Wednesday, January 03, 2007

"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20]

"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20]

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்


போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20


[கரையேறிய பெண்கள் காலைக்கருக்கலில் நிமிர்ந்து பார்க்கிறார்கள்!
நெடிதுயர்ந்த கோபுரம் மங்கலாகத் தெரிகிறது!
வழக்கம் போலவே, உயர்ந்த உருவத்தோடு அந்தச் சிவனாரே தெரிகின்றனர்!
ஆனால், இதென்ன! ஒன்றும் சரியாகத் தெரியவில்லையே!
மேலே குறுகிய உடலோடும் கீழே அகன்று விரிந்த பாதங்கள் தெரிகின்றன!
அன்பு மேலிட்டு அத்திருப் பாதங்களைப் போற்றிப் பாடத் துவங்குகின்றனர்!
எல்லாம் போற்றி முடித்த பின்னர் திரும்பிப் பார்த்தால்......
இன்னும் ஒரு பெண் மட்டும் கரையேறாமல் குளித்துக் கொண்டிருக்கிறாள்!
அவளையும் அழைக்கின்றனர்!]


[மேலே சொன்னது என் மனதில் தோன்றிய கருத்துகள்! கற்பனை!]

அனைத்திற்கும் தொடக்கமான உன் மலர்ப் பாதங்கள் எமக்கு அருளட்டும், போற்றி!

அனைத்தும் முடிவாக வந்தடையும் சிவந்த தளிர் போன்ற பாதங்கள் அருளட்டும், போற்றி!

அனைத்து ஜீவராசிகளும் பிறக்கும் இடமான அந்த பொற்பாதங்களே, போற்றி!

அனைத்து உயிர்களும் இன்பம் துய்க்க அருளும் மலர்ப்பாதங்களே, போற்றி!

அனைத்து உயிர்களுக்கும் இறுதியாய் விளங்கும் இணையான இரு பாதங்களே, போற்றி!

அரங்கனும், அரனும் தேடியும் காணமுடியாத திருவடித் தாமரைகளே, போற்றி!
அனைவரும் முத்தியடைய ஆட்கொண்டருளும் பொன்மலர்ப் பாதங்களே, போற்றி!

அனைவரும் எழுந்தபின்னரும் இன்னுமா மார்கழி நீராடுவாய்? பாடுவோம் நாம், போற்றி!

அருஞ்சொற்பொருள்:
ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை

[இதற்கு இன்னொரு ஆழ்விளக்கமும் உண்டு!
அது நாளை!]


திருச்சிற்றம்பலம்!

Read more...

"ஆடேலோர் எம்பாவாய்" - 9 [19]

"ஆடேலோர் எம்பாவாய்" - 9 [19]

[குளியாட்டம் நிகழ்ந்தவரை ஒரே கும்மாளமாயிருந்த பெண்கள், சிவனாகவே தாங்கள் கண்ட இப்பூம்புனலை விட்டுக் "கரை" ஏறுகிறார்கள்!
நிகழ்வுலக மயக்கம் இவர்களைப் பீடிக்கிறது!
அதினின்று விடுபடவும் சிவனாரையே வேண்டுகின்றனர்!
நாகரிகம் மாறி வருகின்ற இக்காலத்திற்கும் பொருத்தமான ஒரு பாடலை அன்றே இப்பெண்கள் பாடியிருக்கிறார்கள்!]



உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்


எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19




எல்லாம் வல்ல எங்கள் பெருமானே!
எங்களுக்கெல்லாம் இப்போது ஓர் புது அச்சம் வந்திருக்கிறது!


"உன் கைப் பிள்ளை உனக்கே உரியது! நும் பொறுப்பே அவையெல்லாம்"
என்று,எப்போதும் வழங்கும் பழமொழி யாம் கேட்டிருக்கிறோம்!


[கரையேறும் இந்நேரத்தில்] அதனை மீண்டும் ஓர்முறை
உம்மிடம் நினைவூட்ட வேண்டுமோவென எமக்குத் தோன்றுகிறது!

எனவே உன்னிடம் ஓர் விண்ணப்பம் வைக்கின்றோம்!
நாங்கள் சொல்வதைக் கருணையுடன் கேட்டருள்வாயாக!

உன் அடியவர் என்பரைத் தவிர்த்து வேறொருவர் தோள்களையும்
எம்மார்பில் நாங்கள் தழுவுதல் இல்லாமல் போகட்டும்!

உம் பணியே அல்லாது வேறெந்தத் தோழிலும்
எம் கைகள் செய்யாதிருக்கட்டும்!

வேறெதுவும், இதைத்தவிர, இரவும், பகலும்
எம் கண்கள் கண்டு மயங்காதிருக்கட்டும்!

யாம் வேண்டிடும் இந்தப் பரிசுகளை மட்டும்
எம் தலைவனாம் நீவிர் அருள் புரிவீரேல்,

கதிரவன் இனி எத்திசையினில் உதித்தால்தான்
எமக்கென்ன குறை? எனச் சொல்லி

ஆடி எழுந்திரடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:
கொங்கை - மார்பகம்; கங்குல் - இரவு; பரிசு - வகை; ஞாயிறு - கதிரவன்.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP