"பரிசேலோர் எம்பாவாய்" [7]
"பரிசேலோர் எம்பாவாய்" [7]
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7
தோழியர்: அடி பெண்ணே! அலுப்பாய் இருக்குதடி உன்னோடு! இதுவும் நீ கொண்ட
குணங்களில் ஒன்றோ? எத்தனையோ பல தேவர்களால் நினைப்பதற்கும் கூட
அரிதானவனாம், பண்பாளனாம் சிவபெருமானின் சங்கொலிகள் முதலான
சிவச் சின்னங்களைக் கேட்ட மாத்திரமே 'சிவ சிவ" எனச் சொல்லிடுவாய்!
"தென்னாடுடைய சிவனே" எனும் சொல் சொல்லி முடிக்கும் முன்னரே
தீயிலிட்ட மெழுகு போல உருகிடுவாய்!
எங்கள் பெருமானை, "என் அரசே! அமுதம் போலும் இனியவனே!"
என்றெல்லாம் ப்ல்வேறு விதமாய்ப் போற்றிச் சொல்லுகிறோம்!
இன்னமும் எழுந்திராமல் தூங்குகிறாயே! வீம்பாக கண்ணை மூடிக்கொண்டு
தூங்குவது போல் நடிக்கும் கடுநெஞ்சம் கொண்டவர் போன்று
ஓரசைவும் இன்றிக் கிடக்கின்றாயே! அப்படியாகிய உன் தூக்கத்தின்
தன்மைதான் என்னவோ? சொல்லடி என் பெண்ணே!
அருஞ்சொற்பொருள்:
உன்னல் - நினைத்தல்; இருஞ்சீர் - மிக நேரிய தன்மை; சின்னங்கள்
- சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் - மன்னன்;
வாளா - சும்மா; பரிசு - தன்மை.