Thursday, October 23, 2008

"தமிழச் சாதி" -- "பாரதி சில காட்சிகள்" - 4

"தமிழச் சாதி" -- "பாரதி சில காட்சிகள்" - 4

முந்தையப் பதிவு

'பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு

நமது மூதாதையர் [நாற்பதிற்றாண்டின்]

முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு

அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம்

ஆண்டின் முன்னவரோ? ஐயாயிரமோ?

பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்

தவரோ? புராணம் ஆக்கிய காலமோ?

சைவரோ? வைணவ சமயத்தாரோ?

இந்திரன்தானே தனி முதற் கடவுள்

என்று நம் முன்னோர் ஏத்திய வைதிகக்

காலத்தவரோ? கருத்திலாதவர்தாம்

எமது மூதாதையர் நயமுறக் காட்டிய

ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்

ஆங்கவர் காட்டிய அவ்வப்படியே

தழுவிடின் வாழ்வு தமிழர்க்குண்டு;

எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம்

கலி தடை புரிவன். கலியின் வலியை

வெல்லல் ஆகாது என விளம்புகின்றனரால்,

நாசங் கூறும் 'நாட்டு வயித்தியர்'

இவராம்.'



இன்னொரு சாராரோ, தம்முடைய பண்டைப் பெருமையை

பலவாறும் விரித்துக் கூறி, அதுவே சிறந்தது எனவும் சொல்லி,

ஆயின், அது’ நீயெல்லாம் அடைய இயலாத ஒன்று’ எனக் கலியைக்

காரணமாகக் காட்டி நம் நம்பிக்கையைக் குலைப்பார்.

ஒரு சாரார் சீமை மருத்துவர்போல் வந்து 'ம்ஹூம்' என உதட்டைப்

பிதுக்கிச் சென்றால், இன்னொரு சாராரோ, நாட்டுவைத்தியர் போல

நாடி பிடித்து, 'தேறாது' எனச் சொல்லி நோயை அதிகமாக்குவார்

என்கிறான் பாரதி!

நமக்குத் தெரியாத நாகரிகத்தைச் சொல்பவரை சீமை மருத்துவர் எனச் சொன்ன பாரதி, நமக்கெல்லாம் ஓரளவு தெரிந்த ஒன்றையும் நம்மை அடையவிடாமல் செய்யும் இவரை நாட்டு வயித்தியர் எனச் சொல்லி கோபப்படுகிறான்!


'இங்கு இவ்விருதலைக் கொள்ளியின்

இடையே நம்மவர் எப்படி உய்வர்?'


எனக் கோபத்துடன் கேட்கிறான் விதியை நோக்கி!

'விதியே! விதியே! தமிழச் சாதியை

என் செயக் கருதி இருக்கின்றாயடா?
'

அனுதாபத்துடன் பாரதியைப் பார்த்து விதி சொல்கிறது!

'விதி:

மேலே நீ கூறிய விநாசப் புலவரை

நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்

எத்திசைத்தெனினும் யாவரே காட்டினும்

மற்றவை தழுவி வாழ்வீராயின்,

அச்சமொன்று இல்லை!'


நீ பார்க்க வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!

இந்த தலைவர்கள் சொல்வதையெல்லாம்

அப்படியே ஏற்றுக் கொண்டுவிடாமல்,,

எது உனக்கு நன்மை என்பதை அறிவோடு சிந்தித்து

அது எவர் சொன்னதாக இருந்தாலும் அதனைக் கொண்டு

வாழ்வீராயின், தமிழச் சாதிக்கு அச்சம் என்பதே இல்லை!

தன்னை நம்பும் தைரியம் இருந்தால்

நாளென்ன பொழுதென்ன?

எனச் சொல்லி விதி தன் வழியே சென்றது!

இன்றைக்கும் பொருந்தக்கூடிய கருத்துகளைச் சொல்லும்

இந்தப் பாடல் வரிகளை நன்குணர்ந்து செயல் புரிந்தால்

நம் தமிழர் உயர்வர்!

இப்போது பாரதி இந்தக் கவிதை எழுதும் முன் சொன்ன வரிகளுடன் இதனை நிறைவு செய்கிறேன்!

"தமிழ்மொழி வாழ்த்து!"

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

என்றென்றும் வாழியவே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று

சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

********************************

[நல்லதே நடக்கும்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP