மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 18
மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 18
17.
வடை டீ சாப்பிட்டானதும், அடுத்த பாட்டை உடனே படித்தேன்.
யாமோ தியகல் வியுமெம் மறிவும்
தாமே பெறவே லவர்தந் ததனாற்
பூமேன் மயல்போ யறமெய்ப் புணர்வீர்
நாமே/னடவீர் நடவீ ரினியே.
யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்
நாம் ஏன் நடவீர் நடவீர் இனியே.
"யாமோதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்"
படிக்கறது வேற ஓதறது வேற. படிக்கறதுன்னா, சும்மா மெலெளுந்தவாரியா கண்ணை ஓட்டறது. கவனமாப் புரிஞ்சுக்காம, வேணுங்கறதை மட்டும் அப்படியே படிச்சுகிட்டுப் போறது! பரிட்சைக்கு சிலபேர் படிப்பாங்களே, முக்கியமான கேள்விங்களுக்கான பதிலை மட்டும்... அதும்மாரின்னு வைச்சுக்கலாம். படிச்சதுல பாதிய மறந்திருவான்!
ஆனா, ஓதறதுன்னா, ஒ[உ]ணர்ந்து சொல்றது. ஒவ்வொரு வார்த்தையையும் அப்பிடியே நெஞ்சுல அடிச்சமாரி வாங்கிக்கினு சொல்றதுக்கு ஓதறதுன்னு பேரு. நம்ம தருமபுரம் சாமிநாதன் தேவாரம் பாடறப்ப கவனிச்சியானா, இந்த ஓதறதுன்னா இன்னான்னு ஒனக்குப் புரிஞ்சிரும்! அதுனாலத்தான், அவங்களையெல்லாம் 'ஓதுவார்'னு சொல்றோம்.
சரி, அப்பிடி நல்லா மனசுல வாங்கிக்கினு படிச்ச படிப்பும், அதுனால வந்த அறிவையும் கொடுத்தவன் முருகன். அவனோட அருள் இல்லாம இப்பிடிப் படிக்கவோ, படிச்சதைப் புரிஞ்சுக்கவோ, அறிவைப் பெருசாக்கவோ முடியாது! அப்பிடிக் கிடைச்ச படிப்பையும், அறிவையும் வைச்சுக்கினு இன்னா பண்ணனும்? மேகத்துலேர்ந்து ஊத்தற மளை[ழை] கடலுக்குப் போயி, திரும்பவும் மேகமா மாறுறமாரி, அவங்கிட்டேர்ந்து வந்தது, திரும்பவும் அவனுக்கே போறமாரி நடந்துக்கணும்!
அவர்கிட்டியே திருப்பித் தந்திறணும்னு சொல்றாரு. எப்பிடித் திருப்பித் தர்றது? அந்த அறிவை வைச்சு அவனை மட்டுமே பாடுன்றாரு. ஏன்னா, இது அவர் குடுத்தது! அவர்கிட்டியே அவருக்கு அலங்காரமாத் திருப்பிக் குடு! அதாங்காட்டிக்கு, மத்த எதுலியும் சிந்தனை போவாம, முருகன் மேலியே நெனைப்பாக் கெடக்கணும்!
இதான் இந்த ரெண்டு வரியுல சொல்றது!
"பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர் நாம் ஏன் நடவீர் நடவீர் இனியே"
அதுக்கான வளி[ழி]யை இப்ப சொல்லிக் காமிக்கிறாரு!
போன பாட்டுல சொன்னாரே, ஆசையை ஒளி[ழி]க்கணும்னு! அதுக்கும் இதுல வளி காமிக்கிறாரு!
இந்த ஒலகத்தும் மேல க்கீற ஆசையையெல்லாம் கெடுறத்துக்கு சதா சர்வ காலமும் அந்த முருகனைப் பத்தி மட்டுமே பேசறது, பாடறது, படிக்கறது, நெனைப்புல வைச்சுக்கறதுன்னு மாத்திக்கினியானா, தானா மத்ததுல்லாம் ஒன்னிய வுட்டுக் கள[ழ]ண்டுக்கும். எது உண்மையான சமாச்சாராம்னு புரிஞ்சு போயிறும்!
'பூ'ன்னா இந்த ஒலகம். இந்தப் 'பூ'வை வைச்சு இன்னோரு அர்த்தமும் சொல்லலாம். ஆனா, அது இப்ப வேணாம்! இந்த ஒலகத்தும் மேல ஒனக்கு இருக்கற அல்லா ஆசையும் அத்துப் போவணும்னா, நீ எது மெய்யுன்னு புரிஞ்சுக்கினு, அத்தோட போய்ச் சேரணும். அத்தோட மட்டுந்தான் சேரணும்!
அப்பிடிப் பண்ணினியானா, அப்பறம் இன்னாடா கவலை ஒனக்குன்றமாரி, 'நாம் ஏன்?'னு சொல்லி ஒரு 'டொக்கு வைக்கறாரு.
"நாம் ஏன்"னா நமக்கு இனிமே இன்னா பயம்னு அர்த்தம்!
அப்போ இன்னாத்துக்கு ரெண்டு தபா 'நடவீர் நடவீர்'னு போட்டிருக்காரு?
இதான் படிக்கறதுக்கும், ஓதறதுக்குமான வித்தியாசம்!
சாதாரணமாப் படிச்சியானா, 'நடவீர்; நடவீர்'னு அளு[ழு]த்திச் சொல்றாரோன்னு தோணும். ஆனா, அது அப்பிடி இல்லை!
அத்த நீ எப்பிடிப் படிக்கணும்னா, 'நடவீர்; நடவீர் இனியே'ன்னு!
மொதல்ல சொல்லியிருக்கற 'நடவீருக்கு' நடங்கப்பா, போங்கப்பா, அந்த உண்மையான கந்தனை தேடிக்கினு'ன்னு பொருளு.
ரெண்டாவது நடவீரை "இனியே"வோட சேர்த்துப் படிக்கணும்.
அப்பிடி நீ குமரனைத் தேடிப் போனியானா, இனிமே நீ பொ[பி]றவி எடுத்து இந்த ஒலகத்துல நடக்கவே மாட்டேன்னு அர்த்தம்!
வெளங்குதா?
முருகனைத் தேடிப் போ! ஆசையெல்லாம் அத்துறும்! அந்த மெய்யான தெய்வத்தைக் கண்டுபிடிச்சிட்டேன்னா, அங்கயிங்கன்னு அலையாம அவரையே கெட்டியாப் பிடிச்சுக்கினியானா, அவனே தொணையா கூடவருவான்; அதுக்கப்புறமா, இனிமே ஒனக்குப் பொறப்புன்றதே கெடையாதுன்னு இன்னோரு உண்மையைப் புட்டுவைக்கறாரு அருணகிரியாரு!
இத்தயே, இன்னொருவிதமாச் சொல்றதானா, 'நா மேல் நடவீர்; நடவீர் இனியே'ன்னும் பிரிச்சு அர்த்தம் சொல்லலாம்.
அதாங்காட்டிக்கு, அவர் குடுத்த கல்வியயும், அறிவையும் வைச்சுக்கினு, இந்த ஒலக ஆசையையெல்லாம் ஒளிச்சு அவரையே அடையணும்னா, "முருகா, நீ வந்து எப்பவும் என்னோட நாக்குமேலியே நடமாடணும்ப்பா! அத்த விட்டு வேற எங்கியும் போவாம என்னோட நாக்குலியே குடியிருக்கணும்ப்பா!... நான் எப்பவும் ஒன்னியே பாடறதுக்குத் தோதா'ன்னு முருகங்கிட்ட வேண்டறதாவும் புரிஞ்சுக்கலாம்!
அப்பிடியாப்பட்ட அந்த முருகனோட பெருமையைச் சொல்றதுதான் அடுத்த பாட்டு. அத்த நம்ம ஐயரு சொல்வாரு!' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்!
சாம்பு சாஸ்திரிகள் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்!
*************
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!