Thursday, December 22, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 41 [இரண்டாம் பகுதி]

                                                                     உ
"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 41 [இரண்டாம் பகுதி]
39.
[முதல் பகுதியையும் படிக்கவும்!]

 
மாவேழ் சனனங் கெடமா யைவிடா



மூவே டணையென் றுமுடிந் திடுமோ


கோவே குறமின் கொடிதோள் புணரும்


தேவே சிவசங் கரதே சிகனே.


அடுத்த இரு வரிகளுக்கு மன்னார் என்ன சொல்லப் போகிறான் என்னும் ஆவலில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். நாயரும் கண்களைத் திறந்து பார்த்தான். சாஸ்திரிகள் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது. மயிலை மன்னார் சொல்லத் தொடங்கினான்.

'இப்ப ஒனக்கு கொஞ்சம் துட்டு வேணும்னு வையி. நீ ஆருகிட்ட போவே? துட்டு இருக்கறவங்கிட்ட போவே! ஆனாக்காண்டிக்கு, துட்டு வைச்சுக்கினு க்கீறவன்லாம் குடுத்துருவானா?


இன்னா, ஏதுன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுட்டு, அப்பறமா வா, பாக்கலாம்னு சொல்லிருவான் மனசில்லாதவன். அவங்கையுல துட்டு இருந்தும் ஒண்ணும் 'யூஸ்' இல்ல!


அதுனால நீ இன்னா பண்ணுவே? துட்டு மட்டும் வைச்சிருந்தாப் போறாது. குடுக்கற மனசும் க்கீறவனாப் பாத்து போவே.


அதுவும் பத்தாம, அவனோட கொணம் தெரிஞ்சு அந்த டயத்துக்காப் போவணும்! அப்பத்தான் காரியம் கெலிக்கும். இன்னா? சர்த்தானே நான் சொல்றது.' என்றான்.


நான் ஆமாம், ஆமாம் என்பதுபோலத் தலையாட்டினேன்.


வெறும் துட்டு சமாச்சாரத்துக்கே இத்தினி பாக்கணும்னா, இப்ப அருணகிரியாரு கேக்கற சமாச்சாரத்துக்கு இன்னால்லாம் தோணும் அவருக்கு!


பொறவியே இனிமே கூடாதாம்! இந்த மூணு விதமான ஆசையும் தொலையணுமாம்!


இத்தக் கேக்கப் போறச்சே, ஆரு இதுக்குத் தோதானா ஆளுன்னு பாக்கறாரு.


சரி, பொறவிதானே வேணாம்னு சொன்னே. அதுக்கென்ன இனிமே நீ பூமியுல பொறக்கமாட்டே! அதுக்குப் பதிலா என்னோட ஒலகத்துக்கு வந்து குந்திக்கன்னு சொல்ற சாமியை இவர் தேடலை!

எந்த சாமிக்கு எல்லா ஒலகமும் கட்டுப்படுதுன்னு சுத்துமுத்தும் பாக்கறாரு.


எதுத்தாப்புல வந்து நிக்கறான் முருகன்!

'ஆகா! இவர்தானே அல்லா ஒலகத்துக்கும் தலைவன்'னு புரியுது!

கைலாஸம், வைகுண்டம், சத்தியலோகம், சக்திபீடம்னு நாலு ஊருங்க இருக்கு. அததுக்கு ஒரு சாமி தெய்வமா நின்னு அந்தந்த ஊருங்களைப் பாதுகாக்குது.

ஆனாக்க, இந்த முருகனோட பெருமையே தனி!


ஒனக்குக் கூட நெனைப்பிருக்குமே! ஓம்முன்ற வார்த்தைக்குப் பொருள் தெரியலைன்னு, பிரம்மாவைத் தூக்கி ஜெயில்ல போட்டுட்டு இவரு இன்னா பண்ணினாருன்னு!

அல்லாத் தொளி[ழி]லையும் இவர் ஒர்த்தரே பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, அப்பிடியே செஞ்சும் காட்டினாரு!

இதெல்லாம் நெனைப்புல வரவும், மொதல் வார்த்தையைப் போட்டுக் கூப்பிடறாரு!

'கோவே'ன்னு!


'கோ'ன்ன ரொம்பப் பெரிய ராசான்னு அர்த்தம். இல்லியா சாமி?' என சாஸ்திரிகளைப் பார்த்ததும், உடனே புரிந்த சாம்பு சாஸ்திரிகள்,


'இதைப்பத்தி, 'திருமுருகாற்றுப்படை'ங்கற அற்புதமான நூலுல நக்கீரர் ரொம்ப அழகாச் சொல்றார்.


" நால் பெரு தெய்வத்து நல் நகர் நிலை இய
உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கை" ன்னு.


கிட்டத்தட்ட இப்ப நீ சொன்ன அதே குணத்தைத்தான் கந்தஸ்வாமிக்குச் சொல்லி அழகு பார்க்கறார் நக்கீரர்' என்றார்.

ஒரு திருப்தி கலந்த சந்தோஷத்துடன் அவரைப் பார்த்துவிட்டு மேலே தொடங்கலானான் மன்னார்.


'ஆச்சா? இப்ப மொத வார்த்தை கிடைச்சாச்சு! அல்லா ஒலகமும் இவருக்கு வசப்படுதுன்னு புரிஞ்சுபோச்சு!

இப்ப நேரம் எப்பிடின்னு கொஞ்சம் யோசிக்கறாரு அருணகிரி.
எப்பவுமே ஒர்த்தர் ரொம்ப சந்தோஷமா க்கீற நேரத்துல போய்க் கேட்டா, அநேகமா அந்தக் காரியம் பள[ழ]மாயிரும்.

அப்பிடி இந்தக் குமரனுக்கு எந்த நேரம் நல்ல நேரம்னு நெனைச்சுப் பாக்கறாரு.
அடுத்த வரி பொறக்குது!

'குறமின் கொடி தோள் புணரும் தேவே'ன்னு கூப்பிடறாரு.


வள்ளியம்மாவோட இடுப்பு ரொம்பச் சின்னதா ஒரு மின்னல்கொடி போல இருக்குமாம். அந்த அம்மாவோட இவரு க்கீற நேரமெல்லாமே சந்தோசமான நேரந்தான். அதுனால, இந்த வார்த்தையைச் சொன்னதும், அந்தக் 'கோ'வுக்கு, 'தே'வுக்கு... ரொம்பவே சந்தோசமாப் பூடுது!


கடசியா, ஒரு சொல்லு வைக்கறாரு 'சிவசங்கர தேசிகனே'ன்னு!

முன்னாடி சொன்ன பிரம்மா கதையோட முடிவு ஒனக்குத் தெரியுந்தானே! அவரை விட்டுருப்பான்னு நைனா கபாலி வந்து கேக்கக்கொள்ள, அப்பிடீன்னா அதுக்கு பொருள் சொல்லு நைனான்னு இவரு பர்த்திக்குக் கேக்க, 'ஒனக்குத் தெரிஞ்சா நீயே சொல்லுன்னு கபாலி கேக்க, 'ஆங்! அதெல்லாம் ஒளுங்கா ஒரு வாத்தியார்கிட்டக் கேக்கறமாரி பணிவாக் கேக்கணும்'னு முருகன் சொல்ல, அப்பிடிச் சொன்னதுதான் அந்த ஒபதேசம்!


அதுனாலத்தான் இவரு சிவசங்கர தேசிகன்.
தேசிகன்னா குருன்னு அர்த்தம்.


இந்த வார்த்தை எதுக்காவப் போட்டருன்னா, ஆருக்குமே தெரியாததுல்லாம் ஒனக்கு மட்டுந்தான் தெரியும் முருகா! அதுனால, இந்த பொறப்பும், மூணு ஆசைங்களும் எப்ப முடியும்ன்றதையும் கொஞ்சம் பாத்துச் சொல்லு கண்ணு'ன்னு நைஸாக் கேக்கறாரு!


நான் மொதல்லியே சொன்னமாரி, ஆரு கையுல அல்லாமே க்கீதோ, ஆருக்கு குடுக்கற மனசு க்கீதோ, அவர்கையுல நேரம் பாத்துக் கேட்டா, கேட்டதுக்கு மேலியே கிடைச்சிரும்!


இந்த மூணு ஆசைங்களுக்கும் கீளே சொன்ன மூணு பேருங்களுக்கும்ங்கூட ஒரு பொருத்தம் க்கீது!


அல்லா ஒலகத்துக்கும் ராசா... மண்ணு
வள்ளியம்மாவைக் கண்ணாலம் கட்டிக்கினவரு....பொண்ணு
ரொம்பவே மதிப்பான தங்கத்தைப் போல, ரொம்பப் பெரிய விசயத்தைத் தெரிஞ்சு வைச்சிருக்கவரு,... பொன்னு!


இப்பிடியும் அர்த்தம் பண்ணிக்கினு இந்தப் பாட்டை ரொம்பவே ரசிக்கலாம்.

ஆகக்கூடி, நேரம் காலம் பாக்காம, எப்பவும் இவனோட பேரைச் சொல்லிக்கினே இரு! அதான் இதுக்கெல்லாம் ஒரே வளி[ழி]ன்னு இந்தப் பாட்டு மூலமா, அருணையாரு நமக்கெல்லாம் அருள் பண்றாரு' எனச் சொல்லிவிட்டு, எழுந்து நின்று ஒரு சோம்பல் முறித்தான் மயிலை மன்னார்!

மீண்டும் இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தேன்!


மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவே டணையென் றுமுடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங் கரதே சிகனே.


'ஓம் சரவணபவ' தொடரலாயிற்று!

**************************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Wednesday, December 21, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 40 [முதல் பகுதி]

                                                                         உ
"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 40 [முதல் பகுதி]
39.

இன்னைக்குச் சொல்லப்போற பாட்டு ரொம்பவே ஒசத்தியானது! படிக்க ரொம்பவே சுளுவா இருக்கும். ஆனாக்காண்டிக்கு, இதுக்குள்ள ரொம்பப் பெரிய விசயம் க்கீது! அதனால, இதுக்குச் சொல்றப்ப, நம்ம சாமியும் அப்பப்ப வந்து சொல்லணும்னு கேட்டுக்கறேன்' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தான் மயிலை மன்னார்!

'என்னடா சொல்றே! நீ சொல்றதுக்கு மேலே நான் என்ன சொல்லப் போறேன்? சரி, என்னமோ சொல்றே! விஷயம் இல்லாமலா சொல்லுவே? பார்க்கலாம்' எனச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்!

'இன்னா முளி[ழி]க்கறே? போவப் போவப் புரியும்! நீ பாட்டைப் படி! அதானே ஒனக்கான வேலை' என என்னைப் பார்த்தான் மன்னார்.

பதிலொன்றும் பேசாமல், ஒரு ஆவலுடன் அடுத்த பாடலைப் படித்தேன்.

மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவே டணையென் றுமுடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங் கரதே சிகனே.


[மாவேழ் சனனம் கெட மாயை விடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே.]

'மாவேழ் சனனம் கெட மாயை விடா மூவேடணை என்று முடிந்திடுமோ?'

'மாவேழ் சனனம்'னு ஒரு வார்த்தை போட்டிருக்காரு.
அதென்ன மாவேள்[ழ்] சனனம்?

ஏளு[ழு] சென்மம்னு கேள்விப்பட்டிருக்கோம்!
மா....வேளு[ழு]?

'மா'ன்னா பெருசுன்னு சொல்லுவாங்க!
அப்ப, இது பெரிய ஏளு[ழு]ன்னு அர்த்தமாவுது.

அப்படீன்னா இன்னா?
ஏளும் ஏளும் பதினாலா?
இல்லைன்னா, ஏளேளு நாப்பத்தொம்பதா?
இன்னா ஐயரே? இன்னா சொல்றீங்க? என சாஸ்திரிகளைப் பார்த்தான் மன்னார்.

'நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான் மன்னார்! இந்த ஏழுங்கறது ரொம்பவே பெரிய விஷயம்! ரிக் வேதத்துல இது பத்தி ரொம்பவே ஒசத்தியா சொல்லியிருக்கு.

பூமில ஏழு [1:22:16], ஏழு நாக்கு தீக்கு [1:58:7], ஏழு நதிகள் [1:32:12], ஏழு ஸ்வரங்கள், பாடகர்கள் [1:62: 4], ஏழு கோட்டைங்க [1:63: 7], ஏழு விதமான வெள்ளம் [1:72:8], ஏழு கதிர்கள் [1:105:9], ஏழு சகோதரிகள் [ 1:164:3], ன்னு.. இந்த ஏழு ரொம்பப் பெரிய சமாச்சாரம்.

அதே மாதிரிதான் இந்த ஏழு பிறவிங்கறதும்!

இது ஏழா, ஈரேழா, இல்லைன்னா ஏழேழு நாப்பத்தொம்பதான்னு நீ கேக்கறமாதிரியே ஒரு கேள்வி வரும்.


எல்லாமே சரின்னாலும் இதுக்கெல்லாம் தெளிவா ஒரு விடையை நம்ம மாணிக்கவாசகர் கொடுத்திருக்கார்!

இந்தப் பிறவின்னா என்ன? அது எத்தனை வகைப்படும்னு ரொம்ப அழகா, எளிசா சொல்லியிருக்கார்!
திருவாசகத்துல ஒரு வரி இப்படி வருது.

"புல்லாகி,பூடாய்,புழுவாய்,மரமாகி,பல் விருகமாகி,பறவையாய்,பாம்பாகி,
கல்லாய்,மனிதராய்,பேயாய்,கணங்களாய்,வல்லசுராகி,முனிவராய்,தேவராய்,செல்லா நின்ற இப்பிறப்பில்எல்லாப் பிறப்பும் பிறந்துஇளைத்தேன் எம்பெருமான்!"

ஒண்ணொண்னா கூட்டிப் பாரு! மொத்தம் பதினாலு வரும்! இதான் ஏழேழு!
இதுல மீனைப் பத்திச் சொல்லலியேன்னு ஒரு சந்தேகம் வரும். பல் விருகம்னு சொல்றப்பவே இதெல்லாமும் வந்துடும்னு சொல்லாம சொல்லியிருக்கார் அந்த மஹா ப்ரபு!

இந்த ஈரேழைத்தாம் நாம மாறி மாறிப் பிறந்து இளைச்சுப் போறோம்!
அந்தந்தப் பிறவில பண்றதை வைச்சு, எதுவா வேணும்னாலும் பிறந்து, எப்பவோ முக்தி அடையறோம்.
எத்தனையோ கோடிப் பிறவிக்கு அப்புறம்!

நம்ப சம்பந்தர் இருக்காறே, அவர் இன்னும் ஒரு படி மேலே போய், இந்த ஏழு பிறவிகளுக்குள்ளியும் நிறைய யோனி பேதங்கள் இருக்குன்னு சொல்றார்.

'உரை சேரு எண்பத்து நான்கு
நூறாயிரமாம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்த வற்றின்
உயிர்க்கு யிராய் அங்கங்கே நின்றான்'னு ஒரு பாட்டு பாடறார்.


இதுலேர்ந்து என்ன தெரியறதுன்னா, இந்தப் பிறவிகள் எத்தனை, அதுக்குள்ளே எத்தனை பிரிவுன்னு யாராலயும் சொல்லவே முடியாது. இதான் நான் சொல்ல வர்றது' என்றார் சாஸ்திரிகள்.

சட்டென்று உற்சாகமானான் மன்னார்!

'நல்லாச் சொன்னீங்க சாமி! இதையேதான் நம்ம ஐயனும் சொல்லியிருக்காரு!

62, 107, 398, 835 இது எல்லாத்திலியும் ஐயனும் இதைத்தான் சொல்லி இருக்காரு!

'எழு பிறப்பும் தீயவை வேண்டா'
'எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்'
'எழுமையும் ஏமாப்புடைத்து'
'எழுமையும் நான் புக்கழுத்தும் அன்று' ன்னு இந்தப் பொறப்புங்களப் பத்திச் சொல்றாரு.

ஆக மொத்தம் எப்பிடிப் பாத்தாலும், இந்த ஏளோ[ழோ]ட கூட்டணி நம்மள ரொம்பவே படுத்துதுன்னு புரியுதில்ல. அவ்ளோ கொடுமை இந்தப் பொறப்புன்றது!

இந்தச் செனனந்தான் ஒளி[ழி]யணும்னு கேக்கறாரு மொதல் வார்த்தையுல !

அடுத்தாப்பல வர்றது இன்னும் பெருசு! அதுக்கும் சாமிதான் தயவு பண்ணணும்' எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தான் மன்னார்.

'மாயை விடா மூவேடணை என்று முடிந்திடுமோ?'

மூ வேடணை'ன்னா இன்னான்னு பாப்பம் மொதல்ல!

நேரடியா தமிள்[ழ்]ல பாத்தா, ஒருவேளை வேதனைன்றதைத்தான், அப்பப்ப மாத்திப் போடறமாரி போட்டுட்டாரோன்னு தோணும்!

அப்பிடியே பாக்கலாம் இப்ப.
அதென்ன மூணு வேதனை?

ஒலகத்துல நம்மளைப் படுத்தறது இந்த மூணு விதமான ஆசைங்கதான்
மண்ணாசை, பொண்ணாசை, பொன்னாசைன்ற இந்த மூணுந்தான் இந்த வேதனைங்க!

இதெல்லாம் எதுனால வருது?
எல்லாம் ஒரு மாயைன்னு புரியாததால.

ஆசை வர்றதே ஒரு மாயையாலத்தானே? என்ன சாமி சொல்றீங்க' என சாஸ்திரிகளைத் தூண்டினான் மயிலை மன்னார்!

அதைப் புரிந்துகொண்ட சாம்பு சாஸ்திரிகளும் சற்றும் சளைக்காமல் பேசலானார்.

'நீ சொன்னதும் ஒருவிதத்துல சரின்னாலும், இதுல ஒண்ணும் தப்பா சொல்லலை அருணகிரியார்.

இப்போ, 'நஷ்டம்', 'கஷ்டம்'ங்கறதை 'நட்டம்', 'கட்டம்'னு சொல்றாளோன்னோ? அதேமாதிரிதான், 'ஏஷணா'ன்னு ஒரு சம்ஸ்க்ருத வார்த்தை, இங்கே 'ஏடணை'ன்னு கொஞ்சம் உருமாறி வந்திருக்கு.

ஏஷணான்னா ஆசைன்னு அர்த்தம்.

மத்தபடி நீ சொன்ன அந்த மூணு ஆசையும் அதேதான்!
ம்ம்ம்... மேலே நீயே சொல்லு!' என மௌனமானார் சாம்பு சாஸ்திரிகள்!

'இந்த சென்மன்றது முடியணும்னா, இந்த மூணு ஆசைங்களையும் நாம விடணும். அப்பத்தான் இது தொலையும்!

இல்லைன்னா ஏளு[ழு], ஏளேளு,ன்னு தொடர்ந்துக்கினே இருக்கும்!
இதெல்லாம் எப்போ முடியும் முருகான்னு கதர்றாரு.

இதை ஏன் முருகனைப் பார்த்துக் கேக்கறாருன்றதுக்குத்தான் அடுத்த ரெண்டு வரியும்!' என நிறுத்தினான் மன்னார்!

சரி, இது கொஞ்சம் நீளமாத்தான் போவப்போவுது' என நினைத்தபடியே நாயரைப் பார்த்தேன்.

'இது எனக்கு அப்பவே தெரியும்' என்பதுபோல், அவன் 'ஓம் சரவணபவ' மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான்!
******

[இன்னும் வரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, December 15, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 39

                                                                உ
"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 39
38.
[சென்ற பதிவில் ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டது. பாடல் வரிசையை மாற்றிப் போட்டுவிட்டேன். எனவே 38-ம் பதிவைப் படித்துவிட்டு, இந்த 39-ஐப் படிக்கவும். சிரமத்துக்கு மன்னிக்கவும். முமு!]

 
வழக்கமாக அமரும் ஐயர் வீட்டுத் திண்ணையில் இன்று புதிதாக இன்னுமொருவன் அமர்ந்திருந்தான். மயிலை மன்னார் சஹஜமாக அவனது தோளின் மேல் கைபோட்டிருந்தான்!


எனக்கும், நாயருக்கும் அவனை முன்னமேயே தெரியுமென்பதால், ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். சாம்பு சாஸ்திரிகள் மட்டும் ஒன்றும் புரியாமல் எங்களைப் பார்த்தார்.


அவரது ஆவலைப் புரிந்த நான், மேலும் அவரை வருத்தவிடாமல், 'என்ன மன்னார்! நம்ம கோபாலையும் இன்னைக்குக் கூட்டிட்டு வந்திருக்கே போல!' எனச் சிரித்தபடியே கேட்டேன்.


சட்டென்று விஷயம் புரிந்து சாஸ்திரிகளின் முகமும் மலர்ந்தது!


'அட! பின்ன இன்னாபா! நம்ம தோஸ்த்துன்னா அப்பிடியே விட்டுருவோமா? இன்னா தப்பு பண்னினாலும் அதுக்குன்னு சீ, போடான்னு தள்ளிருவோமா இன்னா?நம்மாளு என்னிக்குமே நம்மாளுதான்! அதுக்குத்தான் இன்னைக்கு இங்கன அவனையும் இட்டாந்தேன். அது மட்டுமில்ல! இன்னைக்கு சொல்லப்போற பாட்டை அவனும் கேக்கணுன்னுந்தான்! எங்க? பாட்டைப் படி!' என என்னைப் பார்க்க, நான் படிக்கலானேன்.

ஆதா ளியையொன் றறியே னையறத்
தீதா ளியையாண் டதுசெப் புமதோ
கூதா ளகிரா தகுலிக் கிறைவா
வேதா ளகணம் புகழ்வே லவனே.

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

' ஒரு பெரிய சமாச்சாரத்தை அப்பிடியே அசால்ட்டாச் சொல்லிடறாரு இந்த மொத ரெண்டு வரியுல!

'ஆதாளியை ஒன்று அறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ'ன்னு அளு[ழு]து பொலம்பறாரு.

'ஆதாளி'ன்னா இன்னா?


மனக்கலக்கம் ஜாஸ்தியா இருக்கறவனுக்கு இந்தப் பேரு.


எதுனால மனக்கலக்கம் வருது?


இப்ப ஒரு பிரச்சினை ஒண்ணு ஒர்த்தனுக்கு வருதுன்னு வையி! இன்னா பண்றதுன்னு ஒண்ணுமே தெரியலைன்ற வெவரம் அவனோட அடிவயித்தப் பெசையறப்ப, 'அடடா! இன்னாடா இது வம்பாப் போச்சு! நமக்கு ஒண்ணுமே தெரியலியே! எப்பிடி இப்ப சமாளிக்கப்போறோம்ன்ற நெனைப்பு வர்றப்ப வர்றதுதான் இந்த மயக்கம். அதான் ஆதாளி.


ஆச்சா? இப்ப ஆதாளி, ஒன்று அறியேன்னு தன்னை ரெண்டு விதமாச் சொல்லிட்டாரு.


அப்பாலிக்கா, அறத் தீதாளின்னு வேற சொல்லிக்கறாரு.


ஆதாளி ஒனக்குப் புரிஞ்சுதுனால, இந்தத் 'தீதாளி'ன்னா இன்னான்னு ஒருமாரி குன்ஸாப் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்.


' தீதாளி'ன்னா கெட்டது பண்றவன்னு அர்த்தம்.

சாதாரணமா கெட்டது பண்ணினாக்கூட, சரி, இது அவன் கொணம்னு பொறுத்துக்கலாம்.


ஆனாக்காண்டிக்கு, நல்ல விசயத்துக்கு, தர்மத்துக்கு கெடுதி பண்றவன் க்கீறானே, அவன் ரொம்பவே மோசமானவன்.


அதைத்தான் 'அறத் தீதாளி'ன்னு சேர்த்து சொல்றாரு.


இப்பியாப்பட்ட என்னை 'நீ பண்ணினதெல்லாம் போறும்'னு கருணை பண்ணி ஒன்னோட சேர்த்துக்கினியே முருகா! இத்த நான் இன்னான்னு சொல்லிப் பாடறதுன்னு கண்ணால தண்னி வுடறாரு அருணகிரியாரு.
இதுக்கு அப்பால ஒரு ரெண்டு வரி போட்டிருக்காரு பாரு,... அதான் ரொம்பவே பிரமாதம்!

கூதாள கிராத குலிக்கு இறைவா; வேதாள கணம் புகழ் வேலவனே.

'கூதாள' ப்பூன்னு ஒரு பூ க்கீது. சாதாரணமா காட்டுல ஆருமே பாக்காத இடத்துல இது பூத்திருக்கும். வாசனையும் ஒண்ணும் அப்பிடி ரொம்பவும் கிடையாது!


இந்தப் பூவை எடுத்து தலையுல வைச்சுக்கற கூட்டம் ஒண்ணு க்கீது!
அவங்கதான் அந்தக் காட்டுலியே வேட்டையாடுற வேடருங்க!


கொன்னு குவிக்கறதே இவங்க தொளி[ழி]லுன்றதால, இவங்களுக்கு 'கிராதர்'னும் ஒரு பேரு உண்டு.


அந்தக் கொலத்துல பொறந்த வள்ளியம்மையைக் கட்டிக்கிட்டதால அந்தக் கூட்டத்துக்கே இவரு தலீவராகிப் போறாரு.


அதான் 'கூதாள கிராத குலத்துக்கு இறைவன்'... நம்ம கந்தன்!


இவருக்குன்னு ஒரு பெரிய படை க்கீது!
அதுல ஆராருடா சிப்பாயிங்கன்னு பார்த்தியான ஒரே வேடிக்கையா இருக்கும்!
இந்தப் பேய்க் கூட்டங்கதான் இதுல பெரிய பெரிய சிப்பாயிங்க!
அவங்களைத்தான் 'வேதாள கணம்'னு சொல்றாரு.


இவங்கள்லாம் புகளு[ழு]ற வேலவனேன்னு கொண்டாடறாரு!


இங்கதான் கொஞ்சம் கவனிக்கணும்!
எதுக்காவ இவங்களையெல்லாம் இந்த இடத்துல கொணாந்து வைச்சுப் பாடறாரு?
இவங்கள்லாம் ஆரு?


கொஞ்சங்கூட மதிப்பே இல்லாத காட்டுப் பூவை எடுத்து வைச்சுக்கினு கண்டவங்களைக் கொல்றவங்க ஒரு பக்கம்!
அவங்களுக்கு இவரு சாமி!


செத்துப் போனதுக்கப்பறமும் போவ[க]வேண்டிய இடத்துக்குப் போவாம, இன்னமும் பேயா அலையுற கூட்டந்தான் இவருக்கு 'ஆர்மி'!
இவங்கள்லாம் இவரைக் கொண்டாடறாங்க!




இதுலேர்ந்து இன்னா வெளங்குது ஒனக்கு?


நீ இன்னாத்தான் கெட்டவனாயிருந்தாக்காண்டியும், தன்னோட ஆளுங்கன்னு முருகன் நெனைச்சுட்டான்னா, அவங்களைக் கைவிடவே மாட்டான் அந்தக் கருணைக் கடலு! அதான் அவன் கொணம்!

திட்டினவங்களைக் கூட நல்லா வாள[ழ] வைக்கற தெய்வம் அவன்!

இதும்மாரிப் பண்ணினவங்களைக் கூட நீ நல்லா நடத்தினப்ப, என்னைப் போல, ஒண்ணுமறியா ஆதாளியை, அறத் தீதாளியை நீ பெரிய மனசு பண்ணி, ஒனக்கு அடிமையா வைச்சுக்கினியே முருகா! இத்த நான் இன்னான்னு சொல்றது!'ன்னு மெய்சிலிர்க்கறாரு அருணையாரு!' என்று சொல்லி நிறுத்திவிட்டு, அருகிலிருந்த தன் சகா கோவா[பா]லை அன்புடன் பார்த்தான்!

'அண்ணே!' எனச் சொல்லி மேலே வார்த்தை வராமல் தழுதழுத்தான் கோபால்.


இந்தக் காட்சியைப் பாத்து, தன் மேல் துண்டால் தன் கண்களைத் துடைத்தபடியே, சாம்பு சாஸ்திரிகள், 'இதைக் கேட்டதும் எனக்கு ஒரு ரெண்டு வரி சொல்லணும்னு தோணறது' என ஆரம்பித்தார்.

இந்த 'ஆண்டது செப்புமதோ'ன்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கென்னமோ சட்டுன்னு திருவாசகத்துல மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் பாடினதுதான் ஞாபகத்துக்கு வந்தது!


'திருக்கோத்தும்பி'ல ஒரு வரி வரும்!


'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி'ன்னு!


இதுல வர்ற கண்ணப்ப ஸ்வாமிகளும் ஒரு வேடந்தான்! ஆனாலும் அவரோட அன்புக்குக் கட்டுப்பட்டு அந்த சர்வேச்வரன் என்னமா அவர் செஞ்சதையெல்லாம் தாங்கிண்டார்னு நினைக்கறச்சே, அவருக்கு பொறந்தவர், அதுவும் நேரடியா அவரோட நெற்றிக்கண்ணுலேர்ந்து பொறந்த இந்த கந்தஸ்வாமி இப்படி அருட்கடாக்ஷம் பண்றதுல என்ன ஆச்சரியம்! நாம் மட்டும் அவரை எப்பவும் ஸ்தோத்ரம் பண்ணிண்டு இருந்தா எல்லா மங்களத்தையும் அவர் நடத்திக் கொடுப்பார்னு சொல்லணுமோ!' என்றார் சாஸ்திரிகள்!

'நல்லா சொன்னே சாமி' என்று சிலாகித்தான் மயிலை மன்னார்.


நாயரின் 'ஓம் சரவணபவ' தொடர்ந்து கொண்டிருந்தது!
***************
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- – 38

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- – 38
37.

'ஒரு கூட்டத்துல ஒர்த்தனா இருக்கணும்னா, மொதல்ல அடக்க ஒடுக்கமா இருக்கத் தெரியணும். அது இல்லேன்னா எந்தப் பிரயோசனமும் இல்லை' என உரக்கக் கூறியபடியே ஆட்டோவிலிருந்து இறங்கினான் மயிலை மன்னார்.



'இப்ப என்ன ஆயிடுத்துன்னு நீ இந்தக் கூப்பாடு போடறே?' என உரிமையுடன் அதட்டினார் சாம்பு சாஸ்திரிகள்.



இந்தக் கோவாலுப் பயலைத்தான் சொல்றேன். நம்ம கூட்டத்துலதான் இருந்தான். தாயா புள்ளையாப் பள[ழ]கினோம். இப்ப இன்னாடான்னா, தெனாவெட்டாப் பேசறான். கையுல நாலு காசு பார்த்துட்டான்னா, அதுக்காவ மரியாதையில்லாமப் பேசறதா இன்னா? அகங்காரம் தொலைஞ்சாத்தான் உருப்புடுவான். அதான் ரெண்டு தட்டு தட்டிட்டு வந்தேன். இப்ப வர்ற பாட்டு கூட அத்தத்தான் சொல்லப் போவுது. என்றான் மன்னார்.


பதிலொன்றும் சொல்லாமல் பாட்டைப் படித்தேன்.

கிரிவாய் விடுவிக் ரமவே லிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியோ டுமகந் தையையே


கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே


" மனனே! கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய்!"

'மனசைப் பாத்து ஒரு கோரிக்கை வைக்கறாரு.


இதுவரைக்கும் நீ இன்னான்னாமோல்லாம் பண்ணிட்டே! அதுனால ஒனக்கும் எனக்கும் படா பேஜாராகித்தான் போயிருக்கு. உருப்படியா ஒண்ணும் நடக்கலை. தொந்தரவு மேலத் தொந்தரவா வந்து இப்பிடி சிரிப்பா சிரிக்கறோம். நீ பண்ணின காரியத்தால,.... சரி, சரி... நானுந்தான் சேர்ந்து செஞ்சேன்....இல்லேங்கலை.... நாம பண்னின காரியத்தால, நமக்குன்னு சொல்லிக்க ஒரு நாலு பேரு கூட இல்லை இப்ப!


நான் ஒண்ணே ஒண்ணு சொல்றேன் கேக்கறியா? இனிமேங்காட்டிக்கும், நமக்குன்னு நல்லவங்க கூட்டம் வேணும். அதுக்கு நாம போயி முருகனோட அடியாருங்க கூட்டத்துல இருக்கறவங்க காலடியுல விள[ழ]ணும்.

ஆரு இந்த முருகன்னு கேக்கறியா?


அது மாயக் குகை, மந்திர மலை, கொஞ்சம் பாத்து கவனமாப் போங்கப்பான்னு, படிச்சு, படிச்சு சொன்னவருதான் இந்த முருகன்.


ஆருக்கு சொன்னாரா?


சூரனோட சண்டைக்குப் போகங்காட்டி, அவனோட தம்பி தாரகன்னு ஒரு ராட்சசன். ஒரு பெரிய மலையாத் தன்னை மாத்திக்கினு, அதுக்குள்ளாற போறவங்களைல்லாம், மனசு மயங்கப் பண்ணி, மயக்கம் போட வைச்சிருவான்.


அவனைக் கொல்றேன் பேர்வளி[ழி]ன்னு வீரவாகுத் தேவரு கெளம்பறாரு. அவரு பின்னாடியே இந்த பூதங்கல்லாம் கூட கும்மாளம் போட்டுக்கினு பொறப்பதுங்க! அப்பத்தான், முருகன் தேவரைப் பார்த்து சொல்றாரு,' கெவனமாப் போங்கப்பா'ன்னு.


அத்தெல்லாம் நான் பார்த்துகறேன்னு சொல்லிட்டு, அல்லாரோடியும் போயி, மலைக்குள்ள மாட்டிக்கினு, இப்ப அல்லாரும் மயங்கிக் கெடக்கறாங்க!


அல்லாம் தெரிஞ்ச கந்தன், சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சுக்கினே, தன்னோட வேலை எடுத்து வுடறாரு. அது நேராப் போயி, அந்த கிரவுஞ்ச மலையோட வாயைக் கிளி[ழி]ச்சுக்கினு, அந்த மலையையே சுக்கு நூறாக்கிருது.

தம் பேச்சைக் கேக்கலைன்னாலும், தன்னோட ஆளுங்கன்றதால, கருணை பண்ணின முருகனோட அடியாருங்களுக்கு அத்தினிப் பெருமை க்கீது!


இப்ப நாம இன்னா பண்றோம்னா, நேரா அவங்களோட காலுல போயி விளணும். விளுந்து, என்னியயும் உங்க கூட்டத்துல ஒரு வேலைக்காரனாவவாது சேத்துக்கோங்க சாமிங்களான்னு கெஞ்சிக் கதறணும்.


இப்ப இன்னாத்துக்கு அத்தப் போயி ஒங்கையுல வந்து கேக்கறேன்னு பாக்கிறியா?


நீ மனசு வைச்சாத்தான் அந்தக் காரியமே நடக்கும்! நீதானே என்னோட மனசு? அதுனால நீதான் ஒதவி பண்ணணும்.'னு மனசுக் கையுல போயிக் கெஞ்சறாரு.

" பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே"

[பொறையாம் அறிவால் அடியோடும் அகந்தையையே அரிவாய்]

'இந்த மனசைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்காரு அருணகிரியாரு! இன்னாதான் கெஞ்சினாலும், திமிரு நெறைய க்கீற இந்த மனசு அத்தயெல்லாம் கேக்காதுன்னும் தெரியும்! அதுக்காவ, ஒரு ஐடியா குடுக்கறாரு மனசுக்கு!


இது கஸ்டந்தான்; ஒன்னால அவ்வளோ சுளுவா இந்த அகங்காரத்தயெல்லாம் விட்டுத் தொலைச்சிட்டு அடியாருங்க காலுல போயி விள[ழ]றது முடியாதுன்னு எனக்குத் தெரியும்.


அதுனால, நீ இன்னா பண்ணணும்னா, ஆண்டவன் ஒனக்குக் கொடுத்த புத்தியை கொஞ்சம் 'யூஸ்' பண்ணணும். அதுலியும், கன்னா பின்னான்னு திரியுற அறிவைப் பத்தி நான் சொல்லலை. பொறுமையா இருக்கணும்னா அதுக்கு அறிவு ரொம்பவே வோணும். 'தாட்-பூட்'டுன்னு எகிர்றதுக்கு அறிவே தாவ[தேவை]யில்ல. அத்த ஆர் வோணும்னாலௌம் செஞ்சிறலாம். ஆனாக்காண்டிக்கு, பொறுமையா க்கீறதுக்குத்தான் புத்தி அவசியம்.


இந்தப் பொறுமை வரணும்னா, அதுக்கு மொதல்ல நீ ஒண்ணை கண்டிப்பாப் பண்ணியே தீரணும்!


ஒனக்குள்ள [மனசுக்குள்ள] ஒளிஞ்சுக்கினு க்கீதே இந்த ஆணவம்,.. அகந்தை,... அகங்காரம்,... அத்த சுத்தமா, வெட்டிச் சாய்ச்சிறணும். அத்த வெட்றதுன்றது அவ்ளோ 'ஈஸி'யான சமாச்சாரம் இல்லை! அங்கதான் நீ பொறுமைன்ற அறிவை வைச்சு, ஆணவத்தை வெட்டணும்... அரிஞ்சு தள்ளணும்.


அதும் மட்டும் நீ பண்ணிட்டியானா, அப்பாலிக்கா, ஒனக்கே அல்லாமும் புரிஞ்சிரும். அப்பத்தான், நாம ரெண்டு பேருமாப் போயி, அவங்க பாதத்துல சரணடைய முடியும்'னு சொல்லிக் குடுக்கறாரு. போன பாட்டுல அடக்கமா இருக்கணும்னு சொன்னவரு, அதுக்கு மொதல்ல ஆணவத்தை வெட்டணும்னு இந்தப் பாட்டுல சொல்லிக் குடுக்கறாரு.


இப்பப் புரியுதா? நான் இன்னாத்துக்காவ அப்பிடிப் பேசினேன்னு' என என்னைப் பார்த்தான்.


பொறுமையைத் தரும் அறிவைத் தேட 'ஓம் சரவண பவ' என்னும் திருமந்திரத்தை நானும் சொல்லத் தொடங்கினேன்!


முருகனருள் முன்னிற்கும்!

[தவறுதலாக போன வாரம் 37-ம் பாடலை இடாமல், 38-ஐ இட்டுவிட்டேன். அருள்கூர்ந்து இந்தப் பதிவைப் படிக்கவும். முமு!]

Read more...

Friday, December 02, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 37

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 37
36.

'இப்ப ஒரு விசயம் ஒனக்குத் தெரியணும்னு வைச்சுக்க! அது பலான பலான ஆளுகிட்டதான் இருக்குன்னும் தெரியுதுன்னு வைச்சுக்க! அத்தக் கேக்க நீ போறப்ப இன்னாமாரி கேக்கணும்ன்றதுக்கு ஒரு வளி[ழி] காமிச்சுத் தர்றதுதான் அடுத்த பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு.' என்றவாறே என்னைப் பார்க்க, நானும் உடனே அடுத்த பாடலைப் படித்தேன்.


நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோதி யதெப் பொருடான்
வேதா முதல்விண் ணவர்சூ டுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே


நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் எனவோதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே

'அரனார், "நாதா குமரா நம" என்று ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?'

'இன்னான்னமோ வளி[ழி]யுல 'நைஸ்' பண்ணிப் பாக்கறாரு அருணகிரியாரு. ஒண்ணும் நடக்கலை! முருகன் ஒண்ணும் இவருக்கு சொல்றமாரித் தெரியல.

சரின்னுட்டு, இப்ப இன்னொரு ரூட்டுக்கா வராரு!

'ஆமா, நீ இன்னாமோ ஒங்க நைனா கையுல ஏதோ சமாச்சாரம் சொன்னியாமே? நீ கூட இன்னாமோ ரொம்ப முறுக்கிக்கினு, 'இப்பிடில்லாம் கேட்டாக்க நான் சொல்ல மாட்டேன். அடக்க ஒடுக்கமா வந்து எங்கையுல குந்திக்கினு பதவிசா கேட்டாத்தான் சொல்வேன்'னு சொல்லக்காண்டி, அவரும் வேற வளியில்லாம, 'என்னப்பனே, முருகா! ஞான பண்டிதா, என் ராசா! நாதமா க்கீறவனே! ஒனக்குக் கோடி புண்ணியமாப் போவட்டும். 'அத்த' எனக்குந்தான் கொஞ்சம் சொல்லு ராசா!'ன்னு கேக்கக்கொள்ள, நீயும் இன்னாமோ அவர் காதுல ஓதினியாமே! அது இன்னான்னு எங்கையுலியும் கொஞ்சம் சொல்லக்கூடாதாப்பா'ன்னு கெஞ்சறாரு.

அது இன்னான்னும் இவர் சொல்லிக் கேக்கலை! .... தெரிஞ்சுக்கினமாரியும் காட்டிக்கலை! கொஞ்சம் 'ஐஸ்' வைச்சுக் குளிப்பாட்டிப் பாக்கறாரு.

ஆனாக்காண்டிக்கு, கொஞ்சம் சூசகமா தனக்கும் இத்தப் பத்தித் தெரியுமின்னு கோடி காட்டறாரு!
அதுக்குத்தான் 'நாதா'ன்னு ஒரு வார்த்தையைப் போட்டிருக்காரு!

'நாதம்'னா இன்னா?

சத்தம்! ஓசை!

ஒலகத்துலியே மொத மொதலா வந்த நாதம் இன்னாது?

ஓம்!

'நாதா'ன்னா தலைவான்னும் ஒரு அர்த்தம் க்கீது.

அப்பிடிக் கூப்படறமாரிக் கூப்ட்டுட்டு, கூடவே, அந்தப் பிரணவத்துக்குத்தான் கந்தன் பொருள் சொன்னாருன்றது தனக்கும் தெரியும்னு சொல்லாம சொல்லி வெள்ளாடறாரு அருணகிரியாரு.

"வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பத சேகரனே"

'இப்ப முருகனைக் கொஞ்சம் தானும் தூக்கி ஒசத்திக் கொண்டாடணுமேன்னு நெனைக்கறாரு! ஏன்னா, அவங்க நைனாவே அப்பிடிப் பண்ணதுக்கு அப்பாலதான் அவருக்கே பொருள் சொன்னாரு முருகன்! அதுனால, இவரும் எதுனாச்சும் சொல்லணுமேன்னு நெனைச்சுப் பாக்கறாரு!

இவுரு மனசுல ஒரு 'ஸீன்' ஓடுது! சிரிப்பு வந்துருது இவுருக்கு!

அது இன்னான்னா, இந்த ஓம்'முன்ற வார்த்தைக்குப் பொருள் தெரியாம ஜெயில்ல கிடந்தாரே,....அவர் ஞாபகம் வருது!

 அந்த பிரம்மாலேர்ந்து ஊருல ஒலகத்துல க்கீற அல்லாரும், இவரோட காலைப் புடிச்சுக்கினு அவங்க தலை மேல வைச்சுக் கொண்டாடிக்கினு க்கீறாங்க!

இவரு இன்னா பண்றாருன்னா, நம்ம வள்ளியம்மாவோட காலடியுல விளு[ழு]ந்து கெடக்கறாரு! அந்தம்மாவோட பாதத்தை எடுத்து தன்னோட தலை மேல பூமாரி வைச்சு அள[ழ]கு பாத்துக்கினு க்கீறாராம்!

'வேதா'ன்னா பிரம்மா.
'சேகரன்'ன்னா தலையுல வைச்சு சூடிக்கறவன்னு அர்த்தம்.

இப்ப 'சந்திர சேகரன்'னா நெலாவை எடுத்து தன்னோட தலையுல வைச்சுக்கற சிவன்ற மாரி, இவரு 'குறமின் பத சேகரன்'!!

'கொறக்குலத்துல பொறந்தாக்கூட மின்னல்மாரி ஜொலிக்குதாம் வள்ளியம்மாவோட ஒடம்பு!

இதுல இன்னா விசேசம்னா, இந்த அகில ஒலகத்துலியும் க்கீற நாதமே அந்தம்மாவோட, அந்த இச்சா சக்தியோட பாதத்துலேர்ந்துதான் பொறக்குதுன்னு முருகன் காட்டறமாரி இவருக்குத் தோணுது. அந்தம்மா பராசக்தியோட அம்சம்! அப்பிடீன்னா, அந்த சக்திலேர்ந்துதான் இந்த ஆதி நாதமே கெளம்புதுன்றதை சொல்லாம சொல்லி விளக்கறாரு அருணகிரியாரு!

இது அல்லாத்தியும் தாண்டி, இன்னொரு சமாச்சாரமும் இந்தப் பாட்டுல க்கீது! அதான் ரொம்ப ரொம்ப முக்கியமா கவனிக்கணும் நீ!

ஒண்ணு வேணும்னு ஆசைப்படறப்ப, அதுவும் அந்த 'ஒண்ணு' ஒலகத்துலியே ரொம்ப ரொம்பப் பெரிய விசயமா இருக்கக்கொள்ள, அத்தக் கேக்கறப்ப ஒடம்புலியும், மனசுலியும் ரொம்பவே பணிவு வேணும்!
சிவனாரு எப்பிடிக் கேட்டாரு தம் புள்ள கையுல? 'நாதா, குமரா நம'ன்னு குனிஞ்சு காதைக் கொடுத்துக் கேக்கறாரு.

பிரம்மாவும், தேவருங்களும் முருகனோட காலை எடுத்துத் தலைமேல வைச்சுக் கொண்டாடிக் கேக்கறாங்க!

அந்த முருகனே கூட இப்ப இன்னா பண்றாரு பாரு! இத்தினிக்கும் காரணமான வள்ளியம்மாவோட பாதத்தை எடுத்து தலையுல வைச்சுக்கறாரு.

அதுனால... பெரியவங்க ஒரு சமாச்சாரம் சொல்றப்ப அடக்கமா, பணிவாக் கேட்டுக்கணும்! அசால்ட்டா கெடந்துறக் கூடாது! நாம பண்ணின புண்ணியந்தான், இதும்மாரி விசயம்லாம் நம்ம காதுல விள[ழ]ப் பண்ணியிருக்கு. அத்தப் புரிஞ்சுக்கினு, பணிவை எப்பவும் வளர்த்துக்கணும். இன்னா வெளங்கிச்சா?' எனக் கேட்டபடியே அவசர அவசரமாக எங்கோ கிளம்பினான் மயிலை மன்னார்!

'ஓம் சரவண பவ' எனம் நாதம் தொடர்ந்து நாயரிடமிருந்து பிறந்துகொண்டிருந்தது!
**************
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, November 28, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 36

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 36
35.

'என்ன? அடுத்த பாட்டுக்குப் போலாமா?' என்றவாறே வந்தமர்ந்தான் மயிலை மன்னார்.

'இதுக்குக் கேள்வி என்ன? அதுக்குத்தானே வந்து ஒக்காண்டிருக்கோம்' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'ஒரு நல்ல தலைவன் எப்படி இருக்கணும்ன்றத இந்தப் பாட்டு சொல்லுது. ஊருக்கு உபதேசம் பண்றவன், தான் எப்படி நடந்து காட்டணும்ன்றத சொல்ற பாட்டு இது. மொதல்ல பாட்டைப் படி' என்றான் மன்னார்.

35.
விதிகா ணுமுடம் பைவிடா வினையேன்
கதிகா ணமலர்க் கழலென் றருள்வாய்
மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுரபூபதியே

'ஒரு சின்ன சொல்வெளையாட்டு இந்த மொதல் வரியுல நடத்தியிருக்காரு அருணகிரி.

"விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்"

'விதி காணும் ஒடம்பு'ன்னா இன்னா?

இந்த ஒலகத்துல பொறந்த அல்லாரையுமே விதிதான் ஆட்டி வைக்குதுன்னு நமக்கெல்லாம் தெரியும். அப்பிடின்னா இன்னா அர்த்தம்? நாம செய்யற அல்லாத்தியும் இந்த விதின்றது பார்த்துக்கினு க்கீதுன்னு ஒரு அர்த்தம்.

அதே சமயத்துல, இங்க இந்த 'விதி'ன்றத வேற விதமாவும் பாக்கலாம்.
விதிப்படி ஒர்த்தொர்த்தரையும் படைக்கற பிரம்மா, எப்பவும் நாம பண்ற அல்லாத்தியுமே பார்த்துக்கினே க்கீறாருன்னும் புரிஞ்சுக்கலாம்.

அதாவது, ஆரு பாக்கலைன்னாலும், நம்மைப் படைச்ச அந்த பிரம்மா எப்பவுமே பார்த்துக்கினே க்கீறாருன்னாலும், அததுக்குத் தகுந்தமாரி, நம்மை ஆட்டிப் படைப்பாருன்னாலும், நாமள்லாம் இன்னா பண்றோம்?

இந்த ஒடம்பு மேல இருக்கற அபிமானத்தை விடாம, இன்னாமோ இதுதான் சாசுவதம்னு நெனைச்சுக்கினு ஆட்டம் போடறோம். மேல மேல வெனையை சேர்த்துக்கினே போறோம். அதைத்தான் 'வினையேன்'னு சொல்லிப் பொலம்பறாரு.

இந்தக் கொரங்கைப் பார்த்திருக்கியா? ஒரு கிளையிலேர்ந்து அடுத்ததுக்குத் தாவறச்ச, எந்த ஒரு கவலையுமில்லாம, 'டக்'குன்னு பிடியை விட்டிரும். ஒரே பாய்ச்சல்தான்; அடுத்த கிளையைப் பிடிச்சிக்கிரும்.

அதும்மாரி, இந்த ஒடம்பு மேல க்கீற பிடிப்பை எப்ப விடறோமோ, அப்பத்தான் இதுக்கும் மேலானதா க்கீற முருகனோட காலடி நமக்குக் கிடைக்கும்.

ஒண்ணை விட்டாத்தான் அடுத்தது கிடைக்கும்!

ஆனாக்காண்டிக்கு, நாம இத்தயும் விடாம, அது வேணும்ன்னு அவங்கிட்டியே போய் மொறை வைக்கறோம்.

இத்தத்தான் அருணகிரியாரும் சொல்றாரு.
'எனக்கு இன்னும் இந்த பாளா[ழா]ப்போன ஒடம்பு மேல க்கீற அபிமானம் தீரலியே! அதுனால, விடாம வினையை சேர்த்துக்கினே போறேனே. இது ஒங்கண்ணுக்குத் தெரியலியா? பார்த்துக்கினு ஏன் சும்மா க்கீறே? ஒன்னோட பூப்போல க்கீற திருவடியை எனக்கு சீக்கிரமாக் கொடுத்து அருள் பண்ணுப்பா'ன்னு கந்தங்கிட்ட கதற்ராரு, இந்த மொத ரெண்டு வரியுல.

'ம்ம்ம்' என நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடுத்த ரெண்டு வரிக்கு என்ன சொல்லப் போகிறான் என்னும் ஆவலுடன்!

'ஆரைப் பார்த்து இப்பிடி அருணகிரியாரு சொல்றாரோ அவரு இன்னா பண்ணிக்கினு க்கீறதா இந்த அடுத்த ரெண்டு வரியுல சொல்றாருன்னு பாப்பம்!

"மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா சுரபூபதியே"

'நல்லா ஒளி வீசற நிலாவைப்போல, வாள் போல வளைஞ்சு அள[ழ]கா க்கீற நெத்தியுடைய வள்ளியம்மாவைத் தவர வேற ஆரையும் பெருமை பண்ணித் துதி பண்ணாத முருகா'ன்னு கூப்பிட்டுக் கேக்கறாரு!

இப்பிடி வள்ளியம்மாவைத் துதிக்கறதை ஒரு விரதம் மாரி பண்றவனேன்னு சொல்றாரு!

இந்திரலோகத்துக்கே ராசாவா க்கீறவனேன்னும் சொல்லிப் பாடறாரு!

கொஞ்சம் கொய[ழ]ப்பம் வரத்தான் செய்யும்.... இத்தக் கேட்டா!

அம்மாம் பெரிய ராசாவா க்கீறவரு எதுக்காக இப்ப கொறஜாதிப் பொண்ணாண வள்ளியம்மாவோட காலடில விளு[ழு]ந்து கெடக்கணும்?

அத்தயும் எதுக்கு ஒரு விரதம் மாரி பண்ணணும்னு கேக்கத் தோணும்!

சூரனை அளி[ழி]ச்சதும், அந்த தேவேந்திரன் தன்னோட ராஜ்ஜியத்துக்கே இவரை ராசாவாக்கி, கூடவே பத்துமோ, பத்தாதோன்னு தன்னோட பொண்ணான தெய்வானையம்மாவையும் கண்ணாலம் கட்டி வைச்சாரு.

இந்த தெய்வானையம்மா கிரியா சக்தி! அதாவது, ஒரு காரியத்தைச் செஞ்சு முடிக்கறதுக்கு தூண்டுகோலா இருக்கறவங்க! இவரு வந்த காரியம் சூரனை அளி[ழி]க்கறது! அதுக்கு இந்தம்மாதான் தூண்டுகோலு!

இனிமே இவரோட வேலை தன்னோட பக்தருங்களைக் காப்பாத்தறது. ஆனாக்காண்டிக்கு, இந்த பக்தருங்க அல்லாரும் இன்னா பண்ணிக்கினு க்கீறாங்கன்னா, இந்த ஒடம்பைப் பிடிச்சுக்கினு, அதும்மேல வினையா சேர்த்துக்கினே க்கீறாங்க. எதுனாலன்னா, ஒடம்ப்பு மேல க்கீற ஆசையினால. ஆசைன்னா இச்சை. அந்த இச்சைக்குல்லாம் காரணமா க்கீறவங்க வள்ளியம்மா! வள்ளியம்மாதான் இச்சா சக்தி!

அதுனால இவரு இன்னா பண்றாருன்னா, அந்த இச்சா சக்தி கிட்டயே போயி, அவளையே சரணடைஞ்சிடறாரு! 'இந்த ஒலகம், ஒடம்பு மேலெல்லாம் க்கீற ஆசையை விட்டுட்டு, என்னோட பக்தருங்க அல்லாரையும் என்னையே நெனைக்கறமாரி பண்ணு'ன்னு அவளைக் கொஞ்சிக் கேட்டுக்கறாராம்!

இத்தத்தான் ஒரு விரதம் மாரி பண்னிக்கினு க்கீறாராம்!

நம்மளையெல்லாம் காப்பாத்தறதுக்கு வேண்டி, இவரு விரதம் இருக்காரு!
அப்பிடீன்னா இவருக்கு நம்ம மேலெல்லாம் எத்தினி அன்பும், அக்கறையும் க்கீதுன்னு புரிஞ்சுக்கோ!

இதான் குருவா வர்ற ஒர்த்தர் பண்ற காரியம். தன்னோட அடியாருங்க நல்லாருக்கணுமேன்ற ஒரே ஒரு கவலைதான் அவருக்கு எப்பவும்! அதுக்காவ இன்னா வோணும்னாலும் செய்வாரு.

இப்ப நாம இன்னா பண்ணணும்?

இந்தத் தலைவன் வளி[ழி] காட்டித் தர்றமாரி, நாமளும், சதா சர்வகாலமும், 'முருகா முருகான்னு, அவரையே சரணடையணும்னு சொல்லிக் காமிக்கறாரு' என முடித்தான் மயிலை மன்னார்.

நாயரின் 'ஓம் சரவணபவ' ஜபம் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.
*************
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Tuesday, November 22, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 35

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 35

34.

'அவனை விட்டா வேற கெதி ஏது? எல்லாம் அவன் செயல்!' என்றவாறே நிமிர்ந்து உட்கார்ந்தார் சாம்பு சாஸ்திரிகள்.


'சரியாச் சொன்னீங்க சாமி! நல்லது கெட்டது எதுன்னாலும் அவனைக் கெட்டியாப் புடிச்சுக்கினா போறும். அல்லாத்தியும் அவன் பார்த்துப்பான். இதைத்தான் சூசகமா இந்தப் பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு. பாட்டைப் படிப்பா' என்றான் மயிலை மன்னார்.

சிங்கா ரமடந் தையர்தீ நெறிபோய்
மங்கா மலெனக் குவரந் தருவாய்
சங்க்ரா மசிகா வலசண் முகனே
கங்கா நதிபா லக்ருபா கரனே


சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்காநதி பால க்ருப ஆகரனே.

பொண்ணுங்கன்னாலே கெட்டவங்கன்னு அர்த்தம் இல்லை. ஆனாக்காண்டிக்கும், எல்லாத்துலியுமே நல்லவங்க, கெட்டவங்க க்கீறமாரி, பொண்ணுங்கள்லியும் இப்பிடி க்கீறாங்க.


சாதாரணமாப் பள[ழ]கறதுல ஒரு தப்பும் கிடையாது. ஆனாக்க, தப்பான நோக்கத்துல ஒன்னிய வளைச்சுப் போடறதுக்குன்னே சில பொண்ணுங்க இருப்பாங்க! அவங்க பொய[ழை]ப்பு அப்பிடி! அவங்களையும் குத்தம் சொல்ல முடியாது. நாமதான் சாக்கறதையா நடந்துக்கணும். கெட்ட வளி[ழி]யுல கொண்டுபோறதுக்குன்னே குறியா இருக்கற பொண்ணுங்களைப் பத்தித்தான் இந்த வரி சொல்லுது.

'சிங்கார மடந்தையர் தீ நெறி போய் மங்காமல்'னு சொல்றாரு.

நம்ம மனசு எப்பவும் ஒரு நெலையுல இருக்கறதில்லை. சமயா சமயத்துக்கு 'டொப்'புன்னு வளு[ழு]க்கி விட்டுரும். இப்பிடிப் போனாத்தான் இன்னான்னு இந்தப் பொண்ணுங்க கூப்புடற வளி[ழி]யுல கொண்டு போயிறும். நாம இன்னாதான் கவனமா இருந்தாக்கூட, ஒண்ணும் பண்ண முடியாம சறுக்கிறும்.


நாம சமாளிச்சிரலாம்னு நெனைச்சா அம்போ தான்! அதுக்குத்தான் ஒரு 'ரூட்டைக்' காமிக்கறாரு அடுத்தாப்பல!

'எனக்கு வரம் தருவாய்'னு அந்த முருகன் காலுலியே போய் விளுந்துடறாரு!


என்னிய இப்பிடி ஆக்கினது நீதானே! நீதான் இந்த கெட்ட வளியுலல்லாம் போயி சிக்கிக்காம க்கீறதுக்கு வரம் கொடுக்கணும்னு சரணடையறாரு!


'நான் கெட்டவந்தான். எனக்கு இதும்மேலல்லாம் கொஞ்சம் ஆசை வரத்தான் செய்யும். ஆனாக்காண்டிக்கும், நீதான் நான் அப்பிடில்லாம் போயிறாமப் பார்த்துக்கணும்'னு பாரத்தை அவன் மேலேயே போட்டுடறாரு!

'இது நன்னாருக்கே! இவர் பண்றதையெல்லாம் பண்ணிட்டு, அப்பிடிப் பண்ணாம இருக்கறதுக்கு முருகனை வழி கேக்கறாரா? ஆனாலும், அவனைப் பிடிச்சுண்டுட்டா, அவன் ஒரு நல்ல வழி காட்டாமலா போயிறுவான்? சரியாத்தான் சொல்லியிருக்கார். ஆமா, இதுக்கும், அந்த அடுத்த ரெண்டு வரிக்கும் என்னடாப்பா சம்பந்தம்? சொல்லேன் கேட்போம்' என்றார் நமுட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துக்கொண்டே, சாஸ்திரிகள்!

'அதான் இதுல விசேசம்!

சங்க்ராம சிகாவல சண்முகனே

'சங்க்ராமம்'னா யுத்தம்,... சண்டைன்னு வைச்சுக்கலாம்.


இங்கியும், அங்கியுமா பாய்ஞ்சு பறந்து சண்டை போடற மயில் மேல வர்ற சண்முகனேன்னு மொத வரியுல முருகனோட வீரத்தைப் பத்தி சொல்றாரு.

இந்த மயிலு இன்னா பண்ணும்னா, கோவத்தோட படமெடுத்து ஆடற பாம்பைக் காலுல போட்டு மிதிச்சுக்கினு, பறந்து, பறந்து சண்டை போடும்! அத்தப் போல, இப்பிடிப் படமெடுத்து ஆடுற பாம்பைப்போல,.... [போக்குக் காட்டற பொண்ணுங்க பக்கமா,] நாலா பக்கமும் அலையுற மயிலை அடக்கி ஆள்றவனேன்னு சொல்லி, அதேபோல நாலாபக்கமா நான் அலையாம நீதான் பார்த்துக்கணும்னு நாசூக்கா கேட்டுக்கறாரு.


இதை விடவும், அந்த அடுத்த வரிதான் இன்னும் ஷோக்கா க்கீது!

'கங்கா நதி பால க்ருபாகரனே'

'ஆகரன்'ன்னா உண்டான இடம்னு அர்த்தம். கிருபை பண்ற முருகனை கிருபாகரனேன்னு கொண்டாடறாரு. இவந்தான் நமக்கேல்லாம் கிருபை பண்ணணும்.


இத்தனை பெருமைங்க இவனுக்கு இருந்தாலுங்கூட, 'கங்காநதி பாலகனே'ன்னு சொல்றதுலதான் ஒரு பெரிய அர்த்தம் ஒளிஞ்சுக்கினு க்கீது!


சிவனோட கண்ணுலேர்ந்து பொறியாப் பொறந்தவரை,.... வாயுவும், அக்கினி பகவானுமாத் தூக்கியாந்து, ....நம்மால தாங்க முடியலேன்னு ...... கங்கையுல போட்டுட்டாங்க! ஆனந்தமா அதுல மெதந்து வர்றாரு. அந்தம்மா இவரைக் கொணாந்து சரவணப் பொய்கையுல போடறாங்க!


இத்தனையும் நடக்கறப்ப, இவரு மட்டும் ஒண்ணுமே பண்ணாம, அப்பிடியேக் கெடக்கறாரு. 'என்னிய எங்கே இட்டுக்கினு போவணுமோ, போ'ன்னு சிரிச்சுக்கினே மெதக்கறாரு.


கங்கையம்மா தூக்கிக்கினு வந்ததால இவருக்கு இந்தப் பேரு.


நீதான் என்னைக் காப்பாத்தணும் முருகான்னு சொல்றப்ப, நாம எப்பிடி இருக்கணும்ன்றதை இந்தக் கங்கைநதி பாலன் காமிச்சுத் தர்றாரு.


அது வாயுவாவட்டும், அக்கினியாவட்டும், கங்கை நதியாவட்டும்... அவங்க கையுல கொடுத்ததுக்கப்பறம், தான் ஒண்ணும் பண்ணாம அவங்க போக்குலியே வுட்டமாரி, நாமளும் முருகன் கையுல நம்மளை ஒப்படைச்சதும், அல்லாமே அவனே கெதின்னு, இப்ப நம்ம ஐயரு சொன்னாரே,... அதும்மாரி 'கம்'முன்னு கெடக்கணும்! அப்பால, அல்லாத்தியும் அவன் பார்த்துப்பான்றதை இந்த ரெண்டு வரியுல ரொம்ப சிறப்பா சொல்லியிருக்காரு!' என்றான் மயிலை மன்னார்!

'அடடா! இதுக்கு இப்பிடியும் சொல்லலாமா? ரொம்ப நன்னாயிருக்குடா! அவனே கெதின்னு அவன் காலடியுல சரணாகதி அடையறதுதான் ஒரே வழி! முருகா ஷண்முகா! ஓம் சரவணபவா!' எனக் கைகளைக் கூப்பினார் சாம்பு சாஸ்திரிகள்!

'அப்பாலிக்கா இன்னொரு சமாச்சாரம்! அருணகிரியாரு ஆம்பளையா இருந்ததால, இப்பிடி எளுதியிருக்காரு. ஆனாக்காண்டிக்கு, இது ஆம்பளை, பொம்பளை அல்லாருக்குமே ஒண்ணானதுதான். ஆம்பளைங்கள்லியும் இப்பிடி மோசம் பண்றவங்க க்கீறாங்கதானே!' எனச் சொல்லி, ஒரு நமுட்டுச் சிரிப்புடன் நடையைக் கட்டினான் மயிலை மன்னார்.
*************
வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!
[படித்தும், பின்னூட்டமிட்டும் வாழ்த்தும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

Thursday, November 17, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 34

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 34
33.

'கண்டத்தயெல்லாம் படிச்சுப் பைத்தியம் பிடிச்சு அலையாமத் தப்பிச்சாலும் தப்பிச்சுக்கலாம்; இந்த சம்சார பந்தத்துலேர்ந்து தப்பிக்கறது ரொம்பவே கஷ்டம்ப்பா’ என அலுத்துக் கொண்டே வந்து அமர்ந்தார் சாம்பு சாஸ்திரிகள்!


‘ஏன்? என்ன ஆச்சு சாமி? வூட்டுல எதுனாச்சும் பிரச்சினையா?’ என அக்கறையாய் விசாரித்தான் மயிலை மன்னார்.


‘அதை விடுறா! அது என்னிக்கும் கூடவேதானே இருக்கு. நீ அடுத்த பாட்டைச் சொல்லு கேக்கலாம். மனசுக்காவது நிம்மதியா இருக்கும்’ என்றார் சாஸ்திரிகள்.


ஒருவிதமான அர்த்தபுஷ்டியுடன், ஒரு நமட்டுச் சிரிப்பைச் சிரித்துக்கொண்டே, ‘ம்ம்..படிப்பா. ஐயருக்குன்னே எளு[ழு]தின பாட்டை!’ என்றான் மன்னார்.


ஒன்றும் புரியாமல் நானும் படித்துக் காட்டினேன்.

சிந்தா குலவில்லொடு செல்வமெனும்
விந்தா டவியென் றுவிடப் பெறுவேன்
மந்தா கினிதந் தவரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே


சிந்தாகுலம் இல்லொடு செல்வம் எனும்
விந்தா அடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வர உதயனே
கந்தா முருகா கருணா ஆகரனே


“சிந்தாகுலம் இல்லொடு செல்வம் எனும் விந்தா அடவி என்று விடப் பெறுவேன்?”

‘இப்ப ஐயரு அலுத்துக்கினாரே….. அதையேதான் இந்த வரியும் சொல்லுது’ என ஆரம்பித்தான் மன்னார்!


‘சிந்தாகுலம்’னா மனக்கவலை. ஆகுலம்னா கவலை; சிந்தான்னா மனசு. மனசுல ஒரு பெரிய கவலை நம்ம எல்லாருக்குமே எப்பவும் தொத்திக்கினு இருக்கு.


ஒண்ணு, நம்ம பொண்டு, புள்ளைங்களை எப்பிடிக் கரையேத்தப் போறோம், எப்பிடி சமாளிக்கப் போறோம்னு.
இன்னொண்ணு, இதுக்கெல்லாம் தேவையான துட்டை எப்பிடி சம்பாரிக்கறது; எப்பிடி சேக்கறதுன்னு.


இது வோணும், அது வோணும்னு தெனம் நச்சரிக்கறதுக்குன்னே பொண்டாட்டி, புள்ளைங்க எப்பவும் அலையும். இது இல்லை, அது வோணும், இந்த ஃபீஸு கட்டணும், இந்த புக்கு வாங்கணும், இந்தப் பொடவை நல்லாருக்கு,; அந்த நகை டிஸைனு நல்லாருக்குன்னு சமயா சமயம் தெரியாம ரோதனை பண்ணுவாங்க.


இதுக்கெல்லாம் இன்னா வளி[ழி]?; இதை சமாளிக்க எங்க போறது?; எப்பிடி துட்டு சம்பாரிக்கறதுன்னு மனசு கெடந்து அல்லாடும்!
ஒண்ணு சமாளிச்சாச்சுன்னா, அடுத்தது ஒடனே பூதாகாரமா கெளம்பி நிக்கும்! இதுங்களையெல்லாம் சமாளிக்கறதுக்குள்ள, ‘தாவு’ தீந்து பூடும்!


இது எப்பிடி இருக்குன்னு ஒரு ஒ[உ]தாரணம் சொல்றாரு அருணையாரு.


இருக்கறதுக்குள்ளியே அடர்த்தியான மலை விந்திய மலையாம். அதுக்குள்ளாற பூந்துட்டா, கண்ணைக் கட்டிக் காட்டுல வுட்டதுன்னு சொல்லுவாங்களே…. அதும்மாரி இருக்குமாம். விந்தா அடவின்னா விந்திய மலை.


இப்ப ஐயரு சொன்ன இந்த சம்சார பந்தம்ன்றது அந்த விந்திய மலைக்குள்ள பூந்துட்டமாரி இருக்குதாம்!
இந்த மலைக்குள்ளேர்ந்து எப்ப நான் வெளியே வர்றது முருகா? இதுக்கு இன்னா வளி[ழி]?ன்னு அலர்றாரு அருணகிரி!
இத்தயெல்லாம் ஒருமாரியா சமாளிக்கறதுக்குள்ள, மனுசனுக்குப் பைத்தியம் புடிக்காம இருந்தா, அதுதான் பெரிய ஆச்சரியம்!
என்னைக்குத்தான் எனக்கு இதுலேர்ந்து விமோசனம் பொறக்கும் முருகான்னு கேக்கறாரு…. இப்ப நம்ம சாமி கேட்டதுமாரி!’ எனச் சிரித்தான் மன்னார்!

‘அடடே! இது நன்னாவே இருக்கே! ம்ம்.. இதுக்கு அடுத் ரெண்டு வரியுல ஒரு பொடி வைச்சு சொல்லியிருப்பாரே! அதைச் சொல்லு…. ஏதாவது புரியறதான்னு பாக்கறேன்’ என அசட்டுச் சிரிப்புச் சிரித்தார் சாஸ்திரிகள்.


‘இதுக்கொண்ணும் கொறைச்சலில்லை’ என்பதுபோல, மாமி முகத்தை நொடித்துக் கொண்டார்!

“மந்தாகினி தந்த வர உதயனே கந்தா முருகா கருணா ஆகரனே!

‘பெருசா சொல்றதுக்கு ஒண்ணும் இல்லாதமாரித்தான் இருக்கும்.


கங்கை பெத்த புள்ளையே! ரொம்ப ரொம்ப ஒசந்தவனே! கந்தா!! முருகா! கருணையே உருவாப் பொறந்தவனே!ன்னு இந்த வரியுல துதி பாடறாரு அருணகிரியாரு.


கொஞ்சம் ஆள[ழ]மா நெனைச்சுப் பாத்தா, இந்த எடத்துல இப்பிடி ஏன் சொல்றாருன்னு புரியலாம்.
இதுல்லாங்கூட, என்னோட நெனைப்பாக் கூட இருக்கலாம். இருந்தாலும் சொல்லி வைக்கறேன்’ என ஒரு பீடிகையுடன் ஆரம்பித்தான் மன்னார்.


கருணையே உருவா ஒரு பெரிய சாமி, தேவருங்கல்லாம் வந்த மொறையிட்டப்ப, தன்னோட நெத்திக் கண்ணைத் தொறந்து ஆறு பொறியாக் கெளம்பினதை எடுத்து அக்கினி பகவான்கிட்ட குடுக்க, அவரால வைச்சுக்க முடியலேன்னு, வாயு பகவான் கையுல அதைக் குடுக்கறாரு. அவராலியும் அத்தத் தாங்க முடியாமப் போக, அவரு கங்கையுல போடறாரு. கங்கைக்கு ‘மந்தாகினி’ன்னு ஒரு பேரு க்கீது! இந்த மந்தாகினி அம்மா அந்த ஆறு பொறிங்களை எடுத்துக்கினு போறச்சே, அவங்களாலியும் அத்தத் தாங்க முடியாம, சரவணப் பொய்கையுல வந்து போட்டுடறாங்க!!


ஆறு பொறிங்களும் ஆறு கொள[ழ]ந்தைங்களா மாறி, ஆறு தாமரைப் பூவுல மெதக்குதுங்க!


கார்த்திகைப் பொண்ணுங்க ஒரு ஆறு பேருக்கு அடிச்சுது லக்கி ப்ரைஸ்! அவங்களுக்குக் கெடைச்ச வரத்துனால, இந்த ஒசத்தியான கொழந்தைங்களுக்குப் பாலு கொடுக்கற அதிர்ஸ்டம் கெடைக்குது! அந்த வரத்துல உதயமானவரு இந்தக் கந்தன்!


‘கந்தன்’னா ஒண்ணாச் சேந்தவன்னு அர்த்தம்! எப்பிடி அது? நம்ம கற்பகாம்மா வர்றாங்க சரவணப் பொய்கைக்கு! அளகாத் தாமரைப் பூவுங்க மேல மெதக்கற ஆறு கொளந்தைங்களையும், ஆசையா வாரி, தன்னோட மாருல அணைச்சுக்கறாங்க. இந்த அம்மா கை பட்டதும், ஆறும் ஒண்ணா சேந்திருது. அதான் கந்தன்!


கருணையே வடிவான அந்த கந்தக் குமரன்……. முருகன்……. இத்தனைப் பேருங்க தங்கூட இருந்தும், எல்லாத்தையும் விட்டு, ஆண்டியா நின்னுக்கினு நமக்கெல்லாம் கருணை பண்ணறாரு! அவரை வேண்டிக்கினா, இந்த பந்தத்துலேருந்தும் நமக்கு விடுதலை தருவாருன்னு சொல்றாருன்னு நெனைக்கறேன்’ என முடித்தான் மயிலை மன்னார்!

‘அதென்னமோ ரொம்பச் சரியாத்தான் சொல்லியிருக்கே மன்னார்! அந்த ஆறுமுகனை விட்டா, நமக்கெல்லாம் ஆறுதல் தர்றதுக்கு வேற யாரு இருக்கா?’ எனக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!


‘வாசல்ல வந்த புடவைக்காகரன்கிட்ட சும்மா ஒரு நாலு புடவையைப் பார்த்ததுக்கு இந்த பிராம்மணர் என்னல்லாம் பேசறார் பாரு, மன்னார்! இத்தனைக்கும் ஒண்ணும் வாங்கலை! அதுக்கே இத்தனை நாடகம் ஆடறார்!’ என மாமி சொல்ல, ஒரு பெரிய சிரிப்பலை எழுந்தது அங்கே!


நாயர் விடாமல், ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தைச் சொல்லியபடியே,கூடச் சேர்ந்து சிரித்தான்!
************************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!
[படித்துப் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

Tuesday, November 08, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 33

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 33
32.

‘ஸ்வாமியே சரணம் ஐயப்பா!’ என முழங்கியபடி ஐயப்ப பக்தர் கூட்டம் ஒன்று, தலையில் இருமுடிகளுடன் சாம்பு சாஸ்திரிகள் இருக்கும் தெரு வழியாகக் கடந்து சென்றது.

‘சட்’டென்று திண்ணையிலிருந்து குதித்த மன்னார் அவர்கள் முன் சென்று தரையில் விழுந்து வணங்கினான். மாலை அணிந்திருந்த நானும், நாயரும் அவனுடன் சென்று வணங்கினோம். சாஸ்திரிகள் மனைவி, தயாராக வைத்திருந்த தண்ணீரால் அவர்களது பாதங்களைக் கழுவி, சந்தனம் குங்குமம் இட்டு, நமஸ்கரித்தார். கூடவே சாஸ்திரிகளும் விழுந்து வணங்கினார். எங்களது பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொண்டு, ‘சாமியே சரணம்’ என்னும் கோஷத்துடன் ஐயப்ப சாமிகள் தங்களது யாத்திரையைத் தொடர்ந்தனர்.


அவர்கள் கடந்து சென்றதும், மீண்டும் திண்ணையில் வந்தமர்ந்தோம்.

‘இந்த சாமிங்க மேல மட்டும் எனக்குத் தனி மருவாதி! ஏன்னா, வெளிப்படையா எல்லா மதத்து சாமிங்களையும் கும்புடறதுனாலத்தான். இதான் எனக்கு இவங்ககிட்ட ரொம்பவே பிடிச்ச விசயம். ‘சாமியே சரணம் ஐயப்பா’ன்னு சொல்லிட்டு, அடுத்தாப்புலியே, ‘வாபரின் தோள[ழ]னே’, சாதிபேதம் இல்லாதவனே’ன்னு அடுத்த சரணம் கூப்பிடுவாங்க! இப்பிடி அல்லாருமே இருந்துட்டா எவ்ளோ நல்லாருக்கும்! இத்தனைக்கும் இந்த சாமி ஒண்ணுமே பேசாம, வெறும் முத்திரையைக் கையால காட்டிக்கினு க்கீறாரு. அவுருக்குத் தெரியாத சாஸ்திரமா, தத்துவமா? அப்பிடி இருந்தாலுங்கூட, அமைதியா, தெளிவாக் குந்திக்கினு க்கீறாரு. இதப் பத்தித்தான் இப்ப வரப்போற பாட்டு பேசுது! பாட்டைப் படி.’என்றான் மயிலை மன்னார்.

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரிவே டர்குலப் பிடிதோய்
மலையே மலைகூ றிடுவா கையனே


கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையனே

“கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு அதுவாய் விடவோ?”

‘ரொம்பப் படிக்காதே; படிச்சதெல்லாம் போறும்; பயிற்சியில ஈடுபடு’ன்னு ஒங்காளு சொல்லுவாரே……. அதையேதான் இந்த வரியுல சூட்சுமமா சொல்றாரு அருணையாரு.


எந்தவித ஞானமும் இல்லாம, சும்மா, அல்லாத்தியும் படிச்சு, தலையுல ஏத்திக்கினு, அதுல இன்னா சொல்லிருக்குன்ற அறிவோ, அனுபவமோ இல்லாம, வெறுமுனே வெட்டி வீராப்பா, வர்றவன் போறவன்ட்டல்லாம், வெட்டிச் சண்டை போட்டுக்கினு, மண்டை கொய[குழ]ம்பிப்போயி, கடோசிக்கடைசியா, இந்தக் கொயப்பமே ஜாஸ்தியாயிப்போயி, பைத்தியம் பிடிச்சு அலையுறமாரி என்னிய ஆக்கிடாதேப்பா’ன்னு கதற்ராரு அருணகிரியாரு!


கொஞ்சமாப் படிச்சாலும், அதுல சொன்னாது இன்னான்னு அனுபவிச்சுப் பாக்கணும்! அது தானா வந்திருமா? வராது! அனுபவத்தக் குடுக்கறதுக்கு அந்த முருகன் தயவு வேணும்! ‘அவன் பாதமே கதின்னு ஒரு அரை நிமிச நேரமாச்சும் இல்லாமப் பூட்டேனே’ன்னு ஒரு பாட்டுல சொல்லுவாரே …. நெனைப்பு க்கீதா? அப்பிடி நெனைச்சு உருகினாத்தான் அவனோட அருளு கிடைக்கும். ‘ஓம் சரவணபவா’ன்னு நாயரு சொல்லிக்கினுக்கீறானே, அதுமாரி!


அத்த வுட்டுட்டு, கண்டத்தியும் படிச்சு, மண்டையுல ஏத்திக்கினு, இதுவா, அதுவான்னு புரியாமப் போயி, ……. அல்லாத்துலியும் நல்லதுதான் க்கீது. நான் இல்லேன்னு சொல்லலை….. ஆனா, ரொம்பப் படிச்சுக்கினே இருந்தா, எப்பத்தான் நீ அவனைப் பத்திப் புரிஞ்சுக்கறது? அவன் வேணுமா? இல்லை, வெறும் புஸ்தக அறிவு வேணுமா? இந்த அறிவால இன்னா பிரயோசனம்? கால் காசுக்கு ஒதவுமா இந்த அறிவு?


‘பஜகோவிந்தத்துல’ சங்கராச்சாரியார் சொல்லுவாரே, அதும்மாரி, கடைசில எது ஒதவும்ன்றதைப் பத்தின ஒரு தெளிவு வரணும். படி, நான் வேணாங்கலை! ஆனா, அந்தப் படிப்பை வைச்சு, அவனைப் புடிக்கப் பாக்கணும். அப்பிடியில்லாத, சும்மா வம்பு வலிக்கறதுக்காகவும், தன்னோட அறிவைக் காட்டிக்கறதுக்காவும் படிக்கற படிப்புல்லாம் சுத்த ‘வேஸ்ட்டு’ன்னு சொல்லிப் புரியவைக்கறாரு அருணகிரியாரு.


அவரோட பாட்டுலல்லாம் பாரு. அநேகமா, முருகனைப் பத்திச் சொல்றப்பல்லாம், கூடவே, ராமன், கிஸ்னன், சிவன், லெச்சுமின்னு மத்த சாமிங்களையும் பெருமையாப் பாடியிருப்பாரு.


சாஸ்திரங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கறதுல்லாம், ஒரு நல்ல வளி[ழி]யுல நீ போறதுக்காவ மட்டுந்தான். அத்த வுட்டுட்டு, எங்க சாமிதான் ஒசத்தி, ஒன்னுது மட்டம்னு வம்பு வளக்கறதுக்காவ இருக்கக்கூடாதுன்றத நல்லா, அளு[ழு]த்தந்திருத்தமா சொல்றாரு இந்த வரியுல.


அப்பிடிப் பண்ணினா இன்னா ஆவும்னும் சொல்லிடறாரு!
இதுனால மூளை கொய[குழ]ம்பிப்போயி, பைத்தியந்தான் பிடிக்கும்னு!
நல்லாப் புரிஞ்சுக்கணும் இத்த’ என சற்று உணர்ச்சிவசப்பட்டே பேசினான் மன்னார்.


அவனைச் சற்று தன்நிலைக்குக் கொண்டுவருவதற்காக, ‘அது புரியுது மன்னார்! அதுக்கும், இந்த அடுத்த ரெண்டு வரிக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லுவியே. அதைச் சொல்லு, கேட்போம்’ என்றார் சாம்பு சாஸ்திரிகள்!


‘ஆமாம்ல! கொஞ்சம் ‘ஓவரா’த்தான் பேசிட்டேன் போல’ என ஒரு சங்கோஜத்துடன் சொன்ன மன்னார், மேலே தொடர்ந்தான்!

“கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே! மலை கூறிடு வாகையனே!”

‘வய[ழ]க்கம்போல, முருகனைப் பத்தி பெருமையாச் சொல்றமாரி இருந்தாக்கூட, இதுக்குள்ள ஒரு பெரிய சமாச்சாரத்தச் சொல்றாரு அருணகிரியாரு.

“கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே!”

இதுக்கு இன்னா அர்த்தம்? ‘காட்டுல வேட்டையாடி கண்ணுல பட்ட பிராணிங்களையெல்லாம் கொல்ற வேடர் கொலத்துல பொறந்த பொட்டையானை மாரி அள[ழ]கா க்கீற வள்ளியம்மாவை கட்டிப்பிடிச்சு அணைச்சுக்கற பெருமையான மலை போல க்கீற குமரனே’ன்னு வரும்!


ஆனாக்காண்டிக்கு, இதுக்குள்ளாற இன்னாத்த சொல்ல வராருன்னு பாக்கணும்.


‘மலையே’ன்னு ஒரு வார்த்தை போடறாரு! ஆடாம, அசங்காம, ஒசரமா, பெருசா நிக்கும் மலை! அதுக்குள்ளாற இன்னால்லாம் க்கீதுன்னு ஆராலியும் கண்டுபிடிக்க முடியாது! அப்பிடி, எந்த சாஸ்திரத்தாலியும், வேதத்தாலியும் கண்டுபிடிக்க முடியாத ஆளுதான் நம்ம கந்தன்!
அப்பிடியாப்பாடவரு இன்னா பண்ணினாரு? ஒரு சாதாரண வேடன்மாரி வேசம் கட்டிக்கினு, காட்டுக்குள்ள போனாரு. எதுக்காவ? தன்னையே நெனைச்சு உருகிக்கினுக்கீற வள்ளியைக் கண்ணாலம் கட்டிக்கறதுக்காவ! ஏன், அவுரு நெனைச்சிருந்தார்னா, அந்தம்மாவை ஒரு ‘செகண்டு’ல இட்டாந்திருக்க முடியாதா? ஏன் அப்பிடிச் செய்யலைன்னு யோசிக்கணும்.


இவுரு பரமாத்மா. வள்ளி சீவாத்மா! சீவன் கெடந்து பரமாத்மாவையே நெனைச்சு உருகறச்சே, அந்தப் பரமாத்மாவால சும்மா இருக்க முடியாது! ஒடனே கெளம்பிறும் சீவாத்மாவைத் தன்னோட சேத்துக்கறதுக்காவ! அதுக்கு நேரங்காலம் எடம் பொருள் ஏவல்லாம் பாக்காது! தான் அப்பிடியே போகாம, அந்தச் சீவாத்மா இன்னா நெலையுல க்கீதோ, அதே மாரிப் போயி அத்தச் சேத்துக்கும்.


இப்ப, வள்ளின்ற சீவாத்மா எங்க க்கீது? கண்ணுல பட்டதையெல்லாம் கொல்ற கொடுமையான வேடர் கொலத்துக்கு நடுவுல கெடந்து அல்லாடுது! கண்டத்தியும் படிச்சுக் மூளை கெட்டுப்போயி அலையுற கூட்டத்துக்கு நடுவுல, தன்னை மட்டுமே நெனைச்சுக்கினு க்கீற ஒர்த்தர்மாரி வள்ளி மட்டும் ஒரே நெனைப்புல தவிக்கறாங்க!


அவங்களைத் தன்னோட சேத்துக்கறதுக்காவ, இவுரும் அந்த வேடருங்க மாரியே வேசம் கட்டிக்கினுப் போயி அந்தம்மாவைக் கட்டிப் பிடிச்சுக்கறாரு.

அதுக்குத்தான் இந்த வரியை இப்பிடி வைச்சிருக்காரு அருணகிரி! வெளங்குதா?’ என்றான் மயிலை மன்னார்!


‘அப்படீன்னா அந்த அடுத்த வார்த்தை?’ என இழுத்தேன் நான்!

“மலை கூறிடு வாகையனே!”ன்னு ஏன் போட்டாருன்னுதானே கேக்கறே? அதுலியும் ஒரு பொடி வைச்சுத்தான் சொல்லிருக்காரு’ எனக் கண் சிமிட்டினான் மன்னார்!


‘மலையைக் கூறு போட்டு வெற்றிமாலை சூடினவனே’ன்னு பொருளு இதுக்கு.


இப்பத்தான் முருகனை ஒரு மலைன்னு சொன்னாரு. இதுல இன்னாடான்னா, மலையைக் கூறு போட்டவனேன்னு சொல்றாரு!
அப்பிடி இன்னா மலையைக் கூறு போட்டாரு கந்தன்?


சூரனோட தம்பி தாரகன் ஒரு மாயமலையா நின்னான். அதுக்குள்ளாற போன ஒர்த்தர்கூட….. வீரவாகு மொதக்கொண்டு…… ஆருமே வெளியே வரமுடியாம மயங்கிப் போனாங்க! இது, அதுன்னு படிச்சு அல்லாத்தியும் மண்டைக்குள்ளாற ஏத்திக்கினு மயங்கிப் போனவங்கமாரின்னு வைச்சுக்கோயேன்! விசயம் தெரிஞ்சதும் முருகன் இன்னா பண்ணினாரு? தன்னோட ஞானவேலை அதும்மேல எறிஞ்சாரு! அவ்ளோதான்! அந்த மாயமலை அப்பிடியே பொடிப்பொடியா ஒடைஞ்சுபோயி, மயங்கிக் கெடந்தவங்க அல்லாரியும் தெளிய வைச்சாரு.


அதும்மாரி, அல்லாத்தியும் படிச்சு பைத்தியம் புடிச்சாலுங்கூட, கந்தனை நெனைச்சு தியானம் பண்ணினேன்னா, தன்னோட ஞானவேலால தெளிய வைப்பாருன்னு ரகசியமா சொல்லிக் காட்டுறாரு அருணகிரியாரு!


அதான் இந்த ரெண்டு வரிங்களோட பெருமை! அருணகிரியாரால மட்டுந்தான் இப்பிடி சூட்சுமமாப் புரியவைக்க முடியும்’ எனக் கைகூப்பி வணங்கினான் மயிலை மன்னார்!

‘ஓம் சரவணபவ சோதரனே சரணம் ஐயப்பா’ என்னும் ஒலி எங்கள் அனைவரின் உதடுகளிலிருந்தும் ஓங்கி ஒலித்தது!
***********************
[தொடரும்]
வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!
[படித்துப் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

Friday, October 21, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 32

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 32
31

'இந்தப் பாட்டுல வர்ற கடைசி வரிக்கு பொதுவா எல்லாரும் சொல்ற அர்த்தம் ஒண்ணு இருக்கு. அதுக்கு இன்னொரு அர்த்தமும் சொல்லலாம். அதான் இதுல ரொம்ப முக்கியம்' என ஆரம்பித்தான் மயிலை மன்னார்.


'எனக்கும் அதைக் கேழ்க்கணும்னுதான் ஆசை' எனக் கூடச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்.


'அப்படி என்ன அந்தக் கடைசி வரியில் இருக்கு' என நானும், நாயரும் ஆவலானோம்!


'பாட்டைப் படி' என்றதும் வேகமாகப் படித்து முடிக்கவும், மன்னார் அதைப் பதம் பிரித்துச் சொன்னவுடன், அந்தக் கடைசி வரி கொஞ்சம் 'ஒரு மாதிரியாகத்தான்' இருந்தது.

பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யெனவென் னைவிதித் தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே

பாழ் வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே


'அந்த வரிக்கு அப்பால வரலாம். இப்ப மொதல்லேர்ந்து பாப்பம்' என்ற மன்னார்,

"பாழ் வாழ்வு எனும் இப் படு மாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே"

'முருகனைப் பார்த்து ஒரு கேள்வி கேக்கணும்னு தோணுது அருணகிரியாருக்கு.


அது இன்னான்றத அடுத்தாப்பல பாக்கலாம். அதுக்கும் முன்னாடி, எதுக்காவ அப்பிடிக் கேக்கணும்னு இவுருக்குப் படுது?
பொறந்ததுலேர்ந்து இந்த நாள் வரைக்கும் தான் பட்ட அவஸ்தையையெல்லாம் நெனைச்சுப் பாக்கறாரு ஒவ்வொண்ணா !!


இதுதான் சதம், இல்லலயில்ல, இதான் நெலையானது; அட, இத்த மறந்துட்டேனே, இதுல்ல எங்கூடவே வரப்போவுதுன்னு, இன்னான்னாத்துக்கும் பின்னாடி அலைஞ்சு திரிஞ்சு, எல்லாம் கொஞ்ச நாளைக்கு நெசம் மாரித் தெரிஞ்சு, 'சட்'டுன்னு, ஒரு காரணமுமில்லாமியே, இல்லாங்காட்டிக்கு, வேற ஏதோ ஒண்ணு கெடைச்சுதுன்னு வெலகிப்போன, இந்தப் பாளா[ழா]ப்போன வாள்[ழ்]க்கையை நெனைக்கறாரு.


'ஒரு அரை நிமிஷ நேரங்கூட மெய்யான ஒன்னிய நெனைக்கமுடியாம, ரொம்ப, ரொம்ப மோசமான மாயைவலையில விளு[ழு]ந்து பொரளுடான்னு என்னியத் தள்ளிவுட்டியே நீ முருகா'ன்னு முருகன் மேல ஒரு கோவம் கொஞ்சம் வருது அருணையாருக்கு. அதான் 'படு மாயை'ன்னு போட்டுத் தாக்கறாரு.


நான் இன்னா தப்புத்தண்டா பண்ணினேன்னு இப்பிடி ஒரு விதிய எனக்குக் குடுத்தே நீ முருகான்னு அடுத்த வரியுல ஒரு கேள்வி கேக்கறாரு.

"தாழ்வானவை செய்தன தாம் உளவோ"ன்னு இந்த வரி பேசுது. அதுக்குள்ள ஒரு சின்ன சூட்சுமம் க்கீது! அது புரிஞ்சுட்டா, அடுத்த வரியை எப்பிடி சொல்லலாம்ன்றது சுளுவாயிரும்!


'எந்தா ஆ சூட்சுமம்?' என அவசரமாகக் கேட்டான் நாயர்.


'அவசரப்படாதே! சொல்றேன்.... எனக்குப் பட்டத!' எனத் தொடர்ந்தான் மன்னார்.


பொதுவா, இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்றவங்க அல்லாருமே,ரெண்டு, ஒண்ணு, ஒண்ணுன்னு இந்த நாலு வரியையும் பிரிச்சுப் பார்த்து,..... மொத ரெண்டு வரியுல தன்னைப் பத்திப் பொலம்பறதாவும், அடுத்த வரியுல, அப்பிடி நான் இன்னா தப்பு பண்ணினேன்னு சொல்லுன்னு கேக்கறதாவும், நாலாவது வரியுல, 'நீ நல்லா இருப்பா... எனக்கு இப்பிடிப் பண்ணினதுக்கு அப்பாலியும்'னு சொல்றதாத்தான் வியாக்கானம் பண்ணுவாங்க.


ஆனாக்காண்டிக்கு, மொத ரெண்டு வரியுல, தனக்கு நடந்ததச் சொல்லி வருத்தப்பட்டவரு, இந்த ரெண்டு வரியுலியும் முருகனோட பெருமையைச் சொல்றதாத்தான் நான் பாக்கறேன்.


'எனக்கு இதும்மாரி ஒரு மாயா வாள்[ழ்]க்கையைக் கொடுத்தியேன்னு நான் கொஞ்சம் வேகப்பட்டாலுங்கூட,..முருகா... ஒடனே எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் மனசுல படுது!
எப்பவாச்சும் நீ தப்பானதுன்னு எதுனாச்சும் பண்ணியிருக்கியா? நீ பண்ணினதெல்லாமே..... ஒன்னோட மட்டுமில்ல.... ஒன்னைத் திட்டினவங்களைக்கூட நீ வாள[ழ]வைச்சிருக்கே! அதுவும் எப்பிடி? நெனைச்ச ஒடனியே வேகமாப் பறந்துவர்ற மயில்மேல குந்திக்கினு வந்து காப்பாத்தற கடவுள் நீ! …… அதான் இந்த....” தாழ்வானவை செய்தன தாம் உளவோ?”

இப்போ, இந்தக் கடைசி வரி... “வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே!”

அப்பிடியாப்பட்ட நீ இனிமே என்னோட வாள்[ழ்]வாவே ஆனபின்னாடி, எனக்கு ஒரு கவலையுமில்லை முருகா!'ன்னு அருணகிரியாரு சொல்றதாத்தான் எனக்குப் படுது!

எனக்கு இன்னாமாரி கஸ்டம்லாம் நீ குடுத்திருக்கேன்னு நெனைக்கறத வுட்டுட்டு, இப்ப நீயே வந்து எனக்கு அருள் பண்ணிட்டதால, என்னோட வாள்[ழ்]வே நீதான்னு ஆயிருச்சு முருகா! இனி எனக்கு இன்னா குறை இருக்கப் போவுது'ன்னு அருணையாரு சொல்றதாத்தான் நெனைக்கறேன்.

இந்த அர்த்தத்துல இப்ப அந்த ரெண்டு வரியையும் படிச்சுப் பாரு' என்றான் மயிலை மன்னார்! '

""தாழ்வானவை செய்தன தாம் உளவோ? வாழ்வாய் இனி நீ',.... மயில் வாகனனே"

மன்னார் சொன்னதும் பொருந்தி வருவதாகத்தான் எனக்கும் பட்டது!

'ஓம் சரவணபவ மயில்வாகனா' என நாயர் சொல்லிக் கொண்டிருந்தான்!
**************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Friday, October 14, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 31

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 31
30.

'நேத்திக்கு இப்பிடித்தான்! மாமி ஒரு சாம்பார் வைச்சா! ரொம்ப திவ்யமா இருந்துது!

'என்னன்னா! எப்பிடி இருக்குன்னு சொல்ல மாட்டேங்கறேளே'ன்னா !

'அதெப்பிடிறீ சொல்றது?'ன்னு சொல்லிப் பாத்தேன்! விடலை அவ! தொடர்ந்து கேட்டுண்டே இருந்தா! எனக்குக் கோவம் வந்துடுத்து!

'இவ்ளோ நன்னாப் பண்ணிட்டு எப்பிடி இருக்குன்னு கேக்கறியே! இது நோக்கே ந்யாயமா இருக்கான்னு கத்திட்டேன்! அப்பிடியும் விடாம நச்சரிச்சா! எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை!

'அதை எப்பிடிறீ என் வாயால சொல்லுவேன்! அதையெல்லாம் அவாஅவா ரசிச்சு, ருசிச்சுப் பாத்தான்னா தெரியும்! நான் சொல்லிப் புரியவைக்க முடியுமோ'ன்னு பொலம்பிட்டேன்' என ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் சாஸ்திரிகள் பேசினார்!

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

'இப்ப அதுக்கும், அநுபூதிக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் இப்ப வந்து சொல்றீங்க?' எனக் கேட்டுவிட்டு,
'இப்ப அருணகிரியார் தான் அனுபவிச்சது என்னன்னு சொல்லப்போறாரா, இல்லையா, அதைச் சொல்லு மன்னார்' என்றேன் ஆவலாக!

'ஞானும் அதே சோதிச்சு!' என்றான் நாயர்!

சாஸ்திரிகளைப் பார்த்துச் சிரித்தான் மயிலை மன்னார்!

ஐயர் சொன்னது புரியலியா ஒனக்கு ? அவரும் அதையேதான் இன்னொருவிதமா சொல்லிக் காமிச்சாரு! நீ பாட்டைப் படி' என்றான் சிரித்தபடியே!

நானும் படிக்கலானேன்!

செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதா
னவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப்பதுவே

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

"செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்தது தான்"

காலைக் கருக்கல்லியும், சாயங்காலத்துல மேக்கே விளறப்பவும் சூரியனைப் பாத்திருக்கியா நீ? செக்கச் செவேல்னு மானம் முச்சூடும் செவப்பை வாரி எறைச்சமாரி இருக்கும்!

கோபுரத்து மேலேர்ந்து இவுரு குதிச்சப்ப , கீளே தாங்கிப் பிடிச்சது அந்த முருகன்!

இன்னும் சாவலியான்னு கண்ணை முளி[ழி] ச்சுப் பாத்தவர்க்கு ஒரே ஆச்சரியம்!

செவ்வானம் போல செவப்பா ஒரு உருவம் இவரைத் தாங்கிக்கினு க்கீது!

ஆர்ரான்னு பாத்தா நம்ம முருகன்!

நெருப்புலேர்ந்து வந்தவர்தானே முருகன்!

அதும்மட்டுமா? இவரோட அப்பா ஆரு? நம்ம கபாலி! அவுரு இன்னா நெறம்? அவரும் செவப்புத்தான்! நேரா அவரோட நெத்திக் கண்ணுலேர்ந்து ஆறு பொறியா வந்தவர்தானே நம்ம கந்தன்!

அதுனால , இவரும் செவப்புக் கலர்ல ஜொலிக்கறாரு!

கையுல ஒரு வேலு!... ஞானவேலு! சக்தி வேலு! ….அதுவும் செவப்பு!

ஆகக்கூடி, மொத்தமா, அந்திவானச் செவப்பு மாரி க்கீறாராம் முருகன்!

அந்த வேலவன் இவுருக்கு ஒரு ஞானத்த சொல்லிக் குடுக்கறாரு!

இதுக்கு ஈடு இணையே கிடையாதுன்ற மாதிரி... இது எத்தோடயும் ஈடு கட்ட முடியாதுன்னு சொல்லாம சொல்லி, இவருக்கு புரிய வைக்கறாரு!

இதுவரைக்கும் இப்பிடி ஒரு சந்தோசத்தை ஒ[உ]ணர்ந்ததே இல்லைன்னு மட்டும் இவுருக்குப் புரியுது! ஆனா சொல்லத் தெரியல! .... நம்ம ஐயரு சாப்ட்ட சாம்பாருமாரி!' எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

சரி, இப்ப அடுத்த வரியைப் படிப்போம்!

"அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே"

'கந்தரநுபூதி'ன்னு பேரு வைச்சிட்டோமே! இந்த அநுபூதியப் பத்தி எப்பிடியாச்சும் சொல்லணும்னு பாடிக்கினே வராரு அருணகிரி! ஆனா இன்னும் அவரால அத்தச் சொல்ல முடியல! இன்னான்னாமோ பண்ணிப் பாக்கறாரு! ம்ஹூம்.... இன்னும் ஒரு வரிகூட அவரால தெளிவா சொல்ல முடியல!

இப்ப இன்னா பண்ணலாம்னு யோசிக்கறாரு!

சரி, வுடு! இத்த வாயாலெல்லாம் சொல்லவே முடியாது! அப்பிடி சொல்றதுன்றது ஆராலியுமே ஆவாத காரியம்! இத்தயெல்லாம், அவங்கவங்களா அனுபவிச்சுப் புரிஞ்சுக்கணுமே தவர, வாயால பலான பலானதுன்னு சொல்லிக் காட்டவே முடியாது போ'ன்னு கொஞ்சம் வெறுத்துப் போயிடறாரு அருணையாரு!

இதெல்லாம் உள்ளுக்குள்ளாற ஊறிக்கினே இருக்கும்! இன்னாமோ சந்தோசமா க்கீறமாரி ஒரு ஃபீலிங் இருக்கும்! ஆனா, அத்த இது இப்பிடித்தான்னு புட்டுப் புட்டு வைக்க முடியாதுப்பான்னு சொல்லி நிப்பாட்றாரு' என்றான் மயிலை மன்னார்! '

அதேதாண்டா! பட்டினத்தார் கூட இதை ரொம்ப அழகாச் சொல்லுவார்!

"சொல்லாலே சொல்லுதற்கு சொல்லவா யில்லையடி
எல்லோருங் கண்டிருந்து இப்போ தறியார்கள்'னு' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

‘எந்தா ஐயர்சாமி! ஆ சாம்பாரைப் பத்தி கொறச்சு பறையணும் நீங்க' எனச் சீண்டினான் நாயர்!

அதையெல்லாம் கொறைச்சே சொல்ல முடியாதுரா! ரொம்ப திவ்யமா இருந்துது! அவ்ளோதான் சொல்ல முடியும்; போ! வேணும்னா ஒனக்கும் தரச் சொல்றேன். சாப்ட்டுட்டு நீயே சொல்லு பார்க்கலாம்!!' என பதிலுக்கு சாம்பு சாஸ்திரிகளும் சீண்ட ஒரு பெரிய சிரிப்பலை எழுந்தது அங்கே!

கந்தர் சஷ்டிப் பொழுது இன்பமாக முருகன் பெருமையில் நிறைந்து கொண்டிருந்தது!
>>>>>>
வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, October 10, 2011

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- 30:

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 30
29.

'இப்பிடி ஒரு நெனைப்பும் வரமாட்டேங்குதேன்னு பொலம்பினதும் லேசாக் கோவம் வருது அருணகிரியாருக்கு' எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார்.

'எதுக்குக் கோபம் வரணும்? கொஞ்சம் விளக்கமா சொல்லேன் மன்னார்' என்றேன் நான்.

'சொல்றேன், சொல்றேன்! அதுக்கு முன்னே நீ பாட்டைப் படி' என்றான்.

29.
இல்லே யெனுமா யையிலிட் டனைநீ
பொல்லே னறியா மைபொறுத் திலையே
மல்லே புரிபன் னிருவா குவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே


இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.

ம், ... இப்ப சொல்லு. ஏன் கோபம் வருது அருணையாருக்கு? என்றேன் ஆவலுடன்!

"நீயே நெனைச்சுப் பாரு. ஒரு நல்ல அனுபவத்தைக் காமிச்சாரு கந்தன். இப்பபாட்டைப் பத்திச் சொல்லலாம்னா, சுத்தமா ஒரு நெனைப்பும் வரமாட்டேங்குது. இதுக்கு இன்னா காரணம்னு யோசிக்கறாரு. நெனைப்பு, மறப்பு, நல்லது, கெட்டது, மெய்யி, பொய்யின்னு பலானாது பலானதுல்லாம் ஒரு நாடகம் போல நெறைஞ்சு கெடக்கற இந்த வாள்[-ழ்]க்கையுல சிக்கிக்கிட்டு க்கீறதாலதானே, இப்பிடியில்லாம் எனக்கு நடக்குதுன்னு புரியுது அவுருக்கு!

இத்தப் பண்ணினது ஆருன்னா ... தோ.... மாருல மாலையைப் போட்டுக்கினு சிரிச்சுக்கினு க்கீறானே.... இந்த முருகந்தான்னு தெரிய வருது!

பண்றதெல்லாம் பண்ணிட்டு, கள்ளமா சிரிக்கறான் பாருன்னு ஒரு கோவம் வருது! அதே கோவத்துல இந்தப் பாட்டு வருது!' என்றான் மன்னார்.

'இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே'

இந்த 'இல்'லுன்ற வார்த்தையை ரெண்டு விதமாப் பாக்கலாம்.

இல்லை'ன்ற பொய்யான வாள்[ழ்]க்கைன்னு சொல்லலாம். இப்பிடி ஒரு மாயையுல என்னிய தூக்கிக் கடாசிட்டியே முருகா! சரி, பண்ணினதுதான் பண்ணினே, அதியும் நீதானே செஞ்சே...... அப்ப, நான் பண்ற அயு[ழு]ம்புக்குல்லாம் நீதானே காரணம்! பின்ன, எதுக்காவ என்னியத் தண்டிக்கறே முருகா? இது இன்னா நாயம்? நாந்தான் அறியாதவன்னு தெரியுமில்ல? அத்தக் கொஞ்சங்கூட நெனைப்புல வைச்சுக்காம, இன்னாமோ அல்லாமே நாந்தான் செஞ்சேன்றமாரி, எனக்கு தண்டனை குடுக்கறியே முருகா!'ன்னு சொல்றதா வைச்சுக்கலாம்.

இன்னோரு வாட்டி அந்த 'இல்'லைப் பாத்தின்னா, வீடு, பொண்ஜாதின்னும் ஒரு அர்த்தம் வரும். நாம்பாட்டுக்கு சும்மா 'தேமே'ன்னு கெடந்தவனைப் பிடிச்சு இட்டாந்து இப்பிடி ஒரு மாயாவலையுல சிக்கவைச்சுட்டு, இப்ப அதுல நான் ஏதோ அறியாம பண்ற தப்புங்களுக்கெல்லாம் என்னிய கோவிச்சுக்கறியே, பொறுத்துக்க மாட்டேன்றியே முருகா'ன்னு கேக்கறமாரியும் புரிஞ்சுக்கலாம்.

அதான் இவரோட சொல் விளையாட்டோட மகிமை! இப்ப அடுத்த வரிக்கும் இதுக்கும் இன்னா சம்பந்தம்னு பாப்பமா?

" மல்லே புரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே"

இதுல இன்னா சொல்லிருக்காரு?

சும்மா மல்யுத்தத்துக்குப் போற ஆளோடதுமாரி க்கீற ஒன்னோட பன்னண்டு தோளுலியும் என்னோட இந்தப் பாட்டுக்களை வைச்சுப் பண்ணின பாமாலையை போட்டுகிட்டு அள[ழ]கு பாக்கற ஜோதிமாரி ஜொலிக்கற வேலவனேன்னு சொல்றாரு!

இது எப்பிடி மேலே சொன்னதோட பொருந்தும்னு யோசி!' என்று நிறுத்தினான்.

'இது தனக்கில்லை; இவனுக்கு வைச்ச பரிட்சைதான்'என்னும் சந்தோஷத்துடன், நாயரும், சாஸ்திரிகளும் என் முகத்தை ஒரு பார்வை பார்த்தார்கள்!

அவர்களது எண்ணத்தைச் சிறிதும் பொய்யாக்க விரும்பாத நான், சட்டென்று, 'அதுல்லாம் தெரிந்தால் நான் ஏன் உன்னைத் தொந்தரவு பண்ணப்போறேன் மன்னார்!' எனப் பரிதாபமாகச் சொன்னேன்!

ஒரு பெரிய சிரிப்பலை அங்கே எழுந்தது!

ஆதரவுடன் என் தோளைத் தட்டிக் கொடுத்தபடி மன்னார் தொடர்ந்தான்.
'மேலாக்கப் பார்த்தா, இது வெறும் ஒரு அலங்கார வார்த்தையாத்தான் தெரியும்.

ஆனாக்காண்டிக்கு , இது ஏதோ வரியை ரொப்பறதுக்காவப் போட்டதில்லை. இதுக்குள்ளாரையும் ஒரு அர்த்தம் இருக்கு.
எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். இது இப்பிடித்தான்னு சொல்லலை. ஆனா, இப்பிடியும் பாக்கலாம்னுதான்....... கேளு'

'முருகா! ஒன்னோட தோளைப் பாத்தியா? மல்லுச்சண்டை, குஸ்தியுல ஜெயிக்கற பெரிய வீரன்மாரி சும்மா 'திண்'ணுனு க்கீது! ஒனக்கு எத்தினி மாலை போட்டாலும் அது தாங்கும்போல!

ஒன்னோட அருளால, ... நீ கொடுத்த வரத்தால... நீ அடியெடுத்துக் கொடுத்துத்தான் நான் இத்தினி பாட்டுங்களை ஒம்மேல பாடித் தள்ளிக்கினு க்கீறேன். அல்லாமே நீ குடுத்த பெருமை! அத்த வைச்சுக்கினு நானும் இன்னான்னாமோ பாடறேன். அதுல்லாம் சரியா, தப்பான்னு கூடப் பாக்காம, நான் பாடுற பாட்டுங்களையெல்லாம், இன்னாமோ பெரிய மாலைங்கமாரி நீ சந்தோசமா வாங்கிக்கினு, அல்லாத்தியுமே ஒன்னோட இந்தக் கட்டுமஸ்த்தான தோளுங்க...... ஒண்ணா, ரெண்டா, பன்னண்டு தோளுங்க... மேல சிரிச்சுக்கினே வாங்கிப் போட்டுக்கறே! குத்தம், கொறை எதுவுமே பாக்காம!

அப்பிடிப் பண்ணற நீ, ஏம்ப்பா இதும்மாரி இந்த மாயையுல என்னை நீயே சிக்கவைச்சு, அதுல நான் பண்ணற குத்தத்துக்காவ, தண்டனையும் குடுக்கறே! ? இது நாயமாப் படுதா ஒனக்கு? ஞானவேலைக் கையுல 'ஜம்'முன்னு வைச்சுக்கினுக்கீறியே,' ன்னு செல்லமா ஒரு சண்டை போடறாரோன்னு படுது' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்!

சற்று முன்னர் சிரித்த அனைவரும் மௌனமாகி, இதன் பொருளை உணர்ந்ததுபோல், தலை கவிழ்த்து, 'ஓம் சரவணபவ' என முணுமுணுக்கத் தொடங்கினர்!
**************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்

Read more...

Thursday, September 29, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 29

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 29
28.


'எளிமையாப் பாடிகிட்டே வந்தவருக்கு திடீருன்னு ஒரு நெனைப்பு வந்திருது.
'இன்னாடா, இன்னாமோ குடுத்தாரு, குடுத்தாருன்னு சொல்லிக்கினே வரோமே, அத்த இப்ப வெலாவாரியா சொல்லிறணும்னு முடிவு பண்ணிட்டு, அது இன்னான்னு நெனைச்சுப் பாக்கறாரு.


முருகனைப் பாத்தது நெனைப்பிருக்கு!
அவுரு கையில தாங்கிப் பிடிச்சது நெனைப்புல வருது!
இன்னாமோ சொன்னாரேன்னு ஒரு நெனைப்பு க்கீது!
அதுக்கப்புறமா?????.........


ரொம்பவே யோசனை பண்ணிப் பாக்கறாரு!
இன்னாமோ நடந்திச்சேன்னு புரியுது!
அது இன்னான்னு சொல்லத் தெரியல!
அதான் இந்தப் பாட்டு!
எங்கே படி கேக்கலாம்' என்றான் மயிலை மன்னார்!
நான் படிக்க, மன்னார் பதம் பிரித்துச் சொன்னான்!

ஆனா வமுதே யயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானா கியவென் னைவிழுங் கிவெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே.

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே .

"ஆனா அமுதே அயில்வேல் அரசே ஞானாகரனே நவிலத் தகுமோ"

நேத்து ஒரு வூட்டுக்கு விருந்து சாப்பிடப் போயிருந்தேன்!
நல்ல சாப்பாடு!

எல்லா அயிட்டமுமே ரொம்ப நல்லாயிருந்தாக்கூட, அந்தப் பால் பாயாசம் க்கீதே, அத்தச் சொல்லவே முடியாது!
அவ்ளோ ருசியா இருந்திச்சு!
ரெண்டு டம்ளர் குடிச்சுட்டேன்!

அப்பவும் ஆசை விடலை!
அத்தப் புரிஞ்சுகிட்ட அந்த வூட்டுக்க்காரம்மா 'அண்ணே! இன்னும் ஒரு கப்பு தரட்டுமா'ன்னாங்க!
நான் பதிலே பேசாம டம்ளரை நீட்ட, மேல ரெண்டு கரண்டி ஊத்தினாங்க!
அப்பறம், இன்னும் ரெண்டு கரண்டி!
அவங்க ஊத்த ஊத்த, நானும் வேணான்னே சொல்லாம குடிச்சுக்கினே இருந்தேன்!
எப்பிடி குடிச்சேன்னு இப்ப நெனைச்சுப் பார்த்தா, இப்ப அத எப்பிடி சொல்றதுன்னே தெரியலை!


இப்ப எதுக்கு சம்மந்தமேயில்லாம இத்தச் சொல்றானேன்னுதானே நெனைக்கறே?
அதான் இந்த 'ஆனா'!!




மேல மேல போதும்ன்னே சொல்லாம இருக்கறதுக்குப் பேருதான் 'ஆனா'.
அப்பிடியாப்பட்ட அமுதத்தை தர்றவனேன்னு முருகனைக் கூப்பிடறாரு
ஆனா அமுதேன்னு!


அயில்னா கூர்ப்புன்னு முன்னாடியே சொல்லியிருக்கேன்!
கூரான வேலைக் கையுல வைச்சுக்கினு க்கீற என்ராசாவேன்னு கொஞ்சறாரு! அதான் 'அயில்வேல் அரசே'!


'ஞான ஆகரனே'ன்னா ஞானத்த உண்டுபண்றவன்னு அர்த்தம்!

'ஆகரன்'னா பொறக்க வைக்கறவன்.

இப்ப இந்த மூணையும் கொஞ்சம் சேர்த்துப் பாப்போமா!

வேலு ஞானத்தோட அடையாளம்!
அந்த ஞானம் பொறக்கற வேலு முருகன் கையுல !
அந்த வேலு ரொம்பவே கூர்ப்பா க்கீது!
அதாவுது, கூர்மையான ஞானம் இவுரு கையுல!

அந்தக் கையால ஒரு அமுதத்தைத் தராரு அருணகிரியாருக்கு!
அது அமுதம் மாரி க்கீதாம்!

அப்பிடி ஒரு அமுதத்தைக் குடுக்கறப்ப, அதைக் குடிக்கறாரு அருணையாரு!

போதும்னே இவுருக்கும் சொல்லத் தெரியல.
அவரும் குடுக்கறத நிறுத்தவேயில்லை!

ஞானாகரனே அயில்வேல் அரசே ஆனா அமுதே சொல்றது இதைத்தான்!


இப்பிடி அவுரு குடுத்த ஞானத்தை இன்னான்னு சொல்லச் சொன்னா, இவரால சுத்தமா முடியலை!

'நான் எப்பிடிப்பா இத்தச் சொல்றதுன்னு முருகன்கிட்ட பொலம்பறாரு!
நவிலத் தகுமோன்னு கதற்ராரு!
அதைத்தான் அடுத்த ரெண்டு வரியுல சொல்றாரு!

"யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே ."

இதப் பத்திச் சொல்றதுக்கு முன்னாடி, ஒண்ணு நான் கண்டிப்பா சொல்லியே ஆவணும்!
போன பாட்டுல சொன்னேனே, அந்தக் கொணந்தான் இந்தப் பாட்டுலியும் வருது.... இன்னொரு விதமா!


எனக்குக் கிடைச்ச மாதிரியே எல்லாருக்கும் கிடைக்கணும்னு பாடினாருன்னு சொன்னேனே.. அதையே, இப்ப, இன்னொருமாரி,
தனக்குக் கிடைச்சதை நாம இவங்களுக்கு சொல்லலாமேன்னு நெனைக்கறாரு. ஆனா, முடியலை ! இன்னாமோ நடந்திச்சுன்னு புரியுது!
அதச் சொல்ல முடியல!

இந்த இடத்துலதான் நாம ஒண்ணைப் புரிஞ்சுக்கணும்!
எதுக்காவ, அவரு இப்பிடிப் பொலம்பணும்?

அப்பிடி இன்னாத்த இவரு அனுபவிச்சாரு? அது இன்னான்னு சொல்ல முடியலியேன்னு கூட சொல்றாரே? ன்னு நம்மளையெல்லாம் ஒரு செகண்டு நெனைக்கவைச்சு, அது இன்னாவாத்தான் இருக்கும்னு நம்மளோட ஆசையையும் தூண்டிவிடறதுக்காவத்தான் அருணையாரு இப்பிடில்லாம் சொல்றாருன்றதப் புரிஞ்சுக்கோ!

அப்பிடி நம்ம ஆசையைத் தூண்டறமாரி இன்னாதான் சொல்றாரு?

"யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே ."

மனுஷனாப் பொறந்த அன்னைக்கே நம்மளையெல்லாம் வந்து பிடிச்சுக்கற சனியன் இந்த 'நானுன்ற' ஆணவம்! மொளைச்சு மூணு நாளுகூட ஆயிருக்காது ஒரு கொள[ழ]ந்தைக்கு! அதுக்குள்ளாறயே 'இதான் என்னோட அம்மா'ன்னு ஒரு நெனைப்பு எங்கேருந்தோ வந்து
ஒட்டிக்கிரும் அதுக்கு! அவளைத் தவர, வேற ஆராச்சும் வந்து தொடட்டும்.... இன்னாமோ தன்னோட சொத்தே பறிபோனமாரி, 'வீல்,வீலு'ன்னு அலறித் தீத்திரும்!

அப்பத் தொடங்கின இந்த 'நானு'ன்ற ஆணவம் மேல மேல வளர்ந்துக்கினே போவும்! கொறையவே கொறையாது!

இந்த 'என்னோடது'ன்ற ஆணவம் இருக்கற வரைக்கும் ஆண்டவனைப் பாக்க்கறதுன்றது கொஞ்சங்கூட நடக்கவே நடக்காதுன்னு அன்னைலேர்ந்து இன்னிக்குவரைக்கும் எத்தினியோ பேருங்க... பெரிய பெரிய மகானுங்கள்லாம் சொன்னாலும், இதைப் பத்திக் கவலைப் படறவங்க ரொம்பவே கம்மின்னுதான் சொல்லணும்!

இதைப் பத்தித்தான் இந்த வரி சொல்ல வருது.

அதும் மூலமா தனக்கு இன்னா ஆச்சுன்றதையும் நமக்கெல்லாம் ஒரு கோடி காட்டி, இதைப் பத்தி நமக்குள்ளியும் ஒரு ஆசையைத் தூண்டறமாரி ஒரு கருணை பண்னியிருக்காருன்னுதான் சொல்லணும்.

இன்னான்னமோ தப்புல்லாம் பண்ணி, இந்த ஆணவத்தால தறிகெட்டு அலைஞ்சப்பக் கூட, தனக்கு இந்த கந்தன் பண்னின கருணையைச் சொல்லிக் கலங்கற வரியாத்தான் இதை நான் பாக்கறேன்.


இந்த சாமிங்களுக்கே பொதுவா ஒரு கொணம் இருக்குன்னு பெரியவங்க சொல்லுவாங்க!

அது இன்னான்னா, தப்பு பண்றவங்களைத் தீர்த்துக் கட்டறதுதான் அது!
சிவன், பெருமாளு, துர்க்கைன்னு அல்லா சாமியும் பண்ணினதைப் பார்த்தியானா, நான் இன்னா சொல்ல வரேன்னு ஒனக்குப் புரியும்!


ஆனா, முருகனோட வளி[ழி] எப்பவுமே தனி... வளி[ழி]!

ஒங்கிட்ட ஒரு தப்பு இருக்குன்றதுக்காவ ஒன்னைத் தண்டிக்க மாட்டாரு!
ஒங்கிட்ட இன்னா தப்பு, குத்தம், கொறை இருக்கோ, அத்த மட்டும் தீர்த்துக் கட்டிட்டு, ஒன்னியத் திருத்தி, தன்னோடயே வைச்சுக்கிருவாரு!

பிரம்மா, சூரன், இந்திரன், ஔவையாருன்னு இப்பிடி ஆரை வோணும்னாலும் பாரு.. இப்பிடித்தான் பண்ணியிருப்பாரு!

தனக்கும் அப்பிடித்தான் பண்னினாருன்னு இவுருக்கு ஒரே பூரிப்பு!

அப்பிடி இன்னா பண்ணினாரு?
ஆணவத்தால அலைஞ்சு திரிஞ்ச அருணகிரியைத் தன்னோட கையுலியே வாங்கிக்கினு, அவருகிட்ட இருந்த அந்த 'யான்' அப்பிடீன்ற கொணத்தை 'லபக்'கினு முளு[ழு]ங்கிட்டாரு முருகன்!

இந்த எடத்துல அருமையான ஒரு சொல்லைப் போட்டிருக்காரு அருணையாரு!
'விழுங்கி'ன்னு!


இப்ப ஒரு ஜிலேபி க்கீது!
அத்தக் கையுல வைச்சுக்கினு க்கீற நீ! பாக்கறே! சுருள்சுருளா பாக்கறதுக்கே அள[ழ]கா செவப்பா க்கீது! நாக்குல வைச்சு லேசா ருசி பாக்கறே. அந்த ஜீராவும், அந்த மணமும் அப்பிடியே நாக்குல எச்சி ஊறவைக்குது. கொஞ்சமாக் கடிக்கறே! இனிப்பு அடிநாக்கு வரைக்கும் போயித் தாக்குது! வேக வேகமா அதைக் கடிச்சுத் துண்றே! மொத்தமா முளு[ழு]ங்கிட்டே அந்த ஜிலேபியை இப்ப!

அதுக்கப்பறம்??? இன்னா ஆச்சு அதுக்கு!

இத்தினி நேரமா நீ அனுபவிச்ச அத்தினியும் காலி!

நல்லா இருந்திச்சுன்னுதான் சொல்லமுடியுமே தவர, வேற ஒண்ணுமே இப்ப ஒன்னால சொல்ல முடியாது!

அந்த நெலைமையுலத்தான் க்கீறாரு அருணகிரியும்!

இவர்கிட்ட இருந்த அந்த 'யான்' இப்ப காணோம்!

முருகன் அத்த எடுத்து முளு[ழு]ங்கிட்டாரு!
இப்ப தான் ஆருன்னே அருணகிரியாருக்குத் தெரியலை!
அதே சமயம் அத்த எப்பிடிச் சொல்றதுன்னும் சொல்ல முடியலை!

யான் இப்ப தான் ஆயிருச்சு!

அந்த தான் ஆருன்னா எப்பவுமே நெலைச்சு நிக்கற அனுபவந்தான் 'அந்தத் 'தற்பரம்'.

'தற்பரம்'னா தனக்கும் மேலே க்கீற ஒரு பெரிய பொருளு!

அது எப்பிடி இருக்கும்... அந்த அனுபவம் எப்பிடி இருக்கும்ன்றத என்னால சொல்லவே முடியலியே முருகா!ன்னு இந்தப் பாட்டுல சொல்றாரு அந்தப் பெரியவரு!

ஒரு சாதாரண ஜிலேபியப் பத்தின அனுபவமே இப்பிடி இருக்கும்னா, நமக்கெல்லாம் மேலான ஒரு பெரிய தெய்வம்.... அந்த முருகன்....நமக்குள்ளியே வந்து குந்திக்கினா அது எப்பிடி இருக்கும்ன்றதை நமக்குள்ள புகுத்தி, இதைப் பத்தி நம்மளையெல்லாம் இன்னும் தீவிரமா ஈடுபடச் செய்யறதுக்குன்னே இதையெல்லாம் இங்க சொல்றாரு அருணகிரியாரு!

இதான் கந்தன் கருணையோட தனிப் பெருமை!

கந்தன் மட்டுமில்ல, அவர் மேல பக்தி பண்றவங்களுக்குங்கூட இந்தக் கருணை தானா வரச் செஞ்சிருவாரு முருகன்!

ஆனாக்காண்டிக்கு, இப்ப சாப்ட்டது ஜிலேபிதான்னு மட்டும் தெரியறமாரி, தனக்கு வந்தது ஞானம்னு மட்டும் இவருக்குத் தெரியுது! அதுனாலத்தான், 'கூர்வேல் போலக்கீற ஆனா அமுது கொடுத்த ஞானாகரனே'ன்னு மொதல்ல சொல்லி ஆரம்பிச்சாரு அந்தக் கருணையாறு....அருணையாரு! '
என ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்!

'ஓம் சரவண பவ' எனும் மந்திர ஒலி நாயரிடமிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருந்தது!
********************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP