Saturday, December 30, 2006

"ஆடேலோர் எம்பாவாய்" - 6 [16]

"ஆடேலோர் எம்பாவாய்" - 6 [16]

முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்


மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16

[குளத்து நீரின் குளுமை போதவில்லை இந்தப் பெண்களுக்கு! கூடவே மழையும் வேண்டுமாம்! அந்த மழையை அழைக்க மாயவளை உவமை சொல்லி அழைக்கின்றனர்! இன்னொரு தமிழ்ச்சுவைப் பாடல்! வாங்க அனுபவிக்கலாம்! இறுதியில் எழுதி இருப்பதையும் படியுங்கள்!]

நீலக்கடலினை நெருங்கி அதனை முகர்ந்து
கடலினைக் குறைத்து கார்மேகமாய் எழும்பி
மலைமகளாம் உமையவளை ஒத்த மேகம் போல் திகழ்க!

எங்களை ஆட்கொண்டு அருள் பாலிக்கும்
பார்வதியின் சிற்றிடையைப் போல
மெலிதாய் மின்னும் மின்னலாய்ப் பொலிக!

திருப்பிராட்டியின் திருவடியில் பொலிவாய்
திகழ்ந்திருந்து, திருநடனத்தின் போது பேரொலிபோல்
முழங்கிடும் சிலம்பு போன்ற இடிபோல் ஒலிக்க!

பிறைநுதல் போல வளைந்து நிற்கும்
வில்லென விளங்கிடும் எம் தாயின் புருவம் போல
பொலியும் வானவில்லாய் வளைந்திடு!

எம்மை விட்டு என்றும் விட்டகலா எந்தாயோடு
என்றும் இணைந்திருப்பதால் அவரன்பும் கூட்டி
நம்போன்ற அன்பர்க்கெல்லாம் விரைந்து வந்து

நாம் கேளாமலே, கேட்கும் முன்னே நம்மீது
அருள் புரியும் அன்னையவள் அருள் போல எம்மீது
பொழிக மழையே! எனச் சொல்லி ஆடடி என் பெண்ணே!

[மேகத்தை, மின்னலை, இடியை, வானவில்லைப் பார்க்கையிலும், அன்னையையே காணும் இவர் நிலை நமக்கெல்லாம் வர இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ!]

அருஞ்சொற்பொருள்:
இட்டிடை - சிறிய இடை; சிலை குலவுதல் - வில்லென வளைதல்;
முன்னி - முற்பட்டு.

Read more...

"ஆடேலோர் எம்பாவாய்" - 5 [15]

"ஆடேலோர் எம்பாவாய்" - 5 [15]

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர


நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 15


{"இதோ இப்படி இழுத்துப் பிடித்து, எழுப்பி அழைத்து வந்திருக்கிறோமே, இந்தப்பெண்! இவள் எத்தன்மையாயவள் தெரியுமா" எனச் சொல்லி மற்றவர்க்கு உரைக்கும் பாடல்!}

எம்பெருமான், எம்பெருமான் எனச் சொல்லி எப்போதும்
நம்பெருமானின் பெருமையினை வாய் ஒயாமல்
உள்ளமெல்லாம் சொல்லி மகிழ்ந்து கொண்டிருப்பவள்!

அவனையே நினைத்திருந்து விடாது வழிந்திடும்
தாரை தாரையென கண்ணீரில் தோய்ந்து
இவ்வுலக நினைப்பினையே மறந்தவள் இவள்!

வேறோர் தேவரையும் பணிவதில்லை இவள்!
பேரரசனாம் நம் சிவனாரின் மேல் இவ்வாறு
பித்துப் பிடிக்கின்ற தன்மையினையும் செய்ய வல்ல

அவ்வாறு செய்ய வைக்கும் சிவனாரின் திற்ம் மிக்க
சிவந்த திருப்பாதங்களையும் நம் வாயாரப் பாடி
அவர்தம் திறனை வியந்திங்கே போற்றிப் போற்றி

கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்டிர்களே!
நேர்த்தியான மலர்கள் நிறைந்த இப் பைங்குளத்தில்
ஆட்டிடுவோம் நீயும் ஆடடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:

ஓவாள் - ஓயமாட்டாள்; தாரை - கண்ணீர்; களி - மகிழ்ச்சி; பனித்தல் - ஈரமாக்குதல்;
பார் - உலகம்; அரையர் - அரசர்; வார் உருவப் பூண் முலையீர் - கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்டிர்.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP