ஆடேலோர் எம்பாவாய் - 7 [17]
ஆடேலோர் எம்பாவாய் - 7 [17]
[இறையை நினைந்ததும், இறைவன் நினைவுக்கு வருகிறான்! மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது! குளியாட்டமும்தான்!]
செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 17
தாமரை போலும் சிவந்த கண்களையுடைய திருமாலிடத்திலும்,
திசைக்கு ஒன்றென தலைகளையுடைய நான்முகனிடமும்,
இவரைப் பணிந்து நிற்கும் தேவர்களிடமும்
வேறெங்கினுமெ இலாத இன்பப்பெருவெள்ளம்
நமக்கே ஆகுமாறு நலமுடன் நல்கி
ஏ! தேன் உண்ணும் கூந்தலுடைய பெண்ணே!
நாம் செய்திடும் குற்றங்களெல்லாம் போக்கி
நாம் அனைவரின் இல்லங்களிலும் எழுந்தருளி
செந்தாமரை போலும் சிவந்த பொற்பாதங்களை
நமக்கெல்லாம் தந்தருள் செய்யும் பெருங்கருணை
உடையவனை, அழகிய கண்கள் உடைய நம் அரசனை
அடிமையாம் நமக்கெல்லாம் இனிய அமுதமானவனை
நம்முடைய இறைவனாம் சிவனைப் பாட
நல்வளம் பெருகி விளங்கிட எண்ணி
தாமரை மலர் நிறைந்த இத்தடாகத்தில்
பாய்ந்து நீந்தி ஆடடி என் பெண்ணே!
அருஞ்சொற்பொருள்:
செங்கணவன் - செங்கண் அவன், திருமால்; திசைமுகன் - பிரமன்; கொங்கு - தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி - குற்றம் நீக்கி;
சேவகன் - ஊழியன்; அங்கண் - அழகிய கண்கள்; பங்கயம் - தாமரை.
********************************************************
அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!
தேன்கூடு போட்டி வெற்றிக்கென வாழ்த்தியவருக்கும், வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி!
*******************************************************