Saturday, December 06, 2008

"ஆணிவேரை" அசைக்கமுடியுமா?" - திரை விமரிசனம்

"ஆணிவேரை" அசைக்கமுடியுமா?" - திரை விமரிசனம்



கடந்த 2006-ம் ஆண்டு வெளிவரும்முன் பரபரப்பாகப் பேசப்பட்டு, வெளிவந்தபின் அதிகமாகப் பார்க்கப்படாத "ஆணிவேர்" என்னும் திரைப்படத்தை நேற்று பார்க்க முடிந்தது. இதை நீங்கள் பார்க்கவேண்டும் என அன்புடன் எனக்கு அனுப்பிவைத்த நண்பருக்கு நன்றி.

இந்தப் படம் ஒரு காதல் கதை!

தொழில் நிமித்தமாகச் சென்ற இடத்தில் தான் சந்தித்த ஒரு தமிழீழ மருத்துவரின் செயல் திறமையிலும், அவரது தன்னலமற்ற உன்னத நோக்கத்திலும் மனதைப் பறிகொடுத்த ஒரு இந்திய பத்திரிகைப் பெண்நிருபர், இது ஒத்துவராது எனக் காதலனால் நிராகரிக்கப்பட்டு தமிழகம் திரும்ப, ஒரு சில ஆண்டுகளுக்குப் பின், அவரைத் தன் மனதை விட்டு நீக்க முடியாமல், தேடிவருகிறார் இலங்கைக்கு.

அவரைப் பற்றிய ஒரு விவரமும் அறியமுடியாமல், தவிக்கும்போது பின்னோட்ட நினைவுகளாக, தான் அவரைச் சந்தித்த சூழ்நிலைகளை அசைபோடும் காட்சிகளாகப் படம் விரிகிறது.


சிங்கள ராணுவத்தின் அடக்குமுறை அட்டூழியங்கள், கொடூரக் கற்பழிப்புகள், ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்களைக் விதவிதமாகக் கொன்று குவிக்கும் அவலங்கள் அனைத்தையும் விலாவாரியாக, ஒரு ஆவணப்படம் போலக் காட்டி சற்று அலுப்புத் தட்டும் விதத்தில் காட்டுகிறார்கள்.
ஒரே நிகழ்வுக்கு இத்தனை அடி படச்சுருளை வீணாக்கியதற்கு பதிலாக, இன்னும் பல நிகழ்வுகளை அடுத்தடுத்து காட்டியிருக்கலாமோ எனத் தோன்றியது.

இதற்கு நடுவில், காதலர் இருவரும் முதன்முறை சந்தித்தது, நிலைமையின் தீவிரத்தை அறியாத தமிழகப்பெண் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக இதனைத் தானே அனுபவித்து உணர்கிறார் என்பதை நன்றாகவே காட்டி இருக்கிறார்கள்.


யாழ்ப்பாணத்தில் இருந்து புலம் பெயரும் மக்களின் அவலம் இதயத்தைத் உலுக்குகிறது. "பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்" என அறிவுறுத்தப்படும் அவர்கள், தங்களுக்குப் பாதுகாப்பான இடம் வன்னியே எனச் சென்றது ஏன? என்ற கேள்வி மனதை நெருடியது. அதற்கான விடையை எனது நண்பர் திரு. சோழியான் ஒரு பதிவில் சொல்லியிருந்தார்! தங்களுக்குப் பாதுகாப்பு என அவர்கள் சென்ற இடம் வன்னி என்பதிலேயே பல விடைகள் அடங்கியிருக்கிறது என அவர் சொன்னது இப்போது நன்கே புரிகிறது.

கதாநாயகன் நந்தா சிறப்பாகச் செய்து தன் சொந்தக் குரலிலேயே பேசியது மிகச் சிறப்பு. மதுமிதா, ப்ரியா தங்கள் பாகத்தை நிறைவாகவே செய்திருக்கின்றனர். கற்பழிக்கப்பட்டு, கொல்லப்படூம் காட்சியில் ப்ரியா நிறைவாகச் செய்திருந்தார்.

இத்தனை சோகக் காட்சிகள் நிறைந்த படத்தில் நான் அழவே இல்லை..... ஒரே ஒரு காட்சியைத் தவிர.!!

'எம் பேரனைக் கட்டிப்பியா நீ?' என அந்த வயதான பாட்டி கேட்டபோது என்னையும் அறியாமல் கண்களில் நீர் துளித்தது. இரண்டே காட்சிகளில் வந்தாலும் நெஞ்சைத் தொட்டுவிட்டார் அந்த மூதாட்டி!

இது ஒரு விமரிசனம் கூட அல்ல! என் மனதில் பட்ட கருத்துகளே!

அந்தக் கடைசி காட்சி பலராலும் 'வெறும் சினிமாத்தனம்' என விமர்சிக்கப்பட்டது. காதலர் இருவரும் மீண்டும் சேரும் அந்தக் காட்சி வேறு எந்தப் படத்தில் வந்திருந்தாலும் நானும் அதையேதான் சொல்லியிருப்பேன். ஆனால், எனக்கென்னவோ அது ஒரு மிகப் பெரிய செய்தியைத் தாங்கி நின்றாற்போல் இருந்தது.
தன் காதலன் இறந்துவிட்டான் என அதிகாரபூர்வமாக அறிந்த காதலி மனமொடிந்து தமிழகம் திரும்பும் நொடியில், மீண்டும் ஒரு குண்டு வெடிக்கிறது.... மக்களின் அவலக் கூச்சல்கள்,...... புகை நடுவிலிருந்து ஒரு உருவம் இரு குழந்தைகளைத் தன் கைகளில் ஏந்தியவாறு சிகிச்சை முகாமை நோக்கி ஓடி வருகிறது! வேறு யார்? நம் மருத்துவர் நந்தாதான்! அவசர அவசரமாக சிகிச்சை அளித்த பின்னர் ஏதோ ஒரு உணர்வு உந்த, சட்டெனத் திரும்பிப் பார்க்கிறார். தூரத்தில் கடலோரத்தில் காதலி! 'நாம் சேரணும் என்பதற்காகவே நான் இன்னமும் உயிரோடிருந்தேன் போல!' எனச் சொல்லி காதலியை அணைக்கிறார். என் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது!

ஆம்! நந்தா போன்றவர்களின் கனவு நிச்சயம் மலரும்! போராட்டம் நசுக்கப்பட்டாலும், அடக்குமுறைகள் கேட்பாரற்று போனாலும் நந்தாவைப் போல பலர் இதனைத் தொடர்ந்து தங்கள் கனவை நனவாக்குவர் என்பதைச் சிம்பாலிக்காகச் சொன்னதுபோல எனக்குத் தோன்றியது. இந்த ஒரு காட்சியிலேயே இயக்குநர் தன் எண்ணத்தை மிகவும் திறம்படச் சொல்லிவிட்டார் எனவே நம்புகிறேன்.

இவர்கள் கனவு பலிக்கட்டும்!

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்!

இந்தப் படத்தின் கோரக் காட்சிகளின் நீளத்தைச் சற்று குறைத்து இந்தத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை திரையரங்குகளிலும் ஒரு காட்சி இலவசமாக[ அரசு செலவில்] திரையிடப்பட வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மக்கள் படும் அவலத்தை நம்மவர்க்கு உணர வைக்க இது பெருமளவில் உதவும் என நம்புகிறேன்.
தமிழகத்தில் இருக்கும் இணையநண்பர்கள் இதனை ஒரு கோரிக்கை மனுவாக்கி, அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் நன்றியுடையவனாக இருப்பேன்.

இது எவருடைய போராட்டத்தையும் ஆதரித்துச் சொல்லும் பதிவல்ல! அவர்களே சொல்வதுபோல், [நீ இலங்கை அரசுக்கு உதவி செய்யாமலிரு போதும்! மற்றதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!] இது அவர்கள் அவலம். ஆனால், இதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையும் கூட!

நல்லதே நடக்கட்டும்! முருகனருள் முன்னிற்கும்!

*******************************************************
இந்தப் படத்தைத் தரவிறக்கம் செய்து பார்க்க கீழ்வரும் சுட்டிகள் உதவும்.

http://www.megavideo.com/?v=I3ASZ3Y0 - முதல் பாகம்
http://www.megavideo.com/?v=WMBFKLHV - இரண்டாம் பாகம்
http://www.megavideo.com/?v=0HBTMLLE - மூன்றாம் பாகம்
http://www.megavideo.com/?v=F58G9ZLL - நான்காம் பாகம்
http://www.megavideo.com/?v=LGUXINEV - இறுதி பாகம்

Read more...

Thursday, November 27, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -8

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -8
"மனவேடன் காதல்"


'நம்பிராஜன் கூற்று ':

சேவலின்னும் கூவவில்லை! செங்கதிரும் தெரியவில்லை! கருக்கலிலே வந்தென்னை 'கொடிக்கி'[வள்ளியின் தாய்] அன்று எழுப்பிவிட்டாள்.
'என்னவொரு அவசரமாய் நீயென்னை எழுப்பலாச்சு?' என வியந்து நான் கேட்க, கண்ணீரும் கம்பலையுமாய் எனைப் பார்த்து கதறிட்டாள்.

'கள்ளன் வந்து நம் மகளைக் கவர்ந்திங்கே சென்றாராம். கண்டவர்கள் சொன்னாங்க! கட்டிலிலும் ஆளில்லை!

அக்கம்பக்கம் அனைத்திடமும் தேடியிங்கு பார்த்துவிட்டேன்! அருமைமகளைக் காணவில்லை!' என்று சொல்லி கண்ணீர் வீட்டாள்!

'யானிருக்கும் இடத்தினிலே தைரியமாய் உள்நுழைந்து என்மகளைக் கொண்டுசெல்ல எவருக்கிங்கு துணிச்சலாச்சு!
இப்போதே படைதிரட்டி யானவரைத் தேடிடுவேன்!' எனச் சொல்லி கூட்டமாக மகளைத் தேடப் புறப்பட்டேன்.

கண்ணுக்கெட்டிய தொலைவரையும் எவரையுமே காணாமல் தளர்ந்தங்கோர் சோலையதைக் கண்டவுடன் அதை நாடிச் சென்றேன்.
ரத்தம் கொதிக்கவைக்கும் காட்சியொன்றை யான் கண்டேன்! மரத்தடியில் என் மகளும் முகம்தெரியா வேறெவனும் சல்லாபம் செய்திட்ட காட்சியது!

'ஆரடா நீ? கொன்றிடுவேன் யானுன்னை! விட்டுவிடு என் மகளை' எனவங்கே நான் பாய, என்மகளும் அவன் பின்னே ஒளியக் கண்டேன்!

'வனவள்ளி கூற்று':

ஆத்திரமும் கண்மறைக்க, அறிவொழிந்து என் தகப்பன், என் சொல்லைக் கேளாமல் எங்கள் மேல் பாய்ந்து வந்தான்.
அச்சத்தால் நடுநடுங்கி, உடலெல்லாம் பதைபதைக்க, அழகனவன் பின்னாலே கோழிக்குஞ்சாய் ஒளிந்துகொண்டேன்.

'ஆயிரம் வீரரொடு ஆயுதத்தை கைக்கொண்டு, அப்பனிங்கு வருகின்றான்! தப்பித்துச் செல்வதுவும் இயலாதென நினைக்கின்றேன்.
ஏதேனும் செய்தென்னைக் காத்திடுக!' எனச் சொன்னேன்! என்னவனும் அழகாக எனைப் பார்த்து முறுவல் செய்தான்.

'அஞ்சாதே இளமானே! அவரெமக்குச் சமமாகார்!' எனச் சொல்லி என்னவனும் விழிமலரைத் திறந்தங்கு கோபமாக விழித்திட்டார்
ஏவிவிட்ட கணைகளெல்லாம் வளைந்துவிட்ட நாணலதாய் குமரவேளின் காலடியில் பணிந்தங்கு குவிந்தன!

அருகிருந்த சேவலதை அமரர்தலைவன் பார்த்திடவே, உயர்வான சேவலதும் ஓங்கியொரு கூவல் செய்ய,
அப்பனோடு கூடிவந்த அத்துணைப் படைகளுமே அச்சத்தால் நடுநடுங்கி, அப்படியே அழிந்து போயின!

மாண்டுபட்ட தகப்பனவன் திருமுகத்தைப் பார்த்திருந்து, வருத்தத்தால் கண்ணீர் விட்டேன்!

அங்குவந்த நாரதனும், அண்ணலவன் முகம் பார்த்து, 'பெற்றவரைக் கொன்றுபோட்டு, கன்னியை நீர் கவருவதும் முறையல்ல' எனச் சொல்ல,
'என் மனையாட்டி பெருமையினை உலகறியச் செய்திடவே, யாமிங்கு இது செய்தோம்! அஞ்சவேண்டா!' எனவுரைத்து,

'நீயே அவர்களை எழுப்பிடுக!' எனச் சொல்ல, 'எழுந்திடப்பா என்னப்பா! என்னை நீயும் மன்னியப்பா!' என நானும் சொல்லுகையில், எல்லாரும் உயிர் பெற்றார்!

'நம்பிராஜன் கூற்று':

உறக்கத்தில் எழுந்தாற்போல் விழித்தங்கு காணுகையில், மலைக்காட்டுத் தெய்வமகன் குமரவேளைக் கைதொழுதேன்!

மணவாளன் இவனென்றே மனதுக்குள் அறிந்ததுமே, மதிமயங்கி யான் செய்த பிழையெல்லாம் புரிந்திடவே
'மன்னித்தருள்க!'வென முருகனவன் அடிபணிந்து, 'வேடர்மகள் உமக்கெனவே பிறந்திட்ட தெய்வமகள்!

மணமுடிக்க நும்மவர்க்கு முழுதான உரிமை இருக்க, கள்ளன்போல் கவர்ந்திங்கு சென்றதுவும் எமக்கிழுக்கு!
குலப்பெருமை குறைந்திடாது இப்போதே எம்மகளை எமக்களித்து அருளிடுக! எம்மோடு வந்திருந்து முறையாக எம்மகளை எம்மூரில் மணந்திடுக!'

எனச் சொல்லி வேண்டிநின்றேன்! அழகனவன் 'அப்படியே ஆகுக!' என்றான்! அனைவருமே மகிழ்ந்திருந்தார்!

எம்மூரை அடைந்தவுடன், அனைவரையும் ஒருக்கூட்டி, அழகான பந்தலிட்டு, ஆனையெல்லாம் முழங்கிடவே
என்மகளை திருக்குமரன் கைகளிலே ஒப்படைக்க, இனிதாகத் திருமணத்தை நாரதரும் நடத்திவைத்தார்!



வானினின்று மலர்மாரி தேவரெல்லாம் பூச்சொரிய, வான்மேகம் குளிர்ந்திருந்து மென்தூறல் தெளித்திருக்க, சந்தனத்தின் மணமங்கு மலைக்காடு தாங்கிநிற்க, தென்றலது அதையெடுத்துப் பாங்காகக் கொண்டுவர, தீ வளர்த்து மந்திரங்கள் நாரதரும் நவின்றிருக்க, ஐம்பூத சாட்சியாக வடிவேலன் வள்ளிக்குறத்தியின் வலதுகையைப் பற்றிக் கொண்டான்!

'மனவேடன்':

அங்கிருந்து புறப்பட்டு, அருந்துணைவி கூடவர, தணிகைமலை சென்றடைந்து தெய்வானை முன் சென்றேன்.
அமிர்தவல்லி, சுந்தரவல்லி எனத் திருமாலின் பிறப்பிரண்டும்,

பலகாலம் தவமிருந்து,
இருவேறு இடம் வளர்ந்து,
கூடிவந்த நேரமதில் குமரனெனைத் தானடைந்த மகிழ்வினிலே,

இருவருமே அன்புகாட்டும் விதமாக ஆரத் தழுவிக்கொண்டார்!

ஞானமெனும் ஒரு சக்தி இடப்புறத்தில் தெய்வானை! இச்சையெனும் ஒருசக்தி வலப்புறத்தில் வள்ளியென,
அழகுமயில் மீதமர்ந்து தனிவேலைக் கையிலேந்தி அண்டிவரும் அடியவர்க்கு அருள் வழங்கி வருகின்றோம்!...............

மனவேடன் சொல்லி முடித்தான்! மகிழ்ச்சி பொங்க அருள் செய்தான்! தெய்வமகள், வனவல்லி இருவருமே மனமகிழ்வுடன் உடனிருந்தார்!

கூடிநின்ற அனைவருமே குமரவேளை வாழ்த்தி நின்றார்!

அருளிடும் கந்தனின் கதையிதுவே
அதையே சிறியேன் சொல்லிவந்தேன்
சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்தருளி
அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்

கந்தனின் கருணைப் பெருவெள்ளம்
தடையின்றி அனைவர்க்கும் கிட்டிடுமே
[காலையில்]

கதையினைப் படித்தவர் மிகவாழி!
கேட்டவர் அனைவரும் தான் வாழி!
அன்பினை நாளும் யாம் வளர்த்து
நல்லறம் பெருகிட வேண்டிடுவோம்!

கந்தா! கடம்பா! கதிர்வேலா!
கார்த்திகை மைந்தா! கருணை செய்வாய்!!

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் நிறைவு செய்தேன்!

முருகனருள் முன்னிற்கும்!!
வேலும் மயிலும் துணை!
கந்தன் கருணை வெல்க!
******************** சுபம் *********************

Read more...

Tuesday, November 25, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -7

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -7
"மனவேடன் காதல்"
'நம்பிராஜன் கூற்று:'

'தினையெல்லாம் முத்திப்போச்சு! அறுவடைக்கு நாளாச்சு! அதுவரைக்கும் காவல் காத்த ஆசைமகளும் வீடு வந்தாச்சு!
கலகலப்பா காட்டுக்குப் போன புள்ள, காலடியைச் சுத்திச் சுத்தி வளையவந்த சிறு புள்ள, இப்பல்லாம் ஏனிப்படி பேசாம குந்திகிடக்கா?


துறுதுறுன்னு வேலையெல்லாம் பக்குவமா செய்யிறவ, பித்துப் பிடிச்சாப்புல மூலையில சாஞ்சு கிடக்கா!
ஆரோடும் பேசவில்லை! சாப்பாடும் செல்லவில்லை! தினைப்புனத்தைப் பாத்தபடி ஆர் வரவோ தேடியிருக்கா!

ஏன்னு கேக்கப்போனா ஏதுமவ பேசவில்லை! எம்மகளைப் பாக்கறப்ப பெத்த மனசும் தாங்கவில்லை! என்ன செஞ்சா தீருமின்னு குறி கேட்டுப் பாக்க வேணும்!
மலைக்காட்டு முனி வந்து மக மேல குந்திகிச்சோ! வேப்பமரப் பேயொண்ணு எம்மவளைப் புடிச்சிருச்சோ!

ஆத்தாளை அனுப்பிவைச்சு என்னவின்னு கேக்கச் சொன்னேன்! தனக்கொண்ணும் தெரியலைன்னு திரும்பி வந்து கை விரிக்கா!
எங்கசாமி மலைக்குமரன் அருள் கேட்டு வளி கேட்டு அப்படியே செஞ்சிறணும்! இனிமேலும் தாங்கிடவே என்னால முடியலியே!'

என்றிவ்விதம் யோசித்து தேவராட்டி, வெறியாட்டாளன் இருவரையும் வரவழைத்து, நடந்த கதை சொல்லிவைத்து குறி சொல்லக் கேட்டிருந்தேன்.

அகில்புகையும் மணமணக்க, உடுக்கையொலி உரக்கொலிக்க, பம்பையொலி பாரதிர, வெறியாட்டன் வேகமதைக் கூட்டிநின்றான்.
ஆவேசப் பாட்டெடுத்து அழைத்ததுமே அருள்முருகன் அவன்மேலே அருள்செய்து அருள்மொழியால் உரைத்திட்டான்!

'தினைப்புனத்தில் நின்மகளை யாம் வந்து கைபிடித்தோம்! விரைவிலங்கு வந்திருந்து நின்மகளை மணம் செய்வோம்!
அலங்காரப் பூசைகளும், அபிசேக ஆராதனையும் அளவின்றி எமக்காக நீயுடனே செய்துவிடு!'

அமுதமொழி கேட்டிட்ட ஆனந்தம் கண்மறைக்க அப்படியே பூசைகளும் அழகனுக்காய்ச் செய்திருந்தேன்.
ஆனாலும் மகள் நிலையில் மாற்றமேதும் தெரிந்திடாமல், செய்வதென்ன இனியென்று கைபிசைந்து தவித்திருந்தேன்!

'காட்டினிலே கண்டெடுத்து காதலுடன் வளர்த்தமகள், தாபத்தால் தவிப்பதனைப் பார்த்திடவோ மனமில்லை!
நாட்டமுடன் நான்வணங்கும் வேலனவன் வந்திருந்து, சீக்கிரமாய்
என்மகளின் தாபத்தைத் தீர்க்கவேணும்!'

'மனவேடன் கூற்று':

'வள்ளிக்கு வாக்குரைத்து வந்திட்ட நாள்முதலாய், அவள் நினைவே எனை வாட்டித் துயரதிகம் செய்கிறது!
மீண்டுமந்த மான்விழியைக் காணாமல் இருந்திடவோ மனமிங்கு நிலையின்றி பரிதவித்து அலைகிறது!

தினைப்புனத்தில் தேவியவள் திருமுகத்தை மீண்டுமொரு தடவையேனும் பாராமல் என்னாலும் இயலவில்லை!'
என வாடி, தாபத்தால் தினைப்புனத்தைத் தேடிவந்து, தேவிநின்ற குடிசைவாசல் மரத்தடிக்கு மீண்டும் சென்றேன்!

காட்டுக்குடிசையதில் காற்றுமட்டும் தானிருக்கக், காதலியைக் காணாமல் கந்தனிவன் தவித்திட்டேன்.
கால்போன இடமெல்லாம் காதல்மகள் தடம்தேடி காட்டுவழி நடந்தங்கோர் சிற்றூரை அடைந்திருந்தேன்!

காட்டுவேடன் தலைவனவன் நம்பிராஜன் வீடடைந்து நள்ளிரவில் ஆருமில்லா வேளையினில் இங்குமங்கும் அலைந்திருந்தேன்
வெளிப்பட்ட பெண்ணொருத்தி வனத்திலெனை வள்ளியுடன் கண்டிருந்த நினைவங்கு வந்திடவே ஆவலுடன் அவளிடத்தில் "ஆசைமகள் எங்கே?" என்றேன்!

'நின்னைக் காணாத் தாபத்தால் தன் தேகம் தான் மெலிந்து, ஊனுமின்றி உறக்கமின்றி எம் தலைவி வாடுகிறாள்!
இப்போதே நீர் சென்று தாபத்தைத் தணித்திடுக! என்னோடு வந்திடுக!' எனச் சொல்லி அழைத்துச் சென்றாள்!

கண்ணெதிரே யான் கண்ட காட்சியினைச் சொல்லிடவும் நெஞ்சமும் பதறிடுது,.... இப்போது நினைத்தாலும்!
உடல்மெலிந்து, ஊனிளைத்து, கண்ணிரண்டும் பஞ்சடைந்து, காதல்மகள் கட்டிலினில் களைப்பாகப் படுத்திருந்தாள்!

தாவியவள் பக்கலிலே தயவாக யானமர, தளிர்க்கொடியாள் கண்விழித்து, மழையெனவே நீருகுத்தாள்.

'நள்ளிரவில் நீரிங்கு வந்ததனை என்னுடைய சோதரரும் கண்டிட்டால் தாளாக்கோபத்தால் தாறுமாறு செய்திடுவார்!
இனிக் கணமேனும் உமைவிட்டு கன்னியெந்தன் உயிரிங்கு நில்லாது! கனிவோடு எனைக் கொண்டு கடிந்தேக வேண்டுகிறேன்!'

என்னுமவள் சொல் கேட்டு, அப்படியே அல்லியளைக் கொடியெனவே அள்ளிக்கொண்டு, யானிருக்கும் தணிகைமலை வந்தடைந்தேன்!

களவு மணமா கந்தனுக்கு?
*******************************
[நாளை நிறைவுறும்!]

Read more...

Monday, November 24, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -6

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -6
"மனவேடன் காதல்"



'வனவள்ளி கூற்று':

நடந்ததெல்லாம் நானெண்ணி வாய்விட்டுச் சிரித்தபின்னும், வனவேடன் திருமுகமே மனக்கண்ணில் மிளிர்கிறதே!

மாயமென்ன செய்துவிட்டான்! ஏனவனை மறக்கவில்லை! ஏனிந்தக் குழப்பமென சிந்தித்து அமர்ந்திருக்க,
கையினிலே கூடையுடன், மறுகையில் கோலேந்தி, வாய்மணக்கும் தாம்பூலம் செந்தூரமாய்ச் சிவந்திருக்க
மலைகுறத்தி எனைநோக்கி, குறிசொல்லுமொரு மலைக்குறத்தி ஒயிலாக நடந்து வந்து, 'மனம்விரும்பும் மணவாளன் மடிதேடி வரப்போகும் குறியொண்ணு சொல்லவந்தேன்! இடக்கையைக் காட்டென்றாள்'!
'குறி சொல்லியின் கூற்று':

காடுமலை வனமெல்லாம் எங்க பூமி அம்மே!
கந்தனெங்க குலதெய்வம் காத்திடுவான் அம்மே!
கோலெடுத்து கைபாத்து குறிசொல்லுவேன் அம்மே!
சொன்னகுறி தப்பாது பொய்யொண்ணும் கிடையாது அம்மே!

பூமியிலே பொறந்தாலும் நீ தேவமக அம்மே!
சாமியின்னு கும்பிடலாம் தங்கக்கையி அம்மே!
மலைக்குமரன் மனசுக்குள்ள குடியிருக்கான் அம்மே!
வலைவீசி தேடுறே நீ வந்திடுவான் அம்மே!

இதுக்கு முன்னே நீயவனைப் பாத்திருக்கே அம்மே!
வேசம்கட்டி வந்திருந்தான் புரியலியா அம்மே!
வந்தவனை விரட்டிப்புட்டே அறியாத பொண்ணே!
மறுபடியும் வந்திருவான் சத்தியமிது அம்மே!

கைப்புடிச்சு கூப்புடுவான் மறுக்காதே அம்மே!
தைமாசம் கண்ணாலம் குறிசொல்லுது அம்மே!
வந்தாரை வாளவைக்கும் சாமியவன் அம்மே!
சொந்தமாக்கித் தூக்கிருவான் தங்கமே அவன் உன்னை!

வாக்குசொன்னா தப்பாது வரங்கொடுத்தா பொய்க்காது
நாவெடுத்து நான் சொல்லும் குறியிங்கு அம்மே!
கஸ்டமெல்லாம் தீருமடி களுத்துமாலை ஏறுமடி!
இஸ்டம்போல எல்லாமே சுகமாகும் அம்மே!


'வனவள்ளி கூற்று':

குறிசொன்ன குறத்தியவள் சொன்ன சொல்லில் மனம்மகிழ்ந்து, கழுத்துமாலை ஒன்றெடுத்து கைகளிலே கொடுத்துவிட்டேன்!
எனை வாழ்த்திப் பாடிவிட்டு அவள் சென்ற பின்னாலே, நடந்ததெல்லாம் நினைத்திருந்து மனதுக்குள் அசைபோட்டேன்!

'வந்திருந்தான்' எனச் சொன்ன சொல்லங்கு வாளாக மனக்கதவை அறுத்தங்கு வாட்டிடவே, 'அறியாத சிறுமகளாய் அநியாயக் கோபம் கொண்டு, ஆசையுடன் வந்தவரை ஏசிவிட்டுத் துரத்தினேனே!
மீண்டுமெனைக் கண்டிடவே வருவானோ வடிவேலன்?' என்றெண்ணிக் கலங்கையிலே, வந்தானே வளைச்செட்டி!

'கைப்பிடிச்சு வளையடுக்க, கன்னிக்கெல்லாம் மணமாகும்! ராசியான வளைக்காரன்! சோசியமும் சொல்லிருவேன்!'
மான்போல நீயிருக்க மச்சானும் தேடிவர கைமுழுக்க வளையடுக்கக் கையைக் கொஞ்சம் காட்டு தாயி!
'
என்று சொல்லி கட்டிவைத்த மூட்டையினைக் கவனமாகப் பிரித்தபடி, கட்டாந்தரையினிலே அவனமர்ந்தான்!
உரிமையொடு வலக்கையை ஆதரவாய்ப் பற்றியவன், உள்ளங்கை ரேகை கண்டு உதட்டினிலே முறுவலித்தான்!

'கல்யாண ரேகையொண்ணு கச்சிதமா ஓடுதிங்கு! கட்டப்போகும் மணவாளன் கிட்டத்தில் தானிருக்கான்!
கைநிறைய வளையடுக்கி கன்னி நீ வீடு போனா, கட்டாயம் அவன் வந்து கலியாணம் கட்டிடுவான்!'

என்றங்கே சொல்லியபடி கை முழுதும் வளையலிட்டான்! வளைக்காரன் கைபட்டு வல்லிக்கொடி நான் சிலிர்த்தேன்!
'இந்தமுறை ஏமாற நானிங்கு விடமாட்டேன்! வந்திருக்கும் வளைக்காரர் ஆருன்னு சொல்லிடுங்க!'

என்று சொன்ன மறுகணமே வளையல்செட்டி தான் மறைந்தான்! வடிவேலன் எதிரில் நின்றான்! வஞ்சிநான் மெய்சிலிர்த்தேன் !

'திருமாலின் மகளாக எமக்காகப் பிறந்திட்ட அழகான கன்னியுன்னை உரிய நேரம் வந்திருந்து முறையாக மணம் முடிப்போம் எனச் சொல்லி அனுப்பிவைத்தோம்!
சொல்லெடுத்துக் கொடுக்கின்ற சுந்தரவல்லி நீயும், பூவுலகில் வள்ளியென நம்பிக்கு மகளாகப் பிறந்திருந்தாய்!
நினைவேண்டி யாமிங்கு வனவேடம் தரித்திருந்து நின்மேனி எழிலெல்லாம் கண்ணாரக் கண்டு களித்தோம்!

'வனவேடன், வேங்கைமரம், வயோதிகனும் யாமேதான்! வஞ்சியுன்னைக் கண்டிடவே பலவேடம் யாம் தரித்தோம்!
வேழமுகன் என்னண்ணன் கரியாகி எதிர் வந்தார்! கன்னியுனைச் சீக்கிரமே கலியாணம் செய்திடுவோம்!
இச்சைக்கு அதிபதியாய் என்றுமுன்னைத் தொழுதிருந்து இச்சகத்தில் இணையில்லாப் புகழோடு யாமிருப்போம்!
கவலையின்றி இல்லம் சென்று காத்திருப்பாய் எமக்காக!'

எனச் சொல்லி மறைந்துவிட்டான்! கன்னி நான் மூர்ச்சையானேன்!

இனி என்ன?

***********************
[நாளை வரும்!]

Read more...

Sunday, November 23, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -5



"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -5
"மனவேடன் காதல்"


'வனவள்ளி கூற்று':

'ஆபத்துக்குப் பாவமில்லை! விருந்தினரை உபசரித்தல் வேட்டுவரின் பண்பாகும்!' எனச்சொல்லி எனைவளர்த்த என் தாயின் சொல் நினைந்து,
பக்கத்தில் அமர்ந்தபடி பட்டுக் கையெடுத்து பக்குவமாய்த் தைலம் தடவி பாங்காகப் பிடித்துவிட்டேன்!

'இதமாக இருக்குதடி பெண்ணே! இன்னும் கொஞ்சம் மேலமுக்கு!' என்றவரைப் பொய்க்கோபத்துடன் பார்த்துவிட்டு,
'போனால் போகிறது! பாட்டைக்குச் செய்ததென எண்ணிக்கொள்வோம்!' என நினைத்து இன்னும் கொஞ்சம் பலமாக, இதமாகக் கால் பிடித்தேன்!


'மனவேடன் கூற்று':

மனக்கள்ளி குறவள்ளி மெல்லிய தன் கையெடுத்து, இதமாகப் பிடித்துவிட என்னையே நான் மறந்துபோனேன்!

'தினையருந்தும் நேரமாச்சு! எழுந்திருங்க பாட்டையா!' என்றவளின் குரல்கேட்டு சட்டென்று எழுந்திருந்தேன்.
வட்டிலிலே தினையிட்டு வட்டமாக அதைக் குழித்து, நடுவினிலே தேன் விட்டு, சிந்தாமல் சிதறாமல் மாவோடு கலக்கின்ற மலர்க்கரத்தைப் பார்த்ததுமே மையல் கொண்டேன்!

குழைத்திட்ட தினைமாவை உருண்டையாக உருட்டியவள் என்கையில் வைத்திடவே ஆவலுடன் நான்விழுங்க.........???
தொண்டையிலே சிக்கியது உள்ளேயும் செல்லாமல், வெளியினிலும் வாராமல் இடையினிலே பந்தாக கதவடைத்து நின்றிடவே,
விக்கலொன்று வெளிக்கிட்டு மேல்மூச்சை அடைத்திருக்க, கண்கள் செருகியதால் கைகாட்டி ஜாடையாக தண்ணீர்! தண்ணீர்! எனச் சைகைசெய்தேன்!

பட்டுக்கையெடுத்து பைங்கிளியாள் குறத்திமகள் என் தலையில் தட்டிவிட்டு நீரெடுக்கச் சென்றாள்.
சென்றிட்ட வேகத்தில் விரைவாகத் திரும்பியவள் 'நீரெல்லாம் என்ன செய்தீர் நீர்? ஒரு சொட்டும் காணவில்லையே!' எனப் பதறினாள்.

'மலையருவி உண்டிங்கு பக்கத்தில்! சுனையொன்று அதனடியில்! சுவையான நீருண்டு! நீருண்டு தணிந்திடவே! சென்றுவாரும் சீக்கிரமாய்!' என அல்லிமகள் படபடத்தாள்.

'நீயும் கூட வந்திட்டால் சுகமாக இருக்குமே!' என நான் சொன்னதுமே,
'காட்டானை அலையுமிடம்! காரிகை நான் வரமாட்டேன்! நீரே சென்றுவருக!' என்றவளும் பகர்ந்திருந்தாள்!

'வழிதெரியா இடத்துக்கு வயதான கிழவனென்னைத் தனியாக அனுப்புதலும் முறையல்ல! ஆனை ஓட்டும் மந்திரமும் இங்கெனக்குத் தெரியுமடி! பயமின்றி என்னோடு நீதுணையாய் வந்துவிடு!' என்றவுடன்,
அரைமனதாய்ச் சம்மதித்து, என்கையைப் பற்றியவள் எனையிட்டுச் சென்றிட்டாள்!
தணிகைமலைத் தாகமின்னும் தணியாத யானுமவள் தளிர்க்கரத்தைப் பற்றியே மலையருவிப் பக்கலில் சென்றோம்.
இதமான குளிர்த்தென்றல் மிதமாக வீசிவர, மலையருவி நீர் தெளித்து திவலைகளும் முகத்தில்பட,
கன்னிமகள் பனிமலர்ப்பூம் பாவையென மிளிர்ந்திருக்க, பேரழகைப் பருகியபடி நீரமுதை நான் பருகினேன்!

'வனவள்ளி கூற்று':

தாகம் தணிந்தவுடன் தணிகைமலை வேலவனின் திருப்புகழைக் கேட்டிடவே ஆவலுடன் அங்கமர்ந்தோம்.
குரலெடுத்து கணீரென குமரனவன் திருப்புகழைக் காதார நான் கேட்க சுதியோடு அவர் பாட,
எனை மறந்து கண்மூடி நானிருந்த வேளையினில், கரமொன்று சூடாக என்மீது பட்டிடவே திடுக்கிட்டுக் கண்விழித்தேன்!

முதியவரின் கரமொன்றென் வளைக்கரத்தைப் பற்றிநிற்க, வந்திட்ட கோபத்தில் வெடுக்கென்று உதறிவிட்டு சட்டென்று யானெழுந்தேன்!

தள்ளிவிட்ட வேகத்தில் தண்ணீரில் அவர் விழுந்தார்! காப்பாற்றிட வேண்டியெனைக் கரங்கூப்பி முறையிட்டார்!
கைபிடித்து வெளியெடுத்து கரையினிலே அமர்த்திவிட்டு குடிசை நோக்கி நான் விரைந்தேன்!
'அண்ணா வரணும்!' எனவொரு குரலும் பின்னாலே ஒலித்திடவே என்னவென பார்க்குமொரு ஆவலினால் முகம் திருப்ப,
காட்டானையொன்று துதிக்கையை வீசிவந்து காதுமடல் படபடக்க எனைநோக்கி ஓடிவர கன்னி நான் படபடத்தேன்!!!!!!

ஒற்றையானை ஓடிவந்தால் ஓடிச்சென்று தப்பிக்கும் உபாயம் சொல்லித்தந்த உணர்வங்கு ஓங்கிவர,
வழிமறைத்து நின்றிருக்கும் ஆனைதாண்டிச் செல்லுதலும் இயலாதே எனவறிந்து, 'காத்திடுக! காத்திடுக' எனவவரைக் கூப்பிட்டேன்!

'ஆனை கண்டு பயம் வேண்டா! விரட்டுகின்ற வழி தெரியும்! ஆனாலும் அதற்கு முன்னால்
நீயெனக்கு சத்தியமாய் ஒருவார்த்தை சொல்லவேண்டும்!'
என்றவரின் சொல்கேட்டு எரிச்சலும் கோபமும் இணைந்தங்கே என்னுள் பிறக்க, 'சத்தியம் செய்வதற்கு நேரத்தைப் பார்த்தீரே!
சீக்கிரமாய் ஆனையதை விரட்டுதற்கு வழி பாரும்! ' என்றிட்ட என் கூவல் காதுகளில் விழாததுபோல், கையிரண்டும் மார்மீது குறுக்காகக் கட்டியபடி,

'சீக்கிரமாய்ச் சத்தியம் செய்தால்... "நானுன்னை மணப்பேன்".... எனச் சத்தியம் செய்திட்டால் ஆனையிங்கு சென்றுவிடும்! சீக்கிரமாய்ச் சொல்லிவிடு' என்றார் பாட்டையா!
ஆனைபயம் மனக்கதவை ஆழமாகப் பதிந்துவர, 'அப்படியே செய்கின்றேன்! யானும்மை மணப்பதற்கு சத்தியமும் செய்கின்றேன்' என்றதுமே,
'அண்ணா! செல்!' எனவந்த முதியவரும் ஒரு சொல்லைச் சொன்னதுமே, மந்திரத்தால் கட்டுண்டதுபோல ஆனை விலகிச் சென்றதங்கே!


'மனவேடன் கூற்று':

ஆனையது சென்றதுமே அல்லிமகள் எனைவிட்டு தழுவிநின்ற தளிர்க்கரத்தைச் சட்டென்று விலக்கிவிட்டு,
எட்டிநின்று எனைப்பார்த்துக் கைகொட்டிக் கலகலவெனவே சிரித்தபடி, 'ஏய்ச்சுப்புட்டேனே தாத்தா! ஏய்ச்சுப்புட்டேனே!' என்றாள்!

'யானும்மைக் கைபிடிப்பேனெனக் கனவினிலும் எண்ணவேண்டா! ஆனைபயத்தில் சொன்ன சொல்லும் ஆனையோட போயே போச்சு!' என்றவளைப் பார்த்தபடி,
'அண்ணா! வரணும்!' என மீண்டும் யான் சொல்ல, ஆனையங்கு வந்திடவே அழகுமகள் என் தோளில் அல்லியென துவண்டு வீழ்ந்தாள்!

'அறியாமல் சிறுபிள்ளை யான் செய்த பிழை பொறுத்து ஆனையதை விரட்டிடுக! சொன்னபடி கேட்டிடுவேன்! மணந்திடவே சம்மதிப்பேன்'
என்றவளின் சொல்கேட்டு, 'அண்ணா! செல்!' என்றதுமே, ஏளனமாய் எனைப் பார்த்து ஆனையங்கு அகன்றதுவே!

'என்னவொரு மந்திரத்தைச் சொல்லியிங்கு செய்தீரோ இந்த மாயம்! எத்தனையோ அதிசயங்கள் நீரிங்கு செய்கின்றீர்!
எனக்கதனைச் சொல்லிடுவீர்' என்றவளின் சொல்லழகில் மெய்ம்மறந்து யானுமங்கு குறவள்ளி காதினிலே மந்திரத்தைச் சொல்லிநின்றேன்!

வள்ளிக்கண்ணாள் தள்ளி நின்றாள்! இரக்கமுடன் எனைப் பார்த்தாள்! 'காடழைக்கும் நேரத்தில் காதலியா உமக்கு வேண்டும்?
காதவழி சென்றுவிடும் காரியத்தை யான் செய்வேன்!' எனச் சொல்லிச் சிரித்தபடி,
'அண்ணா! வரணும்!' என ஓங்கிக் குரல் விடுத்தாள்!

ஓடிவந்த ஆனையங்கு உத்தமியாள் அருகடைந்து "என்ன?"வெனக் கேட்பதுபோல் ஏறிட்டு அவளைப் பார்க்க,
'வயதான இவர் செய்யும் குறும்பிங்கு தாங்கவில்லை! வயற்காட்டைத் தாண்டியொரு வழிமீதிவரை விட்டிடுக!' என வேண்டி நின்றாள்!

வரம்தந்த சாமியையே புறந்தள்ளும் பொல்லாத இந்தப்பெண் பொய்யள் மட்டும் அல்லள், கள்ளியும் கூடத்தான் என மகிழ்ந்து[!] அண்ணனவன் முகம் பார்த்தேன்!

'யானிங்கு செய்வதற்கு இனிமேலும் ஏதுமில்லை! நீயாகப் போகிறாயா? நான் வந்து முட்டிடவோ!' என்பதுபோல் எனைப்பார்த்த அண்ணனவன் குறிப்பறிந்து, கால்தெறிக்க ஓடினேன்!
காதல்மொழிக் குறத்தியவள் கைகொட்டிச் சிரிக்கின்ற வளையோசைச் சத்தமங்கு பின்னாலே கேட்டுவர,

காதவழி சென்றபின்னர் காலார தரையமர்ந்து அடுத்தென்ன செய்வதென அமைதியாகச் சிந்தித்தேன்!

வேறென்ன வழி இனிமேல்?....
********************************

[நாளை வரும்!]

Read more...

Wednesday, November 19, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்]-4

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்]-4
"மனவேடன் காதல்"



"மனவேடன் கூற்று":

'என்ன பிழை செய்துவிட்டோம்? ஏனிப்படி எண்ணியதும் நிகழவில்லை?' எனும் நினைப்பு மனதிலோட, அண்ணனவன் நினைவில் வந்தான்! நினைத்தவுடன் முன்னும் வந்தான்!

'கன்னி பிடிக்கும் அவசரத்தில் சொல்லாமல் சென்றிட்டாய்! கன்னி கிடைக்கவில்லை! கவண்கல்தான் பரிசுனக்கு!' எனச் சொல்லிச் சிரித்தவனின் காலடியில் நான் விழுந்தேன்!

'கைத்தலத்தில் கனிவைத்து கருணையொடு காக்கின்ற தெய்வமே! நினை மறந்து சென்றதுவும் என் பிழையே! மன்னித்து எனக்கருள வேண்டுகிறேன்!
நின்கையில் கனியிருப்பதுபோல், என்கையில் கன்னி கிடைத்திட அருள் செய்யப்பா!' எனத் தொழுதேன்! 'அப்படியே ஆகுக!' என்றான் அண்ணல்!

'அழைக்கின்ற நேரத்தில் அண்ணா நீ வரவேணும்' என்னுமெந்தன் வேண்டலுக்கு 'அப்படியே அழைத்திடுவாய்! வந்திடுவேன் தப்பாமல்' என்றண்ணன் ஆசிகூறி மறைந்தான்!

'வேடனாக வந்ததிலே கை பிடித்த சுகமன்றி, வேறு பலனொண்ணும் காணவில்லை! மீண்டுமந்த வேடமிட்டு கல்லடியைப் பெறவேண்டாம்!
தனியாளாய்த் தனித்திருக்கும் கன்னியிவள் கைபிடிக்க, அவளருகில் செல்லவேண்டும்! அடுத்ததெல்லாம் அண்ணன் கையில்!

நரைதிரையும், நடுங்குகின்ற கைகளுமாய் முதியவனாய்ச் சென்றிட்டால் முத்தழகி கருணை கொள்வாள்!' எனவெண்ணி வேடம் கொண்டேன் வயோதிகனாக!

"வனவள்ளி கூற்று":

'கவண்வீசிக் கவண்வீசி கைகளுமே வலிக்கிறது! காத்திருந்த சோதரரும் காட்டுவழி சென்றுவிட்டார்!
கூடவந்த தோழியரும் கண்ணினின்று மறைந்துவிட்டார்! தனியளாய் வாடுதலே தலைவிதியாய்ப் போனதிங்கு!

ஆறவமர்ந்து கதைத்திடவோ ஆதரவாய் ஆளில்லை! ஏது செய்வேன்? என்னழகா! நின்னையுமே காணவில்லை!
பரண்மேலே நின்றிட்டு கால்களுமே நோகிறது! கீழிறங்கி அமர்ந்திடுவோம்' என்றெண்ணித் தரை வந்தேன்!

'ஈதென்ன! ஏதோவோர் ஆளரவம் கேட்கிறதே! அழகனவன் முருகவேளின் அருட்பெருமை பாடிவரும் குரலோசை கேட்கிறதே!
ஆதரவாய்க் கேட்டிடவே அருகழைத்துப் பார்த்திடுவோம்!' எனவெண்ணி ஆசையுடன், 'ஆரது அங்கே?' எனக் குரல் விடுத்தேன்!

வந்தவொரு உருக்கண்டு வாயெல்லாம் பல்லாச்சு! வயோதிகரைப் பார்த்ததுமே மனசெல்லாம் லேசாச்சு!
தள்ளாடும் வயதினிலே தடியொன்றை ஊன்றியவர் தள்ளாடி வருதல்கண்டு, கைபிடித்துத் தாங்கி நின்றேன்!

'நடுங்குகின்ற கைபிடித்த என்கையும் நடுங்குவதேன்? நரம்பினிலே இதுவென்ன புத்துணர்ச்சி பரவிடுது?
நரைகண்ட தலைமுடியும் தாடியுடன் அலைகிறது! இருந்தாலும் இருகண்ணில் இதுவென்ன பேரொளியாய்?

குரலோசை குழறலாக வந்தாலும் என்மனத்தை ஏனிங்கு இப்படியது பிசைகிறது? என்னவிது மாயம்?' என்றெண்ணிக் கலங்கினேன்!
என்னுணர்வு என்னைவிட்டு எங்கேயோ போவதினை மெல்ல மெல்ல யானுணர்ந்து வந்தவரை வரவேற்றேன்.

'சொந்தவூர் செல்லவெண்ணி வழிதவறிப் போனீரோ? காட்டுவழி வந்ததென்ன? காரணத்தைச் சொல்லிடுக' வெனக் கேட்டேன்.
'காடுமலை சுற்றிவரும் கானகத்துக் கிழவன் யான்! கால்போன போக்கினிலே காததூரம் வந்திருந்தேன்! கால்வலியை மறப்பதற்குக் கந்தன் புகழ் பாடிவந்தேன்'

என்றவரும் சொல்லிடவே, 'காரியங்கள் ஏதுமில்லாக் கிழவரிவர் துணைகொண்டு மாலைவரை ஓட்டிடலாம்' எனக் களித்தேன்!

'வெகுதொலைவு நடந்ததனால் மூச்சிங்கு இளைக்கிறது! வெறும் வயிற்றில் இருப்பதனால் வயிறிங்கு பசிக்கிறது!
புசிப்பதற்கு ஏதுமுண்டோ? பெண்மானே சொல்லிடுவாய்!' என்றவரின் குரல் கேட்டு துணுக்குற்றேன் ஓர் கணம்!

'சென்றவனும் மானென்றான்! வந்தவரும் மானென்றார்! என்னவின்று மான்வேட்டை நாளோ!' எனும் நினைப்பு வந்தவுடன் வேடனவன் திருமுகமும் மனக்கண்ணில் நிழலாட,
'வந்த களைப்பு தீர்ந்திடவே நீரருந்தி நீரும் உணவருந்திச் சென்றிடலாம்! சுவையான தினைமாவும் கலந்துண்ண தேனுமுண்டு!' எனச்சொல்லி முறுவலித்தேன்!

'சுந்தரியாள் நீயெடுத்து கைகளினால் உருட்டியதை என்கையில் வைத்திட்டால் சுகமாகத் தானிருக்கும்'
எனச் சொல்லி எனைப் பார்த்து இளித்திட்ட வயோதிகரின் முகவடிவைப் பார்த்ததுமே, சரியான வம்புக் கிழவரிவர் எனத் தெளிந்தேன்!

'காலலம்பிக் கைகழுவ நீரிங்கு வைத்திருக்கேன்! விரைவாக வந்திங்கு மரத்தடியில் அமர்ந்திடுக!
தினைமாவும் தெளிதேனும் வட்டிலிலே எடுத்தாறேன்' எனச்சொல்லி கலயத்தைக் கையெடுக்க குடிசைக்குள் நான் நுழைந்தேன்!


மனவேடன் [வயோதிகர்] கூற்று:

திரும்பியவள் வருவதற்குள், திரட்டிவைத்த நீரையெல்லாம் குறும்பாகத் தரையினிலே கொட்டிவிட்டு, குறுக்காகக் கால்நீட்டி மரத்தடியில் நான் சாய்ந்தேன்.

'களைப்பதிகம் ஆனதினால், கால்நீட்டிப் படுத்தீரோ! தேனமுது உண்டிடவே சற்று எழுந்து வந்திடுங்க! என்றவளைக் களைப்பாக நான் பார்த்தேன்!

'தொலைதூரம் நடந்ததனால் கால் சற்று குடைகிறது! கன்னிமான் நீ கைதொட்டு சற்றமுக்கி விட்டிருந்தால் கால்வலியும் பறந்தோடும்!
வேற்றாளைத் தொடுவதுவோ என்றஞ்சி மயங்காதே! வயதான கிழவனிவன் கால்தொட்டால் குற்றமில்லை' எனச் சொன்னேன்!


கிழவரின் அடுத்த நாடகம் என்ன?
*****************************

[நாளை வரும்!]

Read more...

Tuesday, November 18, 2008

"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 3

"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 3
"மனவேடன் காதல்" - 3
'மனவேடன் கூற்று'

நலிந்திட்ட வேளையிலும் நாணமது விலகவில்லை! நிமிர்ந்தென்னை நோக்கியவள் வேதனையை மறைத்தபடி, " ஆருமில்லாக் காடென்று அப்படியே நினைத்தாயோ! காடுமலை வனமெல்லாம் சொந்தமிங்கு எங்களுக்கு!

இம்மென்றால் ஆயிரம் பேர் இப்போதே வந்திருந்து, 'ஏதுமறியாப் பெண்ணிவளை ஏதுசெய்ய எண்ணினாயடா?' எனச்சொல்லி கட்டியிழுத்திடவே துணிவுண்டு என்னிடத்தில்!" எனச் சொல்லிச் சிடுசிடுத்தாள்!

பசியங்கு வாட்டுகின்ற வேளையிலும் பத்தினியாள் பனிமுகத்தில் படர்ந்துவிட்ட செம்மையதைக் கண்டு யானும் மனத்துள்ளே மகிழ்ந்திடினும், கருமுகத்தில் படர்ந்திட்ட செம்மையது காட்டுகின்ற வண்ணக் கலவையதை மேலும் சற்றுக் கண்டிடவே எட்டியவள் கைபிடித்தேன்!

"யாருமில்லா வேளையிலே மரத்தடியில் நீ கிடக்க, மேனியெலாம் சிராய்த்திடவே செங்குருதி வெளிக்காட்ட கருந்தோலில் அரும்புகின்ற காயத்தைக் குறைத்திடவே மருந்தொன்று வைத்திருக்கேன்! மாதரசி மடி வாடி! "எனச்சொல்லி ஆதரவாய் அவள் கையைப் பற்றியதும் அவள் சினந்தாள்!

வெடுக்கென்று தன்கையை உதறியவள் எனைப் பார்த்து, ' காட்டினிலே பிறந்தவள் நான்! காயமெனக்குப் புதிதில்லை! என் குருதி காணுவதும் இதுவல்ல முதல் தடவை! உன் வழியைப் பார்த்த படி நீ செல்ல இயலாதெனின், இப்போதே வீரர்களை இங்கேயே யானழைப்பேன்' என்றபடி ஓலமிட்டாள்! "எல்லாரும் வாங்க" என்றாள்!

தூரத்தே வேட்டுவரும் ஓடிவரும் ஒலிகேட்டு, கண்நிறைந்த காதலியைக் கண்களினால் பார்த்தபடி, பற்றிநின்ற கைகளையும் விட்டிடாது அப்படியே மரமாகி நின்றிருந்தேன்.. வேங்கை மரமாகி நின்றிருந்தேன்.... செவ்வல்லிக் கைகளையும் கிளைகளினால் வளைத்தபடி!

'வனவள்ளி இசைக்கிறாள்!'

நானிட்ட ஓலமதைக் கேட்டுவந்த சோதரரும் ஆதரவாய் எனைநோக்கி 'நடந்ததென்ன கூறு' என்றார்!
'கானகத்தே தனியளாக நானிருந்த வேளையினில் வனவேடன் வேடம்கொண்டு வஞ்சகன் ஒருவன் வந்தென்னை வம்புகள் செய்தான்

நானழைத்த குரல்கேட்டு நீவிரிங்கே வருகின்ற ஒலிகேட்ட வனவேடன் மரமாகி எனை வளைத்தான் பாரண்ணா!' என்றேன்!
மரக்கிளைகள் எனைவளைக்க நானிருந்த கோலம் கண்ட நண்பான சோதரரும் தமக்குள்ளே பார்த்தபடி வாய்விட்டுச் சிரிக்கலானார்!

'அக்கரையில் யாமிருக்க எமைப்பார்க்க நீவேண்டி அக்கரையாய்ச் சொன்னதிந்தக் கதையினை நாம் நம்பமாட்டோம்
ஆளிங்கு மரமாதல் அவனியிலே கண்டதில்லை! அடுக்கடுக்காய் பொய் சொல்லும் துடுக்கான பெண்ணரசி!

யாமிருக்கும் இவ்வனத்தில் வேறொருஆள் வருவதுவும் இயலாத செயலென்றே இன்னமும் நீ உணர்ந்திலையோ
வேடிக்கை செய்யவிது நேரமல்ல! வேலை மிகவிருக்கு!' என்றபடி அன்புடனே எனைத் தழுவி விடைபெற்றுச் சென்றிட்டார்!

பொய்யுரைத்தேன் எனச் சொன்ன சொல்லதுவைத் தாங்கிடாமல் மீண்டுமெனைக் கிள்ளிப் பார்த்தேன்.
உணர்வின்னும் அப்படியே உள்ளபடி தானிருக்கு! கனவெதுவும் காணவில்லை! கண்டதுவும் கனவில்லை.

மரமாகிப் போனவனின் மதிமுகமும் நினைவில் வர மறைக்கவொண்ணா நாணத்துடன் மரக்கிளையைத் தடவிவிட்டேன்!
மரம் அங்கு மறைந்து போச்சு! மனவேடன் மீண்டும் வந்தான்! வில்லொன்றைத் தாங்கியவன் முகவடிவைப் பார்த்தவுடன் நாணத்தால் மிக வேர்த்தேன்!

பொய்யளென எனைச் சுட்டிய கள்ளனிவன் எனும் நினைப்பு மனத்தினிலே பொங்கிவர மறுபடியும் கோபமங்கு முகத்தினிலே துளிர் விட்டது!
'ஆரடா நீ? ஏனிப்படிச் செய்திட்டாய்? அவப்பெயரை எனக்களித்து நீ மறைந்து செல்லலிங்கு மறவர்க்கு அழகாமோ?

மறுபடியும் நானவரை அழைத்திட்டால் என் செய்வாய்? எனச் சிடுசிடுத்து கோபவிழி விழித்திட்டேன்!
கலகலவென அவன் சிரித்த சிரிப்பெந்தன் கோபத்தை எரிகின்ற நெருப்பினிலே விறகள்ளிப் போட்டாற்போல் மிகுதூட்டியது!

'செய்வதையும் செய்துவிட்டு சிரிப்பென்ன சிரிப்பு! நம்பியாளும் காட்டினிலே எதனை நம்பி நீயிங்கு வந்தாய்?
சீக்கிரத்தில் சொல்லாவிடின் பேராபத்து விளையுமுனக்கு' என்றவனைப் பார்த்தபடி கடுமையாக முகம் மாற்றிச் சீறினேன்!

'கோபத்திலும் கூட நீ இன்னமும் அழகாய்த்தானிருக்கிறாய்! கருமைநிற முகவடிவில் செம்மை படர்வதும் சிறப்பாய்த்தானிருக்கிறது' என்றவன் சொன்னதுமே நாணமும் கூடச் சேர்ந்து இன்னும் செம்மையானேன்!
கண்களைச் சற்று தாழ்த்தியபடி, முகத்தில் சற்று அச்சம் படர 'சோதரர்மார் எனைத்தேடி வருகின்ற வேளையிது! சீக்கிரத்தில் அகன்றுவிடு' என்றேன்!

'மனவேடன் கூற்று':

சினந்தவளின் முகவடிவில் நான் மயங்கிப் போனேன்! சிந்தையெலாம் சுழன்றிடவே அன்புடன் அவளை நோக்கி,

'தேடிவந்த மானொன்று திசை தவறி இவ்வழி வந்தது!
காயாத கானகத்திருக்கும் கண்கவர் மான் அது!
இங்குமங்கும் சென்று மேயாத மான் அது!
கண்டவர் எல்லாம் வியக்கும் பேரெழில் மான் அது!
அண்டவந்து எவருமே கைபிடிக்க இயலாப் புள்ளி மான் அது!
கைக்கெட்டும் அருகினில் இருப்பதுபோல் போக்குக் காட்டி, கிட்டவரின் கிட்டாத மான் அது! புள்ளிமானொன்றை கண்டனையோ, கன்னியிளமானே!' என்றேன் ஓரக்கண்ணால் அவளை அளந்தபடி!

'மானொன்றும் காணவில்லை; மயிலும் நான் காணவில்லை! கன்னியிளமானென்று எனை நீ சீண்டுவதும் முறையில்லை!
தேடிவந்த புள்ளிமானைத் தேடி நீ சென்றுவிட்டால் எல்லாமும் நலமாகும்; நின்னுயிரும் பிழைத்துவிடும்' என்றாள் அந்த மானும், மருண்ட தன் கண்களை இங்குமங்குமாய் ஓடவிட்டபடி!

மனதுக்கினியாளுடன் இன்னும் கொஞ்சம் விளையாட எண்ணி, 'மானுனக்குப் பிடித்திருந்தால் வேணுமென்று சொல்லிவிடு!
அதைவிடுத்து மானில்லை இங்கு என பொய்யுரைத்தல் சரியன்று! மானொன்று இங்குவந்த அடையாளம் நான் கண்டேன்!

சற்று முன்னர் நின் அண்ணன்மார் பொய்யள் என நினைப் பழித்த சேதியெல்லாம் கேட்டிருந்தேன்! என்னிடமும் அதே கள்ளம் சொல்லாதே பெண்ணே' என்றேன் முறுவலுடன்!

கோபமின்னும் அதிகமாக, செவ்விதழ்கள் துடிதுடிக்க, ஆத்திரத்தில் மார்பின்னும் படபடக்க அல்லிமகள் கவண் கையெடுத்தாள்!

உரிமையுள்ள சோதரர் எனைச் சொன்னால் பொறுத்துக்கொள்வேன்! முன்பின்னறியா நீ யார் என்னைப் பழிப்பதற்கு? ஆருமில்லா ஆளென்று நினைத்தனையோ? அல்லது வெறுங்கையளென எண்ணினாயோ!

கையிலுண்டு கவண்கல்லு! விட்டெறிந்தால் முகம்தெறிக்கும்! நில்லாதே என் முன்னே! தேடிவந்த புள்ளிமானை நீயும் தேடிப்போ' எனப் படபடத்தாள்!

'கண்மயங்கி விழுந்தவளைக் காப்பாற்ற வந்தவர்க்கு நீ கொடுக்கும் கவண்கல் மரியாதை அழகாய்த்தான் இருக்கிறது!

கோபம் கொள்ளாதே மடமானே! செல்லுகிறேன் இப்போதே' எனச் சொல்லி, கருணை காட்டி மனதிலிடம் பெற்றிடலாம் எனுமெண்ணம் நிறைவேறா ஏக்கத்துடன் அங்கிருந்து அகன்றேன்!


மனவேடன் இனி என் செய்வான்?
*********************************

[நாளை வரும்!]

Read more...

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] - 2

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] - 2
"மனவேடன் காதல்"-2
அங்கே!....

'வனவள்ளி மனநிலை!'

வனவேடன் தலைவனிவன் நம்பிராஜன் என் தகப்பன் காடுநிலம் உழுகையிலே கண்டெடுத்தான் எனையங்கு.

மகளில்லாக் குறைநீங்க மகாதேவன் தந்தானென மகளாக வளர்க்கின்றான் குறையொன்றும் இல்லாமல்.

தினைப்புனத்தைக் காப்பதற்கே கவண்கல்லை கைதந்து பரண்மீதில் நிற்கின்றேன் மனமங்கு செல்லவில்லை.

ஆலோலம் பாடியிங்கு ஆரவாரம் செய்திருந்து நாடிவரும் புள்ளினத்தை நான் விரட்டிப் பாடினாலும்

நான் விரும்பும் மணவாளன் மலைக்குமரன் வாராமல் மனம்தவித்து வாடுகிறேன் கண்ணிரண்டால் தேடுகிறேன்.

மகிழ்ந்தென்னைக் கூட்டிடவே மலையரசன் தானென்று மகராசன் வருவானோ மனமள்ளிப் போவானோ?

தேடியவன் வருகின்ற திசைபார்த்து திசைபார்த்து கண்ணிரண்டும் பூத்ததுதான் கண்டதிங்கு பலனடியோ!

கீழிறங்கி கால்நடந்து காட்டுவழி மலைவழியே காதலனைத் தேடியிங்கு கால்கடுக்க நடக்கின்றேன்.

குத்துகின்ற முள்ளெதுவும் பாதத்தில் உறைக்கவில்லை பத்துகின்ற வெயிலதுவும் பாவியுடல் எரிக்கவில்லை.

கால்தவறி இடறிவீழ்ந்து மலைச்சரிவில் உருளுகின்றேன் கண்மயங்கி நாவறண்டு நினைவொழிந்து சரிகின்றேன்!

'மனவேடன் கூற்று':

'காடுமலை ஏறி, களைச்சு விழுந்தெழும்பி ஆற அமரத் தேடித்திரிந்தடைந்தேன் மரவடி .!

கண்ணை மூடிக் களைப்பின் அலுப்பினிலே அயர்ந்தே போனேன் சில நொடி! எழுந்து பார்த்த பின்னே உணர்ந்தேன்! ஆதரவாய் தடவிக்கொடுக்கும் ஒரு கரம்!
என்னை அணைத்தபடி தன்னுள் புதைத்தபடி அன்பாய் மறுகரம்!
கற்கள் உரசியதால் பாசி வழுக்கியதால் அங்கங்கே தேகத்தில் அடி!
அந்த வலியெல்லாம் தகர்த்து எறிவதற்கோ வந்தது இந்த அன்புப் பிடி?!!
"யாரது" எனக் கேட்க வலுவின்றிக் கொஞ்சம் மெளனித்து இருந்தேன்!

எழுப்பினால் மயக்கம் கலைந்து விலகிடுவாளோ என அஞ்சி மடிவைத்திருந்தேன்!

'வனவள்ளி கூற்று':

பசியின் களைப்பினில் பஞ்சணைத் துயிலினில் கண்ணை மூடிக்கிடந்தேன்!
"துயிலை விட்டெழுந்தால் விட்டுப்போய் விடுமோ இந்த மஞ்சம் என ஏங்கியது எனது நெஞ்சம்!

விழிக்க விருப்பமின்றி கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு கிடந்தேன் சில கணங்கள்!!
"பசியின் களைப்பினிலோ பாவை நீயும் களைத்தே போனாய் என்று
காதருகே வந்து தேனாய் ஒழுகி நின்று கேட்டது அந்தக் குரல்!

கொஞ்சம் விழித்தபடி அந்தக் கைகள் பிடித்தபடி அண்ணாந்து முகம் பார்த்தேன்!
கருணை பொழியும் அந்தக் கண்களினிலே பொங்கும் முகவழகில் வேர்த்தேன்!

'என்ன சொல்வதென்று ஏதும் அறியா வண்ணம் 'சுற்றும் முற்றும் அங்கு பார்த்தேன்!
'தடவிக்கொடுத்த படி தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் தரவோ?' எனக் கேட்டவுடன் பொங்கும் நீரென கண்ணில் நீர் வார்த்தேன்!

"அன்பை அறியா இந்தப் பேதைஉலகம் என்று எண்ணித்தானே தனியே வாழ்ந்தேன்!
காடே சுகமென்று இங்கு வந்து சேர்ந்தேன்! "அன்பால் அணைக்கின்றாயே!! யாரோ நீயென்று விழிகள் விரியக் கேட்டேன்!! ??


'மனவேடன் கூற்று' :

காடுமலை எனதரசு! நானலையும் மலைக்காடு! நாரியவள் நலிந்தங்கு மரத்தடியில் துயிலுகிறாள்!

மூடிநின்ற கண்களுக்குள் முழுமனதின் வேதனைகள் கொத்தாகப் படர்வதினால் விழியங்கு உருள்கிறது!

பொத்திவைத்த சோகமெலாம் மொத்தமாக விதிர்விதிர்த்து மூச்சுக்காற்று வழியாக முன்னெழும்பித் தவிக்கிறது!

பொங்குமுலைத் தனமெல்லாம் நெஞ்சினிலே கொண்ட துயர் தூக்கித் தூக்கிப் போடுவதால் தானாகக் குதிக்கிறது!

ஏதேதோ கனவுகளும் மனம் வதைத்துப் போடுவதால் மெல்லியலாள் மேனியெலாம் மேல்நோக்கி எழும்பிடுது!

சொல்லவொணா சோகமதை நெஞ்சினிலே தாங்கியவள் சோர்ந்தயர்ந்து தூங்கினாலும் நினைவலைகள் அவளையிங்கு தூங்கவிடச் செய்திடாத அவலத்தால் விசும்புதைக் கண்டு மனம் பொறுக்கவில்லை!

ஆதரவாய் அருகமர்ந்து அன்புடனே மடியெடுத்து மேல்துண்டை மெல விசிறி மேனியிலே துளிர்க்கின்ற வேர்வையதைத் துடைத்து விட்டேன்!

கையசைவில் காற்றுவர மேலிருந்த மரக்கிளையும் மெல்லியதோர் தென்றலதை மெதுவாக இதம்வீசி மங்கையிவள் வெப்பத்தை சற்றாகத் தணித்ததுவே!

மேகத்தை வரவழைத்து குளிரூட்டி பொழிந்திடவே மனதாலே பணித்திடவே, மெதுவான சாரலது இதமாகப் பொழிந்திடவே செவ்விதழ்கள் நனைந்ததினால் நாவெழுந்து வெளிக்கிட்டு நல்லதரம் நனைத்திருந்தாள்!

சில்லென்று பொழிகின்ற மெல்லியதோர் தூறலினால் மேனியிலே சிலிர்ப்பலைகள் சட்டென்று எழுந்துவர பட்டென்று கண்விழித்தாள்!

மேல்நோக்கி விழிதிறந்து மெல்ல அவள் பார்க்கையிலே காடுவனம் கடந்திட்ட கன்னியிவள் வள்ளியவள் கண்பார்வை எனைத் தாக்க வேலனிவன் மெய்ம்மறந்தான்!


‘வனவள்ளி கூற்று’:

புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து ஏதும் சொல்லவில்லை அவனும்!

'உண்ட பின்னே பெண்ணே! பேசிக்கொள்வோம் என்றான்!..

"பசி ஆற்றும் செயல் நன்மை மகிழ்ந்தேன் அதனால் நானும்

"யாரோ என்று சொன்னால் உண்பேன்" என்றேன் நானும்!

'பசி வந்தால் பெண்ணே பத்தும் பறக்கும்' என்பர்.

பசித்த பின்பும் கூட பிடிவாதம் விட மறுத்தாய்!' என்றே சொல்லிச் சிரித்தான்!.

வந்த சிரிப்பை வாயுள் அடக்கிக்கொண்டே கேட்டேன்!

'எதுவும் பறக்காதிங்கே!!...யாரோ நீங்கள்?!!' என்றேன்!.

"அன்பைத் தேடும் அன்பை நானும் நாடி வந்தேன்!

இறைவன் தந்த பந்தம் என்றே உன்னைக்கொண்டேன்!

பிரியா வரம் ஒன்றே நானும் வாங்கி வந்தேன்!

உனக்காய் வாழும் நாளில் என்னை முழுதாய்த் தருவேன்! “

என்றே சொல்லி முடித்தான்!!

ஏதோ ஏதோ எண்ணம் வந்து என்னுள் பரவ சின்ன வயதில் கேட்ட வரங்கள் சிரிப்பை எழுப்ப ‘மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன்!!

அங்கே என்னைத் தொலைத்தேன்! பழங்கள் ஒரு கையில் பச்சிலைகள் மறுகையில்!!

‘பசியைத் தீர்க்கும் பரிவும் நோயைத் தீர்க்கும் குணமும் கொண்ட இவனே எந்தன் உயிரின் வரமாய் உணர்ந்தேன்!

உள்ளில் பொங்கிய உணர்வினை மறைத்து, யாரிவன் என்னும் உண்மையினை அறிந்திடவே பொய்யாகக் கோபத்தை முகத்தினிலே வரவழைத்து சினந்தவனைப் பார்த்தேன்!

சினந்தவள் செய்ததென்ன?
**********************************************
[நாளை வரும்!]

Read more...

Monday, November 17, 2008

"கந்தன் கருணை" -- இரண்டாம் பாகம் - 1

"கந்தன் கருணை" -- இரண்டாம் பாகம் - 1

கந்தன் கருணை என்னும் இந்தத் தொடர் கவிதையை இதே போலவே தொடருங்க என நண்பர் ரவி சொல்லி இருந்தார்.
ஆனால், ஏதோ ஒரு உந்தலில் வேறுவிதமாக எழுத எண்ணம் வந்தது. அதைத்தான், 'புதுப்பொலிவுடன்' எனச் சொல்லியிருந்தேன்.
முருகனருள் முன்னிற்கும்.


"மனவேடன் காதல்!"

அழகிய திருத்தணி மலை! அதன் மீது முருகப்பெருமான் வலப்புறம் வள்ளியுடனும், இடப்புறம் தெய்வானையுடனும் கம்பீரமாக அமர்ந்திருந்தான்.
அடிபணிந்து தொழுது நின்றேன்.
முருகன் அன்புடன் எனைப் பார்த்து முறுவலித்தான். 'என்ன?' என்பதுபோல் கண்
சிமிட்டினான்.
"சூரனை வதைத்து அன்னை தேவசேனாவை மணந்தது வரை எழுதிவைத்தேன். வள்ளி அம்மையாரை தாங்கள் மணம் செய்த கதையைத்
தங்கள் திருவாக்கினாலே கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்" என்றேன் பணிவுடன்!
முருகன் சிரித்தான்!
"அதற்கென்ன! நானும் வள்ளியுமே சொல்கிறோம். கேட்டுக்கொள்!" என்றான்.
"முதலில் நான்தான் சொல்வேன்!" என தெய்வானை அம்மையார் முன்வந்தார்.
பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் துள்ளிக் குதித்தேன்!
அவர்கள் சொன்ன கதையை இங்கே பதிகிறேன்.
***********************************************

'மணமகள் கூற்று':

"பரங்குன்றான் பெருங்கருணை!"

கத்திவரும் சேவலது கொத்தவரும் பாம்பையெல்லாம் கொத்திக் கொத்திப் போடுது!
சீறிவரும் வேலதுவும் சீறிவரும் கொடும்பகையை சீறிப்பாய்ஞ்சு சிதைக்குது!
பறந்துவரும் மயிலதுவும் பறந்துவரும் கணைகளையும் பறந்துபறந்து மாய்க்குது!
கூடவரும் பூதப்படை கொடியவராம் அரக்கர்களை கொன்று சாய்த்துக் குவிக்குது!
என்னவனாம் முருகப்பன் கண்ணசைவில் கடிந்துவரும் பகையெல்லாம் பனியாக விலகுது!
மன்னவனாம் கதிர்காமன் மக்களையே காத்திடவே மனமிசைந்து வருகிறான்!
மனத்துள்ளே நிலைகொண்ட மகராசன் மனத்தினிலே மகிழ்ச்சி பொங்கச் செய்கிறான்!
சினமெல்லாம் தணிந்தபின்னே தேவியென்னைக் கைப்பிடித்து எனக்கிங்கே அருள்கிறான்!

'மனவேடன் கூற்று':

சினமெல்லாம் தணிந்திடவே வந்து நின்றேன் தணிகைமலை!
வருகின்ற அடியார்க்கு கேட்டவரம் தந்தபடி நின்றேன் சிலையாகி!
தெய்வயானை துணையிருக்க தமிழமுதம் பொங்கிவர களித்தேன் சிலநாளை!
என்நிலையை, ஏகாந்தம் குலைத்திடவே நாரதனும் வந்தான் எனைநாடி!

'வள்ளிமலை என்னுமொரு காட்டினிலே மலைக்குறத்தி உனையெண்னிப் பாடுகின்றாள்!
கள்ளமிலா உள்ளத்துடன் கன்னியவள் பரண்நின்று கவண்வில்லை வீசுகிறாள்!
கந்தனவன் சொந்தமென வருவானென வேட்டுவச்சி மனம்வெதும்பி வாடுகிறாள்!
உண்ணவில்லை! உறக்கமில்லை! உன்னையெண்ணிக் காடுமலை ஏறியவள் தேடுகிறாள்!

இப்போதே நீசென்று 'எண்ணத்தை மனம் நிறைக்கும்' கன்னியவள் துயர் தீரு!
தப்பாமல் நினக்கெனவே தவமிருக்கும் தனியாளின் தாகத்தைத் தணித்துவிடு!
தணிகைமலை அமர்ந்திருக்கும் நீயெழுந்து இப்போதே தவிக்கின்ற அடியாளைச் சேர்ந்துவிடு!'
எனச்சொன்ன நாரதனைக் கனிவோடு பார்த்திருந்து, கனிமொழியாள் முகம் பார்த்தேன்!

ஏறெடுத்து எனைப்பாரா ஏந்திழையாள் இப்போது நேரெடுத்து எனைப் பார்த்தாள்!
விழிமலரில் காதலுடன் விளக்கவொண்ணா பேரெழிலாள் எனைநோக்கி இது பகர்ந்தாள்!
"எல்லாம் அறிந்திருந்தும் எனைநோக்கிப் பார்க்கின்ற மர்மத்தை என்ன சொல்வேன்!
அங்கே தவமிருக்கும் மங்கைநல்லாள் என்னவளின் தங்கையென அறியாத கள்வனோ நீ!

யாமிருவர் நினைவேண்டி தவமிருந்த அன்றொருநாள் எமக்களித்த வரமின்று மறந்தனையோ!
தட்டாமல் இப்போதே தேவரீர் நீர் சென்று தங்கையினைக் கூட்டிவருக!
ஞானத்தின் வடிவழகாய் நாயகியாள் நானிருக்க, இச்சைக்கு வள்ளியென விதித்தவரே!
மோனத்தை வேலாக்கி ஆணவத்தை மயிலாக்கி அன்பரசு செய்கின்ற மன்னவரே!
' என்றாள்!

தனிவேலைத் தங்கவிட்டு, தங்கமகள் தெய்வானை தன்னிடத்தில் விடைபெற்று எழுந்தேன் நான்!
வனவேடன் வேடமிட்டு வனத்தினிடை செல்லுதலே நலமென்று நினைத்தந்த வேடம்பூண்டேன்!
காதல்மனம் கடிந்தேக, தாபமிங்கு பெருக்கோட தனிவேடனாய்த் தனியாளாய் நடந்தேன்!

காதலனைக் காணாமல் கனிமொழியாள் வருந்துகின்ற காட்சியினிக் காண்போம்!

அங்கே!....
*****************
[நாளை வரும்!]

Read more...

Thursday, November 13, 2008

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] -- 4

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] -- 4
[ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்]

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்


கடும்போர் செய்தான் கொடுஞ்சூரன்
கணைகளை அனுப்பித் தாக்கிட்டான்
கடைக்கண் பார்வை பட்டதுமே
கணைகளும் பொடியாய்ப் போனதம்மா

சூரன் வியந்தான் பயந்தான்
வானத்தில் ஏகி மறைந்தான் [காலையில்]

விண்வெளி சென்றிட்ட சூரபத்மன்
மேகத்தில் நின்று கணை தொடுத்தான்
பார்த்திட்ட முருகன் முறுவல் செய்தான்
வேலினை எடுத்து விண் விட்டான்

சூரனைத் தேடிய சூர்வேலும்
மேகத்தைக் கிழித்துச் சென்றதங்கே [காலையில்]

வான்வழி மறைத்த கூர்வேலின்
போரினைத் தாங்கிட முடியாமல்
இத்தரை மீதினில் சூர் வந்தான்
கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான்

தனிவேல் அவனைத் துரத்தியது
கடலினை வற்றிடச் செய்ததுவே [காலையில்]

தேரினை இழந்த சூரரக்கன்
ஆயுதமின்றி நின்றிடவே
அவனைக் கொல்லுதல் பாவமென்று
நாளை வந்திட அருள் செய்தான்

கந்தன் கருணையின் வடிவம்
அவன் என்னுடை குலத்தின் தெய்வம் [காலையில்]

கொடுஞ்சூர் அரசன் தலைகவிழ்ந்தான்
தனிமரமாகத் திரும்பிச் சென்றான்
வாளால் அறுத்தவன் மனத்தையங்கு
வாளாய் அறுத்தது தீவினையும்

அறஞ்செயின் முருகன் அருள்பெறலாம்
மறஞ்செயின் அவனே அழித்திடுவான் [காலையில்]

வேதனை தன்னைத் தாக்கிடவே
போனதும் கண்முன் ஆடிடவே
உறக்கம் இழந்தான் சூரசுரன்
மறுநாள் போருக்குத் தயாரானான்

அணையும் விளக்காய் அவன்வந்தான்
அணைக்கும் கரமாய் அழகன் நின்றான் [காலையில்]

எதிர்வந்த கணையெல்லாம் துகளாக
இளையவன் வியக்கும் போர்புரிந்தான்
இதுவரை ஆடிய ஆட்டத்தினை
விரைவாய் முடித்திட அருள்கொண்டான்

வேலை எடுத்தான் வேல்முருகன்
சூரன்மேல் விட்டான் சுந்தரனே [காலையில்]

காற்றெனப் பறந்தது கூர்வேலும்
மாற்றிதற்கில்லை எனும் படியாய்
கூற்றுவன் கணக்கையும் முடித்திடவே
கூர்வேல் சீறிப்பாய்ந்ததுவே

மரமாய்ச் சூரன் மாறிநின்றான்
மாமரம் துளைத்தது கூர்வேலும் [காலையில்]

இருபுறம் மரமும் பிளந்திடவே
சூரன் விழுந்தான் நிலத்தினிலே
சேவலும் மயிலுமாய்த் தானெழுந்தான்
வேலவன் சேவடி வந்தடைந்தான்

அழித்தல் இங்கே நடக்கவில்லை
ஒன்றே இரண்டாய் ஆனதுவே! [காலையில்]

சேவலைக் கொடியாய்த் தான்கொண்டான்
மயிலை வாகனம் ஆக்கிநின்றான்
வானவர் பூமழை பொழிந்தனரே
கொடுஞ்சூர் அழிந்ததில் மகிழ்ந்தனரே

வேல்வேல் வேல்வேல் வேல்வேல்
எனும் முழக்கம் விண்ணைப் பிளந்ததுவே [காலையில்]

தேவரை விடுதலை செய்தானே
தேவேந்திரனும் மனம் மகிழ்ந்தானே
அழகனை அரசனாய் முடிசூட
இந்திரன் பணிந்தே நின்றானே

அரசன் இவனே இவனே- இவன்
இந்திரனை அரசாக்கினானே [காலையில்]

நன்றிக்கடனைச் சொல்லிடவே
இந்திரன் தன்மகள் தந்தானே
தாயும் தந்தையும் அருள்வழங்க
பரங்குன்றில் திருமணம் கொண்டானே

தெய்வானை என்னும் திருமகளை
முருகன் துணையாய்க் கொண்டானே [காலையில்]

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்!
**********************************************************
[இத்துடன் "கந்தன் கருணை" முதல் பாகம் நிறைவடைந்தது. புதுப் பொலிவுடன், வித்தியாசமான நடையில், இரண்டாம் பாகம் திங்கள் முதல் தொடரும்! இதனை எழுத எனக்கு ஊக்கம் அளித்த என் துணைவிக்கு இந்த நேரத்தில் என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! முருகனருள் முன்னிற்கும்!]

Read more...

Wednesday, November 12, 2008

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] - 3

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] - 3
[ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்]




காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்

தம்பிகள் இருவரும் அழிந்ததினால்
தமையனும் கோபம் மிகக் கொண்டான்
தானே போருக்குச் சென்றிடவே
சூரனும் வாளை எடுத்துவிட்டான்

அருமைமகனும் அருகில் வந்தான்
தன்னை அனுப்பிடக் கேட்டுக்கொண்டான் [காலையில்]

தனயன் இருக்கையில் தந்தை செல்லல்
முறையல்லவெனவே பணிந்துநின்றான்
சிறுவனை அழித்திடச் சிங்கமிங்கு
செல்வது தவறென வாது செய்தான்

மதிகெட்ட அரக்கன் மனமகிழ்ந்தான்
மகனை வாழ்த்தி அனுப்பிவைத்தான் [காலையில்]

மாயப்போரினில் வல்லவனாம்
பானுகோபனும் தேரேறி
போர்க்களம் வந்து நின்றிருந்தான்
அரக்கர்படையும் மகிழ்ந்ததுவே

தன்னைப் போருக்கு அனுப்பவென
வீரவாகுவும் வேண்டிநின்றான் [காலையில்]

அனைத்தும் அறியும் எழில்முருகன்
'அப்படியே!' என அனுமதித்தான்
தினவுடைத் தோளன் வீரவாகுவும்
பூதப் படைகளுடன் எழும்பிவந்தார்

கொடியதோர் போரினில் பானுகோபன்
வாகுவை வாளால் வீழ்த்திவிட்டான் [காலையில்]

தலைவனை இழந்த பூதங்களும்
செய்வது அறியா நிலையடைந்து
தாறுமாறாகச் சிதறியதுவே
அரக்கர்படைகளும் மகிழ்ந்தனவே

கந்தன் கண்மலர் திறந்தான்
பூதகணங்களும் உயிர்பெற்றார் [காலையில்]

மறைந்தே தாக்கும் கொடுமரக்கன்
பானுகோபனை அழித்திடவே
மீண்டும் வீரவாகு எழுந்துநின்றார்
முருகனின் அருளால் கதை முடித்தார்

அரக்கர் கூட்டம் அயர்ந்ததுவே
வருத்தம் மிகுந்தே சென்றதுவே [காலையில்]

உற்றமும் சுற்றமும் அழிந்ததினால்
உறவும் அற்றுப் போனதினால்
செய்வது எதுவென திகைத்திருந்தான்
சூரனும் மயங்கித் தத்தளித்தான்

வந்தது சிறுவன் அல்லன்
எனும் தெளிவினை சூரன் பெற்றான் [காலையில்]

அழகிய மனையாள் அழுதுற்றாள்
கணவனைக் காத்திட முறையிட்டாள்
வேலனைப் பணிதல் நலமென்றாள்
மாங்கல்யம் காத்திட வேண்டிநின்றாள்

மனைவியைக் கருணையாய்ப் பார்த்தான்
அவள் கரங்களைப் பற்றி உரைத்திட்டான் [காலையில்]

எவரும் இல்லா ராச்சியத்தை
எவர்க்கென நானும் ஆளுவது
அனைவரும் இருக்கும் பொழுதினிலே
இதைச் சொல்ல ஏனுன்னால் முடியவில்லை

வீரனின் மரணம் வீரன்கையில்
அதை விடுவது முறையல்ல எனச் சொன்னான் [காலையில்]

போர்க்களம் ஏறி சூரன்வந்தான்
புதுபலம் கொண்டது அரக்கர்சேனை
“யாரடா என்னை எதிர்ப்பதிங்கு?”
இடியினைப்போலே முழங்கிட்டான்

வந்தான் முருகன் அவனெதிரே
கண்கள் கூசிடும் பேரொளியாய் [காலையில்]

கண்டவர் வியக்கும் எழில்தோற்றம்
அவன் கருணைக்கடலின் அவதாரம்
கையினில் வேலினைத் தாங்கி நின்றான்
கனியிதழ் புன்னகை பூத்துநின்றான்

என் முருகன் இவனே இவனே
என் தலைவனும் இவனே இவனே [காலையில்]


***************************************************
[தொடரும்]

Read more...

Monday, November 10, 2008

"கந்தன் கருணை" - 2

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] - 2
[ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்]


காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்


அரக்கன் சூரனை அழித்திடவே
அன்னையும் தந்தாள் சக்திவேலை
நவவீரர் துணையுடன் புறப்பட்டான்
தென்திசை நோக்கி அவன் சென்றான்

வேலைப் பணிவாய் மனமே- உன்
வினைகள் தீர்ந்திடும் நிஜமே [காலையில்]

செந்தூர்க் கரையில் அவன் நின்றான்
அலைகடல் அதிரவே ஆர்ப்பரித்தான்
வீரவாகுவைத் தூது விட்டான்
வன்முறை தவிர்த்திடக் கெடு வைத்தான்

அழிபவன் எதையும் கேட்பதில்லை
அழிவதும் விதிவசம் நிகழ்வதுவே [காலையில்]

தூதனைச் சூரனும் அவமதித்தான்
முருகனைச் சிறுபிள்ளை என்றிகழ்ந்தான்
போருக்கு வரச் சொல்லி மதியிழந்தான்
அழிவைத் தானே தேடிக் கொண்டான்

இறைவன் முருகன் முறுவல் செய்தான்
கடலினைக் கடந்து ஈழம் வந்தான் [காலையில்]

தாரகன் என்னும் ஒரு தம்பி
சூரனின் சொல்லால் மதியிழந்து
மலையென எதிரில் மறைத்திருந்தான்
மாயக் குகையாய் தடுத்து நின்றான்

உட்சென்ற வீரர்கள் மயங்கி நின்றார்
வெளிவர வழியின்றி கலங்கி நின்றார் [காலையில்]

நிலைமை அறிந்த கந்தவேளும்
வேலினை அனுப்பிட முடிவெடுத்தான்
கூர்வேல் மலையைக் கிழித்ததுவே
மலையெலாம் பொடிப்பொடி ஆனதுவே

தாரகன் அழிந்தான் அழிந்தான்
வீரர்கள் மயக்கம் தெளிந்தார் [காலையில்]

தாரகன் அழிந்த சேதிகேட்டு
தமையன் துடித்தான் ஆத்திரத்தால்
சிங்கமுகாசுரன் எனும் தம்பி
தானே போரிடப் புறப்பட்டான்

தானென்னும் ஆணவம் கொண்டவனும்
தன்கதை முடித்திடப் புறப்பட்டான் [காலையில்]

தலைகள் கீழே விழ விழவே
வேறோர் தலைகள் முளைத்திடவே
வரமதைப் பெற்றிட்ட சிங்கமுகன்
தருக்கினால் கந்தனின் எதிர்வந்தான்

வேலுக்கு முன்னெவர் வரமுமிங்கு
நில்லாதெனவறியா மூடன் [காலையில்]

ஆயிரம் தலைகளை வெட்டியின்னும்
அசையாதிவனும் நிற்கையிலே
பூதப்படைகள் பயந்தோடி
நாலாபுறமாய்ச் சிதறியதே

முருகன் சிரித்தான் சினந்தான்
வேலினை விடுத்தொரு மூச்சு விட்டான் [காலையில்]

சீறிப் பாய்ந்தது வேலங்கு
சிங்கமுகன் மார் துளைத்ததுவே
சிரத்தைக் கொய்து வேலவனின்
காலடியில் கொண்டு சேர்த்ததுவே

அரக்கனும் மடிந்தான் அழிந்திட்டான்
பூதப் படைகளும் எழுந்தனவே! [காலையில்]

*********************************

[கந்தன் கருணை தொடரும்!]

Read more...

Sunday, November 09, 2008

"கந்தன் கருணை" - 1

"கந்தன் கருணை" -1
['ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்']

கந்த சஷ்டியின் போது போடலாம் என எழுதத்தொடங்கினேன்,..... 'கந்தன் கருணை' என்ற தலைப்பில், கந்தன் பிறப்பு, அவனது லீலைகள், சூரனை அழித்தது, தெய்வானை, வள்ளி திருமண நிகழ்வுகளை வைத்து. ஒரு சில காரணங்களினால், அதை முடிக்க முடியாமல் போனது. இப்போது எழுதி முடித்தபடியால், அதனை இங்கு பதிகிறேன். படித்துவிட்டுச் சொல்லுங்கள். நன்றி. முருகனருள் முன்னிற்கும்.

*********************************************

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்


கந்தன் கருணையைப் பாடிடவே
கணபதி தாளினை நான் பிடித்தேன்
தடைகளைத் தாண்டி கருணைவெள்ளம்
மடைதிறந்திங்கே பாய்ந்திடுமே

கணபதி தருவான் அருள்வான்
எம்வாழ்வில் இனிமை சேர்ப்பான் [காலையில்]

சூரன் என்னுமோர் கொடுமரக்கன்
தேவரைச் சிறையினில் வதைசெய்தான்
துயரினை நீக்கிக் காத்திடவே
தேவரும் சிவனை வேண்டிநின்றார்

விமலன் அருளிட நினைந்தார்
விழிமலர் திறந்து அருள்செய்தார் [காலையில்]

நடனம் ஆடிடும் சிவனினின்று
எழுந்தன தீப்பொறி மூவிரண்டு
சீறியே பாய்ந்தன கண்ணினின்று
சேர்ந்தன கங்கையின் கரை புரண்டு

என் முருகன் புகழைப் பாடிடுவேன்
அது ஒன்றே என்செயல் என்றறிந்தேன் [காலையில்]

தீப்பொறி வெப்பம் தாளாது
கங்கையும் வறண்டனள் சோர்ந்திருந்து
சரவணப் பொய்கையில் விட்டனளே
கமலங்கள் ஆறும் மலர்ந்தனவே

என் முருகன் பிறந்தான் பிறந்தான்
என் வாழ்வு சிறந்திட மலர்ந்தான் [காலையில்]

கார்த்திகைப் பெண்டிர் மார்பினிலே
கனியமுதம் அவன் சுவைத்திருந்தான்
அன்னை உமையாள் சேர்த்தணைக்க
ஆறுமுகனாய்ப் பொலிந்திருந்தான்

தன் வண்ணம் காட்டியே சிரித்திருந்தான்
என் எண்ணம் யாவினும் அவன் நிறைந்தான் [காலையில்]

நாரதர் மாங்கனி கொணர்ந்துவர
சிவனதை வென்றிட ஏவிவிட
உலகைச் சுற்றிட மயில் மீது
வலம்வரச் சென்றான் என் முருகன்

கணபதி தாய்தந்தை வலம் வந்து
கனியினைப் பெற்றே சுவைத்திருந்தான் [காலையில்]

வலம்வந்த முருகன் திரும்பிவர
கனியதை அண்ணனிடம் கண்டுவிட
கோபம் கொண்டான் என் முருகன்
ஆண்டியாய் நின்றான் பழநியிலே

அகிலத்திற் கோருண்மை உரைத்துவிட
பாலகன் செய்திட்ட விந்தையிது [காலையில்]

தன்னை மதியா பிரமனிடம்
ஓமெனும் மந்திரப் பொருள்கேட்க
விழித்திட்ட அயனைச் சிறையிலிட்டான்
படைப்புத் தொழிலைக் கையெடுத்தான்

தன்னிகரில்லாத் தலைவனிவன்
என்னவன் புகழை என் சொல்வேன் [காலையில்]

பிரமனைச் சிறைவிட வேண்டிநின்ற
சிவனுக்குப் பொருளை உரைத்திட்டான்
பிரணவத்தின் பொருளைச் சொல்லியதால்
தகப்பன்சாமியாய்ப் பெயர்பெற்றான்

கற்றதன் பொருளை உணர்ந்துகொள்ள
என்னவன் செய்திட்ட லீலையிது [காலையில்]



**********************

[தொடரும்]

Read more...

Wednesday, November 05, 2008

அட! என்னப்பா தேர்தல் இது... உப்புசப்பில்லாம!

அட! என்னப்பா தேர்தல் இது... உப்புசப்பில்லாம!




உலகையே உற்றுப் பார்க்கவைத்த அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது!

இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்க்கெல்லாம் ஒரு அதிர்ச்சி தரும் தேர்தல்!

இப்படியா ஒரு தேர்தல் நடத்துவது?

கட்சி ஊர்வலங்கள் இல்லை!
சைக்கிள் பேரணி இல்லை!
ஆட்டோவில் ஒலிபெருக்கி அலற வீதி வீதியாக முழக்கங்கள் இல்லை!
சுவரெங்கும் விளம்பரங்களும், சுவரொட்டிகளும் இல்லை!
தெருவடைத்து பந்தல் போட்டு, வயதானவர், நோயாளிகள், படிக்கும் மாணவர்கள் இவர்கள் பற்றிய கவலையே இல்லாமல், டப்பா குத்துப் பாடல்கள் காதை கிழிக்க, அதைத் தொடர்ந்து பேச்சாளர்களின் நாராசப் பேச்சுகள் இல்லை!
கூட்டணி பேரங்கள் இல்லை!
இலவச வாக்குறுதிகள் இல்லை!
பிரியாணி பொட்டல விநியோகம் இல்லை!
நள்ளிரவில் வீடு வீடாக பணம், குத்துவிளக்கு, பிளாஸ்டிக் குடம், வேட்டி, சட்டை, புடவை லஞ்சம் இல்லை!
ஓசி சாராயம் தண்ணீராக ஓடவில்லை!
வெட்டுக்குத்து இல்லை!

அட, இதெல்லாம் கூட பரவாயில்லை!

வாக்கெடுப்பு நாளன்று, ........,
ஆட்டோ, கார் என வீட்டுக்கு வந்து வாக்குச் சாவடிக்குக் கூட்டிச் செல்லவில்லை.
வாக்குச்சாவடி கைப்பற்றல், சாவடிக்குள் புகுந்து மிரட்டுதல், சைக்கிள் செயின், சோடாபுட்டி, கல்லெறி இல்லை!
போலீஸ் தடியடி இல்லை!
வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை இல்லை!

சரி, அதுதான் போகட்டும்!........,

வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நான்கு மணி நேரத்தில், முடிவுகள் அறிவிக்கப் படுகின்றன!
தோற்றவர் வென்றவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவிக்கிறார்.
பின்னர் பொதுமேடையில், நான் தோற்றுவிட்டேன்! வென்றவருக்கு என் வாழ்த்துகள்! இனி அனைவரும் ஒன்றாக நாட்டு நலனைப் பற்றி சிந்திப்போம்! என அறிவிக்கிறார்!
வென்றவரும் தோற்றவரின் திறமைகளைப் பட்டியலிட்டு, அனைவர்க்கும் நன்றி தெரிவித்து மனைவியை முத்தமிடுகிறார்.

மறுநாள்.........,

அலுவல் வழக்கம்போல் இயங்குகிறது!
விலகும் அதிபர் வரப்போகும் மாற்றத்திற்கு அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக வாக்களித்துப் பாராட்டுகிறார்!
வீதிகளில் ஒரு மகத்தான சரித்திர நிகழ்வு நடந்ததற்கான அறிகுறிகளே இல்லாமல், நாடு வழக்கம்போல் இயங்குகிறது!
வென்ற கட்சியின் தொண்டர்கள் கடை கடையாய் ஏறி, 'இனி எங்க ஆட்சிதான்! நம்மளை நல்லா கவனிக்கணும் இனிமே!' என அச்சுறுத்தவில்லை!

அட! என்னப்பா தேர்தல் இது... உப்புசப்பில்லாம!

என்னய்யா நடக்குது இங்கே!

நம்ம ஊருக்கு வந்த நாம நடத்துற தேர்தலெல்லாம் பார்த்ததில்லியா இவங்க!
அதான், அவரவரும் துணிச்சலா கிண்டல் பண்றாங்க!

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமாவுக்கு வாழ்த்துகள்!
வாழ்க அமெரிக்க ஜனநாயகம்!

Read more...

Friday, October 31, 2008

"கலைஞருக்கு இன்னுமொரு கடிதம்!"

"கலைஞருக்கு இன்னுமொரு கடிதம்!"


அன்புள்ள கலைஞர் அவர்களே!
வணக்கம்.

இரு வாரங்களுக்கு முன் நீங்கள் காட்டிய எழுச்சியைப் பார்த்து, 'ஆஹா! ஈழத்தமிழர் விடிவு இப்படித்தான் வர வேண்டியிருக்கிறதே!'
என மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்!

நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளும், அதற்கு விதித்த கெடுவும், அதைக் கண்டு தமிழகமே தங்கள் பின் அணிவகுத்து மனிதச் சங்கிலியாய்த் திரண்டதும் நீங்கள் ஒரு செயல்வீரர் தான் என என்னை எண்ண வைத்தது.

நீங்கள் விதித்த கெடு முடியும்வரை இதை ஒரு பார்வையாளனாக மட்டுமே கவனிக்கலாம் என இருந்தேன்.

ஆனால், இன்று........!!??!!

நடந்ததெல்லாமே ஒரு நாடகம்தான் என எண்ண வைக்கிறது!

ராஜிநாமாக் கடிதங்கள் போன இடம் தெரியவில்லை!

போர் நிறுத்தம் நடந்ததாகத் தெரியவில்லை!

ராணுவத் தாக்குதல்கள் தொடருகின்றன.

நேற்று கூட ஒரு பள்ளிக்கூடத்தின் மீது குண்டு வீசப்பட்டு அப்பாவி மாணவன் ஒருவன் உயிரிழந்ததாகவும், பலர் காயமுற்றதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமரசப் பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் தொடங்கப் பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

நீங்கள் ஒன்றும் நடக்காதது போல நிவாரண நிதித் திரட்ட தீவிரமாக முனைந்து விட்டீர்கள்!

இதுவா ஈழ மக்கள் உங்களிடம் எதிர்பார்த்தது?

நீங்கள் உணவுப் பண்டங்கள் அனுப்ப வேண்டும் என்பதா அவர்களின் எதிர்பார்ப்பு,... நம்பிக்கை?

இதற்காகவா இத்தனை நாள் நீங்கள் காத்திருந்தீர்கள்?

அங்கு ஆட்சி போனால், அடுத்த நொடியே இங்கும் ஆட்சி போகும் என்பது எனக்குத் தெரியும்.

முதல் அறிக்கை விடும்போது உங்களுக்கும் தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை.

இருந்தாலும், ...அல்லல் படும் மக்களின் அவலத்தை நிறுத்த உங்கள் செல்வாக்கு உதவும் என மிகுந்த ஆவலுடன் நம்பினேன்.

ஏமாற்றி விட்டீர்கள்!

என்னை மட்டுமல்ல!

ஒட்டு மொத்தத் தமிழினத்தையே!

இதெல்லாம் நாடகம் எனக் கூவிக் கொண்டிருந்தவர்களின் கூற்றை உண்மையாக்கி விட்டீர்கள் என வருத்தத்துடன் சொல்லிக்
கொள்கிறேன்!

இப்போது கூட இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அடுத்த முறை போட்டி இடுவேனோ எனத் தெரியாது! எனச் சொல்லி முதல்வர் ஆனவர் நீங்கள்!

உங்கள் கூற்றை மதித்து, உங்களுக்கு ஓட்டு போட்டு உங்களை அங்கு அமரவைத்து அழகு பார்த்தவர்கள் நம் தமிழர்கள்!

அவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த கவனமும் [ஒரு சிலரைத் தவிர்த்து!!] ஈழத்தமிழர்களின் விடியலை நோக்கியே இருக்கிறது என்பதே உண்மை!

'மறப்போம்! மன்னிப்போம்!' எனச் சொல்லும் அண்ணா வழியில் அயராது பாடுபட்டு வரும் நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கால கட்டம் இன்று!

இலங்கை அதிபர் கூட உங்களை அழைக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

ஈழத் தமிழரும் கூட, நீங்கள் நல்ல முடிவு கொடுப்பீர்கள் என நம்புகின்றனர்!

உணமை நிலவரத்தை அறிய நீங்கள் ஈழம் செல்ல வேண்டும்.

இரு தரப்பினரோடும் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு சுமுகமான முடிவை உங்களால் பெற்றுத் தர முடியும் என நிச்சயமாக நான் நம்புகிறேன்!

இந்த நேரத்தில், ஒரு வரலாற்று உண்மையையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்!

சிங்கப்பூர் என்ற நாடு முதலில் மலேசிய நாட்டுடன் இணைந்து, அதன் தனித்தன்மை தங்கள் நலனுக்கு ஊறு விளைக்கும் என பெருவாரியான மலேசிய மக்கள் நினைத்ததால், பாராளுமன்றம் ஏகமனதாக வாக்களித்து, சிங்கப்பூரை தனி நாடாக சுதந்திரம் கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.

இன்று அந்த இரு நாடுகளும் ஒருவர்க்கொருவர் இணக்கமாகவே இருந்து வருகின்றன!

இந்த அமைப்புதான் இன்றிருக்கும் நிலையில் சிங்களவர்க்கும், ஈழத் தமிழர்க்கும் நன்மை பயக்கும் செயல் முடிவாக இருக்கக்
கூடும் என நான் எண்ணுகிறேன்.

இதையும் மனதில் கொண்டு இந்த பிரச்சினையை அணுகினால் நலமாயிருக்கும்.

உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு வயதோ, அனுபவமோ கிடையாது என்றாலும், மனதில் தோன்றுவதை
துணிவுடன் சொல்லிவிட எண்ணியே, இதைச் சொல்கிறேன்.

ஆனால், உங்களால் முடியும்!

'உன்னால் முடியும் தம்பி!' என அண்ணா அன்று தங்களைப் பார்த்துச் சொன்ன சொல் இதற்காகத்தான் என நம்பி இதில் முழுமனதுடன், முழு மூச்சுடன் ஈடுபட்டு நல்முடிவு தாருங்கள் என வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன்!

'நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!'
என அழைப்பு விடுத்தவர் நீங்கள்!

உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்!

'தமிழர் தலைவா வருக! தமிழீழம் பெற்றுத் தருக!'

நடப்பது நடக்கும்!
நல்லதே நடக்கும்!

எனது அடுத்த கடிதம் தங்களைப் பாராட்டும் கடிதமாக இருக்க எல்லாம் வல்ல என் முருகனை வேண்டுகிறேன்!
நன்றி! வணக்கம்!

Read more...

Thursday, October 23, 2008

"தமிழச் சாதி" -- "பாரதி சில காட்சிகள்" - 4

"தமிழச் சாதி" -- "பாரதி சில காட்சிகள்" - 4

முந்தையப் பதிவு

'பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு

நமது மூதாதையர் [நாற்பதிற்றாண்டின்]

முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு

அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம்

ஆண்டின் முன்னவரோ? ஐயாயிரமோ?

பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்

தவரோ? புராணம் ஆக்கிய காலமோ?

சைவரோ? வைணவ சமயத்தாரோ?

இந்திரன்தானே தனி முதற் கடவுள்

என்று நம் முன்னோர் ஏத்திய வைதிகக்

காலத்தவரோ? கருத்திலாதவர்தாம்

எமது மூதாதையர் நயமுறக் காட்டிய

ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்

ஆங்கவர் காட்டிய அவ்வப்படியே

தழுவிடின் வாழ்வு தமிழர்க்குண்டு;

எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம்

கலி தடை புரிவன். கலியின் வலியை

வெல்லல் ஆகாது என விளம்புகின்றனரால்,

நாசங் கூறும் 'நாட்டு வயித்தியர்'

இவராம்.'



இன்னொரு சாராரோ, தம்முடைய பண்டைப் பெருமையை

பலவாறும் விரித்துக் கூறி, அதுவே சிறந்தது எனவும் சொல்லி,

ஆயின், அது’ நீயெல்லாம் அடைய இயலாத ஒன்று’ எனக் கலியைக்

காரணமாகக் காட்டி நம் நம்பிக்கையைக் குலைப்பார்.

ஒரு சாரார் சீமை மருத்துவர்போல் வந்து 'ம்ஹூம்' என உதட்டைப்

பிதுக்கிச் சென்றால், இன்னொரு சாராரோ, நாட்டுவைத்தியர் போல

நாடி பிடித்து, 'தேறாது' எனச் சொல்லி நோயை அதிகமாக்குவார்

என்கிறான் பாரதி!

நமக்குத் தெரியாத நாகரிகத்தைச் சொல்பவரை சீமை மருத்துவர் எனச் சொன்ன பாரதி, நமக்கெல்லாம் ஓரளவு தெரிந்த ஒன்றையும் நம்மை அடையவிடாமல் செய்யும் இவரை நாட்டு வயித்தியர் எனச் சொல்லி கோபப்படுகிறான்!


'இங்கு இவ்விருதலைக் கொள்ளியின்

இடையே நம்மவர் எப்படி உய்வர்?'


எனக் கோபத்துடன் கேட்கிறான் விதியை நோக்கி!

'விதியே! விதியே! தமிழச் சாதியை

என் செயக் கருதி இருக்கின்றாயடா?
'

அனுதாபத்துடன் பாரதியைப் பார்த்து விதி சொல்கிறது!

'விதி:

மேலே நீ கூறிய விநாசப் புலவரை

நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்

எத்திசைத்தெனினும் யாவரே காட்டினும்

மற்றவை தழுவி வாழ்வீராயின்,

அச்சமொன்று இல்லை!'


நீ பார்க்க வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!

இந்த தலைவர்கள் சொல்வதையெல்லாம்

அப்படியே ஏற்றுக் கொண்டுவிடாமல்,,

எது உனக்கு நன்மை என்பதை அறிவோடு சிந்தித்து

அது எவர் சொன்னதாக இருந்தாலும் அதனைக் கொண்டு

வாழ்வீராயின், தமிழச் சாதிக்கு அச்சம் என்பதே இல்லை!

தன்னை நம்பும் தைரியம் இருந்தால்

நாளென்ன பொழுதென்ன?

எனச் சொல்லி விதி தன் வழியே சென்றது!

இன்றைக்கும் பொருந்தக்கூடிய கருத்துகளைச் சொல்லும்

இந்தப் பாடல் வரிகளை நன்குணர்ந்து செயல் புரிந்தால்

நம் தமிழர் உயர்வர்!

இப்போது பாரதி இந்தக் கவிதை எழுதும் முன் சொன்ன வரிகளுடன் இதனை நிறைவு செய்கிறேன்!

"தமிழ்மொழி வாழ்த்து!"

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

என்றென்றும் வாழியவே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று

சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

********************************

[நல்லதே நடக்கும்!]

Read more...

Wednesday, October 22, 2008

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3

முந்தையப்பதிவு

'நால்வகைக் குலத்தார் நண்ணும் ஓர் சாதியில்

அறிவுத் தலைமை ஆற்றிடும் தலைவர்—

மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும்--

இவர்தாம்.

உடலும் உள்ளமும் தம் வசம் இலராய்

நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும்

பெரிதிலை; பின்னும் மருந்து இதற்குண்டு;

செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும்

உய்வகைக்கு உரிய வழி சில உளவாம்,

மற்றிவர்.

சாத்திரம்--[அதாவது, மதியிலே தழுவிய

கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்]--

ஈங்கிதில் கலக்கம் எய்திடுமாயின்

மற்றதன் பின்னர் மருந்து ஒன்று இல்லை
.'


எல்லாச் செயல்களுக்கும் ஒரு பரிகாரம் உண்டு என ஒரு சாராரும்,

பகுத்தறிவு கொண்டு சாத்திரத்தைத் தள்ளாவிடின் பின் மருந்தே கிடையாது

என இன்னொரு சாராரும் செய்துவரும் குழப்பத்தில் தமிழச்சாதி

குலைந்துபோகின்ற அபாயத்தைச் சுட்டுகிறான் பாரதி.

இதனை இன்னமும் விரித்துச் சொல்ல விழைகிறான்.



'இந்நாள் எமது தமிழ்நாட்டிடையே

அறிவுத் தலைமை தமது எனக் கொண்டார்

தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்;

ஒருசார்.

மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்

செய்கையும் நடையும் தீனியும் உடையும்

கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை

யவற்றினும் சிறந்தன. ஆதலின் அவற்றை

முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால்,

தமிழச் சாதி தரணி மீது இராது.

பொய்த்தழி வெய்தல் முடிபு' எனப் புகலும்.


நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை

வழியெலாம் தழுவி வாழ்குவம் எனிலோ

'ஏ ஏ! அஃது உமக்கு இசையா' தென்பர்;

'உயிர்தரும் மேற்றிசை நெறிகளை உவந்து நீர்

தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெருந்தடை

பல அவை நீங்கும் பான்மைய வல்ல;

என்றருள் புரிவர். இதன் பொருள் சீமை

மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்

சாதியின் நோய்க்குத் தலை அசைத்து ஏகினர்'

என்பதேயாகும்; இஃதொரு சார்பாம்.'



மேலை நாகரிகத்தைத் தழுவினாலன்றி

தமிழருக்கு வாழ்வில்லை எனச் சொல்லி, அதே சமயம்

அவையெல்லாம் தழுவுவது உமக்கு வராது என

சிலபல தடைகளையும் போட்டு

ஒருசாரார் நம்மைக் குழப்புவர்!

இவர்களைச் சீமை மருத்துவருடன் ஒப்பிட்டுக் கேலி செய்கிறான்.

நமக்குத் தெரியா மருந்துகளைத் தான் மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு,

அவற்றை நமக்கு விளக்காமல், தலை அசைத்துச் செல்லுவர் என!

அப்படியானால், அந்த இன்னொரு சாரார் எவர்?

நாளை வரும்!
****************

Read more...

Tuesday, October 21, 2008

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 2

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 2

முந்தைய பதிவு

2. "தமிழச் சாதி" [தொடர்கிறது]

"ஏனெனில்,

'சிலப்பதிகாரச்' செய்யுளைக் கருதியும்,

'திருக்குறள்' உறுதியும், தெளிவும், பொருளின்

ஆழமும், விரிவும், அழகும் கருதியும்,

'எல்லையொன்றின்மை' எனும் பொருள் அதனைக்

கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்

முயற்சியைக்கருதியும் முன்பு நான் தமிழச்

சாதியை "அமரத் தன்மை வாய்ந்தது" என்று

உறுதி கொண்டிருந்தேன். ஒரு பதினாயிரம்

சனி வாய்ப்பட்டும் தமிழச் சாதிதான்

உள்ளுடைவின்றி உழைத்திடு நெறிகளைக்

கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன்;

ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்ப் புறத்துள்ள

பற்பல தீவினும்பரவி இவ்வெளிய


தமிழச்சாதி தடி உதை உண்டும்

கால் உதை உண்டும் கயிற்றடி உண்டும்

வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடும் செய்தியும் பசியால் சாதலும்

பிணிகளால் சாதலும் பெருந்தொலை உள்ள தம்

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்


இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;

'தெய்வம் மறவார்; செயுங்கடன் பிழையார்;

ஏதுதான் செயினும், ஏதுதான் வருந்தினும்,

இறுதியில் பெருமையும், இன்பமும் பெறுவார்'

என்பது என் உளத்து வேர் அகழ்ந்து இருத்தலால்!


பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதனைத் தெளிவுறக் காட்டும் வரிகள் இவை

என்பதைத் தவிர இதில் சொல்ல வேறு என்ன இருக்கிறது!

இன்றைக்கும் பொருந்தும் இவ்வரிகளைப் படிக்கும்போது நடக்கும் நிகழ்வுகள்
ஒரு கணம் நம் கண்முன் நிழலாடித்தான் செகின்றன.

இத்தனையையும் மீறி, ஒரு நம்பிக்கை வரியையும் சொல்லித்தான் செல்கிறான் பாரதி!

என்னதான் நடந்தாலும், கடவுளை நம்பி, நேர்மைச் செயல்கள் செய்து வரின், வெற்றி நிச்சயம்!

இப்படிச் சொன்ன பாரதியை விதி பார்த்துச் சிரிக்கிறது!

'எதனால் இப்படி ஒரு நிலைமை என அறிவாயா?' என்கிறது!

'தெரியும் எனக்கு! சொல்கிறேன் கேள்' எனத் தொடங்குகிறான் பாரதி.

எனினும்,

இப்பெரும் கொள்கை இதயமேற் கொண்டு

கலங்கிடாது இருந்த எனைக் கலக்குறுத்தும்

செய்தி ஒன்றதனைத் தெளிவுறக் கேட்பாய்!

ஊனமற்று எவைதாம் உறினுமே பொறுத்து,

வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,

தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து,

ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி,

சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம்;

சாத்திரமின்றேல் சாதியில்லை.

பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்

பொய்ம்மையாகிப் புழுவென மடிவர்;


இரு பிரிவினராய்த் தமிழச்சாதி பிரிந்து நிற்பதைக் காண்கிறான் பாரதி

சாதிக்குள்ளே சாத்திரம் புகுந்து அது பொய்யாகத் திரிக்கப்பட்டு

மக்களை அலைக்கழிப்பதைப் பார்த்து மனம் பொருமுகிறான்.

நால்வகையாகச் சாதிகள் பிரிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு சாதியிலும்

தானே அறிவாளி எனச் சொல்லுகின்ற தலைவன் ஒருவன் புகுந்து

எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறார்கள் என்பதை மேலும் விவரிக்கின்றான்:

**************************************

[தொடரும்]

Read more...

Monday, October 20, 2008

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 1

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 1

"பாரதி கண்ட சில காட்சிகள்"

மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடும் நேரம் இது!

ஈழம் பற்றி எரிகிறது!

தமிழகம் கொந்தளிக்கிறது!

உலகெங்கிலும் தமிழக மக்களின் குரல் உச்சமிட்டு ஒலிக்கிறது!

இந்தியத் தலைநகரிலும் கூட இன்று தமிழரல்லாத மாணவ சமுதாயம் ஆர்ப்பரித்து நிற்கிறது!

தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைத்து தமிழக பாரரளுமன்ற உறுப்பினர்களும் இருவார காலகட்டத்தில்

பதவி விலகுவார்கள் என அதிரடியாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் பாரதி என்ன சொல்லி இருக்கிறான் எனப் புரட்டிப் பார்த்தேன்!

என்னமோ தீர்க்கதரிசிக் கவிஞன் எனச் சொல்லுகிறார்களே, இவன் இதைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பானே என்ற நம்பிக்கையுடனே அவனிடம் கேட்டேன்!

சிரித்தான் பாரதி!

பாரடா எனச் சொல்லி ஒரு பக்கத்தை என்னிடம் காட்டினான்!

படித்தேன்!

சிலிர்த்தேன்!

தொழுதேன்!

கொஞ்சம் அழுதேன்!

கலைஞர் கொடுத்த இருவார அவகாசத்தில் இதைப் பற்றி உங்களுடன் பகிர எண்ணம் கொண்டேன்!

இதோ அது உங்கள் பார்வைக்கு!

இதில் வரும் பல வரிகள் விளக்கம் இல்லாமலே புரியப்படுபவை!

தேவைப்படும் போது என் மனதில் தோன்றிய எண்ணங்களை உங்களுக்குச் சொல்ல எண்ணம்!

இதோ பாடல்!

பாரதியின் அனுமதியோடு, அவன் வரிகளைச் சற்று பதம் பிரித்து இங்கு இடுகிறேன்.

"தமிழச் சாதி"

'எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,

நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்

பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்

நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ?'


என்னடா, இப்படி ஒரு தொக்கில் ஆரம்பிக்கிறானே என நிமிர்ந்தேன்!

விநாயகர் நான்மணிமாலை நினைவுக்கு வந்தது!

சட்டென முந்தைய பாடலைப் பார்த்தேன்!

"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி"

எனத் தொடங்கி ஒரு எட்டு கண்ணிகள் எழுதி,

"வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழியவே"

என முடித்திருந்தான் பாரதி!

இப்படிப் பெருமையெல்லாம் பெற்று, வளர்ந்து, சிறந்த தமிழ்மொழி நாற்றமும், சேறும், பாசியும் புதைந்து,

எவருக்கும் பயன்படாத நீராக ஆகி, அது மட்டுமல்லாமல், ஒரு நோய்க்களமாகி அழிந்து போகவோ உனது நோக்கம் எனக் கேட்கிறான்!

யாரைப் பார்த்து இப்படி கேட்கிறான்?

அதை அடுத்த வரியிலேயே சொல்கிறான்!



'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை

என் செய நினைத்தாய் எனக்கு உரையாயோ?

சார்வினுக்கு எல்லாம் தகத்தக மாறித்

தன்மையும் தனது தருமமும் மாயாது

என்றும் ஓர் நிலையாய் இருந்து நின் அருளால்

வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடுவாயோ?

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்து மற்று

உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்

சிதைவுற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ?

அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?

வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?

விதியே! தமிழ்ச் சாதியை எவ்வகை

விதித்தாய் என்பதன் மெய் எனக்கு உணர்த்துவாய்.'



வாழும் நிலைகளுடன் வைக்கப்போகிறாயா?

இல்லை அழிந்துபோகும் பொருள்களுடன் சேர்க்கப் போகிறாயா? என

விதியைப் பார்த்து ஒரு கேள்வி வைக்கிறான் பாரதி!

விதி திகைக்கிறது!

என்ன சொல்கிறான் இவன்?

நிகழ்வதைத்தானே நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்!

இதில், நிலைப்பது, அழிவது என்கின்ற வேறுபாடு எனக்குக் கிடையாதே!

பின் எதைக் குறித்து இப்படிச் சொல்கிறான் என பாரதியைப் பார்க்கிறது!

சற்றும் தயங்காமல், அடுக்கடுக்காய் உதாரணங்களைக் காட்டுகிறான் பாரதி.

நீரில் தோன்றிய இவ்வுலகு மீண்டும் நீரிலேயே முடியும் என்னும்

அறிவியலாளரின் கருத்துக்கொப்ப, எம் தமிழ் அழியாக் கடல் போல இருக்குமா?

அல்லது, ஒரு அழுத்தமான, கனமான மலர்மாலை தோளில் புரண்டதால் ஏற்பட்ட

அணிமலர்த் தடம், சிறிது நேரத்தில் மறைந்து போவதுபோல் போய்விடுமா?

பகலவன், மேகமூட்டம், இவற்றினால் இல்லாதது போலத் தோன்றினாலும்,

எப்போதும் மறையாத நட்சத்திரங்கள் போல அழியாமலா?

இல்லை, வெளிச்சம் வேண்டுமே என்பதற்காக ஏற்றப்பட்டு,

இயற்கை வெளிச்சம் வந்தவுடன் அணைக்கப்படும் ஒரு மாளிகை விளக்கு போலவா?

எவர் எது கேட்டாலும் தயங்காமல் தருகின்ற கற்பத்தருபோலவா?

அல்லது, எவருக்குமே பயனில்லாது தன் பெருமை மட்டுமே பேசி

தனிக்காட்டின் நடுவினில் நிற்கின்ற ஒரு காட்டுமரம் போலவா?

இப்படி எதுவாக வேண்டி எங்கள் தமிழச் சாதியை நீ விதித்திருக்கிறாய்? சொல்!

என அதிரடிக் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறான்!

விதி இன்னமும் புரியாமலேயே விழிக்கிறது!

பாரதி தொடர்கிறான்!

****************************

[நாளை தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP