Sunday, February 10, 2008

"குட்டிராணி!" [காதலர் தின ஸ்பெஷல்!]

"குட்டிராணி !" [காதலர் தின ஸ்பெஷல்!]




மாலை நேரம்!
சூரியன் மறைந்து செவ்வானம் படர்கிறது!


ஆற்றங்கரை மணல்மேட்டில் அமர்ந்தபடி கூடுதேடி பறந்துவந்து மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகளைப் பார்க்கிறேன்!
ஆசையுடன் தான் கொண்டுவந்த இரைக்காக குஞ்சுகள் ஆவென வாய்திறக்க, ஒரு தாய்மையின் முழுப்பரிவையும் வெளிக்காட்டி அக்கறையாய் ஊட்டுகின்ற தாய்ப்பறவைகளைக் கவனிக்கிறேன்!
அமைதியாக சற்றுத்தள்ளி அமர்ந்துகொண்டு, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் அதுதான் தந்தையாக இருக்க வேண்டும்!

தனக்கென்ன என்பதுபோன்ற ஒரு அலட்சியத்துடன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறது!

காற்று இப்போது சற்று வேகமாக வீசுகிறது!


மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்து ஆடி ஆடி கீழே விழுகிறது!
உதிர்ந்து விழும் முன் அதற்குத் தெரிந்திருக்குமா, தான் எங்கே சென்று விழப்போகிறோம் என?
ஒட்டியிருந்த நினைவுகளெல்லாம் கலைந்து எங்கேயோ செல்கிறோமே என?
இப்படி ஒரு நினைவு தலைதூக்க சட்டென பார்வையை அகற்றி தலையை உயர்த்திப் பார்க்கிறேன்.

வெண்மேகக் கூட்டங்கள் யாரையோ அவசரமாகப் பார்க்கச்செல்வதுபோல் விரைந்து கொண்டிருக்கின்றன!


யாராக இருக்கக் கூடும்?

அல்லது யாருக்காக இவ்வளவு வேகமாகச் செல்கின்றன?

எவர் அனுப்பிய காதல் நினைவுகளைச் சுமந்துகொண்டு இவைகள் செல்கின்றன?


என் நினைவுகளையும் சுமந்து செல்ல ஒரு மேகம் இருக்கிறதா?
என்னுடைய மேகம் எது?
தெரிந்துகொள்ளும் ஆவலுடன் அவைகளைப் பார்க்கிறேன்!
இருப்பதிலேயே குட்டியாய் இருந்த ஒரு வெண்மேகம் என்னைக் கவனிப்பதைப் போல ஒரு உணர்வு!

ஓ! இதுவா எனக்கான மேகம்!
அதற்கு 'குட்டிராணி' என ஒரு பெயர் சூட்டிச் சிரிக்கிறேன்!
இதென்ன பைத்தியக்காரத்தனம் என ஒரு எண்ணம் வர, அதனை அலட்சியப்படுத்தி ஒதுக்குகிறேன்!
'குட்டிராணி'யைப் பார்த்துச் சொல்கிறேன்!

'இங்கே ஒருவன் இன்பநினைவுகள் இதயத்தில் தாங்கி இன்றுவரை இருக்கிறான்! இனிமேலும் நினைத்திருப்பான்! இனியுன்னைச் சந்திக்கவில்லையெனினும் நினைவுகள் நிறைந்திருக்கும் இவனுள்! நினைவுகள் மட்டுமே சுகம் தரும் இவனுக்கு! அவளை இன்பமாய் எப்போதும் இருக்கச் சொல்!'

'குட்டிராணி' எனக்காக, என் சொல்லைக் கேட்டு, அதை முழுதுமாய் உள்வாங்கிக் கொள்வதுபோல், ஒரு நொடி நிற்கிறது!


நான் ஒன்றும் கனவெதுவும் காணவில்லையே!
கண்களைக் கசக்கிவிட்டுப் பார்க்கிறேன்!
நம்பினால் நம்புங்கள்! நம்பாவிடிலும் நட்டமில்லை!
எங்கிருந்தோ இன்னொரு குட்டி மேகம் இதனோடு சேர்ந்து இப்போது என் 'குட்டிராணி' சற்றுப் பெரிதாகி இருக்கிறது!

என்னுடைய செய்தி அதனுடன் சேர்ந்துவிட்டது என மனத்தில் ஒரு குதூகலம்!

இன்னும் சற்று உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தேன்!
குட்டிராணி இப்போது சற்று விரைந்து செல்லுவது போலத் தோன்றியது!
ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அது நகர்வதாகப் பட்டது!
குட்டிராணிக்கு முன்னால் ஒரு பெரிய வெண்மேகம்!
அதையே நோக்கி விரைகிறது என் குட்டிராணி!
இதோ! அந்தப் பெரிய மேகத்தைத் தொட்டு..... இதென்ன!

குட்டிராணி அதற்குள் நுழைகிறதே!
பெரிய மேகத்துடன் இப்போது சிறிது சிறிதாகக் கலக்கிறது!
இப்போது அதைக் காணவில்லை!
எனக்குள் லேசாக ஒரு பதற்றம்!


குட்டிராணி தன் இலக்கை நோக்கிச் செல்ல முடிவெடுத்து, சரியான வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டது என மட்டும் புரிந்தது!
அந்த பெரிய மேகத்தின் வடிவைப் பர்த்துக் கொண்டிருந்தேன்!

ஒரு பெரிய யானை தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதுபோல ஒரு காட்சி!

மேகம் தன் கடமையைச் செய்ய விரைகிறது எனப் புரிந்தது!
'சீக்கிரமாய் வா! உன் பதிலை எதிர்பார்ப்பேன்' என அதைப் பார்த்துக் கத்தினேன்.
ஒரு இனம்புரியா உணர்வுடன் எழுந்தேன்!

ஒட்டியிருந்த மணல்துகளைத் தட்டிவிட்டு ஆற்றில் கால் நனைக்கச் சென்றேன்!

நிலவு வெளிவரத் தொடங்கியிருந்தது!
********************************************


Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP