Friday, October 01, 2010

"எந்திரன்" திரை விமரிசனம்

"எந்திரன்" திரை விமரிசனம்

இப்பத்தான் படம் பார்த்திட்டு வர்றோம்!

ஆக்கபூர்வமான செயல்களுக்காக உருவாக்கப்பட்ட 'எந்திரனுக்கு' மனித உணர்வுகள் இல்லையென்ற காரணத்தால், இது தவறாக திசை திரும்பும் அபாயம் இருக்கிறது எனச் சொல்லி மனிதர்கள் நிராகரிக்க, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு 'சயின்டிஸ்ட்' ரஜினி மெல்ல மெல்ல தன் ஆராய்ச்சித் திறனால் அதற்கு நவரச உணர்வுகளையும் அதற்கு ஊட்ட, அது இப்போது தன் எஜமானனின் காதலியான ஐஸ் மீதே காதல்வயப்பட்டு, உருவாக்கியவனை எதிர்க்கிறது.
அதற்குப் புரியவைக்க காதலர் இருவரும் எவ்வளவோ முயன்றும், அது கேட்காததால், ஆத்திரத்தில் அதனை உருக்குலைத்து, குப்பையில் வீசிவிடுகிறார் விஞ்ஞானி ரஜினி.
அதைப் பொறுக்கியெடுத்துவந்து, அதற்கு மீண்டும் செயல்திறனூட்டி, கூடவே அழிவு சக்தியையும் ஊட்டிவிடுகிறார் இன்னொரு விஞ்ஞானி.
வெளிநாட்டிலிருக்கும் தீய சக்திகளுக்கு அதை விற்கும் நேரத்தில், எந்திரன் ரஜினி, அவரையே கொன்றுவிட்டு, தன்னைபோலவே பல நூறு எந்திரன்களைப் படைத்து, வில்லனாகிறது .
ஐஸையும் கடத்திக் கொண்டுவந்து, நகரில் அட்டூழியங்கள் செய்து, நாட்டையே கதி கலங்கடிக்கிறது.
விஞ்ஞானி ரஜினி அதை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை!

வழக்கமான ரஜினி படமல்ல இது!

ஆனால், மிகத்திறமையாகத் தன் பாத்திரப் படைப்பைப் புரிந்துகொண்டு அட்டகாசமான நடிப்புத் திறமையைக் காட்டியிருக்கிறார் ரஜினி! அவரது மிடுக்கு கொஞ்சம் கூடக் குறையவில்லை!

கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுமே ரஜினி ஸ்டைலைப் பின்பற்றி, 'எண்ட்ரி சாங்' என்ற பெயரில் அடிக்கும் கூத்தைப் பார்த்தோ என்னவோ, இந்தப் படத்தில் அப்படி ஒரு அபத்தம் இல்லை என்பதே மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

சொன்னதைக் கேட்கும் எந்திரனாகவும், பின்னர், வில்லனாக மாறும் போதும், மிக அருமையாக நடித்து, தியேட்டரில் விசில் கிளப்ப வைக்கிறார் ரஜினி!

விஞ்ஞானியாக வரும் ரஜினி, புத்திசாலி மட்டுமே தவிர, வீரதீரன் இல்லையென்பதால், அடக்கியே அந்தப் பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார்!

ஐஸ் வரும் அனைத்துக் காட்சிகளிலூம் நெஞ்சை அள்ளுகிறார். அவரது காஸ்ட்யூமும், நளினமும் ரசிகர்களைக் கிறங்கடிக்கச் செய்யும்!

சந்தானம், கருணாஸ் காமெடி ஏதோ பெயருக்குத்தான்.
க்ளைமாக்ஸ் காட்சிகள் எல்லாமே கிராஃபிக்ஸ்தான் என்றாலும் ரொம்பவும் உழைத்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர். தமிழ்ப் படவுலகுக்கு, ஏன் இந்தியப் படவுலகுக்கே இது ஒரு புதுமை எனச் சொல்லலாம். ஆங்கிலப் படங்களில் பார்த்திருந்தாலும், நமது ஆள் ஒருவர் இப்படி கவனமாகவும், கேலிக் கூத்தாகவும் இல்லாமல் செய்திருப்பது நமக்குப் பெருமையளிக்கும் ஒரு விஷயம் எனச் சொல்வேன்.
அந்தக் கொசுக் காட்சி தேவையற்ற ஒன்று. வெட்டி எறியலாம் அதை!

ஏ.ஆர் ரஹமானின் பாடலிசையும், பின்னணி இசையும் மேறகத்திய பாணியில் சவால் விடுவதுபோல அமைந்திருக்கிறது. பாடல்கள் முணுமுணுக்க வைக்கும் கண்டிப்பாக இந்தக்கால இளைஞர்களை!

பாடல் காட்சிகளுக்கான நடன அமைப்பும், உடைகளும், காட்சி படமாக்கப்பட்ட இடங்களும் அத்தனையும் அருமை!
நடனக் காட்சிகளில் தனது ஸ்டைலைக் காட்டும் சந்தர்ப்பங்களைத் தவறவிடாமல் செய்திருக்கிறார் ரஜினி!

முழுக்க முழுக்க ரஜினியே படம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும், கொஞ்சம் கூடப் போரடிக்கவில்லை[ அந்தக் கொசுக் காட்சி ஒன்றைத் தவிர!].
இரண்டரை மணிக்கும் அதிகமாக ஓடினாலும், விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார் ஷங்கர்!

கடைசிக் காட்சியில், தான் செயலிழக்கும்போது, எந்திரன் பேசுகின்ற வசனம் நம் எல்லாரையும் கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும்!... வைக்கணும்!
"மனுஷன் படைச்ச இரண்டு அதிசயங்கள்.... ஒன்று நான், இன்னொன்று நீ !" என எந்திரன் ரஜினி ஐஸைப் பார்த்துச் சொல்லும்போது விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது!

குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். நல்ல தியேட்டரில் பாருங்க! நிச்சயம் ரசிப்பீங்க!

மொத்தத்தில்,.....
எந்திரன்..... தமிழனைப் பெருமைப்படவைக்கும் ஒரு முழுச் சந்திரன்! பிரம்மாண்டம்!

Read more...

Tuesday, June 08, 2010

அருணையார் அருளிய திருப்புகழ். -- 39

அருணையார் அருளிய திருப்புகழ். -- 39

சந்தத்தின் சிறப்பே திருப்புகழின் சிறப்பு! சந்தத்திற்குள்ளும் ஒரு பொருளை
வைத்துப் பாடுவதே திருப்புகழின் பெருஞ்சிறப்பு! அதனை விளக்கும் ஒரு புகழே இந்தத் திருப்புகழ்!
ஐம்புலன்களை அடக்கி, உடலை ஒடுக்கி, அறிவுக்கும் எட்டாத அவனை அடைவது எப்படி என
இந்தத் திருப்புகழ் மெய்யுற விளக்குகிறது! வாருங்கள்! பகிர்வோம்!

முருகனருள் முன்னிற்கும்!

********** பாடல் ************

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் ...... தனதான


துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்

இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே

எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.
*********************

************ பொருள் ************

[வழக்கம்போல் முன் பார்த்துப் பின் பார்க்கலாம்!]


தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே

தப்பாமல் பாடிச் சேவிப்பார்
தத்தாம் வினையைக் களைவோனே

நாளென்செயும் வினைதான் என்செயும்
எனச் சொல்வார் நாமாரும் குமரனைப் பாடினால்

நாடோறும் தவறாமல் நல்லோனைப் பாடிவந்தால்
தீராத வினையெல்லாம் தீர்த்துவைக்கும் முருகோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

தற்கு ஆழிச் சூர் செற்றாய்
மெய்ப் போதத்தாய் தணிகைத் தனிவேலா

எனை மிஞ்சி எவருமிலை எனும்
அகந்தையினைத் தான் கொண்டு

ஆயிரத்தெட்டு அண்டங்களையும்
ஆளுகின்ற ஆக்ஞா சக்கரத்தால்

அனைத்துலகும் ஆண்டுவந்த சூரபதுமனை
தனிவேல்விடுத்து வெற்றிகொண்டவனே

சிவஞான வடிவேயான மெய்ப்பொருளோனே
தணிகைமலை வீற்றருளும் தண்டபாணித் தெய்வமே!

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே

அப்பாகைப் பாலைப்போல் சொல்
காவல் பாவை தனத்து அணைவோனே

பரண்மீது நின்று பறவைகளை விரட்டுதற்காய்
'சோ...சோ...'வெனத் தீங்குரல் எழுப்புகையிலும்

'ஆரடா நீ'யென்று வேடனாய் வந்தவனை
விரட்டுமொழி பேசுகையிலும்

'தேனுண்டு தினையுண்டு தின்றுபசி தீர்ந்திடவே
வா'வென்று வந்தவொரு கிழவனையே உபசரிக்கையிலும்

'ஆனைமுகா சரண'மென அண்ணனையே அழைத்தங்கு
காமுற்ற கிழவனையே வெருட்டிநின்ற போதினிலுமே

தீம்பாகாய்க் குரலெழுப்பி சிந்தைமனம் கவர்ந்தவளாம்
நம்பியவன் திருமகளாம் வனக்குறத்தி வள்ளியவள்

தினைப்புனத்தைக் காவல்செய்த தீதில்லா தெய்வமகள்
த்னமணைத்து தினம் மகிழும் தனிப்பெருந் தெய்வமே!

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே
என்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே

மும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே
சர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே

எனையாளும் அப்பனே குமரப் பெருமானே!

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்

து பார் அப்பு ஆடல் தீ மொய்க் கால்
சொல் பா வெளி முக்குண மோகம்
துற்றாய பீறல் தோல் இட்டே
சுற்றா மதனப் பிணிதோயும்

பயிர் விளைந்து உணவுநல்கும் நிலமும்
உயிர் நிறைக்க உவந்தளிக்கும் நீரும்

கீழிருந்து மேலெழும்பி அசைகின்ற தீயும்
மெய்தழுவி நமையணைத்து வீசுகின்ற காற்றும்

சொல்லுக்கும் அடங்காது பரந்திருக்கும் வான்வெளியும்
சத்துவம் ராஜஸம் தாமசம் என்கின்ற முக்குணமும்

மண் பெண் பொன் என்னும் மூவகையாம் ஆசைகளும்
நெருக்கமாய் உள்ளுள்ளே ஒடுக்கமாய் வைத்திருந்து

ஒன்பது ஓட்டைகள் அடங்கிய தோலால்
நன்றாகச் சுற்றி மூடிய இவ்வுடம்பில்

கூடவே பிணைத்திருக்கும் காமமெனும் நோயும்
தோய்ந்திருக்கும் எப்போதும் எமையே வாட்டிநிற்கும்


இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே

இப் பாவக் காயத்து ஆசைப்பாடு
ஏற்றே உலகில் பிறவாதே

நிலம்புகுந்து பயிரழிக்கும் திருட்டு மாட்டுக்குக்
கட்டையொன்றைக் கட்டியங்கே அனுப்புதல்போல்

வினைநிறைந்த காரணத்தால் விளைகின்ற இவ்வுடம்பும்
ஆசைகளைக் கூட்டிவந்து அல்லலுற வந்ததிங்கே

பாவம்நிறைப் பொய்யுடம்பைப் பெற்றிங்கே வாழாமல்
மீண்டுமொரு பிறப்பிங்கே இனிமேலும் நிகழாமல்


எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

ஏத்தார் வித்தாரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

நின்புகழை நாடோறும் நித்தமிங்கே பாடாதார்
ஆரவாரக் கல்விஞானம் பெற்றதனால் கிட்டாத

அன்பிலார்க்கு என்றுமிங்கே எட்டாது நின்றிருக்கும்
அன்புருவாய் நிறைந்திருக்கும் நின்னருளைத் தரவேண்டும்!

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே
என்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே

மும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே
சர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே

எனையாளும் அப்பனே குமரப் பெருமானே!
**********************

********* அருஞ்சொற்பொருள் **********

து = உணவுப் பொருள்,
பார் = அதை நல்கும் பூமி
அப்பு = நீர்
ஆடல் தீ = அசைகின்ற நெருப்பு
சொல் பா வெளி = சொற்களால் புகழப்படுகின்ற ஆகாய வெளி
துற்றாய = நெருக்கமாய் வைக்கப்பட்டுள்ள
பீறல் = கிழியல்
பாவக் காயம் = பாவ மூட்டையான உடம்பு
எத்தார் = ஏத்தார் = போற்றிப் பாடாதார்
வித்தாரத்தே = ஆரவாரமான கல்வி ஞானம்; அகம்பாவக் கல்வி ஞானம்
தற்கு = தருக்கு; செருக்கு; ஆணவம்
ஆழி = ஆக்ஞா சக்கரம்
செற்றாய் = அழித்தவரே
பாகைப் பால் = பாகு + பால்; இனிமை
அத்தா = குரு; மூத்தோன்
நித்தா = என்றும் நிலைத்திருப்பவன்
முத்தா = ஆசா பாசங்களில் இருந்து நீங்கியவன்
சித்தா = சித்துக்களை உடையவன்
*************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

Read more...

Tuesday, May 11, 2010

"அ. அ. திருப்புகழ்" - 'வாசித்துக்....' - 38

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 'வாசித்துக்....' -- 38

எல்லாம் வல்ல வயலூர்க் குமரனை, அருகிலிருக்கும் திருசிராப்பள்ளியில் உறை தாயுமான சுவாமிக்கும் தலைப் பொருளாக வைத்து இந்த அழகிய திருப்புகழ் பின்னப்பட்டிருக்கிறது. பல உயர்ந்த விஷயங்கள் இந்தப் புகழிலே தெரிவிக்கிறார் அருணையார்! பலமுறை படித்துணர்ந்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய திருப்புகழ் இது! தேடித் தேடொணாப் பெரும்பொருள் எவருக்காகத் தானே இறங்கி வந்து ஆட்கொள்வான் என்பது இதனுள் இருக்கும் மறைபொருள்! ஓதுதற்கும் இனிமையான சந்த அமைப்பில் நம் மனம் கவரும் வகையில் இதனைப் படைத்திருக்கிறார் அருணகிரிநாதப் பெருமான்!

முருகனருள் முன்னிற்கும்!

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன ...... தந்ததான

......... பாடல் .........

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது

வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது

மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது

லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி

யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ

ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய

லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட

ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா

நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்

நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா

நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை

நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன ...... தந்ததான

......... பொருள் .........

[வழக்கம்போலவே, பின் பார்த்து, முன் பார்க்கலாம்!]

"ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே"

[ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல்
ஆகிப் பொற்பாதமே பணி ...... கந்தவேளே ]


உளமார மனமாரத் தனைநினைந்து நெக்குருகி
உடல்வாட உளம்வாட மலைக்காட்டுத் தினைப்புனத்தில்

கவணாடக் கல்லெறிந்து புள்ளினங்கள் பறந்தோடக்
வண்டாடும் முகம்வாட வெய்யிலிலே தினம் வாடும்

வனநாட்டு வேட்டுவச்சி மலைக்குறத்தி வள்ளிக்கென
உடனாடும் துணைவிட்டுத் தனியாகக் கால்நடையாய்க்

கானகத்தே காதலியைத் தேடிவந்து அருள்செய்து
தனைநாடிக் கால்நொந்த தமிழ்மகளின் பொற்பாதம்

தனைக்காணப் பலவேடம் புனைந்திருந்து தொழுதாடி
வேடனாக வந்திருந்து வேங்கைமரம் தானாகி

விருத்தனாகிப் பசிதீரத் தினைமாவும் தேனுமுண்டு
நாவறண்டு மயிலாடும் கானகத்தே புனலாடத்

துணைநாடித் தமையனையும் கரியாக வரவேண்டி
வளையாடும் கைகளுக்கு வளையடுக்கும் செட்டியாகி

வஞ்சியவள் கைப்பிடித்து தம்வேடம் தனைக்காட்டிப்
கொஞ்சுமுகக் குறவள்ளியைக் கவர்ந்தங்கு செல்கையிலே

போரிட்டப் பெற்றவனைப் பொருதிநின்று முடிசாய்த்து
மீண்டுமவர் உயிர்ப்பிக்கக் குறவள்ளிக் கருள்செய்து

பொன்மயிலாள் பொற்பாதம் மையலுடன் தான்பணிந்து
தனைவேண்டிய அடியவளை ஆட்கொண்டக் கந்தவேளே!


"ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா"

[ஆலித்துச் சேல்கள் பாய் வயலூரத்தில் காளம் ஓடு அடர்
ஆரத்தைப் பூண் மயூர துரங்க வீரா]

மேடுயர்ந்த வயலினிலே மிகவாக வளங்கொழிக்க
ஓடுகின்ற நீரினிலே ஆரவாரம் மிகவெழுப்பி

ஆடுகின்ற மீன்கள்நிறை வயல்சூழும் வயலூரில்
சீறுகின்ற கொடுவிடத்தைக் கொண்டிருக்கும் நச்சரவம்

மாலையாகத் தானணியும் மயில்மீது தீரமுடன்
பரிதிமீது அமர்ந்திருக்கும் வீரனெனக் காட்சிதரும்

பெருமையுள்ள வயலூர்க் குமர வேளே!


"நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா"

[நாசிக்குள் ப்ராணவாயுவை ரேசித்து எட்டாத யோகிகள்
நாடிற்றுக் காண ஒணாது என நின்ற நாதா]


வலக்கால் பெருவிரலில் மூண்டெழும் இடைக்கலை

இடக்கால் பெருவிரலிம் தானெழும்பும் பிங்கலையும்

மேனோக்கிப் புறப்பட்டுக் கொப்பூழில் தாம் பிணைந்து

இடப்பக்கம் இடைகலையும் வலப்பக்கம் பிங்கலையுமாய்

முதுகு,பிடர்,தலைவழியே மூக்கினிலே முடிந்திருக்கும்


வலநாசித் துவாரத்தால் பிங்கலையும் வெளியேறும்

இடநாசித் துவாரத்தால் இடைகலையும் தான்செல்லும்

உள்ளிழுக்கும் சுவாசமோ பூரகம் எனப்படுமே

வெளியேறும் சுவாசமும் ரேசகம் எனப்படுமே

உள்நிறுத்தும் காற்றினையே கும்பகம் எனச்சொல்வர்


உட்கொள்ளும் சுவாசத்தை உச்சிக்குக் கொண்டுசென்று

ஸகஸ்ராரம் சேர்கையிலே அமுதமது உருவாகும்

இதுபுரியும் ஊட்டத்தால் உள்ளுணர்வு உனில்பிறக்கும்

ஆறுவகை ஆதாரமும் ஒருவருக்கு வசப்படுமே


முறையான குருமூலம் சரியாகக் கற்றவரே

இதன்சூக்குமம் அறிந்திடுவார் முறையான பலன்பெறுவார்!

ஆதார வாயுவினை இவ்வண்ணம் பயிலாத

யோகியரும் ஞானியரும் எத்துணைதான் விரும்பினாலும்

காணுதற்கு அரிதாகி அப்பாலுக் கப்பாலாகிக்

காணவொட்டாப் பரம்பொருளே! தனிப்பெரும் தலைவனே!


"நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே."

[நாகத்துச் சாகை போய் உயர் மேகத்தைச் சேர் சிராமலை
நாதர்க்குச் சாமியே சுரர் தம்பிரானே.]


ஓங்கி உயர்ந்திருக்கும் பெருமலையின் கிளைச்சிகரம்
நீண்டிருந்து மேலெழும்பி வானிருக்கும் மேகத்தைச்

சேர்ந்தடையும் வண்ணம்போல் சிறந்திருக்கும் சிராப்பள்ளி
மலையினிலே குடியிருந்து அடியவர்க்கு அருளிடவே

பெருவெள்ளம் தாண்டிவந்து தான்பெற்ற மகள்துடிக்கும்
நிலையினையே காணவொண்ணாத் தாயவளின் துயர்கேட்டுத்

தானேதாயாக அக்கரைசென்று மகப்பேறுத் தாதியாகச்
சென்றருளிய தாயுமான சுவாமிக்கு உயரியபொருளே!


"வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாதது"

[வாசித்துக் காண ஒணாதது பூசித்துக் கூட ஒணாதது
வாய்விட்டுப் பேச ஒணாதது]

எத்தனைநூல் கற்றாலென்ன எவையெவையோ படித்துமென்ன
அத்தனையும் பயன்தாரா அனுபவமே கைகொடுக்கும்

எத்தனைமலர் கொண்டிங்கே நானுன்னை அர்ச்சித்தும்
அத்தனையும் உன்தாளிணை சேர்ந்திடுமோ அறியேனே

எத்தனையோ பெருமைகளைச் சொல்லியுனைப் பாடினாலும்
அத்தனையும் நின்பெருமை சொல்லுதலும் கூடிடுமோ

"நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது"

[நெஞ்சினாலே மாசர்க்குத் தோண ஒணாதது நேசர்க்குப் பேர ஒணாதது
மாயைக்குச் சூழ ஒணாதது]


வெளிப்பார்வை வேடமிட்டு மனத்தினிலே மாசுவைத்து
ஒளித்திங்கு வாழ்வோர்க்கு பாலுள்ளேநெய்போல மறைந்திருக்கும்

தனைநினைந்து தினமுருகித் தணியாதக் காதலுடன்
மனமிருந்து நீங்காது என்றென்றும் வீற்றிருக்கும்

ஓயாது நிதமுழற்றி ஓராயிரம் உருக்காட்டும்
மாயையினால் வளைத்திடவே எந்நாளும் முடியாதது


"விந்துநாத ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது"

[விந்துநாத ஓசைக்குத் தூரமானது மாகத்துக்கு ஈறு தான் அது
லோகத்துக்கு ஆதி ஆனது]

தத்துவங்கள் முப்பத்தாறில் முடிவான விந்துநாதம்
அத்தனையும் கடந்தங்கே தொலைவினிலே பொலிந்திருக்கும்

பூதவெளி கடந்திருக்கும் முடிவினிலே ஒளிர்ந்திருக்கும்
விண்வெளிக்கும் அப்பாலாய்த் தானிருந்து திகழ்ந்திருக்கும்

அண்டத்தில் நிலவுகின்ற எண்ணிறைந்த உலகங்கள்
அத்தனைக்கும் முதலாக விளங்குகின்ற மெய்ப்பொருளை


"கண்டுநாயேன் யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ"

[கண்டு நாயேன் யோகத்தைச் சேருமாறு மெய்ஞ்ஞானத்தைப் போதி யாய்
இனி ஊனத்தைப் போடு இடாது மயங்கலாமோ]

நாயினேன் யானும் உள்ளுக்குள் கண்டுணர்ந்து
சிவயோகம் என்கின்ற பேருணர்வை அடையுமாறு

மெய்ஞ்ஞானப் பொருளதுவை உபதேசம் அருளிடுவீர்
பொய்யான மேனியிதை வெறுக்காமல் மயங்குவதோ?
[வாணாளை வீணாகக் கழிப்பதுவும் தகைமையோ?
மெய்யான தெய்வமே! இதுவுமுனக்கு முறைமையோ?]
***************

........ அருஞ்சொற்பொருள்..........

மாகம் = விண் முடிவு
ஊனம் = பொய்யான உடம்பு
போடு = வெறுத்து ஒதுக்குதல்
ஏனல் = தினைப்புனம்
மயல் = மையல் என்பதன் திரிபு
ஆலித்து = ஆரவாரம் செய்து
சேல் = மீன்
காளம் = விடம்
அடர் = நிறைந்த
ஆரம் = மாலை
ரேசித்து = வெளிவிடுத்து மீண்டும் பூரகம் செய்து சஹஸ்ராரப் பெருவெளியை எட்டுதல்
நாகம் = ஆகாயம்
சாகை = சிகரம், கிளை
சுரர் = தேவர்
*****************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
***************

Read more...

Wednesday, February 24, 2010

"அ.அ.திருப்புகழ்" 37 -- "கள்ளக் குவாற் பை"

"அ.அ.திருப்புகழ்" 37 -- "கள்ளக் குவாற் பை"

திருப்புகழின் ஞான விளக்கங்களையெல்லாம் படிக்கிறபோது, மேலெழுந்தவாரியாக நான் எழுதிப் போகும் விளக்கம் எனக்குள் ஒரு அச்சத்தை தோற்றுவிக்கிறது! ஒவ்வொரு புகழுக்குள்ளும் ஓராயிரம் மறை பொருள் ஒளிந்திருக்கையில், நுனிப்புல் மேய்வது சரியோ என! 'உனக்குத் தெரிஞ்சதைத்தானே நீ செய்ய முடியும்!' என உள்ளேயிருந்து ஒரு குரல் வர, ராமர் பாலத்து அணில் போல என் பணியைத் தொடர்கிறேன். முருகனருள் முன்னிற்கும்!

அடுத்து என்ன எழுதலாம் எனப் புரட்டியபோது, முதலில் கணணில் பட்டது இந்த வள்ளிமலைத் திருப்புகழ்! சந்தம் இதுபோல எவரால் எழுத முடியும் என்பதுபோல அமைந்திருக்கிறது! பொருளோ அதற்கும் மேலே ஒரு படி போய், இவ்வுடம்பின் அநித்தியத்தைப் புட்டு வைக்கிறது. இதற்கு இடையில் ஒரு அருமையான உபதேசமும் இதில் ஒளிந்திருக்கிறது! எப்படி பக்தி செய்தால் முருக தரிசனம் கிட்டும் என அருணையார் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார்! முதலில், பாடலைப் பார்ப்போம்!

தய்யத்த தாத்த தய்யத்த தாத்த

தய்யத்த தாத்த ...... தனதான

......... பாடல் .........

கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப

கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச


அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்

அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே

சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே


வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

************************

-------- பொருள் --------
[வழக்கம்போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்!]


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே

தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்திமாற்கும்
வெள் உ[ந்]த்திமாற்கும் மருகோனே

"தெள் அத்தி சேர்ப்ப"

செயலாக்கம் செய்வதற்கோர்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
கிரியா சக்தியின் வடிவமான
தெளிந்த நல்லறிவு மிக்க
தெய்வயானையின் தலைவரே!

"வெள் அத்திமாற்கும் மருகோனே"

வெள்ளையானையெனும் ஐராவதத்தைப்
பட்டத்துயானையாய்க் கொண்டிருக்கும்
தேவலோக அரசனான தேவேந்திரனின்
மகளை மணந்ததனால் மருமகனாகியும்,

"வெள் உ[ந்]த்திமாற்கும் மருகோனே"

வெண்ணிறம் பொங்கிப் பெருகும்
பாற்கடலிற் பள்ளிகொண்டதிருமாலின்
தங்கை மகனாய்ப் பிறந்ததனால்
அவருக்கு மருகனுமான முருகனே!


சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே

சிள் இட்ட காட்டில் உள்ள கிரார் கொல் புள்
அத்த மார்க்கம் வருவோனே

மனவிருப்பு மிகக்கொண்டு
தினைகாத்த குறமகளை
வண்டினங்கள் சூழ்ந்திருக்கும்
வனத்தினிலே நிறைந்திருக்கும்
புள்ளினத்தைக் கொல்கின்ற
வேடுவர்கள் வாழ்ந்திருக்கும்
நெடுங்காட்டில் நடந்துசென்று
தேடியலைந்து திரிந்திட்ட பெருமானே!

வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே

வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க
வல்லைக்குள் ஏற்றும் இளையோனே

"வள்ளிச் சன்மார்க்கம்"

மனங்கவர்ந்த மன்னவனை
வனவேடன் வடிவினனை
கிழவேடம் தாங்கிவந்து
தினையள்ளித் தின்றவனைத்
தீரா விக்கலினால் தொண்டைதிணறச்
சுனையள்ளிக் குடித்தவனை
ஆனையண்ணன் உதவிகேட்டு
அரவணைத்துக் கொண்டவனை
வானோர்க்கும் வல்லபிரானை
மனதினிலே எண்ணியெண்ணித்
தன்னை மறந்துத் தலைவன் தாளே
தலைப்பட்டு நின்றிருந்தக் குறமகளைத்
தானே தேடிவந்து ஆட்கொண்ட அருளாளன்
தன்னை இழந்து "அவனை" நினைந்தவரை
முன்னின்று ஆட்கொள்ளும் மார்க்கமே
வள்ளிச் சன்மார்க்கமெனும் மறைநெறியாம்!

"விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே"

குறவள்ளி கடைபிடித்த
சன்மார்க்க நெறிதன்னைச்
சிவனாரும் வேண்டிடவேத்
தந்தைக்கும் அந்நெறியைக்
கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில்
அவர் செவிக்குள் உபதேசம்
செய்திட்ட இளையவனே!

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

வள்ளிக் குழாத்து வள்ளி கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே!

வள்ளிக்கொடி படர்ந்திருந்து
பக்கமெலாம் நிறைந்திருக்கும்
வள்ளிமலையெனும் மலைக்காட்டில்
தினைப்புனத்தைக் காக்கவந்து
தின்னவரும் புள்ளினத்தைக்
கவண்கல்லை வீசியெறிந்து
'சோசோ'வென ஆலோலம் பாடிய
வள்ளிக்குறத்திக்குக் கணவனாய்
வாய்த்திட்ட பெருமையுடையோனே!


கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

"கள்ளக் குவால் பை"

பொய்,சூது, வஞ்சனையெனும்
கள்ளத்தனங்களால் நிறைந்த பை

"தொள்ளைப் புலால் பை"

ஒன்பது ஓட்டைகளை வைத்த
மாமிசத்தால் ஆன பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப

கள்வைத்த தோற்பை

"துள் இக்கனார் கயவு கோபம் கள் வைத்த தோல் பை"

இங்குமங்கும் அலைந்து திரிந்து
துள்ளுகின்ற கரும்புவில்லைக் கொண்ட
மன்மதனால் உண்டாகும் அயர்வு,
கோபமெனும் தீய கள்ளைத் தன்னுள்ளே
வைத்திருக்கும் தோலாலான பை

பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ......

"பொள் உற்ற கால் பை"

இங்குமங்குமாய் வெகுவேகமாய்
உள்ளுக்குள் அலைகின்ற
பத்து விதக் காற்றடைத்த பை

"கொள்ளை துரால் பை"

வீசுகின்ற காற்றினிலே
செத்தையென அலைகின்ற
சருகான இலைபோலக்
கூற்றுவன் கயிறுவீசிக்
கொள்ளை கொண்டுபோம் பை

பசுபாச

அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சா

"பசு பாச அள்ளல் பை"

பசுவென்னும் ஆன்மாவும்
பாசமென்னும் ஆணவமும்
சேர்ந்தடைத்த சேற்றுப் பை

"மால் பை"

ஆசை, காமமென்னும்
மயக்கங்கள் நிறைந்த பை

"ஞெள்ளல் பை"

பாவங்களும் குற்றங்களும்
நிறைந்திருக்கும் பை

"சீ பை"

சீழ் நிறைந்த பை

"வெள் இட்ட அசா"

தளர்ச்சி மிகுந்த பை

பி ...... சிதமீரல்

அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ

"பிசிதம் ஈரல் அள்ள சுவாக்கள் சள் இட்டு இழா
பல் கொள்ளப்படு ஆக்கை தவிர்வேனோ"

உயிரிழந்து போனபின்னே
சடலத்தில் மிகுந்திருக்கும்
இறைச்சி, ஈரல் எனும் உறுப்புகளை
அள்ளியுண்ணவரும் நாய்கள்
'சள்'ளென்று குலைத்தும், இழுத்தும்
பற்களால் கடித்துக் குதறும்
இவ்வுடம்பை ஒழிக்கமாட்டேனோ?
********************

அருஞ்சொற்பொருள்

குவால்= கூட்டம்
தொள்ளை= ஓட்டை
புலால்= மாமிசம்
இக்கன் = கரும்பு வில்லை உடைய மன்மதன்
கள்= மயக்கம் தரும் பானம்; கோபமும் மயக்கத்தைத் தரும்
பொள்= வேகத்தைக் குறிக்கும் சொல்
கால்= காற்று
துரால்= செத்தை, சருகு
மால்= மயக்கம்
ஞெள்ளல்= குற்றம்; சோர்வு; பள்ளம்
அசா= தளர்ச்சி
பிசிதம்= இறைச்சி
சுவா= நாய்
ஆக்கை= உடம்பு
தெள்= தெளிந்த அறிவு
அத்தி= யானை; தெய்வானை
உத்தி= உந்தி= கடல்
சிள்= சிள் வண்டு
கிரார்= கிராதகர்; வேடர்
புள்= பறவை
அத்தம்= காடு
மார்க்கம்= வழி
விள்= விளக்கிச் சொல்
ஐ= தந்தை
வல்லை= விரைவு, வேகம்
நோக்கம்= கண்ணிமைக்கும் நேரம்
************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

Read more...

Monday, January 18, 2010

"வடம் பிடிக்க வாரீர்!"

"வடம் பிடிக்க வாரீர்!"

அந்தப் பெரியவர் கால்களை நீட்டியபடி சயனித்திருக்கிறார்.
மெத்தப் படித்த அவரது பக்தர் ஒருவர், கால்மாட்டில் அமர்ந்தபடி, அவரது கால்களைப் பிடித்து, பாதசேவை செய்து கொண்டிருக்கிறார்.
பக்தரின் வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.

பெரியவர்: என்னப்பா? என்ன சொல்லிகிட்டிருக்கே?

பக்தர்: அது ஒண்ணுமில்லை சாமி! ஒரு சம்ஸ்க்ருத ச்லோகம்.

பெ: அதான் என்ன ச்லோகம்னு கேக்கறேன்.

பக்: கீதையில இருக்கற ஒரு ச்லோகம் சாமி அது!

பெ: எங்கே? சத்தமாச் சொல்லு! நானும் கேக்கறேன்.

பக்: "தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா

உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ தர்ஷின:
- Hide quoted text -

பெ: இதோட அர்த்தம் என்னன்னு எனக்குக் கொஞ்சம் சொல்றியா?

பக்: ஸம்ஸ்க்ருதம் தெரிஞ்சா இதெல்லாம் ரொம்ப சுளுவாப் புரியும் சாமி!

பெ: அதானே உன்னைக் கேக்கறேன். இந்தப் பாட்டோட அர்த்தம் என்னப்பா?

பக்: அதாவது, [தொண்டையைக் கனைத்துக் கொண்டே] சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணிகிட்டும், இது என்ன, அது என்னன்னு கேள்வி கேட்டுகிட்டும், கை காலைப் பிடிச்சுவிட்டுப் பணிவிடை பண்ணிகிட்டும், குருகிட்டேருந்து இந்த ஞானத்தைக் கத்துக்கோ. அப்படிப் பண்ணினேன்னா, அந்த ஞானிகள் ப்ரம்மத்தைப் பத்தின தெளிவை உனக்கு உபதேசம் செய்வாங்கன்னு பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இதுல சொல்றாரு!

பெ: இப்ப உன்னை இதோட மொத்த அர்த்தத்தையா நான் கேட்டேன்? வார்த்தை,, வார்த்தையாப் பிரிச்சு அர்த்தம் சொல்லுப்பா!

பக்: ப்ரணிபாதேனன்னா, பணிந்து வணக்கம் செய்வது; பரிப்ரச்னேனன்னா, கேள்விகள் கேக்கறது; ஸேவயான்னா பணிவிடை செய்யறதுன்னு அர்த்தம்
தத் வித்தி= கேட்டுத் தெரிஞ்சுக்கணும்
தத்வ தர்ஷின: ஞானின; ன்னா இந்த ஞானத்தைத் தெரிஞ்ச ஞானிகள்;
ஞானம்= அந்த ஞானத்தை; தே= உனக்கு; உபதேக்ஷ்யந்தி= சொல்லிக் கொடுப்பாங்க.

பெ: ரொம்ப நல்லா சொல்றியே! சரி, நமஸ்காரம் பண்ணினா மட்டும் போறுமா?

பக்: 'ப்ரணிபாத'ன்னா அதான் அர்த்தம். எனக்கு அதுக்கு மேல சொல்லத் தெரியலை!

பெ: சரி, விட்டுரு! 'பரிப்ரச்ன'ன்னா....?

பக்: அதான் சொன்னேனே! கேள்விகள் கேட்கறதுன்னு அர்த்தம்.

பெ: அப்ப 'ப்ரச்ன'ன்னா என அர்த்தம்?

பக்: அதுவும் கேள்வி கேக்கறதுதான்!

பெ: அப்போ, 'ப்ரச்ன'ன்னே சொல்லியிருக்கலாமே ? எதுக்கு இந்த வியாஸர் 'பரி'ன்னு இன்னொரு வார்த்தையைச் சேர்த்தாரு? அவருக்கு எதுனாச்சும் மூளை கெட்டுப் போயிருக்குமோ?

பக்: இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை எனக்கு!

பெ: 'ஸேவா'ன்னா, எந்த மாதிரி ஸேவை?

பக்: இதோ நாங்கள்லாம் உங்களுக்குப் பண்றோமே அது போலத்தான். இப்படி கை காலைப் பிடிச்சு விடறது, கூடமாட இருந்து உங்களைக் கவனிச்சுக்கறது இதெல்லாம்தான்!

பெ: [சிரிக்கிறார்!] ஓஹோ! அப்படிப் பண்ணினா மட்டும் போறுமா?

பக்: [சலிப்புடன்] இப்படி மடக்கி, மடக்கிக் கேட்டா எப்படி சாமி? எனக்கு வேற அர்த்தம் எதுவும் தெரியலை!

பெ: [புன்னகையுடன்] அடுத்த வரியில 'உபதேக்ஷ்யந்தி தே ஞானம்'! இந்த ஞானம்ன்றதுக்குப் பதிலா வேற ஏதும் வார்த்தை போடலாமா? உனக்குத்தான் இந்த பாஷை நல்லாத் தெரியுமே!

பக்: [சற்றுத் தெம்புடன்] ஓ! போடலாமே!

பெ: என்ன போடலாம்?

பக்: அஞ்ஞானம்னு சொல்லலாம்.

பெ: அப்படிப் போட்டா இன்னும் தெளிவாப் பொருள் கிடைக்கும்னு நினைக்கிறியோ?

பக்: [சற்று திகைப்புடன்] இல்லை, இல்லை! நான் அப்படிச் சொல்லலை! சங்கர பாஷ்யமும் அப்படிச் சொல்லலை!

பெ: அதனாலென்ன? ஒரு நல்ல அர்த்தம் வரும்னா அப்படிச் சேர்த்தா என்ன தப்பு?
அது கிடக்கட்டும்! எதுக்கு ஒரு 'தத்வ தர்ஷி'கிட்ட போய் நமஸ்காரம் பண்ணி, கேக்கச் சொல்றாரு? கிருஷ்ணரே ஒரு பெரிய ஞானிதானே?

பக்: அட! ஆமாம்! ஏன் அப்படிக் கேக்கச் சொல்றார்?

பெ: அப்போ, உனக்கு இது புரியலைன்றியா?

பக்:[ பதைபதைப்புடன், பெரியவரின் கால்களைப் பிடித்துக் கதறியபடி] எனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியும்னு நினைச்சு ஆணவமா நான் சொன்னது மகா தப்புன்னு இப்பப் புரியுது சாமி! என்னை மன்னிச்சிருங்கோ! என்னோட திமிரை எவ்வளவு சுளுவா சுட்டிக் காண்பிச்சுட்டீங்க! தயவு செஞ்சு, இந்த ச்லோகத்தோட அர்த்தத்தை எனக்கு சொல்லி அருளணும் சாமி!

பெ: வெறுமனே காலுல விழுந்து நமஸ்காரம் பண்ணினா மட்டும் போறாது! உன்னோட உடல், பொருள், ஆவி இத்தனையும் அவர் காலுல போடறதா உணர்ந்து பணிவோட வணங்கணும்.

மடக்கணும், தப்பு கண்டு பிடிக்கணும்னு நினைச்சுகிட்டு குருகிட்ட கேள்வி கேட்கக் கூடாது. தனக்கு ஒரு தெளிவு வரணும்னும், ஆன்மீகத்துல இன்னும் முன்னேறணும்ன்ற ஆர்வத்தோட மட்டுமே கேள்வி கேட்கணும். கேட்டதை, நல்லாப் புரிஞ்சுக்கற வரைக்கும் தாராளமாக் கேட்கலாம். அரைகுறையாப் புரிஞ்சுக்கக் கூடாது.

ஸேவைன்னா சும்மாக் காலைப் பிடிச்சு விடறதுல்லாம் இல்லை. நம்மளோட இந்த உடல் தன்னுதுன்னு நினைக்காம, குருவுக்குப் பணிவிடை செய்யறதுக்குத்தான் இந்தப் பிறவி எடுத்தோம்னு நினைச்சுகிட்டு, பணிவிடை செய்யணும்!.

இப்படில்லாம் முறையாச் செஞ்சா, குருவானவர், உனக்கு ஞானத்தைப் போதிப்பார்!

அஞ்ஞானத்தை ஒழிச்சாத்தானே ஞானம் பிறக்கும்! ப்ரணிபாதன்னா சரணாகதி. ஏன் தவதர்ஷிகிட்ட போகச் சொல்றார் கிருஷ்ணன்? தன்னை அறிஞ்சவங்க எல்லாருமே கிருஷ்ணர்கள்தான்! முறையான பக்தனுக்கு, குரு ஒரு கிருஷ்ணனாத்தான் தெரிவார். அப்படிப்பட்ட குரு தனது சிஷ்யர்களை வாசுதேவனாப் பார்க்கறார்! கிருஷ்ணனோ இந்த ரெண்டு பேரையும் பிராணனாவும், ஆத்மாவாவும் பார்க்கறார்! இப்படிப்பட்ட தேடல்ல இருக்கற பக்தர்களும், தன்னை அறிஞ்ச குருவும் இருக்கறது கிருஷ்ணனுக்குத் தெரியாம போகுமா என்ன? அதனாலத்தான், எல்லாரையும் தங்கிட்ட வந்து கேளுங்கன்னு சொல்லாம, இப்படி ஒரு ஈஸியான வழியைக் காமிக்கறார்!

பக்: [கண்களில் நீர்மல்க] இதுமாதிரியே தினம் ஒரு ச்லோகத்துக்கு நீங்க அர்த்தம் சொல்லணும் சாமி! நான் அதைக் கேட்டுப் பயனடையணும்னு பணிவாக் கேட்டுக்கறேன் சாமி!

பெரியவர் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே, இன்னும் வசதியாகக் கால்களை நீட்டிப் புரண்டு படுக்கிறார்!

"பணிவதால் வினவலால் பணிவிடை புரிவதால்
அணியலார் மேனிய, அறியிதை; ஞானியர்
துணியமெய் உணர்ந்தவர் துலக்குவர் உனக்கதே!" [ப.கீ. அத்:4; 34]


[அந்தப் பெரியவர் ஷீர்டி ஸாயிபாபா! பக்தர் நானாஸாஹேப் சந்தோர்க்கர்.]
ஆதாரம்: ஷீர்டி ஸாயி ஸத்சரிதம், 39-ம் அத்தியாயம்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP