Wednesday, April 30, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 4

"பாரதி" -- சில காட்சிகள்! -- 4
"'முறையே' என முடித்தான் முந்தைய பாடலை!
அதையே தொடங்கி அடுத்த பாடல் வைக்கிறான்!
எதுதான் முறையாம்?!!"


ஏ! முழு மூட நெஞ்சே! நீதான் முறையாக நடக்கணும்~!
அப்படி நீ நடந்தால் கொஞ்சம் கூட வாட வேண்டாம்!
கறையுண்ட கண்டன் மகன், வேத காரணன், சக்திமகன்
இவரைப் பணிந்தால் அவருக்கெல்லாம் துணையாக அவன் வருவான்!

என்ன மாதிரியான துணை?

உயிரின் உள்ளே இருந்து சுடர் விடுக்கும் மணி இவன்!
எனதுயிர் மன்னவன்!
என் வாழ்வினுக்கு ஒரு அணி!
என் உள்ளத்தின் ஆரமுது!
எனது அற்புதம்!
கடைவானில் எழுகின்ற இந்தச் சுடருக்கு இணையே கிடையாது
என்கிறான் பாரதி!

சரி! சுடரை எவ்வாறு போற்றுவது?

கணத் தேவர் துரையே போற்றி!
எனக்கு ஒரு இடரும் இன்றிக் காத்திடுவாய்!
உன்னிடம் எத்தனையோ தடவை சொல்லியாச்சு!
உனது ஒரு சுடராலேதான்,
இந்த அண்டவெளியிலே பலகோடி, கோடி, கோடி, பலகோடி அண்டங்கள் நீ படைத்தாய்!
நீ வாழ்க இறையவனே!
என!

வாழ்த்திய இறைவனை எப்படிப் போற்றுவது? என்னதான் வேண்டுவது?


தாயாய், தந்தையாய், சக்தியும், சிவனுமாய், இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகி,
உள்ளொளியாகி, உலகெலாம் திகழும் பரம் பொருளா இவன்?
ஒருவேளை அன்று எனைக் காக்க வா என முதலை அலறியபோது உடனே எழுந்துவந்த ஆதிமூலமா இவன்?
தேவதேவா! சிவனே! கண்ணா! வேலா! சாத்தா! விநாயகா! மாடா! இருளா! சூரியா! சந்திரா!
சக்தியே! வாணீ! காளீ! மாமகளே!
ஆணாய், பெண்ணாய் அலியாய், உள்ளது யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே!
வேதச்சுடரே! மெய்யாகிய கடவுளே!

எனப் போற்றி, வேண்டுகிறான் !

இவ்வளவு பேரையும் கூப்பிட்டு என்னதான் வேண்டுமாம் இவனுக்கு?

'அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்!
நோவு வேண்டேன்! அச்சம் வேண்டேன்! உடைமை வேண்டேன்!'


சரிப்பா! என்ன வேண்டும் உனக்கு?

நூறாண்டு வேண்டும்!
அமைதி வேண்டும்!
உன் துணை வேண்டும்!

இது போதுமா?

போதாதாம்!


வேண்டாது அனைத்தையும் நீக்கி, வேண்டியது அனைத்தையும் அருள்வதும் உன் கடனே! என்கிறான்!

ஏன் தெரியுமா?

செய்கின்ற கடமைதான் எது கரிமுகனே?
எங்களுக்கென்று என்ன விட்டு வைத்திருக்கிறாய்?
இந்த வையத்திடம் அருள் செய்து இந்த உலகைப் படைத்து, எங்களையும் படைத்து விட்டாய்!
அது மட்டுமா?
எங்களுக்கென உடமைகளும், இன்பங்களும் நீயே தந்தாய்!
உனக்கு என்ன கைம்மாறு புரிவோம் என்று இயம்பு'
எனக் கதறுகிறான்!

அப்படி இயம்பினால் என்ன ஆகும்?
அதையும் அவனே சொல்கிறான்!

உன்னைப் புகழ்ந்து 'இயம்பினால்' அது புகழ் மறை ஆகும்.
எடுத்த வினை பயன்படும்.
தேவர்கள் எலாரும் இருபொழுதும்... ஆம்!.. பகலுக்கென சிலர்; இரவுக்கென சிலர்!..
இவர்கள் அனைவரும் வந்து அருள் செய்வர்.
கணபதி புகழ் பாடி அவன் அடி பணிந்தால் எல்லா மேன்மைகளும் வந்து எமை அடையும்
என இயம்புகிறான் பாரதி!

இப்படி வருகின்ற மேன்மை எத்தகையது?

அடுத்த பதிவில்!

Read more...

Wednesday, April 23, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 3

"பாரதி" -- சில காட்சிகள்! -- 3


2-ம் பதிவு இங்கே


"இத்தனை எளிய வழியிருந்தும், எதனால் இவர்களால் இதைச் செய்ய முடியவில்லை?

யார் இதற்குக் காரணமாம்? எது தடுக்கிறது இவர்களை?

அதையும் சொல்கிறான் பாரதி!

அடுத்த பதிவில்!!"


ஏன் எழுதினேன் இதை என யோசித்தேன்!

நான் யார்? எனச் சிந்தித்தேன்!

'சொல்லத் தெரியவில்லை~!
சூழ்ச்சியே செய்பவனாயிருக்கிறேன்!'

எனக்கு யார் ஆதாரம்?

பாரதியைப் புரட்டினேன்!


'சொல்லுக்கரியனாய் சூழ்ச்சிக்கரியனாய்
பல்லுறுவாகிப் படர்ந்த வான்பொருளை,
உள்ளுயிராகி உலகம் காக்கும் சக்தியே தானாம்
தனிச் சுடர்ப் பொருளை
சக்திகுமாரனை, சந்திரமௌளியைப் பணிந்து
அவன் உருவிலே பாவனை நாட்டி,
ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று,
யார்க்கும் எளியவனாய்,
யார்க்கும் வலியவனாய்,
யார்க்கும் அன்பனாய்,
யார்க்கும் இனியனாய்,
வாழ்த்திட விரும்பினேன்!
மனமே!
நீ இதை ஆழ்ந்து கருதி, ஆய்ந்து ஆய்ந்து பலமுறை சூழ்ந்து, தெளிந்து,
பின், சூழ்ந்தார்க்கேல்லாம் தேறித் தேறி,
நான் சித்தி பெற்றிடவே,
நின்னால் இயன்ற துணை புரிவாயேல்,
பொன்னால் உனக்கு ஒரு கோயில் புனைவேன்!
மனமே!
எனை நீ வாழ்த்திடுவாய்!
வீணே உழலுதல் வேண்டா!
சக்தி குமாரன் சரண் புகழ்வாயே!'

என்னை இப்படிப் பலவாறாக மாற்றி அலைக்கழிப்பது என் மனமே என்றுணர்ந்தேன்!

இந்த மனத்தை எப்படி வசப்படுத்துவது!??

மற்றவர் சொல்லுகின்ற பொய்யையெல்லாம் உண்மை என நம்பி, அலைகின்ற இந்தப் பொல்லா மனத்தை எப்படி அடக்குவது?

'வல்லப கணபதி பொற்கழலை தினந்தோறும் புகழ்ந்து' பாடினால் அவன் ஒரு வரம் தருவானாம்!

என்ன வரம்?

'கவலையும், வஞ்சனையும், கரவும், புலைமை விருப்பமும், ஐயமும் காய்ந்து எறிந்து,
என் தலை மீது என்னுடைய கணபதி தாள்மலரை சேர்த்து வானவர்க்கு ஈடான தரத்தினை எமக்கு அவன் தருவான்!'


என்பதே அந்த வரம்!

இந்த வரத்தை ஏற்று, அவன் பாதத்தை சார்ந்து நிற்க வேண்டும்!

அப்படி இருந்தால்.......?

'நிழலினும், வெயிலினும், நேர்ந்த நற்றுணையாய்
தழலினும் புனலினும் அபாயம் தவிர்த்து
மண்னிலும் காற்றிலும் வானிலும்
எனக்குப் பகைமை ஒன்றின்றிப் பயம் தவிர்த்து ஆள்வான்!'

பிறகு??...

'உணர்விலே நிற்பான்!'

சரி..!!?

'ஓம் எனும் நிலையில் ஒளியாய்த் திகழ்வான்!'

அப்புறம்...?

'முக்திநிலைக்கு மூல வித்தாவான்!'

அடேடே! அவ்ளோதானா?!!

'சத்தெனத் தத்தெனச் சதுர்மறையாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்;
ஏழையர்க்கெல்லாம் இரங்கும் பிள்ளை;
வாழும் பிள்ளை; மணக்குளப் பிள்ளை;
வெள்ளாடை தரித்த விட்டுணு என்று செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழுது ஏத்திப் பணிவது முறையே!'

என்று முடிக்கிறான் பாரதி!

அத்தோடு விட்டானா?!!!!!!!!!

'முறையே' என முடித்தான் முந்தைய பாடலை!

அதையே தொடங்கி அடுத்த பாடல் வைக்கிறான்!

எதுதான் முறையாம்?!!

[இப்படித்தான் இதுவரை வந்த 17 பாடல்களிலும், கடைசி சொல்லை வைத்தே அடுத்த பாடலைத் தொடங்கினான், இனியும் அடுத்து வரும் 23 பாடல்களிலும் செய்கிறான் என்பதை இந்த இடத்தில் சொல்வது பொருத்தமானது!]

[தொடரும்]

Read more...

Sunday, April 20, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 2

"பாரதி" -- சில காட்சிகள்! -- 2


முந்தைய பதிவு


..... "எனவேதான் பாரதி இப்படி ஒரு கோரிக்கை வைக்கிறான்!
அப்படி என்னதான் பாரதி செய்ய நினைக்கிறான்?
அடுத்த பதிவில் பார்க்கலாம்!"....


இப்படிச் சொன்னதற்கே படிப்பவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டதை உணர்கிறேன்!

இந்தப் பதிவு நான் மிகவும் மதிக்கும் ஒருவர் சொன்னதற்காக எழுதத் தொடங்கிய ஒன்று!

இதுவரை பாரதியைப் படித்தவர்க்கு இதில் புதிதாக நான் ஒன்றும் சொல்லைவிடப் போவதில்லை என நினைக்கிறேன்!

பாரதியைப் படிக்க எப்படித் துவங்கலாம், இவ்வளவு பெரிய கவிஞன் எனச் சொல்கிறார்களே, இவனை அணுக முடியுமா? என ஒரு பயத்துடன் இவனை இன்னமும் படிக்காமல் இருக்கும் ஒருவரையாவது இந்தப் பதிவுகள் ஈர்த்தால் அதையே ஒரு பெரிய வெற்றியாகக் கருதுவேன்!

இத்தொடரை வரவேற்றுப் பாராட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

சரி!

இப்போது, "அப்படி என்னதான் பாரதி செய்ய நினைக்கிறான்?" என்கிற கேள்விக்கு வருவோம்!

தனது அடுத்த பாடலிலேயே இதற்கான விடையைச் சொல்கிறான் பாரதி!

ஒரு நான்கு நிலைப்பாடுகளைச் சொல்கிறான்!

'கடமை என்றால் என்ன?'

'தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், இதையெல்லாம் தர வேண்டி, 'உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்' என ஒரு நான்கு நிலைகளைச் சொல்கிறான்!

இதில் என்ன புதுமை? எல்லாரும் சொல்வதுதானே என்கிறீர்களா?

இங்குதான் பாரதி தன்னை மற்றவரிடமிருந்து முன்னிலைப் படுத்திக் காட்டுகிறான்!

பொதுவாக இந்த முதல் மூன்றையும் சொல்ல வருபவர்கள், தங்களது மதக் கருத்தை முற்படுத்தி வைத்தே சொல்வார்கள்!

ஆனால், பாரதி......?

'விநாயகதேவனாய், வேலுடைக் குமரனாய், நாராயணனாய், நதிச்சடை முடியனாய், பிறநாட்டிருப்பொர் பெயர் கூறி, அல்லா! யெஹோவா! எனத் தொழுது அன்புறும் தேவரும் தானாய், திருமகள், பாரதி, உமை எனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல் இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும் கடமை எனப்படும்"
எனச் சொல்லிகின்ற பொதுநோக்கின் மூலம் தான் யார் என்பதைக் காட்டுகிறான் பாரதி!

இத்தோடு விட்டானா?

ஏன் இதைக் கேட்கிறேன் எனவும் சொல்கிறான்!
'மணக்குள விநாயகா! வான் மறைத் தலைவா!
தனைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்!
அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி, நின் இருதாள்
பணிவதே தொழில் எனக் கொண்டு
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே!'


தன்னைக் கட்டுதல் என்கிற சுய ஒழுக்கம் ஒன்றே இங்கு நாமெல்லாம் செய்ய வேண்டிய முதல் செயல் என்னும் பாரதியின் வேண்டலை ஒரு சில நொடிகள் தனியே அமர்ந்து சிந்தியுங்கள்!

'பழியற்று வாழ்ந்து, ஒளி பெற்று, கல்வி பல தேர்ந்து, கடமை எல்லாம் நன்காற்றி, தொல்வினைக் கட்டுகள் எல்லாம் துறக்க வேண்டுமெனில்'
...... தன்னைக் கட்ட வேண்டும்!

அப்படிக் கட்டுபவரால் என்ன செய்ய இயலும்!?? அப்படிக் கட்டுபவர்கள்தாம் சிறந்தவரா?

மேலே சொன்னது போல எல்லாம் துறந்தவர்கள் திறமை பெரிது என ஒப்புக் கொள்கிறான் பாரதி!

ஆனால்,

'இங்கு குறைந்தாரைக் காத்து,
எளியார்க்கு உணவு ஈந்து,
குலமகளும், அறம் தாங்கு மக்களும் வாழ்க என
ஒருவன் வாழ்கின்ற தவ வாழ்க்கை,
அதனினும் பெரிது!'
என்கிறான்!

சரி! இப்படி என்னால் செய்ய முடியவில்லையே என வருந்துபவர்க்கும் ஒரு வழியை உடனே சொல்கிறான்!

'தத்துவம் ஆகியதோர் பிரணவமே! நீ அஞ்சேல் எனச் சொல்லுதியே!'
என வேண்டினால் போதுமாம்!

ஆம்! 'பயப்படாதே!' என "ஓம்" என்கின்ற பிரணவத்தின் மூலப் பொருளான விநாயகன் சொன்னால் போதுமாம்!

இத்தனை எளிய வழியிருந்தும், எதனால் இவர்களால் இதைச் செய்ய முடியவில்லை?

யார் இதற்குக் காரணமாம்? எது தடுக்கிறது இவர்களை?

அதையும் சொல்கிறான் பாரதி!

அடுத்த பதிவில்!!

Read more...

Wednesday, April 16, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 1

"பாரதி" -- சில காட்சிகள்!



பாரதி கவிதைகள் -- நான் அடிக்கடி படிப்பது!

அவரது பக்திக் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொகுதி!

மனதுக்கு அமைதி வேண்டுமெனில் இதனைப் படியுங்கள்!

வள்ளுவம் மாதிரி, இதனையும் அவ்வப்போது எழுதிவர எண்ணம்!

பராசக்தி அருளட்டும்!

இதோ! முதல் கருத்து!

"விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் -- நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்"


நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ எனப் பதறுகிறான் பாரதி!

ஒவ்வொரு மனிதனும் தன்னை உணர்ந்தவன்/ள் தான்!

தன்னால் என்ன முடியும் எனத் தெரிந்த ஒரே மனிதன் அவன்/ள் தான்!

எங்கே தவறு நிகழ்கிறது/

ஏன் அவனா/ளால் தனக்கு விதித்ததை, தன்னல் முடிந்ததைச் செய்ய இயலாமல் போகிறது?

தன்னிலை குலைந்து, தன்னை மறந்து இவன் தடுமாறிப் போவது ஏன்?

பாரதி யோசிக்கிறான்.

முழுமுதற் கடவுளை யாசிக்கிறான்!

கவிதை பிறக்கிறது!

"நீயே சரணம் நினதருளே சரணம் சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்து உனை நாடி வந்தேன்!
வாயே திறவாத மௌனத்து இருந்து உன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசும் தமிழ்க்கவி செய்குவனே."

எனச் சூளுரைக்கிறான்!

'நான் செய்த பிழையெல்லாம் போதும்! இனி நீயே சரணம்! இனி நான் செய்யப்போவதெல்லாம் நின்னைப் போற்றி உன் மலர் அடிகளைப் போற்றி தமிழில் கவி செய்து பாடுதல் ஒன்றே இனி நான் மௌனத்தால் செய்யப் போவது!' என்கிறான்!

இதற்கெல்லாம் காப்பாக இனி எநீயே இருந்து காக்க வேண்டும் எனவும் அவனையே இறைஞ்சுகிறான்!

யாரை?

"கற்பக விநாயகனை!"



அனைத்துச் செயல்களுக்கும் முதல்வனாய் இருக்கின்ற கணபதியைத் தான் போற்றுகின்றார் பாரதி!

இவனைப் பணிந்தால் என்னவெல்லாம் நிகழுமாம்!?

சொல்கிறான்!

"உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்;
கட்செவி தன்னைக் கையில் எடுக்கலாம்;
விடத்தையும், நோவையும், வெம்பகை அதனையும்
துச்சம் என்று எண்ணித் துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இஃது உணர்வீரே!"


வேறென்ன வேண்டுமைய்யா உமக்கு?

இத்தனையும் இந்த கற்பக விநாயகனைப் போற்றிப் பாடினால் கிட்டும் என்கிறான் பாரதி!

சரி! இதெல்லாம் எதற்கு இவனுக்கு வேண்டுமாம்?..... அதையும் சொல்கிறான் உடனே!

'உன் காலை நான் ஏன் பிடிக்கிறேன் தெரியுமா..ஓய் கணபதி! அந்தத் திரு மலர்ப் பாதங்களில் என் கண்ணை ஒற்றி, பலவித நூல்களை நித்தமும் நான் படைத்து, ஒரு நொடி கூட என் செயலைத் தவறாது செய்து வந்து, என் மனத்தினை ஒருமைப் படுத்த நீ அருள வேண்டும் என்பதினாலேதான்'

கணபதி சிரிக்கிறான்!
'உனக்கு வேண்டிய வரங்களைக் கேளடா பாரதி!'

"மனத்தில் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்!
கனக்கும் செல்வம்; நூறு வயது
இவையும் நீ தரக் கடவாயே!"


இதைத்தான் பாரதி உடனே வேண்டுகிறான்!

இப்படி ஏன் வேண்டுகிறான் என சிந்திக்க வேண்டும்!

அதிலும் அந்தக் கடைசி இரு வரிகள்!

"கனக்கும் செல்வம்; நூறு வயது
இவையும் நீ தரக் கடவாயே!"


இது கொஞ்சம் உதைக்கிறது!

பணத்தாசையா! உயிர் வாழும் ஆசையா!

இல்லை! இல்லவே இல்லை!

எந்த ஒரு செயலையும் செய்ய இவை இரண்டும் தேவைப்படுகிறது என உணர்ந்தே, வெட்கத்தை விட்டு பாரதி இப்படி கேட்கிறான்!

நான் செய்யும் நற்செயலகள் மற்றவரைச் சென்றடைய வேண்டுமெனின், என்னிடம் செல்வம் இருக்க வேண்டும்!
இதென்னவோ தற்செயலாக நான் செய்ததில்லை! இதுவே என் நிரந்தரமான செயல்பாடு என மற்றவர் புரிந்து கொள்ள நான் இதனைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்!

அதற்கு என்னிடம் பணம் இருக்க வேண்டும்! இதை செய்யும் காலம்.... ஆயுள் இருக்க வேண்டும்!

எனவேதான் பாரதி இப்படி ஒரு கோரிக்கை வைக்கிறான்!

அப்படி என்னதான் பாரதி செய்ய நினைக்கிறான்?

அடுத்த பதிவில் பார்க்கலாம்!

Read more...

Monday, April 14, 2008

"இன்று ராம நவமி!"

"இன்று ராம நவமி! "


ஏதோ ஒரு உந்தலில் ஜெயகாந்தனின் 'சுந்தர காண்டம்' நாவலைப் படித்தேன்!
முதல் அத்தியாயம் படித்தவுடன் மேலே படிக்க முடியவில்லை!
என் மனதில் தோன்றி எண்ணங்களை இங்கு வடித்திருக்கிறேன்!

எல்லாம் வல்லவனே! என் மனம் ஆள்பவனே!
ரகுகுல நாயகனே! ராஜீவ நயனனே!

ராவணனை அழிக்கவே நீயிங்கு அவதரித்தாய்!
அப்படியே இதிகாசம் இங்கெமக்கு உரைக்கிறது!

ஆனாலும் நானிதனை அடியோடும் நம்பவில்லை!
நீ பிறந்த காரணத்தை நானுரைப்பேன்! நீ கேள்!

எம்முள் எத்தனை ராவணன் இங்கிருக்கின்றார்!
தம்மில் புரியாது தவறுகளைச் செய்கின்றார்!!

எத்தனை சீதைகள் இங்குழல்கின்றார்!
அவர்தம் கதறல்கள் காதில் விழவில்லையோ!

பாரதப் பெண்களிடை எந்த முகம் பார்க்கின்றாய்?
பரிதவிக்கும் பெண்களிடை நீ பார்க்கும் சீதை எங்கிருக்கிறாள்?

துயரமும் அச்சமும் கண்ணீரும் அவமானமும்
கண்களிலே தேக்கியிங்கு வானத்தை நோக்கியபடி

அவலப் பெருமூச்செறியும் கோடானுகோடி
பாரதப் பெண்களிடையில் நீ தேடும் சீதை

எங்கிருக்கின்றாள் என உனக்கு
இப்போதேனும் தெரிகிறதோ ஓ ராமா!

தாயின்றித் தந்தையின்றி
உடன்பிறப்பாய் ஒருவருமே இங்கின்றி

உற்றார் உறவினருமே எவருமே இங்கின்றி
ஜாதியின்றி மதமின்றி குலமின்றிக் கோத்திரமுமின்றி

நாடின்றி மொழியின்றி துன்பமொன்றே தனதென்று
தனதாக்கிக் கொண்டிட்ட பலகோடி மக்களிடை

எவரையிங்கு சீதையென்று நீயிங்கு தேடிடவே
பூவுலகில் அவதரிக்க உளம் கொண்டாய் சொல் ராமா!

உணர்வின்றி ஒளியின்றி ஒருத்தருமே துணையின்றி
புணர்வொன்றே குறியாகி புரள்கின்ற மாந்தரிடை

தனக்கென்று பலமின்றி நீ வருவாய் எமைக் காப்பாய்
என நம்பி உனக்காக நிதமிங்கு வாழ்கின்ற

கணக்கில்லா சீதைகளைக் கரையேற்ற மன்ம் கொண்டு
நீ வரும் நாள் எப்போது எனக்கதனைச் சொல் ராமா!

என் மகளே நீயின்று! என் சொல்லைக் கேட்டிடுவாய்
நானுனக்கு காட்டுகின்ற மணமகனை மணமுடிப்பாய்

என்றிங்கு ஒரு ராவணன் எனையனுப்பி மனம் மகிழ்ந்தான்!
தனக்கென்றே வந்ததென இன்னொருவன் எனை முடித்தான்!

தன்னடிமை என்றெனவே எனையிங்கு சிறை பிடித்து
தனக்கெனவே கொண்டிட்டு எனையடிமை செய்திட்டான்!

என்னுடலை மாசு பண்ணி என் மானம் கெடுத்திடவே
அவனுக்கு அடிமனத்தில் அச்சமொன்றும் இருக்கவில்லை!

அவனுரிமை என்றெண்ணி என் உள்ளம் அறியாமல்
எனையள்ளிக் கொண்டிட்டான் என் கற்பைச் சிதைத்திட்டான்!

அபலையாய், அனாதையாய், ஆரும் கேளா கொத்தடிமையாய்
வாழ்நாள் முழுவதிலும் ஆயுள் கைதியாய் என்னையவன் சிறை செய்தான்!

கையிலொரு குழந்தையுமாய், கந்தலாடை பற்றியபடி இன்னும் சில குழந்தைகளுமாய்
எனை மீட்க என்று நீ வருவாயோ எனவெண்ணி எதிர்பார்க்கும் சீதைகட்கு

இதோவிங்கு நானிருக்கேன் எனச் சொல்லி வில்லெடுத்து
விடிவளிக்க என்று நீ வருவாயோ எனக்கு சொல்லு என் ராமா!

நாள்தோறும் ஏதோ ஒரு ராவணனின் கைப்பாவை
நான் ஆகிப் போனதினை நீ உணர மாட்டாமல்

ஆண்டுதோறும் பிறக்கின்றாய் அனைவரும் கொண்டாடுகின்றார்!
எனக்கதனில் மறுப்பில்லை என்றாலும் எனக்கின்னும் விடிவில்லை!

இத்தனைக்கும் நடுவினிலே நானிங்கு சுடர்கின்றேன்
எனைக்காத்து உனையெண்ணி என் நாளை வளர்க்கின்றேன்!

தாய் சுமந்து பெறும் வேளை எனையழிக்க சில பேர்கள்!
பிறந்திட்ட பொழுதினிலும் எத்தனையோ சோதனைகள்!

பை சுமந்து பள்ளிக்குச் சென்றிங்கு கற்றாலும்
பெண்ணென்ற பெயர் சொல்லி எனக்கிருக்கும் பல தடைகள்!

அத்தனையும் தாண்டிவந்து ஆளாகி நின்றாலும்
எனையடைந்து எனையழிக்க எத்தனையோ காமுகர்கள்!

இவர்களுக்கு விடை சொல்லி எனைக் காத்து தற்பேணி
நானிங்கு நின்றாலோ எனை வெல்ல பல பேர்கள்!

எல்லாரும் ராவணர்கள்! ராமனே நீயெங்கே!
எனை விடுத்து எமைக் காக்க வருகின்ற வேளை எப்போ!

நீ பிறக்கும் நாளின்றில் உனைக் கேட்கும் ஒரு வரமும்
நானிங்கு உரைப்பேன் கேள்! எனக்காக வந்துவிடு!

படுகின்ற துயர் தீர்த்து பரிசுத்தம் ஆக்கிவிடு!
பட்டதினிப்போதுமைய்யா! படமுடியாதினித் துயரம்!

இனிமேலும் பிறப்பதென்றால் எமக்காகப் பிறந்துவிடு!
அது முடியாதெனிலோ பிறப்பதை நீ நிறுத்திவிடு!


அனைவர்க்கும் ராமநவமி வாழ்த்துகள்!

Read more...

Saturday, April 12, 2008

"மீண்டும் மீண்டும் பிறப்பு!"

"மீண்டும் மீண்டும் பிறப்பு"!

'என்னங்க! எங்கே போயிட்டு வரீங்க? புது வருஷமும் அதுவுமா!' என்று என் மனைவி கேட்டார்!
ஒன்றும் பேசாமல் என் பையிலிருந்து ஒரு இலையை எடுத்து அவரிடம் கொடுத்தேன்!
'என்ன இது?' என்றார்!
நான் சொல்லலானேன்!
ஆற்றோரம் அமர்ந்து கால்களை ஓடும் நீரில் நனைத்தபடி அமர்ந்திருந்தேன்!

சலசலவென ஓடிய குளர்ந்த நீர் என் பாதங்களை வருடி, சிரித்தபடியே சென்றது!

தெளிந்த நீரின் உள்ளே மெல்ல நகர்ந்து கொண்டு தங்களைச் சமன்படுத்திக் கொண்டிருந்த கூழாங்கற்களை காலால் சற்று கலைத்தேன்!

உலர்ந்த சருகொன்று மிதந்தபடியே வந்து என் கால்களில் தேங்கி நின்றது!

'எங்கிருந்து வருகிறாய் பெண்ணே!' எனக் கேட்டேன்!

"நான் ஒரு பெண்ணென்பதை எப்படி உணர்ந்தாய்?" என ஆச்சரியத்துடன் வினவியது சருகு!

"தவறாக நினைக்காதே! என் பாதங்களை வருடியபடி நீ வந்து நின்றதினால் உடனே அப்படி ஒரு எண்ணம் என் மனதில் பட்டது! அவ்வளவுதான்!" சிரித்தபடியே சொன்னேன்!

"ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் தன்னம்பிக்கை!" சருகும் சிரித்தது!

'அப்பாடா! தவறாக நினைக்கவில்லை இவள்! இவளுக்கும் என்னைப் போலவே இயல்பான நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது!' என சற்று சமாதானமானேன்!

சருகைக் கையில் எடுத்தேன்!

ஒட்டியிருந்த ஈரத்தை என் சட்டையில் துடைத்து நீவி விட்டேன்!

சருகு நிமிர்ந்தது!

தன் அழகை மீண்டும் பெற்றது போல் ......நிமிர்ந்தது!

"என் கேள்விக்கு இன்னமும் நீ பதில் சொல்லவில்லையே! எங்கிருந்து வருகிறாய்!" என மீண்டும் கேட்டேன்!

"என் கதை சொல்கிறேன் கேள்!

சென்ற வசந்தத்தில் ஓர் நாள்!
நான் உயிர் துளிர்த்தேன் ஒரு மரத்தில்!
மெல்லிய தளிராக என்னை உயிர்த்தாள் என் அன்னை!
சிவப்பும் பழுப்பும் கலந்த அந்த நிறத்தில் நீ என்னைப் பார்த்திருக்க வேண்டும்!
எனக்கே என் அழகைக் கண்டு மிகவும் பொறாமையாக இருந்தது!
என்னுடன் கூடவே இன்னொரு சகோதரி!
இரட்டை இலையாகப் பிறந்தோம்!
வேண்டிய உணவைத் தந்து வேராக என் தந்தையும், அள்ளி அரவணைத்து எப்படி இருக்க வேண்டுமென என தாயும் எம்மை வளர்த்தனர்!
வசந்தம் முடியும் நேரம் என் நிறம் பச்சையாக மாறியது!
என்னில் சில மாற்றங்களை நான் உணரத் தொடங்கினேன்!
பூக்கள் சில என்னுள் பிறந்து என்னிலிருந்து மலர்ந்தன!
இப்போது இன்னமும் அழகானேன்!
என் பருவம் அனைவரையும் கவர்வதை உணர்ந்தேன்!
வண்டுகள் என்னைச் சுற்றி மொய்த்து பூவை நோட்டமிடுவதைக் கண்டு ஒரு பெருமை எனக்குள் பிறந்தது!
மகரந்தத் தேனைக் குடிக்க வந்த வண்டுகளை விரட்ட முடியாமல், பூக்களை மெல்ல அணைத்து மறைத்தேன்!
அப்படியும் ஒரு வண்டின் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை!
என்னருகில் வந்து ஆசை வார்த்தைகள் பேசியது!
'நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய்! எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது! நான் உன் பூவின் மீது அமரலாமா?'
நான் அதன் ஆசை வார்த்தைகளில் மயங்கினேன்!
என்னைத் திறந்தேன்!
பூவின் மீது அமர்ந்த வண்டு தேனை அள்ளிக் குடித்தது!
கூடவே ஏதோ ஒன்றையும் என்னுள் விட்டுச் சென்றது!
நான் சூலானேன்!
பூ மலர்ந்ந்து காயாகி, காய் கனியாயிற்று!
எவனோ ஒருவன் வந்து கனியைத் தட்டிச் சென்றான்!
என் மனம் துடித்தது!
என் கனியை என்னிடம் கொடு! எனக் கதறினேன்!
என்னை லட்சியமே செய்யாமல் அவன் சென்று விட்டான்!
நான் வாடினேன்!
என் அழகு குலைந்தது!
'என்னம்மா இது?' என என் தாயை வினவினேன்!

'இதுதானடி காலம் செய்யும் கோலம்!
துளிர்ப்பதும், பருவம் அடைவதும், மல்ர்வதும், சூலுறுவதும், காயாகிக் கனிந்து பின் குலைவதும் வழிவழி
நிகழும் செயல்கள்! இப்படி எத்தனையோ என் மக்கள் என்னை விட்டுச் சென்று விட்டனர்!
இதோ! இன்னும் சில காலத்தில் நீயும் செல்வாய்! உன் பணி முடிந்தது! என் பணி இன்னமும் தொடரும்!
பழையன கழிவதும், புதியன புகுவதும் வழிவழி நிகழும் செயல்கள்!' என்றாள் என் தாய்!

காற்று ஒன்று வேகமாக வீசியது!
என்னுடன் வா! இனி உனக்கு இங்கு வேலையில்லை! என்றது!

இல்லை! நான் வரமாட்டேன்! என்னிடம் இன்னும் இளமை இருக்கிறது! என் மரத்தை விட்டு வர மாட்டேன்!'
இறுக என் தாயைப் பிடித்துக் கொண்டேன்!
காற்று சிரித்தபடியே, என்னுடன் இருந்த சிலரை அழைத்துக் கொண்டு சென்றது!

அன்பு மிகுந்து என் தாயை அணைத்தேன்!
இனம் புரியாத ஒரு பரிவுடன் மரம் என்னை மெல்ல அசைத்தது!

குளிர்காலம் வந்தது!
பனியின் இறுக்கத்தில் என் வலு தளர்வதை உணர்ந்தேன்!
எனினும் அன்னையை விடவில்லை!
பனி உதிர்ந்து, மரம் மீண்டும் சிலிர்த்தது!
ஏதோ ஒன்று என்னிலிருந்து விலகுவதை உணர்ந்தேன்!

'எனக்கு வழி விடு அக்கா! நான் வர வேண்டும் வெளியே!' உள்ளிருந்து ஒரு குரல் என்னைக் கெஞ்சியது!
'உனது வேலை முடிந்து போனது! இனி வருவது என் காலம்! என்னைத் தடுக்க உன்னால் முடியாது! நீயாக நகர்ந்தால் நலம்!' என்றது அந்தக் குரல்!

'என்னம்மா இதெல்லாம்! என்றேன் நான்!

'அதுதான் முன்னமேயே சொன்னேனே! பழையன கழிதலும், புதியன புகுதலும் வழிவழி நிகழும் செயல்கள்! நீ செல்லும் காலம் வந்து விட்டது! உன்னைப் பிரிதல் எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது! இருந்தாலும், இனி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது! நீ சென்றால் நான் மீண்டும் துளிர்ப்பேன்! இதுதான் பருவங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்! வசந்தம் ஒவ்வொரு முறையும் வரும்! உயிர்கள் மீண்டும் மலரும்! நீ முழுமையானாய்! மகிழ்வுடன் செல்! வசந்தத்தைப் போற்று!'

நான் தெளிவானேன்!
சுற்றி இருந்த அனைவரையும் அன்புடன் பார்த்துக் கையசைத்தேன்!
என்னை விடுத்தேன்!

மீண்டும் காற்று என்னை ஆதரவாகத் தாங்கியது!
'உனக்காகத்தான் காத்திருந்தேன்! நீ ஒருநாள் வருவாய் எனத் தெரியும்!' எனச் சொல்லி என்னை வருடியது!
அன்புடன் என்னை இந்த ஆற்றில் விட்டது!"

சருகு தன் கதையைச் சொல்லி முடித்தது!
எனக்கும் ஏதோ புரிந்தது போல் இருந்தது!
அன்புடன் அந்தச் சருகை எடுத்து என் சட்டைப்பைக்குள் பத்திரப் படுத்தினேன்!

மெல்ல எழுந்து நடக்கலானேன்!
வசந்தம் தன் விதைகளைத் தூவி தன் செயலை எங்கும் காட்டிக் கொண்டிருந்தது!
எதிரில் தெரிந்த மரத்தில் இரு துளிர் இலைகள் பழுப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில், என்னைப் பார்த்துக் கண்ணடித்தன!
அவைகளைப் பார்த்து உரக்கக் கத்தினேன்!

"வசந்தமே வாழ்க!"

புனரபி ஜனனம் புனரபி மரணம்
பிறப்பதும் இறப்பதும் வழிவழிவழி நிகழும்!

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்!

சித்திரையே வருக~!
சித்திரமாய் வருக~!
சிறப்பெல்லாம் தருக~!
சிறுமையெல்லாம் ஒழிக~!
சிந்தனைகள் மலர்க~!
சினமெலாம் தவிர்க~!
சிலரிங்கு செல்வதும்
சிலரிங்கு வருவதும்
சிவமெனும் ஒருவின்
சித்தம் என்பதை
சிந்தையில் கொண்டு
சிவனைப் பணிக~!

Read more...

Thursday, April 10, 2008

"கொலையும் செய்வாள் பத்தினி??" [4]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [4]

"தான் குற்றவாளி இல்லை; இது தற்செயலாக நடந்த ஒரு விபத்து மட்டுமே" என க்ளாரா வாதிடுகிறார்.

நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு!

நல்ல வேளையாக, வண்டி நிறுத்துமிடத்தில் இருந்த தானியங்கிப் பதிவு இயந்திரத்தின் மூலம் பதிசெய்யப்பட்ட ஒளிக்காட்சி கிடைக்கிறது!

வேண்டுமென்றே வந்து மோதியதும், பின்னர் 3-4 முறை சுற்றிச் சுற்றி வந்ததும், பின், இறங்கி வந்து பேசியதும் பதிவாகி இருக்கிறது.

இதைக் காட்டி, அரசு தரப்பில் வாதம்.

வெளியே, க்ளாராவுக்கு பெண்ணிய இயக்கங்களின் ஆதரவு வலுக்கிறது!

"க்ளாரா குற்றவாளி அல்ல!" என்ற பலகைகளைத் தாங்கியபடி ஊர்வலம்!

நீதிமன்றத்தில், லோரா கூண்டிலேறி, கொலையுறுவதற்கு முன், சில வாரங்களாகவே டேவிட் தன்னைச் சந்திக்க வில்லை என்றும், ஹில்டன் ஹோட்டலில் இனி இந்த உறவு நமக்குள் தொடர முடியாது எனச் சொல்லி விடை பெற்றதையும் கூறுகிறாள்!

இது போன்ற வலுவான ஆதாரங்களை வைத்து அரசு தரப்பில் ஒரு பெண் வக்கீல்.

"சந்தேகத்தின் உச்சத்தில், திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு இரக்கமற்ற கொலை என வாதிடுகிறார்.

3 வாரம் விசாரணை நடக்கிறது.

ஜூரர்கள் 4 மணி நேர விவாதத்திற்குப் பின், தங்கள் முடிவைத் தெரிவிக்கிறார்கள்.

"குற்றம் சாட்டப்பட்ட க்ளாரா, அப்படியே ஒரு குற்றவாளிதான்"[Guity as charged] என்று!

தலை கவிழ்த்து, நிலை குலைந்து அழுகிறாள் க்ளாரா!

அவளது வக்கீல் அவளைத் தேற்றுகிறார்!

"இன்னமும் ஒன்றும் ஆகவில்லை. நீ டேவிட்டின் மேல் காரை ஏற்றிக் கொன்றது உண்மையே! அதைத்தான் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
ஆனால், இதற்கு மேல், இன்னொன்று இருக்கிறது! அதுதான் உனக்கு விதிக்கப்போகும் தண்டனை!
இன்னும் நம்பிக்கை இருக்கிறது!"

ஆம்!

க்ளாரா கணவன் மேல் கொண்ட ஒரு ஆசை கலந்த ஆத்திரத்தில் மட்டுமே [Passion] இதைச் செய்தாள் என்றால், ஒரு எச்சரிக்கையுடன் அவள் விடுவிக்கப் படலாம்!

அல்லது,
அவள் மனநிலை குன்றியவர் என நிரூபிக்கப் பட்டாலும் கூட!
ஆனால், இதற்கு இவள் முன்னமேயே ஒரு மனநல நோயாளியாக இருந்தாள் என்பது நிரூபிக்கப் பட வேண்டும்!

க்ளாராவுக்கு அப்படி எந்தவொரு கடந்தகால சாட்சியங்கள் இல்லை!
படிப்பில் சுட்டி!
அழகிலும், புத்திசாலித்தனத்திலும் கெட்டி!
எனவே இது சாத்தியமில்லை!

இதெல்லாம் முடியாவிட்டால், குறைந்தது 20 ஆண்டு கடுங்காவல் நிச்சயம்!

இந்த நிலையில்,....,
க்ளாரா தரப்பில், டேவிட்டின் பெற்றோர்கள் தங்கள் பேரக்குழந்தைகளுக்கு ஒரு தாயாவது மிஞ்சட்டும் என மீண்டும் முறையிடுகிறார்கள்.

அரசு தரப்பு இதற்கும் ஒரு பதிலடி வைத்திருக்கிறது!
லிண்டா கூண்டிலேறி, தனது தாய், டேவிட் மேல் காரை ஏற்றும் முன் சொன்ன கடைசிச் சொற்களைச் சொல்கிறாள்!
கோர்ட் அதிர்கிறது!

"இப்போ நான் அவனை இந்தக் காரை ஏத்திக் கொல்லப் போறேன்!"

க்ளாரா தலை குனிந்து அழுகிறாள்.

இறுதியாக,

க்ளாராவின் வக்கீல் தனது வாதங்களை வைக்கிறார்!

'க்ளாரா ஒரு உன்னதமான பெண்!
தன் வாழ்க்கை சிறக்க வேண்டுமன விரும்பியவள்!
தன் கண் முன்னேயே அது செழித்ததையும், சிதைந்ததையும் பார்த்தவள்!
கை கோர்த்து இருவரும் வந்த ஒரு காட்சியைப் பார்த்த அவளால் அதைத் தாங்க முடியவில்லை.
ஆத்திரத்தில், தன் கணவன் மீது கொண்ட ஆசையில் செய்யப்பட்ட கொலை இது எனக் கருதி கருணையுடன் அணுக வேண்டுகிறேன்!'

அரசு தரப்பு பெண்வக்கீல் தனது வாதத்தைத் தொடர்கிறார்!

'க்ளாரா ஒரு உன்னதமான பெண்!
தன் வாழ்க்கை சிறக்க வேண்டுமென விரும்பியவள்!
தன் கண் முன்னேயே அது செழித்ததையும், சிதைந்ததையும் பார்த்தவள்!
இப்போது ஒரு பெண்ணாக, தாயாக அவள் என்ன செய்திருக்க வேண்டும்?
அவள் முன் பலவித வாய்ப்புகள் இருந்தன!
கணவனை திருந்துகிறேன் எனச் சொன்னதை நம்பி இருக்கலாம்!..... செய்யவில்லை!
தன் திருமணத்தை ஒரு ஆலோசகர் [Counsellor]மூலம் சரி செய்ய முனைந்திருக்கலாம்!.... செய்யவில்லை!
விவாகரத்து கோரியிருக்கலாம்!..... செய்யவில்லை!
தன் குழந்தைகளை வளர்க்கத் தானே சரியானவர் என நிரூபித்திருக்கலாம்!.... செய்யவில்லை!
லோராவுடன் பேசி இதைச் சுமுகமாகத் தீர்த்திருக்கலாம்!...... செய்யவில்லை!
இறுதியாக,
குறைந்த பட்சம், தன் குழந்தைகளுக்கு ஒரு தந்தையைத் தந்திருக்கலாம்!.... செய்யவில்லை!
அவள் செய்தது ஒன்றே ஒன்றுதான்!!
கொலை!
'காரை ஏத்திக் கொல்லப் போகிறேன்' எனத் தன் வளர்ப்பு மகளிடமே சொல்லிவிட்டு, அதைச் செய்தும் காட்டியவள்!
ஆம்!
க்ளாரா, தன்னை மட்டுமே எண்ணிய ஒரு சுயநலவாதி.
தான் பெற்ற குழந்தைகளைக் கூட நினைக்காத ஒரு கொடிய மனம் படைத்த பெண்தான்
இதோ இங்கே உங்கள் எதிரே நிற்கும் க்ளாரா!
அதிகபட்ச தண்டனையைத் தவிர, வேறெதற்கும் தகுதியில்லாத ஒரு பெண்!
தகுந்த தண்டனையை வழங்குங்கள்!'

அரசு தரப்பு பெண் வக்கீல் அமர்ந்தார்!

ஜூரர்களுக்கு இப்போது 2 மணி நேரமே தேவைப்பட்டது!

"அதிக பட்ச தண்டனையான 20 ஆண்டு கடுங்காவல்!"

12 ஆண்டுகளுக்குப் பின் பரோல் விசாரணைக்கு உட்பட முடியும்!

நீதி வழங்கப் பட்டது எனப் பலரும், இல்லை எனச் சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர்!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முதலில், க்ளாரா செய்ததைப் பற்றிய உங்கள் கருத்தையும்,
அடுத்து, நீங்கள் அந்த நிலையில் என்ன செய்திருப்பீர்கள் எனவும் சொல்லுங்களேன்!

[முற்றும்]


தொடர்ந்து படித்த அனைவருக்கும் என் நன்றி!

Read more...

Wednesday, April 09, 2008

"கொலையும் செய்வாள் பத்தினி??" [3]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [3]



மறுநாள் மாலை!

டேவிட் வீட்டில் இல்லை.

பதறுகிறாள் க்ளாரா!

தனது வளர்ப்பு மகள் லிண்டாவையும் கூட்டிக் கொண்டு தனது பென்ஸ் காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள்.

அந்தப் பகுதியில் இருக்கும் சில பெரிய உணவு விடுதிகளைத் தேடிச் செல்கிறாள்.

எங்கும் டேவிட்டின் காரைக் காணவில்லை!

பதட்டம் அதிகமாகிறது க்ளாராவுக்கு!

அப்போது, பக்கத்தில் இருந்த ஒரு பெரிய ஓட்டல் கண்ணில் பட்டது!

ஹில்டன் இன்டெர்நேஷனல்!

அவளுக்குத் திருமணம் டேவிட்டுக்கு நிகழ்ந்ததும் இதற்கு அடுத்த ஒரு இடத்தில்தான்!

ஏதோ ஒரு உணர்வு உந்த, அங்கு செல்கிறாள்.

வண்டிகளை நிறுத்தும் இடத்தில்,[Parking Lot] டேவிட்டின் கார் இருப்பதைப் பார்க்கிறாள்!

சற்றுத் தள்ளி தன் காரை நிறுத்திவிட்டு, தன் பெண் லிண்டாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே விரைகிறாள்!

வரவேற்பில் விசாரிக்கிறாள்.

டேவிட்-லோரா பெயரில் எவரும் பதிவில்லை என்ற தகவல் வருகிறது.

க்ளாராவுக்குத் திருப்தி இல்லை.

லிண்டாவைக் கூப்பிட்டு தன் தந்தைக்கு ஒரு தொலைபேசச் சொல்கிறாள்.

லிண்டாவும் அப்படியே செய்து, தனது தம்பிகளில் ஒருவனுக்கு உடல்நிலை சரியில்லை என ஒரு பொய்யைச் சொல்கிறாள்.

அடுத்த 3 நிமிடங்களில் ..........பதட்டத்துடன் 'தானியங்கி ஏற்றுமிடத்தில்[elevator] இருந்து டேவிட் வெளியே வருகிறான்... அந்த ஓட்டலில் இருந்து!

கூடவே கைகளைப் பிடித்தபடி லோரா!~

அவள் கண்களில் கண்ணீர்!

தன் சந்தேகம் உறுதியாகிவிட்டது எனும் நினைப்பில், க்ளாரா ஆத்திரத்துடன் இருவர் மீதும் பாய்கிறாள்.

லோரா தாக்குதலில் அடிபட்டு கீழே விழுகிறாள்.

டேவிட்டுக்கும் சரியான அடி!

இதுவெதையும் சற்றும் எதிபார்க்காத லிண்டா, "நான் உன்னை வெறுக்கிறேன்" அம்மாவை நோக்கிக் கத்தியபடியே, இருவரையும் தாக்குதலில் இருந்து தடுக்க முனைகிறாள்.

சமாளித்துக் கொண்டு எழுந்த டேவிட்,"பொதுவிடத்தில் சொன்னால் அவள் எப்படி இதை எதிர்கொள்வாளோ எனவெண்ணி ஒரு தனியறையில் இதைச் சொல்லிவிட்டு, இப்போதுதான் கிளம்பிக்கொண்டிருந்தேன். அதற்குள் இப்படி அவசரப் பட்டுவிட்டாயே!" என வெறுப்புடன் சொல்லிவிட்டு, அடிபட்டு விழுந்ந்திருந்த லோராவை எழுப்பி, அவளை அவளது காருக்கு கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறான்.

அவசர அவசரமாக, லிண்டாவை அழைத்துக் கொண்டு, க்ளாராவும் தன் காருக்கு விரைகிறாள்.

லோராவை அவள் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு, டேவிட் தன் காரை நோக்கி நடக்கிறான்.

க்ளாராவின் பென்ஸ் கார் விரைந்து வந்து அவனைத் தாக்குகிறது!

அவன் மேல் முழுதுமாக ஏறி அவனைத் தாண்டிச் சென்று, நின்று, அவனை 3-4 முறை சுற்றிச் சுற்றி வருகிறது.

அவனது துடிப்பு முழுதுமாக அடங்கிய பின்னர், க்ளாரா இறங்கி வருகிறாள்.

'நீ எனக்கு இல்லையெனில் எவருக்குமே இல்லை' எனச் சொல்லி மீண்டும் காருக்குத் திரும்புகிறாள்.

இதற்குள், நடந்த செய்தி காவல்துறைக்குச் சென்று, அவர்கள் வந்து க்ளாராவைக் கைது செய்கிறார்கள்.

வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.

டேவிட்டின் பெற்றோர்கள், தங்கள் பேரக்குழந்தைகளுக்கு ஒரு தாயும் இல்லாமல் போகக் கூடாதே என அஞ்சி, அவள் மேல் வழக்கு தொடுக்க மறுத்துவிட்டார்கள்.

இப்போது, இது ஒரு அரசு வழக்கு.

யாரும் துணையில்லை அவர்களுக்கு.

ஆனால், கண்முன்னே ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது!

4,500 பவுண்டு எடையுள்ள ஒரு சாதனத்தைக் கொண்டு டேவிட்டைக் கொலை செய்ததாக க்ளாரா மீது வழக்கு பதிவு செய்யப் படுகிறது!

[தொடரும்]

Read more...

Tuesday, April 08, 2008

"கொலையும் செய்வாள் பத்தினி??" [2]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [2]



முதல் பதிவு இங்கே!
2.
தொழில் வளர்ச்சி, குடும்ப நிலைமை காரணமாக, இருவரும் சந்தித்துக் கொள்வதே அரிதாயிற்று.

குழந்தைகளும், பெற்றோர் இல்லாவிடினும், தாத்தா, பாட்டி அன்பில் நன்றாகவே வளர்ந்ததால், அந்தக் கவலையும் இல்லை!

இந்த நேரத்தில்தான், இவர்களது ஒரு சிகிச்சை மையத்தில் வரவேற்பாளராகச் சேர்ந்த லோரா, டேவிட்டின் கவனத்தைக் கவர்ந்தாள்.

அவளது திறந்த பார்வையும், பழகும் விதமும், சிரிக்கும் அழகும் டேவிட்டுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது!

இருவரும் பழகத் தொடங்கினர்.

வெளியே உணவருந்தச் செல்வது, சினிமா, மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது எனத் தொடங்கி, உடலுறவு வரைக்கும் வந்துவிட்டது.

இவர்கள் பழக்கம் க்ளாராவுக்குத் தெரிய வாய்ப்பில்லாதபடி அவளது தொழிலில் அவள் மூழ்கி இருந்தாள்.

ஆனால், க்ளாரா மூலம் வேலையில் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை.

டேவிட்டிடம் சென்று, 'நீ சொல்லுகிறாயா? இல்லை நானே சொல்லிவிடட்டுமா?' என எச்சரிக்கை விடுத்தாள்.

டேவிட்டுக்கு அப்போதுதான் தான் செய்து வந்த தவறின் தீவிரம் தெரிய வந்தது.

சாதாரண வேடிக்கையாகவும், ஒரு மாறுதலாகவும் தொடங்கிய ஒரு விஷயம் இவ்வளவு தீவிரமானதை உணர்ந்து வருந்தினான்.

மறுநாள், க்ளாரா குளியலறையில் இருந்தபோது, அவளிடம் நிகழ்ந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்கிறான்.

ஆனால்,...........

க்ளாராவுக்கு இது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி!

தனது கனவுக்கோட்டை தகர்ந்ததாக உணர்கிறாள்.

டேவிட்டுடன் மிகப் பெரிய சண்டை போடுகிறாள்.

எனக்கும் அந்த லோராவுக்கும் என்ன வித்தியாங்கள் கண்டாய்? என ஒரு பட்டியல் போட்டுத் தர வற்புறுத்துகிறாள்!

டேவிட்டுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி!

இருந்தாலும், எழுதித் தருகிறான்.

கனிவு, அன்பு, பரிவு, பாசம், பழகும் தன்மை, கவரும் சிரிப்பு, பொறுமையாகக் கேட்கும் தன்மை..... லோராவிடம்!

அன்பு, ...... ஆளுமை, தனது துணைக்கென நேரம் ஒதுக்க முடியாமல் தொழிலில் ஈடுபடுதல், குழந்தைகளைக் கூட கவனிக்கமுடியாமல் போதல்..... க்ளாராவிடம்!

க்ளாராவுக்கும் தனது குறைகள் புரிய.... ஒப்புக் கொள்ள முடியாமல் ஒரு அதிர்ச்சி!

இன்னும் ஒரு சில வாரங்களுக்குள், லோராவினுடைய உறவை முறித்துக் கொள்ள வேண்டுமென்றும், அதற்குள், தான் டேவிட்டுக்கு ஏற்றமாதிரி ஆகி விடுவதாகவும் சொல்லிவிட்டு,

அவன் பதிலுக்குக் கூட காத்திராமல், உடனடியாக ஒரு அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம் எனச் சேர்ந்து தன்னை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொள்கிறாள்.

இடையில், ஒரு துப்பறியும் நிறுவனத்தை நாடி, டேவிட்டைக் கண்காணிக்குமாறும் ஏற்பாடு செய்கிறாள்.

அவர்கள், இவர்கள் இருவரும் சந்திக்கவே இல்லை என்னும் ஒரு தகவலைச் சொல்கிறார்கள்.

குடும்ப வாழ்க்கை, தொழில், இவையெல்லாம் இன்னும் அதிகமாகக் குலைவதைக் கவனித்த டேவிட், குழந்தைகளை இப்போது அதிகமாகக் கவனிக்கத் தொடங்குகிறான்.

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்து, வீட்டிலேயே இருக்கிறான்!

இன்னுமா நீ லோராவுடனான உறவை முறிக்கவில்லை? என்ற க்ளாராவின் கேள்வி அவனை உலுக்க, தான் இதுவரை லோராவைச் சந்திக்கவே இல்லை என்றும்,

நாளை மாலை அவளைச் சந்தித்துச் சொல்ல அவளுக்கும் சொல்லியிருப்பதாகவும் சொல்லுகிறான் டேவிட்!

க்ளாரா நம்பவில்லை.

தன்னை ஏமாற்றுகிறான் டேவிட் என உறுதியாக நம்பினாள்.

மறுநாள் மாலை!

[தொடரும்]

Read more...

"கொலையும் செய்வாள் பத்தினி??" [1]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [1]

அமெரிக்கத் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு கதை என்னை மிகவும் பாதித்தது! இது ஒரு உண்மைக் கதை. 'ட்ரூ டிவி'[Tru TV] இதை நேற்று ஒளிபரப்பியது! மறந்துவிடாமல் இருக்க உடனே இதைப் பதிவு செய்கிறேன்! படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்கள்! 4 பதிவுகள் வரை வரும்!
1.

க்ளாரா ஒரு துணிச்சலான பெண்!

வாழ்க்கையில் எதையேனும் சாதித்துக் காட்ட வேண்டும் என்னும் அவா நிரம்பியவள்!

நினைத்தபடியே பல் மருத்துவம் படித்து ஒரு முன்னணி பல் மருத்துவராகவும் ஆனாள்.

தொழில் தொடங்குவதற்கு குடும்ப வாழ்க்கை அவசியம் ஆனால், அது பிக்கல் இல்லாத ஒன்றாகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்பினாள்.

அப்போதுதான் அவள் கண்ணில் பட்டான் டேவிட்.

அவனும் ஒரு பல் மருத்துவர் தான்.
திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தையும் பிறந்தபின் மனைவியை இழந்தவன்.

க்ளாராவின் பார்வை டேவிட் மேல் பட்டது.

பார்வைக்கு அழகாகவும் இருந்தான் டேவிட்.

துணைக்குத் துணையும் ஆயிற்று; உடனே பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை; தொழிலுக்கும் உதவியாய் இருப்பான்!

தன் வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளும் இருந்ததைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்து, டேவிட்டுடன் நெருக்கமானாள்.

டேவிட் குடும்பத்தினருக்கும் க்ளாராவைப் பிடித்துப் போயிற்று.

திருமணமும் நடந்தது.

டேவிட்டின் பெண் லிண்டா க்ளாராவை அம்மாவாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள்.

குடும்ப வாழ்க்கை இனிமையாக அமைந்தது.

ஒரே ஊரில், இரு வேறு இடங்களில் தனித்தனி சிகிச்சை நிலையங்களும் தொடங்கப் பெற்றன.

க்ளாராவின் கைராசியால் அவளது தொழில் விரைவில் பிரபலம் அடைந்தது.

ஆனால், டேவிட்டின் நிலைமை அப்படி ஆகவில்லை.

தொழில் மந்தம்!

க்ளாரா இப்போது, குடும்பத்தை மட்டுமல்லாமல், டேவிட்டின் தொழிலுக்கு சேர்த்தே உதவி செய்ய வேண்டிய நிலைமை.

க்ளாரா இதை எதிர்பார்க்கவில்லை.

ஆனாலும், மனம் தளரவில்லை.

தனது தொழிலில் வந்த நபர்களுக்குத் தேவையான பல் மருத்துவ சிகிச்சையில் டேவிட்டுக்கும் பங்கு வருமாறு செய்து, தனது சில வாடிக்கையாளர்களையும் அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

வாரத்திற்கு 3 முறை டேவிட்டையே தனது 'க்ளினிக்'கிற்கே வரவழைத்து சில சிகிச்சைகளை அவனையே செய்ய வைத்தாள்.

இப்போது டேவிட்டின் தொழிலும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

விரைவிலேயே, வரும் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல், இன்னும் சில இடங்களில் நிலையங்களைத் தொடங்கி, மெலும் சில மருத்துவர்களை நியமித்து, கவனிக்க வேண்டிய அளவிற்கு, வளர்ந்து விட்டது!

5,000 சதுர அடி பரப்பில் பெரிய வீடு, 'பென்ஸ்' கார், வசதியான வாழ்க்கை, அள்வான குடும்பம்!

க்ளாராவுக்கு இப்போது குடும்ப ஆசை!

தனக்கும் குழந்தைகள் வேண்டுமென விரும்பினாள்.

டேவிட்டுக்கும் இதில் சம்மதமே!

சீக்கிரமே கர்ப்பமானாள்!

அதுவும் இரட்டைக் குழந்தைகள்!

க்ளாரா, டேவிட்டின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

லிண்டாவும் இப்போது 14 வயதுப் பெண்!

தனது இரு தம்பிகளின் மேல் அளவிலாப் பாசம் கொண்டவள்!

டேவிட்டின் பெற்றோர்களும் தங்கள் பேரக் குழந்தைகளை அடிக்கடி வந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.

தொழிலும் சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்தது.

இப்போதுதான், விதி சிரித்தது!


[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP