Sunday, October 12, 2008

"அன்னைக்கு ஒரு கடிதம்"

"அன்னைக்கு ஒரு கடிதம்"
மதிப்பிற்குரிய சோனியா அன்னையாருக்கு,

வணக்கம்.

இந்தியாவின் முடிசூடா மஹாராணியாக தற்போது இருப்பவர் நீங்கள்.

தன் நாட்டை விட்டு எங்கள் மண்ணுக்கு மருமகளாக வந்து, இப்போது அனைவராலும் 'அன்னை' எனப் போற்றப்படும் அளவுக்கு உயர்ந்தது உங்கள் பெருமை.

இந்த நாட்டுக்காக நீங்கள் இழந்தது கொஞ்சம் அதிகமே!

சொந்தக் கணவனையே இந்நாட்டுக்காகப் பறி கொடுத்த உங்கள் சோகமும், அதனைத் தொடர்ந்து, நேரு குடும்ப வாரிசுகளை உருவாக்க நீங்கள் செய்த தியாகமும் எப்போதும் எங்கள் நன்றியை உங்கள் பால் காட்டி, உங்களை 'அன்னை' எனவே மதிக்கும் அளவுக்கு வந்திருப்பவர் நீங்கள்.

பொருளாதாரம், பாதுகாப்பு, அடுத்த தேர்தல் என பல விஷயங்கள் உங்கள் கவனத்தில் தற்போது இருப்பினும், ஒரு வேண்டுகோளை உங்கள் முன் கொண்டுவரவே இக்கடிதம் எழுதத் துணிந்தேன்.

இலங்கையில் தமிழர்கள் படும் அல்லல்!

சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்படும் அவலம்!

இருக்க இடம் இல்லாது, அப்பாவி மக்கள் படும் துயரம் உங்கள் பார்வைக்கும் வராமல் போயிருக்க வாய்ப்பில்லை.

இது ஏதோ ஒரு தனிப்பட்ட இயக்கத்துக்கு, அதன் சில தவறுகளால் நிகழ்ந்த , நிகழ்கிற சம்பவம் என அலட்சியப் படுத்தாதீர்கள்.

உங்களுக்கு இதில் தனிப்பட்ட முறையிலும் பாதிப்பு இருப்பதையும் உணர்வேன்.

அதை மனதில் கொள்ளாமல், ஒட்டுமொத்த தமிழினமே அங்கு அழிக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து, உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, நிலைமையை ஒரு சீருக்குக் கொண்டுவர முன்வாருங்கள்.

சொந்த நாட்டிலேயே மூன்றாந்தர அகதிகள் போல் நடத்தப்படும் தமிழ் மக்களின் அவலத்தைப் போக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் நினைத்தால் இது முடியும்.

விரும்பினால், தமிழீழமே கூடப் பெற்றுத் தரமுடியும்.

இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் என இதனைத் தள்ளிவிட வேண்டாம்.

பங்களா தேஷில் அன்று இந்தியா எடுத்த பொறுப்பான செயலைத் தங்கள் கவனத்துக்கு இப்போது கொண்டுவர விரும்புகிறேன்.

இதைச் செய்தால் பல கோடி தமிழ் மக்கள் தங்களை நன்றியுடன் நினைவு கூருவார்கள்.

'இன்னா செய்தரை ஒறுத்தல்' எனும் வள்ளுவனின் மொழிக்கு உருக் கொடுத்த பெருமை வரலாற்றில் உங்களை வந்து சேரும்!

செய்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி. வணக்கம்.
****************************
[நாளை.... 'கேப்டனுக்கு ஒரு கடிதம்']

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP