Wednesday, February 28, 2007

மயிலை மன்னாரின் குறள் விளக்கம்! 11

மயிலை மன்னாரின் குறள் விளக்கம்! [11]
"படைச் செருக்கு" [771]


இந்த லப்-டப் எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தேன்... இப்பவெல்லாம் மன்னாரைப் போய் பார்க்கவே நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது!

இன்றைக்கு எப்படியாவது பார்த்துடணும்னு முடிவு பண்னி, அவனைத் தேடி 23B பஸ் பிடித்து லஸ் கார்னரில் இறங்கி, சூடான வேர்க்கடலை ஒரு 2 ரூபாய்க்கு வாங்கி, கொரித்துக் கொண்டே வழக்கமான டீக்கடை நோக்கி நடந்தேன்.

திடீரென ஒரு கரம் என்னை இழுத்து ப்ளாட்ஃபாரத்தில் தள்ளியது.
அதே நேரம், "ஸர்"ரென்று ஒரு பஸ் என்னைத் தாண்டிச் சென்றது!

"இன்னாப்பா! வூட்ல சொல்லிக்கினு வண்ட்டியா? என் பஸ்தானா ஒனக்குக் கெடச்சது அதுக்கு.... சாவுக்கிராக்கி" என்ற மாமூல் திட்டுடன் டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றார்.

சற்று சுதாரித்துக் கொண்டு யார் நம்மைக் காப்பாற்றியது எனப் பார்த்தால்... சாக்ஷாத் மயிலை மன்னார்!

"ஒரு ஸெகண்டு வுட்ருந்தா இன்னா ஆயிருக்கும்! பாத்து வரக்கூடாது ஸங்கரு! ஸரி ஸரி.. வா! கெதி கலங்கிப் போயிருக்கே! நாயர் கடைல டீயும், வடையும் துன்னியானா அல்லாம் ஸரியாப் பூடும்" என ஆதரவாய்ச் சொல்லிக் கொண்டே என்னைக் கூட்டிப் போனான், மன்னார்.

'ஆமா! அப்டி இன்னா தல போற விசயம் யோஸிச்சிகினு இருந்தே! சொல்லு!' என்றான்.

'ஒண்ணுமில்லேப்பா! உன்னைப் பர்த்து நாளாகி விட்டதே. இன்று எப்படியும் பார்த்து விடணும்னு வந்தேன். கொஞ்சம் அஸால்ட்டா இருந்துட்டேன். ரொம்ப நன்றிப்பா!' என்று மஸால் வடையை கடித்துக் கொண்டே ஸொன்னேன்!

'அதான் நாம ஒனக்கு ஒரு ஸோல்ஜர் மாரி இருக்கோம்ல! எங்ஙன போனாலும் வுட்ட்ருவோமா? சமயத்துல ஸோல்ஜர்! ஆனா நெஸமாலும் ராஸா!' என்று சற்று மிதர்ப்பாக சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்.

இப்படி ஒரு ஆளு எனக்கு நண்பனாய் இருப்பதற்கு, இல்லை இல்லை ராஜாவாய் இருப்பதற்கு, இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே, 'இதே மேட்டர்ல ஒரு குறள் சொல்லி பொருளும் சொல்லேன்' என்றேன் நான்.

'அவ்ளோதானே! என்னிய மாரி ஒர்த்தன் ஒனக்கு இருக்கான்றதை நீ எப்படி போயி மத்தவங்ககிட்ட சொல்லுவேன்னு ஒரு குறள்..... வேணாம்... கதை ஒண்ணு சொல்றேன், எளுதிக்கோ!" என்றான்.


இனி வருவது, அவன் சொல்ல, நான் எழுதி உங்கள் முன் வைப்பது!

"அதியமான், அதியமான்னு ஒரு ராஸா இருந்தானே, தெர்யுமா? அதாம்ப்பா! நம்ம அவ்வைப்பாட்டிக்கு கூட நெல்லிக்கா கொடுத்தன்னு படிச்சோமே நம்ம இஸ்கூல்ல! அவந்தான்!

அவனும், இந்த அவ்வையாரும் ரொம்பவே தோஸ்துங்க. நீயும், நானும் மாரின்னு வெச்சுக்கயேன்!

எதுனாச்சும் ஒண்ணுன்னா, இவன் அந்தம்மாவுக்கு ஒதவி பண்றதும், அவனுக்கு எதுனாச்சும் புத்தி சொல்லணும்னா இந்தம்மாவைக் கேக்கறதும், அவங்க அத்தினி வேலையையும் போட்டுட்டு வந்து இவனுக்கு அட்வைஸ் கொடுக்கறதும் .... அப்படியே ரொம்ம்ம்ம்ப ஃப்ரென்ட்ஷிப்பா இருந்தாங்க.

இந்தம்மா அவனோட வீரத்தைப் பத்தில்லாம் நெறையவே பாட்டெல்லாம் பாடியிருக்கு!

ஒருநாளைக்கு அடுத்த ஊர்ல இருக்கற, தொண்டமான்ங்ற ராஸா ஒர்த்தன்.. இன்னாமோ இவன்ட்ட கோவிச்சுகிட்டு, பலான பலான தேதிக்கு நான் ஒன் நாட்டு மேல படையெடுக்கப் போறேன். ஒன்னால ஆனத செஞ்சிக்கோன்னு ஒரு ஓலை வுட்டான்.

அதியமானும், வலுச்சண்டைக்கு போறதில்லை; வந்த சண்டைய வுடறதில்லன்னு சண்டைக்கு ரெடியாயிட்டு இருக்கான்!

ஆனாக்காண்டி, நாட்டுல கொஞ்சம் நெலமை மோசமாயிருந்திச்சு அப்ப.

கொஞ்சம் பஞ்சம்,
மக்கள்ல்லாம் பசி, பட்டினின்னு பஞ்சம் பொளைக்கப் போயிருக்காங்க!

இந்த சமயத்துல, சண்டை வேணாமேன்னு அவ்வையாரம்மா நெனைக்கறாங்க.

"தா! நீ கொஞ்சம் கம்முனு இரு. ஒன் வீரம்ல்லாம் எனக்குத் தெரியும் நல்லாவே! ஆனா, அது இப்ப வேணாம்! நா போயி இன்னா, ஏதுன்னு கண்டுகினு வரேன்'ன்னு சொல்லிட்டு தொண்டமான் ஊருக்கு வராங்க!

'ஆஹா! எப்பவும் நம்ம ஊருக்கு வராத கெளவி இப்ப நம்மைத் தேடி வந்திருக்காங்களே'ன்னு ராஸாவுக்கு ஒரே குஷியாப் பூடுச்சு!

தடபொடலா விருந்து வைக்கிறான்!

ராஸான்னா, அவனைப் பத்தி எதுனாச்சும் பாடணுமே!

'இன்னாடா பாடறது. நம்ம ஆளை வுட்டுக் கொடுக்காம நாம இவனைப் புகழ்ந்தும் பாடணுமே'ன்னு யோசிக்கறாங்க!

அப்ப, இந்த ராஸா இன்னா பண்றான்; ....அவனோட கத்தி கபடால்லாம் வெச்சிருக்கற எடத்துக்கு கூட்டிகினு போயி காமிக்கறான்.

'பாட்டியும் பாக்கட்டும், பார்த்தா, போயி, அதியமான்ட்ட சண்டை இல்லாம பணிஞ்சுறச் சொல்லிடும் இந்த அம்மா'ன்னு ஒரு கணக்கு போடறான்.

அங்க பாத்தா, வேலு, வில்லு, அம்பு, கத்தி, கேடயம், ஈட்டின்னு அளகா அடுக்கி வெச்சிருக்கு.

பாட்டிக்கு டமார்னு ஒரு ஐடியா கிடைக்குது!
பாடறாங்க!

"இங்கே பார்த்தா, மாலை சூட்டி, பொட்டு வெச்சு, எண்ணை தடவி, சும்மா பளபளான்னு பட்டை தீட்டி, புச்சா, இத்தினி அடுக்கி வெச்சிருக்கே ராஸாவே!

ஆனா, அங்கே அதியமான்ட்ட போயி பார்த்தியானா, சதா சண்டை போட்டு, சண்டை போட்டு, அவன் கத்தில்லாம் ஒடஞ்சி போயி, ஈட்டில்லாம் முறிஞ்சி போயி, காயலான் கடைல கீற மாரி குமிஞ்சு கெடக்கு.

இதுலேர்ந்து இன்னா தெரியுதுன்னா, சண்டைன்னா அவன் ஒரு கை பாக்காம வுட மாட்டான்.

ஆனா, ஒர்த்தன் கிட்ட ஒண்ணும் இல்லியா அவனோட சேர்ந்து போயி இவன், தன் சோத்தையும் வெச்சு அவனோட சாப்பிடுவான்!

ஆகக்கண்டி,....இன்னா....உன் வேலெல்லாம் பிரமாதமாத்தான் இருக்கு"

அப்பிடீன்னு ஒரு பாட்டு பாடறாங்க!

அவ்ளோதான்!

ராஸாவுக்கு புரிஞ்சிடுது!

இப்ப மாரி அடுத்தவன் அசந்திருக்கற நேரம் பர்த்து அடிக்கற எனம் இல்லை தமிளினம்!

ஒனக்கு சரிசமானமா இருக்கறவனோட மட்டுமே சண்டை போடணும்னு தெரிஞ்சு வெச்ச எனம் நம்முளுது!

'இவுஹ சொன்னதுலேர்ந்து, அங்கே நெலமை சரியில்லை; இப்ப நாம சண்டை போடக்கூடாது'ன்னு தொண்டமானும் அப்போதிக்கு நிப்பாட்டிர்றானாம் சண்டைய!

இதுல வள்ளுவரு எங்கே வராருன்னு கேக்கிறியா!?

அவரும் இந்த அம்மா காலத்துல இருந்தவர்தானே!

அவருக்கும் இது தெரிய வருது!

அவரு இதை ஒரு குறள்ல சொல்லணும்னு நெனைக்கறாரு!

"படைச்செருக்கு"ன்னு ஒரு அதிகாரம் எளுதறாரு!

அதுல மொதக் குறளா இதை வைக்கறாரு!

"என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் பலர் என்னை
முன் நின்று கல்நின் றவர்." [771]

"ஏ எதிரிங்களே! என் தலைவன் முன்னே நின்னு, போர் செஞ்சு, மடிஞ்சு, அவனவனுக்குக் ஸமாதி கட்டிகிட்டவங்க பல பேரு!
ஆனதுனால, என் தலைவன் முன்னே நிக்காதீங்க!"

அப்படீன்னு அம்ஸமா ஒரு குறளு, அதுவும் இது எங்கினாச்சும் நமக்கு மறந்து பூடுமோன்னு நெனச்சி, மொதக் குறளாவே எளுதியிருக்காரு!

அதே மாரி,.....நீயும் போயி, நம்ம பெருமைய ஊருக்கெல்லாம் ஸொல்லு!"


என்று சொல்லியபடி நகார்ந்தான் மயிலை மன்னார்!

'அது ஸரி மன்னார்! அவ்வையார் பாடினது என்னன்னு ஸொல்லவே இல்லியே' எனக் கேட்டேன்!

"அதுவா! பொறநானூறுல 95ஐப் பாருன்னு கண் சிமிட்டியவாறே ஸொல்லிவிட்டுப் போய்விட்டான் மயிலைமன்னார்!

அவசர அவசரமா வீட்டுக்கு வந்து, புஸ்தகத்தைப் புரட்டினேன்!

இதோ அந்தப் பாடல்!



"இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே, அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
கொல் துறைக் குற்றிலமாதோ -- என்றும்,
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே."


இதோ நண்பர்களே! உங்கள் பார்வைக்கும் இது!

நன்றி!



Read more...

Saturday, February 17, 2007

ஆத்திகச் சுடர்!

ஆத்திகச் சுடர்!

இந்தச் சுடரை ஏற்றி வலையுலகில் பரவவிட்டு, இன்று சுடராகிப் போன கல்யாணுக்கு அஞ்சலி செலுத்தி இதனைத் தொடர்கிறேன்.

நண்பர் விடாது கருப்பு சதீஷ் இதை எனனிடம் அனுப்பி வைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே!

அவர் சொன்னது போல என் கருத்தை மற்றவரிடம் திணிக்க அல்ல: ஆனால் சொல்லிடவே நான் வலைப்பூவை ஆரம்பித்தேன்.

எதையும் யாரிடமும் திணிக்க எவராலும் முடியாது என்பது என் கருத்து.

நம் கருத்துகளை நம்மால் சொல்லத்தான் முடியுமே தவிர, எவரையும் அதனை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது.

முடிந்தால் மற்றவரைக் கோபப்பட வைக்க முடியும்; வருத்தப்படவைக்க முடியும்; அவர் கவனத்தை ஈர்க்க முடியும்.

ஆனால், புரிவது அவரவரிடமே நிகழ முடியும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்...........

' குதிரையை தண்ணீர்த்தொட்டிக்கு கொண்டு செல்லத்தான் நம்மால் முடியும்; குதிரைதான் குடிக்க வேண்டும்.... முடியும்.'

இதனை உணர்ந்து, தம் கருத்துகளை அடுத்தவரைப் பழிக்காமால், அவர் மனதை நோக வைக்காமால் தம் கருத்துச்சுடரை ஒவ்வொருவரும் ஏற்ற வேண்டும், வலைப்பூவிற்கு வருவது ஒவ்வொருவருக்கும் ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வைப்பது வலைப்பதிவார்களின் தலையாய பொறுப்பு எனக் கூறி, இனி எனக்கு அளிக்கப்பட்ட கேள்விகளுக்கு வருவோம்!!


அதற்குமுன், சிவாராத்திரியை முன்னிட்டு, சில "ஆத்திக" நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், உடனே இந்தச் சுடரைத் தொடர முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!

இப்போது என் பதில்!

1)ஆன்மீகத்தினை நீங்கள் அதிகம் விரும்புவதாகத் தெரிகிறது. உலகில் இவ்வளவு இந்துக் கடவுள்கள் இருக்க அதிலும் குறிப்பாக முருகனைத் தாங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

இது மிகவும் சுலபமான கேள்வி!

நான் பிறந்தது ஒரு தெய்வ நம்பிக்கை உள்ள குடும்பத்தில்! என் தந்தை ஒரு முருக பக்தர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது முருகன், வள்ளி, தெய்வானை உருவச்சிலைகளுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்வார்.

பூஜைக்கு வர வேண்டும்; அனைவரும் அருகில் உட்கார்ந்து கலந்து கொள்ள வேண்டும் என ஒருபோதும் வற்புறுத்தியதில்லை.

ஆனால், பூஜை முடியும் சமயம், ஒரு மணி அடிப்பார்! யார் எங்கு இருந்தாலும், என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அப்படியே அதை விட்டுவிட்டு, தட தடவென ஓடி அவரிடமிருந்து விபூதி பெற்றுக் கொள்ள மட்டும் மறந்துவிடக் கூடாது! வராதவருக்கு அன்று தர்ம அடி நிச்சயம்!

நான் ஒரு நாளும் அடி வாங்கியதில்லை! ஏனென்றால், நான் ஒருவன் தான் அவர் பூஜை ஆரம்பித்த முதல் கடைசி வரைக்கும் அவரருகே அமர்ந்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவேனே!

ஆம்! அவர் பூஜை செய்யும் அழகும், முருகனை ஆராதிக்கும் பாங்கும் என் மனதைக் கவர்ந்தது. முருகன் என் மனதை ஆட்கொண்டான்! நான் முருகன் அடிமை ஆனேன்!

எல்லாத் தெய்வங்களும் எனக்குப் பிடிக்கும் என்றாலும், முருகனே என் சொந்தக் கடவுள்!

ஒரு சின்ன தகவல்!

அந்த முருகன் இப்போது என்னிடம்தான் இருக்கிறது! சஷ்டி, கிருத்திகை என பூஜை அவருக்கு கோலாகலாமாய் நடந்து வருகிறது!

2)வலைப்பதிவு உலகில் தற்போது எங்கு பார்த்தாலும் போராக இருக்கிறது. முதலில் பார்த்தீர்கள் என்றால் பார்ப்பனர் - திராவிடர் பிரச்னை. அதன்பின் விடாது கருப்பு- விட்டது சிகப்பு போர். அடுத்து பார்த்தீர்கள் என்றால் ஆரிய திரட்டி - திராவிட திரட்டி சண்டை. அடுத்து டோண்டுவின் பன்முகங்களை கொசுபுடுங்கி என்பவர் தோலுரித்தது. இதற்கெல்லாம் குழுமனப்பான்மைதான் காரணம் என்கின்றனர் பலர். ஒற்றுமை என்பது இனி இல்லையா? இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மேலும் முகம் மூடி எழுதும் பதிவர்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உட்தாரணமாக விட்டது சிகப்பு, முகமூடி, கொசுபுடுங்கி, குசும்பன், இட்லிவடை, வந்தியத்தேவன். இது ஆரோக்கியமான சூழலா?

குழு மனப்பான்மை என்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல். தாவரங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாமே ஒரு குழுவாய்த்தான் வாழ்கின்றன. ஏன்... மனிதனே முதலில் தனித்தனியாய் இருந்து, பின்னர், ஒரு குழுவாய்ச் சேர்ந்து வாழ வேண்டியகட்டாயம் ஏற்பட்டதாகத்தான் வரலாறு சொல்லுகிறது.


புதிதாய்., முன்பின் தெரியாத,அமெரிக்காவுக்கு வந்த போது ஒரு இந்திய முகத்தைப் பார்க்க மாட்டோமா எனத்தான் நான் தேடினேன்.

அதுவே ஒரு தமிழ் முகமாயும் இருந்தபோது, என் மகிழ்ச்சி இன்னும் அதிகமானது. இதுதான் மனித இயல்பு.

இதுவே நம் வலைபூவிலும் நிகழ்கிறது என நினைக்கிறேன்.

இது ஆரோக்கியமான சூழலா, இல்லையா என்பது கேள்வி அல்ல இப்போது.

இதனை உணர்ந்து எவ்வாறு நடந்து கொள்வது என்பதே நம் அனைவரின் செயலாக இருக்க வேண்டும்.

அநேகமாக இங்கு எல்லாரும் ஏதோ ஒரு வகையில் 'முகம் மூடி'த்தான் எழுதுகின்றனர். இதில் இவர், அவர் எனப் பிரித்துப் பார்ப்பது தேவையில்லை எனக் கருதுகிறேன்.

சதீஷ் என்ற நீங்கள் 'விடாது கருப்பு' என்றும், சங்கர்குமார் என்ற நான் 'எஸ்கே' என்று எழுதுவதும், முகத்தை மூடி 'பூனை, முருகன்' போட்டுக் கொள்வதும் இது போல ஒன்றே!

இங்கு எல்லாரும் முகமூடிகள் தான்!


3)சென்ற நூற்றாண்டில் திரிக்கப்பட்ட இந்திய வரலாறுகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? விதிக்கப்பட்ட என்றால் அதன் பொருள் என்ன? படிக்காத உயர்ந்த வகுப்பினர் தலித்துகளைப் பீ அள்ளினால் அது பாவமா?

ஐந்து கேள்விகள்தான் கேட்க வேண்டும் என்பது சுடரின் விதி என்பதால் ஒரு கேள்வியிலேயே மூன்று கேள்விகளைத் "திணித்த" உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன்!:))

இது மூன்றுக்கும் ஒரு பொதுவான பதிலை அளிக்கவே நான் விரும்புகிறேன்.

சென்ற நூற்றாண்டை விட்டு இன்னும் சற்றித் தள்ளிப் போய் பிந்தைய வரலாற்றைப் பார்த்தால், நாம் எல்லாருமே ஒன்றாகத்தான் இருந்திருக்கிறோம்.

அதனைப் பிரதிபலிக்கும் வகையாகவா இன்றையப் பதிவுகள் இருக்கின்றன?

நீங்கள் முந்தையக் கேள்வியில் சொன்னது போல, எங்கு பார்த்தாலும் விருப்பு, வெறுப்பு, குழு, சண்டை... இவைதான்!


திரிக்கப்பட்டவை எல்லா இடங்களிலும், வல்லமை படைத்த எல்லாராலும் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நம் மனமே நமக்கு நிலை!
அதன்படி வாழவே நான் முயற்சித்து வருகிறேன்.

"விதிக்கப்பட்ட" என எதை நீங்கள் கேட்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த "விதிக்கப்பட்ட" சிலவற்றைச் சொல்லுகிறேன்.
உங்களுக்குப் புரிகிறதா எனச் சொல்லுங்கள்.

என் பிறப்பு நான் கேட்டு வந்ததிலை என்பதால், அது 'விதிக்கப்பட்டது'.
எவருக்குப் பிறக்க வேண்டும் என்பதும் நான் கேட்டு வராததால், அதுவும் 'விதிக்கப்பட்டது'.
எந்த ஊரில், நாட்டில், மொழியில் பிறக்க வேண்டும் என்பதும் 'விதிக்கப்பட்டதே'... நான் கேட்டு வராததால்!
'குலம்', 'சாதி', 'இனம்' இவையெல்லாமும் நான் உருவாக்காததால், அதில் எதாவது ஒன்றில் நான் வந்து உதித்ததுவும், 'விதிக்கப்பட்டதே'!
இதில் எதுவும், எவரும் குறைவில்லை என்பது என் கருத்து!

இவ்வளவு பலவும் 'விதிக்கப்பட்டதாய்' இருப்பினும், நான் எவ்வாறு இருக்க வேண்டும், மனிதத்தை, மானுடத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்கு எவராலும் 'விதிக்கப்படாதது'!


இதனை உருவாக்குவது நான் ஒருவன் மட்டுமே!


மேற்கூறிய இவற்றுக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பினும், என்னளவில் மட்டுமே, எனக்குள் மட்டுமே இவை பெருமை பெறுகின்றன!
இவற்றை நான் போற்றுகிறேன்......எனக்குள் மட்டுமே....என் வீட்டுக்குள் மட்டுமே.... வெளியில் அல்ல!


இவற்றை வெளியில் பாராட்டும் போது, இதனைக் கொண்டு அடுத்தவரை எடை போட நான் முயலும் போது, நான் இந்தப் பெருமைகளை எல்லாம் இழக்கிறேன் என்பதினை நான் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறேன் .

எவர் மலத்தையும் எவர் அள்ளுவதும் பாவமில்லை!
அள்ளாமல் விட்டால்தான் பாவம்!
மனித குலமே நாறிப் போகும்!
யாராவது ஒருவர் அள்ளத்தான் வேண்டும்!

இதில் தலித் என்ன, செட்டியார் என்ன, முதலியார் என்ன, நாடார் என்ன, பார்ப்பான் என்ன?
எல்லாம் ஒரே மலம்தான்!


4)தாங்கள் மருத்துவத் துறையில் இருப்பதாகச் சொன்னீர்கள். ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமுன் கடவுளை வேண்டுவீர்களா? அல்லது தங்களின் தொழிலின் மீதுள்ள திறமையை முழுவதுமாக நம்புவீர்களா?

என் திறமை இறைவன் எனக்குக் கொடுத்தது! எத்தனையோ மருத்துவர் இங்கிருக்க, எனை நாடி வந்த நோயாளி நலம் பெற வேண்டும் என என் முருகனை வேண்டிக்கொண்டு என் திறமையைக் காட்டுவேன்!

5)பிராமனர்கள் பொதுவாக தமிழை விட சமஸ்கிருதம் என்ற தேவபாஷையைத்தான் அதிகமாக வாழ்த்துவதாகவும் பாராட்டுவதாகவும் பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. சமஸ்கிருதம் வாழ்க என்று சொல்லும் வலைப்பதிவர்கள் தமிழில் ஏன் வலைப்பதிவு செய்ய வேண்டும்? சமஸ்கிருதத்தில் வலைபதிய வேண்டியதுதானே? எனக்குத் தெரிந்து தாங்கள் நடுநிலையாளர். நல்ல சிந்தனையாளர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ் என்று சொன்னார்கள் பெரியவர்கள். தமிழை நீசபாசை என்பவனின் நாவை அறுக்காமல் பல பதிவர்கள் வடமொழியை உயர்த்திப் பேசுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

உங்கள் கேள்வியே தவறு எனக் கருதுகிறேன்.

ஒருவருக்குத் தாயை விட தந்தையை அதிகமாகப் பிடிக்கும், அல்லது தந்தையை விட தாயை அதிகம் விரும்புவார்கள். இதனால், அடுத்தவரை இழிவாகக் குறிப்பதாக எண்ணுவது மதியீனம்.

ஸம்ஸ்கிருதத்தை ஒருவர் விரும்புவதால் அதனைக் கொண்டு அவரது தமிழ்ப்பற்றை கேள்வி கேட்ட்பது, தாயைச் சந்தேகிப்பதை ஒக்கும் என நான் கருதுகிறேன்.

'நீசபாஷை என்பது வடமொழி........ 'காட்டுமிராண்டி மொழி' என்பது தமிழ். ....அவ்வளவுதான் இதில்!


இப்படிச் சொன்னவர் எல்லாரையும் பார்த்து சிரித்து விட்டு அப்படியே போகக் கற்றுக்கொண்டால் வாழ்வு மகிழ்வாய் இருக்கும்!

உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு முன், சுடரின் விதிமுறைகளைப் பார்த்தேன்.. அதில், ஒன்பதாவது விதியாய் இப்படிச் சொல்லி இருக்கிறது!

ஆனால், கடந்த சில சுடர்கள் இதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை.


இச்சுடரை ஏற்றி, நம் மீது நம்பிக்கை வைத்து, இது மனிதநேயம் மலர வழி வகுக்கும் எனச் சொல்லி மறைந்த அம்மாமனிதனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையாய் இசுசுடரை நம் ஆன்மீகச் செம்மலாம் குமரனுக்கு அனுப்பி மனிதம் வாழ வகை செய்ய வேண்டுமாய்க் கேட்டு அனுப்புகிறேன் இந்த சுடர் .... ஆத்திகச் சுடர்....... எங்கும் பரவட்டும்!

அன்பு குமரனுக்கு என் ஐந்து கேள்விகள்!

1. நீங்கள் பார்ப்பனர் அல்ல எனத் தெரியும் எனக்கு. உங்களை ... உங்கள் சாதியினரை ஏன் பார்ப்பனரோடு வைத்து சதிராடுகின்றார்கள்? சௌராஷ்ட்ரர்களுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு?.

2.. திருப்பரங்குன்ற முருகனை வைத்து ஒரு கவி பாடுங்களேன்!

3. கூட்டு வலைப் பதிவைத் தவிர, தனியே வலைபதிவதில்லை என்ற முடிவை எப்போது மாற்றப் போகிறீர்கள்? உங்களை ரசிக்கும் வலை ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

4. சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

5. "ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா! மனம் சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டதடா" என எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?


ஆத்திரச் சுடர் அடங்கி, ஆத்திகச் சுடர் ஒளிரட்டும்!
அன்பே சிவம்!

http://karuppupaiyan.blogspot.com/2007/02/blog-post_16.html
http://www.thenkoodu.com/sudar.php

Read more...

Monday, February 12, 2007

இறுதிப் பரிசு!


"இறுதிப் பரிசு!"
[ஒரு கண்ணீர் அஞ்சலி]

உன்னை எனக்கு முழுதுமாய்த் தெரியாது
உன் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்
மரத்தடியில் சாகரன் என ஒருவர் எழுதுகிறார் எனத் தெரியும்
அங்கங்கே கல்யாண் என பெயர் அடிபட்டிருக்கிறது
அது தவிர உன்னைப் பற்றி ஒன்றுமே தெரியாது!

இன்று நீ இறந்து விட்டாயாம்
குளிருது எனச் சொல்லி மாத்திரை சாப்பிட்டவன்
வாந்தி எடுத்துவிட்டு படுத்தாயாம்
அன்பு மனையாள் எழுப்ப கண் விழிக்க மறந்தாயாம்
அவ்வளவுதான் தெரியும்

அடுத்து..........
தேன்கூடு நிறுவனர் கல்யாண் என்பவர் மறைந்ததாகச் செய்தி
அருமையான நண்பரை இழந்தேன் என அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பதிவுகள்
அடுத்தடுத்து அவை எண்ணிக்கையில் அதிகமாகின்றன
தமிழ்ப்பதிவுலகமே ஒன்று திரண்டு புலம்ப ஆரம்பிக்கிறது

என்னை ஏன் அது இத்தனை அளவு பாதிக்கிறது?
எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?
என் கண்கள் ஏன் குளமாகின்றன?
சாதாரணமாக மரணங்களால் பாதிக்கப்படாத நான் ஏன் அழுகிறேன்?
உன் மரணம் என்னை ஏன் உலுக்குகிறது?

உனக்கு இருபத்தெட்டு வயது என்பதா?
இல்லையே!
முப்பது வயதில் என் அக்கா மகன் மறைந்திருக்கிறானே!
இளம் மனைவியுடன் இரு குழந்தைகளை விட்டு அவன் சென்றானே!
அப்போது கூட இவ்வளவு கலங்க வில்லையே!

சாதனையாளன் ஒருவன் சிறுவயதில் மறைந்ததா?
இருக்கமுடியாது.
வருத்தமளிக்கும் விஷயம்தான் என்றாலும் இது ஒன்றும் புதிதில்லையே
இராமானுஜம் முதல் எத்தனையோ சாதனையாளர்கள் அல்பாயுளில் போயிருக்கிறார்கள்
இதுவும் அதில் இன்னொன்று என ஏன் என்னால் நினைக்க்முடியவில்லை

ஏன் இப்படி உன்னைப் பற்றிய எல்லாப் பதிவுக்கும் சென்று வருகிறேன்?
எல்லாப் பதிவினிலும் ஏன் பின்னுட்டமிட்டு வருகிறேன்?
நீ என்ன எனக்கு சொந்தமா இல்லை பந்தமா?
உனக்கும் எனக்கும் என்ன கணக்கு?
எனக்கு ஏன் இந்தக் கண்ணீரும் கவலையும்?

பரஞ்சோதி உனக்குக் கடன் பட்டிருக்கிறார்
முத்துகுமரனும் அப்படியே சொல்லுகிறார்
அவரைத் தொடர்ந்து இன்னும் பலர் சொல்கின்றனர்
எனக்கு வலைத்தளம் அமைத்துக் கொடுத்தாய்
எனக்கு இன்னின்னது செய்தாய் என!

உன் முகம் கூட எனக்குத் தெரியாதே
உன்னிடமிருந்து ஒரு மடல் கூட வந்ததில்லையே
ஒரு பதிவைக் கூட பாராட்டியோ, விமரிசத்தோ இல்லையே
எனக்கும் நீ பின்னூட்டம் இட்டதில்லையே
பின் ஏன் இப்படிக் கலங்குகிறேன்?

இரண்டு நாட்களாய் யோசிக்கிறேன்
எப்படி எப்படியோ சிந்திக்கிறேன்
எதுவும் புரியாமல் விழிக்கிறேன்
பொருளே இல்லாத சோகம் இதுவென
முடிவெடுக்கும் வேளையில் பொறியொன்று தட்டியது!

பதிவுலகில் என்னைப் பாராட்டியவர் பலர் உண்டு
தூற்றியவரும் 'அதிகப்' பலருண்டு!
எதையும் பெரிதென எண்ணாமல் எழுதி வருகிறேன்
ஆனால், என்னையும் பொருட்டென மதித்து
எனக்களித்தாய் நீ ஒரு பரிசு!

அதுவே நீ அளித்த கடைசிப் பரிசு!
இறுதித் தேன்கூடு போட்டியில் இறுதிப் பரிசு!
ஆம்!முதல், இரண்டாம் பரிசுக்குப் பின்னர்
இறுதிப் பரிசு மூன்றாம் பரிசுதானே!
அதுவே நீ அளித்த கடைசிப் பரிசு!

கடன்பட்டோர் பலர் நடுவே
கைம்மாறு செய்திடக் காத்திருப்போர் நடுவே
கண்ணீருடன் நட்பினை நினைந்திருப்போர் நடுவே
கவினுறு எழுத்தை உணர்ந்திருப்போர் நடுவே
கடைசிப் பரிசுடன் வலம் வருகிறேன் நான்!

செத்தும் கொடுத்தான் சீதக்காதி
கொடுக்காமல் போனவர் பல பேர்
இருந்தும் கொடுக்காதவர் எத்தனையோ
இருக்கும் வரை அனைவருக்கும் கொடுப்பவர் ஒரு சிலரே
அதில் ஒன்று, அதுவும் கடைசி ஒன்று எனக்கு!

இதுதான் உலுக்குதோ என்னை
இதுதான் கலக்குதோ என்னை
இருக்கலாம்; இருக்கணும்!
பார்க்காமலேயே, பழகாமலேயே
உன் பரிசினைப் பெற்றவன் நான்!

இன்று நீ பிரிந்தாலும்
எமை விட்டுச் சென்றாலும்
உன் நினைவு என்றுமே
எனை விட்டு அகலாது
உனை என்றும் மறவாது!

உனை இழந்து வாடுகின்ற
அத்துணை பேருக்கும் என் இரங்கல்!
நான் வணங்கும் முருகனை வேண்டுகிறேன்
உன் குடும்பம் நலம் வாழ வாழ்த்துகிறேன்
முருகனருள் முன்னிற்கும்!

---------------------------------------------------------------------

Read more...

Thursday, February 08, 2007

நினைவுகள் இனியவையா?



நினைவுகள் இனியவையா?






இருக்கும் போது எனக்கெனவே
இனிய நினைவு தந்தவளே!
விருப்பமாய் என்னுடன் என்றும்
துணையென வந்தவளே!

நீயில்லா இந்நேரம்
இன்ப நேரம்!

காணுமிடமெங்கும் என்னுடனே
நீக்கமற நிறைந்தவளே!
வாழும் நாள் வரைக்கும்
என் நினைவில் கலந்தவளே!

நீ திரும்பும் நாள்வரைக்கும்
நான் பசியால் வாடுவேன் என
வித விதமாய் செய்து வைத்த
உணவினிலே உனைப் பார்க்கிறேன்!

உன்னன்பை அதில் கண்டு
உணவாறி முன்னறை வந்தால்
தொலைக்காட்சிப் பெட்டியினில்
உன் முகமே தெரியுதடி!

எங்கெங்கு பார்த்திடினும்
உன் முகமே தெரியுதடி
வீம்பாக உனை மறக்க
முயன்றாலும் முடியலைடி!

இருந்தபோதும் எனை நிறைத்தாய்
உன்னன்பால் எனை அணைத்தாய்
விரும்பியுனை நினைக்கின்றேன்
உனையெங்கும் பார்க்கின்றேன்!

போனாலும் இருந்தாலும்
நீயென்றும் என்னவளே!
வாணாள் முடியும்வரை
நீயென்றும் என்னவளே!

ஒரு திங்கள் எனைவிட்டு
போனதற்கே இது போல
மகிழுகிறேன் நானின்று
உனை என்றும் மறவாமல்!

என் நினைவை உன்னுடனே
எடுத்தங்கு சென்றிட்ட
உன் மனதை நானறிவேன்
நானங்கே இருப்பதினால்!

நினைவில்லா மனமிங்கே
களிப்புடனே சிரிக்கிறது!
கனவினிலும் நனவினிலும்
களித்திங்கே வாழ்கிறது!

நினைவுகள் இனியவையா?
நினைவெல்லாம் நனவாக
நிகழ்வெல்லாம் நினைவாக
நிகழ்கையிலே ஏது பிணை?

எல்லாம் சுகமே!

Read more...

Thursday, February 01, 2007

"என்" வலது கை

"என்" வலது கை

அயர்ந்து உறங்கிய நடுநிசியில்
அடி ஒன்று விழுந்தது போல் உணர்வில்
சட்டென்று கண் விழித்தேன்.

கனமாக ஏதோ ஒன்று எனை அழுத்த
உறக்கம் கலைந்த சினத்துடன் பார்த்தால்
என்னவளின் வலது கை என் மீது!

எரிச்சலுடன் அதை விலக்க முனைகையில்
கட்டையான கையைத் தள்ளுகையில்
விலக மறுத்து இன்னும் அழுத்தியது!

என் மனதில் ஏதோ நினைவுகள்!.......

கணநேரச் சலனத்தில் ஆவலுடன் பற்றிய கை
இனி என்றும் விடமாட்டேன் என வாக்களித்த கை
மணம் புரிந்தபோது மனமாரப் பிடித்த கை
தினமும் காலையில் தலை கோதி எனை எழுப்பிய கை
சனிக்கிழமை எனை அமர்த்தி எண்ணை தேய்த்த கை
வட்டிலிலே சோறெடுத்து ஆசையுடன் பரிமாறிய கை
கட்டிலிலே என்னோடு சாகசங்கள் பல செய்த கை
வீட்டினிலும் வெளியினிலும் என்னுடன் இணைந்த கை
எப்போதும் பாசத்துடன் எனை அணைத்த கை
அவ்வப்போது கோபத்துடன் எனை நோக்கி சுட்டிய கை
எப்போதாவது என்கை ஓங்கிட அதைத் தடுக்க முனைந்த கை
ஆதரவாய்ப் பலருக்கும் பிரசவம் பார்த்த கை
ஆசையாய் அனைவருக்கும் அன்னமிட்ட கை


விபத்தொன்றில் அடிபட்டு, நரம்பொன்று அறுந்ததால்
இன்று...வலுவிழந்து, உணர்விழந்து, செயலிழந்து
ஒன்றுக்கும் உதவாமல் போன வலது கை.

சற்றேனும் தளராமல், குறையென்று கருதாமல்
பிறர் உதவி நாடாமல், தன் செயலைத் தான் செய்து
எதிர் நீச்சல் போட்டுவரும் அவளது வலது கை!

அடியென உணர்ந்தது இனித்தது
ஆதரவாய்ப் பற்றினேன்
ஆசையாய்த் தடவினேன்
என்னவளின் வலது கையை!

........அப்படியே உறங்கிப் போனேன்!






Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP