Friday, March 23, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 58 [51-3]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 58 [51-3]
51. [3]

'மொத மூணு வரியும் மத்தவங்க புரிஞ்சுக்கறதுக்காவ சொன்னது!

ஆனாக்காண்டிக்கு, அந்தக் கடைசி வரி மட்டுந்தான் இவரு பாத்தத, பாத்து அனுபவிச்சுத, அனுபவிச்சு ஒணர்ந்ததச் சொல்ற வரி!

‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ன்னு கதர்றாரு.

இந்த ஒருவரிதான் அநுபூதி !

குஹந்தான் கந்தன்!!

அந்தக் கந்தன் குடுத்த அனுபவத்தை, அனுபூதியைச் சொல்றதுதான் மத்த மூணு வார்த்தையும்!

இதைப் புரிஞ்சுக்கணும்னா, திரும்பவும் அந்த மொத ரெண்டு வார்த்தைக்குத்தான் போவணும்!

‘உருவாய், அருவாய்!

ஆமா!

‘உருவாய் அருவாய் குருவாய் வருவாய்! அருள்வாய்!’

போதுண்டா இந்த வாள்க்கைன்னு கோபுரத்து உச்சிலேர்ந்து குதிச்சவரைக் கை குடுத்து ஒர்த்தன் தாங்கினான்!

ஆர்ராது, சாவறதுக்குக்கூட வுட மாட்டேன்றானேன்னு ஒரு கோவத்தோடத்தான் அந்த ‘உரு’வைப் பாத்தாரு அருணையாரு!

இந்த உருவைப் பத்தியே பாடிக்கினே இத்த மறந்துட்டு, இந்த உரு இல்லாத ஒரு நெலைக்கு நீ வந்து என்னிய சேருன்னு சொல்றமாரி, ‘சொல்லற, சும்மாயிரு’ன்னு சொல்லிட்டு, அருவமாயிட்டாரு கந்தன்!

கண்ணெதிர்க்கத் தெரிஞ்ச உருவைத் தவற வுட்டுட்டேனேன்னு, கோயில் கோயிலாப் போயி, ஆயிரக்கணக்குலப் பாட்டுப் பாடி, தன்னோட நெலையைச் சொல்லிப் பொலம்பித் திருப்புகளா[ழா]க் கொட்டினாரு அருணகிரியாரு.

அப்பிடியாப்பட்ட ஒரு நேரத்துல கெடைச்சதுதான் இந்த அநுபூதி!

உருவமாத் தெரிஞ்சவரு, அருவமா வந்து,, மலரோட மருவா, மணியோட ஒளியா, கருவோட உசிரா, கெதியோட விதியா இவருக்குள்ளாற குருவா வந்து அருள் பண்ணினப்ப இவருக்குக் கெடைச்ச பரவசந்தான் கந்தன்!’ என்றான் மயிலை மன்னார்.

சொல்லிக் கொண்டே வந்தவனை இடைமறித்து, ‘அப்ப எதுக்கு குகனேன்னு சொல்லி முடிச்சாரு?’ என நான் வினவினேன்!

‘இத்த நீ கேட்டதுதான் எனக்கு ரொம்பப் பிடிசிருக்கு! ‘ என அன்புடன் என் தோள்மீது கைபோட்டு அணைத்துக் கொண்டான் மன்னார்.

ஏளனமா, அது பாராட்டா எனத் தெரியாமலேயே அவன் அணைப்பில் சிக்குண்டபடியே, முன்பு கேட்ட கேள்வியை அவன்மீது வீசினேன்!

‘குஹன்’னா ஆரு? எத்தினியோ வார்த்தைங்க அவனைப் பத்திச் சொல்றதுக்கு இருக்கக்கொள்ள, இத்தச் சொல்லி ஏன் முடிக்கணும் அருணகிரியாரு? என பதில் கேள்வியை என்னைப் பார்த்தபடியே கேட்டான் மயிலை மன்னார்.

பதில் சொல்ல நான் எத்தனிக்கும் முன்னரே, மீண்டும் தொடர்ந்தான்.

'இருளோன்னு கெடக்குற குகைக்குள்ளார ஒரு வெளிச்சம் வந்தா எப்பிடி இருக்கும்? ரெண்டாவுது பாட்டுலேர்ந்த்து அம்பதாவுது பாட்டு வரைக்கும் அருணகிரியாரு பொலம்பினதெல்லாத்தியும் பாத்தீன்னா, இந்த சொத்து, சொகம், வூடு, பொஞ்சாதி, கொளந்தை, குட்டிங்க, பெருமை, பேரு இதெல்லாத்தியும் எப்பிடி ஒண்ணொண்ணா வுட்டுத் தள்ளணும்ன்றதப் பத்தியே பாடினது புரியும்!

இதுங்க அத்தினியும் மொத்தமா சேர்ந்து ஒண்ணு மேல ஒண்ணா ஒரு போர்வை மாரி அடுக்கடுக்கா போர்த்திக்கினு, உள்ளார க்கீற அந்த வெளிச்சத்தை….. அந்த ஜோதியை மறைக்குதுங்க!

இதெல்லாத்தியும் வெலக்கினா, மனசுன்ற குகைக்குள்ள க்கீற இருட்டெல்லாம் படிப்படியா வெலகி ஒனக்குள்ளாறியே ஒரு பெரிய வெளிச்சம் தெரியவரும்! அந்த வெளிச்சந்தான் குஹன்! அதான் அனுபூதி!’

‘இங்க ‘வருவாய், அருள்வாய்’ன்னு அருணகிரியாரு சொல்றதுல்லாம் ‘வருவியோ, அருள் தருவியோ?ன்னு கேக்கறது இல்லை! நீ வருவே, நிச்சியமாத் தருவே!’ன்ற உத்தரவாதம்! உள்ளாரயேத் தேடுங்கப்பா அந்த குகனை! குருவருளால....அந்தக் கந்தக்குருவருளால.... கண்டிப்பாக் கிடைப்பான்!!’ எனச் சொல்லி, மௌனத்தில் ஆழ்ந்தான் மயிலை மன்னார்!

‘தேடித் தேடி எங்கோ ஓடுகின்றார் – உன்னைத்
தேடிக் கண்டு கொள்ளலாமே – உள்ளே
தேடிக் கண்டு கொள்ளலாமே’
எனும் பாடல் கபாலி கோயிலின் ஒலிபெருக்கி வழியே வந்து, எங்களையெல்லாம் ஆட்கொண்டது!

ஓம் சரவணபவ’ எனும் மந்திரம் அனைவரின் உதடுகளிருந்தும் கிளம்பிப் பலமாக ஒலித்தது.
************************
பொறுமையோடும், பக்தியோடும் படித்து ஆசி வழங்கிய அனைவருக்கும் கந்தன் நலம் சேர்ப்பான்!
அறியாது உரைத்த இவற்றில் ஏதேனும் குறை இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.
ஓம் சரவணபவ.
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
*******************************

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா யருள்வாய் குகனே!

[கந்தரநுபூதி நிறைவு.]

Read more...

Wednesday, March 21, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 57 [51-2]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 57 [51-2]

51. [2]

‘கரீட்டாத்தான் பாயிண்ட்டைப் பிடிச்சிருக்கே நீ’ என என்னைப் பார்த்துச் சொன்னபடியே தொடர்ந்தான் மயிலை மன்னார்!

உருவாத் தெரியுற ஒண்ணுதான் உருவமே இல்லாத அருவமா மாறும்! இப்ப மொதல்ல முருகன்னா இவந்தான்னு நீ நெனைச்சுக்கினு தியானம் பண்றேன்னு வையி! ஒரு சமயத்துல, அந்த உருவமே அளிஞ்சுபோயி, ஒண்ணுமே இல்லாமப் பூடும்! நீயும், முருகனும் ஒண்ணாக் கலந்திருவே! இல்லாங்காட்டிக்கும், இவந்தான் நாம பாத்த அந்த உருவம்ன்ற நெனைப்பே ஒனக்கு இல்லாமப் போயிரும்! அப்ப, அந்த டயத்துல, உரு எது? அரு எது?ன்னு ஒனக்கே புரியாத ஒரு நெலை ஒனக்குள்ள வந்து முட்டிக்கும்,

அதாங்காட்டிக்கு, திருவருளே குருவா வரும். எதுத்தாப்புல நிக்கற குருவே ஒனக்கு திருவருளாத் தெரியும்!~
இந்த நெலைதான் அநுபூதி!

இத்தப் புரிய வைக்கறதுக்குத்தான் இத்தினி ஒதாரணமும் சொல்லிப் படுத்துறாரு அருணகிரியாரு!

ஏன்னா, அவுருக்குப் புரிஞ்சிருச்சு!

குருவா எதுத்தாப்புல வந்து நிக்கறான் முருகன்!
குருவா வந்தவனே திருவாவும் தெரியுறான்!

குருவா?, திருவா? உருவா? அருவா?ன்னு புரிஞ்சும் புரியாமலும் ஒரு நெலையுல ஒரு செகண்டு தத்தளிக்கறாரு அருணகிரியாரு!

ஆனாக்கண்டிக்கு, ஒடனே முருகன் தெளிய வைச்சிர்றாரு. .
அநுபூதின்னா இன்னான்னு புரிஞ்சிருது இவுருக்கு!

மத்தவங்களைப் போல இல்லாம, ஏதோ நமக்குக் கிடைச்சுதேன்னு அனுபவிச்சிட்டுப் போயிடற மனசு வரலை அவுருக்கு!

இந்த நிமிசத்த, இந்த அனுபவத்தை, அப்பிடியே சொல்லிறணுமேன்னு துடிக்கறாரு அந்தப் பெரியவுரு!
அதான் இப்பிடி வார்த்தையா வந்து வுளுது!

இதுக்குத்தான் ஒதாரணமா பலதும் சொல்லிக் காட்டுறாரு!

எப்பிடி ஒரு பூவுலேர்ந்து வர்ற மணம், ….. வாசனையைப் பிரிச்சு ஒணர முடியாதோ, அப்பிடித்தான், இந்த உருவும், அருவும்னு சொல்றாரு.

சரி, இது ஒனக்குப் புரியலைன்னு வைச்சுக்கோ… ஏன்னா, சில பூவுங்க அளகா இருக்கும், ஆனாக்காண்டிக்கு, வாசம் இல்லாம இருக்கும். சிலதுல செம வாசனை வரும் ஆனா, அளகா இருக்காது!

அதுக்காவத்தான், அடுத்தப்புல அந்த மணி, ஒளி ஒதாரணத்தக் காட்றாரு!
அது சரி, எத்தினிப் பேருக்கு மணியப் பத்தித் தெரியும்னு ஒரு நெனைப்பு ஒடனியே அவருக்குள்ளாறத் தோணுது!

ரொம்ப ஏளைபாளைங்க இந்த பொன்னு, மணி இத்தெல்லாம் பாத்திருங்க மாட்டாங்கள்ல! அதான் அவரோட கருணை உள்ளம்.!
எப்பிடியாச்சும் சொல்லி அல்லாருக்கும் வெளங்கவைச்சிறணும் இந்த நிமிசத்தைன்னு தவிக்கறாரு!

இதெல்லாம் ஒரு கனவு மாரி!
ஒரே ஒரு செகண்டுதான் தங்கும் !
அந்த நொடியைப் பிடிச்சுக்கணும்!
அத்த வுட்டா, அப்பாலிக்கா அது எப்பிடி இருந்திச்சுன்ற நெனைப்புக் கூட தங்காது!

அந்த செகெண்டை, அந்த அனுபவத்தை, அந்த அனுபூதியை சொல்லத் தவிக்குற ஒரு மனசோட வெளிப்பாடுதான் இந்தக் கடைசிப் பாட்டு!

அத்த நெனைப்புல வைச்சுக்கினு இந்தப் பாட்டைப் படிச்சா, அத்தினியும் கொஞ்சமாவது புரியலாம் .

அத்த வுடு! இப்ப அதுக்காவ இன்னா சொல்ல வராருன்னு பாப்பம்.

சாமின்னு ஒண்ணு இருக்குன்னு நம்பாதவனும் இருப்பான்.
பூ இருக்கற பக்கமே போகாதவனும் இருப்பான்.
பொன்னு, மணியைப் பாக்காத ஆளுங்களும்கூட இருப்பாங்களே! அவங்களுக்குல்லாம் இன்னாத்தச் சொல்லி இத்தப் புரிய வைக்கறதுன்னு நெனைக்கறாரு!

அது ஒண்ணுதான் அவுருக்கு இப்ப நெனைப்பு முச்சூடும்!
‘டக்’குன்னு ஒரு நெனைப்பு தோணுது அவுருக்கு!

இந்த ஒலகத்துல பொறந்த அல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு ஒதாரணத்தக் காட்டிப் பாடறாரு.

முட்டை சாப்படறவன்லேர்ந்து, முளு சைவமா க்கீற அல்லாருக்குமே தெரிஞ்ச ஒண்ணைச் சொல்லிப் புரியவைக்கப் பாக்கறாரு!

அதான் அந்த ‘கருவாய், உயிராய்!

கருவிலேர்ந்துதான் உசிரு வருது......... உசிரு வந்தாத்தான் கருவுக்கே மதிப்பு.!
அப்பிடியாப்பட்ட ஒண்ணுதாண்டா இதுன்னு கூவுறாரு!

சரி, அதுவும் புரியலைன்னா, இன்னொண்ணும் சொல்றேன்னு ‘கெதியாய், விதியாய்'னு சொல்லிக் காட்றாரு.

சாமியை நம்பாதவங்கூட, கெதியையும், விதியையும் நம்புவான்றதப் புரிஞ்சவரு அருணகிரியாரு.

இப்ப மொதல்லேர்ந்து பாரு.

உருவாய்னு ஆரம்பிச்சு, விதியாய்னு முடிக்கறாரு!

நம்பறவன், நம்பாதவன், இருக்குன்னு சொல்றவன், இல்லைன்னு சொல்றவன்னு அத்தினிப் பேருக்குமே இந்த அனுபவத்தைச் சொல்லிறணும்னு தவிக்கற அவரோட நல்ல மனசு ஒனக்குப் புரிய வரும்!

அதெல்லாம் சர்த்தான்! இத்தினியும் சொல்லிட்டு, இன்னும் அந்தக் கடைசி வரிக்கு வரலியேன்னுதானே பாக்கறே!’ எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

'ஆமாம் மன்னார்!' என ஆவலுடன் எல்லார் குரல்களும் ஒருசேர ஒலித்தன!

[தொடரும்…..முடிவைத் தேடி!]
**************
தொடர்ந்து படித்து ஆசிகூறும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, March 19, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 56 [51-1]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 56 [51-1]

51. [1]

ஒருவித எதிர்பார்ப்புடன் கூடிய அமைதியுடன், அனைவருமே மயிலை மன்னாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்றுதான் கந்தரநுபூதியின் நிறைவுப் பாடலுக்கு அவன் பொருள் சொல்லப் போகிறான் என்பதால்!


அதைப் பற்றிய ஒரு சிந்தனையும் தன்னிடத்தில் இல்லாதவன்போல மன்னார் பேசத் தொடங்கினான்.


‘இன்னா நாயர்! இன்னிக்குக் கடையுல வியாபாரம் எப்படி? வடையெல்லாம் நல்லாப் போச்சா?’ என்றதும், இதுவரைக்கும் எங்களிலேயே சற்று நிதானமாகக் காட்டிக் கொண்டிருந்த நாயரே கொஞ்சம் அசந்துதான் போனான்.


‘இப்போ எந்துக்கு இந்த விசாரம்?’ எனக் கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டான் நாயர்.


‘அதுக்கில்ல நாயர்! இன்னால்லாம் போட்டு, கலந்து, அத்த சரியா எண்ணையுல போட்டு, பதமா வேகவைச்சு போணி பண்ணினு க்கீறே நீ தெனமும்! என்னியப் போல ஆளுங்க ஒங்கடைக்கு வந்து, இன்னாமோ அசால்ட்டா, ஒரு வடையை எடுத்து, அத்தப் பிச்சுப் பாத்து, கடிச்சுட்டு, இது நொள்ளை, அது சொத்தைன்னோ, இல்லாங்காட்டிக்கு, ‘ஆகா, இன்னாமாப் பண்ணிக்கீறே நைனா’ன்னோ சொல்லிட்டு காசைக் கொடுத்திட்டுப் பூட்றோம்.


ஆனாக்காண்டிக்கு, இந்த ஒரு வடையைப் பண்றதுக்கு நீ இன்னா சிரமப் பட்டிருப்பே’ன்னு ஒரு செகண்டாவுது நெனைச்சிருப்போமா?


அட, அத்த வுடு! ஒன்னியே எடுத்துக்கோ? பருப்பை ஊற வைச்சு, பதமா உப்பைப் போட்டு, நாலு மொளகாயைத் தாளிச்சு அதுல கலந்து, இன்னும் அதுக்கு வோணும்ன்ற ஜாமானைல்லாம் போட்டு, நல்லா மாவாட்டி, எண்ணைய சூடாக்கி, இன்னா ஒரு பக்குவமா கொஞ்சங்கூட அலுப்பில்லாம பொரட்டிப் பொரட்டி யெடுத்து எங்களுக்கு நல்ல இருக்கணுமேன்னு ஒரு நெனைப்போட நித்தமும் நீ வடை சுட்டுத் தர்றே! ஆராவது ஒர்த்தனாவுது அந்த வடையைப் புட்டுச் சாப்பிடறப்ப அது பத்தி நெனைச்சிருப்பானா? அதான் கேட்டேன்’ என வெள்ளந்தியாகக் கேட்டான் மயிலை மன்னார்.


அடுத்த கணம் நாங்கள் யாருமே எதிர்பார்க்காத விதமாய், நாயர் எழுந்து நின்று, தன் மேல்துண்டை இடுப்பில் கட்டியபடியே, மன்னாரின் முன் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுந்தான்.


எல்லாரும் ஒரு கணம் பதறித்தான் போனோம்.


இதையெல்லாம் கவனியாதவன்போல, மன்னார் என்னைப் பார்த்து,


‘இன்னைக்குத்தான் கந்தரநுபூதியுல கடைசிப் பாட்டைப் படிக்கப் போறோமில்ல. டேய், சங்கரு! அந்தப் பாட்டைப் படி’ என்றான், சலனமில்லாமல்.


ஒன்றுமே புரியாமல், ஆனால் ஏதோ புரியப் போகிறது என்னும் உணர்வோடு அவசர அவசரமாய்ப் புத்தகத்தைப் பிரித்துப் பாடலைப் படித்தேன்.

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா யருள்வாய் குகனே.

மயிலை மன்னார் அதைப் பிரித்துப் படித்துச் சொன்னான்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

‘ரெண்டு ரெண்டு வார்த்தையாப் பிரிச்சுப் படிச்சியானா, அதாங்காட்டிக்கு, ‘உருவாய், அருவாய்’ உளதாய் இலதாயி';ன்னு பாத்தீன்னா ஒரு அர்த்தம் புரியும் ஒனக்கு! அத்த மொதல்ல சொல்றேன்! ஏன்னா, அதான் அல்லாரும் சொல்றது.' எனத் தொடங்கினான் மன்னார்.


இருக்கறது, இல்லாதுது, ஒண்ணுனால வர்ற ஒண்ணு, ஒண்ணுத்தப் பத்தி தொடர்ந்து வர்ற ஒண்ணுன்னு சும்மா சகட்டுமேனிக்கு பூந்து வெள்ளாடிருக்காரு இதுலன்னு புரியும்!


இத்தான் சாமின்னு காட்றமாரி ஒரு உருவமாவும் வருவாரு.


இதுல்லாம் இல்ல, இதுக்கும் மேல அருவமா க்கீறவந்தான் இவன்னு சொல்றமாரியும் இருப்பாரு.


இருக்கானா, இல்ல, இல்லாதவனா இவன்னும் நெனைக்க வைப்பாரு.


அது எப்பிடீன்னா, எங்கேருந்தோ ஒரு வாசனை கெளம்பி, ஒன்னோட மூக்கைத் தொளைக்குது! அது இன்னா வாசனைன்னு நீ தேடிப் பாக்கறப்போ, அது இந்தப் பூவுலேர்ந்துதான் வருதுன்னு ஒனக்குப் புரியுது! ஒடனே, அந்தப் பூவை எடுத்து மூந்து பாக்கறே! அந்த வாசத்துல கெறங்கிப் போறே! இப்ப, நீ வாசத்துல கெறங்கினியா, இல்ல, பூவோட அளகுல மயங்கிப் போனியான்னே ஒனக்குப் புரியல! ஆனாக்காண்டிக்கு நீ கெறங்கினதென்னவோ வாஸ்த்தவம்! அதான் 'மருவாய், மலராய்'! ஆச்சா! இப்ப அடுத்தாப்புல பாப்பம்!


ரெத்தினமாலை ஒண்ணு ஒங்கையுல கெடைக்குது! அட! அதுக்கென்ன நீ இப்பிடி மலைச்சுப் போயி என்னியப் பாக்குற? நெசமாவே ஒங்கையுல ஒரு ரெத்தினமாலை க்கீது! ஒண்ணு சேப்பா க்கீது. ஒண்ணு பச்சையா க்கீது. ஒண்ணு நீலம்! இப்பிடி ஒண்ணொண்ணும் ஓரோரு கலரு. இதுல எது ஒசத்தி, எது ரொம்ப அளகுன்னு ஒனக்கு ஒண்ணும் புரியலை! ஆனாக்காண்டிக்கும், ஒண்ணொண்னுமே அளகாத்தான் க்கீது! அதுவும் எதுனாலன்னா, அது ஒண்ணொண்ணுலேர்ந்தும் வர்ற ஒளியால!


இப்ப நீ சொல்லு! ஒளியால அளகா? மணியால அளகான்னு? எதுக்கு எது ஆதாரம்? ஒன்னால சொல்ல முடியாது! அப்பிடித்தான் மயங்கறாரு அருணகிரியாரு! மணியா? ஒளியா?ன்னு தெரியுலியே முருகான்னு!


அடுத்தாப்புல வர்ற வார்த்தையைக் கெவனி!


‘கருவாய், உயிராய்!’


கருவால பெருமையா? அதுக்கு வர்ற உயிரால பெருமையா?


கருன்னு ஒண்ணு இல்லாங்காட்டிக்கு அதுக்குள்ள உசிருன்னு ஒண்ணு வர முடியுமா?
இல்ல, உசிருன்னு ஒண்ணு வராம கருவால இன்னாதான் பிரயோசனம்?
இதுல்லாம அது இல்ல! அது வராட்டி இது ஒபயோகமேயில்லை!
அதான் சூட்சுமம்!


இப்ப அடுத்த ரெண்டு வார்த்தை!


‘கதியாய் விதியாய்’


ஒனக்குன்னு விதிச்ச ஒரு கெதியாலத்தான் நீ பொறக்கறே! ஆனா, நீ பொறந்ததுமே, ஒனக்குன்னு விதிச்ச விதி ஒன்னிய வந்து ஒட்டிக்குது!


கெதியில்லாம விதியில்ல! விதி க்கீறதுன்றதுலாலியேத்தான் கெதி ஒன்னியை இங்க பொறக்க வைக்குது! கெதியால விதியா? இல்லாங்காட்டிக்கு, விதின்ற ஒண்ணால கெதி இங்க ஒன்னியத் தள்ளிச்சா?’ எனச் சொல்லி என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

“ஓ! அப்போ இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குன்னு சொல்றே’ எனச் சற்றுத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு மன்னார் முகத்தைப் பார்த்தேன்!


‘தான் இவ்வளவு நேரமா, இவ்வளவு நாட்களாகச் சொன்னது ஒன்றும் பெரிதாக வீண்போகவில்லை’ எனும் தெம்புடன் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்தான் மயிலை மன்னார்!


இன்னும் தொடரும் எனும் நம்பிக்கையுடன் மன்னாரை ஆவலுடன் நோக்கினேன்.

[தொடரும்…..முடிவைத் தேடி!]
**********

அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

[இன்னும் இரு பதிவுகளாக இந்தப் பாடலின் விளக்கம் தொடரும். தினம் ஒரு பதிவாக வரும்.]

Read more...

Friday, March 16, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 55 [50]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 55


50.

‘பணமோ, நல்ல குணமோ வர்றது பெருசில்லை. அதைத் தக்க வைச்சுக்கணும். அதில்லேன்னா ஒண்ணும் பிரயோஜனப்படாது' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.


'இப்ப எதுக்காக இப்படிச் சொல்றீங்க' என்றேன் அவரைப் பார்த்து.


'இல்லேடா அம்பி. ஏதோ பகவானோட அருளால காலம் ஏதோ சொஸ்தமா ஓடிண்டு இருக்கு. இப்பப்போய் அதைக் கெடுத்துக்கலாமோ? அதிகமா காசு பணம் வேண்டாம். இருக்கறதை காபந்து பண்ணிண்டா போறாதோ? எப்பவோ யாருக்கோ கொடுத்த பணம் இப்ப தெய்வாதீனமாத் திரும்பி வந்திருக்கு. அதுக்கு ஒரு செலவு சொல்றா இவ! வேண்டாம்னா கேக்கவா போறா! எல்லாம் மாயையோட விளையாட்டு!' என்று அலுத்துக் கொண்டார் சாஸ்திரிகள்.


அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மன்னார் அவரைப் பார்த்து லேசாகச் சிரித்தான்.


'ஒங்களுக்கு மட்டுமா நடக்குது சாமி! அன்னி தொட்டு இன்னிய வரைக்கும் இதே கதைதானே நடக்குது! அந்த மாயை தொடங்கிவைச்ச வெளையாட்டுதானே அவங்க கொலத்தியே நாசம் பண்ணி சாச்சுது' என்ற மன்னார்,
'அடுத்த பாட்டைப் படி' என்றான்.


பதில் பேசாமல் பாடலைப் படித்தேன்.

மதிகெட் டறவா டிமயங் கியறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதிபுத் திரஞா னசுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே.

'இதை இப்பிடிப் பிரிச்சுப் பாக்கணும்' என மேலே தொடர்ந்தான் மயிலை மன்னார்.

மதி கெட்டு அறவாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப-அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.

மதி கெட்டு அறவாடி மயங்கி

'ஒரு காரியம் எப்பிடித் தப்பிப் போவுதுன்றத, படிப்படியா, ஒரு பச்சக்கொளந்தைக்குக்கூடப் புரியுறமாரி சொல்லிக் காமிக்கறாரு அருணகிரியாரு.


புத்தி கெட்டுப் போயி, அடடா! இப்பிடி அறிவுகெட்டத்தனமா நடந்துக்கினோமேன்னு அதுக்காவ ரொம்பவே வருத்தப்பட்டுப் பொலம்பி, இப்ப இன்னா பண்ணினா இந்தப் பித்தம் தீரும்னு நெனைச்சு நெனைச்சு, ஒண்ணும் வளி[ழி] புரியாம மயங்கித் திரிஞ்சு நிக்கற நெலை ஒண்ணு வரும்!


நாம இன்னா தப்பு பண்ணினோம்? எப்பப் பண்ணினோம்?னு கூடத் தெரியாத வேகத்துல அல்லாமே நடந்து முடிஞ்சிரும்!
செல்வாக்கா இருந்த நெலைமை மாறி, திடீர்னு பாத்தா, ஒண்ணுமே இல்லாத ஒரு நெலையுல வந்து அல்லாடுவோம்.
இதைத்தான் 'மதிகெட்டு, அற வாடி மயங்கி'ன்னு சொல்றாரு.


'அற'ன்னா ரொம்பவே ஜாஸ்தியான்னு அர்த்தம்.


இதுனால இன்னா ஆவுதுன்றத அடுத்தாப்புல சொல்றாரு.

'அறக்கதி கெட்டு, அவமே கெடக் கடவேனோ'

நல்லது பண்றதால வர்ற நல்ல கெதியைத்தான் 'அறக்கதி'ன்றாரு.
'அவமே'ன்னா ஒண்ணுத்தும் ஒபயோகமில்லாம வீணாப் போறது.
இப்பிடி இருக்கற நல்லதும் இல்லாமப்போயி, நான் கெட்டுஅளி[ழி]ஞ்சு போயிருவேனோன்னு பொலம்பறாரு.


இப்ப இன்னா ஆச்சு இவுருக்கு?

இதுவரைக்கும் நடுநடுவுல இப்பிடி அப்பப்ப பொலம்பினாரு . சரி, ஒத்துக்கலாம் அதைன்னா, இப்ப, கடைசிப் பாட்டாண்டை வந்து எதுக்காவ இவ்ளோ கதர்றாரு?

அநுபூதின்னா இன்னா, அதுக்கு இன்னான்னா பண்ணணும்னு சொல்லி, அது எப்பிடி இருக்கும்ன்ற வரைக்கும் சொன்னவர் ஏன் இப்பிடிப் பயப்படறாரு!?
கொளப்பமா க்கீதில்ல?


அதான் இதுல ரொம்பவே முக்கியம்!


கெடைக்காதது கெடைக்கறது பெரிசில்ல! அது கெடைச்சதும், ஒடனே கூடவே ஓடிவர்ற மயக்கத்தை நெருங்கவிடாமப் பாத்துக்கறதுதான் அத்த வுடவும் பெரிய சமாச்சாரம்.


இப்ப 'லாட்டிரி'ல ஒனக்கு ஒரு பத்து லட்சம் கெடைக்குதுன்னு வையி. நீ கொஞ்சங்கூட எதிர்பாக்காதது அது! வரணும்னு நெனைச்சுத்தான் வாங்கினே. ஆனா, 'ப்ரைஸு' விளுமான்றது தெரியாது. அப்பிடிக் கெடைச்சதுமே கூடவே ஒரு மெதப்பு தானா வந்து தொத்திக்கும்.


முருகா! எனக்கு அருள் பண்ணுப்பான்னு நீ கெஞ்சினதுல்லாம் சுத்தமா மறைஞ்சுபோயிட்டு, இன்னாமோ ஒன்னோட 'லக்'காலத்தான் இது கெடைச்சதுன்ற தெனாவெட்டு தானா வரும். அதான் இந்த மாயை பண்ற வேலை! அதோட வலையுல விளாமத் தப்பிக்கணும்!


அத்தத்தான் அருணையாரு இப்ப செய்யுறாரு!


அநுபூதின்ற 'லாட்டிரி ப்ரைஸ்' எனக்குக் கெடைச்சதுக்கு நீதான் காரணம்ன்றத மறந்திட்டு, நான் எதுனாச்சும் அறிவுகெட்டத்தனமா நடந்து கெடைச்சதியும் கோட்டை விட்டுருவேனோன்னு எனக்கு பயம்மா க்கீது முருகா!ன்னு அவருகிட்டயே மன்னாடறாரு.


இத்தச் சொல்றதுக்காவ அவரு போட்ட அடுத்த ரெண்டு வரிங்கதான் இதுல ரொம்பவே விசேசம்!' என்றான் மன்னார்.

அடுத்து என்ன சொல்லப் போகிறானோ எனும் எதிர்பார்ப்பு கூடுதலாக, அவன் முகத்தையே எங்கள் மூவரது கண்களும் பார்த்துக் கொண்டிருந்தன.

மூணு பேரு சொல்லி, முருகனைக் கூப்புடறாரு! ஒண்ணொண்னாப் பாப்பம்.

'நதி புத்திர'

சிவனோட நெத்திக்கண்ணுலேர்ந்து ஆறு பொறியா வந்தவருதான் நம்ம கந்தன்!

இந்த ஒலகத்துக்கே கெதிமோட்சம் தர்றதுக்காவவும், தேவருங்களோட கொறையைத் தீக்கறதுக்காவவும் வந்த வள்ளலுதான் இந்த முருகன்!


இவரைத் தாங்கிக்க முடியுமான்னு டெஸ்ட்டு பண்றதுக்காவ, ஆருக்காகப் பொறந்தாரோ, அந்த தேவருங்கள்ல ரெண்டு பேரான வாயு, அக்கினி பகவானாண்டை குடுக்கறாரு.
அவங்களால அத்தத் தாங்க முடியல!


அவங்க கொண்டுபோயி, தேவமகளான கெங்கையம்மாவாண்டை குடுக்கறாங்க.
அவங்களாலியும் இத்தத் தாங்கிக்க முடியாம வறண்டே போயிடறாங்க.


இப்பிடிக் கெடைச்ச பொருளை அவங்களால காப்பாத்திக்க முடியாமத்தான், சரவணப் பொய்கையுல வந்து வுளுந்தாரு முருகன்!


கெங்கையம்மா இட்டாந்து போட்டதால, இவருக்கு இந்தப் பேரு! நதி புத்திரன்னு!


ஆச்சா! இப்ப அடுத்ததப் பாக்கலாம்.

'ஞான சுக அதிப'

ஒடம்பாலியோ, அறிவுனாலியோ வர்ற சொகத்தக் காட்டியும், ஞானத்தால கெடைக்கற சொகத்துக்கு எல்லையே கெடையாது. அதான் நெலையான சொகம். மத்ததுல்லாம் வந்த வேகத்துலியே போயிறும்.


இந்த ஞானத்தால வர்ற சொகத்தைக் குடுக்கறவந்தான் கந்தன்! அவந்தான் இதுக்கெல்லாம் சொந்தக்காரன்.


இப்ப அருணகிரியாருக்கு இப்பிடிக் கெடைச்ச இந்த அநுபூதின்ற சொகத்தைக் குடுத்த மொதலாளியை ஆசையா 'ஞான சுகாதிபா'ன்னு கூப்பிடறாரு.

ஞான சுகாதிப - 'ஞானனே! சுகாதிபனே!'ன்னும் சொல்லலாமோன்னு படறதுடா' என்றார் சாஸ்திரிகள்.

ஆமாம். அப்படியும் சொல்லலாந்தான். ஆனாக்காண்டிக்கு, மத்த சுகங்களைத் தர்றதுக்கு நெறையவே சாமிங்க க்கீறாங்க. ஆனா, இந்த ஞானத்தால வர்ற பெரிய சுகத்தைத் தர்றதுக்கு நீ ஒருத்தன் தாம்ப்பா என் கண்ணுல படுதுன்னு அருணையாரு சொல்றமாரி எனக்குப் பட்டுது. அதான் அப்பிடிச் சொன்னேன்.' என்ற மன்னார் மேலே தொடர்ந்தான்.

கடைசியா வர்றது, 'அத் திதி புத்திரர் வீறு அடு சேவகனே'!

ஆரிந்தத் 'திதி'?

சூரனோட ஆத்தா. மாயைன்னு பேரு! பேரைக் கெவனி... மாயை! கசியப முனிவர்னு ஒர்த்தரு. அவரை மயக்கி அவர் மூலமாப் பெத்த பசங்கதான் சூரனும், தாரகனும், சிங்கமுகனும்.


இந்த மாயையோட வலையுல வுளுந்ததால, கசியபரோட தவம் அளிஞ்சுது!


இந்தம்மா குடுத்த கெட்ட போதனையால மதி கெட்டு, மயங்கிப்போயி, தனக்குக் கெடைச்ச வரத்தால வந்த சொகம் அத்தினியும் போறமாரி அளிஞ்சுபோனாங்க திதி புத்திரங்க! அதான் சூரனும் அவனோட தம்பிங்களும்! அல்லாம் மாயை பண்ற வேலை! அப்பிடியாப்பட்ட திதியோட புள்ளைங்களோட அகம்பாவத்தை வேறோட அறுத்த வீரந்தான் நம்ம முருகன்!


இப்பிடி மூணுவிதமாக் கூபிட்டு, ஞானத்துக்கே அதிபனான கந்தங்கிட்ட வேண்டிக் கேட்டுக்கறாரு அருணகிரியாரு!

கூலி குடுக்கற மொதலாளிகிட்டியே முளுப் பொறுப்பியும் நம்பிக்கையாக் குடுக்கறாரு!

குடுக்கறவன் ஆருன்றது புரிஞ்சதால!

அதான் கந்தனோட கருணை' என உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னான் மயிலை மன்னார்!

'அவனையே சரணாகதி அடையறதை இதைவிடவுமா சிறப்பாச் சொல்லிட முடியும்? அருணகிரியாரோட கருணையே கருணை! என்னமா இந்த லோகம் க்ஷேமமா இருக்கறதுக்காக இப்பிடியொரு அற்புதமான வேதத்தை நமக்குப் புரியறமாதிரி பிழிஞ்சு கொடுத்திருக்கார்! புரியறவாளுக்குப் புரியும்' எனக் கைகூப்பினார் சாம்பு சாஸ்திரிகள்!


'ஓம் சரவணபவ' எனும்மந்திரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது!
**************
[தொடரும்]

தொடர்ந்து படித்து ஆசிகூறும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Sunday, March 11, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 54 [49]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 54
49.


தன்னந் தனிநின் றதுதான் அறிய


இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ


மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்


கின்னங் களையுங் கிருபைசூழ் சுடரே.

தன்னந் தனி நின்றது தான் அறிய


இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ


மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்


கின்னம் களையும் கிருபைசூழ் சுடரே.

‘நேத்து இன்னாமோ சொன்னியே நீ? ‘எங்கியோ திருவள்ளுவர் சிலையாண்டை நின்னுக்கினுக்கீறேன். ஒன்னை எங்க காணலியேன்னு பொலம்பினியே.. நெனைப்பு க்கீதா?

அந்த செகண்டுல ஒன்னிய சுத்தி ஒரு நூறு பேரு இப்பிடியும் அப்பிடியுமா போய்க்கினு இருந்திருப்பாங்க! ஆனாக்காண்டியும்,, அப்ப ஒம் மனசு, கண்ணு ரெண்டுமே என்னிய மட்டுந்தான் தேடிக்கினு இருந்துது!

அதுனாலத்தான் அப்பிடி ஒரு வார்த்தை ஒங்கிட்டேர்ந்து வந்திச்சு!

அந்த நேரத்துல, ஒன்னியப் பாத்து ஒர்த்தர் இன்னா சார், ஆரைத் தேடுறேன்னு கேட்டிருந்தாக்கூட, அதுக்கு நீ இன்னா ஒரு பதில் சொல்லியிருந்தாக்கூட, அது ஒனக்கும் புரிஞ்சிருக்காது… கேக்கறவனுக்கும் வெளங்கியிருக்காது!

ஏன்னா, நீ தேடறது இன்னான்னு அவனுக்குத் தெரியாது. நீ சொல்றது இன்னான்னு அவனுக்கும் புரிஞ்சிருக்காது.

இதான் இன்னைக்கு நாம அல்லாரும் பாக்கறது, கேக்கறது, புரியறது!

இன்னா, நான் சொல்றது வெளங்கிச்சா?’ என்றான் மயிலை மன்னார்!

அவன் என்ன சொல்ல வருகிறான் எனப் புரியாமலையே, ‘நீ சொல்வது என்னவென எனக்குப் புரியலியே மன்னார்!’ என்றேன் பரிதாபமாக.

‘ம்க்கும்.. ஒனக்கு என்னிக்குத்தான் புரிஞ்சுது, இன்னிக்குப் புரியறதுக்கு’ என நொடித்தார் சாம்பு சாஸ்திரிகள்.

‘இப்ப நீங்க வேறயா?’ என்பதுபோல அவரை முறைத்தேன்.

இதான், இதான்…. இந்த மொறைப்புதான் ஆவாதுன்றது. அவுரு சொன்னது கரீட்டு! நான் இப்ப இன்னா சொல்லப்போறேன்னு மட்டும் கேளு! அத்தான் நல்லது. ‘எனச் சொல்லிவிட்டு என்னை அன்புடன் தட்டிக் கொடுத்தான் மன்னார்.

‘கிட்டத்தட்ட அல்லாத்தியும்,…… அநுபூதின்னா இன்னா?..... அது கெடைக்கணும்னா இன்னா பண்ணணும்?..... எதையெல்லாம் வுடணும்?...... எதைத் தேடிப் போவணும்?.....னு இதுவரைக்குமா ஒரு நாப்பத்தெட்டுப் பாட்டாச் சொல்லிக்கினு வந்த அருணகிரியாரு, இப்ப ‘டகால்’னு ரூட்டை மாத்திப் பாடறாரு!

நான் ஒனக்கு இதை இன்னான்னு சொல்லிப் புரியவைப்பேன்’னு சொல்றாரு! அதான் இதுல க்கீற சூட்சுமம்!

இதுவரிக்கும் சொன்ன அத்தினியயும் நீ பண்ணினியான்னா, ஒனக்கு ஒரு உண்மை தெரியவரலாம். அது இன்னான்னு ஒனக்கு மட்டுமே புரியும்! அந்த நெலையுல ஒனக்கு இன்னாமாரி ஒரு அனுபவம்…. அதான் அநுபூதி…….கெடைச்சுதுன்றத ஒன்னியத் தவர வேற ஆராலியும் புரிஞ்சுக்க முடியாது! ஒன்னாலியும் வேற ஆருக்குமே சொல்லவும் முடியாது! அதும்மாரி ஒரு நெலையுலதான் இப்ப நான் க்கீறேன்! என்னால எப்பிடிரா அத்த ஒனக்கு சொல்லிப் புரிய வைக்கறது?’ன்னு அங்கலாய்க்கறாரு!

அதான் இந்த மொத ரெண்டு வரியும்.

“தன்னந்தனி நின்றதுதான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?”

கந்தன் இவருக்கு சொன்ன அத்தினியையும் இவர் பண்ணிட்டு, நிமிந்து பாக்கறாரு!

என்னோடதுன்றத வுட்டாரு!

நாந்தான் அல்லாமும்ன்றதியும் வுட்டாரு!

சுத்துப் பத்து அல்லாமே செத்துப்போச்சுன்னும் புரிஞ்சுக்கினாரு!

நாந்தான் நீன்ற நெனப்பும் மறந்து போச்சு இப்ப!

நீதான் என்னோட முருகன்ற நெனைப்புகூட அத்துப் போச்சு!

இப்ப அவுரு மெதக்கற நெலையே அவுருக்குத் தெரியலை!

இப்பிடியாப்பட்ட ஒரு நெலையுல, …. அது சொகமா, உணர்வா….நெனைப்பா..ன்னு எதுவுமே தெரியாத ஒரு எடத்துல அத்த இன்னான்னு சொல்லி வேற ஒர்த்தருக்கு என்னால புரியவைக்க முடியும்?னு சொல்றாரு! ஏன்னா, அந்தமாரி ஒரு செகண்டுலதான், "முப்பத்தாறயும்" வுட்டுப் பிரிஞ்சு தன்னந்தனியா நிக்கற அந்த ஒரு நொடியுலத்தான்,….. குருநாதனான கந்தன் வந்து ஆன்மாவுக்குள்ள ஒக்காந்திருவான்! அப்பிடி அவன் வந்ததுக்கப்பால அத்தப் பத்தி ஆருதான் இன்னான்னு சொல்ல முடியும்?

இப்ப இதுக்கு அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்மந்தம்னு பாப்பம்!’ என நிறுத்தினான் மயிலை மன்னார்!

ஒரு பெரிய சஸ்பென்ஸில் கொண்டுவந்து நிறுத்திவிட்டானே எனத் திடுக்கிட்டு ஒரு அதிர்ச்சியுடன் அவனை நோக்கினேன் நான்!

நாயரோ இதைப் பற்றியெல்லாம் கவலையே படாதவன்போல, கண்களை மூடிக் கிடந்தான்!

அவன் வாய் ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை விடாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது!

சாம்பு சாஸ்திரிகளோ ஒரு அர்த்தபுஷ்டியுடன் மன்னார் முகத்தைப் பார்த்தார்!

மன்னார் தொடர்ந்தான்!

“மின்னும் கதிர்வேல் விகிர்தா”ன்னு கூப்பிடுறாரு.

கதிர் வேல்னா இன்னான்னு தெரியுமில்ல? சூரியனோட வெளிச்சம் போல மின்ற வேலு!

சூரியனை நேராப் பாக்க முடியுமா? அதோட வெளிச்சம் கண்ணைக் கூசும்! அதும்மாரி கண்ணைப் பறிக்கற வேலு. அதுலியும் இத்த மின்னும் கதிர் வேலுன்னு சொல்றாரு. முருகன் கையுல இருக்கறப்ப, அந்தக் கையி அசையக்கொள்ள, அந்த வேலு இப்பிடியும் அப்பிடியுமாத் திரும்பறச்ச, அத்தோட வெளிச்சம் இன்னும் பிரகாசமா க்கீதாம்!

எதுனால அப்பிடித் திரும்புதுன்னா, அவங்கவங்களுக்கு வேணும்ன்றமாரி முருகனோட வடிவம் மாறி, மாறித் தெரியுது. தன்னோட அடியாருங்களைக் காப்பாத்தறதுக்காவ, அவங்களுக்கு சந்தோசம் குடுக்கறதுக்காவ, கந்தன் வெவ்வேற வடிவம் எடுக்கறாரு. விகிர்தன்னா அதான் அர்த்தம்.

இந்த ‘மின்னும் கதிர்வேல் விகிர்தன்’ எதுக்காவ இப்பிடி பலவிதமா வேசம் கட்றார்னா, ஒர்த்தொர்த்தருக்கு ஒருமாரியான கஸ்டம், தும்பம்! அததுக்குத் தக்கமாரி, ஒவ்வொரு விதமா வராரு முருகன். கின்னம்னா, தும்[ன்]பம்னு அர்த்தம்.

மனுஷாளுக்கு வர்ற கஸ்டத்தயெல்லாம் அததுக்குத் தகுந்தமாரி தீர்த்து வைச்சு, கிருபை பண்றதத்தான், ‘கின்னம் களையும் கிருபை சூள்[ழ்] சுடரே’ன்னு பாடுறாரு அருணையாரு.

இதுல இன்னா விசேசம்னா, ஒர்த்தொர்த்தருக்கு ஒருமாரியா வந்து கிருபை பண்றாரா, அதுனால இதான் முருகன், இப்பிடித்தான் வருவான்னு ஆராலியுமே சொல்லிக் காட்ட முடியாமப் போயிறுது!

எப்பிடி அநுபூதி நெலைன்னா இன்னான்னு அருணகிரிநாதரால சொல்ல முடியாமப்போயி தவிக்கறாரோ, அப்பிடித்தான் இந்த விகிர்தனோட கிருபையும்! எப்பிடி சொல்றதுன்னே புரியாம வந்து அருள் பண்ணறான்!’ என முடித்தான் மயிலை மன்னார்.

இன்னவெனச் சொல்லமுடியாத மௌனம் அங்கே நிலவியது!
******************


அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Tuesday, March 06, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 53 [48]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 53


48.

'என்னடா இது கஷ்டகாலம்? இந்தப் 'பவர்-கட்'டுக்கு ஒரு விடிவே வராதா? இப்பிடி இருளோன்னு இருக்கே!' என அலுத்தபடி வந்து உட்கார்ந்தார் சாம்பு சாஸ்திரிகள்.

'அதுனாலென்ன சாமி? கொறையே படாதீங்க. அப்பிடியே அந்த அரிக்கேன் லைட்டை இப்பிடி நடுவுல கொணாந்து வையுங்க. இருளெல்லாம் ஓடியேப் பூடும். வெளிச்சந்தானே நமக்கு வேணும். வெட்ட வேண்டியத மட்டும் வெட்டிட்டு, இந்தப் 'பவரை' நாம 'கட்' பண்ணாம இருந்தாப் போறும்' எனச் சொல்லி என்னைப் பார்க்க, அவன் முகத்தில் தோன்றிய குறும்புச் சிரிப்பைக் கவனித்த நான், உடனே அடுத்த பாடலைப் படித்தேன்.

அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென் றவரோ டுறுவே லவனே.

அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ
செறிவொன்று அறவந்து இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

மொத வரியுலியே ரொம்ப அசால்ட்டா சொல்லிக் காட்றாரு நம்ம அருணையாரு.

அறிவு…. இதான் நாம அறிஞ்ச அறிவுன்னு நெனைக்கற ஒண்ணை,.... இந்த ஒலகுல நமக்குன்னு வந்த ஒறவுகளை…. இனிமே இதெல்லாம் வேணாம்னு புரிஞ்சுக்கற நெலை வர்றது ரொம்பவே கஸ்டமான சமாச்சாரம்.

இதெல்லாம் ஒரு பொய்யான மாயை…. இந்த ஒலகம், அத்தால வந்த அம்மா, அப்பா, பொண்ணு, புள்ளை, பொண்டாட்டி, சொத்து, சொகம், …. இதுங்கல்லாம் குடுக்கற கஸ்ட நஸ்டம், ஆனந்தம் ……. அல்லாமே நமக்கு சொந்தமானதில்ல… இதெல்லாம் வெறும் பொய்யிதான்னு புரிஞ்சுக்கறதுக்கு வர்ற நெலையுலியும்கூட, அப்பப்ப, சில சங்கதிங்க வந்து ஒரு கொடைச்சல் குடுக்கும். அப்பவும் கலங்காம நிக்கறதுக்கு ஒரு அசாத்தியமான தெம்பு வரணும். அப்பிடி இருக்கறவங்க ரொம்பவே கம்மி.

திரும்பத் திரும்ப இந்தப் பாட்டுங்கள்ல அருணகிரியாரு சொல்ற சமாச்சாரம் ஒண்ணே ஒண்ணுதான்!

கும்புடற சாமியோட அருளில்லாம, இதெல்லாம் நடக்கறதுக்கு ‘சான்ஸே’ இல்லைன்றதத்தான் கண்டிசனா சொல்லிக் காட்றாரு.


அதான் இந்த மொத ரெண்டு வரியும் சொல்லுது.

"அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில் பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ?"

அறிவுன்ற ஒண்ணு அத்துப் போயிறணும்ன்ற அறிஞ்சுக்கற அறிவாளிங்களுக்குத் தொணையா பிரியாம எப்பவும் கூட நிக்கற பெரிய சாமி நீதானேய்யான்னு கெஞ்சிக் கதற்ராரு இதுல!

எப்ப தொணையா நிப்பாரு தெரியுமா?

‘நான் ‘என்னுது’ன்’ற அகம்பாவம் அத்துப் போவணும். அல்லாமே நீதான் சாமின்ற தெளிவு வரணும்.
அதத்தான் அடுத்த வரியுல இன்னும் தெளிவா சொல்றாரு.

"செறிவொன்று அறவந்து இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே!"

‘செறிவு’ன்னா இன்னா?
 
பந்தபாசத்தால, இந்த ஒலகத்துல வந்து சேர்ற ஒறவுங்க.
இவங்களால வர்ற ஒரு ஆணவம் க்கீதே, அதுதான், ஒரு பெரிய இருட்டா வந்து மறைக்குது.

இந்த இருட்டு வெலகணும்னா, அதுக்கு ஒரு மூணு முக்கியமான சாமாச்சாரத்த வுடணும்.

காமம், கோவம், மயக்கம்னு மூணு!

ஒரு பொருளு மேல ஆசை வருது. அது கிடைக்கணுமேன்னு கோவம் கெளம்புது. கெடைச்சதும், அதும்மேல ஒரு மயக்கம்.

இப்பிடி மூணும் ச்சும்மா சுத்திச் சுத்தி அடிக்குதுங்க…….வெளிச்சத்தப் பாக்கவுடாம.

அப்பிடி இந்த மூணையும் ஜெயிச்சவங்கதான் ஞானிங்க!

‘ஆமாண்டா. சீவபோதம் நீங்கினா, சிவபோதம் வந்து ஒக்காரும்னு சொல்லுவாளே, அதாண்டா இது. அத்வைதம்!!!’ எனப் பரவசமாய்ச் சொன்னார் சாம்பு சாஸ்திரிகள்.

‘அதேதாங்க. அப்பிடி சிவபோதமா வந்து நிக்கறவந்தான் கந்தன். அந்தக் கந்தனைத்தான் ‘பிறிவொண்ணு அற நின்ன பிரான் நீதானே’......."வேற எதுவுமே வேணாம். என்னியக் கெட்டியாப் பிடிச்சுக்கோ. அதுவே போறும்னு, ....இந்த அரிக்கேன் லைட்டு மாரி...... வந்து நின்ன என் தெய்வமே!" ன்னு கொண்டாடறாரு அருணையாரு’ எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.

ஓம் சரவணபவ.
**************
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Wednesday, February 29, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 52 [47/2]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 52 [47/2]


[கந்தரநுபூதி 47 [இரண்டாம் பகுதி]

ஆறா றையுநீத் ததன்மே னிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே.

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சீறா வரு சூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.

“சீறா வரு சூர் சிதைவித்து இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே.”

ஒரு காலத்துல, இந்திரன் தன்னோட ஒலகத்துல அல்லா சொகத்தியும் மானாவாரியா அனுபவிச்சுக்கினு தன்னோட ஆளுங்களோட ரொம்பவே சந்தோசமா இருந்தான். ஆட்டமின்னா ஆட்டம், பாட்டமின்னா பாட்டம், அமிர்தத்தக் குடிச்சதால சாவே இல்லாம, மனம் போன போக்குக்கு வாள்[ழ்]ந்துக்கினு, ரொம்ப ஜாலியா இருந்தான்!

வந்தான் சூரன்னு ஒர்த்தன்!
ஓங்கிப் போட்டான் தலையுல ஒரு போடு!

அவ்ளோதான்! துண்டைக் காணும், துணியைக் காணும்னு பிடிச்சான் ஓட்டம் இந்திரன்!
பொண்டாட்டி புள்ளைங்களைல்லாம் வுட்டுட்டு, சீர்காளி[ழி]க்குப் பக்கத்துல க்கீற ஒரு மூங்கில் பொதருக்குள்ளப் பூந்துக்கினு, ஒரு மூங்கிலுக்குள்ளாற ஒளிஞ்சுக்கினான்!

பாவம் அவனோட பொஞ்சாதி! இந்திராணி!
அந்தம்மா மேரு மலைக்குள்ளாறப் போயி குந்திக்கினாங்க!

இவுரு காப்பாத்துவாருன்னு நம்பிக்கினு ஆட்டம் போட்டுக்கினு இருந்த அக்கினி, வாயு, சூரியன், சந்திரன், இன்னும் மத்த தேவருங்க பாட்டுல வுளுந்திச்சு மண்ணு!
மொத்தமா மூட்டை கட்டிக்கினு போயி, அல்லாரையும் ஜெயிலுக்குள்ள தள்ளி இம்சை பண்ணினான் சூரன்!

தேவருங்க, பிரம்மா, பெருமாளு இப்பிடி அல்லாரும் போயி மொறையிட்டதால மனசு இரங்கின சிவன், தன்னோட நெத்திக்கண்ணுலேர்ந்து ஆறு பொறிங்களை அனுப்பி, ஆறுமொகத்தப் படைச்சு, அவரு கையுல ஒரு வேலையும் குடுத்து, ‘நீ போயி இவங்க தும்பத்தத் தீரு’ன்னு அனுப்பி வைச்சாரு!

அவரும் அப்பன் சொல்லைத் தட்டாம அப்பிடியே செஞ்சு, சீறி வந்த சூரனை அளி[ழி]ச்சு, சூரசம்ஹாரம் பண்ணி, தேவருங்களுக்கெல்லாம் திரும்பவும் தேவலோகத்தக் குடுத்தாரு!

இப்ப நம்ம அரசியல்வாதிங்கல்லாம் அடிக்கடி சொல்லுவாங்களே!... ‘தமிள்[ழ்]கூறும் நல்லுலகம்’னு! அப்பிடீன்னா இன்னா?
தமிள[ழ]ங்கல்லாம் இருக்கற ஒலகத்துக்கு அப்பிடி ஒரு பேரு!

அதேமாரித்தான், ‘இமையோர் கூறு ஆ ஒ[உ]லகம்!
கூறா ஒலகம்னா, கூறு ஆ ஒலகம்னு புரிஞ்சுக்கணும்!

இந்த ‘ஆ’ன்னா இன்னா? அத்த எப்பிடி சொல்லுவாருன்னு முந்தியே பல தபா சொல்லியிருக்கேன். ஒனக்கும் நெனைப்பு இருக்கும்னு நம்பறேன்’ என்றான் மயிலை மன்னார்.

‘பிமரம் கெட மெய்ப்பொருள் பேசிய ஆ’ என நாயர் முணுமுணுத்தான்!

‘அதே, அதே! கரீட்டா சொல்லிட்டியே நாயரே!’ எனத் தட்டிக் கொடுத்தான் மன்னார்! வியப்புடன் நாயரைப் பார்த்தேன் நான்!

‘செத்து சுண்ணாம்பாக் கெடந்த தேவருங்களுக்கெல்லாம், அவங்களோட சொகமான ஒலகத்த மறுபடியும் மீட்டுக் குடுத்து, அவங்க மனசையெல்லாம் குளுரப் பண்ணின முருகா!’ன்னு இந்த வரியுல சொல்லிப் பாடறாரு அருணகிரியாரு!

இப்ப, இந்த மொத்தப் பாட்டையும் பார்த்தியானா, ஒரு முக்கியமான விசயத்த நீ கெவனிக்கணும்!

அஞ்சஞ்சாச் சேர்ந்து ஒரு இருபது வந்தாக்கூட, அத்தோட ஒரு நாலு, ஏளு சேர்ந்து முப்பத்தொண்ணு ஆச்சுன்னு முன்னாடி சொன்னேன்ல!

அத்தோட கடைசியா மறுபடியும் இன்னொரு அஞ்சு சேர்ந்துத்தான் அது முப்பத்தாறு ஆச்சு!

நமசிவாய’ன்னு பஞ்சாட்சரம் இருந்தாக்கூட, அது அந்த சிவனோட ஆறு பொறியுல கெளம்பி, ஒரு ஆறு [கங்கை] வளி[ழி]யாப் போயித்தான், அல்லாருக்கும் ஒரு நெரந்தரமான சொகத்தக் குடுத்துது !! அஞ்சுதான் ஆறைக் காட்டிச்சு! ஆறுதலியும் குடுத்துது!

அஞ்சு இல்லாம ஆறு இல்ல!
ஆனாக்காண்டிக்கும், ஆறுதான் அல்லாத்துக்கும் மேலான நெலையக் குடுக்கும்ன்றத இதுல ரொம்பவே தெளிவாப் புரிய வைக்கறாரு அருணகிரியாரு…. புரிஞ்சுக்க நெனைக்கறவங்களுக்கு…. அத்தத் தேடறவங்களுக்கு!

கெடைக்கறவங்களுக்குக் கெடைக்கும்! பாக்கறவங்களால பாக்க முடியும்! அவ்ளோதான் என்னால சொல்லவும் முடியும்!’ என நிறுத்தினான் மயிலை மன்னார்!

‘ஆஹா! எவ்ளோ அழகாச் சொன்னேடா! நீ சொன்னதைக் கேட்டதும் என் மனசுல ஒண்ணு பட்டுது!

தங்கிட்ட மறைஞ்சிருக்கற அந்த ஆறாவது முகமான ‘அதோமுகத்தைக்’ காட்டணும்னு திருவுள்ளம் பண்ணிண்டு, அந்த சக்தியை தன்னோட நெத்திக் கண்ணுலேர்ந்து வெளியே கொண்டுவந்து, அப்படி வந்த மஹாசக்தியை, அந்த லோகமாதா சர்வேச்வரியாலியே ஆறுமுகக் கடவுளாப் பண்ணி, அவனோட சக்தியை இந்த லோகமே அறியணும்னு, எல்லாத்துக்கும் ஆதியான அந்த சர்வேச்வரனே என்னமோ தனக்குத் தெரியாதுன்றமாதிரி, ப்ரணவத்துக்குப் பொருள் கேக்கறதுக்காக, அந்தக் கொழந்தை முன்னாடி மண்டி போட்டு, பயபக்தியாக் கேக்கறமாதிரி நடிச்ச உலக மஹா நடிகனான அந்தப் பரமசிவனோட திருவிளையாடல்கள்ல இதுவும் ஒண்ணுன்னுதான் நினைக்கத் தோணறதுடா!’ எல்லாம் அந்தக் கபாலீச்வரனோட அருள்தான்!’ என எதிரில் தெரிந்த கபாலி கோவிலைப் பார்த்து வணங்கினார் சாம்பு சாஸ்திரிகள்!

‘சரியாப் புரிஞ்சுக்கினு ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டீங்க சாமி! ஆறுக்கு அஞ்சுதான் ஆதாரம்! ஆனா, ஆறுதான் ஒரே வளி[ழி]!’ என அவர் காலில் விழுந்தான் மயிலை மன்னார்!

பங்குனி உத்திரப் பெருமான் கோவில் மணி பலமாக அடித்து ஆமோதித்தது!
**************
[தொடரும்]
 அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, February 27, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 51 [47/1]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 51


47. [முதல் பகுதி]

ஆறா றையுநீத் ததன்மே னிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே.


ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சீறா வரு சூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.

‘நேத்தே சொன்னதுப்போல, இப்ப விசயம் கொஞ்சம் சீரியஸாகிப் போவுது!

 இதுவரைக்கும் சொன்னதுல்லாம் வேற! இப்ப சொல்றது ரொம்பவே வேற!
அநுபூதின்னா இன்னா? அது கிடைக்கணும்னா, எத்தயெல்லாம் வுடணும்? என்னல்லாம் பண்ணணும்? எப்பிடில்லாம் நடந்துக்கணும்?னு இதுவரைக்கும் சொல்லிக்கினு வந்த இந்தாளு, இப்ப, கொஞ்சம் பூடகமா,.... கொஞ்சம் வெளிப்படையாவே, சொல்லியும் சொல்லாமலும், புரியறவங்க புரிஞ்சுக்கறமாரி, இத்தப் பத்தி சொல்லத் தொடங்கறாரு!

எ[இ]லை மறைவு காய் மறைவான்னு சொல்லுவாங்களே, அத்த இந்தப் பாட்டுல நல்லாவே நாம பாக்கலாம்!
இத்தான்னு சொல்லலை! இது இல்லைன்னும் சொல்லலை! ஆனாக்காண்டிக்கு, அல்லாத்தியும் சொல்லிடறாரு!’ என ஆரம்பித்தான் மயிலை மன்னார்.

சாஸ்திரிகள் நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார்! நாயர் கண்களை இன்னமும் இறுக்கமாக மூடிக் கொண்டான்! வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. நான் மட்டும் ஒன்றும் புரியாமல், என்ன சொல்றாங்க இவங்க எனும்படியாய், மூவரையும் மலங்க, மலங்கப் பார்த்தேன்!

அன்புடன் என்னைப் பார்த்தபடியே மன்னார் தொடர்ந்தான்.

‘நான் முன்னாடி ஒனக்கு ஒரு தபா சொன்னேனே அது நெனைப்பு க்கீதா? சைவ சித்தாந்தம் பத்தி! அத்த மறுபடியும் எண்ணிப் பார்த்தீன்னா, இதுல சொல்றது சுளுவாப் புரிஞ்சிரும்! இன்ன முளிக்கறே?

“ஆறாறையும் நீத்து”

இத்தத்தான் மொதமொதலா சொல்றாரு அருணகிரியாரு.

ஆறாறுன்னா இன்னா?
ஆறாறு முப்பத்தாறு! இப்பப் புரியுதா?’ எனக் கண்சிமிட்டினான் மயிலை மன்னார்!

‘அட! ஆமாம் மன்னார்! அப்போ அந்த முப்பத்தாறு தத்துவங்களைப் பத்தியும் விளக்கமா சொன்னியே!
ஆன்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் ஏழு, சிவ தத்துவம் ஐந்துன்னு சொன்னியே! இப்ப ஞாபகத்துக்கு வருது!’ எனக் கூவினேன் நான்!

‘பரவால்ல! ஏதோ கொஞ்சமாவது நெனைப்புல வைச்சிக்கினு க்கீறியே! அது வரைக்கும் சந்தோசந்தான்! அந்த முப்பத்தாறைப் பத்தித்தான் இப்ப சொல்ல வராரு அருணையாரு. அந்த முப்பத்தாறுல கடைசியாச் சொன்னது, ‘சிவ’ தத்துவம்! இப்ப சுருக்கமா இன்னொரு தபா சொல்றேன் கேட்டுக்க!

பஞ்சபூதம் அஞ்சு, பஞ்சபுலனுங்க அஞ்சு, பஞ்சப்பொறிங்க அஞ்சு, ஞானேந்திரியங்க அஞ்சு, மனம், புத்தி, அகங்காரம், சித்தமின்னு அந்தக்கரணங்க நாலு, வித்தியா தத்துவம்னு ஒரு ஏளு[ழு], ஆகக்கூடி, முப்பத்தொண்ணு. அதுக்கப்பால, சிவ தத்துவமின்னு ஒரு அஞ்சு!.ஆக மொத்தம் முப்பத்தாறு! ....ஆறாறு!

இதுல கடைசியா வர்றதுதான் சிவம்! இது வந்திரிச்சுன்னா, முளுக்க, முளுக்க ஞானமே நெறைஞ்சு கெடக்கும்!.

ஆனாக்காண்டிக்கு, இதுக்கப்பாலியும் ஒரு ரெண்டு மலம் நம்மைப் பிடிச்சு ஆட்டும்! ஆணவம், கன்மம்னு!

சிவாநுபூதி கெடைச்சதுக்கப்பாலியுங் கூட இந்த ரெண்டும் நம்மை வுடாது! இத்தக் களி[ழி]ச்சுக் கட்டினாத்தான் மெய்யான அநுபூதி கெடைக்குமாம்!

அத்தத்தான், ‘அதன்மேல் நிலையை’ன்னு இங்க சொல்றாரு அந்தப் பெரியவரு! அதுதான் பெரிய ‘பேறு’ன்னும் சொல்றாரு!

பேறுன்னா பெரிய பாக்கியம்னு அர்த்தம்!

அது எனக்கு எப்பிடிக் கிடைக்கும் முருகா? அதுக்கு எதுனாச்சும் வளி[ழி] க்கீதான்னு,… ‘பெரும் ஆறு உளதோ?ன்னு கதர்றாரு அருணகிரியாரு!

ஆறுன்னா வளி[ழி].

நீ சொன்னதப் பிடிச்சுக்கினு, வூடு, சொந்தம், பந்தம், நெனைப்பு, ஆசை, மயக்கம் அல்லாத்தியும் வுட்டுட்டேன் முருகா! நீயே கெதின்னு ஒங்காலையும் புடிச்சுக்கினேன் கந்தா! அப்பவும் நீ எனக்குத் தெரியலியே! நான் இன்னாதான் பண்ணணும்னு நீ சொல்றே! இதுக்கு இன்னாதான் வளி[ழி]ன்னு சொல்லு கொ[கு]மரான்னு கெஞ்சறாரு!

இதான்,… இந்த டெக்னிக்குத்தான் அருணகிரியாரு நமக்கெல்லாம் சொல்லிக் காட்டற ரூட்டு!

தனக்குக் கெடைச்சத, தன்னோட வைச்சுக்கினு மறைக்காம, இத்தத் தேடறவங்களுக்காகவும் சொல்லித் தர்ற நல்ல மனசு! ‘கரவே’ இல்லாத மனசு!

நேத்துக்கூட ஆரோ ‘தனக்குக் கிடைச்ச நல்லத்தயெல்லாம் மத்தவங்களுக்கும் கெடைக்கட்டுமே’ன்னு சொல்றாருன்னு எங்கையுல வந்து சொன்னியே’ அந்த நல்ல மனசு!

தேடறவங்களுக்குக் கெடைக்கும்! புரியறவங்களுக்குப் புரியும்…. புரியட்டும்னு இப்பிடி சொல்றாரு!

முப்பத்தாறியும் கடந்து போனீன்னா, ஒரு பெரிய அனுபவம் ஒனக்காகக் காத்துக்கினு க்கீதுன்றத எவ்ளோ தெளிவா,,…. அதே சமயத்துல பூடகமா.. சொல்லித் தராரு பாரு!

‘ஒரு பத்து நிமிசம்…. தெனமும் ஒரு பத்து நிமிசத்துக்கு காலைலியும், ராத்திரிலியும் ஒனக்குப் பிடிச்ச சாமிய மனசுல நெனைச்சுக்கினு தியானம் பண்ணுன்னு ஒங்காளு சொன்னாருன்னு அன்னைக்கு சொன்னியே! அதுதான் இதுவும்! செய்யிறியோ நீ? .....இல்ல! .....அதான் இப்பிடி இன்னமும் முளி[ழி]ச்சுக்கினு க்கீறே!’ என ஒரு விதமான பரிவுடன் என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

ஏதோ ஒரு அணுகுண்டு வந்து என் தலையில் விழுந்தது போன்ற திகிலுடன் அவனை ஏறிட்டு நோக்கினேன்!

என்னைப் பொருட்படுத்தாமல் மேலே தொடர்ந்தான் மயிலை மன்னார்!

‘இப்ப நான் சொன்னது அத்தினியையும் வுட்டுட்டு, இதுக்கும் அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்மந்தம்னுதான் நீ கேக்கப்போறே! ஏன்னா, நீ இன்னும் பொஸ்தக அறிவாலியே அல்லாத்தியும் சமாளிச்சிரலாம்னு நெனைக்கறே! தெரிஞ்சுக்க நெனைக்கறது நல்லதுதான்!
ஆனா, நாப்பத்தேளு[ழு]க்கு வந்தாச்சு! இப்பவாவுது புரிஞ்சுக்க ‘ட்ரை’ ப்பண்ணு. இன்னா நான் சொல்றது?’ எனச் சிரித்தான் மன்னார்.

எனது கண்களும் தானாக மூடிக்கொண்டன! காதுகள் மட்டும் மன்னார் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தன.

[அடுத்த பகுதி நாளை வரும்!]
**************
[தொடரும்]

தொடர்ந்து படித்து ஆசிகூறும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, February 23, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 50 [46]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 50


46.

எந்தாயு மெனக் கருள்தந் தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே.

என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.

மயிலை மன்னார் வந்து உட்கார்ந்தவுடனேயே, மடமடவெனப் பாடலைப் படித்து, அவனைக் கட்டிக் கொண்டேன்.

‘பரவாயில்லியே! இதுவரைக்கும் சொன்னதுக்கு ஒரு பலன் இருக்கு போலிருக்கே!’ எனத் தன்னையறியா ஒரு மகிழ்ச்சியுடன் என்னை அணைத்துக் கொண்டான் மன்னார்!

‘சரி, இப்ப பாட்டைப் பார்க்கலாம். மொத வரியுலியே ஒரு பெரிய விசயத்தைச் சொல்றாரு அருணையாரு.

'என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ'

ஆத்தாகிட்ட எப்பவுமே ஒரு தனியான உரிமை வந்திரும்! எனக்கு ஒரு நல்லது பண்றதத் தவிர வேற வேலையே இவளுக்குக் கெடையாதுன்னு ஒரு நம்பிக்கை நமக்குள்ள வந்திருது. மத்தவங்களுக்கெல்லாம் குடுக்கற மரியாதையைக் குடுக்காம, 'ஏ ஆத்தா'ன்னு நேரடியாச் சொல்லிருவோம். அன்பு ஜாஸ்தியினால வர்ற வார்த்தை அது! அத்தயேதான் இதுலியும் சொல்றாரு அருணகிரியாரு…… என் தாயின்னு.

அத்தயே நைனாகிட்ட வர்றப்ப பாத்தியானா, ஒரு கூடுதல் மரியாதை தானா வந்திரும். அன்பு செலுத்தற அம்மாகிட்ட உரிமை! அதே அப்பான்னு வர்றப்ப, அருள் பண்ற தந்தையேன்னு பணிவா சொல்றாரு.
இந்த ரெண்டு வார்த்தைக்குள்ளியே பெத்தவங்களை எப்பிடி மதிக்கணும், எப்பிடி அவங்ககிட்ட போவணும்ன்றதக் கோடிகாட்டிச் சொல்லியிருக்காரு பாரு!

எங்கிட்ட அன்பு காட்டறவணும் நீதான்! எனக்கு அருள் பண்றவனும் நீதான்! அதுனால, நீதான் எனக்கு ஆத்தாவும், நைனாவுமா க்கீறேன்னு பாசமாக் கூப்புடறாரு அருணையாரு.

இப்ப அவருக்கு ஒரு பெரிய கவலை புடிச்சு ஆட்டுது! இந்த ஒலகத்துல க்கீற மக்களெல்லாம் இப்பிடி தறிகெட்டுப் போயி அலையுறாங்களே; அல்லாத்தியுமே தன்னோட அறிவுனால சமாளிச்சிரலாம்னு கெர்வம் புடிச்சுத் திரியறாங்களே! அந்த எமன் பாசக் கவுத்த எடுத்துக்கினு தன்னோட மீசையை முறுக்கிக்கினு, 'கெளம்புறா மவனே'ன்னு வரக்கொள்ள, இந்த பாளா[ழா]ப்போன அறிவா வந்து காப்பாத்தப்போவுது? இத்தப் புரிஞ்சுக்காம இப்பிடி தலைக்கனம் பிடிச்சு மயங்கறாங்களே!'ன்ற கவலைதான் அது!

அதப் பத்தி யோசனை பண்னிப் பண்ணி இவரு மனசு கெனத்துப் போயிருது! அதத்தான் 'சிந்தாகுலம்'னு சொல்றாரு! முன்னாடி ஒரு தபா சொல்லியிருக்கேன்ல, ஆகுலம்னா கவலைன்னு. இப்ப சிந்தை ஆகுலம்... அதாங்காட்டிக்கு.... மனக்கவலை வந்து வாட்டுது இவரை!
இந்தக் கவலையைத் தீர்த்து என்னை ஆட்கொள்ளுப்பான்னு கெஞ்சறாரு இந்த வரியுல, “ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்”.
இன்னுமொரு விசயம் இதுல நீ கெவனிக்கணும்! சிந்தாகுலம் தீர்த்து என்னிய ஆளுன்னு சொல்லலை! சிந்தாகுலம் ஆனவைன்னு சொல்லிருக்காரு!

அதென்னா ‘ஆனவை’?ன்னு நீ கேப்பே! இந்த அறிவு குடுக்கற ஆணவத்தால இன்னான்னால்லாம் வருதுன்றதப் பட்டியல் போடற வார்த்தைதான் அந்த ‘ஆனவை’.

ஆசை, பேராசை, கோவம், ஆத்தரம், காமம், லோபம், வெறுப்புன்னு பலதையும் இந்த அறிவு நமக்குக் காட்டிக் குடுக்கும்! அதும் போக்குல போயி நாமளும் கண்டதியும் பண்ணிருவோம். அத்தயெல்லாம் சேத்துத்தான், சிந்தாகுலம் ஆனவை அல்லாத்தியுமே நீ தீத்து என்னைக் காப்பாத்துப்பான்னு சொல்றாரு!

இத்தயெல்லாம் நமக்காவத்தான் சொல்றாருன்றதப் புரிஞ்சுக்கோ!
நம்ம மேல வைச்ச அக்கறையால!’ எனப் பாசமாகச் சிரித்தான் மயிலை மன்னார்!

அதெல்லாம் சரி, மன்னார்! இப்ப அதுக்கும் அடுத்தாப்புல வர்ற வரிக்கும் என்ன சம்பந்தம்?’ எனக் கேட்டேன் நான்.

‘‘அருணகிரியாரு ரொம்ப ரொம்பப் பெரிய ஆளு! அவரை அப்பிடி ஆக்கினது அந்த முருகன்! அப்பனா அருள் பண்ணி, ஆத்தாவா அன்பு பண்ணி இவருக்குத் தாயும், தந்தையுமா இருந்த முருகன்!
அத்தச் சொன்ன அருணகிரியாரு ச்சும்மா வெறுமினியா அடுத்த வரியைப் போட்டிருப்பாரு! சரியான ‘குடாக்’குடா நீ!’ எனச் சிரித்தான் மன்னார்!

பொங்கிவந்த சிரிப்பைத் தன் மேல்துண்டால் மறைத்தபடி சிரித்தார் சாஸ்திரிகள்!

ஒரே ஒருமுறை தன் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்துவிட்டு, தன் ‘ஓம் சரவணபவ’ உச்சாடனத்தைத் தொடர்ந்தான் நாயர்!

எனக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது! மன்னாரைப் பரிதாபமாகப் பார்த்தேன்!

சொல்லமுடியாத அன்புடன் என்னைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் பேசத் தொடங்கினான் மயிலை மன்னார்!

‘அடுத்த ரெண்டு வரியை நல்லாக் கெவனி!

‘கந்தா, கதிர்வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறை நாயகனே ‘

கந்தான்னு மொதல் வார்த்தை!

கந்தன்னா ஆரு?
சிவனோட புள்ளை. அது மட்டுமில்ல! இன்னோரு அர்த்தமும் க்கீது!

தன்னோட புலனையெல்லாம் அடக்கின அருகன்னும் ஒரு பொருள் சொல்லுவாங்க!

இவருக்கு என்னல்லாம், எதுனாலல்லாம் மனக்கவலை வந்துச்சோ, அத்தயெல்லாம் அடக்கினவனைக் கூப்பிடறாரு!

அடுத்தாப்புல, கதிர்வேலவனேன்றாரு!

வேலு ஞானத்தோட அடையாளம்!
கதிர்வேலுன்னா சூரியனோட கதிர்மாரி ஞானத்தக் கூராக்கி வைச்சிருக்கறது.
அத்தக் கையுல வைச்சுக்கினுக்கீற ஆளுதான் நம்ம கந்தன்!

ம்ம்ம்.. அடுத்து இன்னா?
‘உமையாள் மைந்தா’

இந்த ஒரு வார்த்தையுல ஆத்தான்றவளோட அத்தினி அன்பையும் அப்பிடியே பிளி[ழி]ஞ்சு தந்திட்டாரு நம்ம அருணகிரியாரு!

முருகன் பொறந்தது சிவனோட நெத்திக் கண்ணுலேர்ந்து!

வளந்தது ஒரு கொளத்துல!

பால் குடுத்ததோ ஒரு ஆறு பொண்ணுங்க!

இந்தம்மா, உமையா,… பண்ணினதெல்லாம் அந்த ஆறு கொளந்தையையும் ஒண்ணாச் சேத்தது மட்டுந்தான்!

அது ஒண்ணே போதும்னு அல்லா சொந்தபந்தத்தியும் வுட்டுட்டு, ‘ஒமையாள் மைந்தா’ன்னு உரிமையாக் கூப்பிடறாரு அருணையாரு!

அதான் அம்மாவோட பெருமை! வேற ஆருக்கும் கிடைக்காது அந்தப் பெருமை!

குமரான்னு அடுத்தாப்பல! அப்பனுக்கும் கொமரன்! ஆத்தாவுக்கும் இவந்தான் கொமரன்!

மறைநாயகனேன்னு ஒண்ணை ஸ்பெசலா போடறாரு இப்ப!

இதுக்கு முன்னாடியே எத்தினியோ தபா இந்தக் கதையை சொல்லிக்கீறேன்!
ஓம்முன்றதுக்கு முருகன் பொருள் சொன்ன கதையை!

பெத்த அப்பனை மருவாதியாக் கூப்பிடறது அல்லாரும் செய்யறது!
ஆனாக்காண்டிக்கு, இந்த எடத்துல மட்டுந்தான், பெத்தவனே மண்டியிட்டுக் கேட்ட கதை!

பெக்காதவளே ஆத்தா! பெத்தவனே மண்டியிட்டுக் கேட்டான்!

அப்பிடியாப்பட்ட பெருமை இந்த முருகனுக்கு க்கீது!

இப்பிடியாப்பட்டவனைப் பாத்து, நீதான் எனக்கு ஆத்தாவும், அப்பனும்!
நீதான் என்னோட மனக்கவலையைத் தீத்து வைக்கணும்னு இவரு கேக்கறதுல இன்னா தப்பு? இவரு பண்ணாத வேற ஆரால பண்ணமுடியும்?
இப்பப் புரியுதா?’ என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

என்னையறியாமலேயே, என் வாயினின்றும், ‘ஓம் சரவணபவ’ மந்திரம் தானே வெளிப்பட்டது!
கபாலி கோயில் மணியும் அதை ஆமோதிப்பதுபோல அப்போது ஒலித்தது!
மீண்டும் ஒருமுறை தன் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்துவிட்டு, தன் ஓம் சரவணபவ உச்சாடனத்தைத் தொடர்ந்தான் நாயர்!
**************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, February 20, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 49

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 49


45.

‘நம்மகிட்ட எந்த ஒளிவு மறைவுமில்லைப்பா! நம்மகிட்ட இருக்கற சரக்கை நம்ம சிஸ்யப் புள்ளைங்ககிட்ட அல்லாத்தியும் சொல்லிக் குடுத்திருவேன். அதான் நம்மளோட ஸ்பெசலு’ என்றவாறே வந்து அமர்ந்தான் மயிலை மன்னார்.


‘அது சரி, இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றே மன்னார்?’ என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'பின்ன இன்னா ஐயரே! இந்தக் கோவாலுப் பய நேத்து நம்ம வூட்டாண்டை வந்து அளுதுக்கினே நிக்கறான். இன்னாடா சமாச்சாரம்னு கேட்டா, ‘அண்ணே! எனக்கு ஒன்னிய வுட்டா ஆருமேயில்ல. எனக்கு ஒரு தொளி[ழி]ல் கத்துக்கொடு’ன்னு கெஞ்சறான். எங்கிட்ட வந்தவனுக்கு இதுவரைக்கும் எதுனாச்சும் மறுப்பு சொல்லிருக்கேனா? சரி, வாடான்னு சேத்துக்கினேன்’ எனச் சிரித்தவாறே சொன்னான் மயிலை மன்னார்.


‘அதான் எனக்கு நல்லாவே தெரியுமே மன்னார்! நான் எப்ப வந்து எதைக் கேட்டாலும், உனக்குத் தெரிஞ்சதைத் தயங்காம எனக்கு சொல்லிகிட்டே இருக்கியே! இன்னிக்கு நேத்துப் பழக்கமா நம்மளுது? உன்னோட குணம்தான் எனக்கும் தெரியுமே’ என்றேன் நான்.


அன்புடன் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே, ‘இப்ப வரப்போற பாட்டும், இதைத்தான் சொல்லுது. எங்கே நீ பாட்டைப் படி’ என்றான் மன்னார்.

‘ஓ! அதுக்குத்தான் இப்படி ஒரு பீடிகையா!’ என மனதுக்குள் சிலாகித்தபடியே பாட்டைப் படித்தேன்.

கரவா கியகல் வியுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.


கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே.


“கரவாகிய கல்வியுளார் கடை சென்று இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ?”

இதுவரைக்கும் வந்த பாட்டுங்களைப் புரிஞ்சுக்கிட்ட ஒர்த்தன், நாயமா இன்னா பண்ணுவான்?


இந்த முருகன்றது ஆரு? அவன் எப்பிடியாப்பட்டவன்? அவனை பக்தி பண்றது எப்பிடி?ன்னு தேடுவான்.


இதுவரைக்கும் சொன்னாப்பல, ஒரு குருவைத் தேடி, அவர் கையுல்லேர்ந்து, ஒரு ஞானத்தை அடையறதுக்கு, அவரோட வூட்டாண்டை போயி நிப்பான்!


ஆனாக்காண்டிக்கு, இந்த வரியுல ஒரு முக்கியமான சமாச்சாரத்தை அருணகிரியாரு சொல்லிக் காமிக்கறாரு.


நாம தேடிப் போயி அடையுற அல்லாக் குருமாரும், நமக்கு அல்லாத்தியும் சொல்லிக் குடுக்க மாட்டாங்களாம்!


தனக்குத் தெரிஞ்ச அல்லாத்தியும், தன்னோட சிஸ்யனுக்குச் சொல்லித் தர்ற குருமாருங்க ரொம்பவே கம்மி!


எங்கே அல்லாத்தியும் தெரிஞ்சுக்கினு, இவன் நமக்கும் மேலியும் போயிருவானோன்னு, ஒரு கிலி பிடிச்சு, உள்ளத மறைச்சுச் சொல்ற குருமாருங்கதான் பெரும்பாலுமா இருக்காங்களாம்.


‘கரவு’ன்னா, உள்ளத மறைக்கறதுன்னு பொருளு!


நீகூட கேட்டிருப்பியே, காக்கா கரவுதுன்னு! அதுக்கு இன்னா அர்த்தம்?


ஒரு பண்டம் திங்கறதுக்குக் கிடைச்சிருச்சுன்னா, ஒரு காக்கா இன்னா பண்ணும்?
‘கா..கா’ன்னு கத்தி தன்னோட கூட்டத்தியே கூட்டிரும்.


‘காக்கா – நரி’ கதையுல கூட இன்னா ஆச்சு?
தன்னோட கூட்டம் இல்லேன்னு தெரிஞ்சுங்கூட, ஒரு நரி ‘கா…கா’ன்னு கத்தினதும் வடையைக் கீளே[ழே] போட்டிருச்சு!


ரொம்பப் பேரு சொல்லுவாங்க காக்கா ஏமாந்து போயிருச்சுன்னு!
ஆனா, அது அப்பிடி இல்ல!
தங்கிட்ட இருக்கறத மறைக்க நெனைச்சாலுங்கூட, அதால முடியாது. அதோட கொரலு காட்டிக் கொடுத்திரும். அதான் காக்காவோட கொணம்!


இந்தக் காலத்துல, இதும்மாரி இருக்கற குருமாருங்க ரொம்பவே கம்மியாப் பூட்டாங்க!
அதுமாரி க்கீற ஆளுங்களப் பத்திதான் இந்த வரியுல சொல்றாரு அருணையாரு.


‘கரவாகிய கல்வியுளார்’னா, தனக்குத் தெரிஞ்சத, புரிஞ்சத, அறிஞ்சத, மத்தவங்க முளு[ழு]சாத் தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு பயப்படறவங்க!


அதுக்கு இன்னா வோணும்னாலும் காரணம் அவங்களுக்குள்ள இருக்கலாம்.
இவன் இதுக்குத் தகுதியானவானா, இவன் இத்தத் தெரிஞ்சுக்கினு இன்னா பண்ணுவானோ, இவன் வேற ஏதோ நம்பிக்கையுல இருக்கறவனாச்சே, இவனுக்கு இத்தச் சொல்லலாமான்னு இன்னான்னாமோ காரணம்லாம் இருக்கலாம்.
ஆனாக்காண்டிக்கு, இவங்க அல்லாருமே ‘கரவாகிய கல்வியுளார்’தான்னு நமக்குக் காமிச்சுக் குடுக்கறாரு அருணகிரியாரு.


இவங்க வூட்டு வாசல்ல, அதான் ‘கடை’ …. கடைன்னா வூட்டு வாசல்னு அர்த்தம்…. போயி நிக்காம, எனக்குச் சொல்லிக் குடுப்பான்னு கெஞ்சாம… ‘இரவா’ன்னா, கெஞ்சறது….. எனக்கு ஒரு உண்மைய ஒன்னோட பிச்சையா எனக்குப் போடுவியா… ‘ஈகுவையோ’ன்னு… இந்த வரியுல புட்டுப் புட்டு வைக்கறாரு அந்த மகாப் பெரியவரு.


நீயும் எத்தினியோ ஆளுங்ககிட்ட போயிருப்பே!
இவர்தான் என்னோட குருன்னு அவர் சொல்ற வார்த்தையுல நம்பி மயங்கியிருப்பே.


ஆனாக்காண்டிக்கு, இத்தயெல்லாம் வுட்டு, நீ எப்பவும் நம்பற முருகனையே வேண்டினியானா, அவரே ஒனக்கு அல்லாத்தியும் புரிய வைப்பாருன்றத இதுல சொல்றாரு.


அதுக்காவ, நீ பாக்கற அல்லாக் குருமாருங்களயுமே தப்பு சொல்றேன்னு நெனைச்சுக்காத!


ஒம்மேல அன்பு வைச்சு, ஒனக்கு அல்லாத்தியும் சொல்ற அல்லாருமே முருகந்தான்! அப்பிடியாப் பட்டவங்களும் நெறையவே க்கீறாங்க.
அந்த முருகன் தான் இவங்க ரூபத்துல வந்து, ஒனக்கு ஒரு நல்ல வளி[ழி]யைக் காட்டித் தரான்
அத்த நல்லாப் புரிஞ்சுக்கோ!!~ சரியா!’ என்று நிறுத்தி என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்.


‘அப்போ, அந்த அடுத்த இரண்டு வரி? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், மன்னார்?’ என்றேன் நான் வெள்ளந்தியாக.

“குரவா குமரா குலிசாயுத குஞ்சரவா சிவயோக தயாபரனே.”

‘இதானே அடுத்த ரெண்டு வரி?
ஒண்ணொண்ணித்தியும் பொறுக்கிப் பொறுக்கிப் போட்டிருக்காரு அந்த ஞானி!


‘குரவா’ன்னா மகாப் பெரிய குருவேன்னு அர்த்தம்!


இது வரைக்கும் ஒரு ஒரு குருவோட தகுதியைப் பத்திச் சொன்னவரு மொத மொதலாப் போட்டது, இந்த வார்த்தை!


பிரம்மனைப் பார்த்து ‘ஓம்’முன்றதுக்கு அர்த்தம் சொல்லிக் கேட்டு, அவருக்குத் தெரியலைன்னதும், அவரைத் தலையுல நல்லாக் குட்டி, ஜெயில்ல தள்ளினதும், நைனா கபாலி வந்து கேக்கக் கொள்ள, ‘எனக்கு அதோட அர்த்தம் தெரியும்! ஒனக்கு வோணும்னா, ஒளுங்கு மரியாதியா வந்து கேட்டாச் சொல்வேன்’னு சொன்னதோட நிக்காம, தன்னோட வூட்டு வாசல்ல.. சாமிமலைல…. வந்து கேட்ட சிவனுக்கு அதோட அர்த்தத்தச் சொன்னவரு நம்ம கந்தன்!


தனக்குத் தெரிஞ்சத மறைக்காமச் சொன்னவரு இவரு!
அதைத்தான், ‘குரவா’ன்னு மொத வார்த்தையாப் போடறாரு’

‘இப்ப நான் ஒண்ணு சொல்லியே ஆகணும்!’ என மறித்தார் சாம்பு சாஸ்திரிகள்.
நாயர் கடை மசால் வடையைக் கடித்தபடியே, ‘சொல்லுங்க சாமி’ என டீயை உறிஞ்சினான் மயிலை மன்னார்.


‘அந்தக் குரு சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை விளக்கினதால சிவகுரு ஆனார். அது மட்டுமில்லாம, அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும், தசரத ராமனுக்கும், வாமதேவ முனிவருக்கும், நாரதருக்கும், பராசர முனிவரோட புத்திரர்கள் ஆறு பேருக்கும் கூட குருவா வந்து உபதேசம் பண்ணினதால, ‘பரமகுரு’ன்னும் ஒரு பேரு இவருக்கு உண்டு’என்றார் சாஸ்திரிகள்.

‘அட! ‘குரவா’ன்றதுக்கு இத்தினி அர்த்தம் இருக்கே! ரொம்ப நல்லாச் சொன்னீங்க சாமி!’ எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார்.


‘அடுத்த வார்த்தை ‘குமரா’


இத்த அந்த மொத வார்த்தையோட சேத்துப் பாத்தீன்னா, 'குமரகுரவா’ன்னு புரியும்!
அதாவுது, சின்னப் பையனா இருக்கறப்பவே, இத்தையெல்லாம் பண்ணி, பரமகுருவா ஆனவன்னு அர்த்தம்.


இதுல இன்னா சொல்றாருன்றதக் கெவனி!
ஒரு ஆளோட வயசை வைச்சு, இவரு என்னிய விட சின்னவராச்சே. இவுரு எப்பிடி எனக்கு குருவாக முடியும்னு மயங்காதே!
வயசுக்கும், ஞானத்துக்கும் சம்பந்தமில்ல.
புரிஞ்சுக்கோ!


‘குலிசாயுத குஞ்சரவா’ன்னு அடுத்த வார்த்தை!


‘குலிசாயுதம்’னா இன்னா?
இந்திரன் கையுல வைச்சுக்கினு க்கீற வச்சிராயுதம்!
ரெண்டாயிரம் நுனி க்கீதாம் அதுக்கு! வைரத்தால ஆயுதம் இந்த வச்சிராயுதம்!


அந்த இந்திரனுக்கு ஒரு ஆனை!
அயிராவதம்னு பேரு அதுக்கு.


அது வளத்த பொண்ணுதான் தேவசேனையம்மா.
அதான் தெய்வானை.


சூரனை அளி[ழி]ச்சு தேவருங்களையெல்லாம் காப்பாத்தினதால, இந்திரன் தன்னோட மகளான தெய்வயானையை முருகனுக்குக் கண்ணாலம் பண்ணி வைச்சாரு.
அதுனல, 'குலிசாயுத குஞ்சரவா’ன்னு பாடறாரு’ என்றான் மன்னார்.

‘இப்போழ் இதுக்கும் இந்தப் பாட்டுக்கும் எந்தா சம்பந்தம்?’ எனக் கேட்டான் நாயர்!

‘சரியாக் கேட்டே நாயரே! சொல்றேன் கேளு!


வள்ளி இச்சா சக்தி, தேவானையம்மா கிரியா சக்தின்னு முன்னாடியே சொன்னேன்ல.
நாமல்லாம் இச்சா சக்திங்க! இந்த அனுபவம் புரியணும்னு ஒரு இச்சையுல அலையறவங்க! ஆனா, அத்த நடத்திக் குடுக்க ஒரு கிரியா சக்தி வோணும்!
எந்த ஒரு ஆசையையுமே நடத்தறதுக்கு ஒரு கிரியா சக்தியோட தொணை வோணும்!
நாம அந்த முருகன் வூட்டு வாசல்ல போயி ஏதோ ஒரு ஆசையோட நிக்கறச்ச, அத்த நடத்திக் கொடுக்கறவந்தான் முருகன்! ஏன்னா, அவன் இச்சா, கிரியான்னு ரெண்டையுமே தன்னோட வைச்சுக்கினு க்கீறான்!


அதுக்காவத்தான், இதுவரைக்கும் வள்ளியைப் பத்தியே சொல்லிக்கினு வந்த அருணகிரியாரு, இப்ப தேவானையம்மாவை இந்தப் பாட்டுல மொத மொதலாக் கொண்டு வர்றாரு.


இப்ப கடைசி வார்த்தையைக் கெவனி!


‘சிவயோக தயாபரனே’


இந்த ஒலகத்துக்கே ஆதியானவன் அந்த சிவந்தான்!
ஆரு இன்னா பண்ணினாலும், அந்த சிவயோகம் வர்றதுதான் ரொம்ப முக்கியம்.
அது கிடைக்கறதுக்கு கருணை பண்றவந்தான்… “தயாபரந்தான்”…. நம்ம கந்தக் கொ[கு]மரன்!


அவனே நமக்குல்லாம் குருவா வந்து, எத்தயும் ஒளிச்சு மறைக்காம, அல்லாத்தியும் சொல்லிக் குடுத்து, நம்மளக் கரையேத்தணும்னு நமக்காவ வேண்டிக்கறாரு அருணகிரியாரு!


அனுபூதின்னா இன்னா, அது வரணும்ன்னா, நாம எத்தயெல்லாம் விட்டொளி[ழி]க்கணும், அதுக்காவ, ஆருகிட்ட வேண்டணும், ஆரு காலைப் பிடிக்கணும்னு இதுவரைக்கும் சொன்னவரு, இந்தப் பாட்டுல, ஆரு குருவா வரணும், அத்துக்கு அந்தக் குருவுக்கு இன்னாத் தகுதி இருக்கணும்னும் சொல்லிக் காட்டியிருக்காரு!


ஆகக்கூடி, இந்தப் பாட்டை, தான் ஒரு குருன்னு நெனைச்சுக்கினுக் க்கீற அல்லாக் குருமாருமே ஒரு தபா தன்னை ஒரு சுயவிமரிசனம் பண்ணிக்கணும்ன்றதியும் பூடகமாச் சொல்லிருக்காரு அருணையாரு’ என முடித்தான் மயிலை மன்னார்!

‘ரொம்ப நன்னாச் சொன்னேடா மன்னார்! தேடறவனுக்கு மட்டுமில்லாம, தேடறவனுக்குக் குருவா வர்றவருக்கும் என்ன தகுதி இருக்கணும்னு இந்தப் பாட்டுல அருணகிரியார் சொல்லியிருக்கார்!


இப்பிடி, ஒளிச்சு மறைச்சு சொல்லிக் கொடுக்கறவாளுக்கு என்ன நடக்கும்னு அப்பர் ஸ்வாமிகள் ஒரு பாட்டுல ரொம்பத் தெளிவாச் சொல்லியிருக்கார்!


‘இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்’


கேட்டவனுக்கெல்லாம் கொடுக்க வைச்சாராம். கொடுக்கறவனுக்கெல்லாம், அப்பிடிக் கொடுக்கறதுக்கான அருளைக் கொடுத்தாராம்; அப்பிடிக் கொடுக்காம ஒளிச்சு, மறைச்சு வைச்சவனுக்கெல்லாம், கொடுமையான நரகங்களை வைச்சாராம். ஒண்ணு ரெண்டு இல்லை, நரகங்கள்னு எண்ணிக்கையே இல்லாமச் சொல்லியிருக்கார் அப்பரடிகள்.


இதைப் புரிஞ்சுண்டு, தனக்குத் தெரிஞ்சதெல்லாம், லோக க்ஷேமத்துக்குத்தான்னு பாகுபாடில்லாம, அள்ளியள்ளிக் கொடுக்கறவாதான் குருன்னு இதுல ரொம்பத் தெளிவா சொல்லியிருக்கார்டா!’ என்றார் சாம்பு சாஸ்திரிகள் .


‘ஓம்’ என்பதுபோல், கபாலி கோயில் மணியோசை ஒலித்தது!
நாயரின் ‘ஓம் சரவணபவ’ தொடர்ந்தது!

[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Friday, February 17, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 48” [44]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 48”


44.

சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே


சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே

‘’இனிமே கொஞ்சம் சீரியஸாக் கவனிக்கணும்! இனி வரப்போறப் பாட்டுங்கள்லாம் ரொம்பவே நுணுக்கமான விசயங்களைச் சொல்ற பாட்டுங்க! இதுவரைக்கும் சொன்ன சங்கதிங்க அத்தனையையும் சேத்துவைச்சு முத்து முத்தா சொல்லிருக்காரு அருணகிரியாரு. கவனமாக் கேளு!’ என்றபடி தொடங்கினான் மயிலை மன்னார்.

அவனே அப்படிச் சொன்னதும், அந்தத் திண்ணையே கொஞ்சம் பரபரப்பானது!

‘நான் முன்னாடியே சொன்னதுபோல, கொத்துக்கொத்தப் பாட்டுங்களை அமைச்சுப் பாடியிருக்காரு இந்த அநுபூதியுல!

அதுலியும், இந்தப் பாட்டு க்கீதே….ரொம்பவே அருமையான பாட்டு!
மொத வரியெ ரொம்ப ரொம்ப அம்சமாப் போட்டுருக்காரு!

‘சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ?’

கேள்வி கேக்கறமாரி, ஒரு கொக்கியைப் போட்டு, அப்பிடியே பூடகமா, தனக்கு இன்னா நடந்திச்சுன்றத சொல்லாமச் சொல்லி நமக்கெல்லாம் புரியவைக்கறாரு இதுல!

இந்த வரிக்கு பலவிதமா அர்த்தம் பண்ணிக்கலாம்! அதுல ஒரு ஒண்ணு ரெண்டை மட்டும் இப்பப் பாக்கலாம்!

மனசைப் பாத்து ஒரு கேள்வி கேட்டு, ‘நீ இதும்மாரி என்னிய கஸ்டப்படுத்தலாமா? ஒனக்கு இன்னாதான் வோணும்? ஏன் இப்பிடில்லாம் இம்சைப் படுத்தறே?’ன்னு கோவிச்சுகிட்டு, அதுக்கப்பறமா, அந்த மனசையே பாத்து, ‘நீ இன்னின்னமாரி நடந்துக்கினா ஒனக்கும், எனக்கும் எம்மாம் பெரிய பரிசு காத்திருக்கு’ன்னு ஆசை காட்டி, கொஞ்சங்கொஞ்சமா அத்தத் தன்னோட வளி[ழி]க்குக் இஸ்த்துக்கினு வந்து, ‘தோ பாரு, நீ கொஞ்சம் கட்டுப்பாடோட இருந்தியானா, எனக்கும் ஒனக்கும் இந்த ஆசைன்றதே அத்துப் பூடும், அப்பா, அம்மா, பொண்டாட்டி, புள்ளை, குட்டி, சொத்து, சொகம்ன்ற எல்லாத்தும் பின்னாடியும் அலையாம, அந்த முருகன் காலடியுலியே வுளுந்து கெடக்கலாம். அவனாப் பாத்து, நம்ம நெலையக் கண்டு மனசு எ[இ]ளகிப்போயி, நமக்கு அருள் பண்ணுவான். அவன் ரொம்ப ரொம்ப நல்லவன்! தங்கிட்ட வந்தவங்களை அவன் காப்பாத்தாம வுடமாட்டான்னு நைஸு பண்ணி, நைஸு பண்ணி தன்னோட மனசை இம்மாந் தூரத்துக்கு இட்டாந்திட்டாரு!


இதுக்குப் பரிசா அவருக்குக் கெடைச்சது இன்னான்றத இப்பச் சொல்றாரு … இந்தக் கேள்வி மூலமா? நல்லாக் கெவனி!


‘சாடும்’னா அளி[ழி]க்கறதுன்னு பொருளு!

'தனிவேலு'ன்னா, தனக்கு சமமே இல்லாத ஒசந்த வேலுன்னு சொல்லலாம்!

அது எத்த சாடிச்சு?..அளி[ழி]ச்சுது?
சூரனை! அவனோட கூட்ட வந்த அசுரப் படைங்களை!!

அதுவாவா சாடிச்சு?
நம்ம முருகனோட கருணையினால மட்டுமே, எதுத்து வந்த அல்லாரையுமே அந்தத் தனிவேலு அளிச்சுது!

அப்பிடியாப்பட்ட தீரனான கந்தக் கடவுளு. தன்னோட திருப்பாதங்களை எடுத்து, இவரோட தலை மேல வைச்சு ‘இந்தா! இத்த ஒன்னோட தலையுல பூ மாரி வைச்சுக்கோ! சூடிக்கோன்னு தந்தாராம்!

இத்தனியும் சொல்லிட்டு, ஒண்ணுமே தெரியாத பச்சைப் பாப்பா மாரி, இத்தப் போயி, நான் இன்னான்னு சொல்றதுன்னு அப்பாவியாக் கேக்கறாராம்!

இது ஒரு அர்த்தம்!


இப்ப இத்தயே இன்னோரு விதமாப் பாப்பம்!

‘சரணம்‘னா பெருமையையெல்லாம் சொல்லிப் பாடறதுன்னும் சொல்லலாம்!

நீகூட ‘சாமியே சரணம் ஐயப்பா’ன்னு அடிக்கடி சொல்லிப் பாடுவியே, அதும்மாரின்னு வைச்சுக்க!

வாள்[ழ்]க்கையே வெறுத்துப்போயி, கோபுரத்தும் மேல ஏறி நின்னுக்கினு, அங்கேர்ந்து குதிச்சுச் சாவலாம்னு வுளுந்தவரை, தன்னோட ரெண்டு கையுலியுமாத் தாங்கிக்கினு, இனிமே நீ என்னியப் பத்தி மட்டும் பாடு’ன்னு சொல்லிட்டு, ‘நான் இன்னான்னு பாடுவேன்?ன்னு முளிச்சவருக்கு, ‘முத்தைத்தரு’ன்னு ஒரு அடியும் சரணமா எடுத்துக் குடுத்தாரு நம்ம குமரன்!

அதுக்காப்பல, இவரு வரிசையா பாடிக்கினே முருகன் மேல ஒரு பாமாலையே சூடிட்டாரு!

இப்பிடி ஒரு கருணையை எனக்குப் பண்ணினியே முருகா! இந்தக் கருணையை நான் இன்னான்னு சொல்றது’ன்னு கதற்ரமாரியும் எடுத்துக்கலாம்!

இதுல வர்ற இந்த அடுத்த ரெண்டு வரி க்கீதே, அது சொல்ற பெருமை இன்னான்னு இப்பப் பாக்கலாமா?

‘வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்காடும் புனமும் கமழும் கழலே!’

தன்னோட தலையுல சூடிக்கறதுக்காவ, இந்த முருகன் குடுத்த அந்தக் காலடிங்களைப் பத்தி, அத்தோட பெருமையைப் பத்தி இதுல சொல்ல வராரு அருணகிரியாரு!

‘கமளு[ழு]ம் கள[ழ]லே’ன்னா மணக்கற, வாசனையா க்கீற காலடிங்களே’ன்னு அர்த்தம்!

அது இன்னா மணம்…. அப்பிடியாப்பட்ட வாசனை?

‘வீடு’ன்னு மொத வார்த்தை!
‘மோட்சம், முக்தின்னு அர்த்தம்!
தன்னை வேண்டற அடியாருங்களுக்குல்லாம் முருகனோட ரெண்டு திருவடிங்களும், மோட்சத்தக் குடுக்குது!

அடுத்தாப்பல, ‘சுரர் மாமுடி’!
சூரனால அடிமையாக் கெடந்து கஸ்டப்பட்ட தேவருங்களைல்லாம், விடுதலை பண்ணின முருகனோட காலடியுல, இவங்கள்லாம் போயி, சரணாகதி பண்றாங்க! அவங்க தலை மேலெல்லாம் இவரோட பாதம் படுது! அதுனால, அதுங்களும் மணக்குதாம்!

இப்ப ‘வேதமும்’னு சொல்றாரு!
இந்த விசயத்த இந்த அநுபூதிப் பாட்டுங்கள்ல பல தபா சொல்லிருக்காரு அருணையாரு.

பிரம்மா – சிவன் கதைதான்!

நாலு வேதம் க்கீது! ரிக்கு, யஜுரு, சாமம், அதர்வணம்னு.
அந்த நாலுத்துக்குமே ஆதாரம் ‘ஓம்’முன்ற சொல்லுதான்!
அதுக்கே அர்த்தம் சொன்னவரு முருகன்!

அவரால இப்ப இந்த நாலுத்துக்குமே ஒரு பெருமை வந்திரிச்சாம்!
இந்த நாலு வேதத்துக்குமே ஆதாரமா நிக்கறவருதான் சாமிநாதன்!

நிக்கறாருன்னா, அப்ப அதுங்க மேலெல்லாம் படறது?.... இந்தத் திருவடிங்கதானே!
அதுங்களுக்கும் ஒரு ‘ஸ்பெசல்’ வாசனை வந்துருச்சு!

இப்பக் கடைசியா மிச்சமிருக்கறது, ‘வெங்காடும், புனமும்’!

சூரனை கெலிச்சதுக்காவ, இந்திரன் தானா வந்து, தேவானையம்மாவை, கிரியா சக்தியை,…. இவருக்குக் கண்ணாலம் கட்டி வைச்சாரு.

ஆனாக்காண்டிக்கு, வள்ளியம்மா கதை அப்பிடி இல்ல!

இவராத் தேடிப்போயி, காடு, மேடெல்லாம் சுத்தியலைஞ்சு, படாத பாடெல்லாம் பட்டு, கொதிக்கற வெய்யில்ல காட்டுல க்கீற கல்லு, முள்ளு மேலெல்லாம் தன்னோட காலடி நோவ, நடந்தாருன்னு நீ கூட முன்னாடி பாடியிருக்கியே, அதான், இந்த வெங்காடு!

அந்தம்மா காவல் காத்துக்கினு நின்னாங்களே, அந்தத் தெனைப்புனத்துக்கும் போயி, அந்தம்மா குடுத்த ஏச்சுப் பேச்சையெல்லாம் மறுபேச்சுப் பேசாம வாங்கிக்கினாரே, அந்தக் கதையைத்தான், இந்தப் ‘புனம்’ன்ற வார்த்தையுல சொல்லிக்காட்டறாரு!

இச்சாசக்திக்காவ, இவரோட பாதங்கள்லாம் பட்டு, அந்த வெங்காடும், புனமும் இப்பவும் மணக்குதாம்!

இப்பிடியாப்பட்ட பெருமையான முருகனோட சரணங்க ரெண்டும் இவரோட தலையுலியும் பட்டதும், இப்ப அருணகிரியாரோட திருப்புகளு[ழு]ம் மணக்குதுன்றத, இந்த வரியுல சொல்லிப் புரிய வைக்கறாரு.’எனச் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்.

‘சொல்லுமதோ’ன்னு இவர் சொன்னது ரொம்பவே விசேஷமான பிரயோகம்டா!! “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்”னு சொல்லுவாளே! அதுமாதிரி, அந்த ஆனந்த அனுபவத்தை, இப்போ என்னால விளக்கமாச் சொல்லமுடியலியே’ன்னு திகைச்சுப்போய் நிக்கறார் இந்த ஒரு வார்த்தைல!

அப்பறம், ‘கமழும் கழலே’ன்றதைக்கூட, ‘கழலே கமழும்’ன்னும் அர்த்தம் பண்ணிக்கலாம்னு தோண்றது’என்றார் சாம்பு சாஸ்திரிகள்!

‘அதான் சொன்னேனே சாமி! இந்தப் பாட்டுக்குப் பலவிதமா அர்த்தம் சொல்லலாம்னு’ எனச் சொல்லி விகல்பமின்றிச் சிரித்தான் மன்னார்.

‘ஆமாண்டா! வேற எந்தச் சிந்தனையும் இல்லாம, நம்ம நாயர் சொல்லிண்டிருக்கானே, அதுமாதிரி, ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை மட்டும் விடாம சொல்லிண்டிருதாலே போறுண்டா! அவனோட அருள் தானா வந்துசேரும்’ எனக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!

ஓம் சரவணபவ!
**************
[தொடரும்]
தொடர்ந்து படித்து ஆதரிக்கும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, February 13, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 47” [43]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 47”


43.

தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யினபின்
பேசா அநுபூ திபிறந் ததுவே.

தூசு ஆம் மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசாநிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

‘முன்னாடியே சொன்னேன்ல? இந்த அநுபூதிப் பாட்டுங்கள்லாம் ஒரு கொத்து கொத்தாப் பாடியிருக்கருன்னு! இதுக்கு முந்திவந்த ரெண்டு பாட்டோட இத்தயும் சேத்துப் படிச்சீன்னா, ஒரு ஒத்துமை ஒனக்குப் புரியும்!
அநுபூதின்னா இன்னா? அது எப்பிடி இருக்கும்? அது வந்துச்சின்னா இன்னான்னால்லாம் செய்யும்னு சொல்லிட்டு, இந்தப் பாட்டுல, அருணகிரியாரு, இந்த அநுபூதி எப்பிடி, எதுனால வந்திச்சுன்னு வெளக்கமாச் சொல்றாரு!

இந்தப் பாட்டைப் பார்த்தியானா, ஒரே வரியை ஒடைச்சுப் போட்டு, நாலு வரியுல ஒரு பெரிய உண்மையைச் சொல்றாருன்னு புரியும்! , அதாங்காட்டிக்கு,,

‘தூசாமணியும் துகிலும் புனைவாள் நேசா! முருகா! நினது அன்பருளால் ஆசாநிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே.’

இதுவரைக்கும், முருகனோட அருள் கிடைக்கணும்னா, நாம எத்தெல்லாம் பண்ணணும்? எத்தெல்லாம் வுடணும்? என்னெல்லாம் செய்யணும்னு வெலாவாரியா சொல்லிக்கினே வந்த அருணகிரியாரு, இனி வரப்போற கடைசி பாட்டுங்கள்ல, நேரா விசயத்துக்கு வராரு!

நிகளம்’னா வெலங்கு! நம்மையெல்லாம் பிடிச்சிருக்கற வெலங்கு! வெ[வி]லங்குன்னா ரெண்டு அர்த்தம்!

ஒண்ணு போலீஸ்காரன் மாட்டற வெலங்கு!
இன்னோண்ணு, மிருகம்!

இந்த ஆசைன்றது க்கீதே, அது இந்த ரெண்டு மாதிரியும் காரியம் பண்ணும்!

நம்மள பூட்டியும் வைக்கும்! மிருகமாவும் ஆக்கிறும்!

இந்த வெலங்கு ஒடைபடணும்! ஒடையணும்!
இது ஒடைஞ்சாத்தான், அநுபூதி பொறக்கும்!

இத்த ரொம்பத் தெளிவாச் சொல்லிடுறாரு இதுல!

‘ஆசாநிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே.’ன்னு!

சூட்சுமமா இதுக்குள்ள, ஒரு சங்கிதியும் சொல்றாரு!

அநுபூதின்னா அது ஒரு பேசா நிலைன்னு!

அதாவுது, இது வந்திருச்சின்னா, பேச்சு நின்னிறும்!
அதுக்கப்பால, வேற பேச்சே வராது!
அதான், ‘பேசா அநுபூதி!!’.... ஒரு மாதிரியான மோன நிலை!

இத்து இன்னா தானா வந்திருமா?
நீயும், நானும் நெனைச்சவொடனே அப்பிடியே பொறந்திருமா இன்னா?

அதுக்கும் ஒரு அருள் வேணும்!

அதுவும் சாதாரணமான அருளுல்லாம் போறாது!
அன்போட கூடின அருளு வேணும்!

அத்தயும் குடுக்கறவந்தான் குடுக்க முடியும்!

அதான், அவந்தான் முருகன்!

நினது அன்பருளாலத்தான் இந்த வெலங்கை ஒடைக்கணும் முருகான்னு அவர்கிட்டயே வேண்டறாரு அருணையாரு!

இரு, இரு! இப்ப நீ இன்னா கேக்க வரேன்னு புரியுது!
இதுக்கும், மொதவரிக்கும் இன்னா சம்மந்தம்னுதானே கேக்க வரே!?? சொல்றேன்! அவசரப்படாதே!’ எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

ரொம்ப ரொம்ப அருமையா இந்த வார்த்தைங்களப் போட்டிருக்காரு அந்த பெரிய மனுசன்!

இதுவரைக்கும் வந்த பாட்டுங்கள்ல அடிக்கடி சொன்ன ஒரு விசயத்துக்கான காரணத்த, இந்தப் பாட்டுல நாயப் [நியாயப்] படுத்தறாரு அருணகிரியாரு!

இச்சா சக்தியான வள்ளியம்மா காலுல சதா சர்வ காலமும் வுளுந்து கெடக்கற முருகான்னு எப்பப் பாத்தாலும் சொல்லிக்கினே வருவாரு இவுரு!

அப்பிடி இன்னா 'ஸ்பெசலு' இந்த வள்ளியம்மான்னு ஒனக்கு ஒரு ‘டவுட்டு’ வரும்! …. வரணும்! அதான் நாயம்!

இந்தப் பாட்டோட மொத வரியுலியே அதுக்குல்லாம் ஒரு ‘ஆன்ஸர்’ குடுத்திடறாரு!

‘தூசா மணியும், தூசா துகிலும் புனைவாள் நேசா! முருகா!’ன்னு!

அந்தம்மா போட்டுக்கினு க்கீற முத்து மாலையும் சரி, உடுத்திக்கினு க்கீற சேலையும் சரி, துளிக்கூட அளு[ழு]க்கே இல்லாத, வெள்ளை வெளேர்னு மின்னுதாம்!

அப்பிடியாப்பட்ட வள்ளியம்மாவோட நேசா! என்னோட முருகா’ன்னு மொத வரியுல கொஞ்சறாரு அருணகிரியாரு!

இன்னாத்துக்காவ இத்தச் சொன்னார்ன்னு கொஞ்சம் யோசிக்கணும்!

எனக்குள்ளாற ஆசை இருக்கு முருகா! அத்த,… அந்த வெலங்கை நீதான் அறுக்கணும்னு சும்மானாச்சிக்கும் வேண்டினா மட்டும் போறாது!

அந்த வள்ளியம்மா......., கொறக் குலத்துல பொறந்தாக்கூட,... கொஞ்சங்கூட அளு[ழு]க்கே இல்லாம இருக்கறதாலத்தான், அந்தம்மா காலடியுல நம்ம கந்தன் வுளுந்து கெடக்கறாரு!

அதும்மாரி, நமக்குள்ள எத்தினி ஆசைங்க இருந்தாக்கூட, அதெல்லாம் சுத்தமானதா இருக்கணும்! அப்பத்தான், முருகனும் அத்த ஏத்துக்கினு, ஒனக்கு அருள் பண்ணுவான்றத பூடகமா இந்த வரியுல சொல்லி க்கீறாரு அருணையாரு! இன்னாங்க சாமி நான் சொல்றது?’ என சாம்பு சாஸ்திரிகளைப் பார்த்தான் மயிலை மன்னார்!

‘இதுக்கப்பறம் நான் சொல்றதுக்கு என்னடா இருக்கு? இருந்தாக்கூட, சொல்லணும்னு தோண்றது!

‘பொறந்தது’ன்னு சொன்னாரே! அதுலியே, இது தனக்குத்தான் பொறந்ததுன்னு நிஸ்சயமாச் சொல்லிக் காண்பிச்சுட்டார்னு எனக்குப் படறது!

‘காலவழுவமைதி’ன்னு இலக்கணத்துல ஒண்ணு இருக்கு!

‘பிறந்தது’ன்னா இறந்தகாலம்!

ஆனாக்க, இதுல அப்பிடி இல்லாம, இந்தப் ‘பிறந்தது’ன்றது, முக்காலத்துக்கும்,...... இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்னு....... மூணுத்துக்குமே பொருந்தி வரும்!

வந்துது, வந்திருக்கு, வரும்னு எல்லாத்தையுமே சொல்ற அற்புதமான வார்த்தையை அருணகிரிநாதர் ரொம்ப அழகாப் போட்டுருக்கார்! இது 'வழா அமைதி'!!

இன்னொரு ‘சித்தியார்’ பாடல்தான் இப்ப ஞாபகத்துக்கு வருது!

‘விச்சையி னிராகந்தோன்றி வினைவழி போகத்தின்கண்
இச்சையைப் பண்ணிநிற்குந் தொழிலறி விச்சை மூன்றும்
வைச்சபோ திச்சாஞானக் கிரியைமுன் மருவியான்மா
நிச்சயம் புருடனாகிப் பொதுமையி னிற்பனன்றே.'

இந்த லோக வாழ்வுல நாம எப்பிடி மாட்டிக்கறோம்ன்றதை இந்தப் பாட்டுல சித்தியார் ‘சுபக்கம்’ 56ல ரொம்ப நன்னா சொல்லியிருக்கார்!

‘வித்தை'’ன்னு ஒண்ணு இருக்கு. அதுல ‘அராகம்’ன்ற அவா தோணி, இந்த லோக வாழ்க்கையுல நமக்குல்லாம் ஒரு ஆசையை உண்டு பண்ணும்!

இச்சை, அறிவு, செயல்னு வந்து ஆன்மாவுல பதிக்குமாம்!

இந்தக் ‘காலம், நியதி, கலை, அராகம், வித்தை’ன்ற அஞ்சும் ஆன்மாவோட சேர்றப்ப, அதைப் ‘புருடன்’ன்னு சொல்லுவா!

இந்த ‘புருடன்’றவந்தான் இத்தனை இம்சையும் இங்கே பண்றவன்!

இவந்தான் நமக்கெல்லாம், இந்த பொண்டாட்டி, புருஷன், புள்ளை, பொண்ணு, பேத்தி, பேரன்னு ஒரு விலங்கைப் பூட்டி, நம்மளையெல்லாம் இந்த பந்தத்துல மாட்டி வைச்சு ஆனந்தப் படறான்!

இந்த விலங்கை அவனோட.... அந்தக் கந்தக் கடவுளோட... அன்பும், அருளும் மட்டுமே உடைக்கமுடியும்ன்றதை, ரொம்பவே அருமையா இந்தப் பாட்டுல அருணகிரிநாதர் சொல்லி அருளியிருக்கார்! அதுக்கு நாமளல்லாம் தயாராகறணும்னா, இந்தத் தூய்மைன்ற ஒண்ணு நம்மகிட்டே இருக்கணும்! இதைத்தான் இந்தப் பாட்டுல சொல்லிக் காமிக்கறார்! என்னோட பரிபூர்ணமான நமஸ்காரத்தை அந்த மஹானுபாவனுக்கு சொல்லிக்கறதைத் தவிர வேற என்ன நான் பண்ண முடியும்’ எனக் கண் கலங்கினார் சாம்பு சாஸ்திரிகள்!

‘ஓம் சரவணபவ’ எனச் சொல்லமுடியுமே! என்பது போல நாயரின் உச்சாடனம் தொடர்ந்தது!
*****************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP