Friday, October 01, 2010

"எந்திரன்" திரை விமரிசனம்

"எந்திரன்" திரை விமரிசனம்

இப்பத்தான் படம் பார்த்திட்டு வர்றோம்!

ஆக்கபூர்வமான செயல்களுக்காக உருவாக்கப்பட்ட 'எந்திரனுக்கு' மனித உணர்வுகள் இல்லையென்ற காரணத்தால், இது தவறாக திசை திரும்பும் அபாயம் இருக்கிறது எனச் சொல்லி மனிதர்கள் நிராகரிக்க, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு 'சயின்டிஸ்ட்' ரஜினி மெல்ல மெல்ல தன் ஆராய்ச்சித் திறனால் அதற்கு நவரச உணர்வுகளையும் அதற்கு ஊட்ட, அது இப்போது தன் எஜமானனின் காதலியான ஐஸ் மீதே காதல்வயப்பட்டு, உருவாக்கியவனை எதிர்க்கிறது.
அதற்குப் புரியவைக்க காதலர் இருவரும் எவ்வளவோ முயன்றும், அது கேட்காததால், ஆத்திரத்தில் அதனை உருக்குலைத்து, குப்பையில் வீசிவிடுகிறார் விஞ்ஞானி ரஜினி.
அதைப் பொறுக்கியெடுத்துவந்து, அதற்கு மீண்டும் செயல்திறனூட்டி, கூடவே அழிவு சக்தியையும் ஊட்டிவிடுகிறார் இன்னொரு விஞ்ஞானி.
வெளிநாட்டிலிருக்கும் தீய சக்திகளுக்கு அதை விற்கும் நேரத்தில், எந்திரன் ரஜினி, அவரையே கொன்றுவிட்டு, தன்னைபோலவே பல நூறு எந்திரன்களைப் படைத்து, வில்லனாகிறது .
ஐஸையும் கடத்திக் கொண்டுவந்து, நகரில் அட்டூழியங்கள் செய்து, நாட்டையே கதி கலங்கடிக்கிறது.
விஞ்ஞானி ரஜினி அதை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை!

வழக்கமான ரஜினி படமல்ல இது!

ஆனால், மிகத்திறமையாகத் தன் பாத்திரப் படைப்பைப் புரிந்துகொண்டு அட்டகாசமான நடிப்புத் திறமையைக் காட்டியிருக்கிறார் ரஜினி! அவரது மிடுக்கு கொஞ்சம் கூடக் குறையவில்லை!

கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுமே ரஜினி ஸ்டைலைப் பின்பற்றி, 'எண்ட்ரி சாங்' என்ற பெயரில் அடிக்கும் கூத்தைப் பார்த்தோ என்னவோ, இந்தப் படத்தில் அப்படி ஒரு அபத்தம் இல்லை என்பதே மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

சொன்னதைக் கேட்கும் எந்திரனாகவும், பின்னர், வில்லனாக மாறும் போதும், மிக அருமையாக நடித்து, தியேட்டரில் விசில் கிளப்ப வைக்கிறார் ரஜினி!

விஞ்ஞானியாக வரும் ரஜினி, புத்திசாலி மட்டுமே தவிர, வீரதீரன் இல்லையென்பதால், அடக்கியே அந்தப் பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார்!

ஐஸ் வரும் அனைத்துக் காட்சிகளிலூம் நெஞ்சை அள்ளுகிறார். அவரது காஸ்ட்யூமும், நளினமும் ரசிகர்களைக் கிறங்கடிக்கச் செய்யும்!

சந்தானம், கருணாஸ் காமெடி ஏதோ பெயருக்குத்தான்.
க்ளைமாக்ஸ் காட்சிகள் எல்லாமே கிராஃபிக்ஸ்தான் என்றாலும் ரொம்பவும் உழைத்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர். தமிழ்ப் படவுலகுக்கு, ஏன் இந்தியப் படவுலகுக்கே இது ஒரு புதுமை எனச் சொல்லலாம். ஆங்கிலப் படங்களில் பார்த்திருந்தாலும், நமது ஆள் ஒருவர் இப்படி கவனமாகவும், கேலிக் கூத்தாகவும் இல்லாமல் செய்திருப்பது நமக்குப் பெருமையளிக்கும் ஒரு விஷயம் எனச் சொல்வேன்.
அந்தக் கொசுக் காட்சி தேவையற்ற ஒன்று. வெட்டி எறியலாம் அதை!

ஏ.ஆர் ரஹமானின் பாடலிசையும், பின்னணி இசையும் மேறகத்திய பாணியில் சவால் விடுவதுபோல அமைந்திருக்கிறது. பாடல்கள் முணுமுணுக்க வைக்கும் கண்டிப்பாக இந்தக்கால இளைஞர்களை!

பாடல் காட்சிகளுக்கான நடன அமைப்பும், உடைகளும், காட்சி படமாக்கப்பட்ட இடங்களும் அத்தனையும் அருமை!
நடனக் காட்சிகளில் தனது ஸ்டைலைக் காட்டும் சந்தர்ப்பங்களைத் தவறவிடாமல் செய்திருக்கிறார் ரஜினி!

முழுக்க முழுக்க ரஜினியே படம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும், கொஞ்சம் கூடப் போரடிக்கவில்லை[ அந்தக் கொசுக் காட்சி ஒன்றைத் தவிர!].
இரண்டரை மணிக்கும் அதிகமாக ஓடினாலும், விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார் ஷங்கர்!

கடைசிக் காட்சியில், தான் செயலிழக்கும்போது, எந்திரன் பேசுகின்ற வசனம் நம் எல்லாரையும் கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும்!... வைக்கணும்!
"மனுஷன் படைச்ச இரண்டு அதிசயங்கள்.... ஒன்று நான், இன்னொன்று நீ !" என எந்திரன் ரஜினி ஐஸைப் பார்த்துச் சொல்லும்போது விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது!

குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். நல்ல தியேட்டரில் பாருங்க! நிச்சயம் ரசிப்பீங்க!

மொத்தத்தில்,.....
எந்திரன்..... தமிழனைப் பெருமைப்படவைக்கும் ஒரு முழுச் சந்திரன்! பிரம்மாண்டம்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP