Saturday, May 30, 2009

"இலங்கையில் இல்லாத தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?"

"இலங்கையில் இல்லாத தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?"

முடிந்ததாம்!
எல்லாம் முடிந்ததாம்!
பிரபாகரன் கொல்லப்பட்டதாக
வும், விடுதலைப் புலிகள் 'அடியோடு' ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் சொல்லுகின்றன.

இவை உண்மையா. பொய்யா என ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல!

பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கின்ற தமிழர்கள் அங்கே!
அப்பாடா! ஒருவழியாக இது முடிந்ததே என நிம்மதிப் பெருமூச்சு விட்டு, வழக்கம்போல், கிரிக்கெட், பீச், கச்சேரி, அரசியல் என தங்கள் பாட்டைக் கவனிக்கப் போகும் தமிழக மக்கள் ஒரு பக்கம்!

ஏதோ ஒரு தலைமை தங்கள் உறவுகளைக் காத்துக் கொண்டிருக்கிறது;
அதற்கான உதவிகளை இங்கிருந்து செய்தால் போதும் என நிம்மதியாக இருந்து வந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் நிலைதான் இப்போது குழப்பத்தில்!

தமிழகத் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? என்பதைப் பற்றிய என் கருத்தை இங்கே பதிய விரும்புகிறேன்!


பிரபாகரன் என்னும் ஒரு சக்தி இருந்த வரையிலும், ஒரு கட்டுக்கோப்பான தலைமையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு ஏதாவது செய்யும் என நானும் உறுதியாக நம்பிக் கொண்டு அவர்களை ஆதரித்து எழுதியே வந்திருக்கிறேன்.

ஆனால், இன்று நிலைமை மாறியிருக்கிறது.
காப்பாற்ற எவரும் இல்லாமல், பல லட்சம் மக்கள் சோற்றுக்கும் வழியில்லாமல், நாளைய நிலை என்னவென்றே தெரியாமல், வெட்டவெளியில் அல்லல் படுகின்றார்கள்.


காலை உணவு என ஒரு சிறு ரொட்டித் துண்டும், தண்ணீரும் பத்து மணிக்கு!
கஞ்சி கொஞ்சம் சோறு கலந்து மதிய உணவு என மாலை நான்கு மணிக்கு! இவைதாம் தினசரி அல்ல.... இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுவதாகத் தகவல்!

வலயத்துக்குள் சில சிங்களக் கடைகள் திறக்கப்பட்டு, அதிகப்படி உணவு, மற்ற தினசரித் தேவைக்கான பொருள்களை விற்கப்படுகிறதாம்!

ஆம்! காசு கொடுத்தால் கிடைக்கும்!
வலயத்துக்கு வெளியே தினசரி உறவினர் கூட்டம் அலை மோதுகிறதாம்!

உடை, பணம் இவை கம்பிகள் வழியே கொடுக்கப் படுகிறது!

உடைகள் அனைத்தும் உதறப்பட்டு, சோதனை செய்த பின்பே கொடுக்க முடியும்! பணத்தைக் கொடுக்கத் தடையில்லை! எல்லாம் சிங்களவருக்குப் போகிறதே! அதனால்!
தொலைபேசி வசதி கூடக் கொடுக்கப்பட்டு, வெளிநாட்டில் இருக்கும் உறவினரிடம் பேச அனுமதிக்கப் படுகிறது! அப்போதுதானே அவர்கள்பரிதாபப்பட்டு, பணம் அனுப்புவார்கள்!


இன்னும் எங்கு செல்லப் போகிறோம் எனத் தெரியாத நிலை அவர்களுக்கு!

எல்லா வட கிழக்கு மாகாணங்களிலும் பாதுகாப்பு நலன் கருதி, ராணுவக் குடியிருப்பு வீடுகள் கட்டப்படும் வேலை துவங்கப்பட்டு விட்டது!
இனி முழுக்க முழுக்க தமிழர் வாழும் இடம் எனச் சொல்ல ஒரு ஊர் கூட இருக்கப் போவதில்லை.

இதுதான் நிதரிசனம்!


இந்த நிலையில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வன்னி, வவுனியா வாழ் தமிழர் நலன் கருதி சில போராட்டங்களைத் துவங்கி, உலக நாடுகளின் கவனத்தை இலங்கைத் தமிழர் அவலத்தின்பால் ஈர்க்கும் பணியைச் செய்து வருகிறார்கள்.
இது வரவேற்கத்தக்க ஒரு நல்ல விஷயம்.

ஆனால், இன்னும் ஒரு சிலர் தமிழீழத் தாகத்தைக் காட்டும் செயல்களைச் செய்கின்றனர்.

கொடிகள், படங்கள், முழக்கங்கள் என இவர்கள் தங்கள் வேகத்தைக் காட்டியும் வருகின்றனர்.

பிரபாகரன் இல்லை என்று ஆகிவிட்டால் எங்கள் கோரிக்கை இல்லாமல் போய்விடாது என்பது இவர்கள் நிலை.

அவர் இல்லை என்னும் செய்தியைக் கூட நம்ப மறுப்பவரும் இருக்கின்றனர்.
இவையெல்லாம் தவறு என நான் சொல்ல மாட்டேன்.

இலங்கையில் எதுவும் மாறவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை!

ஆனால், அதைத் தட்டிக் கேட்க ஒரு அமைப்பு அங்கு இல்லை என்பதும் உண்மை!
இவர்கள் இங்கு எழுப்பும் கோஷங்கள் அங்கு என்ன மாதிரியான விளைவுகளை அங்கிருக்கும் தமிழருக்கு ஏற்படுத்தும் என்பதை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

இங்கு எழுப்பும் ஒவ்வொரு கோஷமும் இலங்கை அரசை இன்னமும் ஆத்திரப்படுத்தி, அது இந்தத் தமிழர்களையே தாக்கும், பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடக்குமுறை இல்லாத சுதந்திர மேலைநாட்டில் இருந்துகொண்டு நாம் எழுப்பும் முழக்கங்கள் இலங்கைத் தமிழருக்குக் கிடைக்கப்போகும் சிறு சிறு உதவிகளைக் கூடத் தாமதப் படுத்தும் என அஞ்சுகிறேன்.


முக்கியமாகக் குழந்தைகள்!

படக்கூடாத துயரங்களைப் பட்டு, பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்து, இழக்கக் கூடாத உறவுகளையெல்லாம் இழந்து, மறக்க முடியாத மன பாதிப்பை அடைந்து தவிக்கும் இவர்கள் அவலம் முதலில் நிற்க வேண்டும்.

முடியாதையா! முடியாது! இதற்கு மேல் இவர்கள் அவதிப் படுவதைத் தாங்கமுடியாது..... மனசாட்சியிருக்கும் எவராலும்!


இவர்கள் ஒரு நிலையான வாழ்க்கையைத் துவங்க வேண்டும்.

பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

நன்கு படிக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க இவர்களுக்கும் வாய்ப்பு கிட்ட வேண்டும்.

வாழ்ந்து கெட்டவர்கள் ஒருபுறம் இருக்கட்டும்!
வாழ வேண்டுமென வெளிச் சென்றவர்கள் நன்றாக வாழட்டும்!

வாழ வேண்டிய இவர்கள் இனியாவது வாழ வேண்டும்!


அதற்காகவாவது, இன்றைய நிலையை உணர்ந்து கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் பிற தமிழர்கள் என வேண்டுகிறேன்.

வை.கோ. முதல் வெளிநாட்டில் இருக்கும் தமிழர் வரை அனைவரும் செய்யவேண்டியது இது ஒன்றே.


தமிழீழக் கோரிக்கையைத் தள்ளி வைப்போம்!.... தாற்காலிகமாவது!
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் ஒரு சாதாரணமான வாழ்க்கையை வாழ நம்மால் ஆன உதவிகளைச் செய்ய முயற்சியாவது செய்வோம்!
இப்போதையத் தேவை இவர்களுக்கான நல்வாழ்வு!

அது இவர்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்போம்!


கட்டபொம்மன், மருது சகோதரர்கள் என ஒரு விடுதலைப் போராட்டம் முதலில் இந்தியாவில் நிகழ்ந்தது.

அது நசுக்கப்பட்டது!

அவர்கள் கொல்லப்பட்டார்கள்!

ஒரு நூற்றாண்டு காலம் அடுத்து ஒன்றுமே நிகழவில்லை!

மீண்டும் ஒரு சிப்பாய் கலகம் 1987ல்!

அதுவும் நசுக்கப் பட்டது!
அது முடிந்து அறு்பது ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது!
இது வரலாறு!

இப்படித்தான் நிகழவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை!

இதேபோல அல்லாமல், ஒரு சில ஆண்டுகளிலேயே ரஷ்யாவிலும், சீனாவிலும்
மக்களாட்சி மலர்ந்தது!
இதுவும் வரலாறுதான்!

இப்படியும் நிகழலாம்!

முறையான ஒரு அமைப்பு வந்து ஒரு முறையான போராட்டத்தை நடத்தும் காலம் வரும் வரைக்கும், வெளியில் இருந்துகொண்டு, உசுப்பிவிடும் பேச்சுகளைப் பேசாமல் நாவடக்கம் காக்க வேண்டும்!

இதையெல்லாம் சொல்வதால் நான் துரோகி எனச் சிலர் கொள்ளக்கூடும்!
நான் இலங்கையில் இருக்கும் என் தமிழரை மட்டுமே நினைக்கிறேன் என்பதால் இப்படிச் சொல்வதால் நான் வருந்த மாட்டேன்!

பாதுகாப்பு வலயத்துக்குள் மட்டுமல்ல!

கொழும்புவில் இருந்து பல இடங்களிலும் இருக்கும் என் இலங்கை நண்பர்களை நினைக்கிறேன்.


இங்கு நான் சுதந்திரமாக நடமாடி, நான் விரும்பும் செயல்களைச் செய்ய முடியும் நிலை போலவே, அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது என் மக்கள் சம உரிமை பெற வேண்டும் என நிச்சயமாக விரும்புகிறேன்.

அதைக் குலைக்கும் எந்தச் செயலையும் வெளியில் இருக்கும் தமிழர்கள் செய்யக்கூடாது என உறுதியாக வேண்டுகிறேன்.


பிரபாகரன் என்கிற ஒருவரைக் காட்டியே இதுவரை, என் மக்கள் ஒடுக்கப்பட்டு வந்தார்கள்.

அவர் இல்லையென்றால், நாங்கள் என்னென்னவோ செய்வோம் எனப் பல தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்!

இன்று, துரதிர்ஷ்டவசமாக அவர் இல்லை எனும் நிலை!

இன்று நான் ஒரு எதிர்க் குரல் கொடுத்தால், அதனால் அதையே காரணம் காட்டி, இந்தப் போலித் தலைவர்கள் செயல்படாமல் இருந்துவிட்டு, அதனால் என் மக்களே பாதிக்கப் படுவார்கள் என எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

அவர்கள் நலமோடு வாழ நான் என் குரலை தாற்காலிகமாகத் தாழ்த்திக் கொள்கிறேன்!

உணர்வை அல்ல! குரலை மட்டுமே!

அதை நான் புரிந்துகொண்டிருப்பது போலவே, மற்றவரும் புரிந்துகொண்டு என் மக்களை மேம்படுத்த மட்டுமே தம் செயல்பாடுகளைக் கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்!


ஈழத் தமிழர்
நலம் பெற வேண்டும் என மட்டுமே சிந்தித்துச் செயல்படுவோம்! இது ஒன்றே அவருக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன்.

முழு நிவாரணம் அவர்களுக்கு உடனடியாகக் கிடைக்க வேண்டும்.
இருக்க ஓர் இடம், புசிக்க உணவு, படிக்க ஓர் பள்ளி, வகிக்க தகுதியான வேலை!
இந்த உரிமைகளை இலங்கை அரசு உடனடியாக எம் மக்களுக்குச் செய்ய வேண்டும்!

அப்படிச் செய்ய அதற்கு உலக நாடுகளை வற்புறுத்தச் செய்வோம்!

இவற்றைச் செய்ய இலங்கை அரசுக்கும் ஒரு வாய்ப்பு அளிப்போம்!


அப்படிச் செய்யவில்லையெனில்,.............

.......................................????!!!!!!!

விடியல் தூரத்தில் இல்லை!

கட்டுண்டோம்! பொறுத்திருப்போம்!

காலம் வரும்!
எம் தமிழர் வெல்வர்!

அதுவரை காத்திருப்போம்!
இப்போது அமைதி காப்போம்!

அனைவருக்கும் நன்றி!

*********************

Read more...

Thursday, May 21, 2009

"முக"வின் வழக்கமான நாடகம், இந்த முறையும்!

"முக"வின் வழக்கமான நாடகம், இந்த முறையும்!

சென்ற தேர்தலில், திமுகவின் உதவி இல்லாது காங்கிரஸ் அரசு அமைய முடியாது் என்னும் நிலையில் இருந்தபோது, தனது பிடிவாதத்தை வைத்து வேண்டிய பதவிகளைப் பெற்று திமுக மகிழ்ந்தது.
அதே முறையை இந்தத் தடவையும் நடத்த நினைத்த திமுக ஒரு மாறுபட்ட அதிர்ச்சியைச் சந்தித்து,
மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்ற முனைந்திருக்கிறது.

ஆனால், காங்கிரஸ் இந்த முறை ஏமாறத் தயாராயில்லை!
போட்டதைப் பொறுக்கிகிட்டுப் போ! இல்லையா! இந்தப் பிச்சையை ஏத்துக்க மத்த பிச்சைக்காரங்க தயாரா இருக்காங்கன்னு சொல்லி கரியைப் பூசி விட்டது!

உண்மையாக இருந்த தோழைமைக் கட்சிக்கா இந்த நிலை எனப் பொருமிய திமுகவால், கடந்த நான்கு ஆண்டுகளாக தனக்கு உண்மையாக மாநிலத்தில் இருந்த காங்கிரஸுக்கு என்ன மரியாதை கொடுத்தது எனத் திருப்பிக் கேட்கப்பட்டபோது, மு,க.வால் பதில் சொல்ல முடியவில்லையாம்!

தங்களை ஆதரிக்க நிபந்தனையின்றி பல கட்சிகள் தயாராக இருக்கும் இந்த நேரத்தில், காங்கிரஸ் இவருக்கு அடி பணியப் போவதில்லை என்பதே நிதரிசனம்!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

ஈழத் தமிழரைக் காக்க தனக்குக் கிடைத்த ஒரு ஒப்பற்ற வாய்ப்பை பயன்படுத்த மு.க. தவறி அவர்களின் அழிவிற்குத் துணை போனார் என்பதே இதிலிருந்து கிடைக்கும் பாடம்!

அதிமுக இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அரசில் புகுந்துவிட்டால், தனது அரசு அடுத்த நொடியே கவிழ்ந்துவிடுமே என்பதால், கிடைத்த பிச்சையை ஏற்று, தன் மீசையில் மண் ஒட்டவில்லை என திமுக நடத்தப்போகும் அடுத்த 'கண்துடைப்பு' நாடகத்தை இன்னும் அடுத்த சில மணி நேரங்களில் காணலாம்!

"அரசியல்ல இதெல்லாம் சஹஜமப்பா!" என மக்களும் தங்களது அடுத்த வேளை சோற்றைப் பற்றிக் கவலைபட்டு, சும்மா இருப்பார்கள்!

தோற்பது, வழக்கம்போல் மக்களும், ஜனநாயகமும்தான்!
வாழ்க இந்தியா!

Read more...

"சாதனையாளர் தர்மேந்த்ர குமார்" [உண்மைக்கதை]

"சாதனையாளர் தர்மேந்த்ர குமார்"
[உண்மைக்கதை]

ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான் தர்மேந்த்ர குமார்.

பீஹாரில் பிறந்த இவர், இளங்கலைப் பட்டம் [B.A.] பெற்று, மருந்தகப் படிப்பை[Diploma in Pharmacy]யும் முடித்தவர்.

வேலை தேடி அலையும்போது பல இடங்களுக்கும் சென்று வந்ததில்,
தன்னை விடவும் வசதி, வாய்ப்பு குறைந்தவர்கள் அநேகம் பேர் இருப்பதைப்
பார்த்து, இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்னும் ஆவலில் துடித்தவருக்கு, 'எய்ட்-இந்தியா'வின் அறிமுகம் தற்செயலாகக் கிடைத்தது.

தன்னிடமிருக்கும் படிப்பறிவு தனக்கு ஒரு வேலையைத் தேடித்தந்து,
தான் வசதியாய் வாழ்வதை விட, பிறர்க்கு இது பயன்பட்டால் நல்லதுதானே என நினைத்த இவர் இதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தனது மாவட்டத்தில் பல மையங்கள் திறக்க உதவியாயிருந்தார்.

இதற்காக இவர் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!
எள்ளி நகையாடியவர்கள் ஏராளம்!
பிழைக்கத் தெரியாதவன் என ஏசியவர்கள் அநேகம்!
ஏற்கெனவே பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் அவற்றையெல்லாம் தன்னை மேலும் உற்சாகப்படுத்தும் ஒரு ஊட்ட மருந்தாகவே ஏற்றுக் கொண்டார்.

விழிப்புணர்வு வரவேண்டி பீஹாரிலிருந்து ஆந்திரவில் இருக்கும் ஹைதராபாது வரை ஒரு தொடர் மிதிவண்டி பயணம் [Bi-cycle rally] மேற்கொண்டதை ஒரு பெருமையாக நினைவு கூருகிறார்.
இதுபோல, பல யாத்திரைகளை இவர் நடத்தியிருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இளம்பிள்ளைகளுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்து, அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது, தன்னம்பிக்கையுடன் மற்றவர்க்குச் சமமாக கல்வியை எதிர்கொள்ளச் செய்ய வைப்பது என்னும் வைராக்கியத்துடன் இன்றளவும் செயல்படுகிறார்.
இன்று இவர் நடத்தும் மையங்களில் படிக்கும் பிள்ளைகள் மாநில அளவில் பேச்சு, கட்டுரை மற்றும் பல நிலைகளில் முதன்மையாக வருவதைப் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

"நாங்கள் அனைவரும் இந்தியப் பிள்ளைகள்! எங்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கச் செய்வது ஒவ்வொரு இந்தியனின் கடமை!" எனும் முழக்கம் இவருடையது!

எலிகளைப் பிடித்துச் சாப்பிடும் குலத்தில் பிறந்த பிள்ளைகளும் இன்று நிமிர்ந்து நிற்பதில் இவர்க்குப் பெரும் பங்கு உண்டு.

இந்தியாவிலேயே மிகவும் பின் தங்கிய மாநிலம் பீஹார்.
மாலை ஆறு மணிக்கு மேல் இருளில் ஆழும் கிராமங்கள் அதிகமாய் இருக்கும் மாநிலம் இது!
மின்சார வசதி இன்னமும் பல கிராமங்களில் ஒட்டுமொத்தமாகக் கிடையாது என்பது வேதனையான செய்தி!
ஏற்றத்தாழ்வுகள் இன்னமும் சமன் செய்யப்படாத நிலையீலேயே பல கோடி மக்கள் வாழும் மாநிலம் இது!
சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் ஆகியும், இப்படியே வைத்திருக்கும் அரசியல்வாதிகளை நம்பாமல், இதுபோன்ற சமூக நல அமைப்புகள் எப்படிப்பட்ட இடையூறுகளை எல்லாம் சந்திக்கவேண்டியிருந்தது என்பதை இவர் உணர்ச்சிபூர்வமாக விவரித்தபோது நெஞ்சம் கனத்தது.

பீஹாரில் வெள்ளம்!
இமயத்தின் அடிவாரத்தில் அமைந்த மாநிலம் இது.
அங்கிருந்து உற்பத்தியாகிவரும் நதிகள் இன்னமும் மேட்டுப் பகுதியாகவே இருக்கும் வடக்கு பீஹாரில் தங்கள் விருப்பம் போல வழிகளை அமைத்துக் கொண்டு பாயுமாம்..... தனக்கென ஒரு பாதை இருக்கும் சமதளம்
வரும் வரைக்கும்!

இதனால் எந்தப் பகுதியில் வெள்ளம் வருமென பலருக்குத் தெரியாமலே போய்விடுவதால், இங்கு வாழும் மக்கள் இதனை ஒரு சாதாரண நிகழ்வாகவே பொதுவாக ஏற்று வாழ்கின்றனர்.
இந்த நதி நேப்பாளத்திற்கும் பாய்வதால், மழைக் காலங்களில், அங்கு தேங்கிவரும் நீரையும் அவர்கள் திறந்து விட்டு விடுவார்களாம்!

இரு ஆண்டுகளுக்கு முன் பீஹார் சந்தித்த வெள்ளக் கொடுமை இதுவரை எவரும் காணாத அவலம்.
கிட்டத்தட்ட மொத்த வடகிழக்கு பீஹார் மாநிலமே நீரில் மூழ்கி பல லட்சம் மக்கள் இடம் பெயர வேண்டிய நிலை!
தெற்குப் பகுதியில் முகாம்களை அமைத்து, வந்தவரைக் குடியேற்றி, அவர்களுக்குத் தேவையான வசதிகளைத் தருவதோடு அரசு வேறொன்றும் செய்ய முடியாத நிலை.
இதைக் குறையாகச் சொல்லவில்லை அவர்!
தினசரி அங்கு வந்து சேரும் மக்களுக்கு உதவி செய்யவே அரசுக்கு நேரம் போதவில்லை.
இதனால் வடகிழக்கு பீஹாரில் இன்னமும் இருந்தவர்க்கு எந்தவித உதவிகளும் போய்ச் சேரவில்லை.

இந்த நிலையில் 'எய்ட்-இந்தியா' செய்த பேருதவியில் இவர் வகித்த பங்கு அதிசயிக்கத் தக்கது.
கிராமம் கிராமமாகச் சென்று, [படகிலும், சில சமயங்கலில் நீச்சலடித்தும் கூட!] ஏதோ ஒரு மேடான பகுதியில் கூடி நின்றவர்களைப் பாதுகாத்து, பத்திரமான இடத்துக்கு அவர்களை அனுப்பி வைத்து, கூடவே கால்நடைகளையும்
காப்பாற்றி, மருத்துவ, உணவு வசதிகள் அவர்களுக்குக் கிடைக்க இந்த நிறுவனம் உதவி செய்தது.
இவர்கள் மட்டும் தான் என்றில்லை!
மற்ற நிறுவனங்களும் செய்தன என்றாலும், தாங்களும் செய்ததில் ஒரு பெருமை இவருக்கு!

'இன்னும் செய்யணும்! செய்தது ஒரு துளிதான்!' என அடக்கத்துடன் சொல்லிக் கொள்ளும் இவரைப் பாராட்டி, இவரைப் போல இன்னும் பலரும் முன்வந்து பாரதத்தை ஒளிரச் செய்வோம் என வாழ்த்தி இந்தச் சாதனையாளர் தர்மேந்த்ர குமாரை வாழ்த்துகிறேன்!
*****************************

Read more...

Tuesday, May 19, 2009

"சாதனையாளர் தாமு" [உண்மைக் கதை] - 2

"சாதனையாளர் தாமு" [உண்மைக் கதை] - 2


[முந்தைய பதிவு]


'நான் இப்ப வேலைக்குப் போகப் போறதில்ல. மேல படிக்கப் போறேன். மூச்சுக்கு மூச்சு ஆத்தா இதே நெனைப்பாத்தான் இருந்திச்சு. அதை நிறைவேத்தப் போறேன்.... சென்னைக்குப் போயி! ஆமா! இங்க இருந்தா எனக்கு படிப்பு ஓடாது. சென்னைக்குப் போகப் போறேன். உன்னால முடிஞ்சதை அனுப்பு போதும். மத்ததை நான் பார்த்துக்கறேன்'

தீர்மானமாகச் சொல்லிவிட்டு கிளம்பிய தாமுவை வியப்புடனும், கோபமாகவும் பார்த்த அப்பா, மறுபேச்சுப் பேசாமல் எழுந்து சென்றார்.

சென்னை நியூ காலேஜில் இடம் கிடைத்தது.

இளங்கலை தாவரவியல் .. பிஎஸ்ஸி
பாட்டனி!

பணத்தட்டுப்பாடு, ராகிங் பற்றிய பயம் எல்லாமாகச் சேர்த்து தாமுவை தரமணிக்கு அருகில் ஒரு சேரியில் கொண்டு தள்ளியது!
ஒருசில நண்பர்களுடன் அங்கு வாடகைக்கு ஒரு அறை எடுத்துக் கொண்டு குடியேறினார் தாமு.
பணப்புழக்கம் அதிகம் இல்லாத அதே காரணத்தினால், கல்லூரி முடிந்ததும் அறைக்கு வந்து தங்கிவிடும் வழக்கம்.

அப்போதுதான் கவனித்தார் அங்கு ஒரு உதவி மையம் இயங்குவதையும், அதில் சிறு குழந்தைகளுக்குப் படிக்கச் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியர் வந்து போவதையும்.


பொழுதைப் போக்கணுமே என்னும் ஆர்வத்தில் அதன் பக்கம் கவ
னம் இவருக்குத் திரும்பியது இவரது அதிர்ஷ்டமா, இல்லை அந்தக் குழந்தைகளுக்கா என்னும் முடிவை உங்களிட்மே விட்டுவிடுகிறேன்!

தானும் உதவியாக இருப்பதாகச் சொல்லி அதில் இணைந்தவர் ஓராண்டுக்குள்ளேயே அந்தப் பகுதியில் மேலும் நான்கு மையங்களைத் தொடங்க துணையாய் இருந்தார்.

இப்படித் தொடங்கியதுதான் இவருக்கும் 'எய்ட் இந்தியா' என்னும் அமைப்புக்குமான உறவு!

'எய்ட் இந்தியா'வைத் தொடங்க மூல காரணமாக இருந்த திரு. பாலாஜி என்பவரின் முறையான வழிகாட்டலின் உதவியுடன், இன்று தமிழகமெங்கும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட 'மக்கள் பள்ளி இயக்க' மையங்களின் ஒருங்கிணைப்பாளராக திறம்பட சேவை செய்து வருகிறார்.

முதலில் பள்ளிகளுக்குச் சென்று, ஆசிரியர்களிடம் பேசி, ஒப்புதல் வாங்கி, அவர்கள் முன்னே தான் எப்படி பாடம் நடத்த முடியும் என அஞ்சி, உபரி வேலைகளைச் செய்துவந்த இவரை 'நீ இப்படியே இருந்தா, அப்புறம் ஜெராக்ஸ் காப்பி பண்ற ஆளாத்தான் போவே! நீ சாதிக்கணும்' எனச் சொல்லி ஊக்கப்படுத்திய பாலாஜியை எப்போதும் நன்றியுடன் நினைவு கூறுகிறார்!

இப்போது,...எண்ணூறுக்கும் மேற்பட்ட மைய ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, மையம் இல்லாத கிராமங்களுக்குச் சென்று அங்கிருக்கும் ஊர்ப் பெரியவர்களைக் கூட்டி, அவர்களிடம் இதன் தேவையை எடுத்துச் சொல்லி, அவர்கள் உதவியுடன் தொடங்குவது என நாள் முழுதும் வேலை இவருக்கு!

வெம்பாக்கம் என்றொரு கிராமம். திருவண்ணாமலை அருகே.
மாலை நேரம்.

ஊர்ப்பெரியவர்களும் இளைஞர்களும் கூடியிருக்கிறார்கள்.

இவர் சொல்வதை ஒருவித அலட்சியத்துடன் விருப்பமில்லாதவர்போல் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர் அயரவில்லை.

சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்துவிட்டு, அங்கிருக்கும் குழந்தைகளின் பெற்றோரைப் பார்த்துக் கேட்கிறார்..'என்னம்மா, இது உங்க பசங்களுக்கு அவசியம்னு நினைக்கறீங்களா?'
'ஆம்' என்பது போலத் தலையசைக்கிறார்கள்.. பெரியவர்களை ஒருவித அச்சத்துடன் பார்த்துக் கொண்டே!

'அப்புறம் என்ன? ஆரம்பிச்சிரலாந்தானே?' என உற்சாகமாகக் கேட்கிறார்.

எவரும் முன்வரவில்லை.
கூட்டம் லேசாகக் கலையத் துவங்குகிறது.
சௌபாக்கியம் என்னும் ஒரு இளம்பெண் தன் முகத்தை நிமிர்த்தியபடி, 'நான் உதவி செய்ய விரும்பறேங்க' என்கிறார்!

எழுந்த கூட்டம் அப்படியே திகைத்து அமர்கிறது.

ஒரு சின்னப்பொண்ணுக்கு இருக்கற துணிச்சல் நம்மகிட்ட இல்லாமப்போச்சே என்னும் வெட்கம் உந்த ஒருவர் பின் ஒருவராக பலர் முன்வருகிறார்கள்.

'இப்படித்தாங்க அநேகமா எல்லா ஊரிலும்! நாம நல்லதுன்னு நினைக்கறதை செய்யாமப் போறதில்லைன்னு ஒரு வைராக்கியம்' எனச் சொல்லிச் சிரிக்கிறார் தாமு, எம்.ஏ எம்.ஃபில்!

ஆம்! பத்தாம் வகுப்பில் கணக்குத் தாளில் ஐந்து முறை தோற்ற அதே தாமுதான்!

எம்.ஏ. படிப்பை முடித்துவிட்டு, தொடர்ந்து எம்.ஃபில்[anthropology] தேறி, இன்று பாலர்களுக்கான பல புத்தகங்கள், கையேடுகள், பயிற்சி ஏடுகள் எனப் பல நூல்கள் எழுதியிருக்கிறார் இந்த இளைஞர்!

'இதுக்கெல்லாம் காரணம் பாலாஜி அண்ணாவோட வழிகாட்டலும், தூண்டலும்தான்' என அடக்கத்துடன் சொல்லிவிட்டு, 'இந்த ஊருல குழந்தைகளுக்கு ஏதாவது வகுப்பெல்லாம் எடுக்கறீங்களா? நான் வந்து ஒரு அரை மணி நேரம் பேசறேனே' என ஆர்வத்துடன் கேட்கிறார்.

'படிப்பும் இனிக்கும்' 'பாலர் பள்ளிக் கல்வி' எனப் பல திட்டங்களை உருவப்படுத்தி, செயல் வடிவம் ஆக்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு.
2006-ம் ஆண்டுக்கான சிறந்த சாதனையாளர் விருது 'எய்ட் இந்தியா' அமைப்பினால் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது!


சமீபத்தில் திருமணம் ஆன இவர் மனைவியும் இதில் ஈடுபட்டு சேவை செய்துவருவதை ஒரு் பெருமையாகக் கருதும் இந்தச் சாதனையாளர் சொல்வது.....
'ஒரு கால கட்டத்தில் எங்க குடும்ப நிலை இருந்த இருப்புல, வீட்டுல சமைக்க ஆளில்லையேன்னு என்னோட பதினெட்டு வயசுத் தம்பிக்குக் கல்யாணம் பண்ணிவைச்சு ஒரு பெண்ணை வீட்டுக்குக் கூட்டி வந்தாங்க! எங்க அம்மா சொன்னது போல நான் படிச்சு வந்ததால இப்ப ஓரளவு நல்ல நிலைமையில் இருக்கிறோம். எல்லாப் பிள்ளைகளும் படிக்கணுங்க' என்னும் இவரது கனவு நனவாக நாமும் வாழ்த்தி இவருக்கு உறுதுணையாக இருப்போம்.

மேல் விவரங்களை யூரேகா குழந்தை என்னும் தளத்தில் காண

லாம்!

வாருங்கள்! வருங்கால இந்தியாவை வளப்படுத்துவோம்!
******************************

[இந்த வார இறுதியில் எங்களூரில் நடக்கவிருக்கும் எய்ட்-இந்தியா நிகழ்ச்சிக்காக வந்திருக்கும் திரு. தாமோதரனை நேற்று சந்தித்து உரையாடியதில் கிடைத்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய கட்டுரை இது! இவருடன் வந்திருக்கும் திரு. தர்மிந்தர் சிங், திரு. பாலாஜி இவர்களைக் குறித்த கட்டுரையையும் கூடிய விரைவில் எழுத முயல்கிறேன்!]

Read more...

Monday, May 18, 2009

"சாதனையாளர் தாமு!" [உண்மைக் கதை!]

"சாதனையாளர் தாமு!"
[ஒரு உண்மைக் கதை!]

அந்தச் சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

காலை 5 மணிக்கு வேலைக்குச் செல்லும் தந்தை இரவு 8 மணிக்கு மேல்தான் திரும்புகிறார்.

கூடப் பிறந்த இரு சகோதரர்களும் பள்ளிக்குச் செல்லாமல் கூலிவேலைக்குச் சென்று வருகிறார்கள்.
இருக்கும் ஒரு மாட்டைப் பார்த்துக் கொண்டு, வீட்டுவேலைகளும் செய்துவரும் தாய் மட்டுமே 'கீழ்சாதியில பொறந்து தொலைச்சிட்டோண்டா! பாவப்பட்ட சென்மமின்னு ஊரே இளக்காரமாப் பாக்குது. நீ ஒருத்தனாவது படிச்சுக் கரையேறணும் என் ராசா!' எனச் சொல்லித் தன்னை மட்டும் ஏன் பள்ளிக்குத் துரத்துகிறாள்?


அம்மா கட்டித்தரும் கட்டுசோற்றை போகிற வழியில் தந்தை வேலை செய்யும் இடத்திற்குச் சென்று கொடுத்துவிட்டு, பள்ளிக்குச் சென்று, மாலை திரும்பிவரும்போது, மீண்டும் அப்பா வேலை செய்யுமிடத்துக்குப் போய், அவருக்குத் துணையாக இருந்துவிட்டு, அவருடன் வீடு திரும்பி, சாப்பிட்டுவிட்டு, கொஞ்சநேரம் படித்துவிட்டுப் பத்து மணி வாக்கில் படுக்கச் செல்வது வாடிக்கையாகப் போயிற்று தாமுவுக்கு.

விழுப்புரம் அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் தாமு என்கிற தாமோதரன்.

ஒருவேளை சோற்றுக்கே வகையில்லாத வசதியில்லாத குடும்பம்.

கூலிவேலை செய்தால்தான் ஒருவேளைச் சோற்றுக்காவது வழி கிடைக்கும்.
இதற்கிடையில் படிக்கச் சொல்லி அம்மா வற்புறுத்துகிறாளே என தாமுவுக்கும் சற்று எரிச்சல்தான்! இருந்தாலும், அவள் மேல் கொண்ட ஆசையினால் அரை மனதோடு படித்தும் வந்தான்.

அதன் விளைவு பத்தாம் வகுப்புத் தேர்வில் கணக்குத் தாளில் தெரிய வந்தது!


12 மதிப்பெண்கள் எடுத்து அந்த ஆண்டு தோல்வியடைந்தான்.


இதுதான் சாக்கு எனக் காத்திருந்த தந்தையோ, 'போறும் இவன் படிச்சுக் கிளிச்சது! நம்ம தலையில என்ன எளுதியிருக்கோ அதான் நடக்கும். நாளையிலேருந்து இவனும் வேலைக்குப் போகட்டும்' எனக் கண்டிஷனாகச் சொல்லிவிட்டார்.

அங்கேயே கூலிவேலை செய்தால் சற்று அவமானம் என நினைத்த தாமு கேரளாவுக்கு வேலை தேடிக் கிளம்பினான்.
அவனது சாதியில் ஆண்டுக்கு ஒரு எட்டு மாதங்கள் இப்படி வெளிவேலைக்கு என அண்டை மாநிலங்களுக்குச் செல்வது வாடிக்கை என்பதால், அதற்கு யாரும் எதிர்ப்பு சொல்ல வில்லை.


அம்மா மட்டுமே இடிந்து போனாள்!

'இவன் ஒருத்தனாவது தலையெடுப்பான்னு பார்த்தேன்! இப்படி ஆய்ப்போச்சே' என வருத்தம் கொண்டாள்.
ஆனால், அவளால் வேறொன்றும் செய்ய முடியவில்லை...... அழுவதைத் தவிர!

செங்கல் சுமக்கும் வேலை கிடைத்தது கேரளாவில்.
காலை எட்டு மணிக்குத் துவங்கி, உச்சி வெய்யில் தலைக்கு மேலே வரும்வரை மாறி மாறி சுமந்து செல்லணும்.

ஒரு ஒருமணி நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் மாலை ஐந்து வரையிலும் மீண்டும் இதுவே தொடரும்.
இப்படியாக, திங்கள் முதல் சனி வரை!

ஞாயிற்றுக் கிழமை முழுக்க அடித்துப் போட்டது போல் ஓய்வெடுத்தால்தான் மீண்டும் அடுத்த வாரம் வேலை செய்யத் தெம்பு வரும்!
எழுபது ரூபாய் தினக்கூலி.

சாப்பாடு, சினிமா எனச் செலவு செய்தது போக ஒரு இருபது ரூபாய் மிஞ்சும் தினமும்.
ஆண்டுக்கு ஒரு 5,000 ரூபாய் வரை மிச்சம் பிடித்து அம்மாவுக்கு அனுப்பி வைக்கலாம் எனக் கணக்கு போட்டான் தாமு!


இரண்டு ஆண்டுகள் இப்படியே ஓட்ட, அசதியும், அலுப்பும் மிகுதியாகி, மீண்டும் ஊருக்கே திரும்பினான்.

'இருக்கற வேலையை விட்டுட்டு வந்துட்டான் பாரு' என, வருமானம் குறைந்துபோன கடுப்பில் அப்பா முணுமுணுக்க, 'அந்தக் கணக்கு பேப்பரை மட்டும் முடிச்சிரு என் ராசா' என அம்மா கெஞ்சினாள்!

வீட்டில் தங்க இது ஒரு நல்ல சாக்காக இருக்கே என மகிழ்ந்து மீண்டும் படிக்க முயன்றான் தாமு.... உள்ளூரிலேயே ஏதோ கூலிவேலையும் பார்த்துக் கொண்டே!


மார்ச்சில் 18, செப்டெம்பரில் 20, மார்ச்சில் 22, செப்டெம்பரில் 30 மீண்டும் மார்ச்சில் 36 என அந்த பாஸ்மார்க் 35 என்னும் மந்திரப் புள்ளியைத் தாண்டி ஐந்தாம் முறையில் கணக்கைத் தாண்டினான் தாமு!


பள்ளியில் போராடி மகனை ப்ளஸ் டூ-வில் சேர்த்து மகிழ்ந்தாள் அம்மா.

தாமுவும் அக்கறையோடு படிக்கத் தொடங்கினான்.

அப்போதுதான் அந்தப் பேரிடி!


ஜீவனத்துக்கு உறுதுணையாய் இருந்துவந்த மாட்டை மேய்ச்சலுக்குப் பின் இழுத்து வரும் மாலை வேளை ஒன்றில், திடீரென மாடு மிரண்டு ஓட, கயிற்றைப் பிடித்திருந்த தாய், கழுத்து எலும்பில் அடிபட்டு, மயக்கமாகி, நினைவிழந்து ஒரு ஆழ்குழிக்குள் ஓரிரவு முழுவதும் கிடந்திருக்கிறார்.


இருட்டிவிட்டதால், எங்கேயென்று தேடவும் முடியவில்லை.... மின்சார வசதி இல்லாத அந்தக் கிராமத்தில்!

அழைத்த குரலுக்கு பதில் கொடுக்க முடியாமல் நினைவிழந்த நிலையில் தாய்!

கனவுகளைக் குரலில் ஊட்டியே வளர்த்த தாயின் குரல் கேட்கமுடியாமல் போன சோகம்!


நரம்புகளில் அடிபட்டதாலும், இரவு முழுவதும், எலி, பூச்சி போன்றவற்றால் கடிக்கப்பட்டதாலும், மீளமுடியாத மயக்கநிலையில் கிடந்த தாயை மறுநாள் காலையில்தான் மீட்டெடுக்க முடிந்தது.


கனவுகளுடன் கிடந்த நினைவு மீண்டுவராமலேயே, 30 நாட்கள் மயக்கத்தில் கிடந்த தாய் தாமுவை விட்டுப் பிரிந்துபோனார்.


தாயின் மரணம் ஒரு மாற்றத்தை தாமுவின் மனதில் ஏற்படுத்தியது எனக் கதைகளில் வருவதுபோல் நான் இங்கு சொல்லப் போவதில்லை!

ஆனால், இது அவரைப் பாதித்தது உண்மை.

பனிரெண்டாம் வகுப்பில் தேர்வு பெற்றதும், உள்ளூரிலேயே படிப்புக்குத் தக்க ஒரு வேலையைத் தேடுமாறு சொன்ன தந்தைக்கு தாமு சொன்ன பதில் அதிர்ச்சியைத் தந்தது!

[நாளை தொடரும்!]

Read more...

Saturday, May 16, 2009

"தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மைகள்!"

"தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மைகள்!"
[நடந்து முடிந்தபின், அப்பாவி பொதுஜனம் கருத்து!]


நடந்து முடிந்த தேர்தல் குறித்து பலர் பலவிதமாக எழுதினாலும்
பேசினாலும் இது பற்றிய ஒரு கருத்தை இங்கே பதிய விழைகிறேன்.

மின்னணு இயந்திரங்களில் மோசடி, பணப் பட்டுவாடா, அடியாள்
மிரட்டல், அதிகாரப் பயமுறுத்தல் என்ற எல்லாவற்றையும் வைத்து
ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியால் என்னவெல்லாம் செய்யமுடியும்
என்பதை இந்தத் தேர்தல் தெள்ளத்தெளிவாகக் காட்டியது என ஒரு
சாரார் சொல்லலாம்!

மக்கள் எங்களுக்காக மகத்தானதொரு தீர்ப்பை வழங்கி நல்லாட்சியைத்
தர வாய்ப்பளித்திருக்கிறார்கள் என வெற்றி பெற்றவர் மகிழலாம்!

இதில் எது உண்மை, பொய் என்பதை வரலாறு நமக்குச் சொல்லும்!

ஆனால், நடந்தது குறித்து, இன்னமும் இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அப்பாவி பொதுஜனம் நினைப்பது???

மோசடி எதுவுமே நிகழவில்லை!

நம்புங்கள்!!

நேர்மையான தேர்தலே நிகழ்ந்தது!


மத்தியைப் பொறுத்தவரையில், ஒரு நிலையான ஆட்சி அமைய
வேண்டுமென ஒட்டு மொத்த இந்தியாவும் விரும்பியது!

கடந்த இரு பொதுத் தேர்தல்களில், மாநிலக் கட்சிகள் அந்தந்த
மாநிலங்களில் தங்களுக்குள்ள ஆதரவை மந்திரி பதவிகளாய் மாற்றி
அளவில்லாக் கொள்ளையில் ஈடுபட்ட அவலத்திலிருந்து இந்த நாட்டை
மீடக ஒவ்வொரு இந்தியனும் நினைத்தான்!

தேசீயக் கட்சிகள் மட்டுமே இந்த நாட்டுக்கு விமோசனம் என அவன்
உணர்ந்தான்!

காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா இரண்டுள் ஒன்றே அவன் தேர்வு!

மன்மோகன்சிங் மீது எந்தவிதமானா கெட்ட பெயரும் இல்லாதது அவனைக் கவர்ந்தது.
அவர் பின்னாலிருந்த இளைய தலைமுறை அவனுக்கு நம்பிக்கை அளித்தது.

இப்படி எதையும் அவனால் பிஜேபியிடம் அவனால் பார்க்க முடியாமல் போனது.

கூடவே, இங்கும் அங்குமாக தன் சுகத்துக்காக மட்டுமே கொள்கைகளை மாற்றி
ஆதாயம் தேடும் கட்சிகளை அறவே புறக்கணிக்க முடிவெடுத்தான்!

அதுதான் பாமக, மதிமுக, சமாஜ்வாடி, பிஎஸ்பி போன்ற பல மாநிலக்
கட்சிகளுக்கு அவன் அளித்த பாடம்!

திமுக? அதிமுக?

கடந்த சில பொதுத் தேர்தல்களைப் பார்த்தால், திமுக தான் உறவு கொண்ட
கட்சியுடன் மீண்டும் அடுத்த தேர்தலிலும் கூட்டு வைத்தது இதுவே முதல்
முறையெனச் சொல்லலாம்!

அதேபோன்ற ஒரு கூட்டணியைத் தெரிந்தெடுக்கத் தவறிய இன்னொரு பெரிய மாநிலக் கட்சி அதிமுக!

இன்னொரு பெரிய தேசீயக் கட்சியான பிஜேபியுடன் அது துணிச்சலாக
மக்களை சந்திருக்க வேண்டும்! செய்யவில்லை!

திமுக செய்த சரியான முடிவை அதிமுக செய்யத் தவறியது!

மாறாக மூன்றாவது அணி அமைத்து இருவரையுமே எதிர்ப்பதாக ஒரு
மாயையை உருவாக்கியது....... தான் எதிர்ப்பது அதிகாரத்தில் இருக்கும்
ஒரு மிகப் பெரிய சக்தியை எதிர்க்கிறோம் என்பதை உணராமலேயே!

அதன் பலனே இப்போது கிடைத்திருக்கும் முடிவுகள் தரும் பரிசு!

கிடைக்கும் பலனை விட, செல்லும் வழியே முக்கியம் எனச் சொல்லிய
மகாத்மா காந்தியின் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு,
கிடைக்கும் பலனைக் கருதி, செல்லும் வழியைப் பற்றிக் கவலைப்பட
வேண்டாம் என கட்சி நடத்தி கொண்டிருக்கும் காந்திகள் வாழும்
இன்றைய நிலையில்,


விஜய்காந்துடன் கூட்டணி வைத்து அதிகாரக் கூட்டணியை எதிர்த்திருக்க
வேண்டும்!

மூன்றாவது அணி என அலையாமல், ஆளும் அதிகார வர்கத்தை எதிர்க்கும்
பிரதான எதிர்க்கட்சியுடன் ஒரு கொள்கை உடன்பாடு கொண்டு மத்தியில்
எதிர்கொண்டிருக்க வேண்டும்!

இரண்டும் செய்யத் தவறிய அதிமுக தனது அரசியல் அறிவில் திமுகவிடம்
பரிதாபமாகத் தோல்வியைத் தழுவியதன் காரணம் இதுதான்!

பிஜேபியின் நிலை இதனால் பெரிதும் பாதிக்கப் பட்டது என்பதே உண்மை!

எப்படியோ, ஒரு நிலையான தேசியக் கட்சி மத்தியில் இப்போது ஆட்சியில்!

சென்ற முறை நிகழ்ந்ததில் பாடம் படித்த காங்கிரஸ் திறமையாகக் காய்களை நகர்த்தி, உதிரிக் கட்சிகளை ஓரம் கட்டியது பாராட்டத் தக்கது!

அதற்கு மக்கள் அளித்த பரிசும் வரவேற்கத்தக்கதே!

அனைத்துத் தமிழக எம்பிக்களும் ராஜிநாமா என்னும் நாடகத்தை இன்னும்
ஒருமுறை கருணாநிதியால் இந்தத் தடவை நிகழ்த்த முடியாது!

செய்தால் செய்துகொள்! எங்களுக்குக் கவலையில்லை! எனச் சொல்லும்
நிலையில்தான் காங்கிரஸை மக்கள் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள்!

அதனால்தான், வந்தவரைக்கும் லாபம் என ஒரு மூன்று மந்திரி பதவிகள்
கொடுத்தால் போதும்! எனக் கெஞ்ச கருணாநிதி டில்லிக்கு விரைகிறார் நாளை!

மாநிலக் கட்சிகள் அனைத்துக்கும் சாவுமணி அடித்த இந்தத் தேர்தலில்,
இந்திய மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காட்டிய துணிவு
போற்றத்தக்கது!

இப்போதாவது, இந்த மாநில உதிரிக் கட்சிகள் திருந்தட்டும்!

அவரவர் மாநிலங்களில் என்ன வேண்டுமானாலும் செய்து தொலையட்டும்!

இந்தியா என வரும் போது மட்டுமாவது, ஏதாவதொரு தேசீயக் கட்சியுடன்
சேர்ந்து பயணிக்கவில்லையெனில் இதுவே பரிசாகக் கிடைக்கும் என்பதை
மக்கள் இந்தத் தேர்தலில் காட்டியது போலவே அடுத்து வரும் தேர்தல்களிலும் காட்ட வேண்டும்..... இந்தியாவை ஒளிரச் செய்ய வேண்டும் என வாழ்த்தி வேண்டுகிறேன்!


[குறிப்பு: இந்தத் தேர்தலில் எந்தவொரு முறைகேடும் நிகழவில்லையென நினைக்கும் ஒரு அப்பாவி இந்தியனின் எண்ணம் இது எனக் கொண்டு மட்டும் இந்தப் பதிவைப் படியுங்கள்!!!! ஈழப் பிரச்சினை இந்த நேரத்தில் அடிபட்டுப் போனது ஒரு சோகம்! தமிழகம் தவிர வேறெங்கும் இது ஒரு முக்கியமான பிரச்சினையாகப் பார்க்கப் படாமல் போனதும், தமிழகத்திலேயே இது ஒரு குழப்பமான நிலைபாட்டைக் கொண்டதாக அமைந்ததும் மிகவும் வருந்தத் தக்கது. மாற்றுக் கருத்து கொண்டவர்கள் எண்ணத்தை நான் மதிக்கிறேன்!:)]

**************************

Read more...

Monday, May 11, 2009

"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!

"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!


அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் துரோகிகள் எனச் சாடும் குரல் இப்போது வெளிப்படையாக ஒலிக்கத் துவங்கியிருக்கிறது!
எழுபதுகளின் இறுதிக் காலத்திலிருந்து ஈழப் பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பவன் என்னும் முறையில் ஒரு சில கருத்துகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
இது முற்றிலும் சரியான கணிப்பு எனச் சொல்ல மாட்டேன்.
ஆனால், எனக்குத் தெரிந்த அளவிலான உண்மைகளை மட்டுமே இங்கு சொல்ல விழைகிறேன்.

இப்போது எல்லா நாடுகளிலிருந்தும் நல்ல வாய்ப்புகளைத் தேடி அயல்நாடுகளுக்குச் செல்வதைப் போலவே, மேற்படிப்புக்காகவோ, அல்லது வேலை வாய்ப்பைத் தேடியோ, இலங்கையிலிருந்தும் பலர் 50, 60-களில் அயல்நாடுகளுக்குச் சென்று ஒரு நல்ல நிலைமையில் இருந்து வந்தார்கள்.

எழுபதின் ஆரம்பத்தில், தமிழருக்கு எதிரான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதனை எதிர்க்க ஈழத்தில் பல தமிழ் அமைப்புகள் தோன்றின.
இவர்களது பாதுகாப்பில் சற்று தைரியமாக உலாவிய ஈழத் தமிழர்கள் மேலும் கொடுமைக்கும் வன்முறைக்கும் சிங்களவரால் ஆட்படுத்தப்பட்டபோது, பலர் அகதிகளாகத் தமிழகத்துக்குக் கள்ளத்தோணி மூலம் வரத் தொடங்கினர்.

எம்.ஜி.ஆர் அவர்களின் முழு ஆதரவும் இருந்ததால், அவர் அப்போது மத்திய அரசுக்கும் தோழனாக இருந்ததால், அவரால் இந்த அகதிகளை தமிழகத்தில் குடிவைக்க முடிந்தது.
இப்போது, தமிழ் அமைப்புகளின் வீரர்களும் தமிழகத்துக்குள் தாராளமாக வந்து, பயிற்சிகளும் கூடப் பெற முடிந்தது!

இந்தக் கால கட்டத்தில், இதில் யார் பெரியவன் என்னும் போட்டி வலுக்கவே, அதன் காரணமாக பல சண்டைகளும் தமிழக எல்லைக்குள் நடந்தன!

இதன் எதிரொலி இலங்கையிலும் தெரிய, அதன் காரணமாக அச்சுறுத்தப் பட்ட, அல்லது அச்சப்பட்ட மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் தப்பிச் செல்ல முனைந்தனர்.
இந்த நிலையில், சிங்கள அரசும் பல தமிழ் கிராமங்களில் சிங்களவரைக் குடியேற்ற, அதன் கொடுமையிலிருந்து தப்பிக்கவே பல லட்சம் மக்கள் வெளிக் கிளம்பினர் அகதிகளாக!


இதில் பலர் போராளிகளாகவும் மாறி, போராட்டத்தைத் தொடங்க, தங்கள் பிள்ளைகளை விட்டுப் பிரிய மனமில்லாத சொந்தங்களில் பலர் அங்கேயே தங்கி புலிகளின் பாதுகாப்பில் வாழத் தொடங்கினர்.
அகதிகளாகச் சென்றவரை அலட்சியமாகப் புலிகள் இகழவில்லை என்பதே நான் அறிந்த செய்தி.
மாறாக அவர்களிடமிருந்து பண உதவி, நிலையை வெளி உலகத்துக்கு எடுத்துச் சொல்லும் பணி போன்ற உதவிகளை மட்டும் எதிர்பார்த்து, வாங்கிக் கொண்டனர்.
ஒரு சில அச்சுறுத்தல்களும் நிகழ்ந்தன என நான் அறிவேன்.

ஆனால், கடந்த 8 மாதங்களாகக் காட்டிவரும் தீவிரத்தை அதற்கு முன்னால் சரியாக இவர்கள் செய்யவில்லை என்பது என் கணிப்பு! கிளிநொச்சி விழும்வரை, புலிகளிடமே அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் எப்படியும் வென்றுவிடுவார்கள் என எண்ணிக்கொண்டு, இங்கொன்றும் அங்கொன்றுமாக மட்டுமே இவர்களின் செயல்பாடு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையும் கூட!

இப்படி அகதிகளாகச் சென்றவர்கள் ஐரோப்பிய, பிரித்தானிய, அமெரிக்க கானடா நாடுகளால் அரவணைக்கப்பட்டு, அவர்களுக்குக் குடியேற்ற உரிமைவரை வழங்கப் பட்டன!

அந்தந்த நாடுகளின் சீதோஷ்ணம், பண்பாடு, வாய்ப்பு, வசதி அனைத்துமே இவர்களுக்குக் கிடைக்க வழி செய்த அந்தப் பெருந்தன்மைக்கு இடையே, இவர்களை வேற்று கிரக மனிதர்போல், தனி இடத்தில் வைக்கப்பட்ட அவலம் இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்! எந்தவிதமான உரிமையும் இவர்களுக்கு அளிக்காமல், ஒருசில கடத்தல் வேலைகள் ஈழப்போர் ஆதரவாளர்களால் செய்யப்பட்டது என்பதால், குற்றவாளிகள் போல காவல் துறையின் கண்காணிப்பிலேயே இவர்கள் இன்றுவரை காலம் தள்ளுகிறார்கள் என்பதே வேதனையான உண்மை.

இதற்கு முழுப் பொறுப்பும் மத்திய அரசையே சாரும்! தமிழக முதல்வர் தட்டிக் கேட்டால் இது நடக்கும். செய்யவில்லை... எம்.ஜி.ஆர். தவிர!

மேலைநாடுகளுக்குச் சென்ற அகதிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு வசதிகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு, அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்குக் கட்டுப் பட்டு வாழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருமே சுகமாக வாழ்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஒரு சிலர் நல்ல நிலையில் இருந்தாலும், இவர்களில் பலர் இன்னமும் அடிமட்ட வாழ்க்கையே வாழ்கிறார்கள் என்பதே உண்மை!

ஆம்! இவர்களிடம் நம்மவர் கண்ணுக்குப் பகட்டாகத் தெரியும் ஆடைகள் இருக்கின்றன! ஏனென்றால் அது குளிர் நாடு! அங்கு 'ஜாக்கெட்' என்னும் கம்பளி ஆடை அணியாவிட்டால் விறைத்துப்போய் விடுவார்கள்!
ஆம்! இவர்களிடம் 'கார்' இருக்கிறது! அது ஓட்டைக் காராக இருந்தாலும் அதுதான் இவர்களை ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்துக்குக் கொண்டு செல்ல உதவும் சாதனம் என்பதால்!
இதையெல்லாம் வசதி என எண்ணாதீர்கள்!
அத்தனையும் கடன் கணக்கில்!!
பலர் உணவு விடுதிகளிலும், பெட்ரோல் பங்குகளிலும், சாதாரண வேலை செய்து கொண்டு தங்கள் வயிற்றைக் கழுவுகிறார்கள்.

இவர்கள் உடல் அங்கே வாழ்ந்தாலும், அநேகம் பேர் இன்னமும் ஈழக் கனவில்தான் இருக்கிறார்கள்!
தொலைக்காட்சிகள் மூலமாக மட்டுமே தகவல்களைக் கண்டு, தினமும் அழுதுகொண்டிருக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன்!
அதனாலதான், அங்கு ஏதாவது ஒன்று என்றால் இங்கே வீதிகளில் இறங்கி எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்!
அதற்கு இந்த நாடுகளின் சட்டம் இடம் கொடுக்கிறது என்பதால்!

இவர்கள் ஏன் திரும்பவும் ஈழத்துக்கே சென்று போராடக் கூடாது என ஒரு கேள்வி எழலாம்!

இன்றைய நிலையில் அங்கு கால் வைத்த அடுத்த கணமே கைது செய்யப்பட்டு அழிக்கப்படும் பட்டியலில்தான் இவர்களில் பலர் இருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

இதைத் தவிர, அரசினால் ஆபத்தில்லை என்றாலும், பணத்துக்காக ஆட்கடத்தும் கும்பல்களினால் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து வருமோ எனவும் அச்சப்படுகிறார்கள்.

இறங்கியவுடன், கையில் ஆயுதம் கொடுத்து, நீ போய் உன் உரிமைக்காகப் போராடு எனச் சொல்ல அவர்களுக்கு அங்கே ரத்தினக் கம்பளம் விரித்திருக்கவில்லை.
இந்த நிலையில் அவர்களை அங்கே போகச் சொல்வது விளக்கைத் தேடி விட்டில் பூச்சியை அனுப்புவது போலத்தான் என்பதை மற்றவர்கள் உணர வேண்டும்!

இன்னொன்றும் எனக்குத் தெரிந்த ஒரு தகவல்!

இவர்களில் 80% பேர் நாளை ஈழம் பிறந்தால் அங்கு செல்ல மாட்டார்கள்!
இந்த வாழ்க்கைச் சூழ்நிலையில் குழந்தை குட்டிகளைப் பெற்று வளர்த்து வரும் இவர்களில் பெரும்பாலோனோர் என்னிடம் சொல்லிய கருத்து இதுதான்!
அங்கிருக்கும் மக்கள் நன்றாக வாழ இங்கிருந்து என்ன உதவிக்ள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்ய இவர்கள் தயார்! ஆனால் திரும்பிச் செல்ல மாட்டார்கள்.

இதுதான் யூதர்கள் நிலையிலும் நடந்தது!

இவர்கள் துரோகிகளா?
நிச்சயம் இல்லை!
தப்பி பிழைத்தவர்களா?
ஆம்!
அதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது!

எனவே, இவர்களைத் தூற்றுவதை விடுத்து, இந்தப் பிரச்சினைக்கு என்ன விதத்தில் ஒரு தீர்வு நம்மால் தர முடியும் எனப் பாடுபடுவோம்.
முடியவில்லை என்றால் சும்மாவாவது இருப்போம்!
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மீண்டும் சொல்கிறேன்! இவையெல்லாம் நானறிந்த செய்திகளை வைத்து எனக்குப் பட்ட கருத்தே! இது சரியா, தவறா என மற்றவர் வந்து சொன்னால் மகிழ்வேன்!
நன்றி, வணக்கம்!

Read more...

Sunday, May 10, 2009

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" - 25 "நட்பு"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" - 25 "நட்பு"

வடக்கு மாடவீதி களை கட்டி இருந்தது!
வழக்கத்தை விடவும் நல்ல கூட்டம்!
மாலை நேரக் காற்று இதமாக வீசியது!
அக்கினி நட்சத்திர வெயிலிலிருந்து விடுபட மக்கள் கூட்டம் கடைத்தெருவை மொய்த்தது!
'என்ன நாயர்! இன்னும் மன்னாரைக் காணுமே' எனக் கேட்டேன் டீயைச்
சுவைத்தபடியே! பக்கத்தில் பாஸ்கர் மசால் வடையை ஒரு கை பார்த்துக்
கொண்டிருந்தார்!
'வரும்! வரும்! வர்ற நேரந்தான்! அவசரப்படாதே' என வியாபாரத்தைக்
கவனித்தார் நாயர்!
'டக்'கென்று ஒரு ஆட்டோவில் வந்து அலட்சியமாக இறங்கினான்
மயிலை மன்னார்!
'இவன் எனக்கு எவ்வளவு சிறந்த நண்பன்! வேண்டுமெனும் போதெல்லாம்
உடனிருக்கிறானே' என மகிழ்ந்தவாறே அவனைப் பார்த்தேன்!

ஆனால், அவன் என்னைக் கவனிக்காமல், 'நீ பண்றது கொஞ்சங்கூட
நல்லால்லே! சொல்லிட்டேன்! ஆமா! இனிமே இப்பிடி பண்ணினேன்னா
அப்புறம் எங்கைதான் பேசும்! ஃப்ரெண்டாச்சேன்னு பொறுக்கறேன். இதுவே
இன்னொர்த்தனா இருந்தா நடக்கறதே வேற! இன்னா நெனைச்சுக்கினே நீ?' எனத் தன் அருகிலிருந்த கபாலியிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தான்!

சாதாரணமாக இவனுக்கு கோபம் அவ்வளவா வராதே! எதனால் இந்தக் கோபம் என ஒன்றும் புரியாமல் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன்!
'சட்'டென என்னைப் பார்த்தவன், உடனே முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, கபாலியின் தோள் மீது கை போட்டபடியே, 'நீ எப்போ வந்தே? இன்னா சமாச்சாரம்?' என அன்புடன் வினவியபடியே இரண்டு 'டீ'க்கு நாயரிடம் ஆர்டர் கொடுத்தான்!

'ஜப்பானில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்! பாஸ்கர்னு பேரு! இப்ப
இங்கே வந்திருக்கார்! அவர் உன்னைப் பார்க்கணும்னு பிரியப்பட்டார்!
அதான் கூட்டி வந்தேன். நல்லா கவிதையெல்லாம் எழுதுவார்!' என
அருகிலிருந்த பாஸ்கரை முன்னுக்கிழுத்தேன்!

'வாங்க சார்! வாங்க! உங்களைப் பத்தி நிறையவே சொல்லியிருக்கான் இவன்! என்னிக்கு வந்தீங்க?' என அன்பாக விசாரித்தபடியே என்ன வேணும் இப்ப? என்பதுபோல் என்னைப் பார்த்தான்!
'நட்பு' அதிகாரத்தை நீ சொல்லிக் கேட்கணுமாம். அதான்!' என்றபடி இழுத்தேன்!

பலமாகச் சிரித்தான் மன்னார்!
'இப்ப கபாலி கையில நான் பேசினதைக் கேட்டீங்க தானே! இதான் நட்பு!
அதுகூட இந்த அதிகாரத்துலதான் வருது! சரி, சரி! சொல்றேன். எளுதிக்கோ!'
என்றபடியே இங்குமங்குமாக நடை போட்டான் மயிலை மன்னார், 'டீ'யைச் சுவைத்தபடி!


இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் 79- 'நட்பு'


செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. [781]


எத்தனையோ காரியம் நாம பண்றோம் தெனந்தோறும்! எத்தினியோ புச்சு
புச்சா கண்டுபிடிக்கறாங்க ஒலகத்துல. ஆனா இது அல்லாத்தியும் விட
அருமையான செயல் எதுன்னா ஒர்த்தருக்கொருத்தர் செஞ்சுக்கற நட்புதான்னு ஐயன் சொல்றாரு!
மத்த பொருளுக்கெல்லாம் ஒரு விலை இருக்கும்! ஆனா, இது ஒண்ணுதான்
விலையே இல்லாதது!
இதை மட்டும் சரியாப் புரிஞ்சுகிட்டு செஞ்சிட்டோம்னா, இதைப் போல ஒரு
பெரிய காரியமே இல்லைன்னு புரியும் ஒனக்கு!
அதேமாரி, எதிரிங்க செய்யற காரியத்தைத் தடுக்கறதுக்கும் இந்த நட்பைப்
போல வேற எதுவும் இல்லேன்னும் சொல்லலாம். தனியா இருக்கறதைவிட, கூட நாலு தோஸ்துங்க இருந்தாக்க, எதிர்க்க வர்றவங்கூட ஒரு நிமிசம் யோசிப்பான்ல!
எப்பவும் கூட நிக்கறது இந்த ஃப்ரெண்ட்ஷிப் ஒண்ணுதான்!



நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு. [782]


இந்த நிலாவைப் பார்த்திருக்கேதானே நீ! மாசத்துல பதினைஞ்சு நாளைக்கு
கொஞ்சம் கொஞ்சமா வளந்து ஒரு நாளைக்கி முளுசா இருக்கும்.
அடுத்த பதினைஞ்சு நாளைக்கு படிப்படியா தேய்ஞ்சுபோயி ஒரு நாளு
ஒண்ணுமேயில்லாமப் போயிறும்.
அப்பிடித்தான் சில பேரோட நட்பும்!
நல்ல அறிவோட இருக்கறவர்கூட வைச்சுக்கற நட்பு பவுர்ணமி மாரி வளந்து கிட்டே இருக்கும். பூரணமா இருக்கும்.
ஆனா, அறிவில்லாதவங்கிட்ட வைச்சுக்கற நட்பு தேய்பிறைச் சந்திரன் மாரி,
கொறைஞ்சுகிட்டே வந்து ஒரு நாளைக்கு இல்லாமியேப் போயிறுமாம்!
இதுல ஒண்ணு நல்லா கவனிச்சுக்கோ!
அறிவுன்றது நீ படிச்சதுனால வர்ற அறிவு இல்ல!
படிக்கறதோட பலன் நல்ல குணம்னு பாபா சொல்லுவாரே... அது!
எவ்ளோ படிச்சாலும் நல்ல கொணம் ஒங்கிட்ட இல்லேன்னா, நீ படிச்சதுக்கே பிரயோசனம் இல்ல!
புரிஞ்சுக்கோ!



நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. [783]


இப்ப ஒரு புஸ்தகத்தைப் படிக்கறே நீ! சரி! இந்தத் திருக்குறளையேன்னு
வைச்சுக்குவோம்!
ஒவ்வொரு தபா படிக்கறப்பவும் ஒவ்வொரு மாரி புரிஞ்சு படிக்கப் படிக்க
செம குஜாலா இருக்கு இல்லியா?
அதுமாரித்தான் இருக்குமாம் நல்ல கொணம் இருக்கற ஆளுங்களோட நீ
வைச்சுக்கற நட்புமுன்னு ஐயன் சொல்றாரு.
ஒவ்வொரு தபாவும் தனித்தனியா ரொம்பவே சந்தோசமா இருக்கும் அந்த அனுபவம்!



நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. [784]

'கபாலிகிட்ட நான் பேசினதைப் பாத்து ஆச்சரியப்பட்டேதானே நீ? இன்னாடா!
இவனுங்க ரெண்டுபேரும் இன்னா தோஸ்த்துங்க! இப்பிடி எரிஞ்சு விளறானே
இந்த மன்னாருன்னு நெனைச்சியா இல்லியா? சும்மனாச்சும், பாத்தப்பல்லாம்
சிரிச்சுச் சிரிச்சுப் பேசறது மட்டும் ஒரு நண்பனுக்கு அளகில்ல. தோஸ்து
எதுனாச்சும் தப்பு பண்றன்னு தெரிஞ்சா, மொத ஆளா நின்னு 'நீ இதுமாரி
பண்றது தப்புடான்னு' சொல்லவும் வோணும். அப்பத்தான் நீ ஒரு உண்மையான தோஸ்து! கபாலி எனக்கு ரொம்பவே வேண்டியவந்தான். அதுனால அவனைக் கண்டிக்கறதுக்கும் எனக்கு உரிமை இருக்கு. இது எங்க ரெண்டு பேருக்குமே நல்லாப் புரியும். அதுனால, எங்களுக்குள்ள பிரசினை இல்லை. வெளங்குதா?'
இதைத்தான் இந்தக் குறள்ல ஐயன் சொல்றாரு.


புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும். [785]


'இப்ப உன்னியே எடுத்துக்குவோம்! நீயும் நானும் ஒண்ணா கொஞ்ச நாளு அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் படிச்சோம்! அவ்ளோதான்! அதுக்கப்புறம் ஒரு பத்துப் பதினைஞ்சு வருசம் ஒர்த்தர் மூஞ்சியை ஒர்த்தர் பார்த்ததுகூட இல்ல. எதேச்சையா ஒருநாளு இந்தக் குளத்தாண்டை என்னியப் பார்த்தே! 'மன்னாருதானே நீ!'ன்ன ஒடனே 'டக்'குன்னு எனக்கும் 'நம்ம சங்கரு'தான்னு
புரிஞ்சு போச்சு! ரெண்டு பேரும் கட்டிப் புடிச்சுகிட்டோம்! அதுக்கப்புறமும்
கூட, நீ ஒன் வளியில நான் என் வளியில! எப்பவாவது மாசத்துக்கு ஒரு தபா இல்லாட்டி ரெண்டு தபா பாக்கறதோட சரி! ஆனாக்காண்டியும், நாம எப்பப்
பார்த்தாலும் அதே அன்போடதான் பாக்கறோம்; பளகறோம்.'



'இதுலேர்ந்து இன்னா தெரியுது? ஒர்த்தனோட நட்பா இருக்கறதுக்கு
தெனந்தெனம் கட்டிப் பொரளணும்னு அவசியமே இல்ல!
ரெண்டு பேருக்குள்ளியும் எப்ப பார்த்தாலும் ஒரே மாரி அன்புன்ற உரிமை வருதா... அது மட்டுமே போதும்ன்றாரு ஐயன் இந்தக் குறள்ல!


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. [786]


பார்க்கறப்ப பல்லெல்லாம் தெரிய சிரிச்சுப்புட்டு போறது மட்டும் உண்மையான நட்பு ஆவாது! நெஞ்சுக்குள்ளேர்ந்து பீரிட்டுக்கினு வரணும் ஒரு உணர்ச்சி!
இவனைப் பார்த்த ஒடனேயே 'ஆஹா'ன்னு ஒரு சந்தோசம் உள்ளுக்குள்ளேர்ந்து வரணுமாம்!
அதான் உண்மையான நட்புன்னு சொல்றாரு ஐயன்!

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. [787]

நீ ஒரு தப்பான வளியில போறேன்னு எனக்குத் தெரியுதுன்னு வையி.
'சரி! அது ஒன்பாடுன்னு அப்பிடியே விட்டுறாம, உரிமையோட போயி,
'டேய்! நீ பண்றது சரியில்லடா'ன்னு அடிச்சுச் சொல்லணும் நானு! இதைத்தான் நாலாவது குறள்லியும் சொல்லியிருக்காரு. அப்பொறம் ஏன் மறுபடியும் சொல்றாருன்னு கேக்கிறியா? அது அவர் வளக்கம்! சொன்னதையே நல்லா புரியறமாரி ரெண்டு மூணு குறள்ல சொல்வாரு அவரு!



ஆனா, இதுல அத்தோட நிப்பாட்டிக்காம, அதுக்கு மேலியும் ஒரு படி
போயி, அடுத்து இன்னா செய்யணும்னும் சொல்றாரு.


தப்பை எடுத்துச் சொல்றதோட மட்டும் போயிறாம, ஒனக்கு நல்ல வளி எதுன்னும் நான் சொல்லி கூட்டிகிட்டுப் போவணும்.
அப்பிடிப் போறப்ப, அதுனால எதுனாச்சும் கஸ்டம் வந்தா, அப்பிடியே
விட்டுட்டுப் போயிறாம கூடவே நிக்கணும்!


இதுல தெளிவா இருக்காரு ஐயன்!


நல்ல வளியில போவாம நீ அதையே செஞ்சு அதுனால ஒரு தும்பம் வந்தாலும், அப்பவும் கூட நிக்கணும்.

அப்பத்தான் நான் ஒரு உண்மையான நண்பன்னு சொல்லிக்க முடியும்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. [788]


இது அல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு குறளு! மேடையில, பேப்பர்ல அடிக்கடி இத்த எடுத்து விடுவாங்க நம்ம ஆளுங்க!
பேண்ட்டு போடற இந்தக் காலத்துக்கு இது எவ்ளோ தூரம் பொருந்தும்னு தெரியல!
இருந்தாலும் இன்னும் ரொம்பப் பேருகிட்ட இன்னும் லுங்கி கட்ற வளக்கம்
இருக்கறதால, இப்பவும் இதைச் சொல்லலாம்னு நெனைக்கறேன்!
இடுப்புல கட்டியிருக்கற லுங்கி[!!] அவுர்றப்ப, ஒன்னை அறியாமயே
ஒன்னோட கையி அத்தப் புடிச்சுக்கும்!
அதுமாரி, இருக்கணுமாம் நட்புன்றது!
'அவன் கேக்கட்டுமே'ன்னு வெயிட் பண்ணாம, தோஸ்துக்கு எதுனாச்சும்
ஒண்ணுன்னா, ஒடனே போயி ஒன்னாலானதச் செய்யணும்.
அதான் உண்மையான நட்பு!


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. [789]

நீ எனக்கு நண்பன்னு நான் சொல்லிகிட்டேன்னா, ஒனக்கு நான் கொடுக்கவேண்டிய எடம் எது தெரியுமா? ஒன்னைப் பக்கத்துல ஒக்கார வைச்சுக்கறதோ, நாயர்கிட்ட டீ, மசால்வடை வாங்கித் தர்றதோ இல்லை.
பின்ன எதுன்னு கேக்குறியா?
எந்த நிலையிலியும் ஒரு மாத்தமுமில்லாம, எப்பவும் இவன் எனக்குன்னு இருப்பான்ற நெனைப்பு வர்ற மாரி, நடந்துக்கணும்
ஒன்னால முடிஞ்சவரைக்கும் அவனுக்கு ஒதவி செய்யப் பாரு.
அவனைத் தங்கறதுக்கு நீ இருக்கேன்னு அவனை நெனைக்க வைக்கற பாரு!...
அதான் ரொம்பவே ஒசந்த எடம்னு ஐயன் அளுத்தந்திருத்தமாச் சொல்லியிருக்காரு!


இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. [790]

இவ்ளோ செஞ்சதுக்கப்புறம் இன்னொண்ணையும் கவனமாச் சொல்லி
முடிக்கறாரு இந்தக் குறள்ல!
இப்பிடியெல்லாம் உண்மையா இருக்கற ரெண்டு கூட்டாளிங்க, ஒர்த்தரை ஒர்த்தர் 'அட! நான் ஒனக்கு இன்னால்லாம் செய்றேம்ப்பா, நீ இம்மாம் பெரிய
சேக்காளிப்பா! நான் ஒனக்கு ரொம்பவே கடைமைப்பட்டிருக்கேன்'னு ஒரு மரியாதைக்குன்னு பாராட்டாச் சொன்னாக் கூட போச்சு!
அது அந்த நட்புக்கே ஒத்துவராது!
ரொம்பவே கீள்த்தரமாப் பூடும்!
இதெல்லாம் அப்டியே மனசுக்குள்ள மட்டும் இருந்தாப் போறும்!
வெளில காட்டி அந்த நட்பைக் கேவலப் படுத்திராதேன்னு கண்டிசனா சொல்லிடறாரு!

அதுனால, 'ரொம்ப டேங்ஸ்ப்பா'ன்னுல்லாம் சொல்லாம மொதல்ல எடத்தைக் காலி பண்ணு!
கபாலிகிட்ட இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு எனக்கு!' எனச் சொல்லிக் கண்ணடித்தான் மயிலை மன்னார்!

எல்லாம் புரிந்த பாஸ்கர், 'அப்ப நாங்க கிளம்புறோங்க' என மட்டும் சொல்லி எழுந்தார்.
'வெவரமான ஆளுதான் ஒன்னோட தோஸ்து' என்பதுபோல என்னைப்
பார்த்துச் சிரித்துவிட்டு, கபாலி தோளில் கை போட்டபடியே ஆட்டோவில் ஏறினான் மயிலை மன்னார்!


************************************

Read more...

Monday, May 04, 2009

அ. அ. திருப்புகழ். 30 "குமர குருபர முருக சரவண"

அ. அ. திருப்புகழ். 30 "குமர குருபர முருக சரவண"
இன்றைய திருப்புகழ் சுவாமிமலை நாதனைக் குறித்துப் பாடப் பெற்றது.
'அடியவர் அழுகுரல் கேட்டு அடுத்துவந்து காத்தருள் முருகா!' என அருணையார் நமக்காக வேண்டுகிறார்.
ஈழத்தில் இப்போது இதே குரல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அங்கு வாழும் தமிழரின் அபயக்குரல் அழகன் முருகனின் காதுகளைச் சென்றடைந்து, விரைவில் ஒரு நல்ல முடிவுடன் அமைதி திரும்ப அவனருள் வேண்டி இதனை இடுகின்றேன்.
முருகனருள் முன்னிற்கும்!


------- பாடல் --------

குமர குருபர முருக சரவண
குகசண் முக கரி - பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள் குரு - மணியேயென்

றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின - முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர - லறியாயோ

திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட - வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு - மயில்வீரா

நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் - குருநாதா
நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் - பெருமாளே.


------ பொருள் -------

[பின்பார்த்து, முன் பார்க்கலாம்!]

திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட

திமிர எழுகடல் உலகம் முறிபட
திசைகள் பொடிபட


உப்புக்கடல், கறுப்பஞ்சாற்றுக் கடல்,
மதுக் கடல், நெய்க்கடல், தயிற்க் கடல்,
பாற் கடல், சுத்த நீர்க் கடல் எனப்
புராணம் சொல்லும் ஏழு கடல்களும் வற்றிடுமாறும்
எஞ்சியிருக்கும் நிலம் சூழ்ந்த பூமி அழியுமாறும்
எட்டுத் திசைகளும் பொடிபட்டழியவும்


வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு - மயில்வீரா


வருசூரர் சிகர முடி உடல் புவியில் விழ உயிர்
திறைகொடு அமர்பொரும் மயில்வீரா


பாலனெனவெண்ணிப் போர்செய்யத் துணிந்துவந்த
சூரபதுமன் உடன்சேர்ந்த இராக்கதர்கள்
மணிமுடிகளும், தலைகளும் அறுந்துபட்டு
உடல்கள் தனியாக வெவ்வேறாய் நிலத்தில் வீழவும்
அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு
கடும்போர் செய்த வேலினைக் கையினில் தாங்கிய
வெற்றிவீரனான முருகனே!


நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் – குருநாதா


நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல்

கணக்கிட்ட காலத்தில் காலன்வந்து கயிறுவீச

காத்திடுவாய் எனக்கட்டிய பாலகனின் இடர்தீர

காளைமீது ஏறிவந்து நெருப்பனைய இடக்காலால்

காலனை எட்டியுதைத்து காத்திட்ட பெருமான்


நதிகொள் சடையினர்

வானுலகில் தவழ்ந்திருந்த சீரான நதியொன்றை

மூதாதையர் கடன்தீர பூவுலகில் கொண்டுவர

பகீரதன் செய்தவத்தால் மனமின்றிக் கிளம்பித்

தாங்கொணாக் கோபம்கொண்டு கரைபுரண்டு ஓடிவந்த

கங்கையாளின் சீற்றம்கண்டு மூவுலகும் அஞ்சிநிற்க

மாறாத புன்னகையுடன் தன்கைகளில் அவளையெடுத்துத்

தன் தலையில் ஒளித்துவைத்து சடைவழியே ஒருநதியாய்ப்

பூலோகம் வரச்செய்த நதிகொள் சடையினர் சிவபெருமான்



குருநாதா


பிரணவத்தின் பொருள் கேட்கத் தனயன்முன் சீடனைப்போல்

தாள்பணிந்து வாய்பொத்தி தயவுடன் கேட்டிருக்க

ஓமெனும் மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்துத்

தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதராகிய சுவாமிநாதனே!



நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் - பெருமாளே.

நளின குருமலை மருவி அமர்தரு

நீர்நிலைகளினால் எழிலாக விளங்கிநிற்கும்

சுவாமிமலை என்கின்ற திருத்தலத்தில்

பொருந்தி அமர்ந்திருக்கும்



நவிலும் மறைபுகழ் பெருமாளே.

நன்னெறிகளைச் சொல்லிநிற்கும்

நான்மறைகளும் போற்றிப்புகழ்கின்ற

பெருமையில் மிக்கவரே!

குமர குருபர முருக சரவண
குகசண் முக கரி - பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள் குரு - மணியே


குமர குருபர முருக சரவண
குக சண்முக கரி பிறகான குழக
சிவசுத சிவயநம என குரவன் அருள்
குருமணியே


குமரக் கடவுளே!

குருவாக நின்றருளும் பெரிய பொருளே!

இளையவனே! அழகனே! முருகனே!

சரவணப் பொய்கையில் தோன்றியவனே!

குறிஞ்சி நிலக் கடவுளாதலின், குகையில் வீற்றிருப்போனே! அன்பர்களின் இதயக் குகையில் வீற்றிருப்போனே!!

முற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புடைமை [திருப்தி], என்றும் அறிபவன் [அநாதிபோதம்], தன் வயத்தனாதல் [ஸ்வதந்த்ரம்], பேரருளுடைமை [அலுப்த சக்தி], முடிவிலா ஆற்றலுடைமை [அநந்த சக்தி] என்ற ஆறு குணங்களும் முகங்களாக விளங்கும் ஆறுமுகப் பெருமானே!

ஆனைமுகனுக்குத் தம்பியாக வந்த அழகனே!

சங்கரன் குமாரனே!

சிவகதி அளிக்கும் சூக்கும பஞ்சாக்கரமான 'சிவய நம' எனும் மந்திரத்தைச் செபிப்பவர்க்கு வந்தருள் புரிபவனே!

குருவுக்கும் குருவான மணி போன்றவனே!


யென்றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென


என்று அமுத இமையவர் திமிர்தம் இடு கடல்
அது என


இவ்வாறாக,
பாற்கடலில் இமையவர்கள் அமுதம்

கடந்த வேளையில் எழுப்பிய

திமிர்தம் என்கிற பேரொலிபோல


அநுதின - முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர - லறியாயோ


அநுதினம் உனை ஓதும்
அமலை அடியவர் கொடிய வினை கொடும்
அபயம் இடு குரல் அறியாயோ


பாற்கடலில் இமையவர்கள் அமுதம்

கடந்த வேளையில் எழுப்பிய

'திமிர்தம்' என்கிற பேரொலிபோல

முன்செய்த வினையாலே உடல்நொந்து மனம் நொந்து

தினந்தோறும் உனையெண்ணி அபயம் எமைக் காத்தருள்வாய் எனப்

பலலட்சம் அடியார்கள் பலவாறும் கதறுகின்ற

அவலக்குரல் இன்னாரது என இன்னமும் நீ அறியவில்லையோ?

[உடன் வந்து துன்பம் தீர்த்தருள்வாய் முருகா!]

************************

***** அருஞ்சொற்பொருள்******

குழக= குழகன்=அழகன்
சுத=சுதன்= மகன்
குரவன்= குருபரன்
இமையவர்= கண்களை இமைக்காத தேவர்கள்
அமலை= மிகுந்த
திமிர= இருள் நிறைந்த
நமன்= எமன்
அழல்= நெருப்பு
***************

அருணகிரிநாதர் தாள் வாழ்க!
வேலும் மயிலும் வாழ்க!
முருகனருள் முன்னிற்கும்!
**********************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP