Thursday, July 21, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 22

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 22
21.

'ம்ம்..அடுத்த பாட்டைப் படி' என்றான் மயிலை மன்னார்.

கருதா மறவா நெறிகா ணவெனக்
கிருதாள் வனசந் தரவென் றிசைவாய்
வரதா! முருகா! மயில்வா கனனே!
விரதா சுரசூ ரவிபா டணனே!

என நான் படிக்க, அதைப் பதம்பிரித்துச் சொன்னான் மயிலை மன்னார்.

கருதா மறவா நெறி காண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா! முருகா! மயில் வாகனனே!
விரத அசுர சூர விபாடணனே!

'ரொம்ப ரொம்ப எளிமையா இந்தப் பாட்டுல உருகியிருக்காரு அருணகிரியாரு!
அதே சமயம் கேக்கவேண்டியதை, சொல்லவேண்டிய முறையுல சொல்லிக் கேட்டுமிருக்காரு! அதான் இந்தப் பாட்டோட விசேசம்!

"கருதா மறவா நெறி காண எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய்?"

முருகனைப் பார்த்ததுக்கப்புறமா இவுருக்கு வேற எதுவுமே கேக்கத் தோணலை!
ஒண்ணே ஒண்ணுதான் மனசுல திரும்பத் திரும்ப வருது !

போறும்ப்பா இந்த ஒலக வாள்[ழ்]க்கை! எனக்கு முத்[க்]தியக் குடுப்பான்னு மட்டுந்தான் கேக்க வருது!

எதுக்கு முத்தி?
முத்தின்னா இன்னா?

சொர்க்கத்துல போயிக் குந்திக்கறதா?
அதான் இல்ல!

முத்தின்னா, முருகனோட காலடியுலியே கெடக்கறது!
ஆருக்குக் கெடைக்கும் இந்த பாக்கியம்?
எப்பவுமே அவனோட காலடியுல விளு[ழு]ந்து கெடக்கறதுன்னா சும்மாவா?
அதுக்கு எம்மாங் குடுத்து வைச்சிருக்கணும்?
அதான் 'கருதா மறவா நெறி'!


அதுக்கப்புறமா எதையுமே கருத வேண்டியதில்ல!
அத்தப் பாத்ததுக்கப்புறமா, அதை வுட்டு வேற நெனைப்பும் இருக்காது!
எப்பவுமே மறக்கவுமே மறக்காது!
அதுக்குள்ளாறயே கெடக்கறப்போ, வேற இன்னா சொகம் வோணும் ஒனக்கு?


எதையுமே கருதாம, எப்பவுமே மறக்காத நெ[நி]லைக்கு இன்னாத்த உதாரணமாச் சொல்லலாம்?


மனுசனாப் பொறந்தா இந்த ரெண்டுமே இருக்கும்!
ஒண்ணுமில்லாத விசயத்தைப் போயி நெனைச்சு நெனைச்சு மருகிக்கினே இருப்போம்!
அதே சமயத்துல, ஒர்த்தன் நமக்குப் பண்ணின நல்லதை மறந்திட்டு, கெட்டத மட்டும் மறக்காமலும் இருபோம்.
மனுசனே இப்பிடின்னா, சூரனைப் போல அசுரனைப் பத்திக் கேக்கவா வோணும்?


தனக்கு வரங்குடுத்த சிவனோட புள்ளதானே இப்ப நமக்கு நல்லது சொல்ல வந்திருக்கான்றத மறந்திட்டு, முருகனோடயே சண்டைக்குப் போனவந்தானே சூரன்!
அப்பிடியாப்பட சூரன் பண்ணின தப்பை மனசுல கருதாம, அவனுக்கும் நல்லது பண்ணினாரு முருகன்!
இத்தத்தான் அடுத்த ரெண்டு வரியுல வைச்சுப் பாடுறாரு அருணையாரு!


அதுக்காவ இன்னாத்தக் கேக்கறாருன்னு பாரு!


முத்தி வோணும்னா, எனக்கு வேற ஒண்ணுமே வேணாம்ப்பா!
ஒரு ரெண்டு தாமரைப் பூவ மட்டும் குடுப்பான்னு கெஞ்சறாரு!
அதென்னா ரெண்டு தாமரைப் பூவு?
அதான் முருகனோட ரெண்டு பாதமும்!
'இருதாள் வனசம்'

'வனசம்'னா தாமரைப்பூ!
ஐயரைக் கேட்டியானா, வனஜம்ன்ற சமஸ்கிருத வார்த்தைன்னு சொல்லுவாரு!


அதுவும் சும்மா லேசுல கெடைச்சிராது!
அதுக்கு அந்த கந்தந்தான் மனசு எ[இ]ரங்கணும்!


எனக்கு முத்தி குடுப்பான்னு இங்க கேக்கல!
தாமரைப்பூ மாரி க்கீற ஒன்னோட ரெண்டு பாதத்தையும் தர்றதுக்கு எப்பப்பா மனசு வைக்கப் போறே! அப்பத்தானே எனக்கு முத்தி கெடைக்கும்னு கெஞ்சறாரு!


எப்பிடிக் கெஞ்சறாருன்னு கெவனி!


'வரதா'ன்றாரு!
வரதன்னா கேட்ட வரத்தத் தர்றவன்!
முருகனை வுட்டா வேற ஆரு கேட்டதுமே குடுக்கறவங்க!
"கந்தா"ன்னா "இந்தா"ன்றுவான் அந்தக் குமரன்!


அடுத்தாப்புல 'முருகா'ன்னு அன்பாக் கூப்புடறாரு!
முருகன்னா இன்னான்னு ஒனக்கு நல்லாவே தெரியும்!
அதுனால, அதிகமா சொல்ல வேண்டியதில்ல!


சீக்கிரமாவே வந்து கேட்டதயெல்லாம் குடுத்துருவான்னாலும், இவுருக்கு
இன்னும் அவசரம்!


அதுனால, 'மயில் வாகனனே'ன்னு சொல்லிக் காமிக்கறாரு!
அப்பத்தானே 'சட்டுன்னு' கெளம்பி வந்திருவான்னு ஒரு ஆசை இவுருக்கு!


அதுக்கு அப்பால சொல்ற வார்த்தைதான் இதுல உச்சம்!


'விரதாசுர சூர பயங்கரனே'ன்னு ஒரு சொல்லு வுடறாரு!


நான் முந்தி சொன்னேனே அதேதான் இது!


விரதம்னா நாளு கெளமைக்கு நாம இருக்கோமே அந்த விரதமில்ல இது!
ரதம்னா அள[ழ]குன்னு அர்த்தம்~!
விரதம்னா, அளகில்லாததுன்னு புரிஞ்சுக்கணும்!


தனக்குக் கெடைச்ச வரத்தைக் குடுத்தவரோட புள்ளைன்றத மறந்ததுனால, இவனோட பெருமையெல்லாம் போயிருச்சுன்றாரு!
அதுனால, வெறும அசுரனா இருந்தவன், இப்ப விரத அசுரனாயிட்டானாம்!


அதாவது, நல்ல கொணமே இல்லாத ராட்சசன்னு பொருளு!

அந்த சூரனையும் கொல்லாம, ரெண்டாப் பொளந்தாரு முருகன். விபாடணம் பண்றதுன்னா ஒரே போடுல ரெண்டாப் பொளக்கறது! அத்தப் பண்ணினதால விபாடணனேன்னு கூப்புடறாரு! எப்பிடிப் பொளந்தாரு?


மயிலும், சேவலுமா! ஒளியும் ஒலியுமா!


அவனுக்கும் நல்லதுதான் செஞ்சாரு முருகன்!


அதும்போல, கொஞ்சங்கூட நல்லதே இல்லாத எனக்கும், என்னோட இந்த நெனைப்பு,மறப்புன்ற ரெண்டையும் பொளந்து, ஒன்னோட ரெண்டு பாதகமலத்தை எப்பப்பா தரப் போறேன்னு கெஞ்சிக் கேக்கறதுதான் இந்தப் பாட்டுல சொல்லியிருக்கற பெரிய சங்கதி!'
என ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்!

அவன் சொன்ன வேகத்தில் பிரமித்துப் போய் நாயர், மன்னாரையே பார்த்துக் கொண்டிருந்தான்!


சாஸ்திரிகள் துண்டை எடுத்து, தன் முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டார்!
***********
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************
[ஆர்வமுடன் படித்து, ஆசி வழங்கும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

Tuesday, July 12, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 21

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 21


20.

‘என்னமோ புது ரூட்டுன்னு சொன்னியே! ஒரே ஆர்வமா இருக்கு மன்னார்!’ என்றேன் நான்!

‘அதே! ஞானும் விளிக்க நெனைச்சு!’ என்றான் நாயர்.

‘அது ஒண்ணுமில்லேப்பா! இதுவரைக்கும் மனசைப் பாத்து தனக்குக் கிடைச்ச அநுபுதியைப் பத்திச் சொல்லி, இனிமே எப்பிடி ஒயு[ழு]ங்கா இருக்கணும்னு சொல்லிக்கினு வந்தாரில்ல? இப்ப போன ரெண்ட பாட்டுலியும், முருகனோட பெருமையைப் பத்தி சொன்னதும், அப்பிடியே இவரோட நெனைப்பெல்லாம் அந்தக் கந்தன் மேல திரும்பிரிச்சு! ‘நீ இன்னான்னால்லாம் எனக்குக் குடுத்தே கந்தா’ன்னு இப்ப வரப்போற சில பாட்டுங்கள்ல சொல்லப் போறாரு, விசயம் இன்னாமோ ஒண்ணேதான்! ஆனாக்காண்டிக்கும், முருகனைப் பாத்தே பேசற மாரி இந்தப் பாட்டுங்க இருக்கும். அத்தத்தான் சொன்னேன். சரி, சரி, டயத்த வேஸ்ட் பண்ணாம அடுத்த பாட்டைப் படி’ என்றான் மயிலை மன்னார்.

ஆர்வம் இன்னும் அதிகமாக, நானும் படிக்கலானேன்.

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்
உரிதா வுபதே சமுணர்த் தியவா
விரிதா ரணவிக் ரமவே ளிமையோர்
புரிதா ரகநா கபுரந் தரனே.

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்ரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.

மொதல்ல கடைசி ரெண்டு வரியச் சொல்லிட்டு, மொத ரெண்டு வரியப் படிச்சேன்னா, ஒனக்கு இந்தப் பாட்டு கொஞ்சம் புரியலாம். ஆனாலும், இது கொஞ்சம் அபூர்வமான பாட்டு. ஒரு பெரிய சமாச்சாரத்த ரொம்ப அஸால்ட்டாச் சொல்லிட்டுப் பூட்றாரு அருணகிரியாரு!

இப்ப, கடைசி ரெண்டு வரையப் பாப்பம்.

”விரிதாரண விக்கிரம வேள் இமையோர் புரிதாரக நாக புரந்தரனே”

இதுல ஒரு ரெண்டு விசயம் சொல்லி க்கீறாரு அருணகிரியாரு.
“விரிதாரண விக்கிரம வேள்;” “ இமையோர் புரிதாரக நாக புரந்தரனே.”

இந்த விரிதாரண விக்ரம வேளுன்றத, ஆளாளுக்கு ஒருவிதமா அர்த்தம் சொல்றாங்க. விரிஞ்ச தோளைக் கொண்ட வீரனேன்னு சிலபேரு, விரிஞ்ச தோளுல மாலையைப் போட்டுக்கினு க்கீற வீரனேன்னு சிலபேருங்க சொல்ல நான் கேட்டிருக்கேன்! ஆனா, இதோட மெய்யான அர்த்தம் இன்னான்னு இப்ப சொல்றேன் கேட்டுக்க!


விரி தாருன்னா, வெற்றிக்கு அடையாளமா சூட்டற வாகை மாலை.

எப்ப இதும்மாரி மாலை போடுவாங்க?
எதுனாச்சும் சண்டையுல கெலிச்சா, இப்பிடி ஒரு மாலை வந்து ஒன் களு[ழு]த்துல விளு[ழு]ம்.

அதான் அந்த அடுத்த வார்த்தை, ‘ரண’
‘ரணம்’னா சண்டை, போரு.
விக்ரமன்னா வெற்றி அடையுறது.
வேளுன்னா வீரன்.
ஆகக்கூடி, இது விரி-தார்-ரண-விக்ரம-வேள்!

சரியா? இப்ப அடுத்த சொல்லைப் பாப்பம்.
’இமையோர் புரி தாரக நாக புரந்தரனே’

தேவருங்க கண்ணு எப்பவுமே இமைக்காதாம்! அதுனால, அவங்களுக்கு இமையோருன்னு ஒரு பேரு உண்டு.

‘புரி’ன்னா ஊரு.
தர்மபுரின்னு ஒரு ஊர்ரு க்கீதுல்ல, அதுமாரி!

இமையோருங்களோட புரி எது?
தேவலோகம். அதுக்கு ‘நாகம்’னு ஒரு பேரும் க்கீது.

’தாரக’ன்னா, கஸ்டத்தயெல்லாம் போக்கறவன்னு அர்த்தம். சர்த்தானே சாமி’ என சாம்பு சாஸ்திரிகளைப் பார்க்க, அவரும், ‘ஆஹா! அப்படித்தான்!’ என்பதுபோல் கண்ணைக் காட்டினார்.

’புரந்தரன்’ன்னா காப்பத்தறவன்.

இப்ப இந்த வரி இன்னா சொல்லுது?
’இமையோர் நாகபுரி தாரக புரந்தரனே’ இதுக்கு இன்னா அர்த்தம் சொல்லு’ என என்னைப் பார்த்தான் மன்னார்.

தேவர்களோட கஷ்டங்களையெல்லாம் போக்கி, அவர்களுடைய இருப்பிடமான தேவலோகத்தையும் காத்தருள் செய்தவனே’ எனப் புரிகிறது என்றேன்.

கரீட்டு! அப்பிடிப் பண்ணதாலத்தான், இவுரு ‘விரி தார் ரண விக்ரம வேளு!’ வெளங்குதா?’ என்றான்.

சந்தோஷமாகத் தலையாட்டினான் நாயர்!

ரெண்டே வரியுல ஒரு பெரிய கதையையே சொல்லிட்டாரு! ஆனாக்க, இதுக்குள்ளியும் ஒரு அர்த்தம் க்கீது! அத அப்பாலிக்கா சொல்றேன். இப்ப மொத ரெண்டு வரியப் பாக்கலாம்.

’அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்திய ஆ’

கெடைக்கவே கெடைக்க முடியாத ஒரு பெரிய உண்மைப் பொருளு... அதான் அநுபூதி! கந்தனோட அநுபூதி!... கந்தரநுபூதி!

அம்மாம்பெரிய மெய்யான தத்துவத்த, கொஞ்சங்கூடத் தகுதியில்லாத, என்னை, அதக் கேக்கறதுக்கு தகுதியுள்ளவனா மாத்தி, ஒ[உ]பதேசம் பண்ணினியே சாமி! இது எம்மாம் பெரிய அதிசியம்னு ஆச்சரியப்படுறாரு அருணகிரியாரு!

இதுல இன்னா விசேசம்ன்றியா?

பொதுவா, ஒரு பொருளை ஒர்த்தன் கையுல குடுக்கறதுன்னா, நாமள்லாம் ஒண்ணுக்கு ஆயரம் தபா யோசிப்போம். இத்த இவங்கையுல குடுக்கலாமா? குடுத்தா ஒயு[ழு]ங்கா காபந்து பண்ணுவானா? இத்தக் குடுக்கறதால இன்னா லாபம்? இப்பிடில்லாம் யோசிப்போம். அப்பவும் ஒரு ‘டவுட்டோடவேதான் குடுப்போம்! இல்லேன்னா, இவன் இதுக்கு லாயக்கில்லைன்னு சொல்லிட்டு, நீ போயிட்டு வாப்பான்னு அனுப்பிருவோம்.

கொஞ்சங்கூட தகுதியே இல்லாதவன் கையுல போயி ஒரு பத்து லட்ச ரூவாயைத் தூக்கிக் குடுத்துருவோமா? மாட்டோமில்ல?

ஆனாக்க, முருகனோட கருணை எப்பிடியாப்பட்டுதுன்னா, குடுக்கணும்னு முடிவு பண்ணிட்டாருன்னா, இவனோட தகுதியப் பார்த்துக்கினு காலங்கடத்தாம, ஒன்னிய அதுக்குத் தகுந்தவனா மாத்தி, ஒன்னாண்டை குடுத்துருவாரு! புரியுதா நான் சொல்றது?

அதாவது, நீ இன்னாமாரி ஆளா இருந்தாலும் சரி! அதப் பத்தியெல்லாம் கவலியே படாம, ஒன்னை அதுக்கு ஏத்த ஆளாவும் மாத்திட்டு, ஒனக்கு குடுத்திருவாரு!

இதான் இந்தப் பாட்டுல சொல்லாம சொல்லி க்கீற சமாச்சாரம்!


இப்ப இந்த தேவருங்கள எடுத்துக்கோ!

இன்னாமா ஆணவம் பிடிச்சு அலைஞ்சாங்க!

அந்த ஆணவத்தையெல்லாம் அடக்க இவங்களைவுட ஆணவம் பிடிச்ச ஒர்த்தன் வந்து அல்லாரியும் ஜெயில்ல தள்ளிட்டான்.

அப்பத்தான் புரிஞ்சுது தாங்க செஞ்ச தப்பு!

முருகந்தான் வந்து நம்மளையெல்லாம் காப்பாத்தப் போறார்னு தெரிஞ்சதும், ‘கந்தா அபயம்! கதிர்வேலா அபயம்’னு இந்திரன்லேர்ந்து அல்லாரும் வந்து காலுல விளு[ழு]ந்தாங்க! அவங்க மேல எ[இ]ரக்கப்பட்டு, அவங்களுக்கு புத்தியக் குடுத்து, சூரனை கெலிச்சு, அவங்க ஊரை அவங்களுக்கே மீட்டுத் தந்தாரு வடிவேலன்!

அதும்மாரியே, பண்ணாத அக்ரமம்லாம் பண்ணிட்டு, இனிமே வேற கெதியில்ல முருகான்னு சொல்லிட்டு கோபுரத்துலேர்ந்து குதிச்சவரைக் காப்பாத்தி, அவருக்கு ஆருக்குமே கெடைக்க முடியாத மெய்ப்பொருளை சொல்லிக் காமிச்சாரு முருகன்!

அதுனால, அந்த இந்திரன் பண்ணினமாரி, "ஓம் சரவணபவ"ன்னு வுடாம செபிச்சுக்கினே இருந்தியானா, ‘யாமிருக்க பயமேன்’னு அந்தக் கந்தன் வந்து அல்லாத்தியும் குடுப்பாருன்னு இதுக்குள்ள ஒரு பெரிய ரகசியத்தச் சொல்லாம சொல்லிட்டுப் பூட்டாரு அந்தப் புண்ணியவான்! அதான் இந்தப் பாட்டோட விசேசம்!’ எனச் சொல்லி எழுந்தான் மயிலை மன்னார்!

‘ஓம் சரவணபவ’ என ஜெபிக்கத் தொடங்கினான் நாயர்!

வங்கக் கடலின் வாடைக் காற்று இதமாக வீசத் தொடங்கியது!
*********************
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!

Read more...

Tuesday, July 05, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 20

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 20


19.

'இப்பிடில்லாம் முருகனைப் பத்திப் பேசினதும், 'டக்'குன்னு ஒரு நெனைப்பு அருணகிரியாரு மனசுல வந்து குதிக்குது.

'இன்னாத்துக்காவ இத்தினி நாளா நாம இந்த முருகனை நெனைக்காமலே போயிட்டோம்னு!'  அப்பத்தான் அவுருக்கு ஒ[உ]றைக்குது,... இந்தத் தும்பத்துக்கெல்லாம் எது ஆதாரம்னு. அதைப் பத்தி இந்தப் பாட்டுசொல்லுது. எங்கே பாட்டைப் படி' என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார். புத்தகத்தைப் பிரித்துப் பாட்டைப் படித்தேன்!

வடிவுந் தனமும் மனமுங் குணமும்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடியென்றொருபா விவெளிப் படினே

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தமிலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே

எனப் பதம் பிரித்துச் சொன்னவன், 'இந்தப் பாட்டை இப்பிடிப் படிச்சீன்னா, இன்னும் நல்லாப் புரியும் எனச் சொல்லிக் காட்டினான்.

மிடி என்றொரு பாவி வெளிப்படினே
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோகிய ஆ
அடி அந்தமில்லா அரசே அயில்வேல் அரசே.


'மிடி என்றொரு பாவி வெளிப்படினே, வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகிய ஆ'

இன்னா சொல்றாருன்னு பாப்பம்! 'மிடி'ன்னா வறுமைன்னு அர்த்தம். 'ஏளை[ழை]மைன்னு அன்னைக்கு ஒன்னோட தோஸ்த்து சிவசிவா சொன்னாரே அதான் மிடி.

அது மட்டும் வந்திருச்சின்னா, இன்னால்லாம் ஆவும்னு ஒரு பட்டியலே போடுறாரு. அதுல இன்ன விசேசம்னா, அதை அவுரு சொல்லியிருக்கற வரிசைதான்!


மொதல்ல போறது ஒன்னோட அள[ழ]கு! ஒன்னோட வடிவு கொறைய ஆரம்பிக்கும். ஒரு பவுடர் வங்கக்கூட காசு இல்லைன்னா, அப்பொறமா
இன்னாத்த அவன் சிங்காரிச்சுக்கறது? அளகா காமிச்சுக்கறது.?

வறுமை வந்தாலே கையுல இருந்த பணமெல்லாம் போயிருச்சுன்னுதானே அர்த்தம்! அதான் அடுத்ததா 'தனம்'னு சொல்றாரு.

அளகும், பணமும் பூடுச்சுன்னா, கூடவே அவனோட நல்ல மனசும் காணாமப் பூடும்! நல்ல மனசு இல்லாதப்ப, இன்னா பண்றதுன்னே தெரியாம புத்தி தடுமாறும். அதான் 'மனம்'னு சொல்லிருக்காரு.

நல்ல மனசு இல்லைன்னா, நல்ல 'கொணமும்' இல்லாமப் போயிறும்! சோத்துக்கே சிங்கி அடிக்கறப்ப, தாராளமா அள்ளிக் குடுக்கறதுக்கு எங்கே போறது? ஆரைப் பாத்தாலும் ஒரு வெறுப்பு, எத்த நெனைச்சாலும் ஒரு கோவம், அவமானம், ஆத்தரம்னு வரிசையா எல்லாம் வந்து அவனோட நல்ல கொணத்தையே சீரளி[ழி]ச்சிரும்.

இத்தினியும் ஆச்சுன்னா, குடும்பம் செதறிப் போவும். அதான் 'குடி'ன்னு சொல்லிருக்கற வார்த்தை.

சரி, இத்தினிக்குப்புறமும் நீ ஏதோ கொஞ்சம் மானமா இருக்கலாம்னு முயற்சி பண்ணினாக்கூட, ஒன்னோட குடும்பத்துல க்கீற சின்னஞ்சிறுசுங்க, அதான் ஒன்னோட கொ[கு]லம், சும்மா இருக்குமா?

அதுங்க பசி தாங்கம, எங்கியாச்சும் போயி, திருடியோ, இல்லைன்னா வேற வளி[ழி[யிலியோ, தப்புக் காரியங்க பண்ணி ஒன்னோட கொ[கு]லப் பெருமையையே அளி[ழி]ச்சிரும்.

எட்டாவது பாட்டுல சொன்ன அதே'ஆ'வை இங்க வைச்சு இந்த வரியை முடிக்கறாரு. 'ஆ'ன்னா 'இந்த வகை என்ன'ன்னு பொருளு.

இந்த வறுமைன்ற ஒண்னு வந்ததால, இன்னால்லாம் நடக்குது பாருன்னு சொல்றதுதான் அந்த 'ஆ'

வடிவு, தனம், மனம், குணம், குடி குலம்னு எல்லாம் ஒர்த்தனை விட்டுப் போயிறுதே! இது இன்னாப்பா இதுன்னு கேக்கறாரு.


ஆரை?
வேற ஆரை? அல்லாம் அந்த கந்தன்ட்டதான்!


போன பாட்டுல அவரோட நைனாவைப் பத்திச் சொல்றப்ப சொன்ன அதே பெருமையை இந்தப் பாட்டுல முருகனுக்கும் சொல்லி ஆரம்பிக்கறாரு.


'அடி அந்தமில்லா அரசே அயில்வேல் அரசே'


ரெண்டு தபா 'அரசே'ன்னு சொல்லலைன்னாலும், இப்பிடிப் படிச்சியானா, அர்த்தம் நல்லாப் புரியும்.

ஒன்னோட நைனாவைப் போலவே நீயும் 'ஆதியும் அந்தமும் இல்லாதவன்'னு கொண்டாடறாரு.

'அயில்'னா கூர்ப்பா க்கீறது.

கூரான வேலைக் கையுல வைச்சிக்கினு க்கீற என்னோட செல்ல ராசாவே'ன்னு பாடறாரு.

இதாம்ப்பா காரணம் நான் ஒன்னிய இத்தினி நாளா நெனைக்காததுக்குன்னு சொல்லாம சொல்லி முடிக்கறாரு.


இதுவரைக்கும் தனக்குக் கெடைச்ச அநுபூதியப் பத்திச் சொன்னவரு, இப்ப ஏன் இப்பிடி ஒரு பாட்டுப் படிக்கறாருன்னு கேக்கணுமேன்னு தோணுமே? வேற ஒரு ரூட்டுல இப்பப் போறாருன்னு மட்டும் புரிஞ்சுக்கோ.மிச்சப் பாட்டையெல்லாம் பாக்கறப்ப புரியும்' எனச் சிரித்தான் மயிலை மன்னார்.
*********************


வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP