Tuesday, October 14, 2008

"தமிழக மாணவர்களுக்கு ஒரு கடிதம்"

"தமிழக மாணவர்களுக்கு ஒரு கடிதம்"


என் அன்பு தமிழக மாணவர்களே!

மாணவர் சக்தி மகத்தான சக்தி என்பதை நன்கு உணர்ந்தவன் நான்!

தமிழகத்தின் தலைவிதியையே மாற்றிய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டவன் நான்!

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும், பேருந்துத் தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு மோதல் வெடித்தபோது நேரடியாகப் பாதிக்கப்பட்ட முதல் அறை என்னுடையது!

மாணவர் நினைத்தால், என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும், எந்த ஒரு சக்தியையும் அசைக்கமுடியும் எனத் தெளிவாகத் தெரியும் எனக்கு.

அது ஒரு காலம்!

சமீப காலமாக நாம் காண்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

மாணவர் ஒரு காரணத்துக்காக ஒரு போராட்டம் தொடங்குவர்.

அது அரசுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ நிகழும்.

பள்ளியை விட்டு வெளியேறி, ஒரு ஊர்வலம் நடத்துவார்கள்.

செல்லும் வழியில், சில தீயசக்திகள் இதற்குள் ஊடுருவுவார்கள்!

சில கடைகளை அடைக்கச் சொல்லி வம்பு செய்வார்கள்.

சில கற்கள் பறக்கும்!

சில மண்டைகள் உடையும்!

என்ன நடக்கிறது எனத் தெரியாமலேயே, மாணவர்களும் இதில் உட்புகுவார்கள்.

பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறை, கூட்டத்தை விலக்க முற்பட்டு, தடியடி நடத்தி, தானும் அடிபட்டு, பிறகு துப்பாக்கிச்சூடு வரை நடக்கும்.

எவன் சாகிறானோ, அவனுக்கு வீரவணக்கம் எனத் தொடங்கி, போராட்டம் வலுக்கும்.

'அமைதியாக நடந்த மாணவர் போராட்டத்தில் அரசின் அடக்குமுறை' என எதிர்க்கட்சிகள் இதை மேலும் வளர்க்கும்.

இதுதான் இப்போது நடைபெறும் காட்சிகள்.

இந்த நிலையில், இன்று தமிழ் ஈழ மக்களுக்காக ஒரு போராட்டம் நடத்தப் போவதாகச் செய்திகளில் படிதேன்.

வேண்டாம் ஐயா! வேண்டாம்!

படிக்கும் வேலையை விட்டு இதில் ஈடுபட வேண்டாம்!

உங்கள் உதவி அவசியம் அவருக்குத் தேவை.

அது போராட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதுவும் பள்ளி நாட்களில் வேண்டவே வேண்டாம்!

ஒரு விடுமுறை நாளில், பள்ளிவாசலில், அல்லது ஒரு முக்கிய வீதியில் கூடி, வருவோர் போவோர்க்கெல்லாம் நம் தமிழர் படும் அவலத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்.

நிவாரண உதவி கேட்டுக் கையேந்துங்கள்.

அதைவிட்டு, இது போல, சாலை மறியல் அது இது என ஆவேசச் செயல்களில் ஈடுபட வேண்டாம் எனத் தாழ்மையுடன் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் படிப்பு முக்கியம்.

தமிழீழம் கிடைக்கும்.

அது நிச்சயம்!

அப்போது நீங்கள் சென்று தேவையான கல்வி உதவிகளைச் செய்து தாருங்கள்!

இப்போது...............
போய்ப் படியுங்கள்!

நேரம் வரும்போது அழைப்பு வரும்!

அப்போது......
தவறாமல் வாருங்கள்!
*******************************

[கடிதங்கள் தொடரும்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP