"பள்ளி எழுந்தருளாயே" - 8 [28]
"பள்ளி எழுந்தருளாயே" - 8 [28]
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [8]
முதல் எனச் சொல்வதற்கும் முந்தையவனே!
இடைநிலை எனச் சொல்லப்படும் இடையவனே!
அனைத்தும் ஒடுங்கும் இறுதியானவனே!
இம்மூன்றையும் நிகழ்த்துவதாய்ச் சொல்லும்
பிரமன், திருமால், உருத்திரன் இவர்
மூவராலும் அறிய முடியாதவனே!
உன்னை வேறு எவரால் அறிந்திடல் ஆகும்?
இத்தகைய அருமை உடையவனாகிய நீயோ
இப்பூவுலகையே ஒரு பந்து போன்று
தன் விரல்களில் அணிந்திருக்கும் உமையுடன் சேர்ந்து
உன் அடியவர் வாழும் பழங்குடிசைகளில்
எழுந்தருளி அருள் புரிகின்றனை! பரம்பொருளே!
செக்கச் சிவந்த தழல் போலும் உன் திருமேனித்
தரிசனம் எங்களுக்குத் தந்து, கூடவே
திருப்பெருந்துறையினில் நீ அமர்ந்திருக்கும்
கோயில் தரிசனமும் விரைவினில் காட்டி,
சத்குருமூர்த்தியாய், அறிவுப் பிழம்பாய் நீயிருக்கும்
வேடமும் வலியவே வந்து காட்டி,
என்னையும் உன் அடிமையாக ஏற்றுக் கொண்டாய்!
எங்கும் நிறை அமுதமே! பள்ளி எழுந்தருள்வாயாக!
அருஞ்சொற்பொருள்:
மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.