Monday, April 20, 2009

"வா வா வசந்தமே!" -- 2 [மினி தொடர்]

"வா வா வசந்தமே!" -- 2 [மினி தொடர்]

[ஒரு கிராமத்து அத்தியாயம்!]


[முந்தைய பதிவு]

மறுநாள், அந்த அநியாயம் நடந்தது!

கீழே விழுந்து மண்டையில் அடிபட்ட செல்லாயி குழந்தையை அவசரமாக அடுத்த ஊரிலிருக்கும் ஆசுபத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போகவேண்டி......,

லுங்கியை மடிச்சுக் கட்டிக் கொண்டு, வாயில் ஒரு பீடியைப் பிடித்தபடி, சைக்கிளில் சுடலை செல்ல, அவன் பின்னே பாளையமும் இன்னும் சில பேரும் சட்டையணிந்து மேட்டுத் தெருவைக் கடந்து செல்ல, ஊர்சனம் வியந்து பார்த்தது.

'எலே! ஆர்லே அது?' என்ற அதட்டலான குரலைக் கேட்டு, சைக்கிளை பிரேக் போட்டு அழுத்தி, செருப்பணிந்த ஒற்றைக் காலைத் தரையில் வைத்தபடியே, 'நாந்தானுங்க சுடலை. அர்ஜெண்டா ஆசுபத்திருக்கு போவ வேண்டியிருக்கு. கொளந்தைக்கு அடிபட்டு ரெத்தம் கொட்டுது. வந்து சொல்றேனுங்க' என தன் வாயிலிருந்த பீடி எச்சிலைத் துப்பியபடியே சொல்லிவிட்டு சைக்கிளை அழுத்தினான் சுடலை!

மேலே செல்ல முடியாதபடி வலுவான சில முரட்டுக் கரங்கள் ஹேண்டில்பாரைப் பிடித்து, சைக்கிளைச் சாய்க்க, குழந்தையுடன் கீழே சரிந்தான் சுடலை.

குழந்தையை அணைத்துப் பிடித்தபடி, அதற்கு ஒன்றும் ஆகாமல் பார்த்துக்கொண்டு, அருகிலிருந்த பாளையத்தின் கையில் குழந்தையைக் கொடுத்துவிட்டு, தன்னைச் சாய்த்தவர்களை நோக்கிப் பய்ந்தான்.

'கையில குழந்தையைப் பாத்தீங்கதானே! அறிவில்லை ஒங்களுக்கு? அதுக்கு ஏதாவது ஒண்ணு ஆயிருந்தா, ஒங்கப்பனாட குடுப்பான்?' என்றபடி, தன்னைச் சாய்த்தவனை அறைந்தான்.

அவ்வளவுதான்!

கூட வந்தவர்களும் அடிதடியில் சேர்ந்துகொள்ள, சற்று நேரத்தில் ஒரு ரணகளமாய் மாறியது அந்த இடம்.

திபு திபுவென அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லம் வந்து சேர்ந்து கொள்ள, சுடலை கூட்டத்தாரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

ஓட ஆரம்பித்தார்கள்.

'வுடாதீங்கடா அவனுவளை. புடிச்சுக் கட்டுங்கடா என வாண்டையாரின் குரல் ஓங்கி ஒலிக்க, தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டார்கள்.

'என்னங்கடா? மீசை மொளைச்சுட்டா பெரிய .....ன்னு நெனைச்சுக்கிட்டியளோ? நாய்ப் பயலுவளா! எங்க தெருவுல, அதுவும் சட்டை செருப்போட, சைக்கிள்ல வர்றதுக்கு எம்மாந் தெகிரியண்டா உங்களுக்கு. இனிமே இப்பிடிச் செய்யாம இருக்கறதுக்கு அவனுக தலையை மொட்டையடிச்சு, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, சாட்டையால ஆளுக்கு இருவது அடி கொடுத்து அனுப்புங்கடா! அப்பத்தான் புத்தி வரும்' என உறுமிவிட்டு, சுடலை முகத்தில் காறித் துப்பிவிட்டு அவன் கன்னத்தில் பளாரென அறைந்தார் நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வாண்டையார்.

*******************


'சொன்னாக் கேக்கறீங்களா! இப்ப பாரு, அடிபட்டு, அவமானப்பட்டு வந்து நிக்கறதை. நாமெல்லாம் பாவப்பட்ட சனங்க பசங்களா! அவங்களோடல்லாம் போட்டி போட்டு செயிக்க முடியாது. இப்பிடியே அளிஞ்சு போறதுதான் நமக்கு விதிச்சிருக்கு. இப்பவாச்சும் புத்தியோட பொளைக்கப் பாருங்க. அவங்களோட வம்பு இனிமேலாச்சும் வைச்சுக்காதீங்க' என்றான் சன்னாசி, மலைத்தேனை எடுத்து அவர்கள் உடலில் தடவிவிட்ட படியே.

'நீ வாயை மூடு பெருசு!' எனச் சீறினான் சுடலை. 'வுட மாட்டேன். இத்த இத்தோட வுடமாட்டேன். நா இன்னா தப்பு செஞ்சேன்? அரை டிராயரைப் போட்டுகிட்டு ஆசுபத்திரிக்குப் போனா ஒர்த்தனும் மதிக்க மாட்டான்னுதானே சட்டை, செருப்பு போட்டுகிட்டுக் கிளம்பினேன்? அவசரமாப் போவணும்னுதானே ரெத்தம் வளிஞ்சுகிட்டிருந்த அந்தக் கொளந்தையை எடுத்துகிட்டு சைக்கிள்ல அந்த வளியாப் போனேன்? அது தப்பா? அதுக்கு இம்மாந் தண்டனையா? இதுல நீ வேற நாயம் சொல்லிகிட்டு! சும்மாக் கிட!'

'அதுக்கில்லேப்பா'.... எனத் தொடர்ந்தவனை ஒரு கை காட்டி நிறுத்தினான் சுடலை.

'இன்னா செய்யணும்னு எனக்குத் தெரியும். நீ ஒண்ணும் சொல்ல வேணாம். இதுக்கெல்லாம் ஒரு விடிவு பொறக்கணும். பொறக்கும்' என்றவனைப் பரிதாபமாகப் பார்த்தபடியே வெளியே நடந்தான் சன்னாசி.

'இப்ப என்ன செய்யலாம்னு சொல்லு அண்ணாத்த! செஞ்சிருவோம். எனக்கும் ரெத்தம்லாம் துடிக்குது' என்றான் பாளையம்.

'சொல்றேன்! நாளையிலேர்ந்து நாம யாரும் வயல்ல வேலை செய்யப் போகப் போறதில்ல. போற பெருசுங்க போவட்டும். அவிங்கல்லாம் அப்பிடியே வளந்துட்டாங்க. நாம சொன்னா கேக்க மாட்டாங்க. வாண்டையார்கிட்ட போட்டுக் கொடுத்தாலும் கொடுத்துருவானுங்க. அதுனால, இது நம்மளோட மட்டும் இருக்கட்டும். அது மட்டுமில்ல. இனிமே அந்த ஆளுங்க யாரும் இந்தப் பக்கமே வர வுடாத மாரி ஒண்ணு செய்யணும். இந்தப் பக்கம் வர்றதுன்னால அவனுங்கல்லாம் நடுங்கணும். அதுக்கும் ஒரு வளி வைச்சிருக்கேன். சொல்றேன் கேளுங்க' என்றபடி தனது திட்டத்தை அவர்களிடம் விவரிக்கத் தொடங்கினான் சுடலை.

********************

'என்னலே! உங்க ஆளுங்கள்லாம் ஒளுங்கா வேலைக்கு வர்றதில்லியாமே? அதுவுமில்லாம ரவுடித்தனம் பண்ணிகிட்டு அலையுறனுவளாமே? எங்க ஆளுங்க நடக்கற பக்கத்துல கல்லு வந்து விளுதாம். வைக்கப்போருங்க தீப்பிடிச்சு எரியுதாம். நேத்து கண்மாயைக் கூட ஆரோ உடைச்சிட்டாங்களாம். இதெல்லாம் உங்க ஆளுங்க வேலையா? என்ன? கொஞ்சம் ஜாஸ்தியாவே துள்ளறானுவளோ? ஒட்ட நறுக்கிப் புடுவேன் நறுக்கி. சொல்லி வையி'

மீசையை முறுக்கியபடியே எதிரில் கைகட்டிக் கூனிக் குறுகி நின்றுகொண்டிருந்த சன்னாசியிடம் மிரட்டினார் வாண்டையார்.

'ஐயையோ! அப்பிடில்லாம் தப்புத் தண்டாவுக்குப் போகாதுங்க எங்க சனம். வேற ஆரோ செய்யற வேலையா இருக்குஞ் சாமி.'

'எலே! நான் என்ன சும்மாவா உன்னைக் குசலம் விசாரிக்கவா கூப்பிட்டேன். எல்லாம் எனக்குத் தகவல் வந்துகிட்டுத்தான் இருக்கு. அன்னிக்கு மொட்டையடிச்சு அனுப்பியும் புத்தி வரலை போலிருக்கு அந்தப் பயலுவளுக்கு. இதுக்கும்மேல எதுனாச்சும் நடந்திச்சின்னா நான் மனுஷனா இருக்கமாட்டேன். ஆமா. நீ போ! போயி, அவஙகிட்ட சொல்லு. இந்த வாண்டையான் கை ஒண்ணும் பூப் பறிச்சுகிட்டு இருக்காதுன்னு' என அவனை விரட்டினார்.

'கும்புடறேஞ்சாமி! வரேஞ்சாமி!' என அவசர அவசரமாக நகர்ந்தன் சன்னாசி.

அவன் அகன்றதும், பக்கத்திலிருந்த கணக்குப் பிள்ளை, 'இதை இப்படியே விட்டா அவஙளுக்கு நம்ம மேல ஒரு பயம் இல்லாமப் போயிறும். அடக்கணுங்க' எனக் குழைந்தார்.

'ஆமாமாம். நீ போய், நம்ம ஆளுங்களை இங்க வரச் சொன்னேன்னு சொல்லு' எனச் சொல்லி ஒரு குரூரப் புன்னகை பூத்தார் வாண்டையார்.

அன்றிரவுதான் அந்தப் பயங்கரம் நடந்தது!
****************
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP