Wednesday, February 18, 2009

"உந்தீ பற” -- 21

"உந்தீ பற” -- 21

“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]


நானென் றெழுமிட மேதென நாடவுண்
ணான்றலை சாய்ந்திடு முந்தீபற
ஞான விசாரமி துந்தீபற. [19]


நான் என்று எழும் இடம் ஏது என நாடவும்
நான் தலை சாய்ந்திடும் உந்தீ பற
ஞான விசாரம் இது உந்தீ பற.


'நான்'என இங்கே எழுமிடம் எதுவென
இன்னும் சற்று தீர்க்கமாய்த் தேடிட

நான் எனும் ஒன்று மனத்தையும் தாண்டி
என்பது புரிந்திட தேடலும் மிகுந்திடும்

நானிதைச் செய்தேன் அதனைச் செய்தேனென
செயலினைப் புரிந்து பயனை உணரும்

அதுவல்ல'நான்'என நன்கே தெளிந்திட
நான்தலைசாய்ந்து ஞானத்தேடல் இன்னும்தொடரும்
.

‘தன்நிலை அறிதல்’ என்பதை விளக்கும் பாடல் இது.

பதினேழாவது பாடலில் சொல்லிய வண்ணம் மனதை அடக்கி அழிக்கும் உபாயம் தெரிந்த யோகிக்கு, நான், இது என்னும் இரண்டும் குறுகி, ‘நான்’ என்பதே மனம் எனச் சுருங்கி, இதுவும் இல்லை எனத் தெளியும்போது, அப்படியானால், இந்த ‘நான்’ என்பது எங்கே இருக்கிறது? எனும் கேள்வி எழுந்து, தேடுகின்ற நானை விடுத்து, ‘நான்’ எனும் ஒன்றே நிலைத்து நிற்கிறது.

இது ஒரு புத்தகம்
நான் இதை ஒரு புத்தகம் என உணர்கிறேன்
நான் உணர்கிறேன்
இந்த உணர்வு மனம் சார்ந்தது
எனவே, நான் இந்த மனத்துக்கும் அப்பாற்பட்டது!

அறிந்துணரும் ஆர்வம் இல்லாதவன் முதல் படியிலேயே நிற்கிறான்.
ஆர்வம் கிளம்பும் ஒருவன் அடுத்த நிலைக்கு வருகிறான்.
சாதகன் இருப்பது மூன்றாம் நிலை.
யோகி நான்காம் நிலையைப் புரிந்து அதற்கும் மேலான ஐந்தாம் நிலைக்குச் செல்லத் தொடங்குகிறார்.

இதுவே கர்மம் கழித்து, பக்தி செய்து, யோகம் பயின்று, ஞானம் நோக்கிச் செல்லும் வழி!
ஞான விசாரம்!

‘நான்’ எனும் ஆணவத்தை எப்படி அழிப்பது?

நாளை பார்க்கலாம்!

********************
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP