Thursday, February 05, 2009

"உந்தீ பற!" -- 12

"உந்தீ பற!" -- 12


பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"



இலயமு நாச மிரண்டா மொடுக்க
மிலயித் துளதெழு முந்தீபற
வெழாதுரு மாய்ந்ததே லுந்தீபற. [13]


இலயமும் நாசம் இரண்டாம் ஒடுக்க
இலயித்துளது எழும் உந்தீ பற
எழாது உரு மாய்ந்ததேல் உந்தீபற.

மனத்துள் அடங்குதல் இலயமெனச் சொல்வர்
மனமது அழிதல் நாசம் எனப்படும்

பிராணனும் மூச்சும் உள்ளே ஒடுங்கிட
லயமும் நாசமும் இவ்விதம் நிகழும்

அடங்கிய மனமும் மீண்டும் எழுந்திட
அழிந்த மனமோ திரும்புவதில்லை

உறங்கிட மீண்டும் எழுதல் நடக்கும்
இறந்தவர் மீண்டும் எழுதல் உண்டோ!


இதுவரை வந்த பாடல்களிலேயே, புரிந்துகொள்ளக் கடினமாய் இருந்த பாடல் இது எனக்கு!

மனத்தை அடக்கப் பயிலும் சாதகனுக்கு, பயிற்சியின் விளைவாய் இரு நிகழ்வுகள் நடக்கின்றன.

வலைக்குள் அடங்கிய பறவைகள் என முன்னொரு பாடலில் சொன்னது இங்கே உதவலாம்.

மூச்சுக்காற்றின் மூலம் பிராணாயாமம் செய்கையில், மனமும், அதன் விளைவான எண்ணங்களும் அடங்கி ஒடுங்குகின்றன.

இதிலிருந்து விடுபடும்போது, வலை விட்டு வெளிவந்த பறவைகள் போல இதுவரை ஒரு அனுபவத்தில் இலயித்திருந்த மனம் மீண்டும் விடுபட்டு எழுகிறது.

அஷ்டாங்க [எட்டுநிலை] யோகத்தில் சொல்லியிருந்த மற்ற பயிற்சிகளின் மூலம், மனத்தை, அதன் ஆசைகளை அழித்துவிட முடிகிறது. அப்படி அழிந்த மனம் மீண்டும் உயிர்ப்பதில்லை.

தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் ஒருவன், மீண்டும் அதிலிருந்து விடுபட்டு எழுந்திடக் கூடும். ஆனால், இறந்தவர் மீண்டும் எழுவதில்லை.

மேலே சொன்ன உதாரணத்தை, பிராணாயாமத்தால் இலயித்த,[அல்லது] ஒடுங்கிய மனத்துக்கும், நேரான மனக்கட்டுப்பாட்டினால் அழிக்கப்பட்ட மனத்துக்கும் ஒப்பிட்டால், இது இன்னும் சற்று புரியலாம்.

இதைத் தொடர்ந்து எழும் கேள்விகள் ஏராளம்!


அப்படியானால், இரண்டு மனங்களா நமக்கெல்லாம்?
மனம் அழிந்தால், அதனுடன் கூடவே அதன் நினைவுகளும் அழிந்துவிட்டால், பின்பு எப்படி எல்லாவற்றையும் உணர்வது?
மீண்டும் அனைத்தையும் முதலிலிருந்தே கற்றுக் கொள்ளணுமா?
எனக்கு இதுவரையில் நடந்த நிகழ்வுகள் இப்போது எல்லாம் என்னாகும்?
இப்படி நினைவழிந்த மனத்துடன் நான் எப்படி உலகில் வாழமுடியும்?

நியாயமான இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய, முதலில், இந்த 'மனமழிப்பு' என்றால் என்ன என ஆராய்வோம்!

இரண்டு மனங்கள் இல்லை நமக்கு; ஆனால் மனத்துக்கு இரு முக்கியச் செயல்கள் இருக்கின்றன!

1. புலன்களின் மூலம் உணர்ந்ததை உள்வாங்கிக் கொண்டு உள்நிறுத்திக் கொள்வது. புலன்களின் செயல்பாடு சரியாக இருக்கும் வரையிலும், இந்த மனத்திற்கு அழிவில்லை. இது தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கும்.

இதனால் தொந்தரவில்லை. மாறாக, முறையான கட்டுப்பாடுகளுடன் பயின்ற ஒரு சாதகனுக்கு இந்த உணர்வு உதவியே புரியும். இதைப் பார்க்காதே, இதை உண்ணாதே, இதைத் தொடாதே, இதைக் கேட்காதே, இதை நுகராதே என!

2. மனத்தின் இன்னொரு செயல்பாடு, பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆட்படுவது. கோபம், பயம், பொறாமை, என்னுடையது எனும் எண்ணம், விருப்பு, வெறுப்பு ஆசை, நிராசை எனப் பலவித உணர்ச்சிகளுக்கு மனிதன்
தொடர்ந்து ஆட்படுகிறான்.... அல்லலும் படுகிறான் அதனால்!

முறையான பயிற்சியினால் இந்த மனம் அழிந்து போகிறது.

இதன் பயனாக, சாதகன் எந்தவிதமான சலனங்களுக்கும் ஆட்படாமல் போகிறான்.
சந்தோஷம் என்பது எனக்குள் நான் உணர்வதேயன்றி,
வெளிப்பொருட்களால் அல்ல
என்னும் தெளிவு பிறக்கிறது.
அறியாமை நீங்கிய தெளிந்த மனது தன்னைச் சுற்றி நிகழ்வதைக் கவனித்தும், உணர்ந்தும், தனக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கத் துவங்குகிறது.

இதனைத் தொடர்ந்தும் கேள்விகள் எழக்கூடும்!

ஆனால், இங்கு சொல்லப்படுவதெல்லாம், இந்த வழியில் செல்ல விழைபவர்க்கே எனபதைப் புரியவும். இந்த நிலை வருவதற்கு எத்தனை முயலவேண்டும் என்பதெல்லாம் முன்வந்த பாடல்கள் விளக்கியுள்ளன. அந்த நிலைகளைக் கடந்து இங்கு வந்தவர்கே இது!

அப்படியென்றால், இந்த நிலைக்கு வராமல் இதையெல்லாம் ஏன் தெரிஞ்சுக்கணும்!?

பள்ளிக்குச் செல்லும் மாணவன், நன்றாகப் படித்து, நல்லவேலையில் இருப்பவரைப் பார்க்கும்போது, தானும் அதுபோல ஆகவேண்டும் எனும் ஒரு உணர்வில் ஆட்பட்டு, முனைந்து படிப்பதைப் போலத்தான்!

அதற்கு, முதல் பயிற்சிதான் முன்னே சொல்லிய ‘யமம்’ ’நியமம்’ - வெளி, உள் கட்டுப்பாடு!

அதனில் முனைவோம் முதலில்..... இதையெல்லாம் படித்துக் கொண்டே!
****************

[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP