Wednesday, February 13, 2008

"காலமெல்லாம் காதல் வாழ்க!!"

காலமெல்லாம் காதல் வாழ்க!!


இன்று காதலர் தினம்! இதையொட்டி இரு வித்தியாசமான கவிதைகள் எழுதினேன். ஒன்று என் மனைவிக்கு. மற்றொன்று என் முதல் காதலு[லி]க்கு! இரு கவிதைகளுமே "ஏற்பு" எனும் சொல்லில் தொடங்கி "வாழியவே" எனும் சொல்லில் முடிகிறது! எதையும் 'ஏற்றால்' எல்லாரும் 'வாழலாம்'! காலமெல்லாம் காதல் வாழ்க!!

ஏற்பது புகழ்ச்சி!

ஏற்றுக் கொண்டதாலன்றோ இவ்வுலகம் நமையெல்லாம் தாங்கிநிற்குது
நீ என்னை எப்போதும் தாங்குதல் போல!

ஏற்றுக் கொண்டதாலன்றோ ரவி மதியும் பகலிரவில் முறை வருது
அல்லும் பகலும் எனை நீ மகிழ்வித்தல் போல!

ஏற்றுக் கொண்டதாலன்றோ பூமியிதன் சுழற்சியும் ஆதவனைத் தொடருது!
தன்செயலோடு என்னையும் நீ நாடுதல் போல!

ஏற்றுக் கொண்டதாலன்றோ பருவங்கள் மாறிமாறி வருகிறது
நவரசமும் என்னிடமே நீ காட்டல் போல!

ஏற்றுக் கொண்டதாலன்றோ இவையனைத்தும் இயல்பாக நிகழ்கிறது
என் குறைகளுடன் என்னை நீ ஏற்றது போல!

உதிரத்தில் ஓடுகின்ற அணுக்களெல்லாம்
உன்பெயர் சொல்லியே நகர்கின்றன!

விடுக்கின்ற காற்றும் எடுக்கின்ற காற்றும்
உன்நினைவைத் தாங்கியே செல்கின்றன!

உண்ணுகின்ற கவளம் ஒவ்வொன்றிலும்
தெரிவதும் நின் அன்பு முகமே!

செய்கின்ற செயல்யாவும் நிகழ்வதுவும்
நீ காட்டும் சிரிப்பாலே!

காதில் விழும் மொழிகள் யாவையும்
உன்குரலாய் மாற்றிக் களிக்கின்றேன்!

கண்பார்க்கும் காட்சியிலும் நின்னுருவே என்றும்
நீக்கமற நிறைந்திருக்கும்!

வாழுகின்ற காரணத்தை
வண்ணநிலா நீ தந்தாய்
வாழிய வாழியவே!

இது என் மனைவிக்கு "எங்களது திருமணநாள்" பரிசாக![02/11]
**************************************************

ஏற்பது மகிழ்ச்சி!



ஏற்று எனைக் கொள்வாயோ எனச் சொல்லி
நேற்றுவரை காதல்சொன்ன காதலியே!
உன்னையின்று அப்படி நான் அழைக்கலாமோ
வேற்றொருவன் மனைவியாகும் வேளையிலே?

காற்றுவழிப் போகின்ற அத்தனையும் காட்டியெனக்குக்
காதல்மொழி சொன்னவளும் நீதானே!
நீயின்றி நானில்லை எனச்சொல்லி என்நினைவில்
நிச்சயமாய் நின்றவளும் நீதானே!

யாரென்ன சொன்னாலும் நீதான் என்னுடைய
காதல்மணாளன் என்றவளும் நீதானே!
ஊரென்ன உறவென்ன சுற்றமென்ன சொந்தமென்ன
அத்தனையும்நீதான் என்றவளும் நீதானே!

காதலையும் மறந்தின்று பாசத்துக்கு அடிமையாகி
என்னையுமே நீயிங்கு மறந்தாச்சு!
உனையெண்னி என்னுணர்வை உருக்குலைந்து
ஒழித்திட்டேன் இன்றுவேறு கதையாச்சு!

உன்நினைவில் நான்வாட என்னையுமே மறந்திங்கு
பெற்றவனின் சொல்கேட்டுச் செல்கின்றாய்!
சொன்னமொழி அத்தனையும் சிந்தையிலே நிற்குதடி
சின்னவளே ஏன்மறந்தாய் சொல்லடி நீயும்!

கலியாணப் பந்தலிலே கண்மணியே நீயிருக்கும்
கோலத்தைக் கண்டிடவே வருகின்றேன்
ஈதென்ன நீயென்னைப் பார்க்கின்றாய் உன்கண்ணில்
ஒரு கோடி வேண்டுதல்கள்!

உன்பார்வை எனைநோக்கி விழிக்கிறதே இதுவென்ன
எனை நீயும் அறிந்தாயோ
மரணத்தில் நம்காதல் முகிழ்வதுவே சரியென்றால்
அதுவெனக்கு சம்மதமில்லை!

எதுநிகழ்வு என்பதனை எவரிங்கே நிச்சயிப்பார்
நீவாழும் மகிழ்வொன்றே போதுமடி
யான்வந்த காட்சியினைக் கண்டிட்ட நீயும்
மகிழ்வோடு தாலியினை ஏற்கின்றாய்!

அட்சதையைத் தூவிவிட்டு அகல்கின்றேன் யானும்
உனை யென்னின் நினைவிருத்தி
என்வாழ்வு இனியென்ன வெனவாகும் எனக்கிங்கு
தெரியாது என்றாலும் நீ வாழிய வாழியவே!

என் முதல் காதல் நினைவுக்கு! [00/00]
**********************************************************************
காலமெல்லாம் காதல் வாழ்க!!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP