Monday, November 28, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 36

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 36
35.

'என்ன? அடுத்த பாட்டுக்குப் போலாமா?' என்றவாறே வந்தமர்ந்தான் மயிலை மன்னார்.

'இதுக்குக் கேள்வி என்ன? அதுக்குத்தானே வந்து ஒக்காண்டிருக்கோம்' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'ஒரு நல்ல தலைவன் எப்படி இருக்கணும்ன்றத இந்தப் பாட்டு சொல்லுது. ஊருக்கு உபதேசம் பண்றவன், தான் எப்படி நடந்து காட்டணும்ன்றத சொல்ற பாட்டு இது. மொதல்ல பாட்டைப் படி' என்றான் மன்னார்.

35.
விதிகா ணுமுடம் பைவிடா வினையேன்
கதிகா ணமலர்க் கழலென் றருள்வாய்
மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுரபூபதியே

'ஒரு சின்ன சொல்வெளையாட்டு இந்த மொதல் வரியுல நடத்தியிருக்காரு அருணகிரி.

"விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்"

'விதி காணும் ஒடம்பு'ன்னா இன்னா?

இந்த ஒலகத்துல பொறந்த அல்லாரையுமே விதிதான் ஆட்டி வைக்குதுன்னு நமக்கெல்லாம் தெரியும். அப்பிடின்னா இன்னா அர்த்தம்? நாம செய்யற அல்லாத்தியும் இந்த விதின்றது பார்த்துக்கினு க்கீதுன்னு ஒரு அர்த்தம்.

அதே சமயத்துல, இங்க இந்த 'விதி'ன்றத வேற விதமாவும் பாக்கலாம்.
விதிப்படி ஒர்த்தொர்த்தரையும் படைக்கற பிரம்மா, எப்பவும் நாம பண்ற அல்லாத்தியுமே பார்த்துக்கினே க்கீறாருன்னும் புரிஞ்சுக்கலாம்.

அதாவது, ஆரு பாக்கலைன்னாலும், நம்மைப் படைச்ச அந்த பிரம்மா எப்பவுமே பார்த்துக்கினே க்கீறாருன்னாலும், அததுக்குத் தகுந்தமாரி, நம்மை ஆட்டிப் படைப்பாருன்னாலும், நாமள்லாம் இன்னா பண்றோம்?

இந்த ஒடம்பு மேல இருக்கற அபிமானத்தை விடாம, இன்னாமோ இதுதான் சாசுவதம்னு நெனைச்சுக்கினு ஆட்டம் போடறோம். மேல மேல வெனையை சேர்த்துக்கினே போறோம். அதைத்தான் 'வினையேன்'னு சொல்லிப் பொலம்பறாரு.

இந்தக் கொரங்கைப் பார்த்திருக்கியா? ஒரு கிளையிலேர்ந்து அடுத்ததுக்குத் தாவறச்ச, எந்த ஒரு கவலையுமில்லாம, 'டக்'குன்னு பிடியை விட்டிரும். ஒரே பாய்ச்சல்தான்; அடுத்த கிளையைப் பிடிச்சிக்கிரும்.

அதும்மாரி, இந்த ஒடம்பு மேல க்கீற பிடிப்பை எப்ப விடறோமோ, அப்பத்தான் இதுக்கும் மேலானதா க்கீற முருகனோட காலடி நமக்குக் கிடைக்கும்.

ஒண்ணை விட்டாத்தான் அடுத்தது கிடைக்கும்!

ஆனாக்காண்டிக்கு, நாம இத்தயும் விடாம, அது வேணும்ன்னு அவங்கிட்டியே போய் மொறை வைக்கறோம்.

இத்தத்தான் அருணகிரியாரும் சொல்றாரு.
'எனக்கு இன்னும் இந்த பாளா[ழா]ப்போன ஒடம்பு மேல க்கீற அபிமானம் தீரலியே! அதுனால, விடாம வினையை சேர்த்துக்கினே போறேனே. இது ஒங்கண்ணுக்குத் தெரியலியா? பார்த்துக்கினு ஏன் சும்மா க்கீறே? ஒன்னோட பூப்போல க்கீற திருவடியை எனக்கு சீக்கிரமாக் கொடுத்து அருள் பண்ணுப்பா'ன்னு கந்தங்கிட்ட கதற்ராரு, இந்த மொத ரெண்டு வரியுல.

'ம்ம்ம்' என நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடுத்த ரெண்டு வரிக்கு என்ன சொல்லப் போகிறான் என்னும் ஆவலுடன்!

'ஆரைப் பார்த்து இப்பிடி அருணகிரியாரு சொல்றாரோ அவரு இன்னா பண்ணிக்கினு க்கீறதா இந்த அடுத்த ரெண்டு வரியுல சொல்றாருன்னு பாப்பம்!

"மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா சுரபூபதியே"

'நல்லா ஒளி வீசற நிலாவைப்போல, வாள் போல வளைஞ்சு அள[ழ]கா க்கீற நெத்தியுடைய வள்ளியம்மாவைத் தவர வேற ஆரையும் பெருமை பண்ணித் துதி பண்ணாத முருகா'ன்னு கூப்பிட்டுக் கேக்கறாரு!

இப்பிடி வள்ளியம்மாவைத் துதிக்கறதை ஒரு விரதம் மாரி பண்றவனேன்னு சொல்றாரு!

இந்திரலோகத்துக்கே ராசாவா க்கீறவனேன்னும் சொல்லிப் பாடறாரு!

கொஞ்சம் கொய[ழ]ப்பம் வரத்தான் செய்யும்.... இத்தக் கேட்டா!

அம்மாம் பெரிய ராசாவா க்கீறவரு எதுக்காக இப்ப கொறஜாதிப் பொண்ணாண வள்ளியம்மாவோட காலடில விளு[ழு]ந்து கெடக்கணும்?

அத்தயும் எதுக்கு ஒரு விரதம் மாரி பண்ணணும்னு கேக்கத் தோணும்!

சூரனை அளி[ழி]ச்சதும், அந்த தேவேந்திரன் தன்னோட ராஜ்ஜியத்துக்கே இவரை ராசாவாக்கி, கூடவே பத்துமோ, பத்தாதோன்னு தன்னோட பொண்ணான தெய்வானையம்மாவையும் கண்ணாலம் கட்டி வைச்சாரு.

இந்த தெய்வானையம்மா கிரியா சக்தி! அதாவது, ஒரு காரியத்தைச் செஞ்சு முடிக்கறதுக்கு தூண்டுகோலா இருக்கறவங்க! இவரு வந்த காரியம் சூரனை அளி[ழி]க்கறது! அதுக்கு இந்தம்மாதான் தூண்டுகோலு!

இனிமே இவரோட வேலை தன்னோட பக்தருங்களைக் காப்பாத்தறது. ஆனாக்காண்டிக்கு, இந்த பக்தருங்க அல்லாரும் இன்னா பண்ணிக்கினு க்கீறாங்கன்னா, இந்த ஒடம்பைப் பிடிச்சுக்கினு, அதும்மேல வினையா சேர்த்துக்கினே க்கீறாங்க. எதுனாலன்னா, ஒடம்ப்பு மேல க்கீற ஆசையினால. ஆசைன்னா இச்சை. அந்த இச்சைக்குல்லாம் காரணமா க்கீறவங்க வள்ளியம்மா! வள்ளியம்மாதான் இச்சா சக்தி!

அதுனால இவரு இன்னா பண்றாருன்னா, அந்த இச்சா சக்தி கிட்டயே போயி, அவளையே சரணடைஞ்சிடறாரு! 'இந்த ஒலகம், ஒடம்பு மேலெல்லாம் க்கீற ஆசையை விட்டுட்டு, என்னோட பக்தருங்க அல்லாரையும் என்னையே நெனைக்கறமாரி பண்ணு'ன்னு அவளைக் கொஞ்சிக் கேட்டுக்கறாராம்!

இத்தத்தான் ஒரு விரதம் மாரி பண்னிக்கினு க்கீறாராம்!

நம்மளையெல்லாம் காப்பாத்தறதுக்கு வேண்டி, இவரு விரதம் இருக்காரு!
அப்பிடீன்னா இவருக்கு நம்ம மேலெல்லாம் எத்தினி அன்பும், அக்கறையும் க்கீதுன்னு புரிஞ்சுக்கோ!

இதான் குருவா வர்ற ஒர்த்தர் பண்ற காரியம். தன்னோட அடியாருங்க நல்லாருக்கணுமேன்ற ஒரே ஒரு கவலைதான் அவருக்கு எப்பவும்! அதுக்காவ இன்னா வோணும்னாலும் செய்வாரு.

இப்ப நாம இன்னா பண்ணணும்?

இந்தத் தலைவன் வளி[ழி] காட்டித் தர்றமாரி, நாமளும், சதா சர்வகாலமும், 'முருகா முருகான்னு, அவரையே சரணடையணும்னு சொல்லிக் காமிக்கறாரு' என முடித்தான் மயிலை மன்னார்.

நாயரின் 'ஓம் சரவணபவ' ஜபம் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.
*************
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Tuesday, November 22, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 35

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 35

34.

'அவனை விட்டா வேற கெதி ஏது? எல்லாம் அவன் செயல்!' என்றவாறே நிமிர்ந்து உட்கார்ந்தார் சாம்பு சாஸ்திரிகள்.


'சரியாச் சொன்னீங்க சாமி! நல்லது கெட்டது எதுன்னாலும் அவனைக் கெட்டியாப் புடிச்சுக்கினா போறும். அல்லாத்தியும் அவன் பார்த்துப்பான். இதைத்தான் சூசகமா இந்தப் பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு. பாட்டைப் படிப்பா' என்றான் மயிலை மன்னார்.

சிங்கா ரமடந் தையர்தீ நெறிபோய்
மங்கா மலெனக் குவரந் தருவாய்
சங்க்ரா மசிகா வலசண் முகனே
கங்கா நதிபா லக்ருபா கரனே


சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்காநதி பால க்ருப ஆகரனே.

பொண்ணுங்கன்னாலே கெட்டவங்கன்னு அர்த்தம் இல்லை. ஆனாக்காண்டிக்கும், எல்லாத்துலியுமே நல்லவங்க, கெட்டவங்க க்கீறமாரி, பொண்ணுங்கள்லியும் இப்பிடி க்கீறாங்க.


சாதாரணமாப் பள[ழ]கறதுல ஒரு தப்பும் கிடையாது. ஆனாக்க, தப்பான நோக்கத்துல ஒன்னிய வளைச்சுப் போடறதுக்குன்னே சில பொண்ணுங்க இருப்பாங்க! அவங்க பொய[ழை]ப்பு அப்பிடி! அவங்களையும் குத்தம் சொல்ல முடியாது. நாமதான் சாக்கறதையா நடந்துக்கணும். கெட்ட வளி[ழி]யுல கொண்டுபோறதுக்குன்னே குறியா இருக்கற பொண்ணுங்களைப் பத்தித்தான் இந்த வரி சொல்லுது.

'சிங்கார மடந்தையர் தீ நெறி போய் மங்காமல்'னு சொல்றாரு.

நம்ம மனசு எப்பவும் ஒரு நெலையுல இருக்கறதில்லை. சமயா சமயத்துக்கு 'டொப்'புன்னு வளு[ழு]க்கி விட்டுரும். இப்பிடிப் போனாத்தான் இன்னான்னு இந்தப் பொண்ணுங்க கூப்புடற வளி[ழி]யுல கொண்டு போயிறும். நாம இன்னாதான் கவனமா இருந்தாக்கூட, ஒண்ணும் பண்ண முடியாம சறுக்கிறும்.


நாம சமாளிச்சிரலாம்னு நெனைச்சா அம்போ தான்! அதுக்குத்தான் ஒரு 'ரூட்டைக்' காமிக்கறாரு அடுத்தாப்பல!

'எனக்கு வரம் தருவாய்'னு அந்த முருகன் காலுலியே போய் விளுந்துடறாரு!


என்னிய இப்பிடி ஆக்கினது நீதானே! நீதான் இந்த கெட்ட வளியுலல்லாம் போயி சிக்கிக்காம க்கீறதுக்கு வரம் கொடுக்கணும்னு சரணடையறாரு!


'நான் கெட்டவந்தான். எனக்கு இதும்மேலல்லாம் கொஞ்சம் ஆசை வரத்தான் செய்யும். ஆனாக்காண்டிக்கும், நீதான் நான் அப்பிடில்லாம் போயிறாமப் பார்த்துக்கணும்'னு பாரத்தை அவன் மேலேயே போட்டுடறாரு!

'இது நன்னாருக்கே! இவர் பண்றதையெல்லாம் பண்ணிட்டு, அப்பிடிப் பண்ணாம இருக்கறதுக்கு முருகனை வழி கேக்கறாரா? ஆனாலும், அவனைப் பிடிச்சுண்டுட்டா, அவன் ஒரு நல்ல வழி காட்டாமலா போயிறுவான்? சரியாத்தான் சொல்லியிருக்கார். ஆமா, இதுக்கும், அந்த அடுத்த ரெண்டு வரிக்கும் என்னடாப்பா சம்பந்தம்? சொல்லேன் கேட்போம்' என்றார் நமுட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துக்கொண்டே, சாஸ்திரிகள்!

'அதான் இதுல விசேசம்!

சங்க்ராம சிகாவல சண்முகனே

'சங்க்ராமம்'னா யுத்தம்,... சண்டைன்னு வைச்சுக்கலாம்.


இங்கியும், அங்கியுமா பாய்ஞ்சு பறந்து சண்டை போடற மயில் மேல வர்ற சண்முகனேன்னு மொத வரியுல முருகனோட வீரத்தைப் பத்தி சொல்றாரு.

இந்த மயிலு இன்னா பண்ணும்னா, கோவத்தோட படமெடுத்து ஆடற பாம்பைக் காலுல போட்டு மிதிச்சுக்கினு, பறந்து, பறந்து சண்டை போடும்! அத்தப் போல, இப்பிடிப் படமெடுத்து ஆடுற பாம்பைப்போல,.... [போக்குக் காட்டற பொண்ணுங்க பக்கமா,] நாலா பக்கமும் அலையுற மயிலை அடக்கி ஆள்றவனேன்னு சொல்லி, அதேபோல நாலாபக்கமா நான் அலையாம நீதான் பார்த்துக்கணும்னு நாசூக்கா கேட்டுக்கறாரு.


இதை விடவும், அந்த அடுத்த வரிதான் இன்னும் ஷோக்கா க்கீது!

'கங்கா நதி பால க்ருபாகரனே'

'ஆகரன்'ன்னா உண்டான இடம்னு அர்த்தம். கிருபை பண்ற முருகனை கிருபாகரனேன்னு கொண்டாடறாரு. இவந்தான் நமக்கேல்லாம் கிருபை பண்ணணும்.


இத்தனை பெருமைங்க இவனுக்கு இருந்தாலுங்கூட, 'கங்காநதி பாலகனே'ன்னு சொல்றதுலதான் ஒரு பெரிய அர்த்தம் ஒளிஞ்சுக்கினு க்கீது!


சிவனோட கண்ணுலேர்ந்து பொறியாப் பொறந்தவரை,.... வாயுவும், அக்கினி பகவானுமாத் தூக்கியாந்து, ....நம்மால தாங்க முடியலேன்னு ...... கங்கையுல போட்டுட்டாங்க! ஆனந்தமா அதுல மெதந்து வர்றாரு. அந்தம்மா இவரைக் கொணாந்து சரவணப் பொய்கையுல போடறாங்க!


இத்தனையும் நடக்கறப்ப, இவரு மட்டும் ஒண்ணுமே பண்ணாம, அப்பிடியேக் கெடக்கறாரு. 'என்னிய எங்கே இட்டுக்கினு போவணுமோ, போ'ன்னு சிரிச்சுக்கினே மெதக்கறாரு.


கங்கையம்மா தூக்கிக்கினு வந்ததால இவருக்கு இந்தப் பேரு.


நீதான் என்னைக் காப்பாத்தணும் முருகான்னு சொல்றப்ப, நாம எப்பிடி இருக்கணும்ன்றதை இந்தக் கங்கைநதி பாலன் காமிச்சுத் தர்றாரு.


அது வாயுவாவட்டும், அக்கினியாவட்டும், கங்கை நதியாவட்டும்... அவங்க கையுல கொடுத்ததுக்கப்பறம், தான் ஒண்ணும் பண்ணாம அவங்க போக்குலியே வுட்டமாரி, நாமளும் முருகன் கையுல நம்மளை ஒப்படைச்சதும், அல்லாமே அவனே கெதின்னு, இப்ப நம்ம ஐயரு சொன்னாரே,... அதும்மாரி 'கம்'முன்னு கெடக்கணும்! அப்பால, அல்லாத்தியும் அவன் பார்த்துப்பான்றதை இந்த ரெண்டு வரியுல ரொம்ப சிறப்பா சொல்லியிருக்காரு!' என்றான் மயிலை மன்னார்!

'அடடா! இதுக்கு இப்பிடியும் சொல்லலாமா? ரொம்ப நன்னாயிருக்குடா! அவனே கெதின்னு அவன் காலடியுல சரணாகதி அடையறதுதான் ஒரே வழி! முருகா ஷண்முகா! ஓம் சரவணபவா!' எனக் கைகளைக் கூப்பினார் சாம்பு சாஸ்திரிகள்!

'அப்பாலிக்கா இன்னொரு சமாச்சாரம்! அருணகிரியாரு ஆம்பளையா இருந்ததால, இப்பிடி எளுதியிருக்காரு. ஆனாக்காண்டிக்கு, இது ஆம்பளை, பொம்பளை அல்லாருக்குமே ஒண்ணானதுதான். ஆம்பளைங்கள்லியும் இப்பிடி மோசம் பண்றவங்க க்கீறாங்கதானே!' எனச் சொல்லி, ஒரு நமுட்டுச் சிரிப்புடன் நடையைக் கட்டினான் மயிலை மன்னார்.
*************
வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!
[படித்தும், பின்னூட்டமிட்டும் வாழ்த்தும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

Thursday, November 17, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 34

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 34
33.

'கண்டத்தயெல்லாம் படிச்சுப் பைத்தியம் பிடிச்சு அலையாமத் தப்பிச்சாலும் தப்பிச்சுக்கலாம்; இந்த சம்சார பந்தத்துலேர்ந்து தப்பிக்கறது ரொம்பவே கஷ்டம்ப்பா’ என அலுத்துக் கொண்டே வந்து அமர்ந்தார் சாம்பு சாஸ்திரிகள்!


‘ஏன்? என்ன ஆச்சு சாமி? வூட்டுல எதுனாச்சும் பிரச்சினையா?’ என அக்கறையாய் விசாரித்தான் மயிலை மன்னார்.


‘அதை விடுறா! அது என்னிக்கும் கூடவேதானே இருக்கு. நீ அடுத்த பாட்டைச் சொல்லு கேக்கலாம். மனசுக்காவது நிம்மதியா இருக்கும்’ என்றார் சாஸ்திரிகள்.


ஒருவிதமான அர்த்தபுஷ்டியுடன், ஒரு நமட்டுச் சிரிப்பைச் சிரித்துக்கொண்டே, ‘ம்ம்..படிப்பா. ஐயருக்குன்னே எளு[ழு]தின பாட்டை!’ என்றான் மன்னார்.


ஒன்றும் புரியாமல் நானும் படித்துக் காட்டினேன்.

சிந்தா குலவில்லொடு செல்வமெனும்
விந்தா டவியென் றுவிடப் பெறுவேன்
மந்தா கினிதந் தவரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே


சிந்தாகுலம் இல்லொடு செல்வம் எனும்
விந்தா அடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வர உதயனே
கந்தா முருகா கருணா ஆகரனே


“சிந்தாகுலம் இல்லொடு செல்வம் எனும் விந்தா அடவி என்று விடப் பெறுவேன்?”

‘இப்ப ஐயரு அலுத்துக்கினாரே….. அதையேதான் இந்த வரியும் சொல்லுது’ என ஆரம்பித்தான் மன்னார்!


‘சிந்தாகுலம்’னா மனக்கவலை. ஆகுலம்னா கவலை; சிந்தான்னா மனசு. மனசுல ஒரு பெரிய கவலை நம்ம எல்லாருக்குமே எப்பவும் தொத்திக்கினு இருக்கு.


ஒண்ணு, நம்ம பொண்டு, புள்ளைங்களை எப்பிடிக் கரையேத்தப் போறோம், எப்பிடி சமாளிக்கப் போறோம்னு.
இன்னொண்ணு, இதுக்கெல்லாம் தேவையான துட்டை எப்பிடி சம்பாரிக்கறது; எப்பிடி சேக்கறதுன்னு.


இது வோணும், அது வோணும்னு தெனம் நச்சரிக்கறதுக்குன்னே பொண்டாட்டி, புள்ளைங்க எப்பவும் அலையும். இது இல்லை, அது வோணும், இந்த ஃபீஸு கட்டணும், இந்த புக்கு வாங்கணும், இந்தப் பொடவை நல்லாருக்கு,; அந்த நகை டிஸைனு நல்லாருக்குன்னு சமயா சமயம் தெரியாம ரோதனை பண்ணுவாங்க.


இதுக்கெல்லாம் இன்னா வளி[ழி]?; இதை சமாளிக்க எங்க போறது?; எப்பிடி துட்டு சம்பாரிக்கறதுன்னு மனசு கெடந்து அல்லாடும்!
ஒண்ணு சமாளிச்சாச்சுன்னா, அடுத்தது ஒடனே பூதாகாரமா கெளம்பி நிக்கும்! இதுங்களையெல்லாம் சமாளிக்கறதுக்குள்ள, ‘தாவு’ தீந்து பூடும்!


இது எப்பிடி இருக்குன்னு ஒரு ஒ[உ]தாரணம் சொல்றாரு அருணையாரு.


இருக்கறதுக்குள்ளியே அடர்த்தியான மலை விந்திய மலையாம். அதுக்குள்ளாற பூந்துட்டா, கண்ணைக் கட்டிக் காட்டுல வுட்டதுன்னு சொல்லுவாங்களே…. அதும்மாரி இருக்குமாம். விந்தா அடவின்னா விந்திய மலை.


இப்ப ஐயரு சொன்ன இந்த சம்சார பந்தம்ன்றது அந்த விந்திய மலைக்குள்ள பூந்துட்டமாரி இருக்குதாம்!
இந்த மலைக்குள்ளேர்ந்து எப்ப நான் வெளியே வர்றது முருகா? இதுக்கு இன்னா வளி[ழி]?ன்னு அலர்றாரு அருணகிரி!
இத்தயெல்லாம் ஒருமாரியா சமாளிக்கறதுக்குள்ள, மனுசனுக்குப் பைத்தியம் புடிக்காம இருந்தா, அதுதான் பெரிய ஆச்சரியம்!
என்னைக்குத்தான் எனக்கு இதுலேர்ந்து விமோசனம் பொறக்கும் முருகான்னு கேக்கறாரு…. இப்ப நம்ம சாமி கேட்டதுமாரி!’ எனச் சிரித்தான் மன்னார்!

‘அடடே! இது நன்னாவே இருக்கே! ம்ம்.. இதுக்கு அடுத் ரெண்டு வரியுல ஒரு பொடி வைச்சு சொல்லியிருப்பாரே! அதைச் சொல்லு…. ஏதாவது புரியறதான்னு பாக்கறேன்’ என அசட்டுச் சிரிப்புச் சிரித்தார் சாஸ்திரிகள்.


‘இதுக்கொண்ணும் கொறைச்சலில்லை’ என்பதுபோல, மாமி முகத்தை நொடித்துக் கொண்டார்!

“மந்தாகினி தந்த வர உதயனே கந்தா முருகா கருணா ஆகரனே!

‘பெருசா சொல்றதுக்கு ஒண்ணும் இல்லாதமாரித்தான் இருக்கும்.


கங்கை பெத்த புள்ளையே! ரொம்ப ரொம்ப ஒசந்தவனே! கந்தா!! முருகா! கருணையே உருவாப் பொறந்தவனே!ன்னு இந்த வரியுல துதி பாடறாரு அருணகிரியாரு.


கொஞ்சம் ஆள[ழ]மா நெனைச்சுப் பாத்தா, இந்த எடத்துல இப்பிடி ஏன் சொல்றாருன்னு புரியலாம்.
இதுல்லாங்கூட, என்னோட நெனைப்பாக் கூட இருக்கலாம். இருந்தாலும் சொல்லி வைக்கறேன்’ என ஒரு பீடிகையுடன் ஆரம்பித்தான் மன்னார்.


கருணையே உருவா ஒரு பெரிய சாமி, தேவருங்கல்லாம் வந்த மொறையிட்டப்ப, தன்னோட நெத்திக் கண்ணைத் தொறந்து ஆறு பொறியாக் கெளம்பினதை எடுத்து அக்கினி பகவான்கிட்ட குடுக்க, அவரால வைச்சுக்க முடியலேன்னு, வாயு பகவான் கையுல அதைக் குடுக்கறாரு. அவராலியும் அத்தத் தாங்க முடியாமப் போக, அவரு கங்கையுல போடறாரு. கங்கைக்கு ‘மந்தாகினி’ன்னு ஒரு பேரு க்கீது! இந்த மந்தாகினி அம்மா அந்த ஆறு பொறிங்களை எடுத்துக்கினு போறச்சே, அவங்களாலியும் அத்தத் தாங்க முடியாம, சரவணப் பொய்கையுல வந்து போட்டுடறாங்க!!


ஆறு பொறிங்களும் ஆறு கொள[ழ]ந்தைங்களா மாறி, ஆறு தாமரைப் பூவுல மெதக்குதுங்க!


கார்த்திகைப் பொண்ணுங்க ஒரு ஆறு பேருக்கு அடிச்சுது லக்கி ப்ரைஸ்! அவங்களுக்குக் கெடைச்ச வரத்துனால, இந்த ஒசத்தியான கொழந்தைங்களுக்குப் பாலு கொடுக்கற அதிர்ஸ்டம் கெடைக்குது! அந்த வரத்துல உதயமானவரு இந்தக் கந்தன்!


‘கந்தன்’னா ஒண்ணாச் சேந்தவன்னு அர்த்தம்! எப்பிடி அது? நம்ம கற்பகாம்மா வர்றாங்க சரவணப் பொய்கைக்கு! அளகாத் தாமரைப் பூவுங்க மேல மெதக்கற ஆறு கொளந்தைங்களையும், ஆசையா வாரி, தன்னோட மாருல அணைச்சுக்கறாங்க. இந்த அம்மா கை பட்டதும், ஆறும் ஒண்ணா சேந்திருது. அதான் கந்தன்!


கருணையே வடிவான அந்த கந்தக் குமரன்……. முருகன்……. இத்தனைப் பேருங்க தங்கூட இருந்தும், எல்லாத்தையும் விட்டு, ஆண்டியா நின்னுக்கினு நமக்கெல்லாம் கருணை பண்ணறாரு! அவரை வேண்டிக்கினா, இந்த பந்தத்துலேருந்தும் நமக்கு விடுதலை தருவாருன்னு சொல்றாருன்னு நெனைக்கறேன்’ என முடித்தான் மயிலை மன்னார்!

‘அதென்னமோ ரொம்பச் சரியாத்தான் சொல்லியிருக்கே மன்னார்! அந்த ஆறுமுகனை விட்டா, நமக்கெல்லாம் ஆறுதல் தர்றதுக்கு வேற யாரு இருக்கா?’ எனக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!


‘வாசல்ல வந்த புடவைக்காகரன்கிட்ட சும்மா ஒரு நாலு புடவையைப் பார்த்ததுக்கு இந்த பிராம்மணர் என்னல்லாம் பேசறார் பாரு, மன்னார்! இத்தனைக்கும் ஒண்ணும் வாங்கலை! அதுக்கே இத்தனை நாடகம் ஆடறார்!’ என மாமி சொல்ல, ஒரு பெரிய சிரிப்பலை எழுந்தது அங்கே!


நாயர் விடாமல், ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தைச் சொல்லியபடியே,கூடச் சேர்ந்து சிரித்தான்!
************************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!
[படித்துப் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

Tuesday, November 08, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 33

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 33
32.

‘ஸ்வாமியே சரணம் ஐயப்பா!’ என முழங்கியபடி ஐயப்ப பக்தர் கூட்டம் ஒன்று, தலையில் இருமுடிகளுடன் சாம்பு சாஸ்திரிகள் இருக்கும் தெரு வழியாகக் கடந்து சென்றது.

‘சட்’டென்று திண்ணையிலிருந்து குதித்த மன்னார் அவர்கள் முன் சென்று தரையில் விழுந்து வணங்கினான். மாலை அணிந்திருந்த நானும், நாயரும் அவனுடன் சென்று வணங்கினோம். சாஸ்திரிகள் மனைவி, தயாராக வைத்திருந்த தண்ணீரால் அவர்களது பாதங்களைக் கழுவி, சந்தனம் குங்குமம் இட்டு, நமஸ்கரித்தார். கூடவே சாஸ்திரிகளும் விழுந்து வணங்கினார். எங்களது பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொண்டு, ‘சாமியே சரணம்’ என்னும் கோஷத்துடன் ஐயப்ப சாமிகள் தங்களது யாத்திரையைத் தொடர்ந்தனர்.


அவர்கள் கடந்து சென்றதும், மீண்டும் திண்ணையில் வந்தமர்ந்தோம்.

‘இந்த சாமிங்க மேல மட்டும் எனக்குத் தனி மருவாதி! ஏன்னா, வெளிப்படையா எல்லா மதத்து சாமிங்களையும் கும்புடறதுனாலத்தான். இதான் எனக்கு இவங்ககிட்ட ரொம்பவே பிடிச்ச விசயம். ‘சாமியே சரணம் ஐயப்பா’ன்னு சொல்லிட்டு, அடுத்தாப்புலியே, ‘வாபரின் தோள[ழ]னே’, சாதிபேதம் இல்லாதவனே’ன்னு அடுத்த சரணம் கூப்பிடுவாங்க! இப்பிடி அல்லாருமே இருந்துட்டா எவ்ளோ நல்லாருக்கும்! இத்தனைக்கும் இந்த சாமி ஒண்ணுமே பேசாம, வெறும் முத்திரையைக் கையால காட்டிக்கினு க்கீறாரு. அவுருக்குத் தெரியாத சாஸ்திரமா, தத்துவமா? அப்பிடி இருந்தாலுங்கூட, அமைதியா, தெளிவாக் குந்திக்கினு க்கீறாரு. இதப் பத்தித்தான் இப்ப வரப்போற பாட்டு பேசுது! பாட்டைப் படி.’என்றான் மயிலை மன்னார்.

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரிவே டர்குலப் பிடிதோய்
மலையே மலைகூ றிடுவா கையனே


கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையனே

“கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு அதுவாய் விடவோ?”

‘ரொம்பப் படிக்காதே; படிச்சதெல்லாம் போறும்; பயிற்சியில ஈடுபடு’ன்னு ஒங்காளு சொல்லுவாரே……. அதையேதான் இந்த வரியுல சூட்சுமமா சொல்றாரு அருணையாரு.


எந்தவித ஞானமும் இல்லாம, சும்மா, அல்லாத்தியும் படிச்சு, தலையுல ஏத்திக்கினு, அதுல இன்னா சொல்லிருக்குன்ற அறிவோ, அனுபவமோ இல்லாம, வெறுமுனே வெட்டி வீராப்பா, வர்றவன் போறவன்ட்டல்லாம், வெட்டிச் சண்டை போட்டுக்கினு, மண்டை கொய[குழ]ம்பிப்போயி, கடோசிக்கடைசியா, இந்தக் கொயப்பமே ஜாஸ்தியாயிப்போயி, பைத்தியம் பிடிச்சு அலையுறமாரி என்னிய ஆக்கிடாதேப்பா’ன்னு கதற்ராரு அருணகிரியாரு!


கொஞ்சமாப் படிச்சாலும், அதுல சொன்னாது இன்னான்னு அனுபவிச்சுப் பாக்கணும்! அது தானா வந்திருமா? வராது! அனுபவத்தக் குடுக்கறதுக்கு அந்த முருகன் தயவு வேணும்! ‘அவன் பாதமே கதின்னு ஒரு அரை நிமிச நேரமாச்சும் இல்லாமப் பூட்டேனே’ன்னு ஒரு பாட்டுல சொல்லுவாரே …. நெனைப்பு க்கீதா? அப்பிடி நெனைச்சு உருகினாத்தான் அவனோட அருளு கிடைக்கும். ‘ஓம் சரவணபவா’ன்னு நாயரு சொல்லிக்கினுக்கீறானே, அதுமாரி!


அத்த வுட்டுட்டு, கண்டத்தியும் படிச்சு, மண்டையுல ஏத்திக்கினு, இதுவா, அதுவான்னு புரியாமப் போயி, ……. அல்லாத்துலியும் நல்லதுதான் க்கீது. நான் இல்லேன்னு சொல்லலை….. ஆனா, ரொம்பப் படிச்சுக்கினே இருந்தா, எப்பத்தான் நீ அவனைப் பத்திப் புரிஞ்சுக்கறது? அவன் வேணுமா? இல்லை, வெறும் புஸ்தக அறிவு வேணுமா? இந்த அறிவால இன்னா பிரயோசனம்? கால் காசுக்கு ஒதவுமா இந்த அறிவு?


‘பஜகோவிந்தத்துல’ சங்கராச்சாரியார் சொல்லுவாரே, அதும்மாரி, கடைசில எது ஒதவும்ன்றதைப் பத்தின ஒரு தெளிவு வரணும். படி, நான் வேணாங்கலை! ஆனா, அந்தப் படிப்பை வைச்சு, அவனைப் புடிக்கப் பாக்கணும். அப்பிடியில்லாத, சும்மா வம்பு வலிக்கறதுக்காகவும், தன்னோட அறிவைக் காட்டிக்கறதுக்காவும் படிக்கற படிப்புல்லாம் சுத்த ‘வேஸ்ட்டு’ன்னு சொல்லிப் புரியவைக்கறாரு அருணகிரியாரு.


அவரோட பாட்டுலல்லாம் பாரு. அநேகமா, முருகனைப் பத்திச் சொல்றப்பல்லாம், கூடவே, ராமன், கிஸ்னன், சிவன், லெச்சுமின்னு மத்த சாமிங்களையும் பெருமையாப் பாடியிருப்பாரு.


சாஸ்திரங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கறதுல்லாம், ஒரு நல்ல வளி[ழி]யுல நீ போறதுக்காவ மட்டுந்தான். அத்த வுட்டுட்டு, எங்க சாமிதான் ஒசத்தி, ஒன்னுது மட்டம்னு வம்பு வளக்கறதுக்காவ இருக்கக்கூடாதுன்றத நல்லா, அளு[ழு]த்தந்திருத்தமா சொல்றாரு இந்த வரியுல.


அப்பிடிப் பண்ணினா இன்னா ஆவும்னும் சொல்லிடறாரு!
இதுனால மூளை கொய[குழ]ம்பிப்போயி, பைத்தியந்தான் பிடிக்கும்னு!
நல்லாப் புரிஞ்சுக்கணும் இத்த’ என சற்று உணர்ச்சிவசப்பட்டே பேசினான் மன்னார்.


அவனைச் சற்று தன்நிலைக்குக் கொண்டுவருவதற்காக, ‘அது புரியுது மன்னார்! அதுக்கும், இந்த அடுத்த ரெண்டு வரிக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லுவியே. அதைச் சொல்லு, கேட்போம்’ என்றார் சாம்பு சாஸ்திரிகள்!


‘ஆமாம்ல! கொஞ்சம் ‘ஓவரா’த்தான் பேசிட்டேன் போல’ என ஒரு சங்கோஜத்துடன் சொன்ன மன்னார், மேலே தொடர்ந்தான்!

“கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே! மலை கூறிடு வாகையனே!”

‘வய[ழ]க்கம்போல, முருகனைப் பத்தி பெருமையாச் சொல்றமாரி இருந்தாக்கூட, இதுக்குள்ள ஒரு பெரிய சமாச்சாரத்தச் சொல்றாரு அருணகிரியாரு.

“கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே!”

இதுக்கு இன்னா அர்த்தம்? ‘காட்டுல வேட்டையாடி கண்ணுல பட்ட பிராணிங்களையெல்லாம் கொல்ற வேடர் கொலத்துல பொறந்த பொட்டையானை மாரி அள[ழ]கா க்கீற வள்ளியம்மாவை கட்டிப்பிடிச்சு அணைச்சுக்கற பெருமையான மலை போல க்கீற குமரனே’ன்னு வரும்!


ஆனாக்காண்டிக்கு, இதுக்குள்ளாற இன்னாத்த சொல்ல வராருன்னு பாக்கணும்.


‘மலையே’ன்னு ஒரு வார்த்தை போடறாரு! ஆடாம, அசங்காம, ஒசரமா, பெருசா நிக்கும் மலை! அதுக்குள்ளாற இன்னால்லாம் க்கீதுன்னு ஆராலியும் கண்டுபிடிக்க முடியாது! அப்பிடி, எந்த சாஸ்திரத்தாலியும், வேதத்தாலியும் கண்டுபிடிக்க முடியாத ஆளுதான் நம்ம கந்தன்!
அப்பிடியாப்பாடவரு இன்னா பண்ணினாரு? ஒரு சாதாரண வேடன்மாரி வேசம் கட்டிக்கினு, காட்டுக்குள்ள போனாரு. எதுக்காவ? தன்னையே நெனைச்சு உருகிக்கினுக்கீற வள்ளியைக் கண்ணாலம் கட்டிக்கறதுக்காவ! ஏன், அவுரு நெனைச்சிருந்தார்னா, அந்தம்மாவை ஒரு ‘செகண்டு’ல இட்டாந்திருக்க முடியாதா? ஏன் அப்பிடிச் செய்யலைன்னு யோசிக்கணும்.


இவுரு பரமாத்மா. வள்ளி சீவாத்மா! சீவன் கெடந்து பரமாத்மாவையே நெனைச்சு உருகறச்சே, அந்தப் பரமாத்மாவால சும்மா இருக்க முடியாது! ஒடனே கெளம்பிறும் சீவாத்மாவைத் தன்னோட சேத்துக்கறதுக்காவ! அதுக்கு நேரங்காலம் எடம் பொருள் ஏவல்லாம் பாக்காது! தான் அப்பிடியே போகாம, அந்தச் சீவாத்மா இன்னா நெலையுல க்கீதோ, அதே மாரிப் போயி அத்தச் சேத்துக்கும்.


இப்ப, வள்ளின்ற சீவாத்மா எங்க க்கீது? கண்ணுல பட்டதையெல்லாம் கொல்ற கொடுமையான வேடர் கொலத்துக்கு நடுவுல கெடந்து அல்லாடுது! கண்டத்தியும் படிச்சுக் மூளை கெட்டுப்போயி அலையுற கூட்டத்துக்கு நடுவுல, தன்னை மட்டுமே நெனைச்சுக்கினு க்கீற ஒர்த்தர்மாரி வள்ளி மட்டும் ஒரே நெனைப்புல தவிக்கறாங்க!


அவங்களைத் தன்னோட சேத்துக்கறதுக்காவ, இவுரும் அந்த வேடருங்க மாரியே வேசம் கட்டிக்கினுப் போயி அந்தம்மாவைக் கட்டிப் பிடிச்சுக்கறாரு.

அதுக்குத்தான் இந்த வரியை இப்பிடி வைச்சிருக்காரு அருணகிரி! வெளங்குதா?’ என்றான் மயிலை மன்னார்!


‘அப்படீன்னா அந்த அடுத்த வார்த்தை?’ என இழுத்தேன் நான்!

“மலை கூறிடு வாகையனே!”ன்னு ஏன் போட்டாருன்னுதானே கேக்கறே? அதுலியும் ஒரு பொடி வைச்சுத்தான் சொல்லிருக்காரு’ எனக் கண் சிமிட்டினான் மன்னார்!


‘மலையைக் கூறு போட்டு வெற்றிமாலை சூடினவனே’ன்னு பொருளு இதுக்கு.


இப்பத்தான் முருகனை ஒரு மலைன்னு சொன்னாரு. இதுல இன்னாடான்னா, மலையைக் கூறு போட்டவனேன்னு சொல்றாரு!
அப்பிடி இன்னா மலையைக் கூறு போட்டாரு கந்தன்?


சூரனோட தம்பி தாரகன் ஒரு மாயமலையா நின்னான். அதுக்குள்ளாற போன ஒர்த்தர்கூட….. வீரவாகு மொதக்கொண்டு…… ஆருமே வெளியே வரமுடியாம மயங்கிப் போனாங்க! இது, அதுன்னு படிச்சு அல்லாத்தியும் மண்டைக்குள்ளாற ஏத்திக்கினு மயங்கிப் போனவங்கமாரின்னு வைச்சுக்கோயேன்! விசயம் தெரிஞ்சதும் முருகன் இன்னா பண்ணினாரு? தன்னோட ஞானவேலை அதும்மேல எறிஞ்சாரு! அவ்ளோதான்! அந்த மாயமலை அப்பிடியே பொடிப்பொடியா ஒடைஞ்சுபோயி, மயங்கிக் கெடந்தவங்க அல்லாரியும் தெளிய வைச்சாரு.


அதும்மாரி, அல்லாத்தியும் படிச்சு பைத்தியம் புடிச்சாலுங்கூட, கந்தனை நெனைச்சு தியானம் பண்ணினேன்னா, தன்னோட ஞானவேலால தெளிய வைப்பாருன்னு ரகசியமா சொல்லிக் காட்டுறாரு அருணகிரியாரு!


அதான் இந்த ரெண்டு வரிங்களோட பெருமை! அருணகிரியாரால மட்டுந்தான் இப்பிடி சூட்சுமமாப் புரியவைக்க முடியும்’ எனக் கைகூப்பி வணங்கினான் மயிலை மன்னார்!

‘ஓம் சரவணபவ சோதரனே சரணம் ஐயப்பா’ என்னும் ஒலி எங்கள் அனைவரின் உதடுகளிலிருந்தும் ஓங்கி ஒலித்தது!
***********************
[தொடரும்]
வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!
[படித்துப் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP