Thursday, February 14, 2008

"பெண்ணில் இவளே பெருந்தெய்வம்"! [ஐந்தாம் தைவெள்ளிப் பதிவு]

"பெண்ணில் இவளே பெருந்தெய்வம்"! [ஐந்தாம் தைவெள்ளிப் பதிவு]
அன்னையென்னும் அரும்பெயர் பெறவே தன்னை இவளும் தந்திருந்தாள்
துணைவன் கொடுத்த பொறியினை எடுத்தொரு பொந்தினில் வைத்துக் காத்திட்டாள்
அல்லும் பகலும் இதனை உயிர்க்க உதிரம் கொடுத்து உதவிட்டாள்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [1]

பத்துத்திங்கள் தன்னை மறந்து என்னைநினைந்தே வாழ்ந்திருந்தாள்
பத்திரமாய் எனைக் கருவினில் சுமந்து கண்மணி போலே காத்திருந்தாள்
இத்தரையிலுள்ள நல்வரம்யாவும் தனக்கே வந்ததாய் மகிழ்ந்திட்டாள்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [2]

தன்னுடல் நலனும் பேணாதிருந்து எனக்கெனவே அவள் பொறுத்திருந்தாள்
இன்னுயிராய் எனை எண்ணத்தில் நிறைத்து ஆசைக்கனவுகள் வளர்த்திருந்தாள்
மண்ணில் உள்ள இன்பங்கள் யாவினும் என்னையே பெரிதெனக் கருதிட்டாள் பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [3]

உள்ளே செல்லும் உணவுகள் யாவும் வெளியே வரவும் உடல்தளர்ந்தாள்
உள்ளே இருக்கும் என்னைக் காக்க அதையும் அவளும் பொறுத்திட்டாள்
உள்ளே அங்கே கோயிலில் அருளும் தெய்வத்தை விடவும் மேம்பட்டாள்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [4]

முப்பது நாட்கள் முள்ளாய்த் தவித்தாய் இருக்கிறேன் என்றே தானறிய
அடுத்தொரு திங்கள் அகமெலாம் தளர்ந்தாய் உள்ளே நிகழ்ந்த மாற்றத்திலே
மூன்றாம் திங்கள் பூரித்திருந்தாய் என்னை வளர்க்கும் நோக்கத்திலே
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [5]

நாலாம் மாதம் கருவது தெரிய நடையில் சற்று மிடுக்கடைந்தாய்
ஐந்தாம் மாதம் உயிரின் துடிப்பின் ஓசைகேட்டு முகமலர்ந்தாய்
ஆறாம் மதம் அடுத்தவர் காண ஆடையைத் தளர்த்தி அமர்ந்திருந்தாய்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [6]

ஏழாம் திங்கள் வளைகளை அடுக்கி உடலின் சீரைச் சமன்செய்தாய்
எட்டாம் திங்கள் வயிறும் பெருத்து மூலிகை மருந்தினால் சரிசெய்தாய்
ஒன்பதாம் திங்கள் எல்லாம் ஒடுங்கி என்னைக் கொணரும் வழியறிந்தாய்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [7]

பத்தாம் திங்கள் என்னைக் கொணர்ந்து படைத்தவள் என்னும் பெயர் பெற்றாய்
உதிரப்பாலை எனக்குக் கொடுத்து காத்தல் என்னும் தொழில் செய்தாய்
என்னில் இருந்த தீயவை அழிக்க எத்தனை வழியில் நீ முயன்றாய்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [8]

தன்னில் இருந்து என்னை வளர்த்து மண்ணில் இன்று தவழவிட்டாய்
முத்தொழில் செய்து வரமெனக்கருளி என்னை உலகில் வளர்த்துவிட்டாய்
எத்தனை நன்றி சொன்னாலும் அது அன்னை பெருமைக்கு ஈடாமோ
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [9]

வெள்ளியில் அன்னையைப் போற்றிப்பாடுதல் உள்ளவர்கெல்லாம் நலமாகும்
கச்சிப்பதியில் காமாட்சி மாநகர் மதுரையில் மீனாட்சி காசியில் வாழும் விசாலாட்சி
இவரைப் பணியும் வெள்ளித்தையில் எம் அன்னையை இங்கே போற்றிப்பாட
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [10]

இதுவரை யாரும் சொல்லாக் கருத்தினை இங்கே யானும் சொல்லவில்லை
புதிதாய்ப் பிறந்த ஒவ்வொருபேர்க்கும் அன்னையிவளே முதல் தெய்வம்
கருவறை தொடங்கி இதுவரை எம்மைக் காக்கும் அன்னையின் பெருமையினைப்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [11]
********************************************************************************

தை வெள்ளிப் பதிவுகள் நிறைவுற்றன!!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP