Thursday, September 27, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3


முந்தைய பகுதி இங்கே!
1.

கருக்கலில் கண் விழித்தது முதலே மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தான், கந்தன்.

பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து, வாய் கொப்பளித்து, முகம் அலம்பி,

"அம்மா! நான் போயிட்டு வரேன்" என்று, சுவரில் மாட்டியிருந்த படத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு,
குடிசையை விட்டு வெளியே வந்தான்.

பட்டி அருகே சென்றதுமே, "மே.....ஏ" என அன்புடன் வரவேற்றன ஆடுகள்.

படலைத் திறந்து, "தா, தா" என அவைகளை வெளியே விரட்டி, படலை மீண்டும் மூடிவிட்டு, உற்சாகமாக
சீட்டி அடித்தபடியே அவைகள் பின் சென்றான்.

மனம் இன்னமும் அதிகாலையில் அவன் கண்ட கனவைப் பற்றியே சந்தோஷத்துடன் அசை போட்டது.

இந்த வாரத்தில் அவன் இரண்டாம் முறையாகக் கண்ட கனவு இது!

அப்போது....மந்தையிலிருந்து பிரிந்து தனித்துச் செல்ல முயற்சிக்கும் ஒரு ஆட்டைப் பார்த்தவுடன், கையிலிருந்த குச்சியைத்
தரையில் தட்டியபடியே திரும்ப மந்தைக்குள் அதைத் தள்ளிவிட்டு, வழக்கமாக மேய்ச்சலுக்கு விடும் இடத்தை அடைந்தான்.

ஊருக்கு வெளியே இருக்கும் அந்தப் பாழடைந்த கோவில்.

சிலையைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ களவாடிச் சென்றபின்னர்,பூஜைகள் நின்று போய், வருவோரின்றி, சிதிலமாகிக்
கிடந்த கோவிலின் பின்புலம்தான் கந்தன் மேய்ச்சலுக்கு வழக்கமா வரும் இடம்.

அங்கிருக்கும் ஒவ்வொரு இடமும் அவனுக்கு அத்துப்படி!அந்த கோவில். சாமியில்லாத கர்ப்பக்கிரகம். இன்னமும் நிக்கற தெற்குச் சுவர். அதன் பின்னாலிருக்கும்,
ஓங்கி வளர்ந்த அந்தப் புளியமரம்! அதன் அடியில்தான் ஆடுகள் படுத்துறங்கும்.

கொண்டுவந்த கஞ்சிக்கலயத்தை, உள்மேடையில் ஓரமாக வைத்தபின்னர், 'கண்ணுங்களா! நல்லா மேயுங்க!'
என அன்பாகச் சொல்லியபடியே கையோடு எடுத்து வந்த புத்தகத்தைப் பிரித்தான்.

அவனோட அம்மா விட்டுச் சென்ற ஒரே சொத்து அந்த ஓலைக்குடிசையும், 15 ஆடுகளும், இந்தப் புத்தகமும் தான்.

அம்மா இருந்தவரைக்கும், கஞ்சியோ, கூழோ கொடுத்து அவனை இஸ்கோலுக்கு அனுப்பி வைத்தாள்.

ஆத்தாவுக்கு உடம்புக்கு வந்து சீக்காப் படுத்தப்பதான், இவனுக்கு படிக்க முடியாமப் போனது.

வாத்தியாருக்கு இவன் மேல ரொம்பப் பிரியம்.

இந்த நிலைமையிலியும் படிக்க வரானேன்னு.

இப்ப முடியாமப் போச்சுன்னு ஆனதும், ரொம்பவே வருத்தப்பட்டார்.

"கந்தா! உலகம் இந்த ஊரோட நின்னு போகலை. இதுக்கு மேலேயும் இருக்கு. உன்னைச் சுத்தி நடக்கற ஒவ்வொண்ணுத்தையும்
கவனமாப் பாரு.எதையும் மறக்காதே! எல்லாமே ஒருநாளைக்கு உனக்கு உதவும்.பல இடத்துக்கும் போகப் பாரு.
எங்கே இருந்தாலும் நீ நல்லா இருப்பே" எனச் சொல்லி,
இந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

சீக்கிரமே அம்மாவும் செத்துப் போக, இப்போ கந்தனுக்கு இதான் வாழ்க்கை.

காலையில் மேய்ச்சலுக்கு இங்கே வருவது,

சாமி இல்லேன்னாலும், கன்னத்துல போட்டுகிட்டு உள்ளே செல்வது,
மீதிப் பொழுதை அங்கேயே கழிப்பது,

மனசிருந்தா, கோவிலைச் சுற்றி இருக்கற புதரை வெட்டி சீர் படுத்த முயல்வது,


சூரியன் உச்சிக்கு வந்ததும், கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துவிட்டு, கொஞ்சநேரம் கொண்டுவந்த புத்தகத்தைப் படிப்பது,

ஆடுகள் எல்லாம், நிழலுக்காக வந்து அந்தப் புளியமரத்தின் அடியில் உட்கார்ந்து அசை போடுவதைப் பார்த்த்படியே கொஞ்சம் கண்ணசருவது,

சூரியன் மேக்கால மறைஞ்சதும், 'வரேன் சாமி' என இல்லாத சாமிக்கு மீண்டும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு,


'எலே! வாங்கடே போலாம்!" எனச் சொல்லி வீடு திரும்புவது.

கைகால் கழுவிய பின்னர் அடுப்பை மூட்டி, கஞ்சியோ, கூழோ காய்ச்சிக் குடிச்சிட்டு, மறுநாளைக்கும் ஒரு கலயத்துல எடுத்து வெச்சிட்டு
சற்று நேரத்தில் உறங்கப் போவது.

வாரம் ஒருமுறை சந்தைக்குப் போய், ஆட்டுரோமம் போன்ற பொருட்களை விற்று, நல்ல விலைக்கு வந்தால் ஆடுகளை வாங்குவதோ, விற்பதோ செய்து,
வீட்டுக்குத் தேவையான சாமான்களையும் கொஞ்சம் வாங்கி, தானுண்டு, தன் வேலையுண்டு என இருந்து வந்தான் கந்தன்.

சின்னப்பையன், அதுலியும் அப்பன், ஆத்த இல்லாத புள்ளைன்னு எல்லாருக்கும் இவன் மேல அனுதாபம்!


காலையில் எழுந்து சந்தைக்குப் போனான்.

அங்கேதான் கந்தன் செல்லியைப் பார்த்தான்!

[தொடரும்]
************************************************

அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP