Monday, October 13, 2008

"கேப்டனுக்கு ஒரு கடிதம்"

"கேப்டனுக்கு ஒரு கடிதம்"
அன்புள்ள "கேப்டன்" பிரபாகரனுக்கு,

வணக்கம்.

தமிழீழப் பிரதிநிதியாய் இன்றைக்கும் முதலாய் விளங்கும் ஒரு தலைவன் நீங்களே என்பதை எவராலும் மறுக்க முடியாது.
உங்கள் எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் ஒரு உண்மை இது!

பலவித அடக்குமுறைகளைச் சந்த்தித்த தமிழ் ஈழ மக்கள் வேறு வழி இல்லாமல், ஆயுதம் தூக்க நேர்ந்ததும், அதற்கு நீங்கள் ஒரு தலைமை தாங்க நேரிட்டதும் சரித்திர உண்மைகள்!

20 ஆண்டுகளுக்கும் மேலாய், ஒரு இயக்கத்தைக் கட்டுக் கோப்பாக நடத்திவரும் உங்கள் தலைமையின் மீது தமிழீழ மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை தொடர்ந்து கவனித்து வருபவன் நான்!

என்ன சொன்னாலும், அது தன் உயிரையே பணயம் வைக்கும் ஒரு செயல் என்றாலும், தலைவன் சொன்னான் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் அதை அப்படியே சிர மேற்கொண்டு நடத்தி வருவது, நிகழ்ந்த, நிகழ்கின்ற பல செயல்பாடுகளின் மூலம், நிறைவாகவே உணர்ந்திருக்கிறேன்.

அதனால்தான் உங்களுக்கு இந்த மடலை எழுதத் துணிந்தேன்.

இரு தலைமுறைகள் அழிந்து போயின அல்லது புலம் பெயர்ந்து போயின!
இயக்கத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்தாலும், அவர்களின் வாழ்க்கை ஈழத்தோடு ஒன்றமுடியாமல் போனதுதான் பெரிய அவலம்.

புலம் பெயர்ந்த மக்களின் குழந்தைகள் வேறொரு வாழ்க்கை முறையில் ஒன்றிப் போய், நீங்கள் நடத்தும் போராட்டத்தின் கருப்பொருளை முழுதுமாக உணர முடியாமல், தார்மீகமாக ஆதரிக்கும் நிலையையே இப்போது காண்கிறேன்.

அவர்களின் அடுத்த தலைமுறை இதை உணரக் கூட முடியுமா என்பதே என் அச்சம்.

விடுதலைப் புலிகளின் சில செயல்பாடுகளை அவர்களில் சிலர் தீவிரவாதத்துடன் ஒப்பிட்டு விலகிப் போகும் அபாயம் இருப்பதை நான் காண்கிறேன்.

இதை ஒப்புக்கொள்ள நீங்களோ, அல்லது உங்கள் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ மறுக்கலாம்.

ஆனால், ஒரு மூன்றாவது மனிதனாக, இதன் மேல் நம்பிக்கை வைத்து, இது விரைவிலேயே வெற்றி பெற வேண்டும் என வேண்டும் என் போன்ற பலரின் விருப்பமும், நீங்கள் உங்களது வழிமுறைகளை ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன்.

உங்கள் நோக்கம் நியாயமானது.
அது நிறைவேற வேண்டும்.

அதற்கான வழிமுறைகளைக் கொஞ்சம் மாற்ற முயலலாமே!

வன்முறை என்றுமே வென்றதில்லை!
இதை சிங்களவர்க்குப் புரிய வையுங்கள்!

சொல்லிச் செல்வது சுலபம்; அனுபவிப்பவர்க்குத்தான் அது தெரியும்.
இருப்பினும், ஒரு இனம் அழிய நீங்களும் காரணமானீர்கள் என வரலாறு உங்களைப் பேச வேண்டாம் என்பது என் விருப்பமும், ஆசையும்!

என்ன செய்ய வேண்டும் எனச் சொல்ல எனக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை!

ஆனால், தமிழர் வாழவேண்டும் எனச் சொல்ல உரிமை இருக்கிறது!

தமிழர்களைக் காக்கும் தற்பாதுகாப்பு யுத்தத்தில் ஈடுபடும் அதே நேரத்தில், ஈழத்தில் அமைதிக்கு வழிவகுக்கும் எந்தவொரு சிறிய நடவடிக்கைக்கும் உங்களது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும் என்னும் ஒரு வேண்டுகோளை இந்த நேரத்தில் உங்களுக்கு விடுக்கிறேன்.

சொல்லுவதைச் சொல்லிவிட்டேன்!
செய்வது உங்கள் கையில்!

தமிழீழம் கிட்ட என் முருகனை வேண்டுகிறேன்!

வணக்கம். நன்றி.
*******************************
[நாளை.... இந்தியப் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் ஒரு கடிதம்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP