Friday, March 21, 2008

"அ.அ. திருப்புகழ்" -- 26 "விலைக்கு மேனியில்"

"அ.அ. திருப்புகழ்" -- 26 "விலைக்கு மேனியில்"

சமீபத்தில் சிவராத்திரி குறித்து ஒரு பதிவு, 'சிவமாய் நிறைவாய்' என எழுதினேன். அந்த சமயம் எனது இனிய நண்பர் திரு. குமரன் மூலம் ஒரு ஒளிப்படம் கிடைத்தது. இலங்கையில் இருக்கும் திருக்கோணமலையின் இயற்கை எழில் கொஞ்சும் ஆலயக் காட்சிகள் அடங்கிய தொகுப்பு அது. அதில் வந்த ஒரு காட்சி என் கருத்தில் பதிந்தது. அருணையார் எழுதிய திருப்புகழ் ஒன்று போர்டில் எழுதப்பட்டுப் பதிக்கப் பட்டிருந்தது. அந்த புகழ் என்ன எனப் பார்க்கும் ஆவலையும் தூண்டியது. மிக அற்புதமான பொருள் அடங்கிய பாடல் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்ற, எல்லாம் வல்ல முருகனை வேண்டிக் கேட்கும் பாடலை, பங்குனி உத்திர நன்நாளில் இங்கு இடுவதில் மகிழ்கிறேன். அனைவரும் ஓதி எண்ணியது எண்ணியாங்கு எய்த என் முருகனை இறைஞ்சுகிறேன்.

************** பாடல் **************

விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலூறி
மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு கொடியேனைக்

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே.
******************************************************************************************


சற்று பெரிய பாடல்! சந்தத்துக்காக சில குறில் நெடில் மாற்றங்கள் இப்பாடலில் வருவது ஒரு புதுமை!வழக்கம் போல பின் பார்த்து முன்![நீட்டி முழக்காமல்]!!

**************** பொருள் *****************

"மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே"



மலைக்கு நாயக! சிவகாமி நாயகர்
திருக்கு மாரனே! முகத்து ஆறு தேசிக!
வடிப்ப மாது ஒரு குறப்பாவையாள் மகிழ்தரு வேளே!

மலையிருக்குமிடமெல்லாம் தானிருக்கும்
இடமெனக் கொண்டு தலைவனாய்த் திகழ்பவரே!
சிவன் உமை எனும் பேரிறையின் செல்வக்குமரனே!
கண்ணினின்று பொறிவிட்டு ஆறு பாலனாய்
ஆற்றினில் தவழ்ந்து பொய்கையடைந்து
ஆறு மாதர் முலைப்பாலுண்டாலும்
மாறுபாகம் கொண்ட உமையவளின் அணைப்பினால்
ஆறுமுகமாய் ஆனவனே!
அழகினுக்கே அழகுசெய்யும் வள்ளிக்குறமாதின்
ஒப்பற்ற மனவழகும் பொருந்திய தன்மையில்
உள்ளம் பறிகொடுத்து உவப்பாய் விரும்பும் தலைவனே!


"வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே"



வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்திய மாமுநி இடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோலமாய் வரு முருகோனே

தவத்திரு யோகிகள் வசிட்டர், காசிபமுனிவர்,
பெருமைமிகு அகத்தியர்,, இடைக்காடர், நக்கீரர்
இவர் அனைவரும் இயற்றிய பாடல்களிலெல்லாம்
தனிப்பெரும் பொருளாக இருக்கும் முருகனே!

"நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே"

நிலைக்கும் நான்மறை மகத்து ஆன பூசுரர்
திருக்கொணாமலை தலத்து ஆர் கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே!


என்றுமே நிலைத்து நிற்கின்ற நான்மறைகளை அன்புடன் ஓதிவரும்
பெருமைமிகு அந்தணர்கள் வாழுகின்ற திருக்கோணமலை என்கின்ற
திருத்தலத்தில் ஓங்கிநிற்கும் கோபுர வாயிலினுள் அமைந்திருக்கும்
'கிளிப்பாடுபூதி' என்னும் நிலையினுள் எழுந்தருளி இருப்போனே!

" நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே."

நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே
எடுத்த வேல்கொடு பொடி தூளது ஆ எறி
நினைத்த காரியம் அநுகூலமே புரி பெருமாளே.


பிறவிகள் ஏழென்று சொல்லிடுவார்
ஒவ்வொன்றும் ஓர் கடலென்றும் சொல்லிடுவார்
வேல் விடுத்து கடல் மாய்த்து
சூர் என்னும் அசுரனையும்
சூறையாடிக் கொன்ற வேலன்
பிறவிப் பெருங்கடலையினையும்
தூளாகிப் போகுமாறு செய்யவல்ல
பெருமைபெற்ற முருகோனே!
நீயென்றன் மனத்தினில் எண்ணிய
கருமங்கள் யாவினையும் நிறைவேற்றித்
தரவல்லவன் எனப் பணிகின்றேன்!


"விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலூறி"

விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை
தரித்த ஆடையும் அணிப்பூணும் ஆகவே
மினுக்கு மாதர்கள் இடக்காமம் மூழ்கியே மயல் ஊறி


தன் உடலையே விலைக்கு விற்கின்ற விலைமாதர்கள்
அதனை மிகவும் அழகூட்டவென மாலைகளும்
மேகலைஎன்கின்ற இடுப்பிலணியும் ஆபரணமும்
அழகிய ஆடைகளும், இரத்தினங்கள் பதித்த ஆபரணங்களும்
அழகுற அணிந்து மினுக்குகின்ற அவரிடத்தே ஆசைவைத்து
காமமெனும் கடலினில் மூழ்கி அந்த மயக்கத்தில் மிகவுமே திளைத்து


"மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு கொடியேனைக்"

மிகுத்த காமியன் என, பார் உளோர் எதிர்
நகைக்கவே, உடல் எடுத்தே, வியாகுல
வெறுப்பது ஆகியே, உழைத்தே விடாய்படு கொடியேனை


காமத்தில் மிகவுமே விருப்பமுள்ளவன் இவன் என
உலகத்தில் உள்ளோர் என்னைப் பார்த்து சிரிக்குமாறு
ஒரு உடலை எடுத்து, அதனால் துன்பமடைந்து
அந்த உடல் மீதே வெறுப்புற்று, மீண்டும் மீண்டும்
இந்த உலக வாழ்விலேயே உழன்று [காதல்]
தாகம் அடைகின்ற கொடியவனாகிய என்னை


"கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைஇத்தேற வேசெயு மொருவாழ்வே"

கலக்கமாகவே மலக் கூடிலே மிகு
பிணிக்குள் ஆகியே தவிக்காமலே உனை
கவிக்குளாய் சொ[ல்]லி கடைத்தேறவே செ[ய்]யும் ஒரு வாழ்வே!

என்னறிவு கலக்கமுற்றுப் போகும்படி செய்து
ஒன்பது வகையான கூடுகள் வழியே
விளைகின்ற மலங்களை வெளிக்கிடும்
இந்த உடலாகிய கூட்டுடன் சேர்ந்து
பலவிதமான நோய்களுக்கு ஆளாகி
இவைகளினால் நான் தவிக்காமல்
உன்னுடைய புகழினைப் போற்றுகின்ற
தமிழ்க்கவிதைகளைச் சொல்லி
எனது ஆன்மா இவ்வுடற் கூட்டினின்று
கடைத்தேறும்படி செய்யவல்ல
நிகரற்ற வாழ்வாக அமைந்த பொருளே!

"கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்"

கதிக்கு நாதன் நீ உனைத் தேடியே புகழ்
உரைக்கும் நாயேனை அருட்பார்வையாகவே
கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள் தரவேணும்!

என் ஜென்மம் கடைத்தேற இருக்கின்ற ஒரே தலைவன் நீயே!
நினைப் போற்றி புகழ் பாடுகின்ற நாய் போன்றவன் யான்!
நினது அருட்பார்வையை என்மீது செலுத்தி
நினது திருவடிகளில் என்னையும் ஏற்றுக்கொண்டு
இவ்வுலகிலேயே மிகவும் சிறந்ததான
தாயின் கருணையினை ஒத்த அருளை
எனக்கு நீ தந்தருளவேண்டும் முருகப்பெருமானே!
******************************************************


திருக்கோணமலை இலங்கையில் உள்ள ஒரு சிவத்தலம். தக்ஷிண கைலாயம் என வழங்கப்படும் மூன்று தலங்களில் ஒன்று. மற்ற இரு தலங்கள், திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி.
கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோபுரநிலையில் உள்ள ஓரிடத்தின் பெயர்.
**************************************************************


வேலும் மயிலும் வாழ்க !
முருகனருள் முன்னிற்கும் !!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க !!!
*******************************

Read more...

Wednesday, March 05, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 19 "செங்கோன்மை"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 19 "செங்கோன்மை"

"சீக்கிரமாப் பாருங்க சங்கர்! உங்க மன்னார் எங்கே இன்னும் காணும்?" சற்று அவசரத்துடனே கேட்டார் மஞ்சூரார்!

"இருங்க சுந்தர்! மன்னார் எப்ப வருவான், எப்படி வருவான்னு யாருக்கும் தெரியாது! ஆனால், கண்டிப்பா வருவான்! சொல்லுங்க நாயர்! நான் சொல்றது சரிதானே!" என்றேன் நான்!
[ஆமாங்க! நம்ம முத்தமிழ் மஞ்சூரார் தான்! சென்றமுறையே அடுத்த தடவை மயிலைக்குப் போகும்போது தானும் வருவதாகச் சொல்லியிருந்தார்!! ]

"ஸார் பறைஞ்சது செரிதன்னே! ஞான் கூட ஆயாள் எப்போ வரும், எங்கனே வரும்னு தெரியாம, பலசமயம் குழம்பிப் போயுண்டு!" எனச் சொல்லி நாயரும் சிரித்தார்!

'சரி! அவர் வரும் வரை நாயர் ஸ்பெஷல் மசால் வடை, டீ சாப்பிடுவோம்!" என நான் சொன்னதும் நாயர் சுறுசுறுப்பானார்.

ஒரு ஆட்டோ பலத்த உறுமலுடன் வந்து நின்றது!

"வந்து ரொம்ப நேரமாச்சா நண்பா! ஒரு பிரச்சினைக்கு மத்தியஸ்தம் பண்ணக் கூப்பிட்டிருந்தாங்க! அதான் கொஞ்சம் லேட்டாயிருச்சு! இன்னா நாயர்! நம்ம ஆளுங்களை நல்லா கவனிச்சுக்கினியா?' எனக் கேட்டு அட்டகாசமாகச் சிரித்தான் மயிலை மன்னார்!

பக்கத்தில் இருந்த மஞ்சூராரைக் கவனித்தவன், "ஓ! இவர்தான் நீ சொன்ன உங்க தலைவரா? முத்தமிளுக்கே சொந்தம்னு சொன்னியே! அவர்தான் இவரா? இன்னா தலீவா! செங்கோல்லாம் எடுத்துக்கினுதானே வந்திருக்கீங்க?" எனக் கண்ணடித்தான்!

மஞ்சூரார் சற்றுக் குழப்பத்துடன், மன்னார் ஏதோ கிண்டல் செய்கிறான் என மட்டும் புரிந்து கொண்டு, என்னை நோக்க,
நான் அவரைப் பார்த்து சிரித்தபடியே, " பதறாதீங்க சுந்தர்! மன்னார் எப்பவுமே இப்படித்தான்! எல்லாருடனும் உடனே நட்பு பாராட்டி, சொந்தமாகப் பாவிக்கத் தொடங்கிடுவான்! அவன் கேட்ட செங்கோல் உங்க பேனாவைத் தான்! இன்னிக்கு உங்களுக்குத்தான் வேலை! நீங்கதான் எழுதிக்கணும் அவன் சொல்வதை! உங்களுக்குத்தான் ஏதோ மேட்டர் சொல்லப் போறான்னு நினைக்கிறேன்!" என்றதும் சமாதானமாகி, பேப்பர் பேனாவை சிரித்துக் கொண்டே எடுத்தார்.

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னார் சொன்ன விளக்கமும்!

"செங்கோன்மை" -- அதிகாரம் 55

"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை." [541]

இப்ப ஒரு குழுமத்துக்கு தலையா நீங்க இருக்கீங்கன்னு சங்கர் சொன்னான். ரொம்ப நல்ல விசயம். நல்லாவாவும் நடத்துறீங்கன்னும் சொன்னான். கேக்கவே சந்தோசமா இருக்கு. ஒரு தல இன்னா பண்ணனும்னு இதுல ஐயன் சொல்றாரு.
ஏதோ ஒரு தலைப்புல சில பேரு வந்து ஏடாகூடமா எளுதறாங்கன்னு வைச்சுப்போம். அதை எளுதறது யாருன்னு தக்கபடி விசாரிச்சு, தெரிஞ்ச ஆளு, புது ஆளுன்னு பாக்காம, நடுநிலைமையா ஆராய்ஞ்சு பாத்து, அததுக்கு தகுந்த தீர்ப்போ, தண்டனையோ கொடுக்கறதுதான் சரியான வளின்னு சொல்றாரு!

"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி." [542]

இந்த ஒலகத்துல இருக்கற உயிருங்கல்லாம் மானத்துலேருந்து பெய்யற மளையை நம்பித்தான் வாளுது! அதேபோல, ஒரு தலீவன் இன்னாமாரி தன்னோட மக்களை நடத்தறான்னு அவனோட செங்கோலைப் பாத்துகிட்டே இருக்காங்களாம். பாராட்டறதுக்குப் பாராட்டி, தட்றதுக்குத் தட்ட, உன்னோட செங்கோலு, அதாம்ப்பா.. பேனா.. தயங்காம இருந்தாத்தான் அல்லாமும் நல்லா நடக்குமாம்!

"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்." [543]

நல்லாப் படிச்சவங்க கூட, இந்த இடத்துல நியாயமா நடத்துவாங்க நம்மளைன்னு ஒரு நம்பிக்கையோட வந்து எளுதறதுக்குக் கூட ஒன்னப் போல தல நடத்துற விதத்துலதான் இருக்கு. இப்ப, எங்க சீதாம்மா, ஜப்பார் அய்யா போல ஆளுங்கள்லாம் முத்தமிள்ல ரொம்ப சிறப்பா எளுதறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதெல்லாத்துக்கும் காரணம் நீங்க நடத்தற விதந்தான்னு இதைப் புரிஞ்சுக்கணும்! சரியா!

"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு." [544]

ஒரு குளுமத்துல இருக்கற ஆர்கிட்டயும் விரோதம் பாராட்டாம, அன்பா அவங்களை நடத்திகிட்டுப் போனா, அவுக அல்லாரும் 'ஆஹா! நம்ம மஞ்சூரார் போல உண்டா!'ன்னு உங்க கூடவே நிப்பாங்க! இது ரொம்ப முக்கியமா கவனத்துல நீங்க வைச்சுக்கணும்!

"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு." [545]

ஒரு ராசா சரியான வளியில ஆட்சி பண்ணினான்னா, பெய்யற மளை கூட மொறை தவறாமப் பெய்யுமாம். விளையற பொருளு கூட நல்லா விளையுமாம்! இது எப்பிடி எனக்குப் பொருந்தும்னு தானே கேக்க வரீங்க! பெய்யற மளைன்றது சீதாம்மா போல ஆளுங்க ரெகுலரா எளுதறது! விளையற பொருளு... நல்ல சமாச்சாரமெல்லாம் நிறைய வந்துகிட்டே இருக்கறது! ரெண்டும் முக்கியம்! புரியுதுங்களா!;))

"வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்." [546]


சண்டை போட்டு நாலஞ்சு பேரை விரட்டறது வீரமில்ல! செய்யற காரியத்த பாரபட்சமில்லாம பொதுவா ஒரு ராசா... நீங்க கூட மஞ்சூர் ராசான்னுதான் பேரு வைச்சிருக்கீங்களாமே!:))))... பொதுப்படையா ஒரு ராசா செஞ்சா அதான் பெரிய வீரமாம்!

"இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்." [547]


ஒரு நாட்டை எவ்வளவோ நிறைவா ஒருத்தன் நடத்தினாலும், அவன் தன்னோட செங்கோலை எப்பிடி குத்தமில்லாம நடத்துறான்றதை வைச்சுத் தான் அவனோட மதிப்பு வளரும்! புரிஞ்சா சரி!

"எண்பகத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்." [548]

நல்ல விஷயத்தை ஒருத்தர்.. இப்ப நம்ப சீதாம்மா மாதிரின்னு வைச்சுப்போமே... அவங்க வந்து சொல்ல வராங்க! அவங்களை எப்படி நாம வரவேற்கணும்? சொல்ல வந்ததைச் சொல்லுங்க! இதை வில்லங்கம் இல்லாம நான் பார்த்துக்கறேன்னு அவங்களுக்கு தெம்பு கொடுக்கணும். அப்ப, எவனாவது வந்து, ஏடாகூடமா கேள்வி கேட்டு, திசை திருப்பினா, அதைக் கண்டுக்காம விட்டா, அப்ப, அந்தப் பதிவு மட்டுமில்ல, தலையா நிக்கற உங்களோட பேனாவும்... செங்கோலும்... வளைஞ்சு போயிருமாம்! இதைக் கவனத்துல வைச்சுக்கங்க சாமி!

"குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்." [549]

ஒங்க குளுமத்துல வேந்தன்னு ஒருத்தர் இருக்காருன்னு சங்கர் சொன்னான். ரெண்டு வார்த்தைல தன்னோட கருத்தை அடுத்தவனுக்கு அது புரியுதோ இல்லியோ.. சொல்லிட்டுப் போயிடுவாராம். அதாவது, அடுத்தவனையும் வருத்தாம, அதே சமயம் அவ மனசிலியும் பதியுற மாரி! இதுனால, வேந்தனுக்கும் சங்கடமில்லை! சொன்னவனும் புரிஞ்சுப்பான்! இப்பிடி நடந்துகிட்டா, தலைக்கு நல்லது! நான் சொல்லை! ஐயன் சொல்றாரு!

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்." [550]


இவ்ளோ சொல்லியும் ஒருத்தன் கேக்கலைன்னு வைச்சுக்குவோம்! அப்போ இன்னா பண்ணணும்! தாட்சண்ணியம் பாக்காம அவனை வெட்டி விட்டுறணும்! இது எப்பிடீன்னா, நல்ல பயிரை வளக்கும் போது, இடையிலே மொளைச்சிருக்கற சில களைங்களை எல்லாம் வெட்டிப் புடுங்கி எறியற மாதிரீன்னு ஐயன் சொல்றாரு!

"இன்னா! நான் சொன்னதைக் கேட்டு தெகைச்சுப் போயிட்டீங்களா? இதுவரைக்கும் நீங்க நல்லாத்தான் நடத்திகிட்டு வர்றதா சொல்லியிருக்கான் நம்ம தோஸ்த்து! அதுனால, இதுவரைக்கும் பண்ற மாரியே பண்ணிகிட்டு வாங்க! சீதாம்மா போல ஆளுங்க ஒங்க பதிவுல எளுத வந்ததே ஒரு பெரிய விசயம்! அவுங்களைப் போல ஆளுங்க தொடர்ந்து எளுத நீங்கள்லாம் ஒதவி பண்ணனும்! அவ்ளோதான் நான் சொல்லுவேன்! இன்னாப்பா சங்கர்! நான் சொன்னதுல எதுனாச்சும் தப்பு இருக்கா?" என்று சிரித்தான் மயிலை மன்னார்!

"நீ என்னிக்காவது தப்பா சொல்லி இருக்கியா? நீ சொல்றதை முழு மனசோட ஆமோதிக்கிறேன்! நாயர்! இன்னும் ரெண்டு வடை!" எனச் சொன்னேன்!

"ஒங்காளு மெய்யாலுமே பெரிய ஆளுதான்யா!"......டீயை உறிஞ்சியபடியே என் தோளில் கை போட்டர் மஞ்சூரார்!

"எல்லாப் பெருமையும் ஐயனுக்கே" என்றபடி ஆட்டோவில் ஏறிப் பறந்தான் மயிலை மன்னார்!

Read more...

என் கதை சொல்லும் நேரமிது! [வலைச்சரத்துக்கு!]

என் கதை சொல்லும் நேரமிது!

நாம்பாட்டுக்கு நானுண்டு எம்பதிவுண்டுன்னு இருந்தேனுங்கோ!
அது பொறுக்கலை நம்ம பொன்ஸ் தாயிக்கு!
வலைச்சரம் எழுத வாடான்னூட்டாங்க!
ஊருக்குப் போறேம்மா, இப்ப வேணாமேன்னு டபாய்ச்சுப் பார்த்தேன்!
அதுக்கென்ன! தாராளமாப் போயிட்டு வந்து பொறவால எழுதுன்னுட்டாங்க!
தப்பிக்க வழியில்லை..... ஹிஹிஹிஹி.... உங்களைத்தான் சொல்றேன் சாமியோவ்!
இந்த ஒருவாரம் என்னிய நீங்கள்லாம் சகிச்சுகிட்டுத்தான் போகணும்!
என்ன ஒரே ஒரு நிம்மதி இதுலன்னா... ஒரு வாரம்தான்! சீக்கிரம் ஓடிப்போயிரும்!
முடிஞ்சா படிங்க! இல்லேன்னா அடுத்த வாரமா இந்தப் பக்கம் வாங்க!

சரி! இப்ப மேட்டருக்கு வருவோம்!

முதல் பதிவு என்னைப் பத்தி சொல்லணுமாம்!
என்னைப் பத்தி சொல்லிக்க அதிகமா ஒண்ணுமில்லீங்க!
தஞ்சையில் பிறந்து, தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் படித்து, சென்னையில் மருத்துவம் பயின்று, அங்கேயே மருத்துவப்பணியும் செய்து, இடையில் ஈராண்டு காலம் ஜாம்பியாவில் பணி புரிந்து, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இதைத் தொடரும் ஒரு சராசரி ஆள்தான் நான்.
தமிழில் எப்பொழுதுமே ஆர்வம் உண்டு.... படிக்க மட்டுமே!

வலைப்பதிவு என ஒன்று இருக்கிறது எனத் தெரிந்ததே 3 ஆண்டுகளுக்கு முன்புதான்!

பின்னூட்டத்தில் தொடங்கி ஒரு சிலரின் பார்வையில் பட்டு, அவர்களின் உந்துதலால், வலைப்பதிவு தொடங்கினேன்! [இவர்கள் யார் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!]

"நல்லன சொல்வதில் நடுக்கமில்லை! அல்லன அகற்றிடத் தயக்கமில்லை!" எனத்தொடங்கிய இந்த 'ஆத்திகம்' வலைப்பூவில், 250-க்கும் மேல் பதிவுகள் இதுவரையில் எழுதியிருக்கிறேன் என.... இன்றுதான் பார்த்தேன்!:))

தொடக்கத்தில், என்ன எழுதுவது என ஒரு நிலையில்லாமல், மனதுக்குப் பட்டதையெல்லாம் எழுதிய பொழுதில், நண்பர் குமரன் என்னைத் திருப்புகழ் எழுதுமாறு கேட்டுக் கொள்ள, என் வலைப்பூவின் தலைப்புக்கு ஏற்றவாறு இருக்கிறதே என்ற மகிழ்வுடன், திருப்புகழுக்கு விளக்கவுரை கவிதை வடிவில் எழுதத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு இருந்தது! இன்றும் இருக்கிறது.... சற்றே நான் "நீட்டி முழக்கினாலும்"!
அருணையாரின் பாடலுக்கு எழுத வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம்! அந்த வாய்ப்பில், தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வமே இந்த 'நீட்டி முழக்கியதின்' காரணம்! இதில் எனக்கு மகிழ்ச்சியே!

இப்படி தொடர்ந்து திருப்புகழே எழுதி வருகையில், நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு திருக்குறள் பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் என்னுள் ஒரு உந்தல் ஏற்பட்டு, உடனே உருவானான் மயிலை மன்னார்!
வலைப்பதிவு இவனையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டது என் அதிர்ஷ்டம் எனவே சொல்ல வேண்டும்! இன்னமும் தொடர்ந்து வருகிறான்! வாரம் ஒரு அதிகாரம் இவனைக் கொண்டு எழுத வேண்டும் என்பது என் அவா! வள்ளுவனும், முருகனும் அருள வேண்டும்!

இப்படி ஒரு நிலையில் எழுதி வரும்போது, 'திருவெம்பாவை' உரை விளக்கம் எழுத ஒரு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பேறு! 30 நாட்கள் அதைத் தொடர்ந்து எழுதியது மறக்க முடியாத ஒரு அனுபவம்!

'ஆல்கெமிஸ்ட்' என்கிற ஒரு அற்புதமான நாவலை நான் படித்தேன்! ஒரே மூச்சில் படித்து முடித்தேன் என்பதே உண்மை! என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், எனக்குப் பிடித்தது எல்லாம் என் மனைவிக்கும் பிடிக்க வேண்டும் என வற்புறுத்துவது! இந்தக் கதையை அவரையும் படிக்கச் சொல்லி அவரிடம் இந்தப் புத்தகத்தைத் திணித்தேன்! படித்தவுடன் அவர் என்னிடம் முதன்முறையாக கேட்டது இதுதான்! 'என்னமோ ப்ளாக்கெல்லாம் எழுதறீங்களே! இதை ஒட்டி ஒரு கதை எழுதுங்க! இல்லாட்டி எழுதறதை நிறுத்திடுங்க!' இதை ஒரு சவாலாக ஏற்று, 40 நாட்கள் வேறு பதிவு எதுவுமே எழுதாமல் 'சித்தர்-- கனவு மெய்ப்படும்!' என 42 அத்தியாயம் எழுதி வெளியிட்டேன்! இதையே எனது வலைப்பதிவின் நிறைவாகக் கருதுகிறேன்!

நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 'கசடற' என்னும் வலைப்பூ தொடங்கி, பாலியல், இதயம் பற்றி எழுதிய இரு தொடர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையும் இங்கு குறிக்கிறேன்.

அவ்ளோதாங்க! நேரம் கிடைக்கும் போது ஒரு நடை நம்ம பக்கம் வந்திட்டுப் போங்க!

நன்றி!

Read more...

Tuesday, March 04, 2008

சிவமாய் நிறைவாய்! "சிவராத்திரி பதிவு"






சிவமாய் நிறைவாய்!




[சிவராத்திரியை முன்னிட்டு ஒரு பதிவு இட வேண்டுமென என் நண்பர் திரு. ராஜா அண்ணாமலை கேட்டிருந்தார்! என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை!]


உலகாய் உயிராய் உலவும் பொருளாய்

நிலமாய் நீராய் நெருப்பாய் காற்றாய்
விண்ணாய் விளங்கும் அனைத்திலும் ஒன்றாய்
கண்ணாய் ஒளியாய் சிவமாய் நிறைவாய்!

என்னுள் உறையும் இறையாய் நின்றாய்!
உறையுள் உறையும் வாளாய்ச் சென்றாய்!
எல்லாம் நீயே இயக்கம் என்றாய்!
உறங்கும் போதிலும் நடனம் புரிந்தாய்!

உறைவாய் உறைவாய்! என்னுள் உறைவாய்!
கரைவாய் கரைவாய்! என்னில் கரைவாய்!
பொழிவாய் பொழிவாய்! அன்பைப் பொழிவாய்!
மொழிவாய் மொழிவாய்! முத்தமிழ் மொழிவாய்!

பணிவாய் பணிவாய்! பண்பினில் பணிவாய்!
பனிவாய் பனிவாய்! இமயவன் பனிவாய்!
செவ்வாய் செவ்வாய்! தித்திக்கும் செவ்வாய்!
இசைவாய் இசைவாய்! இன்புடன் இசைவாய்!

அளவாய் அளவாய்! வளமும் அளவாய்!
உணர்வாய் உணர்வாய்! என்னுயிர் உணர்வாய்!
குழைவாய் குழைவாய்! தேனினில் குழைவாய்!
நிறைவாய் நிறைவாய்! என்னில் நிறைவாய்!

அமர்வாய் அமர்வாய்! இதயம் அமர்வாய்!
சொல்வாய் சொல்வாய்! இன்கதை சொல்வாய்!
உருவாய் உருவாய்! உளமே உருவாய்!
வருவாய் வருவாய்! துணையாய் வருவாய்!

தருவாய் தருவாய்! சகலமும் தருவாய்!
அருள்வாய் அருள்வாய்! இணையடி அருள்வாய்!
உறவாய் உறவாய்! என்னுடை உறவாய்!
மலர்வாய் மலர்வாய்! சிவமாய் மலர்வாய்!

வடிவாய் விளைவாய் பொலிவாய் குளிர்வாய்
நகையாய் மணியாய் நலமாய் தவமாய்
வளமாய் வருவாய் அன்பாய் அருள்வாய்
சிவமாய் சிவனாய் செம்மையாய் ஆக்குவாய்!

என்னில் உறையும் இறைவன் இவனே
நம்மை எழுப்பும் நடனம் புரிவான்
தன்னை உணரும் அனைவரின் மனதில்
இன்றே இவனே நடனம் புரிவான்!

சிவனிவன் நடனம் ஆடிடும் இறைவன்
அவனடி நிழலே அடியவர் துணையே!
சுடலையில் நடமிடும் நடுநிசியிரவில்
சிவனுடை நினைவு சுகமும் தருமே
!

************************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP