"பள்ளி எழுந்தருளாயே" - 1 [21]
"பள்ளி எழுந்தருளாயே" - 1 [21]
திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி
(திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம் )
இறைவன் பெருமையைப் பாடியும், அவனைக் காண நீராடியும் முடித்த பெண்டிர், முனிவர், சிவனடியார்கள் அனைவரும் இப்போது திருப்பெருந்துறையில் அருள் புரியும் சிவனைத் துயிலெழச் செய்ய விரைகின்றனர்! அதே போற்றியும், திருவடிகளும் இங்கும் தொடர்கிறது!
நாமும் அங்கு செல்வோம்!
திருச்சிற்றம்பலம்
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! 1.
என் வாழ்விற்கு முழுமுதல் பொருளாக ஆனவனே!
உன்னைப் போற்றுகின்றேன்!
பொழுது விடிந்து விட்டது! மலர் போன்ற உன்
திருவடிகளுக்கு இணையான மலர் கொண்டுவந்து
அத்திருவடிகளில் தூவினோம்!
அதனால் மனமகிழ்ந்து உன் பூமுகத்தில் மலர்ந்த
அழகிய புன்னகையைக் கண்டதும்
அதனை மனதில் நிறுத்தி மீண்டும்
உன் திருவடிகளையே வணங்குகிறோம்!
சேற்றில் மலர்ந்து தேன்இதழ் விரிக்கும் தாமரைகள்
நிறைந்த குளுமையான வயல்கள் சூழ்ந்த
திருப்பெருந்துறையில் அமர்ந்த சிவனாரே!
உயர்த்திய காளைக் கொடி உடையவரே!
எங்களையும் அடிமையாகக் கொண்டவரே!
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!
அருஞ்சொற்பொருள்:
சேறு - கள்/ தேன்; தண் - குளிர்; ஏறு - இடபம்.