Wednesday, June 01, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 17

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 17

16.
சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணை வழக்கம்போல நிரம்பியிருந்தது. அவரது மனைவியும், வந்தமர்ந்தார்.

"ஆசைப்படலாம், தப்பில்லை. அதுக்காகப் பேராசைப்படலாமோ? இருக்கற நகைகள் போறாதா? இப்ப எதுக்கு அதை அழிச்சு, புதுசு பண்ணணும்னு கெடந்து துடிக்கறே? ம்ம்ம்... நான் சொன்னா நீ கேழ்க்கவாபோறே?' எனச் சிரித்தார் சாஸ்திரிகள்.


மன்னாரும் லேசாகப் புன்னகைத்தான்.

'ஆசை, பேராசை... இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க சாமி' என்றான்.

'நான் என்னடாப்பா சொல்றது? இதென்ன ஆருக்கும் தெரியாத சமாச்சாரமா என்ன? அந்த பகவான் ஒர்த்தனைத் தவர, வேற எதுக்கு ஆசைப்படறதுமே தப்பு! சரி, லோகத்துல பொறந்துட்டோம். நமக்குன்னு இல்லைன்னாலும், கூட இருக்கறவாளுக்காகவாவது கொஞ்சம் ஆசைப்பட்டுத்தான் ஆகவேண்டியிருக்கு. ஆனா, எல்லா ஆசையுமே கடைசியில துன்பத்துலதான் போயி முடியறது! 'ஆசையே துன்பத்துக்குக் காரணம்'னு அந்த புத்தரே சொல்லியிருக்காரோன்னோ! அதே தான்! ஆனா, பேராசை?? அது ரொம்ப ரொம்பத் தப்பு! அதுல மட்டும் சிக்கிண்டுட்டோம்னா, அப்பறமா, அதுலேர்ந்து வெளியுல வர்றதுக்கே முடியாது. சர்வ நாசம்தான்! ஆசை துன்பத்தைக் கொடுக்கும்னா, பேராசை ஆளையே அழிச்சுடும்! இதான் நாம லோகத்துல காலங்காலமா பார்த்துண்டு வர்ற சமாச்சாரம். அது சரி, இப்ப எதுக்கு என் வாயைப் புடுங்கறே? அடுத்த பாட்டைப் படிக்கச் சொல்லு!' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'ஒரு காரணமாத்தான் கேட்டேன் சாமி! இந்தப் பாட்டும் அதைப் பத்தித்தான்' எனக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்! நான் படித்தேன்.

16.
பேரா சையெனும் பிணியிற் பிணிபட்
டோரா வினையே னுழலத் தகுமோ
வீரா! முது சூர் படவே லெறியுஞ்
சூரா! சுர லோக துரந்தரனே.


பேராசையெனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ
வீரா! முது சூர் பட வேல் எறியும்
சூரா! சுர லோக துரந்தரனே.


"பேராசையெனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ?"

இப்ப நீங்க சொன்ன பேராசையைப் பத்தி நல்லாவே புரிஞ்ச ஒர்த்தர் பாடின பாட்டு இது! ஒரு பொதைமணல்மாரி, இதுக்குள்ள ஆம்ப்ட்டுகிட்டா, வெளியவே வர முடியாம அதுக்குள்ளாறியே பொதைஞ்சு போயிருவோம்னு புரிஞ்சவர் சொன்ன சத்திய வாக்கு இது!

இது ஒரு நோய் மட்டுமில்ல. அதாலியே சாவடிக்கற நோயி! எப்டின்றியா?
ஒரு சில வியாதிங்க இருக்கு. சக்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, அல்ஸர்னு. இதுங்க ரொம்பவே தீவிரமான நோய்தான். ஆனாக்காண்டிக்கும், ஒயுங்கா மருந்து மாத்தரை சாப்ட்டுக்கினு வந்தியானா, ஒடம்பைக் கவனமாப் பார்த்துக்கினியானா, இது இருக்கறதே தெரியாதமாரி வாள[ழ]முடியும். ஆனா, இப்ப கேன்சர், எய்ட்ஸுன்னு வருதுன்னு வைச்சுக்கோ, அந்த நோயே கொஞ்சங்கொஞ்சமா ஆளைக் காவு வாங்கிறும். அவஸ்தையும் படணும்; ஆளையும் கொண்டுபோயிறும். இதான் ஆசைக்கும் பேராசைக்குமான வித்தியாசம்!


ஆசைப்படலாம் ; தப்பில்ல. நல்லாப் படிக்கணும்; நல்ல வேலைக்குப் போவணும், குடும்பத்தை மானமாக் காப்பாத்தணும்னு தாராளமா ஆசைப்படலாம். ஏன்னா, இதெல்லாம் ஒரு கடமையா ஆயிருச்சு. அதைச் செய்யாம இருக்கமுடியாது; இருக்கவும் கூடாது. அதுவே, ரொம்பப் பேராசைப் பட்டேன்னு வையி. அது கொஞ்சங்கொஞ்சமா அரிச்சு உன்னையே பலி வாங்கிறும்.

அதைத்தான் இந்த மொத ரெண்டு வரியுல சொல்றாரு.

'அப்பா! முருகா! இதும்மாரி இந்தப் பேராசைன்ற பெரிய வியாதிகிட்ட விவரம் புரியாம மாட்டிக்கினு, நான் அணுவணுவா சித்திரவதைப் படறது நியாயமா'ன்னு பொலம்பறாரு.

அடுத்த ரெண்டு வரியுல இன்னா சொல்றாருன்னு கெவனி!

"வீரா! முது சூர் பட வேல் எறியும் சூரா! சுர லோக துரந்தரனே."ன்னு கூப்புடறாரு!

இந்த வரியுல முக்கியமாக் கவனிக்க வேண்டியது அந்த முது சூருன்ற வார்த்தைதான்!

தேவருங்களோட ஒலகத்தைக் காப்பாத்தறதுக்காவ, வேலெடுத்து வீசி, அந்தப் பளை[ழை]ய சூரனைக் கொன்ன சூராதி சூரனே! பெரிய வீரனே!ன்னு முடிக்கறாரு.


அதென்னாது பளைய சூரன்? அப்படீன்னா, புது சூரன் இருக்கானா?ன்னுல்லாம் ஒனக்கு ஒரு சந்தேகம் நியாயமா வரணும்' என்றான்.


'ஞான் விளிக்க நெனைச்சு! மன்னார் சொல்லிட்டல்லோ!' எனக் குதூகலித்தான் நாயர்!... என்னை முந்திக்கொண்ட ஆனந்தத்தில்!

'சூரன் எப்பிடியாப்பட்ட ஆளு? என்னல்லாம் சக்தி அவனுக்கு இருந்திச்சு? ஆனாக்க, அவனோட பேராசை... இருக்கறது போறாதுன்னு, தேவலோகத்தும் மேலியே கை வைச்சான். அத்தோட விட்டானா? அவங்களை ஜெயிச்சு, 'தரதர'ன்னு இஸ்த்துக்கினு வந்து ஜெயில்ல போட்டுட்டான். அல்லாரையும் அடிமைங்கமாரி நடத்திக் கொடுமைப் படுத்தினான். இது அல்லாத்துக்கும் காரணம் அவங்கிட்ட இருந்த பேராசைதான்!


அப்ப முருகன் வந்து இன்னா பண்ணினாரு?

இவன் கெட்டவன்னு அவனைக் கொன்னா போட்டாரு? இல்லைதானே? வேலால அவனை ரெண்டாப் பொளந்து, சேவலும், மயிலுமா மாத்திகிட்டுத் தங்கிட்டியே வைச்சுக்கினாரு! அதுனால, சூரன் இப்பவும் இருக்கான்! ... சேவலும், மயிலுமா முருகனோடயே! அந்தப் பளைய சூரன் காணாமப் பூட்டான்! அதாங்காட்டிக்கு, அவனோட பேராசையை மட்டும் அளி[ழி]ச்சிட்டாரு. அதைத்தான் நாசூக்கா இதுல சொல்லி, அந்தாளைப் பண்ணினமாரியே, எங்கிட்ட க்கீற இந்தப் பேராசைன்ற கெட்ட கொணத்த மட்டும் கள[ழ]ட்டிவிட்டுட்டு, என்னியையும் ஒன்னோடவே வைச்சுக்கப்பான்னு, சொல்லாம சொல்லி வேண்டுறாரு!


எதுன்னாலும் முருகன்கிட்ட வேண்டு. அவனுக்குத் தெரியும், எதை எப்பிடி செய்யணும்னு! எடுக்க வேண்டியதை எடுத்து, வெட்ட வேண்டியதை வெட்டி, சேர்க்க வேண்டியதை சேர்த்து அருள் பண்ணுவாருன்ற தத்துவத்தை இந்தப் பாட்டுல அருணகிரியாரு பொடி வைச்சு சொல்லியிருக்காரு!


போன பாட்டுல முருகனை "குருவா எம்முன்னாடி மனுச ஒடம்புல வாப்பா"ன்னு சொன்னாருதானே! அப்பிடி வண்ட்டா, அவர் எத்த எடுக்கணும், இன்னா பண்ணணும்னு அவருக்கே இவுரு ரூட்டு சொல்லிக் குடுக்கறாரு இந்தப் பாட்டுல!


அடுத்த பாட்டு இத்த விடவும் இன்னும் படா ஷோக்கா க்கீறும் பாரேன்' என ஒரு குழந்தையைப் போலச் சிரித்தான் மயிலை மன்னார்!

நாயர் கடையிலிருந்து வந்த சூடான மசால் வடையும், 'டீ'யும் எங்களைச் சற்று ஓய்வெடுக்க அழைத்தன!
சாஸ்திரிகளின் மனைவியார், 'சரின்னா, நீங்க சொன்னமாரியே ஆகட்டும்! எனக்கொண்ணும் இப்போ புது நகை போட்டுக்கணும்னு ஆசை இல்லை' என்றவாறே உள்ளே சென்றார்!

"நாலே வரில அவ மனசையே மாத்திட்டியேடாப்பா! "என வியந்தார் சாஸ்திரிகள்!


"நானா? நான் இன்னா பண்ணினேன்? அல்லாம் அந்த அருணகிரியாருதான்!" எனக் கையெடுத்துக் கும்பிட்டான் மயிலை மன்னார்.

நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்!
*****************
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP