Monday, January 18, 2010

"வடம் பிடிக்க வாரீர்!"

"வடம் பிடிக்க வாரீர்!"

அந்தப் பெரியவர் கால்களை நீட்டியபடி சயனித்திருக்கிறார்.
மெத்தப் படித்த அவரது பக்தர் ஒருவர், கால்மாட்டில் அமர்ந்தபடி, அவரது கால்களைப் பிடித்து, பாதசேவை செய்து கொண்டிருக்கிறார்.
பக்தரின் வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.

பெரியவர்: என்னப்பா? என்ன சொல்லிகிட்டிருக்கே?
பக்தர்: அது ஒண்ணுமில்லை சாமி! ஒரு சம்ஸ்க்ருத ச்லோகம்.
பெ: அதான் என்ன ச்லோகம்னு கேக்கறேன்.
பக்: கீதையில இருக்கற ஒரு ச்லோகம் சாமி அது!
பெ: எங்கே? சத்தமாச் சொல்லு! நானும் கேக்கறேன்.
பக்: "தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா

உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ தர்ஷின:
- Hide quoted text -

பெ: இதோட அர்த்தம் என்னன்னு எனக்குக் கொஞ்சம் சொல்றியா?
பக்: ஸம்ஸ்க்ருதம் தெரிஞ்சா இதெல்லாம் ரொம்ப சுளுவாப் புரியும் சாமி!
பெ: அதானே உன்னைக் கேக்கறேன். இந்தப் பாட்டோட அர்த்தம் என்னப்பா?
பக்: அதாவது, [தொண்டையைக் கனைத்துக் கொண்டே] சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணிகிட்டும், இது என்ன, அது என்னன்னு கேள்வி கேட்டுகிட்டும், கை காலைப் பிடிச்சுவிட்டுப் பணிவிடை பண்னிகிட்டும், குருகிட்டேருந்து இந்த ஞானத்தைக் கத்துக்கோ. அப்படிப் பண்ணினேன்னா, அந்த ஞானிகள் ப்ரம்மத்தைப் பத்தின தெளிவை உனக்கு உபதேசம் செய்வாங்கன்னு பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இதுல சொல்றாரு!
பெ: இப்ப உன்னை இதோட மொத்த அர்த்தத்தையா நான் கேட்டேன்? வார்த்தை,, வார்த்தையாப் பிரிச்சு அர்த்தம் சொல்லுப்பா!
பக்: ப்ரணிபாதேனன்னா, பணிந்து வணக்கம் செய்வது; பரிப்ரச்னேனன்னா, கேள்விகள் கேக்கறது; ஸேவயான்னா பணிவிடை செய்யறதுன்னு அர்த்தம்
தத் வித்தி= கேட்டுத் தெரிஞ்சுக்கணும்
தத்வ தர்ஷின: ஞானின; ன்னா இந்த ஞானத்தைத் தெரிஞ்ச ஞானிகள்;
ஞானம்= அந்த ஞானத்தை; தே= உனக்கு; உபதேக்ஷ்யந்தி= சொல்லிக் கொடுப்பாங்க.
பெ: ரொம்ப நல்லா சொல்றியே! சரி, நமஸ்காரம் பண்ணினா மட்டும் போறுமா?
பக்: 'ப்ரணிபாத'ன்னா அதான் அர்த்தம். எனக்கு அதுக்கு மேல சொல்லத் தெரியலை!
பெ: சரி, விட்டுரு! 'பரிப்ரச்ன'ன்னா....?
பக்: அதான் சொன்னேனே! கேள்விகள் கேட்கறதுன்னு அர்த்தம்.
பெ: அப்ப 'ப்ரச்ன'ன்னா என அர்த்தம்?
பக்: அதுவும் கேள்வி கேக்கறதுதான்!
பெ: அப்போ, 'ப்ரச்ன'ன்னே சொல்லியிருக்கலாமே ? எதுக்கு இந்த வியாஸர் 'பரி'ன்னு இன்னொரு வார்த்தையைச் சேர்த்தாரு? அவருக்கு எதுனாச்சும் மூளை கெட்டுப் போயிருக்குமோ?
பக்: இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை எனக்கு!
பெ: 'ஸேவா'ன்னா, எந்த மாதிரி ஸேவை?
பக்: இதோ நாங்கள்லாம் உங்களுக்குப் பண்றோமே அது போலத்தான். இப்படி கை காலைப் பிடிச்சு விடறது, கூடமாட இருந்து உங்களைக் கவனிச்சுக்கறது இதெல்லாம்தான்!
பெ: [சிரிக்கிறார்!] ஓஹோ! அப்படிப் பண்ணினா மட்டும் போறுமா?
பக்: [சலிப்புடன்] இப்படி மடக்கி, மடக்கிக் கேட்டா எப்படி சாமி? எனக்கு வேற அர்த்தம் எதுவும் தெரியலை!
பெ: [புன்னகையுடன்] அடுத்த வரியில 'உபதேக்ஷ்யந்தி தே ஞானம்'! இந்த ஞானம்ன்றதுக்குப் பதிலா வேற ஏதும் வார்த்தை போடலாமா? உனக்குத்தான் இந்த பாஷை நல்லாத் தெரியுமே!
பக்: [சற்றுத் தெம்புடன்] ஓ! போடலாமே!
பெ: என்ன போடலம்?
பக்: அஞ்ஞானம்னு சொல்லலாம்.
பெ: அப்படிப் போட்டா இன்னும் தெளிவாப் பொருள் கிடைக்கும்னு நினைக்கிறியோ?
பக்: [சற்று திகைப்புடன்] இல்லை, இல்லை! நான் அப்படிச் சொல்லலை! சங்கர பாஷ்யமும் அப்படிச் சொல்லலை!
பெ: அதனாலென்ன? ஒரு நல்ல அர்த்தம் வரும்னா அப்படிச் சேர்த்தா என்ன தப்பு?
அது கிடக்கட்டும்! எதுக்கு ஒரு 'தத்வ தர்ஷி'கிட்ட போய் நமஸ்காரம் பண்ணி, கேக்கச் சொல்றாரு? கிருஷ்ணரே ஒரு பெரிய ஞானிதானே?
பக்: அட! ஆமாம்! ஏன் அப்படிக் கேக்கச் சொல்றார்?
பெ: அப்போ, உனக்கு இது புரியலைன்றியா?
பக்:[ பதைபதைப்புடன், பெரியவரின் கால்களைப் பிடித்துக் கதறியபடி] எனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியும்னு நினைச்சு ஆணவமா நான் சொன்னது மகா தப்புன்னு இப்பப் புரியுது சாமி! என்னை மன்னிச்சிருங்கோ! என்னோட திமிரை எவ்வளவு சுளுவா சுட்டிக் காண்பிச்சுட்டீங்க! தயவு செஞ்சு, இந்த ச்லோகத்தோட அர்த்தத்தை எனக்கு சொல்லி அருளணும் சாமி!

பெ: வெறுமனே காலுல விழுந்து நமஸ்காரம் பண்ணினா மட்டும் போறாது! உன்னோட உடல், பொருள், ஆவி இத்தனையும் அவர் காலுல போடறதா உணர்ந்து பணிவோட வணங்கணும்.

மடக்கணும், தப்பு கண்டு பிடிக்கணும்னு நினைச்சுகிட்டு குருகிட்ட கேள்வி கேட்கக் கூடாது. தனக்கு ஒரு தெளிவு வரணும்னும், ஆன்மீகத்துல இன்னும் முன்னேறணும்ன்ற ஆர்வத்தோட மட்டுமே கேள்வி கேட்கணும். கேட்டதை, நல்லாப் புரிஞ்சுக்கற வரைக்கும் தாராளமாக் கேட்கலாம். அரைகுறையாப் புரிஞ்சுக்கக் கூடாது.

ஸேவைன்னா சும்மாக் காலைப் பிடிச்சு விடறதுல்லாம் இல்லை. நம்மளோட இந்த உடல் தன்னுதுன்னு நினைக்காம, குருவுக்குப் பணிவிடை செய்யறதுக்குத்தான் இந்தப் பிறவி எடுத்தோம்னு நினைச்சுகிட்டு, பணிவிடை செய்யணும்!.

இப்படில்லாம் முறையாச் செஞ்சா, குருவானவர், உனக்கு ஞானத்தைப் போதிப்பார்!

அஞ்ஞானத்தை ஒழிச்சாத்தானே ஞானம் பிறக்கும்! ப்ரணிபாதன்னா சரணாகதி. ஏன் தவதர்ஷிகிட்ட போகச் சொல்றார் கிருஷ்ணன்? தன்னை அறிஞ்சவங்க எல்லாருமே கிஷ்ரு்ணர்கள்தான்! முறையான பக்தனுக்கு, குரு ஒரு கிருஷ்ணனாத்தான் தெரிவார். அப்படிப்பட்ட குரு தனது சிஷ்யர்களை வாசுதேவனாப் பார்க்கறார்! கிருஷ்ணனோ இந்த ரெண்டு பேரையும் பிராணனாவும், ஆத்மாவாவும் பார்க்கறார்! இப்படிப்பட்ட தேடல்ல இருக்கற பக்தர்களும், தன்னை அறிஞ்ச குருவும் இருக்கறது கிருஷ்ணனுக்குத் தெரியாம போகுமா என்ன? அதனாலத்தான், எல்லாரையும் தங்கிட்ட வந்து கேளுங்கன்னு சொல்லாம, இப்படி ஒரு ஈஸியான வழியைக் காமிக்கறார்!

பக்: [கண்களில் நீர்மல்க] இதுமாதிரியே தினம் ஒரு ச்லோகத்துக்கு நீங்க அர்த்தம் சொல்லணும் சாமி! நான் அதைக் கேட்டுப் பயனடையணும்னு பணிவாக் கேட்டுக்கறேன் சாமி!

பெரியவர் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே, இன்னும் வசதியாகக் கால்களை நீட்டிப் புரண்டு படுக்கிறார்!

"பணிவதால் வினவலால் பணிவிடை புரிவதால்
அணியலார் மேனிய, அறியிதை; ஞானியர்
துணியமெய் உணர்ந்தவர் துலக்குவர் உனக்கதே!" [ப.கீ. அத்:4; 34]


[அந்தப் பெரியவர் ஷீர்டி ஸாயிபாபா! பக்தர் நானாஸாஹேப் சந்தோர்க்கர்.]
ஆதாரம்: ஷீர்டி ஸாயி ஸத்சரிதம், 39-ம் அத்தியாயம்]

Read more...

Monday, December 21, 2009

"தேங்காப்பாலு... மாங்காப்பாலு!"

"தேங்காப்பாலு... மாங்காப்பாலு!"


இந்த மாதிரி சமாச்சாரமெல்லாம் சுட்டுப் போட்டாலும் எனக்கு வராது என்பதால், வழக்கம் போல மன்னாரைத்தான் தொந்தரவு செய்ய வேண்டியிருந்தது! காலையில்தான், ஒரு குறளைப் பற்றிக் கேட்கப்போய், கோபமாகத் திட்டி அனுப்பியிருந்தான் என்றாலும், வேறென்ன செய்வது என அவனைத் தேடிப் போனேன்!

மாலை நேரம்! நாயர் கடை வாசலில் ஒரு ஸ்டூலின் மீது அமர்ந்துகொண்டு, ஒரு பீடியை வலித்தபடி, மாலைத் தினசரி ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தவன் முன்னே சென்று நின்றேன்!

'அடடே! வாப்பா சங்கரு! இன்னா காலையில பேசினதுக்கு கோவமா எம்மேல?' என அவன் கேட்டதும், எதையுமே மனதில் கொள்ளாத அவனது பாங்கை நினைத்து வியந்தபடியே, 'கோபம்னா இப்பத் தேடிகிட்டு வருவேனா?' எனச் சிணுங்கினேன்.

'ம்க்கும்! இதுக்கெல்லாம் ஒண்ணும் கொறைச்சலில்லை! சும்மா வரமாட்டியே! இன்னா சமாச்சாரம்? இப்ப ஆரு இன்னா கேட்டாக்க?' எனச் சொல்லிச் சிரித்தான்.

மௌனமாகக் கையிலிருந்த தாளை அவனிடம் நீட்டினேன்.

'அத்தெல்லாம் வேணாம்! நீயே படி அதுல இன்னா எளுதிருக்குன்னு' எனச் சொல்ல, நானும் படித்தேன்.


1. தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி

2. மாங்காய்ப் பால் உண்டு மலை மேல் இருப்பார்க்கு
தேங்காய்ப் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் ஏதுக்கடி

3. செத்தாரைப் போலத் திரியும் மெய்ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி

4. பட்டணம் சுற்றிப் பகலிலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி.

'இதுக்கெல்லாம் அர்த்தம் வேணுமாம் என்னோட நண்பர் ஒருவருக்கு' என்றேன்.

'கொதம்பைச் சித்தர் பாட்டுல்ல இது!' என்றவன், சற்று நேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, கண்ணைத் திறந்து, என்னைப் பார்த்து,

'இதுல அந்த ரெண்டாம் பாட்டுத்தான் கொஞ்சம் கஸ்டம்! மத்ததெல்லாம், அப்பிடியே படிச்சாலே கொஞ்சம் புரிஞ்சிரும். அதுனால, மொதல்ல அதுக்குச் சொல்றேன், கேட்டுக்கோ' எனச் சொல்லத் தொடங்கினான்.

'சித்தருங்க பாசையில, ரெண்டு சமாச்சாரத்தை அமிர்தம்னு சொல்லுவாங்க! ஒண்ணு வெளியில கிடைக்கற அமிர்தம்; இன்னொண்ணு உள்ளாலியே சுரக்குமாம்!
இந்த வெளியில கிடைக்கறதுக்குப் பேரு தேங்காப்பாலு! தேங்காயில இருக்கற
கொளுப்பை எடுத்துட்டுக் கடயற பாலுக்கு இந்தப் பேரு. நம்ம வள்ளாலாரு சாமி இத்த 'புறப்புற அமிர்தம்'னு சொல்லுவாரு. இத்த மட்டுமே சாப்பிட்டுகிட்டு உசிரு வாளுவாங்க சித்தருங்கல்லாம்.

தேங்காப்பாலு கதை இதாச்சா! இப்ப மாங்காப்பாலுக்கு வருவோம்!

வாசி யோகம்னு ஒரு பயிற்சி இருக்குன்னு சித்தருங்க சொல்லி வைச்சிருக்காங்க!
மூச்சு வுடறதக் கட்டுப்படுத்தி, சுளுமுனைன்னு சொல்ற இடத்துல அதை நிறுத்தி பயிற்சி பண்றதை அப்பிடி வாசின்னு சொல்லுவாங்க! இதப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா, ஒரு சரியான குருகிட்ட போய் கத்துக்கணும் நீ! அதான் ஒனக்கு ஒருத்தர் இருக்காரே! அவருக்குத் தெரியும் ஒனக்கு சொல்லணுமா, வேண்டாமா, அப்பிடி சொல்லணும்னா, அத்த எப்ப சொல்லணும்னு
அல்லாமே தெரியும் அவருக்கு! இப்ப அதில்ல இங்க பிரச்சினை!

விசயத்துக்கு வருவோம்!
இப்பிடி வாசியைக் கட்டி, தியானம் பண்ணிப் பண்ணி, அசைவே இல்லாம நிக்கற நிலை ஒருத்தனுக்கு வந்திச்சுன்னா, அப்போ, புருவத்துக்கு மத்தியில, ஒரு ஜோதி தெரிய ஆரம்பிக்குமாம். அப்ப, அவனோட உள்ளுக்குள்ள, ஒரு அமுதம் சுரக்குமாம்! அதான் இந்த மாங்காப்பாலு.!

இத்தச் சாப்பிட்டவனுக்கு சாவைப் பத்தின பயம் போயிரும்! 'மரணமில்லாப்
பெருவாழ்வு'ன்னு வள்ளலாரு சொல்றதும் இதைத்தான்! அதுக்கப்புறம், சாப்பாடு கூடத் தேவைப்படாது அவனுக்கு! அந்தத் தேங்கப்பாலு கூட அவனுக்கு இனிமே வேணாம்!
அத்தத்தான் அந்த ரெண்டாவது பாட்டுல, மாங்காப்பாலு சாப்ட்டவனுக்கு, தேங்காப்பாலு ஏதுக்கடீன்னு கொதம்பையைப் பார்த்து பாடறாரு சித்தர்! வெளங்கிச்சா?
வெளங்கலைன்னா, இதுக்கு மேல என்னால ஒண்ணும் பண்ண முடியாது! ஓடு, ஒன்னோட குருவாண்டை!' எனச் சொல்லி நிறுத்தினான்.

இப்ப ஓடிட்டா, மீதிப் பாட்டுக்கு விளக்கம் கிடைக்காதேன்னு, 'ம்ம்' எனப்
புரிந்ததுபோலத் தலையாட்டினேன்!
************

என் மனநிலையைப் புரிந்தவன்போல், மன்னார் ஒரு நமுட்டுச் சிரிப்பை
உதிர்த்துவிட்டு மேலே தொடர்ந்தான்!

'இன்னொண்ணு சொல்லணும். வாசின்னா குதிரைன்னு அர்த்தம்! மூச்சுக்காத்து மூலமா இந்தக் குதிரையைக் கட்றதுக்குப் பேருதான் வாசி யோகம். இனிமே மத்ததெல்லாம் பாக்கலாம்.

தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி?

மொதப்பாட்டுல, தாவாரம் இல்லேன்னா ஒனக்கு ஒரு வீடு இல்லைன்றாரு! அந்தக் காலத்துல வீடு கட்றப்ப, தாவாரம் இல்லாம ஒரு வீடும் இருக்காது! வெளியிலேர்ந்து வர்றவங்கல்லாம், அக்கடான்னு ஒரு துண்டை விரிச்சு அதுல படுத்துக்குவாங்க. மேலேருந்து வெட்டவெளிக் காத்து சும்மா ஜிவ்வுன்னு பிச்சிக்கும்! சாப்பாடு ஒரு நூறு பேருக்கு ஒக்கார வைச்சுப் போடலாம்! சுருக்கமா சொல்லப்போனா, பிறத்தியாருக்கு ஒதவுற ஒரு எடம் வீட்டுலியே அதான்னு சொல்லலாம்.

இப்பல்லாம், ஆரும் தாவாரம் வைச்சு வூடு கட்றதில்லை! ஒதவி பண்ணனுன்ற
நெனைப்பே கொறைஞ்சு போச்சே! எப்பிடி அவன் தாவாரம் வைச்சு வூடு கட்டுவான்!
ஆனாக்க, அதில்ல இதுல சொன்னது!

"தா"ன்னா துன்பம், கஸ்டம்னு அர்த்தம். 'வாரம்'னா பங்கு போடறது! அடுத்தவங்களோட கஸ்டத்துல நாமளும் பங்கு எடுத்துக்கறதுதான் தாவாரம்! அத்தப் பண்ணாம, சும்மனாச்சுக்கும் தேவாரத்தை, அதாவது, சாமிப்பாட்டுங்களை மட்டுமே பாடிகிட்டு இருந்தியானா, ஒனக்கு மோட்சம் கிடக்காதுன்னு தீர்மானமா சொல்றாரு சித்தரு! 'பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்' னு கண்ணதாசன் பாடுவாரே, அதான் இது!


இன்னும் சுளுவாச் சொல்லணும்னா, எளுத வேண்டிய பரிட்சைக்கு ஒண்ணுமே படிக்காம, பிள்ளையாருக்கு நூறு தேங்கா ஒடைக்கறேன்னு வேண்டிக்கறாங்களே, அவங்களுக்கெல்லாம் ஒரு பதிலாக் கூட, இந்தப் பாட்டை எடுத்துக்கலாம்!


அடுத்தது மூணாவது!
செத்தாரைப் போலத் திரியும் மெய்ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி?

இந்தக் கட்சி மீட்டிங்லல்லாம் பார்த்திருப்பியே! ஆளாளுக்குப் பேசிகிட்டே இருப்பாங்க! திடீர்னு ஒர்த்தன் வந்து, மைக்கைப் பிடிச்சுகிட்டு,' இதோ நம்ம தானைத் தலைவர் வராரு'ன்னு ஒரு சவுண்டு வுடுவான். அவ்ளோதான்! கூட்டமே எளுந்து நின்னு, கையைத் தட்டிகிட்டு, 'தலீவா. தலீவா'ன்னு கோஷம் போடும்! அவரு பேசறப்ப, வார்த்தைக்கு வார்த்தை கைதட்டி குஜால் ஆவாங்க!

ஆனாக்க, அல்லாத்தியும் ஒணந்தவனுக்கு, இதுல்லாம் லச்சியமே இல்லை! விடுதலை ஆனவன்னா இன்னா? அல்லாம் செத்துப் போனவன்னு அர்த்தம்! செத்துப் போறதுன்னா உசிரை வுடறது இல்லை! அல்லா நெனைப்பையும், ஆசையையும் தொறந்தவன்னு பொருளு! அப்பிடியாப்பட்ட ஆளை இந்த வாள்க, ஒளிக கோஷம்லாம், கைத்தட்டல்லாம் ஒண்ணுமே பண்ணாதுன்றதை இதுல சொல்றாரு.

இப்பக் கடோசி பாட்டு!
பட்டணம் சுற்றிப் பகலிலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி?

ஆரும் பார்த்திடக் கூடாதேன்னு, பதுங்கிப் பதுங்கிப் போறவந்தான் முட்டாக்குப்
போட்டுகிட்டு, இருட்டுலியும் மூஞ்சியை மறைச்சுகிட்டுப் போவான்! அல்லாத்தியும் தொறந்தவனுக்கு, எப்பவுமே வெளிச்சத்துலியே இருக்கறவனுக்கு அதெல்லாம் எதுக்குன்றாரு. ரெண்டாவது பாட்டுல சொன்னதுபோல, வாசிக் குதிரையைக் கட்டி, உள்ளுக்குள்ளாலியே ஒரு ஜோதியைப் பார்த்தவனுக்கு, எப்பவுமே வெளிச்சந்தான்! எப்பவுமே பகல்தான்! ஐயா சுத்தறதும் பெரிய பட்டணம்! சாமியே இருக்கற பெரிய பட்டணம்! அப்பால இன்னாத்துக்கு அவரு முக்காடுல்லாம் போட்டுக்கினு, தான் ஒரு சாமியாருன்னு காட்டிகிட்டுத் திரியணும்? ஆரும் வந்து கை தட்றதுக்கா? இல்லேன்னா,
தேவாரம், பிரபந்தம் படிக்கறதுக்கா? அவருதான் விடுதலையாகி, ஜோதியில நிக்கறாரே! முக்காடெல்லாம் தேவையில்லைன்றாரு. அதெல்லாம் ஒன்னிய, என்னியப் போல ஆளுங்க போடறது! அவருக்குத் தோதுப்படாது!'

எனச் சொல்லி என்னைப் பார்த்துச் சிரித்தவன், 'இதுக்கெல்லாம் இன்னுமே ஆளமாப் பொருள் இருக்கும்! சொல்றவங்க வந்து சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்வாங்க! ஒனக்கு இது போறும்' எனச் சொல்லி, நாயரிடம் இரண்டு 'டீ'க்கு ஆர்டர் கொடுத்தான் மயிலை மன்னார்!

தெரியாத நாலு விசயத்தைக் கற்றுக் கொண்டோமே, அதையெல்லாம்விட, மயிலை மன்னாருடன் நல்லபடியாக இன்றையப் பொழுது இனிமையாகக் கழிந்ததே என்னும் திருப்தியோடு மானசீகமாக 'இறுகப் பற்றியவனை' வணங்கிக் கொண்டேன்!
எதிரே இருந்த கபாலீச்வரர் கோயிலில் மணி ஓங்கி ஒலித்தது!
********************

Read more...

Wednesday, December 16, 2009

அ.அ. திருப்புகழ் - 36 "ஏது புத்தி ஐயா எனக்கு"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 36 "ஏது புத்தி ஐயா எனக்கு?"


திருத்தணி வாழ் முருகப் பெருமானைப் புகழ்ந்து அமைந்திருக்கும் இந்தப் பாடலைப் படித்தவுடன் என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் இதுதான்!
அருணகிரிநாதர் மகா குறும்புக்காரர்!

மிக மிக எளிய, படித்தாலே எவராலும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பாடலை இயற்றிவிட்டு, சந்தத்தில் அதனைப் போடும் போது, இங்குமங்குமாய்ப் பல இடங்களில் கூட்டிச் சுருக்கி, ஏதோ ஒரு கடினமான பாடல் போலத் தோன்றுமாறு இதனை அருளியிருக்கிறார்!
பொருள் விளக்கம் என ஒன்றுகூட இப்பாடலுக்கு அநேகமாகத் தேவையிருக்காது! பதம் பிரித்தபின், வெகு எளிதாகப் புரியும் பாடல் இது!
முதலில் பாடலையும், பின்னர், அதனைப் பதம் பிரித்தும் பார்க்கலாம்!



தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன ...... தந்ததான

......... பாடல் .........

ஏது புத்திஐ யாஎ னக்கினி

யாரை நத்திடு வேன வத்தினி

லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்


றேயி ருக்கவு நானு மிப்படி

யேத வித்திட வோச கத்தவ

ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்


பாதம் வைத்திடை யாதே ரித்தெனை

தாளில் வைக்கநி யேம றுத்திடில்

பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்


பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்

யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ

பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ


ஓத முற்றெழு பால்கொ தித்தது

போல எட்டிகை நீசமுட்டரை

யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே


ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்

மான்ம ழுக்கர மாட பொற்கழ

லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே


மாதி னைப்புன மீதி ருக்குமை

வாள்வி ழிக்குற மாதி னைத்திரு

மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே


மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ

லார்வி யப்புற நீடு மெய்த்தவர்

வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.


தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன ...... தந்ததான

****************

......... பொருள் .........

[வழக்கம்போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்! ]

ஓத முற்றெழு பால்கொ தித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே


ஓதம் உற்று எழு பால் கொதித்தது போல
எண் திகை நீச முட்டரை ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள்கோவே

நீர்கலந்தபாலை நெருப்பின்மீதுவைக்க
அது சூடாகிக் கொதித்து வரும்வேளை
நீர்வற்றிப் பாலெழுந்து பொங்குதல்போல்,
எட்டுத்திசையிருந்தும் ஈசல்போல் அழிந்துபடப்
போர்செய்யவந்த இழிந்த மூடரான அசுரரை
வெட்டிக் கொன்றிட்ட சூரியவொளிபோலப்
பிரகாசிக்கும் சக்திவேலைக் கையேந்திய
எங்கள் தலைவனே!

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான்ம ழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே


ஓத மொய்ச்சடை ஆட உற்றுஅமர் மான் மழுக்கரம் ஆட
பொன்கழல் ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்தவாழ்வே

நீர்பெருகும் கங்கைநதி பொருந்திவரும் சடைமுடியாட
எழிலாகப் பொலிந்திருக்கும் மான் ஒருகரத்திலும்
மழுவென்னும் ஆயுதம் தாங்கிய மறுகரமும் அசைந்தாட
தாளகதி தவறாத நாட்டியத்தால் அசைந்தாடும்
பொன்னாலாகிய வீரக்கழல் இசைந்து ஒலிக்கவும்
ஆனந்த நடனமாடும் சிவனார் தந்த எங்கள்பெருவாழ்வே!

மாதி னைப்புன மீதி ருக்குமை
வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே


மா தினைப்புனம் மீது இருக்கும் மை வாள் விழிக் குறமாதினைத்
திரு மார்பு அணைத்த மயூர அற்புத கந்தவேளே

நம்பிராஜன் தினைப்புனத்தில் கவண்கல் வீசியள்ளும்
மைதீட்டிய வாள்போலும் விழிபடைத்த குறவள்ளியை
அன்புறத் தழுவி மாரணைத்துக் கொள்ளும் மயில்வாகனனே
அளப்பரிய ஆற்றலுடைக் கந்தனெனும் அரசனே!
அனைவராலும் விரும்பப்படுகின்றவரே!

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.


மாரன் வெற்றிகொள் பூ முடிக் குழலார் வியப்புற
நீடு மெய்த் தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே.

அழகுக் கடவுளையே வெல்லும் படியான அழகுள்ள மாதர்கள்
மலரிட்டு முடிந்திருக்கும் நீண்ட கூந்தலைக் காட்டியும் கலங்காத
மெய்யான தவம் செய்யும் முனிவர்கள் நிறைந்துவாழும்
திருத்தலமாம் திருத்தணிகை மலைமீது வதியும் தலைவரே!

ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்கு


ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன்
அவத்தினிலே இறத்தல் கொலோ எனக்கு

இனி எனக்கு என்ன புத்தி சொல்லப் போகிறீர்?
எவரை அண்டி இனி நான் பிழைத்திடுவேன்?
கதியேதுமின்றி வீணே இறந்துபடலே எனக்கு விதித்ததோ?

னி ...... தந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோ


நீ.. தந்தை தாயென்றே இருக்கவும் நானும் இப்படியே தவித்திடவோ
சகத்தவர் ஏசலில் படவோ

யாருமெனக்கு இல்லையெனில் இதனைப் பொறுக்கலாம்
ஆனால் தந்தையும் தாயுமாய் நீ எனக்கு இருக்கையிலே
இவ்வண்ணம் நான் தவித்தழிதல் தகுமோ?
உலகத்தவர் பழிச்சொல்லுக்கு ஆளாதலும் முறையோ?

ந கைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்திடை யா


நகைத்தவர் கண்கள் காணப் பாதம் வைத்திடு ஐயா

எனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பவரெல்லாம் காணுமாறு
நின் திருமலர்ப் பாதங்களை என் தலைமீது வைப்பாய் ஐயா!

தே ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யா


தெரித்து எனை தாளில் வைக்க நீயே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா


அப்படி நீ எனை நின் தாளிணையில் சேர்க்காவிடிலோ
இந்த உலகமே எனைப்பார்த்து எள்ளி நகையாடும் ஐயா!

த கப்பன்முன் ...... மைந்தனோடிப்
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோ


தகப்பன் முன் மைந்தன் ஓடிப் பால்மொழிக்குரல் ஓலம் இட்டிடில்
யார் எடுப்பது என வெறுத்து அழ பார் விடுப்பர்களோ

பால்மணம் மாறாப் பச்சிளங்குழந்தை தன்
தந்தை முன்னே சென்று நின்றுகொண்டுத்
தன் மழலைக் குரலெழுப்பி ஓலமிட்டு அழுகையிலே
யார் பெற்ற பிள்ளையோ இது என எவரேனும்
வெறுத்தொதுக்கி விட்டு விடுவரோ?

எ னக்கிது ...... சிந்தியாதோ


எனக்கு இது சிந்தியாதோ ?

[இதுவரை இப்படிப் புலம்பிய அருணையாருக்கு இப்போது சட்டென ஒரு எண்ணம் வருகிறது!
இந்த அடி வரை, திருமுருகனைக் கடிந்து எழுதிய பாடல் போலத் தோன்றிய இது,
இப்போது அருணையாருக்கே ஏற்பட்ட ஞானோதயமாக மாறுகிறது!]


இந்தச் சிந்தனை என் சிந்தையில்
எப்படித் தோன்றாமல் போயிற்று!
வருவான்! முருகன் அருள்வான்!
முருகனருள் முன்னிற்கும்!

[எனக் கூத்தாடுகிறார்! நாமும்தான்!]


அனைவரும் இப்பாடலை தினமும் ஓதி முருகப் பெருமானின் அருளைப் பெறுவோம்!
****************


**** அருஞ்சொற் பொருள் ****

நத்துதல் = பற்றுக்கோடாய் அணுகுதல்
ஓதம் = நீர், தண்ணீர்
நீச = இழிந்த
முட்டர் = மூடர்கள்
பானு = சூரியன்
மொய் = பொருந்தியிருக்கும்
மாரன் = மன்மதன்
நீடு = நீண்ட, அதிகமான
தம்பிரான் = தலைவர்
*******************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
******************************

Read more...

"மழையாடும் மகிழ்வு வேண்டும்!"

"மழையாடும் மகிழ்வு வேண்டும்!"


காலைநேரக் கூட்டமன்று கூடுதலாய் இருந்தது
வேலைமிக அதிகமெனப் பார்த்ததுமே புரிந்தது

வந்தமர்ந்த நோயாளிகளை ஒவ்வொருவராய்ப் பார்வையிட்டேன்
வயதான கிழவரொருவர் பரபரப்பாய் இருக்கக் கண்டேன்

அருகழைத்து என்னவென ஆதரவாய் விசாரித்தேன்
அவசரமாய்ப் போகவேண்டும் ஒன்பதுக்குள் எனச் சொன்னார்

கைக்காயத் தையல் பிரிக்கும் எளிதான வேலையென்பதால்
மருத்துவரின் அனுமதியுடன் அவர் காயம் கவனித்தேன்

'ஏதேனும் அவசரமோ? ஒன்பதுக்கு என்ன வேலை?' எனக்கேட்டேன்
'மனைவியுடன் சேர்ந்தமர்ந்து காலையுணவு உண்ணும் நேரம்' என்றாரவர்

'காத்திருக்க மாட்டாரோ? பிடிவாதம் மிகவுமோ!' எனச் சீண்டினேன்
'இல்லையில்லை! அவளிருப்பதோர் மருத்துவமனையில்' எனச் சொன்னார்

'கட்டுத்தையல் பிரித்தபடியே, 'உடம்புக்கென்ன?' எனக் கேட்டேன்
'ஆளை மறந்துபோகும் அல்ஸைமெர் நோய்' என்றார் அமைதியாக

'ஆவலை அடக்கமுடியாமல், 'உங்களை மட்டும் நினைவில் கொள்வார்தானே' என்றேன்
'இல்லையில்லை! யாரையுமே அடையாளம் தெரிவதில்லை' வருத்தமுடன் சொன்னார்

'லேசாகத் துளிர்த்த எரிச்சலை அடக்கிக் கொண்டு' 'பிறகேன் அவசரமாம்?எப்படியும்
அவருக்கு உங்களை அடையாளம் தெரியப் போவதில்லை' என்றேன் அசுவாரசியமாக

'ஆனால், எனக்கவளை நன்றாக அடையாளம் தெரியுமே' ஏறெடுத்து எனைப் பார்த்தார்
என்னிருவிழிகளிலும் குபீரெனப் பொங்கியது பெருகிவந்த கண்ணீர்வெள்ளம்!

மேனியெங்கும் சிலிர்த்துப் போச்சு! உடம்பெல்லாம் ஆடிப்போச்சு!
'காதலென்றால் இதுபோல வாய்க்கவேண்டுமெனக்கு' என்னுள்ளில் எண்ணம் தோன்றியது!

காதலென்பது காமமல்ல, கனிவாகப் பேசுவதுமல்ல
நிகழ்கின்ற அனைத்தையுமே அப்படியே ஏற்றிடும் மனப்பாங்கே காதல்

மகிழ்வான தம்பதியர் அனைவருமே எல்லாச்சுகமும் பெற்றவரில்லை
இருப்பது எதுவாயினும் அதனை மகிழ்வாகக் கொள்வாதாலேயே!

வரும்புயலைச் சமாளிக்கத் திட்டம் தீட்டுவதல்ல காதல்
பெயும்மழைநீரில் களித்தங்கு ஆடுவதே வாழ்க்கை!


நான்படித்த பாடமிதைப் பகிர்ந்திடவே இதை வடித்தேன்
வான்புகழும் வாழ்க்கையிங்கு நுமக்கமைய வாழ்த்துகிறேன்!

Read more...

Monday, December 14, 2009

"பிள்ளையார் கதைச் சுருக்கம்!"

"பிள்ளையார் கதைச் சுருக்கம்!"

சமீபத்தில், 'பிள்ளையார் கதை' என ஒரு இடுகையை ஆறு பதிவுகளாக இட்டிருந்தேன். கார்த்திகைக் கார்த்திகைத் தீபம் கழிந்த மறுநாள் தொடங்கி, இருபத்தோரு இழை கரத்தில் கட்டி, இருபது நாட்கள் இந்தக் கதையைப் படித்து, இருபத்தோராம் நாள் இந்த விநாயகர் சஷ்டி விரதத்தை முடிக்க வேண்டும் என்பது மரபு! இந்தக் கதை சுமார் 745 வரிகள் கொண்டது. அதன் சுருக்கத்தை இங்கு அளிக்கிறேன். வருகிற 22-ம் தேதி, குறைந்த பட்சமாக, இதனையாவது படித்து அன்பர்கள் இன்புறுவார்களாக! நன்றி!

"கணபதி எல்லாம் தருவான்!"

"பிள்ளையார் கதைச் சுருக்கம்!"


ஐங்கரன் அருளைப் பாடுதல் இன்பம்

அவன் புகழ் தினமும் கேட்டலும் இன்பம்

பூமியில் மானுட ஜென்மமெடுத்த

உமையைத் திருமணம் சிவனார் புரிந்து



அழகுறு சிவனும் தளர்வுறா உமையும்

கரியுடல் கொண்டு கலந்தது இன்பம்

அதனில் பிறந்த கரிமுகன் தோற்றம்

கொம்பையுடைத்துக் கயமுகன் அழித்திட



அசுரனை மூடிக வாகனம் ஆக்கி

வல்லபை மணந்த கணபதி வணங்கி

ஆவணித் திங்கள் சதுர்த்தி நன்நாளில்

சதுர்த்தி விரதம் நோற்றல் இன்பம்



மகிழ்வுடன் ஆடிய குண்டுக் கணபதி

தோற்றம் கண்டு எள்ளிய மதியிலாத்

திங்களை வெகுண்டு சபித்தல் கண்டு

தேவரும் கார்த்திகை நோற்றதும் இன்பம்


கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்த பின்னாளில்

இருபத்தோரிழை இன்புறக் கட்டி

ஒருவேளை உண்டி உண்டு ஒருமனத்துடனே

பிள்ளையார் கதையைப் படித்தலும் இன்பம்



தேவகி மைந்தன் உரைத்தது கேட்டு

பாண்டவர் நோற்று வென்றது இன்பம்

அறுமுகன் பிறப்பும் சூரன் முடிப்பும்

அழகு குஞ்சரியை திருமணம் கொண்டதும்



அமராவதியை நீங்கிடல் கேட்டு

அன்னை பார்வதி துயரமடைந்து

பொய்க்கரியுரைத்த மாலினைச் சபித்துப்

பைந்தள் பாம்பாய் கணபதி உறையும்



ஆலின் அடியில் உழன்றிடும் வேளை

கணபதி விரதம் நோற்றதால் மாலும்

தன்னுரு மீண்டதைப் படித்தலும் இன்பம்

சினந்த கவுரியைக் கபாடம் திறக்க



சிவனும் நோற்றுச் சிறந்ததும் இன்பம்

பார்வதி நோற்றுப் பாலனை மீண்டும்

தன்மடி சேர்த்து மகிழ்ந்தது இன்பம்

இலக்கண சுந்தரி இன்னல்படவே



அவளும் நோற்று மகிழ்ந்தது இன்பம்

இன்பம் இன்பம் இனியவன் திருக்கதை

தினமும் ஓதிடச் சேர்ந்திடும் இன்பம்

எல்லாம் தந்திடும் பிள்ளையார்கதை இன்பமே!

"கணபதி எல்லாம் தருவான்!"

Read more...

Tuesday, December 01, 2009

அ.அ. திருப்புகழ் - 35

அ.அ.திருப்புகழ் - 35 'எழுகுநிறை நாபி'


திருக்கழுக்குன்றம் மேவிய திருமுருகனைக் குறித்த பாடல் இது! கார்த்திகைக் கார்த்திகைத் திருநாளில் இதனை இடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! முருகனருள் முன்னிற்கும்!

**** பாடல் ****

எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர் முதலானோர்


இறைவியெனு மாதி பரைமுலையினூறி

யெழுமமிர்த நாறு கனிவாயா


புழுகொழுகு காழி கவுணியரில் ஞான

புனிதனென ஏடு தமிழாலே


புனலிலெதி ரேற சமணர்கழு வேற

பொருதகவி வீர குருநாதா


மழுவுழைக பால டமரகத்ரி சூல

மணிகரவி நோத ரருள்பாலா


மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை

வளமைபெற வேசெய் முருகோனே


கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு

கதிருலவு வாசல் நிறைவானோர்


கடலொலிய தான மறைதமிழ்க ளோது

கதலிவன மேவு பெருமாளே.


*****************************


******* பொருள் *******

இந்த அரிய பாடல் திருமுருகனிடம் எதையும் வேண்டாமல் அவனைப் போற்றும் வண்ணம் அமைந்த ஒரு சிறப்புப் பாடல்!எனவே, முதலில் இருந்தே பார்க்கலாம்!

எழுகுநிறை நாபி அரி

பூ, புவ, சுவ, சன, தபோ, மகா, சத்தியமெனும்
ஏழுலகைத் தன்நாபியெனும் வயிற்றிலொரு

பந்தாகச் சுருட்டிய திருமாலும்


பிரமர்

படைத்தல் தொழில் செய்யும் பிரமன்

சோதி

ஒளிமயம் பொருந்திய உருத்திரன்

இலகுமரன்

இம்மூவர்க்கும் மேலான சிவனின் மைந்தன் திருக்குமரன்

மூவர் முதலானோர் இறைவியெனு மாதி
[மூவர் முதலானோர் இறைவி எனும் ஆதி]


மேற்சொன்ன மூவர்க்கும் ஏனைய தேவர்க்கும்
தலைவியாகி சிவனுடன் விளங்கும் ஆதியன்னை


பரைமுலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனிவாயா

உமையவளின் திருமுலையில் எழுந்துவரும் அருள்ஞானப் பாலினை அளவின்றிப் பருகி அதனில் ஊறித் திளைத்து மணக்கும் கனிபோலும் வாயினையுடைய திருக்குமரா!

புழுகொழுகு காழி

வாசனை நிறை புனுகு எங்ஙனும் மலிந்திருக்கும் சீகாழியெனும் திருப்பதியில்

கவுணியரில் ஞான புனிதனென

சைவம் தழைத்தோங்கும் கவுணியர் குலத்தினிலே
திருமுருகன் சொரூபமாய்த் திருஞானசம்பந்தரெனும்

புனிதனாய் அவதரித்து


ஏடு தமிழாலே புனலில் எதிரேற

இணையாக வளராமல் எதிர்த்தொழித்து அழிக்கவெனச்
சைவைத்தை வேரறுக்கும் வஞ்சநெஞ்சம் கொண்டவராய்ச்

சமணரெனும் சமயத்தவர் வாதுசெய்ய அழைத்திருந்தார்

மதுரைக்கு வருகைதந்து சத்திரத்தில் தங்கிவந்த

சம்பந்தர் எதிர்வந்து அனல்வாதம் செய்துவென்று

புனல்வாதம் செய்திடவும் இறையருளால் துணிந்திருந்தார்

ஏடெழுதி வைகையிலே மிதக்கவிட்டுப் பார்த்திடவே

வீணரவர் கொக்கரிக்க, இறையருளை மனம்வேண்டி

'வாழ்க அந்தணர்' எனும் ஏடெழுதி நீரிலிட்டார்

கூடவந்த ஏடெல்லாம் நீரலையில் கொண்டுசெல்ல

இந்தவொரு ஏடுமட்டும் எதிரெழுந்து நின்றதுவே

புனல்வாதம் வென்றதுவே புனிதரிவர் திருவருளால்!


சமணர் கழுவேற பொருத கவிவீர

வீண்வாது செய்திருந்த சமணரெல்லாம் தோற்றுவிட
தோற்றவர்க்கு விதித்தபடி எண்ணாயிரம் சமணரெல்லாம்

கழுமரத்தில் மாளச்செய்து சைவம் தழைக்கச்செய்யக்

கவிப்புலமை வீரம் காட்டிக் காத்திட்ட கவிவீரனே!


குருநாதா

சம்பந்தர் வடிவில் வந்துதித்த குருநாதனே!

மழுவுழை கபால டமரக த்ரிசூல மணிகர விநோதர்

அண்டிவரும் அடியாரின் பாவமெலாம் எரிக்கின்ற
மழுவென்னும் ஆயுதத்தை வலக்கையிலும்

இங்குமங்குமாய்த் துள்ளியோடி அல்லாடும்

மனமென்னும் மானை இடக்கையிலும்

அதிர்ந்துவரும் நாதவொலியால்

படைப்பினை நிகழ்த்திடும் உடுக்கினையும்

இச்சா,கிரியா,ஞானமெனும் மூவகைச்
சக்திகளை
மும்முனையாய்க் கொண்ட
திரிசூலமென்னும் ஆயுதமும்
செருக்குற்றப் பிரமனின்
ஐந்தலையில்
ஓர்தலையைக்
கிள்ளியெறிந்த கோபத்தால்
பாவம்வந்து சேர்ந்ததனால்

கையொட்டிக் கிடக்கும் மண்டையோடும்

மணியும் கைகளில் தாங்கிடும்

அற்புத உருவாம் சிவனாரின்


அருள்பாலா

அருளினால் தோன்றிட்ட சிவபாலனே!

மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய் முருகோனே


தன்னை மதியாத் தருக்கினில் கடந்த
பிரமனை அழைத்து ஆரென வினவ

செருக்குடன் "படைப்பவன்" எனவுரைசொன்ன

அயனை யுதைத்துத் தலையினில் குட்டிச்

சிறையினில் தள்ளி அயனவன் வேலையைத்

தானே நிகழ்த்திடப் பிரமனைப் போன்றே

ஒருமுகம், நாற்கரம் மாலை கமண்டலம்

கரங்களில் தாங்கிய பெருமையைப் பெற்ற

முருகப் பெம்மானே!


கழுகுதொழு வேத கிரி

கழுகுவந்து சிவம் தொழுதல்
யுகம்யுகமாய் நடக்குமிடம்


சண்டன், பிரசண்டரெனும்

இருகழுகு கிருதயுகத்தில்


சம்பாதி, சடாயுவெனும்

இருகழுகு திரேதத்தில்


சம்புகுத்தன், மாகுத்தன்

இருகழுகார் துவாபரத்தில்


சம்பு, ஆதியெனும்

இருகழுகார் கலியுகத்தில்


நாடோறும் நாடிவந்து

நண்பகலில் நான்மறையோதி


நல்லுணவு பெற்றுச்செல்லும்

நிகழ்வின்னும் நடக்குமிடம்


கழுகுவந்து பூசித்தலின்

கழுக்குன்றம் எனுமிந்த வேதகிரி


சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர்
கடல் ஒலியதான மறைதமிழ்கள் ஓது


மலைமுகட்டின் மணிமீது ஒளிபொங்கும் வாசல்முன்
நிறைந்ததொரு கூட்டமாய்
மறையோதும் வானவரும்
அழகுதமிழ்ப் பாடல்சொல்லும்
குரலொலிகள்
கடலலைபோல்
பெருத்தவொலி நிறப்பிவர
வணங்கிநிற்கும் செயல்புரியும்


கதலிவன மேவு

வாழைமரம் பெருகிநின்று தலைவளைத்துக்
குலைதள்ளும்
பெருவனமாய்ப் பொலிந்திருக்கும்
கழுக்குன்றம் தனிலுறையும்


பெருமாளே.

பெருமைமிகு முருகக் கடவுளே!
**********************
அருஞ்சொற் பொருள்:

எழுகு = ஏழு உலகு என்பதின் திரிபு
பரை = மேலான உமாதேவி

நாறு = வாசனை, மணம்

புழுகு = புனுகு என அழைக்கப்படும் வாசனைப் பொருள்

உழை = மான்

டமரகம் = உடுக்கு

விநோதர் = அற்புதமானவர்

அயன் = பிரமன்

கதலி = வாழை

******************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

Read more...

Monday, November 30, 2009

பிள்ளையார் கதை - 6

பிள்ளையார் கதை - 6

'பிள்ளையார் கதை'யைத் தொடர்ந்து, இன்னும் சில பதிகங்களைப் படித்தல் மரபு. அவை இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. கணபதி எல்லாம் தருவான்!

போற்றித் திருவகவல்

அருள்புரிந்து அருளும் அரசே போற்றி
இருவினை துடைக்கும் இறைவா போற்றி

மறைமுனி ஒருவன் மாங்கனி கொணர்ந்து
கறைமிடற்று இறைவன் கையில் கொடுப்ப

வேலனும் நீயும் விரும்பி முன்னிற்ப
ஒருநொடி அதனில் உலகெலாம் வலமாய்

வரும்அவர் தமக்கு வழங்குவோம் யாமென
விரைவுடன் மயில்மிசை வேலோன் வருமுனர்

அரனை வலம்வந்து அக்கனி வாங்கிய
விரகுள விக்கின விநாயக போற்றி

முன்னடி தெரியா முதல்வனைப் போற்றிப்
பின்னடி தெரியாப் பெருங்கவிப் பெருமான்

மண்மிசை வைத்துஉனை வாவியில் செல்லக்
கண்ணிலான் இவனெனக் கரந்துஅவன் போகக்

கரைமிசை ஏறிக் காணாது இரங்கி
உரைதடு மாறி உள்ளம் கலங்கிக்

கூகூ கணபதி கூகூ வென்னக்
கூகூ வென்றருள் குன்றே போற்றி

அப்பணி சடையோன் முப்புரம் எரிக்க
இப்புவி அதனை இரதம் ஆக்கித்

தினகரன் மதிதேர்ச் சில் இலதாகப்
பொருவரு மறைகளே புரவி யாகச்

சங்கைசேர் நான்முகன் சாரதி யாகப்
பங்கயக் கண்ணன் பகழி யாக

மலைசிலை யாக வாசுகி நாணா
நிலைபெற நிற்கு நெடுந்தேர் தன்னில்

விக்கினந் தீர்க்கும் விநாயக நமவெனச்
சிக்கென விறைவன் செப்பா தேறலின்

தச்சுறச் சமைத்த தகைமணி நெடுந்தேர்
அச்சறுத்து அருளும் அரசே போற்றி

வேதப் பொருளாம் விமலா போற்றி
பூதப்படை யுடைப் புனிதா போற்றி

கரம்ஐந்து உடைய களிறே போற்றி
பரமன் பயந்த பாலா போற்றி

அகிலம் ஈன்றுஅருளும் அம்மை தனக்குத்
திருமகன் ஆகிய செல்வா போற்றி

அற்றவர்க்கு அருள்புரி அரசே போற்றி
கற்றவர் மனதிற் காண்பாய் போற்றி

பாசாங் குசங்கை பரித்தாய் போற்றி
தேசார் மணிமுடித் தேவே போற்றி

எழுநரகு எழுபிறப்பு அறுப்பாய் போற்றி
எழுமையும் எமக்குஇங்கு இரங்குவாய் போற்றி

துளைசெறி வக்கிர துண்டா போற்றி
வளநிகர் ஒற்றை மருப்பா போற்றி

வரமிகும் அரிதிரு மருகா போற்றி
சுரர்தொழும் முருகன் துணைவா போற்றி

நல்லவர் புகழும் நம்பா போற்றி
வல்லபைக் குரிய மணாளா போற்றி

கயமுகத்து அவுணனைக் காய்ந்தாய் போற்றி
வயமிகு மூஷிக வாகனா போற்றி

ஓங்காரத் தனி யுருவே போற்றி
நீங்காக் கருணை நிமலா போற்றி

துறவர் தமக்கொரு துணைவா போற்றி
முறநிகர் தழைசெவி முதல்வா போற்றி

துண்ட மாமதிபோல் துலங்கிய கோட்டைக்
கண்டகம் ஆகக் கைதனில் பிடித்துப்

பண்டு பாரதப் பழங்கதை பசும்பொன்
விண்டுவில் வரைந்த விமலா போற்றி

போற்றி போற்றியுன் பொற்பதம் போற்றி
போற்றி போற்றியுன் பொற்பதம் போற்றி.
*************
போற்றித் திரு அகவல் முற்றிற்று.
**********
வருக்கைக்கோவை [உயிர்,மெய் எழுத்துக்களால் ஆனது இதன் சிறப்பு!]

ன்புடைக் கடவுளர்க்கு அதிபதி செயசெய
பத்து அகற்றும் ஐங்கர செயசெய

ந்துச் சடைமுடி இறைவா செயசெய
சன் பெற்ற எம்மான் செயசெய

ன்னிய முடிக்கும் ஒருவா செயசெய
ர்மனை சந்தி உகந்தாய் செயசெய

ம்பெரு மானே ஏகனே செயசெய
ழுல குந்தொழ இருப்பாய் செயசெய

யா கணங்கட்கு ஆதீ செயசெய
ற்றை மருப்பை உடையாய் செயசெய

ங்கிய கரிமுகம் உற்றாய் செயசெய
ஒளவியம் இல்லா தவனே செயசெய

அ,கர வணிந்த ஆதீ செயசெய
ண்மூன் றுடைய களிறே செயசெய

ப்போல் மழுஒன்று ஏந்தீ செயசெய
ங்கரன் தேர் அச்சு அறுத்தாய் செயசெய

யமுடை வித்தக நம்பீ செயசெய
இ,முடை விக்கி னேசுரா செயசெய

இ,ங்கிய அன்பர்க்கு இனியாய் செயசெய
த்துவம் உறைதரு சாமீ செயசெய

ன்னெறி வித்தக நம்பீ செயசெய
கீரதிக்கு இனிய பாலா செயசெய

ன்றுள் ஆடி மகனே செயசெய
இ,க்கரைக் களையும் இறைவா செயசெய

அ,வக் கிண்கிணி அணிவாய் செயசெய
இ,கக் கொம்புஒன்று ஏந்தீ செயசெய

ஞ்சனைப் பழவினை மாற்றுவாய் செயசெய
,ழகிய வேலனுக்கு அண்ணா செயசெய

இ,மத யானை முகத்தாய் செயசெய
இ,க்கரி சாடும் இறைவா செயசெய

அ,ந்தல் ஆடும் அரசே செயசெய
ரம்ஐந்துடைய கணபதி செயசெய

காமன் பகைவன் காதல செயசெய
கிரியில் பாரதம் தீட்டினாய் செயசெய

கீழ்மை ஒழித்துக் கிளர்வாய் செயசெய
குண்டப் பண்டிக் குருவே செயசெய

கூறிய மும்மதக் கோவே செயசெய
கெண்டையங் கண்ணுமை மகனே செயசெய

கேதாரப் ப்ரியம் ஆனாய் செயசெய
கையில் சக்கரம் உடையாய் செயசெய

கொவ்வைக் கனிவாய் மதலாய் செயசெய
கோலக் குடநிகர் வயிற்றாய் செயசெய

கௌவைப் பழவினை தீர்ப்பாய் செயசெய
**************
வருக்கைக் கோவை முற்றிற்று
***********
தத்துவ ஞானத் திருவகவல் [விநாயகர் அகவல் என வழங்கப்படும் இதன் விளக்கம் முன்னரே ஆத்திகம் வலைபூவில் அளிக்கப்பட்டிருக்கிறது! தேடினால் கிடைக்கும்!]

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞானும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமு மங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியு மிலங்கு பொன்முடியுந்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய மெய்ஞான
அற்புத னீன்ற கற்பகக் களிறே

முப்பழ நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது தென்னை யாட்கொள்ள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்துத்

திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் னுளந்தனிற் புகுந்து

குருவடிவாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடயு தத்தாற் கொடுவினை களைந்தே

உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியிற்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி

ஐம்புலன் றன்னை யடக்கு முபாயம்
இன்புறு கருணையி னினிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை யறுத்திருள் கடிந்து

தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி

ஆறா தாரத்து அங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடை பிங்கலையின் எழுத் தறிவித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து

மூலாதா ரத்தின் மூண்டெழு கனலைக்
காலா லெழுப்புங் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும்
எண்முக மாக வினிதெனக் கருளி

புரியட்ட காயம் புலப்பட வெனக்குத்
தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்

கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிட மென்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என்செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள்தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே.
**********
தத்துவ ஞானத் திருவகல் முற்றிற்று.
********

நூற்பயன்

பொன்னுமிகுங் கல்விபுகும் புத்திரரோ டெப்பொருளும்
மன்னு நவமணியும் வந்தணுகும் - உன்னி
ஒருக்கொம்பின் யானைமுக வுத்தமனார் நோன்பின்
றிருக்கதையைக் கேட்க சிறந்தது. (1)

பொற்பனைக்கை முக்கட் புகர்முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தி னோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்
கற்றவரு நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு. (2)

வெள்ளை யெருதேறும் விரிசடையோன் பெற்றெடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வர் நோலாதருகிருந்து
கேட்டோர்க்கும் வராது கேடு. (3)

சூலிலார் நோற்கிற் றுணைவர் தமைப்பெறுவார்
சாலமிகும் வெங்கலியார் தாநோற்கில் - மேலைப்
பிறப்பெல்லா நல்ல பெருஞ்செல்வ மெய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து. (4)

வரத பண்டிதர் இயற்றிய "பிள்ளையார் கதை "முற்றிற்று.
************************
[கணபதி எல்லாம் தருவான்.]

Read more...

பிள்ளையார் கதை-5

"பிள்ளையார் கதை"-5

[605-745] இவ்விரதத்தின் பயனும், இதனை முறையாகச் செய்யாதவர்க்கு நிகழ்ந்த தீங்கும் இறுதியாகச் சொல்லப்படுகிறது.


கண்ணநீ கண்ணிலாக் கட்செவி ஆகுஎனக்
தண்நறுங் குழலுமை சாபமிட் டதுவும்

அக்கு நீறணியும் அரன்முதல் அளித்த
விக்கின விநாயகன் விரதம் நோற்றுஅதன்பின்

சுடர்க்கதை ஏந்துந் துளவ மாலையன்
விடப்பணி யுருவம் விட்டு நீங்கியதும், [610]
[துளவம்= துளசி]

பவுரிகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக்
கவுரிஅன்று அடைத்த கபாடந் திறந்ததும்,

வாசமென் குழலுடை மாதுமை நோற்பத்
தேசம் போகிய செவ்வேள் வந்ததும்,

வானவர் நோற்று வரங்கள் பெற்றதும்,
நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே

இந்நிலந் தன்னில் இவ்விர தத்தை
மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக்

காயத் தெழுந்த கடும்பிணி தீர்த்து
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து [620]

தடமுலைத் திலோத்தமை தனைமணம் புரிந்து
மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
[மழவு= யானை; விடை=எருது, காளை]

கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான்
[முறையாய் விரதம் நோற்காத இலக்கணசுந்தரி பட்ட பாடு]
பரிவொடு இவ்விரதம் பாரகந் தன்னில்

விரைகமழ் நறுந்தார் விக்ர மாதித்தன்
மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள்

மற்றவன் காதல் மடவரல் ஒருத்தி
இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி

மெத்த அன்புடன் இவ் விரதம் நோற்பேனென
அத்தந் தன்னில் அணியிழை செறித்துச் [630]
[அத்தம்= ஹஸ்தம், கை]

சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின்
உற்ற நோன்பின் உறுதி மறந்து

கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து
வற்றிய கொவ்வையின் மாடே போட
[கொவ்வை= கொவ்வைக்கொடி நிறைந்த புதர்]

ஆங்குஅது தழைத்தே அலருந் தளிருமாய்ப்
பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு

வேப்பஞ் சேரியிற் போய்ச் சிறையிருந்த
பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி

அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற்
கொவ்வை அடகு கொய்வாள் குறுகி [640]
[அவ்வியம்=ஔவியம், பொறாமை]

இழையது கிடப்பக் கண்டுஅவள் எடுத்துக்
குழைதவிழ் வரிவிழிக் கோதை கைக்கட்டி

அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச்
செப்ப முடனே திருந்திழை நோற்றிடக்
[அடைக்காய்= பாக்கு]

கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து
பண்டையில் இரட்டி பதம் அவட்கு அருள

கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான்
விக்கிர மாதித்தன் விழிதுயில் கொள்ள

உக்கிர மான உடைமணி கட்டித்
தண்டையுஞ் சிலம்புத் தாளினின்று ஒலிப்பக் [650]

கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன்
மனமிகக் கலங்கு மன்னவன் தன்னிடங்
[கொண்டல்=மேகம்]

கனவினில் வந்து காரண மாக
இலக்கண சுந்தரி இம்மனை யிருக்கிற்

கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத்
துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக்
[துண்ணென= திடுக்கிட்டு]

கண்ணுறக் கண்ட கனவின் காரணம்
அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில்

ஆனை குதிரை அவைபல மடிவுற
மாநகர் கேடுறும் வகையது கண்டு [660]

இமைப் பொழுதுஇவள் இங்கு இருக்க லாகாதுஎன
அயற் கடைஅவனும் அகற்றிய பின்னர்

வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப
மணியும் முத்தும் வலிய கல்லாய்விட

அணியிழை தன்னை அவனும் அகற்ற
உழவர் தம்மனையில் உற்றுஅவள் இருப்ப

வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற
அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க்

குயவன் மனையிற் கோற்றொடி செல்லக்
குயக்கலம் உடைந்து கொள்ளை போக [670]

அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்த்
தூசுதூய்து ஆக்குந் தொழிலோர் மனைபுகத்

தூசுக ளெல்லாந் துணிந்து வேறாகத்
தூசரும் அவளைத் தூரஞ் செய்ய

மாலைக் காரன் வளமனை புகலும்
மாலை பாம்பாம் வகையது கண்டு

ஞாலம் எல்லாம் நடுங்கவந்துஉதித்தாய்
சாலவும் 'பாவிநீ தான்யார்?' என்ன

வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா
அம்மனை அவனும் அகற்றிய பின்னர் [680]

அவ்வை தன்மனை அவள்புகுந் திருப்ப
அவ்வை செல்லும் அகங்கள் தோறும்

வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர்
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர்

அவ்வை மீண்டுதன் அகம் அதிற் சென்று
இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக்

காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட
மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி

எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி
சொல்லு விக்கிரம சூரியன் மனையெனச் [690]

சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி
நீரது கொண்டு நிலம்மெழு கிடுகஎனச்

சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றாள்
சாணியும் புழுத்துத் தண்ணீர் வற்றிப்

பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற
மானேர் விழியாள் வருந்துதல் கண்டு

தானே சென்று சாணி யெடுத்துத்
தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு

மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப்
புத்தகம் எடுத்து வாவெனப் புகலப் [700]

புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட
மெத்தஉள் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக்

கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி
அவ்வை தானே அகமதிற் சென்று

புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து
வித்தக நம்பி விநாயக மூர்த்தி

கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென
உத்தமி அவ்வை உணர்ந்து முன்அறிந்து

தவநெறி பிழைத்த தையலை நோக்கி
துவலரும் விநாயக நோன்பு நோற்றிடுகஎனக் [710]

கரத்து மூஏழுஇழைக் காப்புக் கட்டி
அப்பமும் அவலும் மாம் பல பண்டமுஞ்

செப்ப மதாகத் திருமுன் வைத்தே
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு

மத்தகக் களிற்றின் மகா விரதத்தை
வித்தக மாக வியங்குஇழை நோற்றுக்

கற்பக நம்பி கருணை பெற்றதன்பின்,
சக்கர வாள சைனி யத்தோடு

விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று
தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி [720]

எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே
அவ்வை தன்மனை அங்குஅவர் அணுக

எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு
செவ்வே அவற்றைத் தீர்க்க வெண்ணி

இலக்கண சுந்தரி என்பவள் தன்னை
அப்பமும் நீரும் அரசற்கு அருள்எனச்

செப்பிய அன்னை திருமொழிப் படியே
உண்நீர்க் கரகமும் ஒரு பணிகாரமும்

பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ
ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும் [730]

அப்பசி தீர அருந்திய பின்னர்
ஆனை குதிரை அவைகளும் உண்டுந்

தான்அது தொலையாத் தன்மையைக் கண்டே
இவ்வகை சமைத்தநீ யாரென வினவ

மவ்வல்அம் குழலாள் மௌனமாய் நிற்ப
அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள்

கணபதி நோன்பின் காரணங் காண்இது
குணமுடை இவள்உன் குலமனை யாட்டி

இலக்கண சுந்தரி என்றுஅவ்வை கூற
மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து [740]

திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக்
கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும்

ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன்
சிந்துர நுதலார் சென்றுஅடி பணியச்

சுந்தரி இருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே.[745]

காப்பு

கரும்பும் இளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பும் அவல்பலவும் மேன்மேல் - அருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங்
கணபதியே காப்பு.

திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி
வரும்அரன்தான் ஈன்றருளு மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா உனைத்தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

நூற்பயன்

பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும்
மன்னும் நவமணியும் வந்துஅணுகும் - உன்னி
ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின்
திருக்கதையைக் கேட்கச் சிறந்து.

பொற்பனைக்கை முக்கண் புகர்முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்
கற்றவரும் நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.

வெள்ளை எருதுஏறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகுஇருந்து
கேட்டோர்க்கும் வாராது கேடு.

சூலிலார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார்
காலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் - மேலைப்
பிறப்புஎல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து.

பிள்ளையார் கதை முற்றுப்பெற்றது.
திருச்சிற்றம்பலம்.
**********************
இதனைத் தொடர்ந்து, விநாயகர் போற்றித் திருவகவல், வருக்கைக் கோவை, தத்துவ ஞானத் திருஅகவல் முதலியன ஓதி முடிப்பது மரபு என்பதால், அதனையும் அடுத்து இடுகிறேன்.

[அடுத்த பதிவில் நிறைவுறும்]

Read more...

பிள்ளையார் கதை - 4

"பிள்ளையார் கதை - 4"

[401-604] திருமுருகன் அவதாரம் 404 முதல் 450 முடியவும், விநாயகசட்டி விரதம் 528 முதல் 569 முடியவும் இதில் முறையாகக் கூறப்பட்டுள்ளது.]

அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார்.
[திருமுருகன் அவதாரம்]
ஈங்கு இது நிற்க இவ்விர தத்துஇயல்

ஓங்கிய காதைமற் றொன்று உரை செய்வாம்
கஞ்சநான் முகன் தரும் காசிபன் புணர்ந்த

வஞ்சக மனத்தாள் மாயைதன் வயிற்றிற்
சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி

ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அழித்தே
சீருடைச் சுவர்க்கத் திருவளங் கெடுத்தும்

புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும்
நிரந்தரந் தீய நெறிநடத் துதலால் [410]

ஆயிரங் கண்ணனும் அமரரும் முனிவரும்
நீஇரங்கு எமக்கென நெடுங்கரங் கூப்பி

இரசத கிரிஉறை இறைவனை வணங்கி
வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச்

சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக்
கதிர்விடு வடிவேல் கரதலத்து ஏந்தும்

புதல்வனைத் தருவோம் போமின் நீர் என
அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச்

சமரவேல் விழித் தையலுந் தானுங்
கூடிய கலவியிற் கூடாது ஊடலும் [420]

ஓடிய வானோர் ஒருங்குடன் கூடிப்
பாவகன் தன்னைப் பரிவுடன் அழைத்துச்

சூரன் செய்யுந் துயர மெல்லாம்
ஊர் அரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக்

காமனை யெரித்த கடவுளென் றஞ்சிப்
பாவகன் பயமுறப் பயமுனக்கு ஏதென
[பாவகன்= அக்னி தேவன்]

உற்றிடுங் கரதலத்து உன்னையே தரித்தான்
நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற்

குற்றம் அடாது கூறுநீ சென்றென
வானவர் மொழிய மற்றவன் தானுந் [430]

தானும் அச் சபையில் தரியாது ஏகி
எமைஆளுடைய உமையா ளுடனே

அமையா இன்பத்து அமர்ந்துஇனிது இருந்த
பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும்

ஒள்ளிய மடந்தை ஒதுங்கி நாணுதலுந்
தெள்ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே
[தேயு=தீ]

ஆறுமுகப் பிள்ளையை அவன்கையில் ஈதலும்
வறியவன் பெற்ற வான்பொருள் போலச்

சோதி நீண்முடிச் சுடரோன் கொணர்ந்து
வாத ராசன் மலர்கையிற் கொடுப்ப [440]

நீதி யோடு நின்று கையேந்திப்
போதநீள் வாயுவும் பொறுக்க ஒண்ணாமல்

தரும்புனற் கங்கை தன்கையில் கொடுப்பத்
தரும்புனற் கங்கையுந் தாங்கவொண் ணாமற்

பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத்
தண்ஆர் வதனத் தாமரை ஆறுங்

கண்ஆறு இரண்டுங் கரம் ஈராறுந்
தூண் எனத் திரண்ட தோள் ஈராறும்

மாண் அயில் ஆதி வான்படை யுங்கொண்டு
அறுமுகக் கடவுள் அங்கு அவதரித் திடலும் [450]

மறுகிய உம்பர் மகிழ்ந்துஉடன்கூடி
அறுமீன் களைப்பால் அளித்தீர் என்றுஅனுப்ப

ஆங்கவர் முலையுண்டு அறுமுகன் தானும்
ஓங்கிய வளர்ச்சி யுற்றிடு நாளில்

விமலனும் உமையும் விடையுகைத்து ஆறு
தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து

முருகுஅலர் குழல் உமை முலைப்பால் ஊட்ட
இருவரும் இன்பால் எடுத்துஎடுத்து அணைத்துத்

தேவர் தம்படைக்குச் சேனா பதியெனக்
காவல்கொண்டு அளிக்கக் கதிர்முடி சூட்டி [460]

அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத்
திசையெலாஞ் செல்லுந் தேருமொன்றுஉதவிப்

பூதப் படைகள் புடைவரப் போய்நீ
ஓதுறும் அவுணரை ஒறுத்திடு என்றனுப்ப

இருளைப் பருகும் இரவியைப் போலத்
தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக்

குருகுபேர் பெறுங் குன்றமுஞ் சூரன்
மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே

யாவரும் வியப்புற இந்திரன் மகளாந்
தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு [470]

அமரர் கோனுக்கு அமருலகு அளித்துக்
குமர வேளுங் குவலயம் விளங்க

அமரா வதியில் அமர்ந்து இனிது இருந்தான்
சமரவே லுடைச் சண்முகன் வடிவுகண்டு

அமரர் மாதர் அனைவரும் மயங்கி
எண்டருங் கற்பினை யிழந்தது கண்டே

அண்ட ரெல்லாம் அடைவுடன் கூடி
மாதொரு பாகனை வந்துஅடி வணங்கி

மருமலர்க் கடம்பன் எம் மாநகர் புகாமல்
அருள்செய வேண்டும்நீ அம்பிகா பதியென [480]

இமையவர் உரைப்ப இறையவன் தானுங்
குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக்

காவல்கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ்
சேவலங் கொடியோன் தேசம் போகத்

திருந்திழை உமையாள் அருந்துயர் எய்தி
வருந்திமுன் னிற்க மங்கையைப் பார்த்து

மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி
அங்கையாற் சூதெறிந்து ஆடுவோம் வாவென

வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக்
குன்றமென் முலையாள் கூறிய சமயம் [490]

புற்றுஅரவு அணிந்த புனிதனைக் காணஅங்கு
உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற்

சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து
மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச்

சாயக நேருந் தடநெடுங் கருங்கண்
நாயகி வெல்ல நாயகன் தோற்ப

இன்பவாய் இதழ் உமை யான்வென்றேன் என
எம்பெரு மானும் யான்வென்றேன் என

ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி
இருவருஞ் சாட்சியம் இவனைக் கேட்ப [500]

மாமனை வதைத்த மால்முகம் நோக்கிக்
காமனை யெரித்தோன் கண்கடை காட்ட

வென்ற நாயகி தோற்றா ளென்றுந்
தோற்ற நாயகன் வென்றா னென்றும்

ஒன்றிய பொய்க்கரி உடன் அங்கு உரைப்பக்
கன்றிய மனத்தொடு கவுரி அங்குஉருத்து

நோக்கிநீ இருந்தும் நுவன்றிலை யுண்மை
வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய்

மைக்கரி யுரித்தோன் வதனம் நோக்கிப்
பொய்க்கரி யுரைத்த புன்மையி னாலே [510]

கனலென வயிற்றிற் கடும்பசி கனற்ற
நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க்

கடகரி முகத்துக் கடவுள் வீற்றிருக்கும்
வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள்

முளரிகள் பூத்த முகி்ல் நிறத்து உருப்போய்த்
துளவு அணி மருமனுந் துணைவிழி யிழந்தே
[முளரி=சந்திரன்; துளவு=துளசி]

ஆண்டு அரைக் கணத்தில் ஆயிரம் யோசனை
நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து
[பாந்தள்= பாம்பு]

வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல் வீற்றிருக்குங்
கிளர்சினை ஆலின் கீழ்க்கிடந் தனனால் [520]
[மருப்பு= கொம்பு, தந்தம்]

திரிகடக் கரியின் திருமுகக் கடவுளும்
வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே

எழில்பெறு வடமரத் தின்கீழ் இருந்தான்

[விநாயகசட்டி விரதம் 524 முதல் 569 முடிய இதில் முறையாகக் கூறப்பட்டுள்ளது.]

கம்ப மாமுகத்துக் கடவுள்தன் பெருமையை
[கம்பம்= தூண் போன்ற கால்களை உடையதால் இங்கு யானையைக் குறித்தது]

அம்புவி யோருக்கு அறிவிப் போம் என
உம்பர் உலகத்து ஓர் எழு கன்னியர்
[உம்பர்=தேவர்]

தம்பநூல் ஏணியில் தாரணி வந்து
கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக்

கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்தபின் னாளில்
ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி [530]
[கலிங்கம்= பட்டாடை]

இருபத் தோர் இழை இன்புறக் கட்டி
ஒருபோது உண்டி உண்டு ஒரு மனமாய்

வேதத்து ஆதியும் பூமியில் எழுத்தும்
ஆதி விநாயகற்கு ஆன எழுத்தும்

மூன்றெழுத்து அதனால் மொழிந்த மந்திரமும்
தேன்தருங் குழலியர் சிந்தையுட் செபித்தே

உரைதரு பதினாறு உபசா ரத்தால்
வரைமகள் மதலையை வழிபாடு ஆற்றி

இருபது நாளும் இப்படி நோற்று
மற்றைநாள் ஐங்கர மாமுகன் பிறந்த [540]

அற்றைநாள் சதயமும் ஆறாம் பக்கமுஞ்
சேரும் அத் தினத்தில் தெளிபுனல் ஆடி

வாரண முகத்தோன் வதிபெருங் கோயில்
சீர்பெற மெழுகித் திருவிளக் கேற்றிக்

குலவுபொற் கலைகள் கொடு விதானித்து
உலர்பல தொடுத்திடு மாலைகள் ஆற்றிக்

கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை
மலைமுகக் கடவுளை மஞ்சனம் ஆட்டிப்

பொற்கலை நன்னூற் பூந்துகில் சாத்திச்
சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிக் [550]

செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு
குருத்து மல்லிகை கோங்கொடு பிச்சி

கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி
மருவிரி ஞாழல் மகிழ் இரு வாட்சி

தாமரை முல்லை தழையவிழ் கொன்றை
பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை

காந்தள் ஆத்தி கடம்பு செவ்வந்தி
வாய்ந்த நல்எருக்கு மலர்க்கர வீரம்

பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு
முத்தளக் கூவிளம் முதலிய சாத்தித் [560]
[முத்தளக் கூவிளம்= மூன்று தலைகளுடைய வில்வம், த்ரிதள வில்வம்]

தூப தீபங்கள் சுகம்பெறக் கொடுத்தே
அப்பம் மோதகம் அவல் எள் ளுண்டை

முப்பழந் தேங்காய் முதிர்முழுக் கரும்பு
தேனுடன் சர்க்கரை செவ்விள நீருடன்

பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன்

பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி
நோற்பது கண்டு நோலாது இருந்த

பாப்புரு வாகிய பஞ்சா யுதனும்
யாப்புறு கொங்கையீர் யானும் நோற்பேன் என [570]

ஆங்கு அவன் தனக்கும் வேண்டுவது அளித்துப்
பாங்கொடு இவ்விரதம் பரிந்து நோற்பித்தார்

அண்டர் நாயகனாம் ஐங்கரன் அருளால்
விண்டுவும் பண்டுஉள வேடம் பெற்றே
[விண்டு= விஷ்ணு; பண்டு=பழைய, பழைமை]

உஞ்சைமா நகர்புகுந்து உமையொடு விமலன்
கஞ்சநாள் மலர்ப்பதங் கைதொழு திடலும்
[உஞ்ஞை= உஜ்ஜயினி என்னும் அவந்தி]

பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின்
வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி

யானிடுஞ் சாபம் நீங்கியது ஏதென
மானெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப [580]

இறையவன் இதற்குக் காரணம் ஏதென
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்
[மறிகடல்= அலை வந்து திரும்பிச் செல்லும் கடல்]

பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளைஅன்று எனக்குத்
தந்தருள் புரிந்த தவப்பயன் ஈதெனச்

சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும்
பூங்கொடி அடைத்த பொன்தாழ் நீங்கச்

சாங்குமுன் உரைத்த சக்கர பாணி
இக்கதை சொல்ல அக்கணி சடையனும்
[சாங்கு= அம்பு, [அம்பு விட்டு கடலை வற்றச் செய்த இராமன் கதை]]

மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின்
மாதுஉமை அடைந்த வன்தாழ் நீக்கி [590]

நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான்
தானோ வந்தது நகையா னதுவெனத்
[நம்பன்=சிவன்]

தேன்நேர் மொழியாள் தெளியக் கூறென
நன்மதி நுதலாய் நானிலந் தன்னில்

உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து
சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென

அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப்
பொருஞ் சூர் அறவேல் போக்கிய குமரன்

வரும்படி யானும் வருத்தி நோற்பேனென
இறையவன் கதைசொல ஏந்திழை நோற்றபின் [600]

குறமட மகளைக் குலமணம் புரிந்தோன்.
சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து

தாதுமை வண்டுஉழுந் தாமத் தாமனை
மாதுமை யாளை வந்து கண்டனனே
[
தாது மைவண்டு உழும் தாமத் தாமன்= ஆதி சிவன்].
*************
[இன்னும் வரும்]

Read more...

பிள்ளையார் கதை - 3

"பிள்ளையார் கதை" - 3

[201-400] [இந்தப் பதிவில், ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதமுறை சொல்லப்பட்டிருக்கிறது]

கானமர் கொடிய கடுவி லங்காலுங்
கருவி களாலுங் கால னாலும்

ஒருவகை யாலும் உயிர ழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்

வரம் பெறுகின்ற வலிமை யினாலே
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக்

கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி

இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி [210]

அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி

முறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன்
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே

அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி
ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன்

சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி

வென்றுவா வென்று விடைகொ டுத்தருள
ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப் [220]

பாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின்
தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற்

கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்

குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே
சோர்ந்த வன்வீழ்ந்து துண்ணென எழுந்து

வாய்ந்த மூடிகமாய் வந்துஅவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி

எந்தை விநாயகன் ஏறினன் இப்பால்
எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில் [230]

செறிந்தது மற்றுஅவன் திருக்கரத் தினிலே
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்

வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே
ஓகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ

வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும்

திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக்
கணபதீச் சுரம் எனுங் காரண நாமம்

கணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ [240]

இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி

இணங்கிய பெருமைபெற்றுஇருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்

யாவரும் வந்துஇவண் ஏவல் செய்திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்

மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி

மனாதிகள் களித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள் [250]

ஒப்பரும் விரதத்துஉறும்ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்

போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை
மருமலர் தூவும் வானவர் முன்னே

நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற

வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமுந்

தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் [260]

கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்

உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்

அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான்
விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக்

கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்

மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென் [270]

இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
*********
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்

வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த

தருமனும் இளைய தம்பி மார்களுந்
தேவகி மைந்தன் திருமுக நோக்கி

எண்ணிய விரதம் இடையூ றின்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண் டாகவுஞ்

செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் [280]

எந்தத் தெய்வம் எவ்விர தத்தை
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப்

பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்துத லுற்றான்

அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி

ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்

கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன் [290]

சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்

ஒருகையில் தந்தம் ஒருகையிற் பாசம்
ஒருகையின் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்

உத்தம மாலையோன் உறுநினை வின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்

என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்

புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் [300]

வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்

ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தாற்
தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண் டாகும் [304]

கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்

சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்

மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு [310]

நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்

விரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்

தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்

முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
[புலரி=விடியல்]

அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் [320]

வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்தன்
ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
[ஒள்ளிய=ஒளிவிளங்கும்]

பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
[ஆசு=குற்றம்]

பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
[மஞ்சரி=பூங்கொத்து]

கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
[கோடிகம், கோசிகம்=துணி, ஆடை]

விந்தைசேர் சித்தி விநாயக னுருவைச்
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி [330]

ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம்
வாகார் ஆச மனம்வரை கொடுத்து

ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக்
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்

ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால்
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்

பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால்
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
[பளிதம்=கற்பூரம்]

பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப்
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே [340]

உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
குமார குரவன் பாசாங் குசகரன்

ஏக தந்தன் ஈசுர புத்திரன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்

சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி யென்னும் நாமங்களால்

ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி
மோதகம் அப்பம் முதற்பணி காரந்

தீதுஅகல் மாங்கனி தீங்கத லிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு
[வருக்கை=வருக்கைப்பலா, கபித்தம்=விளாம்பழம்] [350]

தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்
[நெட்டிலைத் தாழை=வெற்றிலை, முப்புடைக்காய்=[மூன்று பிரிவுகளை உடைய] தேங்காய்; பொரிக்கறி=புளியிடாமல் பொரித்த கறி; போனகம்=சோறு]

விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால்

நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நா னான்குஉப சாரமும்
[நானான்கு உபசாரம்= பதினாறு வகையான உபசார ஆவாஹனம், தாபனம், சந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம். தேனுமுத்திரை, பாத்யம், ஆசமநியம், அர்க்யம், புஷ்பதானம்,தூபம்,தீபம்,சைவேத்யம்,பாநீயம்,ஜபஸமர்ப்பணை,ஆராத்திரிகம்.]

மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு

உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச்
சந்தன முத்துத் தானந் தக்கிணை
[தக்கிணை=தட்சணை] [360]

அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்

தரித்த வத் திரத்துடன் தானமாக் கொடுத்து
நைமித் திகம் என நவில்தரு மரபால்
[நைமித்திகம்= முறையாக விசேஷ காலங்களில் செய்யப்படும் விழா]

இம்முறை பூசனை யாவர் செய்தலும்
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்

திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்
[செரு=போர்]

புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி [370]

விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான்
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்

பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
[பகர்=ஒளி]

அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்

ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேரறக் களைந்து

தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான்
பகிரத னென்னும் பார்த்திவன் இவனை [380]

மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
[வரநதி=கங்கை]

அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்

உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்தான்
[ஒண்டொடி= ஒள்+தொடி= ஒளி பொருந்திய கைவளைகளை அணிந்தவள், [வவ்வு=கொள்ளையிடு, கவர்தல்]

கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
வண்டு பாண்மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்
[பாண்=கள்]

தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் [390]

புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்
[புகர்முகம்=புள்ளிகள் நிறைந்த முகம் உடைய யானை]

இப்புவி தன்னில் எண்ணிலர் உளரால்
அப்படி நீவிரும் அவனை யர்ச்சித்தால்

எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்றுகன் றெரிந்தோன் எடுத்திவை உரைப்ப
[கன்றெறிந்தோன்= திருமால், 'கன்று குணிலா எறிந்தோய் கழல் போற்றி']

அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை
[கட் புலன் இலான்= கண்பார்வை இல்லாத திருதாஷ்டிரன்]

நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்
சிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு [400]
**************
[இன்னும் வரும்]

Read more...

"பிள்ளையார் கதை" -2

"பிள்ளையார் கதை" -2

இலக்கண முறைப்படியே இந்த நூல் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும், படிப்பவர்க்கு வசதியாக, எளிதில் பொருள் உணர்ந்துகொள்ளும் விதமாய், இதனைப் பதம் பிரித்து இங்கு அளிக்கிறேன். இலக்கிய, இலக்கண ஆர்வலர்கள் என்னை மன்னிப்பார்களாக! டிசம்பர் 2-ம் தேதி இந்த விரதம் தொடங்கவிருப்பதால், பதிவுகளை அடுத்தடுத்து விரைவாக அளிக்கிறேன்.

நூல்:

மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர்
இந்துவளர் சோலை இராசமா நகரியில்

அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்

கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்

புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடு நாளின்

மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் [10]

பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென

அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில்
மைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப

எப்பரி சாயினும் எம்பொருட்டு ஒருசுதன்
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென

எமையா ளுடைய உமையாள் மொழிய
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு

பெண்சொற் கேட்டல் பேதைமை யென்று
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் [20]

பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
மாதுஉமை யவளும் மனந்தளர்வு உற்றுப்

பொன்றிடு மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்

கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்

சென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால்
மன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று

விடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும்
பெடைம யிற்சாயற் பெண்மக வாகித் [30]

தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்

பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற இயல்பின ளாகி

ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும்
மையார் கருங்குழல் வாள்நுதல் தன்னை

மானுட மறையோற்கு வதுவை செய்திடக்
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்

பிறப்பிறப் பில்லாப் பெரியோற்கு அன்றி
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என [40]

மற்றவன் தன்னைஉன் மணமக னாகப்
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச

அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக்
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து

மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்

பணியணி பற்பல பாங்கியர் சூழ
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் பயில

அரிவைதன் அருந்தவம் அறிவோம் யாமென
இருவரு மறியா விமையவர் பெருமான் [50]

மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து
மானிட யோக மறையவன் ஆகிக்

குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு
மடமயில் தவம்புரி வாவிக் கரையில்

கண்ணுதல் வந்து கருணை காட்டித்
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி

மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்

கொன்றை வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும்
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் [60]

மாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக்
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்

பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ்
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்

பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை
நச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப்

பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்
ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச்

சேடியர் வந்து செழுமலர் குழலியை
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் [70]

சிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த்
தந்தைதா யிருவர் தாளினை வணங்கி

வாவிக் கரையில் வந்தொரு மறையோன்
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந்

தோடு அலர்கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன

மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி
நீடிய புகழாய் நீஎழுந்து அருள் என

மைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில்
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் [80]

பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்

சிவனை இகழ்ந்த சிற்றறி வுடையோன்
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று

சிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி

நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லதென்
பொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்

மானிட வேட மறையவன் தனக்கு
யான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப [90]

மலையிடை வந்த மாமுனி தன்னை
இணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்

தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து

தாய்சொல் மறுத்தல் பாவமென்று அஞ்சி
ஆயிழை தானும் அவனெதிர் சென்று

சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து

ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி [100]

ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப்
பாத பூசனைகள் பண்ணிய பின்னர்ப்

போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை

தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து
அந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச்

சந்தனங் குங்குமச் சாந்துஇவை கொடுத்துத்
தக்கோ லத்தொடு சாதிக் காயும்

கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் [110]

ஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச்
சிவனெனப் பாவனை செய்து நினைந்து

தவமறை முனிவனைத் தாளிணை வணங்கத்
தேனமர் குழலி திருமுக நோக்கி

மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்

நெற்றியில் நயனமும் நீல கண்டமும்
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்

கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல்
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் [120]

கரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப
மரகத மேனி மலைமகள் தானும்

விரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்

கருடர் கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்

பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க்

கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும்
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் [130]

மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்

பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி
மாணிக் கத்தால் வளைபல பரப்பி

ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப்

பக்திகள் தோறும் பலமணி பதித்துத்
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப்

பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப் [140]

பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக்
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்

பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்

குலவிய திருமணக் கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்

திருமணக் கோலஞ் செய்தன ராங்கே
எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும்

உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக்
கடலென விளங்கும் காவணந் தன்னில் [150]

[151 முதல் 199 வரை] [சிவன், உமை திருக்கல்யாணமும், விநாயகர் அவதாரமும் இதில் கவனிக்கத் தக்கது.]

சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல்
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்

பறையொ லியோடு பனிவளை ஆர்ப்ப
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே

சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத்
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்

சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து

பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே [160]

ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக
ஏரார் வழியில் எண்திசை தன்னைப்

பாரா தேவா பனிமொழி நீயென
வருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத்

திருந்துஇழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு

ஒளிர்மணிப்பூணாள் உரவோ னுடனே
இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென

அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு
மதகரி யுரித்தோன் மதகரி யாக [170]

மதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக்
கூடிய கலவியில் குவலயம் விளங்க

நீடிய வானோர் நெறியுடன் வாழ
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்

செந்தழல் வேள்விவேத ஆகமம் சிறக்க
அறம்பல பெருக மறம்பல சுருங்கத்

திறம்பல அரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு

ஐங்கர தலமு மலர்ப்பதம் இரண்டும்
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந் [180]

தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும்
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும்

பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங்

கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந்
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்

ஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும்
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்

மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் [190]

மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க
ஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித்

தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரண மாகப் பலகனி யருந்தி

ஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்

காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து

தெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின்
வான வராலும் மானு டராலும் [200]
**************
[விரைவில் தொடரும்]

Read more...

"பிள்ளையார் கதை"

"பிள்ளையார் கதை" -1

வருகின்ற டிசம்பர் மாதம் 1-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள், திருக்கார்த்திகை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்!
இந்த நாளுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு!
விநாயகப் பெருமானுக்கான விநாயக சஷ்டி விரதம் அனுஷ்டிப்போர் இதற்கு அடுத்த [கார்த்திகைக் கார்த்திகை கழிந்த பின்னாளில்] நாளில் தான் காப்பு கட்டி 21 நாள் விரதமிருக்கப் பூசனை செய்யத் தொடங்குவர்.
இதனை விளக்கும் "பிள்ளையார் கதை" என்னும் நூலை இங்கு அளிக்கிறேன்.

இதனை எழுதியவர் திரு.வரத பண்டிதர் என்னும் புலவர். திரு. வரத பண்டிதர் (1656 - 1716) யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் மகன். இலக்கியம், இலக்கணம், மருத்துவம் முதலியவற்றிற் சிறந்த புலமை படைத்தவர்.
இவரது செய்யுள் நூல்கள்: சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம், அமுதாகரம், கிள்ளைவிடுதூது, பிள்ளையார் கதை.

ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட இந்நூலைப் படித்துப் பாராயணம் செய்து விரதம் அனுஷ்டிப்போர் எண்ணற்றவர்.
அனைவருக்கும் விநாயகர் அருள் கிட்ட வேண்டி இதனைத் துவங்குகின்றேன்.

யாவினும் நலம் சூழ்க!
"கணபதி எல்லாம் தருவான்!"
*********************
சிவமயம்
விநாயகர் மகிமை

பிரணவ வடிவமே விநாயகர், தமக்கு மேலான நாயகர் இல்லாத பெருமான் என்பதே சொற்பொருள். தேவர், மனிதர் முதலிய, யாவராலும் முதலில் வழிபடப்படுபவர் மூத்த பிள்ளையாரே. “விக்கின விநாயக பாத நமஸ்தே” என்பர் வட நூலார். தம்மை நினைவாரது இடையூறுகளைப் போக்கியும், நினையாதார்பால் துன்பங்களை உளவாக் கியும் விளங்குதலால் விநாயகருக்கு விக்கினேசுவரர் என்ற திருநாமமுளதாயிற்று.

சிவபிரான், திரிபுர தகனஞ் செய்யச் செல்லுங்கால் நினையாமையால் அவர் சென்ற தேரின் அச்சிறச் செய்தார் என்பர். அச்சிறு பாக்கம் இன்றும் உளது.
பாற்கடல் கடையும்போது திருமால் முதலினோர் சிந்தியாமையால், கணேசமூர்த்தி மந்தர மலையைச் சாய்த்தனர் என்றும் கூறுவர்.

ஒளவையார் பூசையை ஏற்றுக் கயிலை சேர்த்த அனுக்கிரக மூர்த்தி விநாயகரே! சேரமான் குதிரை கயிலை சார ஒளவையாரை விநாயகப் பெருமான் துதிக் கையாலெடுத்துக் கயிலையில் இட்டனர். இதனால்,
“கிழவியுங் காதம், குதிரையுங் காதம்”
என்றார் முன்னோர். நன்மை நாடொறும் நணுக விநாயகப் பெருமானைப் போற்றி நலம் பெறுவோமாக.
சுபம்.

விநாயகர் விரதம்
மக்கள் சாந்த வழிபாடு செய்வதில் விரதங்களும் ஒன்றாகும். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தி வணக்க முடைமையால் ஆன்ம உய்தி பெறலாம்.
விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது.

“வின்னாமம் புகல்கின்ற மக்கமதி ஆறாம் பக்கம்”
என்பதால் அறியலாம் (வில் - தனுர்மாசமான மார்கழி) யாழ்ப்பாணத்தில் இருபத்தொருநாளும் நியமமாக விநாயக வழிபாட்டுடன் அனுஷ்டிப்பவர் பலர் இன்றுமுளர். ஆடவர் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் இருபத்தொரு இழையாலாகிய நு}ல் காப்பு அணிந்து விரதமிருத்தல் வேண்டும். இப்படிச் செய்ய இயலாதோர் மார்கழி மாத விநாயகர் சஷ்டியினன்று விரத சீலராக இருப்பது இன்பமூலமாகும். தன வைசியர்கள், மரகத விநாயகரைச் சஷ்டியினன்று மிகவும் வழிபாடு செய்து வருகின்றனர்.

பிள்ளையார் கதையை அன்புடன் இவ்விரத நன்னாட்களில் படிப்பது புண்ணிய மாகும். பகை நோய்கள் நீங்க, வென்றி, எடுத்த காரிய சித்தி, திடகாத்திரம் முதலிய சிறப்புக்கள் உண்டாகும்.

கணபதி துணை.

பிள்ளையார் கதை

சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.

காப்பு

கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்.
கணபதியே யிக்கதைக்குக் காப்பு.

திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
வருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

விநாயகர் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.

ஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொமுதுங்
கொண்டக்கால் வராது கூற்று.

சப்பாணி
எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.

சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.

'சரஸ்வதி துதி'

புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்/இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.

அதிகாரம்

பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.
[அரில் = குற்றம்.]
****************
[விரைவில் தொடரும்]

Read more...

Tuesday, October 20, 2009

"அறுபடைக் குமரன் அருட்டிருமாலை" [கந்தர் சஷ்டிப் பதிவு]

"அறுபடைக் குமரன் அருட்டிரு மாலை" [கந்தர் சஷ்டிப் பதிவு]


காப்பு


அறுபடைக் குமரனின் அருட்டிருத் துதிகளை
குருவடிப் பணிந்து குற்றமின்றி யான்பாட

அருகம்புல் தலைக்கணி ஐங்கரன் கணபதி
திருத்தாள் என்றுமென் காப்பு.

1. திருப்பரங்குன்றம் [முதல் படைவீடு]

அரனவன் அளித்த அருமறைக் கொழுந்து

நரனிவன் எனக்கவன் அருமறை மருந்து
பரனவன் அமரும் பரங்குன்றைத் தொழுவோ
ம்
மறமெலாம் ஒழித்து மங்களம் அருள்வான்!

2. திருச்செந்தூர்[திருச்சீரலைவாய்] [இரண்டாம் படைவீடு]

மலையைப் பிளந்து மாமரத்தைப் பிளந்து

வேலை விடுத்து அவுணரை அழித்து

அலையும் தேவரின் துயரம் தீர்த்த

அலைவாய் அழகன் தாளடி பணிவோம்.

3. பழநி [மூன்றாம் படைவீடு]

பழத்தினை வேண்டிப் பாரெலாம் திரிந்து
வேழன் பறித்திடக் கோபம் கொண்டு
முழத்துணி யுடுத்தித் தண்டம் தாங்கிய

பழநி யாண்டியின் பதமலர் பணிவோம்.

4. சுவாமிமலை[திரு வேரகம்] [நான்காம் படைவீடு]

உருவெனத் திகழ்ந்தது பிரமனைக் கடிந்தது
கருவெனும் வேதப் பொருளது வினவிய
பெருமகன் தனக்குப் பிரணவம் சொன்னது
குருவென அமர்ந்தது ஏரகப் பதியினில்.

5. திருத்தணி [குன்று தோறாடல்] [ஐந்தாம் படைவீடு]

அன்றோர்நாள் சூரனை வேல்கொண்டு அழித்ததுவும்
குன்றத்தில் சினந்தீர வேல்கொண்டு நின்
றதுவும்
மன்றாடி வள்ளிபதம் பிடித்தங்கு கொஞ்சியதுவும்
குன்றுதோ றாடிவரும் குமரவனிவன் கருணையன்றோ.

6. பழமுதிர் சோலை [ஆறாம் படைவீடு]

விழுந்தவர் எழுந்திட வேல்கொண்டு காப்பான்
எழுந்தவர் பணிந்திட மயிலினில் வருவான்
தொழுதவர் அடியவர் துயர்களைத் தீர்ப்பான்
பழமுதிர்ச் சோலைப் பரமனடி பணிவோம்.

நூற்பயன்
அருட்டிருமாலை அனுதினமோதிட
இருட்டறுச்செய்து இன்னல்கள் மாய்த்து
பொருட்டிருவடிவினில் ஒன்றிடவைத்து

விரட்டிடுவினைகளை ஒழிந்திடச்செய்வான்.

வாழ்க சீர் அடியாரெல்லாம்!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
**********************************

Read more...

Friday, October 16, 2009

"வந்தாள் மஹாலக்ஷ்மியே!"

"வந்தாள் மஹாலக்ஷ்மியே!"


ஆனையிரு பக்கம்நின்று அலைகடலை அள்ளித் தெளித்து ஆரவாரம் செய்திருக்க


அலர்தாமரை தனைவிரித்து அமர்ந்திருக்கும் பீடமாக அழகுடனே துலங்கிவிட


இருகைகளில் வெண்டாமரை எழிலுடனே ஏந்திவந்து இன்முகத்தைக் காட்டிவர


மறுகைகள் வந்தவர்க்கு இந்தாவெனப் பொற்காசுகள் வஞ்சனையின்றி வாரிவழங்க


மணிமுடியும், மலரணியும், முன்னிருக்கும் நுதலினிலே பொங்கிவரும் குங்குமமும்


காதணியும், கைவளையும், பொன்னாலே செய்திட்ட புத்துருக்கு ஆபரணமும் தாங்கி


பதுமத்தின் மீதமர்ந்து இருகாலும் தெரிந்திருக்கும் பதுமாசனக் கோலமிட்டு


விழியகலச் சிரித்திருந்து இளநகையை இதழ்வடித்து கருணையுடன் பார்ப்பவளே!


காசினியில் வாழ்வோர்க்கு காசு இனியில்லையெனும் குறையெல்லாம் களைந்தருள்பவளே!


கமலம்மா நினைப் பணிந்தேன்! கவலையெலாம் இனியில்லை! கைவல்யம் தந்தருள்வாய்! [1]



கஞ்சிக்கும் வழியின்றிக் கட்டுதற்கும் துணியின்றி வறுமையிலே வாடிநின்றும்


வாசலுக்கு வந்தவனின் பாத்திரத்தில் நெல்லிக்கனி ஒன்றிட்டு உபசரித்தாள்


அன்னைபட்டத் துயர்கண்டு ஆதிசங்கரன் நினைத்துதித்து கனகதாரைமாலை பாட


நிலமெல்லாம் கனகத்தின் நெல்லிக்கனி வீழச்செய்து நிறைவாக அருள்புரிந்தாய்!


மாலவனின் மார்பினிலே மங்களமாய்க் குடியிருக்கும் மாதரசி நீயன்றோ!


கோலவிழிப் பார்வைபடக் கோடிப்பேர் தவமிருக்க ஏழையெனக்கருள் புரிய


மாலவனின் மார்விடுத்து வேகமாக ஓடிவந்து தயைசெய்வதுன் கருணையன்றோ!


செங்கமலம் வீற்றிருந்து சிங்காரச் சிரிப்பள்ளித் திரைநிதியம் தருபவளே!


பொங்கிவரும் அமுதமெனப் பொற்கலசம் இருபுறமும் பொலிவாகத் திகழ்பவளே!


கமலம்மா நினைப் பணிந்தேன்! கவலையெலாம் இனியில்லை! கைவல்யம் தந்தருள்வாய்! [2]



வணக்கமுடன் வழிபட்டால் வளமெல்லாம் நிறைத்திருந்து வாழ்வாங்கு வாழவைப்பாய்!


அடக்கமுடன் அண்டிவந்த அடியார்க்கு நீயளக்கும் அருள்நிதிக்கோர் குறைவில்லை!


நேர்மையுடன் இருப்பவரின் இல்லத்தில் நீயிருந்து நீங்காத நிதியம் தருவாய்!


தீக்குணங்கள் கொண்டோரின் தலைவாசல் மிதியாமல் தூரப்போய் நின்றிடுவாய்!


செல்வத்தை நீ கொடுத்து செருக்கையும் கூடவைத்து சோதனைகள் செய்திடுவாய்!


பள்ளத்தில் இருப்போரின் பக்கதுணையாய்வந்து படுதுயரைத் தீர்த்து வைப்பாய்!


உள்ளத்தில் நினைவைத்து உபசாரம் செய்பவரின் இல்லத்தை நீங்க மாட்டாய்!


வெள்ளமெனப் பொங்கிவரும் நீள்நிதியம் நீகொடுத்து நீடூழி வாழவைப்பாய்!


நற்குணங்கள் எனிலோங்க நம்பிக்கை நான்கொண்டு நின்பாதம் சரணடைந்தேன்!


கமலம்மா நினைப் பணிந்தேன்! கவலையெலாம் இனியில்லை! கைவல்யம் தந்தருள்வாய்! [3]



ஈடில்லாத் தவம்செய்து மாவசுரன் பலியும் நின்னருளைப் பெற்றிருந்தான்!


வெண்கொற்றைக் கொடைசூழும் கனகசிம்மாசனத்தை நீயவர்க்குத் தந்துமகிழ்ந்தாய்!


செல்வத்தால் செருக்குற்றுத் தீவினைகள் புரிந்திட்ட பாலியைநீ நீங்கிவிட்டாய்!


திருமாலின் அவதாரம் வாமனனாய் வடிவெடுத்து செருக்கழியத் துணைசெய்தாய்!


தேவருக்கு அதிபனாக இந்திரர்க்கு முடிசூட்டி தேவரையும் வாழவைத்தாய்!


பூதேவி சோதரியைப் பாதுக்காக்கத் தவறிட்ட இந்திரனை மங்கச் செய்தாய்!


எங்கெங்கு தேடியும் யாருமே அறியாது பாற்கடலுள் நீ மறைந்தாய்!


வாசுகியை நாணாக்கி வடவரையைக் கடைந்தெடுக்கத் திருமகளாய் அவதரித்தாய்!


தேடிவரும் பக்தருக்குத் தீர்த்துவைக்கும் தாயாக நீயிங்கு அருளுகின்றாய்!


கமலம்மா நினைப் பணிந்தேன்! கவலையெலாம் இனியில்லை! கைவல்யம் தந்தருள்வாய்! [4]



பாற்கடலில் துயில்கொள்ளும் பரந்தாமன் துணையாக ஆதிலக்ஷ்மித் தாயானாய்!


இராமனுக்குச் சீதையென அவதாரம்நீசெய்து கற்புக்கோர் கனலானாய்!


வேங்கடவன் திருமார்பில் வீற்றிருக்கும் பதுமாவதித் தாயவளும் நீதானே!


வரவேண்டி அழைப்பவர