Tuesday, October 16, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 17

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 17

முந்தைய பதிவு இங்கே!




15.


"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்." [648]


ராபர்ட் பஸ்ஸில் இருந்த அனைவரையும் ஒருமுறை தலையைத் திருப்பிப் பார்த்தான்.

'நான் எப்படி! இங்கே! இந்த ஊரில்!

எங்கோ, இங்கிலாந்தில் பிறந்த நான் இப்போது இங்கே!

இந்தியாவில் பணி புரிந்து திரும்பிய என் தந்தை.

சென்னை என்னும் ஊரைப் பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.

ஆன்மீகம் என்பதன் முதுகெலும்பே தமிழ்நாடுதான் என சொல்லிகிட்டே இருப்பார்.

யாரோ சித்தர்களாம்.

எல்லாம் தெரியுமாம் அவங்களுக்கு.

யாரோ ஒரு சித்தர், சிவன்மலைன்னு ஒரு ஊருலேர்ந்து வந்தாராம்.

அப்பாவைப் பார்த்ததும், திரும்பிப் பார்த்துச் சிரித்தார்.

'நீ எங்க ஆளு! உன் ஆத்மா எங்களுது! ஆனா உடம்பு அந்நியமாயிடுச்சு! நீ போயிடுவே! ஆனா, உன் பையன் இங்கே வருவான்,...
என்னைத் தேடி' அப்படீன்னாராம்.


டாடிக்கு ஒரே ஆச்சரியம்.

ஏன்னா, அப்போ அவருக்கு கல்யாணமே ஆவலை!

3 வருஷம் கழிச்சி இங்கிலாந்து திரும்பினதும்தான் என் மம்மி ஸ்டெல்லாவோட மேரெஜ் ஆச்சு.

அப்புறம்தான் நான் பொறந்தேன்.

கெமிஸ்ட்ரி மேஜர்.

ஆனா, படிப்புல நாட்டமே இல்லை.

கீழைநாட்டு சிந்தனைகள் பற்றி எப்படியோ ஒரு நாட்டம் பிறந்தது.

சகுனம்.... அப்படீன்னு ஒண்ணு என்னை ரொம்பவே பாதிச்சுது.

இந்த உலகத்துக்குன்னு ஒரு பொது மொழி இருக்குன்னு என் மனசு சொல்லிச்சு.

இதைத் தெரிஞ்சு பேசறவங்க இந்தியாவுல, தமிழ்நாட்டுல,
அதுவும் குறிப்பா ஏதோ ஒரு மலைல இருக்கறதா, உள்மனசு சொல்லிக்கிட்டே இருந்துது.

ஒரு சித்தரை எப்படியாசும் பாக்கணும்னு ஒரு உந்தல்!

எதையும் தங்கமாக்கலாமாமே அவரால!'

கிளம்பிட்டான்!

சென்னையிலே தங்கி, தமிழ் கத்துகிட்டு, சில பேர்கிட்ட ஏமாந்துபோயி, பல புத்தகங்களை வாங்கிப் படிச்சு, அப்புறம், மதுரை வந்து, அங்கே கொஞ்ச காலம் திரிஞ்சு, அலைஞ்சு, கோவிலில் பார்த்த ஒருவர் 'நீ இப்படிப் போ' என அடையாளம் சொல்ல,இப்போ இந்த பஸ்ஸுல!
----------

எத்தனை தடவை படிச்சாலும், இந்தக் கதை புரியவே மாட்டேங்குது!' சலிப்புடன் உரக்கச் சொன்னான் கந்தன்.

பக்கத்திலிருந்த வெள்ளைக்காரன் இதைக் கேட்டான்.

'என்ன புரியல?'

'ஒண்ணுமில்ல! இந்தப் புஸ்தகத்தைச் சொன்னேன்'

சொல்லிக் கொண்டே, பையிலிருந்து இரு கற்களை எடுத்து கையில் உருட்டினான்.

ராபர்ட் துள்ளிக் குதித்தான்.... அவைகளைப் பார்த்ததும்!

'கருப்பு வெள்ளைக் கல்லுங்க!!'

கந்தன் சட்டென அவைகளை மீண்டு பைக்குள் போட்டான்.

'ஒரு ராசா எனக்கு அதைக் கொடுத்தாரு!' சற்று வீராப்பாகச் சொன்னான்.

ராபர்ட், சிரித்தபடியே தன் சட்டைப் பைக்குள் கையை விட்டு எதையோ எடுத்து கையை விரித்தான்.

அவன் கையிலும் இரண்டு கற்கள்.... ஒன்று கருப்பு, ஒன்று வெள்ளை!

'யாருன்னு சொன்னே? ராசா... யூ மீன் கிங்?' என்றான் ராபர்ட்.

'ஒரு ஆடு மேய்க்கறவனுக்கு ராசா வந்து இதைக் கொடுத்தாரான்னு நினைக்கறேல்ல நீ?'

'சேச்சே! அப்படில்லாம் இல்ல! ஆடு மேய்ச்ச ஒருத்தர்தானே பெரிய சித்தரா திருமூலர்னு வந்தாரு.
ஏன், உங்க கண்ணனே ஒரு ஆடு மேய்ச்ச இடையன் தானே!
உன்கிட்ட அவர் பேசினாருன்றதை நான் நம்பறேன்'

ஆச்சரியம் கலந்த குதூகலத்துடன் கந்தன் ராபர்ட்டைப் பார்த்தான்.

'இன்னொண்ணு கூட எனக்குத் தெரியும். உங்க ஊருல சாமி சிலை செய்யணும்னா, ஒண்ணா கருங்கல்லுல, இல்லேன்னா,
சலவைக்கல்லுலதான் செய்வீங்க! கருப்பு இல்லேன்னா வெள்ளைக் கல்லு! அதைத்தான், இந்தப் பெரியவரு ஒரு அடையாளமாச்
சொல்லிருக்காரு.' என்றான் ராபர்ட்.

'இவன் என் பக்கத்துல வந்து உக்காந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு' என நினைத்தான் கந்தன்.

'இப்ப நீ என் பக்கத்துல உக்காந்திருக்கறது கூட ஒரு நல்ல சகுனம் தான்!' எனக் கூவினான் ராபர்ட்!

'ஐயோ! இதையும் சொல்லிட்டானே!' என களிப்பானான் கந்தன்!

'ஆரு சொன்னாங்க உனக்கு சகுனத்தைப் பத்தி?' என ஆவலுடன் கேட்டான்.

'ஆரு சொல்லணும்? உலகத்துல நடக்கற எல்லாமே ஒரு சகுனம்தான். இந்த உலகத்துக்குன்னே ஒரு பொது மொழி இருக்கு. ஆனா,
எல்லாரும் அதை மறந்திட்டாங்க!
அதைத் தேடத்தான் நான் இங்கே வந்திருக்கேன். உங்க ஊருல இருக்கற சித்தருங்களுக்குத்தான் அது தெரியுமாம்.
அப்படி ஒரு ஆளைத் தேடித்தான் நான் வந்திருக்கேன்.'

'நான் ஒரு புதையலைத் தேடிகிட்டு போயிட்டு இருக்கேன்' சொன்னவுடன் அவசரப்பட்டு உளறிட்டோமே என நாக்கைக் கடித்துக் கொண்டான்.

ராபர்ட் அதைக் கவனித்தாற்போல் காட்டிக் கொள்ளாமல், தலையை நிமிர்த்தி, ஏதோ கனவுலகில் மிதந்தவாறே சொன்னான்!

'ஒரு வகையில பார்த்தா, நானும்தான்!' என்றான்.

'சித்தர்னா யாரு?' கந்தன் வினவினான்.

[தொடரும்]
***********************************




அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP