Wednesday, January 24, 2007

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி" [2]




"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி" [2]

[முதல் பாகம் இங்கே!]

"இப்ப நான் இன்னாத்துக்கு பூராக் கதையும் வெலாவாரியா சொல்றேன்னா" எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார், ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டே!

"இன்னாத்துக்குன்னா, அப்பத்தான் ஒனக்கு இதுக்கப்பால நடந்தது என்னான்றது புரியும்.

ம்ம்ம்ம்! எங்க விட்டேன்?.... ஆங்!ஆபிசருங்கல்லாம் கையப் பெசஞ்சுகிட்டு நின்னாங்க!
ஏன்னா, வுடறேன்னு சொன்னது 15 டிஎம்சி; அப்பிடி இப்பிடி ஆவியாப் போனாக்கூட ஒரு 12 டிஎம்சி தண்ணியாவுது பூண்டிக்கு வந்து சேந்ந்திரும்னு நம்ம ஆளுங்கள்லாம் கணக்கு போட்டு வெச்சிருந்தாங்க!

ஆனா, நடந்தது இன்னான்னா, தொண்ணித்தாறுலேர்ந்து, டூ டவுசண்டு வரைக்கும் [1996 - 2000]வர்ஷந்தோரும் வந்த தண்ணி இத்த வுட ரொம்ப கம்மி!
ஒரு ரெண்டு தபா வெறும் அரை டிஎம்சி கூட வரலை இந்த நாலு வர்ஷத்துல.

அத்தத்தான் இவனுக போய் பார்த்திட்டு வந்து 'லபோ-திபோ'ன்னு அடிச்சிகிட்டானுங்க.
ஆக மொத்தம், தெலுங்கு கங்கை,..... வெளங்கலீங்க!
சனத்தொகை கூடிப்போயி, மானமும் பொய்யாப் போயி, மெட்ராஸ் சனங்கல்லாம் தண்ணிக்கு ஆலாப் பறக்க ஆரம்பிச்சாங்க!

இப்பதான் நான் சொன்ன அதிசயம் நடந்துச்சு!
பொங்கல் களிச்சு ஒரு 4 நாளு போயிருக்கும் 2002-ல,... சனவரி பத்தொம்பதாந்தேதி.
பெங்களுர்ல சாமி கட்டின ஆசுபத்திரிக்கு மொதலாம் ஆண்டுவிளா!
பெரிய பெரிய ஆளுங்கள்லாம்.. வாஜிபாயி என்ன, கவுனர் என்னான்னு அத்தினி பேரும் குந்திருக்காங்க!

சாமி எளுந்து பேசறாரு. ஆசுபத்திரியோட நோக்கம், ஒடம்பை எப்பிடி சரியா கவனிசுக்கணும்னுல்லாம் பேசிகினே வந்தவரு, டபார்னு ரூட்டை மாத்தினாரு.


மெட்ராஸ் சனங்களோட தண்ணிக் கஸ்டத்தைப் பத்தி பேச்சு திரும்புது.
எப்டில்லாம் கஸ்டப்படறாங்க, வூட்டுக்குப் பக்கத்துல ஓடற அயுக்கு தண்ணியைவெல்லாம் கொணாந்து பொம்பளைங்க சமைக்கறதுக்கும், குடிக்கறதுக்கும் யூஸ் பண்றாங்கன்னு கேக்கறவங்க மனசெல்லாம் கரையற மாரி பேசறாரு.

கூடவே, ஆருமே எதிர்ப்பாக்கத, ஒரு அறிவிப்பையும் வுடறாரு.
இந்தமாரி, சாமி... அல்லாத்தையும் பாத்துகிட்டு இருக்காரு; துட்டு படைச்சவன்லாம், லாரி, டேங்க்ல தண்ணி சப்ளை பண்ண வெசுகிட்டு குஷாலா கீறாங்கோ. ஏளைபாளைங்களைப் பத்தி ஆரும் கவலப்படற மாரி தெரியல. அதுனால.... இவங்க கஸ்டத்தை போக்கறதுன்னு தான் முடிவு பண்ணியாச்சுன்னு!

அவ்ளோதான்.. அங்க இருக்கறவங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்!

சாமி ஒரு நல்ல வார்த்தை சொன்னார்னா, முடிக்காம வுடமாட்டாரு. இனிமே தீந்துது சென்னையோட கஸ்டம்லாம்னு.

மளமளன்னு காரியம் சும்மா மிலிடரி வேகத்துல ஆரம்பிச்சுது.
மொதல்ல ஒரு குரூப் ஆளுங்க, இன்னாடது. ... அகிலபாரத சத்யசாயி சேவா ட்ரஸ்டு... அதிலேர்ந்து போயி, ஆந்திரா கவர்மெண்டைப் பாத்தாங்க.

நம்ம என்டிஆர் மாப்ள சந்திரபாபு நாயுடுதான் சீப்மினிஷ்டர். ஏற்கெனவே, ஆந்திராவுல இதுமாரி ஏகப்பாட்ட வாட்டர் ப்ராஜெக்டுல்லாம் இந்த ட்ரஸ்டு பண்ணி ஒரு 20 லச்சம் பேருங்களுக்கு தண்ணிவசதி பண்ணினதுல்லாம் அவருக்குத் தெரியும்.
ஒடனே சரி, இதுக்கு இன்னா டெக்னிகல் எல்பு[ஹெல்ப்] வோனுமோ அத்தெல்லாம் தாரேன்னுட்டாரு.
எப்பிடியாவது, சென்னைக்கு தண்ணி கிடைக்கும்னா, எது வோணும்னாலும் செஞ்சுக்கலாம்னும் சொல்லிட்டரு.

இப்போ இஞ்சினியருங்கல்லாம் போயி, எதுனால தண்ணி கண்டலேறுலேர்ந்து பூண்டிக்கு போய் சேரலேன்னு டெஸ்டு பண்ணினாங்க. முன்னியே சொன்ன மாரி, காவா[கால்வாய்] சரியாத் தோண்டலை; தோண்டினதும் தூந்து போச்சு; அங்கங்க தேங்கற தண்ணியும் அடுத்தவன் வயப்பக்கமா பூடுது..... இப்படி அல்லாத்தையும் கண்டுபிடிச்சு லிஸ்டு ஒண்ணு தயார் பண்ணினாங்க.




(சில படங்கள்]

கடைசில, ஒரு ரிப்போர்டு தயார் பண்ணினாங்க.
கண்டலேருலேர்ந்து, பூண்டி வரைக்கும் திரும்பவும் புதுப்பிச்சாலொளிய, இந்த கால்வாய்க்கு இனிமே விமோசனமே இல்லேன்னு கண்டிஷனா இருக்கு அதுல!
மொத்த நீளம் இம்மாம் தெரியுமா?
150 கிலோமீட்டரு.
புதுப்பிக்கறதுன்னா இன்னான்னு நெனச்சே!
கண்டலேறு ரிசர்வாயரைப் பலப்படுத்தி, மளை பெய்யாத காலத்துலியும், தண்ணியைத் தேக்கி வைக்கற அளவுக்கு வலுவாக் கட்டணும்
ஏற்கெனவே நோண்டி, தூந்து போன வாய்க்காலை ஆளமாக்கணும்.
கரையை அகலப் படுத்தணும்.
தண்ணி கசியாமப் பாத்துக்கணும்.

இதுக்கான மொத்தச் செலவையும் ட்ரஸ்டே எடுத்துக்கும்னு சொல்லச் சொல்லி சாமி உத்தரவு போட்டுட்டாரு.


ஒர்த்தர்கிட்ட ஒரு நயாபைஸா கேக்கலை. ஒரு நோட்டிசு வுடலை.

லார்சண்ட் டுப்ரோ [L&T] கம்பெனி இந்த வேலைய தானே செஞ்சு தரேன்னு சொல்லிச்சு.

இப்பிடியே பல பேரு முன்னுக்கு வந்தாங்க.

வேலை ஜரூரா ஆரம்பிச்சு அல்லாம் முடிஞ்சுது.

ஒரு வெள்ளோட்டம் போல தண்ணியத் தொறந்து வுட்டுப் பாத்தாங்க!.........

.........பாதித் தண்ணி கூட பூண்டி வந்து சேரலை!!!!


ஏன்???????????!

[நாளை முடிவுறும்!]

ஜெய் சாய்ராம்!



Read more...

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி"

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி"


ரொம்ப நாள் கழித்து, நண்பனைப் பார்க்கும் ஆவலுடன் மயிலை சென்றேன்!

எங்கும் காணோம்!

அக்கம்பக்கத்தில் விசாரித்தேன்!

"அவனா? அவனை ராத்திரி 10 மணிக்கு மேலதான் பாக்கமுடியும்! திருவான்மியூர் வரைக்கும் போயிருக்கான்" எனச் சொன்னார்கள்.

'சரி, இன்றைக்கு எப்படியும் அவனைப் பார்த்துவிட்டுதான் போகப் போறேன். வந்தான்னா, நான் இங்கதான் மாடவீதில இருப்பேன்னு சொல்லுங்க' என அவர்களிடம் சொல்லிவிட்டு, கபாலி கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்து, 'வஸந்த பவனில்' சாப்பிட்டு விட்டு, வெளியே வருகையில், ஒரு அடி என் முதுகில் பலமாக விழுந்தது!

'யாரது' எனத் திரும்பினால், அட்டகாசமாகச் சிரித்தபடி, மயிலை மன்னார்!

"ஆகா! என்ன தரிசனம்! நீ வராமப் போயிட்டியே! அது சரி! நீதான் திருவெம்பாவை, அது, இதுன்னு, என்னை மறந்திட்டியே! இப்பவாவது நெனப்பு வெச்சுகிட்டு வந்தியே! இன்னா சமாச்சாரம்? நல்லா இருக்கியா" என்றபடி என்னை இழுத்துக் கொண்டு சென்றான், மன்னார்.

'ஆமாம்ப்பா! திருக்குறள் உன்கிட்ட கேட்டு ரொம்ப நாளாச்சு. அதான் வந்தேன்' என்றேன்.

'அது இருக்கட்டும். அதுக்கு முன்னாடி நா ஒனக்கு இன்னோரு விசயம் சொல்லணும். இப்ப நா எங்க போயிட்டு வர்றேன்னு கேக்கலியே' என்றான்.

'ஆமா, மறந்தே போனேன். எங்கிருந்து வருகிறாய்' என்று நானும் ஒப்புக்குக் கேட்டு வைத்தேன்.

"நீ அடிக்கடி சொல்லுவியே, சாய்பாபான்னு ஒரு சாமி, அது வந்திருக்கு நம்ம ஊருக்கு. ரொம்ப தபா இங்க வந்தாலும் இதுவரைக்கும் நானும் போய் பாத்ததில்லை. நீயுந்தான் எத்தினி தபா கூப்பிட்டிருப்பே. ஆனா, இப்ப நானே போய் பாத்திட்டு வர்றேன்! ஆச்சரியமா இருக்குல்ல! ஏன்னு கேளு.


ஆரும் செய்யாத ஒரு காரியத்தை அசால்டா செஞ்சிட்டு ஒரு பந்தாவும் பண்ணாம, இப்ப நம்ம ஊரு நல்லா இருக்கணும்னு ஒரு யாகமும் பண்றாரு. அத்தப்பத்தி கேள்விப்பட்டேன். அங்க போனதுந்தான் தெரியுது. எம்மாம் பெரிய வேலைய சத்தமில்லாம செஞ்சிருக்காருன்னு!

இதத்தாம்ப்பா நம்ம ஐயனும் அடிக்கடி சொல்லுவாரு. எதைச் செய்யணுமோ அதைச் செய்யு, செய்யறத ஒயுங்கா செய்யு. ஆரம்பிச்சீன்னா முளுசா செஞ்சு முடி. செஞ்சதைப் பத்தி பீத்திக்காத. முடிச்சியா,... அடுத்தது நம்மால இன்னா செய்ய முடியும்னு அத்த செய்யப் போ" இப்படி பல குறள்ல சொல்லியிருக்காரு! இந்த மாரி நா இதுவரைக்கும் பாத்ததேயில்ல."
என்று ஒரு பெரிய பிரசங்கமே செய்து விட்டான் மன்னார்.

வலைப்பூக்களில் இது பற்றிய ஒரு புரியாத நிலையே நிகழ்வதைக் கண்டு மனம் நொந்து போயிருந்த வேளையில் அவன் இப்படிச் சொன்னதும், 'கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல' உள்ளூர் ஆளைக் கேட்டு அதை எழுதலாமே என எண்ணி, அவனைப் பார்த்து,
நடப்பதையெல்லாம் அவனுக்கு விவரித்தேன்.

"கெடக்கறாங்க வுடு! அவங்களப்பத்தி நீ கவலைப்படாதே! ஆனா, நான் சொல்றதை அப்படியே எளுதிப் போடு. புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்கட்டும்" என அவன் சொன்னதை இங்கு பதிகிறேன்.

ஆதி முதல் அந்தமாக அவன் சொன்னதை எழுத ஒரு சில பதிவுகள் பிடிக்கும்!

சென்னப்பட்டணமா இருந்த நம்ம மெட்ராஸ் இங்லீஷ்காரன் காலத்துல இருந்தே ரொம்ப ஃபேமஸான ஊரு.
ஊரு பெருசாக, பெருசாக, ஆளுங்களும் சாஸ்தியாகி, தண்ணிக்கு எப்பவுமே தட்டுப்பாடுதான்!
ஏன்னா, இங்க ஒரு ஆறோ, குளமோ பெருசா சொல்லிக்கற மாரி ஒண்ணுமில்ல.
கொஞ்ச தூரம் தள்ளி ஓடற ஒரு ஆறுதான்.


ஒரு வெள்ளக்காரன், ஃப்ரேஸர்னு பேரு அவனுக்கு, அவந்தான் மொத்மொதலா, 1884ல, சோளவரம், ரெட் ஹில்ல்ஸ் பக்கத்துல ஒரு டாம் கட்டி, மளைக்காலத்துல அந்த ஆத்துல வர்ற தண்னியைத் தேக்கி வெச்சு, கொஞ்சம் நம்மள காப்பாத்தினான்.
அப்ப நம்ம ஊருல எத்தினி பேருன்ற?
வெறும் நாலரை லெச்சம் பேருதான்!
அவனுகளுக்கே இந்தப் பாடு!
குடிக்கறதுக்கு, பாசனத்துக்கு, அல்லாத்துக்கும் இந்தத் தண்ணிதான்.
குடிக்கற தண்ணி கீள்பாக்கத்துலஒரு டாங்குல சுத்தி பண்ணி நமக்கெல்லாம் வந்துச்சு.

கொஞ்ச நாள் களிச்சு, பாசனத்துக்கு வர்ற தண்ணிய நிப்பாட்டிட்டாங்க.
குடிக்கறதுக்கு மட்டும் கீள்பாக்கம் தண்ணி.
இப்படி கொஞ்ச காலம் ஓடிச்சு.

சொதந்தரம் கெடச்சும், ஒண்ணும் பெருசா ஆரும் இந்த தண்ணி விசயத்துக்கு முயற்சி பண்ணலை.
1968லதான் செண்டர்ல கொடுத்த ப்ரெஷர்னால, கிருஸ்னா நதிலேர்ந்து தண்ணி தரதா, ஆந்திரா ஒத்துகிச்சு. மகாராஸ்ட்ரா, கர்நாடகா இதுங்களும் தன் பங்குக்கு கிருஸ்னாலேர்ந்து தண்ணி தரணும்னும் முடிவாச்சு.
மொத்தம் 15 டிஎம்சி தண்ணி இவங்க மூணு பேரும் சேர்ந்துகொடுக்கறதா பேச்சு.

ஆச்சா?

தண்ணி தராங்க, சரி. எப்படி அத்த இங்க கொண்டாறது? இதுல பேச்சு வர்த்தை..... இளுத்தடிச்சாங்க. ஒண்ணூம் முடிவாவல. அப்பிடியே கெடப்புல போட்டுட்டாங்க.

இதான் இப்பிடி ஆயிருச்சேன்னு, அப்போ மினிஷ்டரா இருந்த நம்ம கருணாநிதி, சென்னைவாசிங்களுக்கு தண்ணி வரணும்னு ஒரு திட்டம் போட்டாரு. எவன் எவன்டயோ போய் கேக்கறத விட, வீராணத்துலேர்ந்து கொளாய் மூலமா தண்ணி கொண்டு வந்த்துரலாம்னு எவனோ சொன்னதக் கேட்டு நெறய பணம் செலவளிச்சு முயற்சி பண்னினாரு. பேரு கெட்டதுதான் மிச்சம்! தண்ணியும் வரல; ஒண்ணும் வரல. வாங்கின கொளாய்லாம் அங்கங்கியே கெடந்து சீரளிஞ்சதுதான் லாபம்!

அடுத்தப்பல எம்ஜியாரு வந்தாரா! அவர் தன் பங்குக்கு எதனாச்சும் செய்யணும்னு நெனச்சாரு. கிருஸ்னா திட்டந்தான் இதுக்கு வளின்னு முடிவு பண்ணினாரு.
ஆந்திரா சீஃப்மினிஷ்டரோட பேச்சு வார்த்தை நடத்தினாரு.
ரெண்டு டாம் கட்டி நம்ம ஸ்டேட் பார்டருக்கு கொஞ்சம் பக்கத்துல வரைக்கும் கொண்டு வர்றது; கண்டலேறுன்ற எடத்துல ஒரு ரிஸர்வாயர் கட்டறது; அங்கேருந்து ஒரு வாய்க்கா கட்டி நம்ம பார்டருக்குள்ள வந்து போண்டி தேக்கத்துல அத்த சேர்த்துறதுன்னு முடிவாச்சு.

ஆனா, இதுக்குள்ள ஒரு சூட்சுமம் இருக்கு! அத்த சொல்றேன் கவனமா கேளு.

அப்ப இருந்த ஆந்திரா சீஃப்மினிஷ்டர் படா கில்லாடி!

கிருஸ்னா தண்ணிய ஆந்திராவுல இருக்கற ஊருக்கெல்லாம் பாசனத்துக்கு எப்பிடியாவது பயன்படுத்தணும்னு ஒரு ப்ளான் மனசுக்குள்ள வெச்சிருந்தாரு.

நாம கொடுக்கற பணத்தை வெச்சு, தன் ஊருக்கெல்லாம் தண்ணி காட்டிரலாம்னு அவர் திட்டம்!

அதனால, இதுக்கு ஆதரவு கொடுக்கறதா போக்கு காட்டி, இந்த கண்டலேறு-பூண்டி கால்வாய்க்கு, "தெலுங்கு கங்கா"ன்னு ஒரு பேரும் வெச்சு , இந்திரா அம்மாவ வரவளச்சு 83-ல, மெட்ராஸ்ல ஒரு பெரிய தடபுடலா நடந்து முடிஞ்சது!

மொத்த மதிப்பிடு அப்ப 2,500 கோடி ரூவா!
ஆந்திரா 2000 கோடி அவங்க சைடுல டாம் காட்ட, தமிள்நாடு 500 கோடி இந்த கண்டலேறு-பூண்டி கால்வாய்க்கு கொடுக்கறதா ஒப்பந்தம் போட்டாச்சு!

போட்ட திட்டப்படி ரெண்டு பேரும் பணத்தை கொடுக்க, ஆந்திரர, கண்டலேறு வரைக்கும் ரொம்ப சிரத்தையா அல்லாத்தையும் கட்டிட்டாங்க1
இந்த கண்டலேறு-பூண்டிக்கு மட்டும் வெறூம் குளியத் தோண்டி போட்டுட்டு, தெலுங்கு கங்கா திட்டம் வெற்றிகரமா முடிஞ்சுபோச்சுன்னு 96-ல ஒரு பெரிய விளாவையும் நடத்தி காமிச்சுட்டாங்க!

ஒப்பந்தப்படி, ஆவியாப் போறது போவ, 15 டிஎம்சி தண்ணி பூண்டிக்கு வரணும்.

ஆனா, ஒரு சொட்டு கூட வரல!
இன்னாடா, அத்தினி தண்ணியுமா அவியப் பூடுச்சுன்னு நம்ம அபீசருங்க அல்லாம் விளுந்தடிச்சிகினு ஓடிப் போயிப் பாத்தனுவ!

பாத்தா ஆளுங்களுக்கு பகீர்னு ஆயிப் போச்சு!

கால்வாயின்னு ஒண்ணுமே இல்லை! அங்கங்க அவன் அவன் பாத்தி வெட்டி, வர்ற தண்ணிய அல்லாம், தன் வயலுக்கு திருப்பி வுட்டுருக்கான்!

கால்வாயும் சுத்தமா இல்ல! குட்டையும் குளியுமா தண்ணி தேங்கிக் கெடக்குது!

எப்பிடி தண்ணி வரும்!

போட்ட பணமும் அம்போன்னு போச்சு!
தண்ணியும் வரல!

ஆஹா! கவனிக்காம விட்டுட்டோமேன்னு, திருடனுக்கு தேள் கொட்டின மாரி அல்லாரும் கையப் பெசைஞ்சுகிட்டு நின்னாங்க!


அப்போதான்...........................
ஒரு அதிசயம் நடந்திச்சு!!!!!!!!!!!

[நாளை தொடரும்!]

சாய்ராம்.





Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP