார் வந்தா இவ்விடே இருக்கச் சொல்லி சேட்டன் பறைஞ்சு. ஒரு அவசர ஜோலியா வெளியில் போயிருக்கு. அதுவரையில் கொறச்சு மசால்வடை டீ கழிச்சோ," என அன்புடன் வரவேற்றார் நாயர்.

"என்ன அப்படி அவசர வேலை? ஏதாவது சண்டையா மறுபடியும்?" என பதட்டத்துடன் கேட்டேன், ..........மசால் வடையைக் கடித்தபடிதான்!

"ஞான் எந்து அறியு? எனிக்கி ஒன்னும் தெரியில்லா." என்று சொல்லி வெள்ளந்தியாகச் சிரித்தார் நாயர்.

சற்று நேரம் பொறுத்து, 23C பஸ்சில் இருந்து அசால்ட்டாக வந்திறங்கினான் மயிலை மன்னார்!

"இன்னாப்பா, ரொம்ப நேரம் ஆச்சா வந்து? நாயராண்ட சொல்ட்டுப் போயிருந்தேனே. இன்னா நாயர்! ஒண்ணும் சொல்லலியா நீ தம்பிகிட்ட?" என அதட்டினான் மன்னார்.

"அவரை ஒண்னும் திட்டாதே. நீ ஒரு அவசர வேலையா போயிருக்கறதா வந்தவுடனேயே சொல்லிட்டார்" என சமாதானப்படுத்திவிட்டு என்னவென வினவினேன்.

"ஓ அதுவா! எல்லாம் நம்ம அன்வர் பாஷா இருக்கான்ல. அவன் ஒரு பொண்ணை லவ்ஸு பண்றான். அது இவன் சாதியும் இல்ல. பையனைப் போய் பார்த்திட்டு வரச்சொல்லி அவனோட வாப்பா சொன்னாரு. சரி, இன்னா, ஏதுன்னு விசாரிப்போம்னு போனேன். பையன் ரொம்ப ஷ்ட்ராங்கா இருக்கான். அந்தப் பொண்ணுந்தான் இவன் மேல உசுரா இருக்கு. எனக்கென்னமோ இது முடிஞ்சிரும்னுதான் தோணுது. அவளை இன்னா மாரி வர்ணிக்கிறான் தெரியுமா? நம்ம ஐயன்கூட இப்பிடி எளுதலை!" என்று சொல்லி கடகடவெனச் சிரித்தான் மன்னார்.

வள்ளுவர் பெயரைக் கேட்டதும், எனக்கு டக்கென்று ஒரு மின்னல் பளிச்சிட்டது!

"ஆஹா! இன்று ஒரு நல்ல அதிகாரத்திற்குப் பொருள் கிடைக்கப்போகிறது என உள்மனது சொல்லியது.

இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாதென, "அது கிடக்கட்டும். என்னவோ ஐயன் கூட சொல்லியதில்லைன்னு சொன்னியே, மன்னார். அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?" என் மெதுவாகக் கேட்டேன்.

"நீ வந்த காரியத்துல குறியா இருப்பியே! சரி, சரி, ஸொல்றேன். 'நலம் புனைந்துரைத்தல்'னு ஒரு அதிகாரம். இந்தக் காதல் வந்திருச்சின்னா, பசங்களுக்கு தலகால் புரியாம பெனாத்துவாங்க! 'மானே, தேனே, மயிலே, குயிலே,....நீதான் நெலா, நீதான் காத்து, ஒன் அளகு இன்னாமாரி இருக்கு தெரியுமா'ன்னு நம்பமுடியாத கதையெல்லாம் வுடுவானுங்க. அது எப்பிடி இருக்குமின்னு ஐயன் கோடி காட்டறாரு இதுல! ம்...ம்.. எளுதிக்கோ" என சொல்ல ஆரம்பித்தான். நடுநடுவே அவனும் சில கமெண்ட்டுகளை அள்ளி விட்டான்!

இனி வருவது மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!


அதிகாரம்-112. "நலம் புனைந்துரைத்தல்"

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். [1111]

"இந்த அனிச்சம்பூ, அனிச்சம்பூன்னு ஒரு பூ இருக்காம். ஆரு பாத்திருக்காங்கன்னு தெரியல. ஆனா, எலக்கியத்துல அல்லா எடத்துலியும் அடிக்கடி வர்ற ஒரு பூ இது! ரொம்ப ரொம்ப மெல்லிசா இருக்குமாம். தொட்டாலே வாடிருமாம்! அவ்ளோ ஏன்? ஒன்னோட மூச்சுக்காத்து அதுல பட்டாலே சுருங்கிப் போயிடுமாம். அத்தப் பாத்து இவன் ஸொல்றான்.

ஏ அனிச்சம்பூவே, நீ நல்லாயிரு! மெல்லிசாவே இருந்துக்க.ஆனா என்னோட ஆளு.. என் காதலி... ரொம்பவே நல்ல குணமான பொண்னு. நான் அத்த உசிருக்கும் மேலேயே காதலிக்கறேன். அவளோட கம்பேர் பண்னினா நீ ஒண்ணும் அத்தினி மெல்லிசுன்னு ஸொல்றதுக்கில்லை!"

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. [1112]

"இப்ப கோடைக்காலம் தானே! ஊட்டில கூட்டம் அலை மோதுதாம். எதுக்கு? அங்கே நடக்கற மலர்க் கண்காட்சியைப் பாக்கத்தான் அம்மாம் கூட்டம். பூவெல்லாம் பார்த்தா மனசுக்குள்ள ஒரு ஆனந்தம் பொங்குது. மனசு குளுமையாவுது. இல்லியா?
அதேபோல இவன் தன்னோட மனசைப் பார்த்து ஒரு கேள்வி கேக்கறான்!


"ஏ மனசே! இங்க வந்து கூட்டங்கூட்டமா இந்த பூவையெல்லாம் பார்க்கறப்ப, உடனே நீ, ஆஹா! இப்பிடித்தானே அவளோட கண்ணும் இருக்குனு நெனச்சு மயங்குறியே! இத்தானே வேணான்றது!"

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்டகன் வேய்த்தோ ளவட்கு. [1113]

"இப்ப பாரு வேடிக்கையை! தன்னோட காதலிய வர்ணிக்கறான்! அசந்திடாதே!

அவ தோளு ரெண்டும் மூங்கில் போல தெரண்டு இருக்குமாம். ஆனா ஒடம்பு தளிர் நெறமா இருக்கும்.பல்லைப் பார்த்தியானா முத்து முத்தா இருக்குமாம். அவளை மோந்து பார்த்தா அப்பிடியே இதுவரைக்கும் எங்கியும் வராத, ஆனா இயற்கையான வாசனையா இருக்குமாம். மையி தீட்டின கண்ணுங்கள்லாம் வேல் மாரி கூரா இருக்குமாம்.


இப்பிடி ஒரு பொண்ணை நெனைச்சுப் பாரேன்! ஓடியே பூடுவே! ஆனா, இவன் வாய்க்கு வந்த மாரி வுடறான் கதை!:))"

காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று. [1114]

இப்ப கண்ணை மட்டும் தனியா ஸொல்றான்!

குவளைப்பூன்னு ஒண்னு இருக்கு. கொளத்தங்கரைலல்லாம் ஜாஸ்தியாப் பார்க்கலாம் இத்தை. ஊதாக்கலர்ல சும்ம ஜிம்முன்னு கண்ணு விரிச்சமாரி சிரிச்சிகிட்டு இருக்கும் இது. வயக்காமா, இந்தப் பாட்டு எளுதறவங்கல்லாம், அளகான பொண்ணுங்களொட கண்ணை இந்தக் குவளைப்பூவுக்கு உதாரணம் காட்டி எளுதுவாங்க!

நம்மாளு இன்னா ஸொல்றான்னா, இவனோட காதலியை இவன் வயக்கமா[வழக்கமாக] இந்த ஆத்தாங்கரை, கொளத்தாங்கரைல தான் பாக்கறது! அப்பிடி அவ வர்றப்ப, இந்த குவளைப்பூவெல்லாம் இவளைப் பார்க்குதாம். அடடா! இவ கண்ணுக்கு முன்னாடி நாமெல்லாம் எந்த மூலைக்கின்னு வெக்கப்பட்டு, அதது தலையைக் கவுத்துகிட்டு, நெலத்தைப் பாக்குதாம்!

நல்ல கூத்துதான் போ!"

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை. [1115]

திரும்பவும் அதே அனிச்சம்பூ!


இவனோட லவ்வரு இன்னா பண்ணினாளாம்... ஒரு அனிச்சம்பூவை காம்போட எடுத்து தன் தலையில வெச்சுகிட்டாளாம். அவ்ளோதான்! அத்தோட வெயிட்டு.. அதாம்ப்பா எடை, பாரம்... தாங்காம 'மளுக்'குனு இந்தப் பொண்ணோட இடுப்பு ஒடிஞ்சிருச்சாம்!
நம்ப முடியலே இல்லை? இன்னும் இருக்கு கூத்து.

இவன் இன்னா பண்ணினானாம், ஒடனே, 'இது மாரி ஆயிருச்சே; இனிமே ஒரு அனிச்சம்பூவைக் கூட வுட்டு வைக்கக் கூடாது ஒலகத்துலே'ன்னு அதுக்கு சாவுப்பறை கொட்ட ஆரம்பிக்கறானாம்!"


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன். [1116]


"நல்ல பவுர்ணமி ராவு. நிலா தக தகன்னு ஜொலிக்குது. மானம் பூரா, நட்சத்திரங்கல்லாம் மீனு மாரி மின்னுதாம். அதான் அதுக்கெல்லாம் விண்மீனுன்னு பேரு. இவங்க ரெண்டு பேரும் தனியா ஒக்காந்துகினு பேசிக்கிட்டு இருக்காங்க. அப்போ இந்த விண்மீனுங்கல்லாம் நிலா வெளிச்சத்துல இந்தப் பொண்ணொட மொகத்தைப் பாக்குதுங்களாம். நம்ம பக்கத்துல இருந்த நிலா எப்பிடிறா கீளே போச்சுன்னு தெகைச்சுப் போச்சுங்களாம். அப்பிடியே இங்கியும் அங்கியுமா அலையுதுங்களாம்....ஒண்ணும் புரியாம!"

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. [1117]

"அவ்ளோதான்! அதுங்க அலையறதைப் பார்த்ததும், இவனுக்கு ஒரே குஷியாயிடுது! ஒடனே ஒரு வெளக்கம்[விளக்கம்] கொடுக்க ஆரம்பிக்கறான்.


'மானத்துல இருக்கற நிலா தேஞ்சு, வளர்ந்து, தேஞ்சு, வளர்ந்து வருது. ஆனா, இவ மொகத்தைப் பாருங்க. எதுனாச்சும் குறை இருக்கோ? இல்லவே இல்லை!"


எப்பிடிப் போவுது பாரு கதை! இன்னும் இருக்கு அடுத்ததுல!"

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லவையேல்
காதலை வாழி மதி. [1118]

ஏ!நிலாவே! நீயுங்கூட என்னோட காதலி மாதிரி நல்ல வெளிச்சமா வந்தேன்னா, போனாப்போவுதுன்னு நீயும் நல்ல இருக்கேன்னு ஸொல்றென். ஒன்னையும் எனக்குப் பிடிக்கும் அப்போ!"

இவரு நிலாவோட டீல் போடறாரு இப்போ!

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர் காணத் தோன்றல் மதி. [1119]


பக்கத்துல பொண்ணு இருக்கற தெகிரியம்! சும்மா பொளந்து கட்டறான் இன்னும்!

"ஏ! சந்திரனே! நீ என்னோட காதலி மாரி இருக்கணும்னா, ஒடனே நீ ஒண்ணு பண்ணனும். ஆர் கண்ணுக்கும் படக்கூடாது. எல்லாரும் பார்க்கற மாரி தெனம் உலா வரக் கூடாது! அப்பதான் நீயும் இவளும் ஒண்ணாவீங்க!"

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். [1120]


"கடைசிலியும் இந்த அனிச்சம்பூவை அவன் மறக்கலை!

இந்த அனிச்சம்பூவும், அன்னப்பட்சியோட மெல்லிசான இறகும், இவ நடந்து வர்ற பதையில இருந்து, இவ பாதத்துல பட்டுச்சின்னா, அப்பிடியே முள்ளு முள்ளா இருக்கற நெருஞ்சிப்பழம் குத்தின மாரி துடிச்சுப் பூடுவாளாம்! அவ்வளோ மெத்து மெத்துன்னு இருக்குமாம் அவ பாதம்!"

"இன்னாத்தை நா ஸொல்றது! கப்ஸா வுடறதுக்கும் ஒரு அளவு வோணாம்? புடிச்சிருக்கு சரி! அதுக்காவ, இன்னா மாரி ஸொல்றான் பாரு தன்னோட காதலியைப் பத்தி!
இப்பிடித்தான் நம்ம அன்வர் பயலும் ஆ, ஊ ன்னு பிலிம் காட்டறான்.
இதெல்லாம் வேலைக்கு ஆவற விசயமில்லை.
சட்டு புட்டுன்னு ரெண்டு பேரும் கொஞ்சம் தரையில எறங்கி வாங்க. வந்து அவங்க அவங்க அப்பா அம்மாகிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லி கண்ணாலம் கட்டிக்கற வளியைப் [வழியை] பாருங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.
நீதான் மன்னாரு எங்களுக்கு ஹெல்பு பண்னனும்னு தடார்னு ரெண்டு பேரும் கால்ல வுளுந்துட்டாங்க1
சரி, ஏற்பாடு பண்ணறேன். அதுவரைக்கும் ஏதும் தப்புத்தண்டா பண்ணாம ஒயுங்கா இருங்கன்னு ஸொல்லிட்டு வந்திருக்கேன்
இன்னா ஆனாலும் அன்வர் பையன் நமக்கு தோஸ்து ஆச்சே!
எப்பிடி வுட்டுர்றது ?
இன்னா நா சொல்றது?"
எனக் கேட்டு வாஞ்சையாகச் சிரித்தான் மயிலை மன்னார்.

"அதுதான் சரி! அப்பிடியே பண்ணுவோம்"னு சொல்லிவிட்டு நானும் விடை பெற்றேன் நண்பனிடமிருந்து..... இதைப் பதிய!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP