"பரிசேலோர் எம்பாவாய்" [8]
"பரிசேலோர் எம்பாவாய்" [8]
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8
8.
தோழியர்: கோழிகள் கூவிட, பறவைகள் கீச்சிட எங்கும் ஒலிமயம் !
ஏழுசுரங்களாலான இசைக்கருவிகளும் ஒரே சுருதியிலான
வெண்சங்கும் சேர்ந்து ஒலித்திட, எங்கும் இசைமயம்!
தனக்குவமை இல்லாத அருட்பெரும் சோதிவடிவானவனையும்
அப்பெருமானின் தனிப்பெருங்கருணையினையும் , ஒப்பில்லாமணியின்
மேன்மைப் பொருட்களையும் போற்றிப் புகழ்ந்து பாடினோமே
அது உன் செவிகளுக்குக் கேட்கவில்லையா? அதென்ன உன் கூடவே வாழும்
உறக்கமோ, அதை உன் வாய் திறந்து சொல்வாயடி!
ஆழ்கடலில் அரவம் குடைபிடிக்க ஆழ்துயிலில் அயர்ந்தது போல்
நடிக்கும், ஆயினும் அனவரதமும் அரனைத் துதிக்கும்
சக்கரதாரியாம் அரங்கனது அன்பு போன்றதோ உன் பக்தியும்!
ஊழிக்காலங்கள் அனைத்திற்கும் முன் தோன்றி,
இன்னும் அழிவின்றி நிற்கின்ற,
சக்தியாம் மாதொரு பாகம் உடையானைப்
பாடடி என் பெண்ணே!!
அருஞ்சொற்பொருள்:
குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).