Thursday, March 08, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16--சரவணஜாதா நமோ நம

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.


[பொருள்]

{முன் பார்த்து பின் பார்க்கலாம்!}


"இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற"

புழுதி பறந்தது ஆதவனின் மண்டலம் தனிலும்,
விண்வெளியெங்கிலும், மண்ணுலகம்தனிலும்
மூவுலகும் மறைந்தது புழுதியின் மிகுதியால்


"வானவர் எவர்களும் ஈடேற ஏழ்கடல் முறையோ என்று
அடர் பட"


புழுதியின் துகள் எழக் கண்டு வானவரும்
பொழுதினி ந்ன்கினி நமக்கே விடிந்ததென
வானவரும் மகிழ்வுடனே கூத்தாடி களிகூற
ஏழுகடல்களும் குய்யோ முறையோவென
கூக்குரலிட்டுக் கதறிக் கதறி வருந்திட


"மாமேரு பூதரம் இடிபடவேதான் நிசாசரர்
இகல் கெட"

மலைகளிலே பெருமலையாம் மாமேரு மலையும்
தன்நிலை மறைந்து துகளாகி இடிபடவும்,
எவருக்கும் பயமின்றி இரவிலே உலவுகின்ற
இராக்கதரும் தம்நிலை மறந்து ஒழிந்திடவும்


"மா வேக நீடு அயில் விடுவோனே"

இத்துணை இயல்புகளும் இவ்வாறு நிகழ்ந்திடவே
செயுமாறு தன் வீரவேலை விட்டெறிந்த வேலாயுதரே!

"மரகத ஆகார ஆயனும், இரணிய ஆகார வேதனும்,
வசு எனும் ஆகார ஈசனும், அடிபேண"


பச்சை நிறம் கொண்ட ஆயர் குலத்துதித்த
'மச்சாவதார மால்எனும் திருமாலும்,
பொன்னிறம் கொண்ட மறைகளின் தலைவனாம்
பிரமனெனும் படைப்புக் கடவுளும்,
நெருப்பு நிறம் கொண்ட சிவந்த வண்னமுடை
உருத்திரன் என்னும் உக்கிர மூர்த்தியும்,
அனைத்துக்கும் முதலான, அனைத்தையும் ஆளுவிக்கும்
உனது திருவடியை விரும்பி வணங்கிடவும்,

"மயில் உறை வாழ்வே"

அழகிய மயிலினை வாகனமய்க்
கொண்டுவரும் என் இறைவனே!

"விநாயக மலை உறை வேலா"

திருப்பத்தூருக்குக் கிழக்கே
ஐந்து மைல் தள்ளி அழகுடனே
பிள்ளையார்பட்டியெனும் விநாயகர்மலையினில்
விருப்புடன் அமர்ந்திருக்கும் வேலாயுதரே!

"மகீதர வனசரர் ஆதாரம் ஆகிய பெருமாளே!"

மலையும் மலை சார்ந்த இடமாகும்
குறிஞ்சி யெனும் காட்டில் வாழ்கின்ற
வேடருக்கு ஆதாரமாகிய பெருமைக்கு
என்றென்றும் உரியவரான பெரியவரே!

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!


"கருணைய தீதா நமோ நம"


உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!

"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!


"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!

"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!


அருஞ்சொற்பொருள்:
ஜாதா -- தோன்றியவரே
அதீதா -- கடந்து நின்ற பொருளே
சததளபாதா -- நூறு இதழ்த் தாமரை போலும் பாதங்கள் உடையவரே
அபிராம -- பேரழகு
தருண -- இளமை
நிருப அமர் -- தலைமை தங்கிய
பூபா -- தலைவரே
பகவதி -- ஐஸ்வர்யம், வீர்யம், புகழ், திர்ரு, ஞானம், வைராக்யம் எனும் ஆறு குணமுடையவர்
விரவிய -- மறையுமாறு
பூதரம் -- மிகப் பெரிய
நிசாசரர் -- இரவில் உலவும் இராக்கதர்
அயில் -- வேலாயுதம்ம்
ஆகார -- நிறமுடைய
இரணிய -- பொன்னிறம்
மகீதர -- மலைகளுடன்கூடிய
வனசரர்- வனத்தில் உறையும் வேடர்

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!



Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP