Sunday, July 09, 2006

"மரணமில்லாப் பெருவாழ்வு!" [தேன்கூடு போட்டி

"மரணமென்பது மாண்டு போவதா?"

"கரணம் பலவும் கரைத்துக் குடித்திடினும்
நாரணன் பெயரை நாவில் உரைக்கீரேல்
மரணம் வருங்காலையில் மற்றென் பயன்"
என்று
சரணராம் சங்கரரும் அன்றே உரைத்திட்டார்.

"காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே" வென
போதகராம் பட்டினத்தாரும் பாங்காகச் சொல்லிவைத்தார்
"பாதகங்கள் பலசெய்தும் பச்சைமயில் வாகனனின்
பாதங்களை மறவேன்"
என அருணகிரியும் அருளிட்டார்.

இப்படி இவர்கள் சொல்லிவைத்த வார்த்தைகளை
எப்படியோ படித்துவிட்டு, 'போகின்ற காலத்தில்
தப்பாமல் சொல்வோம்'என மனதுக்குள் நிச்சயித்து
'அப்பாடா!' என்றிருந்தேன் அப்போது ஓர் நினைவு!

மாண்டுபோவதுதான் மரணமெனில்
ஆண்டாண்டாய் மாண்டதெல்லாம்
மறுபடியும் பிறந்ததெல்லாம்
அடுக்கடுக்காய் நினைவில் வந்து
திடுக்கிட்டு எழுந்து நின்றேன்!

இனிவருவதனைத்தும்
என்வாழ்வில் நிஜமாய் நடந்தவை!
உண்மை!உண்மையன்றி வேறில்லை!

"சத்தியமாய்ச் சொல்லுவதை
சத்தியமாய் நம்பிடப்பா!"

மரணத்தின் வாசனையே
தெரியாத வயதினிலே
நான் வளர்த்த நாய்க்குட்டி
நசுக்குண்டு போனது.....

அப்போது மாண்டு போனேன்!

அடுத்த சில நாட்களிலே
கொடுத்தவாக்கை நினைவில்கொண்டு
அழகான குட்டியொன்றை
அப்பாவும் கொணர்ந்தபோது....

மறுபடியும் மீண்டு வந்தேன்!

படித்திருந்த வேளையினில்
பாவையொருத்தியைப் பார்த்துவிட்டு
ஒருதலையாய்க் காதலித்தேன்
வேறொருவன்பின் அவள் போனாள்!...

அப்போது மாண்டு போனேன்!

என்மேலும் நேசங்கொண்டு
எனையொருத்தி நாடிவந்து
என்னோடு பழகிடவே
இன்பமாக வந்தபோது....

மறுபடியும் மீண்டு வந்தேன்!

என்பேரைச் சொல்லிவைக்க
என்மகனும் வருவான் என
தன்னுதிரம் சிந்தியே
கண்போல வளர்த்திட்ட
என் தந்தை மாண்டுபோனார்
என்படிப்பு முடியும் முன்னே!...

அப்போது மாண்டு போனேன்!

மருத்துவனாய்த் தேர்வுபெற்று
மகிழ்ச்சியுடன் வந்தன்று
மாதாவின் காலடியில்
மண்டியிட்டு நின்றபோது
"மரித்த உன் தந்தை இன்று
மனமகிழ்வாய் இருப்பார்"என
மாதரசி சொன்னபோது......

மறுபடியும் மீண்டு வந்தேன்!

நினைவு தெரிந்த நாள் முதலாய்
நிழல் போலக் கூட வந்து
நெடுங்காலம் பழகிட்ட
நண்பனவன் ஓர் நாளில்
நேசம் மறந்தங்கு
நகர்ந்திட்ட நொடியினிலே......

அப்போது மாண்டு போனேன்!

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பென்று
உணர்த்திடவே வந்தது போல்
மணக்க மணக்க உதவிடவே
நண்பர்குழாம் நின்ற போது...

மறுபடியும் மீண்டு வந்தேன்!

காசுபணம் பெரிதென்று
பாசத்தை மறந்தன்று
ஏசிவிட்டு என் உறவும்
தூசெனவே சென்ற வேளை....

அப்போது மாண்டு போனேன்!

பாசத்தை நினைவில் வைத்து
நேசத்தை நெஞ்சில் வைத்து
நேசித்தவள் இல்லம் சென்று,
யோசித்த அவள் உறவை
பேசிமுடித்த என் தமக்கை!...

மறுபடியும் மீண்டு வந்தேன்!

கடல்தாண்டி வந்திங்கு
கால் பதியும் நேரத்தில்
காலனவன் வந்தங்கு
கண்மணியாம் என் தாயைக்
கூட்டிச்சென்ற நேரத்தில்
கடைசிமுகம் பாராமல் நான்
கதறிட்ட வேளையினில்...

அப்போது மாண்டு போனேன்!

பித்துப் பிடித்தது போல்
தனித்தன்று திரிந்தபோது
செல்வழியில் ஓர் மாது
இன்முகத்துடன் எனை நோக்கி
என்கவலை போக்கிடவே
இன்சொற்கள் சொல்லிச் சென்றாள்!...

மறுபடியும் மீண்டு வந்தேன்!

இப்படியே ஓராயிரம்
நினைவலைகள் மீண்டு வந்து
என் மனதில் மோதியதில்
எனக்கொன்று தெளிவாச்சு!

சாவென்றும் பிறப்பென்றும்
புவியினிலே ஒன்றில்லை!
ஒவ்வொரு நாளிலுமே
புதிதாய்ப் பிறக்கின்றோம்
மறுபடியும் மரிக்கின்றோம்!

இருக்கின்ற வேளையினில்
இசைவாக வாழ்ந்திட்டால்,

இல்லாத சில பேர்க்கு
இயன்றவரை உதவிட்டால்,

இன்றையப் பொழுதினிலெ
இன்சொற்கள் பேசிட்டால்,

இன்று புதிதாய்ப் பிறந்தோமென
இன்பமாய் நினைந்திட்டால்,

என்றுமே எனக்கு மரணமில்லை!

புனரபி ஜனனம்
புனரபி மரணம்

நாரணனை நாடுங்கள்!
நல்லவராய் வாழுங்கள்!

மரணமென்பது மாண்டுபோவதா?
இல்லை, இல்லை, இல்லவே இல்லை!
மனிதத்தை மறப்பதே மரணம்!

தேன்கூடு போட்டியிங்கு
தந்தது ஒரு வாய்ப்பு!
என்மனதில் உள்ளதனை
உண்மையாக உரைத்திட்டேன்!
பரிசினை எதிர்பார்த்து
படிக்கவில்லை இப்பாட்டு!
என் மனது பாரம்
இறங்கியது இன்றெனக்கு!

நன்றி!
வணக்கம்!

அன்புடன்,
எஸ்.கே.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP