Wednesday, October 04, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" "வான் சிறப்பு"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- "வான் சிறப்பு"

"நான் கொஞ்சம் அவசரமாப் போகணும். சும்மா உன்னைப் பார்த்து நாளாச்சேன்னு வந்தேன்" என்றேன் மயிலை மன்னாரிடம்.

"அதான் கானடால்லாம் போயிட்டு அண்ணாத்தையெல்லாம் பாத்துட்டு வந்தியே! அத்தப் பத்தி ஒங்கூட பேசலாம்னு பாத்தா வந்தவொடனியே ஓடறேன்ரியே! இன்னா சமாச்சாரம்?" என்று முறைத்தான் மன்னார்.

"தப்பா நெனச்சுக்காதே மன்னார். நம்ம சிறில் வந்து ஒரு தலைப்பைக் குடுத்து ஏதாவது எழுதுங்கன்னு சொல்லியிருக்காரு. அதைப் பத்தி கொஞ்சம் யோசிக்கணும். இன்னொரு நாள் சாவகாசமா வந்து எல்லா விஷயமும் சொல்றேனே" என்று நழுவ முயற்சித்தேன்.

விடுவானா மன்னார்!

அப்டி இன்னா ஒரு தலப்பு? சொல்லு!" என்றான்.

'மழை' என்கிற தலைப்பில் கதையோ கவிதையோ எழுதணுமாம். எனக்கு ஒண்ணும் தோணலை. அதான் இப்படியே கொஞ்சம் பீச் பக்கம் காலார போனா எதனாச்சும் தோணாதா என்று போகிறேன்" என்றேன்.

"ப்பூ! இதுதான் விசயமா? இதுக்கா இப்டி பம்மிக்கினு கெடக்கே நீ?" என்று சற்று ஏளனமாகப் பார்த்துவிட்டு,"அதான் நீ வயக்கமா ஒரு அய்யன் பதிவு போடுவியே அதுலியே போட்றவேண்டியதானே! அத்த வுட்டு இன்னாமோ சொணங்கிக்கினு கீறியே! ஒரு தனி அதிகாரமே நம்ம அய்யன் இத்தப் பத்தி எளுதியிருக்காரு தெர்யுமா?" என்று மிதப்பாகப் பார்த்தான் என்னை.

"அப்படியா! இது நல்ல யோசனையாய் இருக்கே! என்னன்னு சொல்லு கேட்போம்." என்று அவசர அவசரமாக தாளையும் பேனாவையும் எடுத்தேன்.

"ரொம்ப தூரம் போவ வேணாம்! ரெண்டாவது அதிகாரத்துலியே இதத்தான் சொல்லியிருக்காரு அய்யன். பேரு வான் சிறப்பு. எளுதிக்கோ. ஒனக்கு ஒண்ணுன்னா நா வுட்ட்ருவேனா கண்ணு" எனச் செல்லமாக சீண்டினான் மயிலை மன்னார்!

இனி வருவது குறளும் அதற்கு அவனது விளக்கமும்.

"அதிகாரம் 2 "வான் சிறப்பு"

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. [11]

இப்போ நீ இருக்கே. நானும் இருக்கேன். ஆனா, நாளைக்கி நீயோ நானோ இருப்போம்னு சொல்ல முடியுமா? முடியாது இல்லியா? ஆனா, இந்த தேவர்னு சொல்றாங்களே , மானத்துல இருக்காங்கன்னு சொல்வாங்களே அவனுங்கல்லாம் ஏதோ அமிர்தம்னு ஒண்ணைக் குடிச்சிருக்காங்களாம். அதனால சாகாம இருப்பாங்களாம். ஆனா, நீயோ, நானோ, இல்லை இந்தா நிக்கறானே கேப்மாரி, கண்ணாயிரம், இன்னும் அல்லாரும் அப்டி இருக்க மாட்டோம். செத்துப் போயிருவோம். ஆனா, இந்த ஒலகம் சாகுமா? சாவாது. ஏன்னா நீ போனா ஒன் புள்ளைங்க, அது மாரி இன்னும் எத்தினியோ பேரு இருந்துகினேதான் இருப்பாங்க. அதனால இந்த ஒலகம் சவறதிக்ல்லை. அது ஏன்னு கேளு. ஏன்னா, மளை எப்பவும் தவறாம பெஞ்சுகினே இருக்கறதாலத்தான் அல்லா உசுரும் வாளூது. அதனால நமக்கெல்லாம் அமிர்தம் எதுன்னா இந்த மளைதான். அப்டீன்னு சொல்றாரு இதுல. அந்த மளைதான் மானத்துலேர்ந்து அமிர்தமாக் கொட்டுதாம்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை. [12]

இன்னாடா துப்பாக்கின்னு அல்லாம் சொல்றாரேன்னு மயங்காதே. துப்பார்க்குன்னா, சாப்ட்றவனுக்குன்னு அர்த்தம்.
துப்பாய துப்பாக்கின்னா, நல்ல பதார்த்தத்தை உண்டுபண்ணின்னு பொருளு. இன்னா சொல்றார்ன்னா, மளை இல்லாம பயிர் பண்ண முடியாது. சமைக்கறதுக்கும் தண்ணி வோணும். அப்பப்ப விக்கிச்சின்னு வையி, அதுக்கும் இந்த தண்ணிதான் வோணும். அப்டி அல்லாத்துக்குமா இருக்கறதுதான் மளையாம்.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. [13]

பெய்ய வேண்டிய நேரத்துல மளை பெய்யலைன்னு வெச்சிக்கோ, மவனே, இன்னாதான் இம்மாம் பெரிய கடல் இந்த பூமியை சுத்தி இருந்தாலும், அவன்/அவன் பசி பட்டினின்னு துடிச்சிப் பூடுவானாம்.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். [14]

காலாகாலத்துல மளைங்கற பெரிய பொதையலு பெய்யலேன்னு வெச்சுக்கோ, நிலத்த சாகுபடி பண்ற எவனும் இந்த ஏரு, கலப்பை இத்தெல்லாம் எட்த்துக்கினு வயவெளிக்கு போவமாட்டானாம். மளை இல்லாட்டி இன்னாத்த பயிரு பண்றது? நீயுந்தான் இன்னாத்த சாப்ட்றது?

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. [15]

மளை பெய்யலேன்னா அத்தினி பேரும் காலி. ஒரு வருசம் மளை இல்லேன்னு வெச்சுக்கோ, அவ்ளோதான், அவன்அவன் ஐயோ அம்மான்னு துடிச்சிப் போயிருவான். அடுத்த வர்சமே போட்டு ஒரு தாக்கு தாக்கிச்சின்னு வையி, அல்லாரும் ஆகா ஓகோன்னு கூத்தாடுவான். இப்டி ரெண்டையும் செய்யக் கூடியதுதான் இந்த மளையோட பெருமை.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. [16]

மானத்துல மேகம் தெரண்டு 'சோ'ன்னு மளை பெய்யாங்காட்டி, இந்த நெலத்துல ஒரு புல் பூண்டு கூட தல தூக்க முடியாது, தெரிஞ்சுக்கோ!

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். [17]

மளை எங்கேர்ந்து வருதுன்றே? கடல் நீரு ஆவியாகி, அது மேகமாயி, திருப்பியும் அந்தக் கடலுக்கே மளையாத் தருது. அப்டி தர்றதுனால்தான் கடல்ல இத்தினி முத்து, பவளம் மீனுன்னு பலதும் நமக்கு கிடைக்குது. அப்டி இல்லைன்னா, கடல்ல இருக்கற செல்வம்லாம் குறைஞ்சு போயிடும்.அய்யன் இதுல ஒரு பெரிய தத்துவம் சொல்லியிருக்காரு.

நம்ம சிவக்குமாரு தம்பி இந்த பொருளாதாரத்தைப் பத்தி ஒரு தொடரு எளுதிக்கினு இருக்காரே, அவருக்கு இது புரியும். சும்மா பணத்த பெட்டிலியே பூட்டி வெச்சா அது எதுக்கும் ஒதவாது. எடுத்து வெளியே வுடணும் அப்போதான் அது ஒண்ணுக்கு பத்தாகும். அது மாரித்தான், கடல் தண்ணியே திருப்பியும் மளையா வந்து ஒண்ணை பத்தாக்குதாம்! புரியுதா?

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. [18]

தை பொறந்தா பொங்கலு, ஆடி மாசம் கூளு ஊத்தறது, பொம்மைக்கொலு வெச்சு ஆடிப் பாடறது, தீவாளி, ரம்ஜான், கிரிஸ்துமஸுன்னு சும்மா மாசா மாசம் கொண்டாடரோமே, நோட்டு புஸ்தவத்த எடுத்துக்கினு டொனேசன் வசூல் பண்ண வந்துருவாங்களே, அது அத்தினியும் நின்னு போயிரும், இந்த மளை பெய்யலீன்னா. அப்புறமா அல்லா சாமிக்கும் வெரும் தட்டுதான். பூசையும் கிடையாது. பண்டிகையும் கிடையாது! அல்லாத்துக்கும் மளைதான் துருப்பு சீட்டு மாரி!

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். [19]

மேல சொன்னேனே அது போல, ரசீது புஸ்தவத்தை எடுத்துக்கினு எவனாவது வந்தான்னா நீயும் நானும் இன்னாத்தை குடுக்கறது, இங்கியே பஞ்சம் அவுத்துப் போட்டுக்கினு ஆடிச்சின்னா? போடா போக்கத்தவனேன்னு வெரட்டி வுட்ருவோமில்ல? மளை பெய்யலேன்னா தானமாவது, தருமமாவாது? ஒண்ணும் கெடையாது. அல்லாம் நின்னு பூடும்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. [20]

அவன் எந்த ஊரு ராசாவா இருந்தாலும் சரி, தண்ணி இல்லேன்னா அவன் ஆட்சி காலி. பெரிய அரசியல் தத்துவத்தை சர்வ சாசாதாரணமா அசால்ட்டா சொல்லிட்டு போயிட்டே இருக்காரு நம்ம அய்யன். அதேபோல, காவேரி, கொள்ளிடத்துல தண்ணி வந்துக்கினே இருக்கணும்னா, மளைன்னு ஒண்ணு பெஞ்சாத்தான் கண்ணு....... தெரிஞ்சுதா, மளையோட அருமை.

என்று மூச்சு விடாமல் முடித்தான் மன்னார்.

"போ! போயி இத்த ஒங்க சிறில் அண்ணாத்தைகிட்ட நான் குடுத்தேன்னு சொல்லு" என்று சொல்லி, இனிமே நீ எங்கே பீச்சுக்கு போறது? பேசாம நம்ம நாயர் கடை டீ, மசால் வடையைத் துன்னுட்டு வூடு போயி சேரு. அடுத்த வாரம் வா. ஒங்க அண்ணாத்தையப் பத்தி ஒரு அதிகாரம் சொல்றேன்" என்று நாயரை நோக்கினான் மயிலை மன்னார்.

நாம் வந்த வேலை இவ்வளவு சுளுவாய் முடிந்து விட்டதே என அன்புடன் அவன் தோளில் கை போட்டு, மசால் வடையைச் சுவைக்கலானேன்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP