Tuesday, October 23, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 23

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 23

முந்தைய பதிவு இங்கே!





அத்தியாயம். 21.


"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்." [1227]



'உங்க தலைவர் ரொம்ப நல்ல மாதிரியாத்தான் இருக்காரு!' என கந்தன் தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தான்.

'ஆமா தம்பி, எனக்கே ஆச்சரியமாஇருந்திச்சு. அவர் எப்பவுமே இப்படிப் பேசினவரு இல்லை.ரொம்பக் கறாரான ஆளு அவரு. என்னமோ
நாட்டு நடப்புத்தான் அவரை இப்படிப் பேச வெச்சிருக்குன்னு நினைக்கறேன். உங்க நேரம் நல்ல நேரம்னும் நெனைக்கறேன். சரி வாங்க போலாம்'
என்றபடியே நடந்தான் காத்தான்.

'ஆமா, அதென்னா போறப்ப உங்க தலைவரு எதுவோ சொன்னாறே! ஆங்! பொண்ணுங்களோட பேசக்கூடாதுன்னு. அதென்ன சட்டம்?'
என ராபர்ட் சிரித்தபடியே வினவினான்.

'அதுங்களா! எங்க ஊருல இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்குங்க. பெத்தவங்க அல்லது சொந்தக்காரங்க யாரும் இல்லாதப்ப, எந்த ஒரு ஆம்பளையும்,
இன்னோரு பொண்ணோட தனியா பேசக்கூடாது. இதுல, இங்க ரொம்ப கண்டிப்பா இருப்போமுங்க.
நீங்களும் பாத்து நடந்துக்கோங்க' என்றான் காத்தன்.

ராபர்ட் கந்தனைப் பார்த்துச் சிரித்தபடி கண்ணடித்தான்!

'இவருகிட்ட சித்தருங்களைப் பத்திக் கேளு' எனத் தூண்டினான் ராபர்ட்.

'இங்க சித்தருங்க நடமாட்டம் இருக்கறதாப் பேசிக்கறாங்களே. அது உண்மையாங்க?' எனத் தயங்கியபடியே கேட்டான் கந்தன்.

'என்னது? சித்தரா? அப்படீன்னா ஆருங்க? நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேனுங்க. எனக்கு அப்படி ஆரையும் தெரியாதுங்க. நான் இப்பல்லாம் அதிகமா வெளியில போறதில்லை. என் பொண்ணை வேணா கேட்டுப் பாக்கறேன். அதுதான் அடிக்கடி கொல்லிமலைப் பக்கமெல்லாம் போயிட்டு வரும்.' என்றான் காத்தான்.

ராபர்ட்டுக்கு சற்று ஏமாற்றம். இருந்தாலும் விடவில்லை.

இதை வேறுவிதமாய் கையாளணும் என நினைத்து, 'அப்போ உங்களுக்கெல்லாம் நோய் நொடின்னா, யாருகிட்ட மருந்து வாங்கி சாப்பிடுவீங்க?'
எனக் கேட்டான்.

'அடே! இவன் எவ்வளவு புத்திசாலி!' என வியந்தான் கந்தன். 'சித்தருங்களுக்கு நோயைக் குணப்படுத்தற சக்தி இருக்குன்றதை எப்படி நாசூக்கா
கேக்கறான்'.

காத்தான் சொன்ன பதில் அவனது மகிழ்ச்சியை உடனே அழித்தது!

'நோவு நொடில்லாம் எங்களுக்கு வராது சாமி. அப்பிடியே வந்தாலும், எங்க குலதெய்வத்துக்கு ஒரு பூசை போட்டு வேண்டிகிட்டா எல்லாம்
சரியாயிடும்! மருந்து மாத்திரைல்லாம் சாப்பிடறதே இல்லை. அம்மை ஊசி போடறேன்னு வந்தவங்கள்ல்லாம் ஓடியே போயிட்டாங்க!'

சொல்லிவிட்டுச் சிரித்தபடியே, தன் குடிசையை அடைந்தான் காத்தான்.

'பொன்னி, கொஞ்சம் குடிக்கத் தண்ணி கொண்டுவாம்மா!' எனக் குரல் கொடுத்தான்.

'அவங்கள்லாம் போயிட்டாங்களாப்பா!' எனக் கேட்டபடியே ஒரு அழகிய இளம்பெண் வெளியில் வந்தாள்.

விருந்தாளிகளைப் பார்த்ததும், வெட்கத்துடன் உள்ளே செல்லத் திரும்பியவளை, 'கொஞ்சம் நில்லும்மா!' என்ற தந்தையின் குரல்
தடுத்து நிறுத்தியது.

'இவங்களுக்கு கொல்லிமலையப்பத்தி ஏதோ தெரியணுமாம். நீதான் அடிக்கடி அங்கே போவியே! உனக்குத் தெரிஞ்சதைச் சொல்லு.'

'என்ன தெரியணுமாம்?' என்றாள் பொன்னி.

அவளை நிமிர்ந்து பார்த்த கந்தனுக்கு உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது!

அவளது கரிய விழிகளையும், உதட்டோரம் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவேன் என்பது போல் நின்ற இளம் புன்னகையையும், வாளிப்பான உடலையும் பார்த்த நேரத்தில், இந்த உலகத்திற்கே பொதுவான ஒரு உணர்ச்சி அவனுள்ளே சுரந்தது.

அப்படியே அவனை ஒரு இனம்புரியா ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

இது நிகழ்பருக்கு மட்டுமே சட்டெனப் புரியும் ஒரு மொழி!

காதல்!

ஒரே அலைவரிசையில் சந்திக்கும் இரு ஜோடி விழிகளுக்கு நடுவே பரிமாறப்படும் ஒரு உலக மொழி.

எழுத்துகள் கிடையாது! ஒலிவடிவம் கூடக் கிடையாது!

பொன்னி இப்போது அந்தப் புன்னகையை தன் ஈர உதடுகளில் தவழவிட்டாள்!
அதுவே ஒரு நல்ல சகுனமாகத் தெரிந்தது கந்தனுக்கு.

தன் வாழ்நாளில் இதுவரை தனக்குத் தெரியாமலேயே தேடிக்கொண்டிருந்த ஒன்று இதுதான் என ஐயமில்லாமல் புரிந்தது!

இந்த நல்ல சகுனமே இனி தன் வாழ்நாள் கனவுகளை நிறைவேற்றப் போகும் ஒரு தூண்டுகோல் எனவும் நிச்சயமாகப் பட்டது கந்தனுக்கு!

இதற்கு விளக்கங்கள் தேவையில்லை. நீக்கமற நிறைந்திருக்கும், எப்போதுமாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சம், காலங்களைக்
கடந்து இருப்பது போலவே, இதுவும் எப்போதும் இருந்து வருகிறது.

தன் வாழ்க்கையின், வாழ்நாள் முழுதுக்குமான ஒரே பெண் என்னும் பேருரு இப்போது தன் முன்னே நின்று கொண்டிருப்பதாய் உணர்ந்தான்.

அவளுக்கும் இது புரிந்துவிட்டது எனவும் ஒரு உள்ளுணர்வு அவள் சிரிப்பின் வழியே அவனுக்குச் சொன்னது!

செல்லியோடு பலமுறை பேசியிருந்தபோதெல்லாம் தோன்றாத ஒரு உணர்வு இப்போது தன்னுள் பரவியதைத் தெரிந்து மிகவும் சந்தோஷமாக
இருந்தது அவனுக்கு.


......"மேலே இருக்கற ஒரு சக்தி எல்லாருமே ஜெயிக்கணும்னுதான் விரும்புது. மனுஷன்தான், இந்த வெற்றியை சரியாப் புரிஞ்சுக்காம,
திசை மாறிப் போயிடறான்."..........

தங்கமாலை அணிந்த பெரியவர் ஒருவர் அவனிடம் சொன்னது சட்டென நினைவுக்கு வந்தது!

அந்த சக்திதான் இப்போது இவளை எனக்குக் காட்டியிருக்கிறது! அவளுக்கும் இதைப் புரிய வைத்திருக்கிறது.
காதல் என்னும் ஒரு உணர்வினால் எங்கள் இருவரையும் தொட்டு ஆசீர்வதித்திருக்கிறது !

'எல்லாம் விதிப்படியே நடக்கும்!' அண்ணாச்சி சொன்னது காதில் கேட்டது!

'என்ன அப்படியே வெச்ச கண்ணை வங்காம பாக்கறீங்க! என்ன தெரியணும் உங்களுக்கு கொல்லிமலையைப் பத்தி?' என்ற குறும்புக் குரல்
அவனை இவ்வுலகிற்கு இட்டு வந்தது!

[தொடரும்]
*************************************

"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்." [1227]

அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP