Thursday, January 25, 2007

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]




"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]

"பாதி தண்ணிதான் பூண்டிக்கு வந்துதுன்னு சொன்னேனா" என்றவாறு ஒரு டீயை உறிஞ்சிக்கொண்டே தொடர்ந்தான் மயிலை மன்னர்.

"ஏண்டா தண்ணி வரலை! என்ன ஆச்சுன்னு பாக்கப் போனாங்க நம்ம ஆளுங்க.

நல்லவேளை, போன தபா மாரி, ஆரும் தண்ணியைத் திருடலை.

சிமிண்ட்டுகரை வளியா தண்ணி ஊறி, வெளியே போவுது.

ஆஹா! சிமிட்டு [] வளியாக் கூட தண்ணி கசியுமேன்னு யோசிக்கலியேன்னு தெகைச்சாங்க.

இப்ப இன்னா பண்றது! இதுக்கு இன்னா வளின்னு ஆலோசனை பண்ணினாங்க.

சிமிண்டுக்கு பின்னாடி, கரை வலுவா இருந்தா தண்ணி போவலை; ஆனா, கரை 'பொத-பொத'ன்னு இருந்தா, தண்ணி கசியுது ரொம்ப-ன்னு தெரிஞ்சுது.

அந்த எடத்துல மட்டும் ஒரு கெமிக்கல் கலந்த பாலிமர் ஷீட்டை போட்டா அது சிமிண்டோட ஒட்டிகிட்டு இன்னும் வலுவாயிரும்னு புரிஞ்சுது.

ஆனா, இன்னும் அதிக செலவாகும்.

இன்னா, அதிகம் இல்ல.

ஒரு 90 கோடி ரூபா மேல!

ஏற்கெனவே 150 கோடி ஆயிப் போச்சு.

ட்ரஸ்டு ஆளுங்க நேரா சாமியப் போய் பார்த்தாங்க!

"செலவப் பாத்தா ஆவாது! இன்னா செய்யணுமோ செய்யுங்க"ன்னு சாமி சொல்லிட்டாரு.

அவ்ளோதான்!

எல்லாம் மளமளன்னு நடந்துது.

ஜூன் மாசம், 3-ந்தேதி, 2005-ம் வருசம்!
நாயுடு போயி, ராஜசேகர ரெட்டி வந்துட்டாரு சீஃப் மினிஷ்டரா!
அவரை வெச்சு ஒரு விளா வெச்சு ஷீட்டு போடற வேலய ஆரம்பிச்சாங்க!

அதே வருசம், நவம்பர் மாசம் சாமி பொறந்த நாளன்னிக்கு[23] தண்ணிய தொறந்து வுட்டாங்க!

"கிருஸ்னாம்மா" சும்மா கலகலன்னு சிரிச்சுகிட்டு குலுங்கி, தளுக்கிகிட்டு ஒரு ராசபாட்டையில வர்ற மாரி ஓடி வருது!



29-ந்தேதி பூண்டிக்கு வருது!

அல்லாருக்கும் சந்தோசம்!

12 டிஎம்சி தண்ணி வருது!

2005லியே தண்ணி வந்திருச்சின்னா இப்ப எதுக்கு விளா எடுத்தாங்கன்னு கேக்கறியா?

தண்ணி வந்தவொடனியே, ஒரு விளா எடுக்கணும்னு நெனச்சாங்க!

ஆனா, அப்ப இங்க இருந்த அம்மா அது முக்கியம்னு நினைக்கலை!

ஆட்சி மாறிச்சு!

கருணாநிதி வந்தாரு!

பத்து வருசம் களிச்சு சாமியும் இப்பதான் சென்னைக்கு வந்தாரு.

68லிருந்து எப்பிடியாவுது சென்னைக்கு குடிதண்ணி கொண்டு வரணும்னு இத்தயே நெனைச்சுகிட்டு இருந்த நம்ம மொதலமைச்சரும், நம்ம தமிள்நாட்டு மக்களோட நன்னியக் காட்ட இதுதான் சமயம்;
அது மட்டுமில்ல, மத்த 3 மொதலமைச்சருங்களையும் இதுக்கு ஒத்துக்க வைக்கவும் இதுதான் சமயம்னு முடிவு பண்ணி ஒரு விளாவுக்கு ஏற்பாடு பண்ணினாரு.

சாமியும் ஒத்துகிட்டாரு.

மத்ததெல்லாம் ஒனக்கு தெரியும்!:)

தமிளனோட நன்றியறிதலக் காட்டின நம்ம மொதலமைச்சருக்கு நெசமாவே ஒரு பெரிய்ய்ய 'ஓ' தான் போடணும்!

ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்.

நல்லபடியா நமக்கு தண்ணி கெடைக்கணும்னு நெனச்ச ஆளு சாமிக்கு சமம்.
அவரு சாமியோ இல்லியோ அத அவங்கவங்க நெனப்புக்கு வுட்டுருவோம்.

ஒருத்தரைக் கூப்புட்டு ஒத்த பைசா கொடுன்னு கேக்காம,
ஒருத்தர் வந்து இத்த எங்களுக்கு செஞ்சு கொடுங்கன்னு தன்கிட்ட கேக்காம, ஒரு ஆளு, தானே வந்து ஒரு காரியத்த இன்னொருத்தருக்காவ செஞ்சார்னா, அவர்தான் சாமிக்கும் மேல!

இத்தப் பத்தி நா சொல்றத வுட, நம்ம ஐயன் இன்னா சொல்லிருக்காருன்னு சொல்லிட்டு முடிச்சுக்கறேன்.

ஐயனப் பாத்து ஒர்த்தன் கேக்கறான்!

"மலய வுடப் பெருசு எது?
ஒலகத்த வுடப் பெருசு எது?
கடல வுடப் பெருசு எது?"

அப்படீன்னு.

வள்ளுவன் சொல்றான்.....

"நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது." [124]

"காலத் தினாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது." [102]

"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது." [103]

அர்த்தம் தெரியலைன்னா கேளு, நாளைக்கு சொல்றேன்!

"மக்கள் சேவையே மகேசன் சேவை"

"அனைவரிடமும் அன்பு செய்; அனைவருக்கும் சேவை செய்"

சரி , ரொம்ப நேரமாச்சு! போயி அல்லாருக்கும் இத்த சொல்லு!

"மொதல்ல மனுசனா இருக்க கத்துக்க! அடுத்தவனப் பத்தி ஒண்ணு சொல்றதுக்கு முன்ன, அத்த தீர விசாரி! ஒன் நம்பிக்கையோட ஒத்துப் போவுதுன்ற ஒண்ணுத்துக்காவே ஒனக்கு சரியா தெரியாதத தூக்கி நிறுத்த தொணை போவாதே!"



தொடர்ந்து படித்த அனைவருக்கும் எனது நன்றி!

வணக்கம்!

சாய்ராம்.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP