Monday, January 18, 2010

"வடம் பிடிக்க வாரீர்!"

"வடம் பிடிக்க வாரீர்!"

அந்தப் பெரியவர் கால்களை நீட்டியபடி சயனித்திருக்கிறார்.
மெத்தப் படித்த அவரது பக்தர் ஒருவர், கால்மாட்டில் அமர்ந்தபடி, அவரது கால்களைப் பிடித்து, பாதசேவை செய்து கொண்டிருக்கிறார்.
பக்தரின் வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.

பெரியவர்: என்னப்பா? என்ன சொல்லிகிட்டிருக்கே?

பக்தர்: அது ஒண்ணுமில்லை சாமி! ஒரு சம்ஸ்க்ருத ச்லோகம்.

பெ: அதான் என்ன ச்லோகம்னு கேக்கறேன்.

பக்: கீதையில இருக்கற ஒரு ச்லோகம் சாமி அது!

பெ: எங்கே? சத்தமாச் சொல்லு! நானும் கேக்கறேன்.

பக்: "தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா

உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ தர்ஷின:
- Hide quoted text -

பெ: இதோட அர்த்தம் என்னன்னு எனக்குக் கொஞ்சம் சொல்றியா?

பக்: ஸம்ஸ்க்ருதம் தெரிஞ்சா இதெல்லாம் ரொம்ப சுளுவாப் புரியும் சாமி!

பெ: அதானே உன்னைக் கேக்கறேன். இந்தப் பாட்டோட அர்த்தம் என்னப்பா?

பக்: அதாவது, [தொண்டையைக் கனைத்துக் கொண்டே] சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணிகிட்டும், இது என்ன, அது என்னன்னு கேள்வி கேட்டுகிட்டும், கை காலைப் பிடிச்சுவிட்டுப் பணிவிடை பண்ணிகிட்டும், குருகிட்டேருந்து இந்த ஞானத்தைக் கத்துக்கோ. அப்படிப் பண்ணினேன்னா, அந்த ஞானிகள் ப்ரம்மத்தைப் பத்தின தெளிவை உனக்கு உபதேசம் செய்வாங்கன்னு பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இதுல சொல்றாரு!

பெ: இப்ப உன்னை இதோட மொத்த அர்த்தத்தையா நான் கேட்டேன்? வார்த்தை,, வார்த்தையாப் பிரிச்சு அர்த்தம் சொல்லுப்பா!

பக்: ப்ரணிபாதேனன்னா, பணிந்து வணக்கம் செய்வது; பரிப்ரச்னேனன்னா, கேள்விகள் கேக்கறது; ஸேவயான்னா பணிவிடை செய்யறதுன்னு அர்த்தம்
தத் வித்தி= கேட்டுத் தெரிஞ்சுக்கணும்
தத்வ தர்ஷின: ஞானின; ன்னா இந்த ஞானத்தைத் தெரிஞ்ச ஞானிகள்;
ஞானம்= அந்த ஞானத்தை; தே= உனக்கு; உபதேக்ஷ்யந்தி= சொல்லிக் கொடுப்பாங்க.

பெ: ரொம்ப நல்லா சொல்றியே! சரி, நமஸ்காரம் பண்ணினா மட்டும் போறுமா?

பக்: 'ப்ரணிபாத'ன்னா அதான் அர்த்தம். எனக்கு அதுக்கு மேல சொல்லத் தெரியலை!

பெ: சரி, விட்டுரு! 'பரிப்ரச்ன'ன்னா....?

பக்: அதான் சொன்னேனே! கேள்விகள் கேட்கறதுன்னு அர்த்தம்.

பெ: அப்ப 'ப்ரச்ன'ன்னா என அர்த்தம்?

பக்: அதுவும் கேள்வி கேக்கறதுதான்!

பெ: அப்போ, 'ப்ரச்ன'ன்னே சொல்லியிருக்கலாமே ? எதுக்கு இந்த வியாஸர் 'பரி'ன்னு இன்னொரு வார்த்தையைச் சேர்த்தாரு? அவருக்கு எதுனாச்சும் மூளை கெட்டுப் போயிருக்குமோ?

பக்: இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை எனக்கு!

பெ: 'ஸேவா'ன்னா, எந்த மாதிரி ஸேவை?

பக்: இதோ நாங்கள்லாம் உங்களுக்குப் பண்றோமே அது போலத்தான். இப்படி கை காலைப் பிடிச்சு விடறது, கூடமாட இருந்து உங்களைக் கவனிச்சுக்கறது இதெல்லாம்தான்!

பெ: [சிரிக்கிறார்!] ஓஹோ! அப்படிப் பண்ணினா மட்டும் போறுமா?

பக்: [சலிப்புடன்] இப்படி மடக்கி, மடக்கிக் கேட்டா எப்படி சாமி? எனக்கு வேற அர்த்தம் எதுவும் தெரியலை!

பெ: [புன்னகையுடன்] அடுத்த வரியில 'உபதேக்ஷ்யந்தி தே ஞானம்'! இந்த ஞானம்ன்றதுக்குப் பதிலா வேற ஏதும் வார்த்தை போடலாமா? உனக்குத்தான் இந்த பாஷை நல்லாத் தெரியுமே!

பக்: [சற்றுத் தெம்புடன்] ஓ! போடலாமே!

பெ: என்ன போடலாம்?

பக்: அஞ்ஞானம்னு சொல்லலாம்.

பெ: அப்படிப் போட்டா இன்னும் தெளிவாப் பொருள் கிடைக்கும்னு நினைக்கிறியோ?

பக்: [சற்று திகைப்புடன்] இல்லை, இல்லை! நான் அப்படிச் சொல்லலை! சங்கர பாஷ்யமும் அப்படிச் சொல்லலை!

பெ: அதனாலென்ன? ஒரு நல்ல அர்த்தம் வரும்னா அப்படிச் சேர்த்தா என்ன தப்பு?
அது கிடக்கட்டும்! எதுக்கு ஒரு 'தத்வ தர்ஷி'கிட்ட போய் நமஸ்காரம் பண்ணி, கேக்கச் சொல்றாரு? கிருஷ்ணரே ஒரு பெரிய ஞானிதானே?

பக்: அட! ஆமாம்! ஏன் அப்படிக் கேக்கச் சொல்றார்?

பெ: அப்போ, உனக்கு இது புரியலைன்றியா?

பக்:[ பதைபதைப்புடன், பெரியவரின் கால்களைப் பிடித்துக் கதறியபடி] எனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியும்னு நினைச்சு ஆணவமா நான் சொன்னது மகா தப்புன்னு இப்பப் புரியுது சாமி! என்னை மன்னிச்சிருங்கோ! என்னோட திமிரை எவ்வளவு சுளுவா சுட்டிக் காண்பிச்சுட்டீங்க! தயவு செஞ்சு, இந்த ச்லோகத்தோட அர்த்தத்தை எனக்கு சொல்லி அருளணும் சாமி!

பெ: வெறுமனே காலுல விழுந்து நமஸ்காரம் பண்ணினா மட்டும் போறாது! உன்னோட உடல், பொருள், ஆவி இத்தனையும் அவர் காலுல போடறதா உணர்ந்து பணிவோட வணங்கணும்.

மடக்கணும், தப்பு கண்டு பிடிக்கணும்னு நினைச்சுகிட்டு குருகிட்ட கேள்வி கேட்கக் கூடாது. தனக்கு ஒரு தெளிவு வரணும்னும், ஆன்மீகத்துல இன்னும் முன்னேறணும்ன்ற ஆர்வத்தோட மட்டுமே கேள்வி கேட்கணும். கேட்டதை, நல்லாப் புரிஞ்சுக்கற வரைக்கும் தாராளமாக் கேட்கலாம். அரைகுறையாப் புரிஞ்சுக்கக் கூடாது.

ஸேவைன்னா சும்மாக் காலைப் பிடிச்சு விடறதுல்லாம் இல்லை. நம்மளோட இந்த உடல் தன்னுதுன்னு நினைக்காம, குருவுக்குப் பணிவிடை செய்யறதுக்குத்தான் இந்தப் பிறவி எடுத்தோம்னு நினைச்சுகிட்டு, பணிவிடை செய்யணும்!.

இப்படில்லாம் முறையாச் செஞ்சா, குருவானவர், உனக்கு ஞானத்தைப் போதிப்பார்!

அஞ்ஞானத்தை ஒழிச்சாத்தானே ஞானம் பிறக்கும்! ப்ரணிபாதன்னா சரணாகதி. ஏன் தவதர்ஷிகிட்ட போகச் சொல்றார் கிருஷ்ணன்? தன்னை அறிஞ்சவங்க எல்லாருமே கிருஷ்ணர்கள்தான்! முறையான பக்தனுக்கு, குரு ஒரு கிருஷ்ணனாத்தான் தெரிவார். அப்படிப்பட்ட குரு தனது சிஷ்யர்களை வாசுதேவனாப் பார்க்கறார்! கிருஷ்ணனோ இந்த ரெண்டு பேரையும் பிராணனாவும், ஆத்மாவாவும் பார்க்கறார்! இப்படிப்பட்ட தேடல்ல இருக்கற பக்தர்களும், தன்னை அறிஞ்ச குருவும் இருக்கறது கிருஷ்ணனுக்குத் தெரியாம போகுமா என்ன? அதனாலத்தான், எல்லாரையும் தங்கிட்ட வந்து கேளுங்கன்னு சொல்லாம, இப்படி ஒரு ஈஸியான வழியைக் காமிக்கறார்!

பக்: [கண்களில் நீர்மல்க] இதுமாதிரியே தினம் ஒரு ச்லோகத்துக்கு நீங்க அர்த்தம் சொல்லணும் சாமி! நான் அதைக் கேட்டுப் பயனடையணும்னு பணிவாக் கேட்டுக்கறேன் சாமி!

பெரியவர் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே, இன்னும் வசதியாகக் கால்களை நீட்டிப் புரண்டு படுக்கிறார்!

"பணிவதால் வினவலால் பணிவிடை புரிவதால்
அணியலார் மேனிய, அறியிதை; ஞானியர்
துணியமெய் உணர்ந்தவர் துலக்குவர் உனக்கதே!" [ப.கீ. அத்:4; 34]


[அந்தப் பெரியவர் ஷீர்டி ஸாயிபாபா! பக்தர் நானாஸாஹேப் சந்தோர்க்கர்.]
ஆதாரம்: ஷீர்டி ஸாயி ஸத்சரிதம், 39-ம் அத்தியாயம்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP