Tuesday, February 22, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 8

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 8
கந்தரநுபூதி: 8

பல வேலைகள் இருப்பதால் இனி வாரம் ஒரு முறைதான் பார்க்கமுடியுமெனச் சொல்லிவிட்டான் மன்னார்!

குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லி, என்ன வேலை இருந்தாலும், அந்த நேரத்தில் தான் சாஸ்திரிகள் வீட்டில் கண்டிப்பாக இருப்பேன் என வாக்களித்திருந்தான் மன்னார்!

'அநுபூதி கிடைப்பதென்றால் சும்மாவா?' எனச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்!

சரியாகச் சொன்ன நேரத்திற்கு முன்னமேயே அங்கு சென்றுவிட்டேன்!

ஒரு சில நிமிடங்களில் அங்குவந்த நாயர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்!

அப்போதுதான் புரிந்தது... நான் அவனை அழைத்து வராமல் நேராக வந்துவிட்டதை!

ஒரு குற்ற உணர்வுடன் அவனைப் பார்த்தேன்!

'ஒன்னும் கொழப்பமில்லா! நிண்ட ரூட்டு வேற. எண்ட ரூட்டு வேற! எனிக்கு மனசிலாயி ' எனக் கபடமில்லாமல் சிரித்தான் நாயர். அவன் கையில் மசால் வடை பார்சல் இருந்தது!

இதைக் கேட்டுச் சிரித்தபடியே வந்தான் மயிலை மன்னார்!

'இன்னா நாயர்? அனுபூதி நீ இல்லாமலியே கேட்டுறலாம்னு வண்ட்டானா நம்ம சங்கரு? ' எனக் கிண்டலடித்தான்!

சாஸ்திரிகள் பெரிதாகச் சிரித்தார்!

'சரி, சரி! மேட்டருக்கு வருவோம்! அடுத்த பாட்டைப் படிக்கறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ! இந்தக் "கந்தர் அனுபூதி"யை மட்டும் நம்ம அருணகிரியாரு கொத்து கொத்தாச் சொல்லியிருக்காரு! முந்தியே சொன்னேனில்ல... அந்த 3.4.5 மூணு பாட்டும் ஒரு செட்டுன்னு நெனைப்புல வைச்சுக்கன்னு....... அதேமாரி, போன பாட்டுலேர்ந்து.... அதான், 6,7,8,9 பாட்டு நாலும் ஒரு செட்டு! இந்த நாலு பாட்டும் மனசைப் பத்திச் சொல்றது.
போன பாட்டுல கல்லான எம்மனசு மேல ஒன்னோட காலை வையிப்பான்னு கெஞ்சினாரு.

இப்ப இந்தப் பாட்டுல..... எங்கே அந்தப் பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்!


கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதா ணினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே .

கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே .

ஏ! கெட்டுப் போன என்னோட மனசே!ன்னு தன்னோட மனசைப் பார்த்துப் பேசறாரு அருணகிரியாரு!
முன்னாடியே சொன்னேனே, அதுமாரி, இதெல்லாம் ஒனக்காவோ, இல்லை, எனக்காவோ அவுரு பாடலை!
இதும்மாரி பெரியவங்க சொன்னதெல்லாம் அவங்களைப் பத்தி மட்டுந்தான்! அவங்க பட்ட அனுபவத்தத்தான் பாட்டாப் பாடியிருக்காங்க!

ஏ, கெட்டு ஒளி[ழி]ஞ்சுபோன என்னோட மனசே! ஒனக்கு ஒரு வளி[ழி] சொல்றேன் கேட்டுக்கோன்னு ஆரம்பிக்கறாரு!

அதான்,
'கெடுவாய் மனனே கதிகேள்'

'கரவாதிடுவாய்'னா, கொஞ்சங்கூட சிந்தனையே பண்ணாம, ஒங்கிட்ட க்கீற பொருளையெல்லாம் கொடுத்திருன்றாரு!

ஒங்கிட்ட அப்பிடி இன்னா க்கீது?
பண்மா? பொருளா?
அதில்லை இங்க சொல்றது

அடுத்த வரியுல சொல்றரு... அத்தக் கவனி

'வடிவேல் இறைதாள் நினைவாய்'ன்னு ஒண்ணு சொல்றாரு!

அதான் இதுல முக்கியமாக் கவனிக்கணும் நீ!

இன்னாமோ நாம சம்பாதிச்சதக் குடுக்கறோம்னு அகந்தை பிடிச்சு அலையாம, இத்தயெல்லாம் குடுத்தது அந்தக் கந்தவேலந்தான்னு புரிஞ்சுக்கினு, அவன் குடுத்தத அவனோட அடியாருங்களுக்குக் குடுக்கறேன்ற நெனைப்போடக் குடுக்கணும்!

துளிக்கூட அகங்காரமே இல்லாம, இதெல்லாம் என்னோடதுன்ற நெனைப்பு கொஞ்சங்கூட வராமக் குடுக்கணும்ம் நீ!
அப்பத்தான் நீ குடுக்கறதுலியே ஒரு அர்த்தம் இருக்கும்னு தெளிவாச் சொல்றாரு அருணகிரியாரு!

அப்பிடிக் குடுத்தாத்தான் ஒன்னோட வேதனையெல்லாம் சுட்டெரிஞ்சு சாம்பலாகிப் போவும்னு ஷ்ட்ராங்காச் சொலிடறாரு அடுத்த வரியுல!

'நெடுவேதனை தூள் படவே சுடுவாய்'

இத்தினி நாளா நீ அனுபவிச்சுக்கினு க்கீற வேதனையெல்லாம் தீந்து போவணும்னா, நீ குடுக்கறதெல்லாம் ஒன்னோடது இல்லை; அல்லாமே அவன் குடுத்ததுதான்ற நெனைப்போடக் குடுத்தாத்தான் வேதனை தீரும்னு புட்டுப் புட்டு வைக்கிறாரு!

இதுக்கு அப்பாலதான், ஒரு டகால்டி வேலை பண்றாரு இந்தாளு!

இன்னும் இன்னத்தக் குடுன்னு சொல்லலை ! நல்லாக் கெவனி!

'வினை யாவையுமே விடுவாய் விடுவாய்'னு ரெண்டு தபா சொல்றாரு!

எதுக்கு அப்பிடிச் சொல்றாருன்னு கொஞ்சம் யோசிக்கணும்!

வெனைன்னா இன்னா?

நல்ல வெனை, கெட்ட வெனைன்னு ரெண்டு க்கீது!

கெட்டத விட்டிருன்னுதான் அல்லாரும் சொல்லக் கேட்டிருக்கோம்!

இவுரு இன்னாடான்னா, அது நல்ல வெனை, கெட்ட வெனைன்னு பாக்காதே! வெனைன்னு எப்ப தெரிஞ்சு போச்சோ, அப்பவே, அது நல்லதா, கெட்டதான்னு ஆராய்ச்சி பண்ணிக்கினு டயத்த வேஸ்ட் பண்ணாம, வெனைன்னு தெரிஞ்சதுமே, அத்த விட்டிருன்னு அடிச்சுச் சொல்றாரு. இதத்தான் குடுக்கச் சொல்றாரு!

கொஞ்சம் கொயப்பமாத்தான் இருக்கும் இந்த சமாச்சாரம்!

கெட்டத வுட்டுரலாம். அது புரியுது.

ஆனா, எதுக்காவ நல்லதியும் வுட்டுருன்னு சொல்றாரு?

ஒரு நல்லது பண்ணினா அதுனால ஒனக்கு கொஞ்சம் புண்ணியம் கெடைக்கலாம்.
அத்த அனுபவிச்சே ஆவணும் நீ!

நீ அனுபூதியத் தேடிப் போறப்ப, இது எதுக்கு ஒனக்கு?

புரியுதா?

இத்தத்தான் 'சொல்லற, சும்மாயிரு'ன்னு கந்தன் சொல்லி வைச்சாரு அருணகிரியாருக்கு!

அது இப்ப நெனைப்புல வருது அவுருக்கு!

ஆஹா! எனக்கு நல்லதும் வேணாம்; கெட்டதும் வேணாம்! ஒண்ணுமில்லாம இருந்தாலே போறுண்டா சாமின்னு தடாலடியா மனசு கையுல சொல்லிடறாரு!

இப்ப ஒரு நாயை, அது ஒன்னோட நாயா இருந்தாக்கூட, ரூமுக்குள்ள பூட்டிவைச்சு அடிச்சியான்னா, ஒரு நேரத்துல அது ஒன்னியே திருப்பிக் கடிக்க வரும்! அதும்மாரித்தான், நாம செய்யற நல்லதும் கெட்டதும் நம்மியே திருப்பித் தாக்கும்! புரியுதா நான் சொல்றது? கெட்டதுல மட்டுமில்லாம, நல்லதாலியுங்கூட மனசு கெட்டுப் போவறதுக்கு சான்ஸ் க்கீது! கெர்வம் வந்திரும்!

அதுனால, நல்லதோ, கெட்டதோ, எத்தயுமே ஒங்கிட்ட வைச்சுக்காம, அல்லாமே அவன் தான் குடுத்தான்ற நெனைப்போட அல்லாத்தியுமே விட்டொளிச்சிருன்னு இந்தப் பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு.

சரி, அடுத்த வாரம் இதே நேரம் பாப்போம்' எனச் சொல்லி எழுந்தான் மயிலை மன்னார்!

என்ன சொல்வதெனப் புரியாமல், ஏக்கத்துடன் மயிலை மன்னாரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினேன் நான்!
*************

[தொடரும்].

Read more...

Wednesday, February 16, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 7

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 7

கந்தரநுபூதி: 7

'அதெப்பிடி நீ சொல்லலாம்!? லோகத்துல வந்து பொறந்துட்டேன்! இங்க எனக்குன்னு சில கடமைகள் விதிச்சிருக்கு! அதுக்கும் அவனைத் தானே நான் கேழ்க்கணும்? என்னை இப்பிடி கொண்டுவந்து போட்டுட்டியே ஷண்முகா! இப்ப நான் என்ன பண்றது? எனக்கு ஒன்னை விட்டா ஆரு கெதின்னு அந்த பகவானைக் கேழ்க்காம வேற ஆரைப் போய் நான் கேழ்க்கணும்ன்றே? எனக்கு நீ சொன்னது சரியாப் படலை மன்னார்!' என்றார் சாஸ்திரிகள்!

அவர் கண்கள் மயிலை மன்னாரைப் பார்த்து, லேசாகச் சிமிட்டியதுபோலத் தெரிந்தது என் மாயையோ? எனக்குத் தெரியவில்லை!

ஆனால், அவர் கேட்ட கேள்வியில் நியாயம் இருப்பதாகப் பட்டது!
'ஞானும் அதே விளிக்க நெனைச்சு' என நாயரும் எங்கள் பக்கம் சேர்ந்து கொண்டதும், இது சரிதான் எனும் முடிவுக்கே நானும் வந்துவிட்டேன்!
மன்னாரின் முகத்தில் குறும்பு மிளிர்ந்தது!

முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, 'அடுத்த பாட்டைப் படி!' என்றான்!
நானும் படித்தேன்!

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந் தமரும் புமதோ
பணியா வெனவள் ளிபதம் பணியுந்
தணியா வதிமோ கதயா பரனே.

திணியான மனோசிலை மீது உனது தாள்
அணியார் அரவிந்தம் அரும்பும் அதோ
பணியா என வள்ளி பதம் பணியும்
தணியா அதி மோக தயாபரனே

'இன்னா சொல்றாரு இதுல?
எம் மனசு கல்லு போல க்கீது! அதுல ஒன்னோட தாமரைக் காலை வையி! மெல்லிசா க்கீற வள்ளியோட பாதத்தும் மேல தலைவைச்சுப் படுத்துக்கினுக்கீறியே, முருகா! அவ மேல ஒனக்கு இத்தினி ஆசையா? எம்மேல கருணை காட்ட மாட்டியா'ன்ற மாரி ஒரு பாட்டை இப்பக் குடுக்கறாரு!

படிக்கறப்ப ரொம்பவே சிம்ப்பிளாப் புரிஞ்சிரும் இந்தப் பாட்டு!
ஆனா, இன்னா சொல்றாருன்னு பாத்தா.... அடேங்கப்பா! இன்னால்லாம் சொல்லிக்கீறாருன்னு மலைச்சிப் போயிருவே!

'திணியான மனோசிலை'ன்னா இன்னா?
"திணி"ன்னா கெட்டியான்னு அர்த்தம்.
'சிலை'ன்னா கல்லு
'மனோசிலை'ன்னா, என்னோட மனசு கல்லுமாரி கீது!
'திணியான மனோசிலை'ன்னா, கெட்டியான கல்லுமாரிக்கீற மனசு!
ஆரோட மனசு?
ஒம் மனசைப் பத்தி எனக்கு இன்னா தெரியும்?
அல்லாம் என்னோட மனசுதான்!

'தாள்'னா காலு.... பாதம்னும் சொல்லலாம்!

'அணி' ன்னா அள[ழ]கானன்னு பொருளு.
அணிஆர்னா ரொம்ப ரொம்ப அள[ழ]கான.
அரவிந்தம்னா தாமரை.
அரும்புன்னா மொட்டு. ஆனா, அதுவே அரும்புமதோன்னு சொன்னா, மொட்டு பூக்குமோன்னு வந்துரும்!

ஆகக்கூடி, "உனது தாள் அணியார் அரும்புமதோ"ன்னா, தாமரை போல க்கீற ஒன்னோட காலு எம்மேல மலருமோன்னு கேக்கறாரு!

கல்லுமாரி கீற என்னோட மனசுமேல, தாமரை மாரிக்கீற ஒன்னோட காலு பட்டு மலருமோன்னு மொத ரெண்டு வரியுல கேக்கறாரு!

எது மலரணும்?
காலா? இல்லாங்காட்டிக்கு.. என்னோட மனசா?
அதான் தாமரைன்னு சொல்லிட்டாரே! தாமரை மொட்டுன்னா சொன்னாரு? இல்லதானே!
அப்ப, என்னோட கல்லு மனசை பூக்க வையிப்பான்னு கெஞ்சறாரு!

கல்லு எங்கியாச்சும் பூக்குமா?
இல்லேன்னா, கல்லுலதான் எதுனாச்சும் பூக்குமா?
நெனைச்சுப் பாரு! ஒனக்கே சிரிப்பு சிரிப்பா வரும்!
இன்னாடா இவுரு? ரொம்பப் பெரிய ஆளுன்னு நெனைச்சு இவுரு பாட்டைப் படிக்கறோம்! இவுரு இன்னாடான்னா இப்பிடிக்
கூமுட்டையாட்டம் ஒரு கேள்வி கேக்கறாரேன்னு தோணும்!

ஆனாக்காண்டிக்கு, இவுரா கூமுட்டை?
நாமதான் கூமுட்டை!

அடுத்த ரெண்டு வரியுல ஒரு போடு போட்டு அப்பிடியே சாய்ச்சிடுறாரு!

அப்பிடியே படிச்சியானா, இதுல இன்னா க்கீதுன்னுதான் தோணும் ஒனக்கு!

இன்னா சொல்றாரு?
பணியா என வள்ளி பதம் பணியும் தணியா அதி மோக தயாபரனே

மெல்லிசா, பஞ்சுமாரி கீற வள்ளியோட பாதத்தும் மேல தன்னோட தலையை வைச்சுக்கினு, 'நீ இன்னா சொல்றே வள்ளி? இப்ப நானு இன்னா பண்ணணும்ன்றே?'ன்னு கெஞ்சுறாராம் இந்த முருகன்! அதான் இந்த 'பணியா என வள்ளி பதம் பணியும்'!!
அதும் எதுனால?
அவ மேல வைச்சிருக்கற அடக்க முடியாத காதல்னாலியாம்! அதி மோகன்னு சொல்றாரு!
ஆனாக்க, அவுரு பெரிய தயாபரனாம்!
தயாபரன்னா, ரொம்பவே கருணை வைச்சிருக்கற ஆளுன்னு அர்த்தம்!

வெச கெட்டுப் போயி, தனக்குப் பிடிச்ச வள்ளியோட பாதத்துல தலையை வைச்சுக்கினு, அவ சொல்ற வேலையச் செய்யுறதுக்கு தயாரா இருந்துக்கினு கெஞ்சற ஆளு கருணைக்கடலாம்!!!!

வேடிக்கையா இல்ல ஒனக்கு?
கேட்டா சிரிப்புத்தான் வரும்!

மொத ரெண்டு வரியுல அப்பிடி முருகனைக் கெஞ்சினவரு, இப்ப கேக்கற ஆளு ஆரைன்னா, ஒரு பொம்பள காலுல தன்னோட தலையை வைச்சுக்கினு, அவளைக் கெஞ்சற ஆளு!

இன்னா சொல்றாருன்னு ஆராயணும்!

வள்ளி ஆரு?
முருகனை மட்டுமே மனசுல நெனைச்சுக்கினு, வேற ஆரையும் கிட்டக்கக் கூட அண்ட வுடாத ஒரு பொண்ணு!
முளிச்சதுலேந்து, படுக்கற வரைக்கும், அவன் நெனைப்புத்தான் அவ மனசுல!
வேற ஆரையும் கிட்டக்க நெருங்க வுடாம, அவ எத்த வைச்சு வெரட்றான்னு கொஞ்சம் யோசி!


தெனைப்புனத்தும் மேல நிக்கறா வள்ளி!
அவ கையுல கவங்[ண்]கல்லு!
தன்னோட பொருளை தொடணும்னு ஆரு வந்தாலும் கல்லால அடிச்சு வெரட்டுற பொண்ணு அது!


அப்பிடி கல்லுமாரி க்கீற மனசைப் பாத்ததும், இவுருக்கு மனசு எளகிருது!
தனக்குன்னே க்கீற பொண்ணுக்கு தன்னை வுட்டா வேற ஆரு க்கீராங்கன்னு ஒரு நெனைப்பு வந்தவொடனியே, ஓடோடி வந்து அவ காலுல தன்னோட தலையை வைச்சு, 'இப்ப நான் இன்னா பண்ணனும்னு சொல்லு தாயி'ன்னுக் கெஞ்சறாரு இந்த கந்தன்!
இதான் அவரோட கொணம்~!

தன்னை நெனைச்சு உருகினாப் போறும் அவுருக்கு!
ஓடிவந்து கெஞ்சற ஒன்னியக் கொஞ்சுவாரு அவுரு!
அத்தத்தான் இந்தப் பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு!

ஒன்னியத் தவுர, வேற ஆரையும் மனசுல நெனைக்காம இருந்த வள்ளிக்காவ நீ எறங்கிவந்து, அவ சொல்ற வேலையைச் செய்யறதுக்குத் தயாராக் கீறமாரி, என்னோட மனசையும் ஒன்னோட பாதத்த வைச்சு மாத்துப்பான்னு!

இப்ப சொல்லு! அவரை மட்டுமே நெனைச்சு நீ உருகினா ஒன்னோட காலுலியே வந்து வுளறதுக்கு அவுரு ரெடியா க்கீறாரு.
அத்த வுட்டுட்டு, நீ இது வேணும், அது வேணும்னு கேட்டியானா அது டுபாக்கூரா இல்லியா?' என என்னைப் பார்த்துக் கேட்டுவிட்டு, ஓரக்கண்ணால் சாஸ்திரிகளைப் பார்த்தான் மயிலை மன்னார்!

சாம்பு சாஸ்திரிகள் தன் கண்ணாடியைக் கழற்றித் தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்!
நாயர் மௌனமாக எழுந்து இப்படியும் அப்படியுமாகத் தெருவில் நடந்தான்!
*********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, February 10, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 6

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 6

கந்தரநுபூதி: 6

'சரி! முதல் அஞ்சு பாட்டுக்குச் சொல்லிட்டே! இப்ப அடுத்த பாட்டைப் படிக்கவா?' என்றேன்.

மன்னாரை இரண்டு நாட்களுக்குப் பின் பார்த்து, மீண்டும் சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையில், நால்வரும் கூடியிருந்தோம்!

'அதுல சொன்னதுல்லாம் நல்லாப் புரிஞ்சிருந்திச்சுன்னா, இப்ப வரபோற பாட்டு ஈஸியாப் புரியும்! எங்கே. அத்தப் படி, கேப்போம்!' என்றான் மன்னார்!

நேரத்தை வீணாக்காமல் படித்தேன்!

மகமா யைகளைந் திடவல் லபிரான்
முகமா றுமொழிந் துமொழிந் திலனே
அகமா டைமடந் தையரென் றயருஞ்
செகமா யையுணின் றுதயங் குவதே.

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறும் மொழிந்தும் ஒழிந்திலனே
அகம் மாடை மடந்தைய ரென்றயரும்
செகமாயையில் நின்று தயங்குவதே.

முருகனைப் பாத்துட்டாரு! கொஞ்சிக் கொஞ்சிப் பேசிட்டாரு! ஆனந்தத்துல கூத்தாடினாரு! அவரைக் கட்டித் தொல்லைப் படுத்துற ரெண்டு வெலங்கையும் களட்டச் சொல்லிக் கெஞ்சினாரா? இப்ப, இத்தினியும் ஆனதுக்கப்பாலியும், மறுபடியும் பொலம்பறாரு!
இன்னான்னு?

நீ இன்னாருன்னுக் கண்டுக்கினேன்! நீயே எதுக்க வந்து, 'பேச்சையெல்லாம் வுட்டுட்டு சும்மா இருடா!'ன்னு சொன்னதியும் கேட்டேன்! ஆனாக்க, இன்னும் எனக்கு புத்தி வரலியே! அகம்னா வூடு, மாடுன்னா செல்வம்; மடந்தையர்னா பொண்ணுங்க!


இப்பிடி,இந்த வூடு, சொத்து, சொகம், அளகான பொண்ணுங்கன்னு இன்னான்னமோ மாயையுல சிக்கிக்கினு இன்னமும் அல்லாடறேனே! இதுங்கல்லாம் என்னியப் போட்டுப் பொரட்டிப் பொரட்டி எடுக்குதுங்களே! அதுலேர்ந்து வெளியே வர்றதுக்கான வளி[ழி] தெரியாமத் திண்டாடித் தெருவுல நிக்கறேனே! வுடணும்னுதான் மனசு நெனைக்குது! ஆனா, அடுத்த செகண்டே ஒரு சபலம் வந்து தட்டுது! இன்னாத்துக்காவ இத்தயெல்லாம் வுடணும்னு இன்னோரு மனசு கேக்குது! அதானே! இன்னாத்துக்குன்னு இன்னொரு கொரலு சவுண்டு வுடுது! இன்னா பண்றதுன்னே தெரியாம இப்பிடித் தத்தளிக்கிறேனேன்னு மருகறாரு!

இன்னான்னமோ மாயையெல்லாம் சும்மா பொசுக்குன்னு தம்மாத்தூண்டு நேரத்துல 'ப்பூ'ன்னு ஊதித் தள்ளற சாமியே எதுருல வந்து சொன்னாக்கூடக் கேக்காத சென்மமாப் பூட்டேனேன்னு கதறுறாரு!

அதுவும் சும்மாவா சொன்னாரு? ஒரு வாயி இல்ல; ரெண்டு வாயி இல்ல! ஆறு மொவத்துலேர்ந்தும் ஆறு வாயால அமுதமாச் சொன்னாரு! அப்பவும் கேக்க மாட்டேங்குதே இந்த மனசுன்னு கண்ணால தண்ணி வுடறாரு!

நேத்து கூட ஃபோன்ல எனக்குப் படிச்சுக் காமிச்சியே! மாணிக்கவாசகரு சொன்னத எளுதியிருக்கர்னு சொன்னியே... அதும்மாரி, ஒன்னிய நல்லா ஆசைதீரப் பாத்ததுக்கப்பாலியும், நீ ஆறுமுகமா வந்து சொன்னதக் கேட்டதுக்கப்புறமும் எனக்குப் புத்தி வரலியே.... அது இன்னா சொன்னே? ஆங்!... புன்மை... அந்தப் புன்மை என்னிய வுட்டுப் போவலியேன்னு உருகுறாரு!

எதுக்காவ இந்த எடத்துல ஆறுமுகமேன்னு சொன்னாருன்னு கெவனி !
இப்ப, ஒனக்கு இருக்கற ரெண்டு கண்ணால நீ என்னியப் பாக்க முடியுது... நான் எதுத்தாப்புல க்கீறதால!


அதுவே பின்னாடியும் ஒரு மொகம்! அதுல ரெண்டு கண்ணு இருக்குன்னு வைச்சுக்க.. அப்ப பின்னாலியும் பாக்க முடியும்!
ஆனாக்காண்டிக்கு, சைடுல பாக்க முடியாது ஒன்னால!


சரி நாலு பக்கமும் நாலு தலை...ரெண்டு ரெண்டு கண்ணு இருக்குன்னு வைச்சுக்க.. அதுங்கூட அல்லாத்தியும் பாத்திரும்னு சொல்ல முடியாது!

ஆனா, ஆறு கோணத்துலியும் ஆரு மொகம்;;; அதுல ஒண்ணொண்னுலியும் தலா ரெண்டு ரெண்டு கண்ணு!
கணக்கு படிச்சவங்களைக் கேட்டியானா சொல்லுவாங்க....... அப்ப, மொகத்தத் திருப்பாமலியே அல்லாத்தியும் பாத்துற முடியும்! தலைக்கும் மேலே கூட பாக்க முடியும்!
அப்படிப் பாக்கறப்ப, எந்தப் பக்கத்துலேந்து மாயை வந்தாலும் நம்மளால பாக்க முடியும்!

நமக்குத்தான் அப்பிடி இல்லியே!
ஆனா முருகனுக்கு மட்டுந்தான்ஆறு மொகம், பன்னெண்டு கண்ணு!
அதுனால அவரைக் கூப்புட்டு காவலா வரச் சொல்றாரு!
யப்பா! முருகா! ஆறுமுகனே! நீதான் இந்த மாயைலேந்து என்னியக் காப்பத்தணும்னு கூப்புடறாரு!

அப்பிடி அவரே வந்து, 'தோ, பாரு! ஜாக்கிரதியா இரு'ன்னு காபந்து பண்ணினாக்கூட, தன்னோட ஆறு வாயாலியும் சொன்னாக்கூடக் கேக்க மாட்டாம, இத்தயெல்லாம் விட்டொளிக்காம, ரெண்டு பக்கமும் எரியுற குச்சிக்கு நடுவுல சிக்கிக்கின எறும்பு மாரி, இந்தப் பக்கமும் போகமுடியாம, அந்தப் பக்கமும் போகமுடியாம, இப்பிடி கெடந்து தவிக்கறேனேன்னு இந்தப் பாட்டுல சொல்றாரு!

இதுல நீ இன்னொண்ணக் கெவனிக்கணும்!

ரெண்டே ரெண்டு பேராலத்தான் இப்பிடி நேரடியா, தெகிரியமாச் சொல்லமுடியும்!


ஒண்ணு,... நெசமாவே இப்பிடி அனுபவிக்கற ஒரு ஆளால, தான் பாத்து அனுபவிச்சதெல்லாம் , இப்பிடி தன்னோட நடத்தையால மறைஞ்சு போச்சே'ன்னு அங்க மாணிக்கவாசகர் திருவாசகத்துல உருகுறாரே அதும்மாரி ஆளால!

ரெண்டாவதா,.... ஞானம் கெடச்சதுனால, தான் வேற, நீ, நானுல்லாம் வேறன்னு பிரிச்சுப் பாக்ககூட முடியாம, இந்த ஒலகத்துல க்கீற அத்தினியியுமே தானாப் பாக்கற ஆளால!


மத்தவங்க கெடந்து அல்லாடுறதக் கூட தன்னோடதா எடுத்துக்கினு, 'வாடின பயிரைப் பாத்தப்பால்லாம் நானும் வாடினேன்'ன்னு அளுதாரே ராமலிங்க சாமியாரு.. அதும்மாரி பாக்கறவங்க!

இந்த ரெண்டு பேருங்கதான் இப்பிடி எத்தயும் மறைக்காம, உண்மையைப் பேசுவாங்க!
அவங்களால மட்டுந்தான் இப்பிடில்லாம் அளமுடியும்! நாம அளுவுறதுல்லாம், 'இத்தக் குடு! அத்தக் குடு'ன்னு கேக்கறதுக்கு மட்டுந்தான்!

இருக்கற ஒவ்வொரு செகண்டுலியும், 'எனக்கு ஒன்னோட தெரிசனத்த நீ எப்பவுமே எனக்குக் காட்டுறமாரி, என்னிய இருக்கச் செய்யுப்பா'ன்னு அளுவுறதுதான் நெசமான அளுகை!
மத்ததுல்லாம் சும்மா ...டுபாக்கூரு சமாச்சாரம்!' எனச் சற்று உணர்ச்சியுடன் சொன்னான் மயிலை மன்னார்!
இன்னவெனச் சொல்லவியலாத ஒரு மௌனம் அங்கே நிலவியது!
மன்னார் எங்களைப் பார்த்து லேசாகச் சிரித்தான்!
***********
[தொடரும்]

Read more...

Sunday, February 06, 2011

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 5

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 5

"கந்தர் அனுபூதி" -- 5

வளை பட்டகை மாதொடு மக்களெனுந்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ
கிளை பட்டெழுசூ ருரமும் கிரியும்
தொளை பட்டுருவத் தொடு வேலவனே

வளைபட்ட கை மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே!

'அல்லாத்தியும் தொலைச்ச நலத்தைக் குடுப்பா'ன்னு கேட்டவரு, அது இன்னான்னு அடுத்த பாட்டுல சொன்னாரு. 'சண்முகா! ஆறுமுகா!' நீதான் அது'ன்னு ஒரு குன்ஸா' சொல்லிட்டாரு' எனத் தொடங்கினான் மயிலை மன்னார்!.

இப்ப இந்தப் பாட்டுல, இப்பிடி அல்லாத்தியுமே தொலைச்சிட்டாலும், ஆரு அதுன்னு தெரிஞ்சுகிட்டாலும், அத்தச் சேரவுடாம தடுக்கற ரெண்டு கைவெலங்கைப் பத்திச் சொல்றாரு!

'எங்கிட்ட இருக்கறது அல்லாத்தியுமே ஒண்ணொண்ணா களட்டி வுட்டுட்டேனே... ஆனாக்க, ... இந்த ரெண்டு வெலங்கை மட்டும் என்னால களட்டவே முடியிலியேப்பா! இப்பிடி என்னியப் பண்ணிட்டியே! இது அடுக்குமா? சரியா? மொறையா?'ன்னு பொலம்பறாரு... இந்தப்
பாட்டுல!

அப்பிடி இன்னாது அந்த ரெண்டு வெலங்கும்? அதைத்தான் 'தளை'ன்னு சொல்றாரு!

மொதத் தளை, தொட்டுத் தாலி கட்டுன பொண்டாட்டி! பொதுவா 'மாது'ன்னு சொல்லாம, 'வளைபட்ட கை மாது'ன்னு சொல்றாரு,..... கெவனி!

வளைன்னா கையுல போட்டுக்கற வளைன்னு பொதுவாப் புரியும்! ஆனாக்காண்டிக்கு, இப்ப நேத்திக்கு ஒன்னோட 'பெருசு'..அதாம்ப்பா... அடிக்கடி கொளந்தை, கொளந்தைன்னு நீ கொஞ்சுவியே அந்தப் பெருசைத்தான் சொல்றேன்!!.... அவுரு சொன்னாருன்னு ஒண்ணைப் படிச்சுக் காமிச்சியே! .......பெரியவங்க சொல்ற சொல்லுக்கு நாமளா புரிஞ்சுக்கறதுன்னு ஒரு அர்த்தம் இருக்கும்! அவங்களா சொன்னது இன்னான்னு ஒரு பொருளு இருக்கும்னு! அதே கதைதான் இங்கியும்!!

வளைன்னு இங்க சொல்றது தன்னோட அன்பால ஒன்னிய வளைச்சுப் போட்டுருக்கே... அந்தப் வூட்டுக்காரியை! அவங்கதான் 'வளை பட்ட கை மாது'! வெளங்கிச்சா? ஒன்னிய நம்பி, நீயே சதமின்னு வந்தவங்களை எப்பிடி வுடறது? நீ பாட்டுக்கு 'சர்த்தான் போம்மா'ன்னு 'டொப்'புன்னு கெளம்பிற முடியுமா? முடியாதுதானே?

சரி, இப்ப அடுத்த தளை இன்னான்னு பாப்பம்!

இவங்களைக்கூட.... வூட்டுக்காரியக் கூட, ஏதோ ஒரு ஆத்தர அவசரத்துல வுட்டுட்டுப் போறவங்க இருக்காங்க! ஆனாக்காண்டிக்கு, பெத்த மக்களை எப்பிடி வுடறது? 'அப்பா'ன்னு அது வந்து காலைக் கட்டிக்கக்கொள்ள, அப்பிடியே பாசம் பொத்துக்கினு வருதுல்ல?


அதுங்களுக்கு ஒண்ணுன்னா, ஒம் மனசு எப்பிடி பதறித் துடிச்சுத் தவிக்குது? அதுங்க ஒன்னிய மதிக்குதா, பாசமா க்கீதான்றதப் பத்தி, துளிக்கூடக் கவலயே படாம, 'ஐயோ! என்னோட பசங்க'ன்னு உள்ளுக்குள்ள கெடந்து அடிச்சுக்குது இல்ல? அந்த 'மக்கள்'தான் இவுரு சொல்ற ரெண்டாவது தளை!

இந்த ரெண்டு வெலங்குமேவோ, இல்லாங்காட்டிக்கு இதுல ஏதோ ஒண்ணோ, ஒரு ஆளைப் பாடாப் படுத்தி அலையவைக்குது! இன்னா நான் சொல்றது? இன்னா அப்பிடிப் பாக்கறே?' என்றான் மன்னார்!

அதில்லை மன்னார்! மனைவி, மக்களை 'அம்போ'ன்னு தவிக்கவிட்டுட்டுப் போற சில 'நல்லவங்களும்' இருக்காங்கதானே? அப்போ எப்படி இது சரியாகும்?'.... என்று இழுத்தேன்!

'ஊரு ஒலகத்துல பொதுவா க்கீற கதையைத்தான் அருணகிரியாரு சொல்றாரு! நீ சொல்றமாரி, அல்லாத்துக்குமே அங்கங்க ஒரு விதிவெலக்கு இருக்கலாம்! ஆனா, அத்த வுட்டுட்டு, பொதுவாப் பார்த்தியானா, இதான் அல்லா எடத்துலியும் நடக்கறது!

இந்த தளைங்கல்லேர்ந்து எப்பிடி வெளியே வர்றதுன்னு யோசிக்கறாரு! இம்மாம் பெரிய மாயையுல மாட்டிக்கினோமே! எப்பிடிரா தப்பிக்கறதுன்னு மயங்கிப் போயி ஒக்காந்துடறாரு!

ஒடனே உள்ளுக்குள்ள ஒரு 'பல்பு' எரியுது அவருக்கு!

ரெண்டு சமாச்சாரம் நெனைப்புக்கு வருது!
கேக்கறது ஆரை? நம்ம முருகனை!
அவுரு இன்னா பண்ணினாரு?
சூரனையும், ஒரு மலையையும் அளிச்சாருன்னு புரியுது! எப்பிடி இத்தப் பண்ணினாருன்னு ஒக்காந்து யோசிக்கறாரு!

தாரகாசுரன்னு ஒர்த்தன்! சூரனோட தம்பி!
வீரவாகுத்தேவரு தாம் போயி அளிச்சுர்றேன்னு வீராப்பாச் சொல்லிட்டு, ஒரு பெரிய படையோட அங்க போறாரு! கந்தன் சிரிச்சுக்கினே "போய்ட்டு வாப்பா! அவனைப் பார்த்து மயங்கிராதே!'ன்னு அனுப்பி வைக்கறாரு!
அங்க போனா, அந்த ராட்சசன் ஒரு பெரிய மலையா...கிரவுஞ்ச மலையா.... உருவம் எடுத்துக்கினு நிக்கறான்! அல்லாரையும் மாயமா வளைச்சுப் போட்டுர்றான்!


உள்ளார போன ஆளுங்கல்லாம், நாம எங்க க்கீறோம்னே தெரியாம மயங்கறாங்க! சுத்திச் சுத்தி வராங்க! வெளியே வர வளியே தெரியலை!
ஆரோ ஒர்த்தர், ரெண்டு பேரு மட்டும் இதுல சிக்காம தப்பிச்சு வந்து முருகன் கையுல விசயத்தச் சொல்றாங்க!
இது ஒரு கதை!

அடுத்தாப்புல, இந்த ஆணவம் புடிச்ச சூரன் !
தங்கூட இருந்த மொத்தப் பேரும் காலியானதுக்கு அப்புறமுங்கூட, தன்னோட ஆணவத்த வுடாம, தனக்குத்தான் அல்லாமுந் தெரியும்னு கிறுக்குப் புடிச்சு, மாயாரூபமா, ஒரு பெரிய மாமரமா நிக்கறான்! தன்னை ஆரும் கண்டுபுடிக்கவே முடியாதுன்னு அவன் மனசுல ஒரு நெனைப்பு!
பெரிய்ய்ய்ய்ய சூரன்ல இவன்! அதான்! பூனை கண்ண மூடிக்கினு பூலோகமே இருட்டாயிருச்சுன்னு நெனைச்சமாரி!
நம்மாளு கண்ணுலேர்ந்து எதுனாச்சும் தப்பிச்சுப் போவ முடியுமா?
இது ரெண்டாவது கதை!

இந்த ரெண்டுலியுமே இன்னா ஆச்சுன்னு யோசனை பண்றாரு அருணகிரியாரு!
ரெண்டு கேஸுலியுமே, முருகன் ஒண்ணுமே பண்ணலை!
சும்மா கையுல க்கீற வேலைத் தொட்டாரு!
அவ்ளோதான்!
மலை பொடிப்பொடியாப் போச்சு! மாமரம் ரெண்டாப் பொளந்திருச்சு!
அன்னிக்கு 'சிவக்குறளுக்கு' சொல்றப்ப சிவன் வில்லை எடுக்காமலியே, அம்பு வுடாமலியே, அம்மாவைப் பார்த்து லேசா சிரிக்கக்கொள்ளியே, அந்த மூணு லோகமும் எரிஞ்சு போச்சுன்னு பார்த்தோமே, அதும்மாரி, இவுரு வேலைத் தொட்டதுமே, இப்பிடில்லாம் நடந்திருச்சு!

அப்பிடியாப்பட்ட சக்தி முருகன் கைவேலுக்கு க்கீதுன்னு புரிஞ்சுபோச்சு இவுருக்கு!
அத்தயெல்லாம் பண்ணினவருக்கு, அம்மாம் பெரிய மாயாசக்தியையே ஒண்ணுமில்லாமப் பண்ணினவருக்கு, இந்தக் துக்கினியூண்டு மாயையை தொலைக்கறதா பெரிய காரியம்னு ஒரு தெம்பு வருது!

ஒடனே, அடுத்த ரெண்டு வரியுல, 'கிளைபட்டெளு[ழு] சூரரும் கிரியும் தொ[து]ளை பட்டுருவத்..... தொடு.... வேலவனே!'ன்னு கெஞ்சறாரு!

தொடு வேலவனேன்றதுல இத்தினியையும் சொல்லிட்றாரு! இதுல இன்னொரு விசேசம் இன்னான்னா, மாயை மட்டுந்தான் தொலைஞ்சுது ரெண்டு எடத்துலியும்! மலைக்கு உள்ள இருந்த ஆளுங்களுக்கும் ஒண்னும் ஆவலை; சூரன்.... சேவலும், மயிலுமா மாறிட்டான்! அதேமாரி, ஒன்னிய இந்த மாயைலேர்ந்து வெளியே கொணார்றப்போ, மத்தவங்களுக்கும் [மனைவி, மக்கள்] ஒரு கெடுதியும் வராதுன்னு சூசகமா சொல்லிப் புரியவைக்கறாரு அருணகிரியாரு!

'இப்பப் புரியுதா? எதுனால இந்த மூணு பாட்டையும் சேர்த்தே படிக்கணும்னு சொன்னேன்னு? மொதப் பாட்டுல எனக்கு சொல்லித் தாப்பான்னு, கொஞ்சலாக் கேக்கறாரு!
ரெண்டாவது பாட்டுல இன்னாது அதுன்னு தெரிஞ்சுக்கின ஒரு சந்தோசம்!
இப்ப, இந்த மூணாவது பாட்டுல ஒரு கெஞ்சலு!

எப்பிடி முருகன்கிட்ட சரணாகதி பண்றதுன்ற அனுபூதிய இந்த மூணு பாட்டுலியும் வைச்சு சொல்லிக்கீறாரு அந்த மகாப் பெரியவரு! இத்தப் படிச்சு, அவுரு காலுல நாம வுளுந்தாலே போறாதா?' என்றான் மயிலை மன்னார்!

'அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்! வேலாயுதப் பெருமானே சரணம்! கொஞ்சிடும் மழலையின் மலர்த்தாள் சரணம்!' என்று உரத்த குரலில் சொல்லிக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!
நாங்கள் மூவரும் அதை அப்படியே திருப்பிச் சொன்னோம்!

கபாலி கோவில் மணியும் 'ஓம்! ஓம்' என்பதுபோல் ஒலித்தது!
**********
[தொடரும்]

Read more...

Wednesday, February 02, 2011

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 4

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 4

"கந்தர் அனுபூதி" -- 4

வானோ புனல்பார் கனன்மா ருதமோ
ஞானோ தயமோ நவினான் மறையோ
யானோ மனமோ வெனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண் முகனே!

வானோ? புனலோ? பாரோ? கனலோ? மாருதமோ?
ஞானோதயமோ? நவில் நான்மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் தானோ?
பொருள் ஆவது சண்முகனே!?!?!?

போன பாட்டுல நெறையச் சொல்லிட்டதால, நொந்துபோயி ஆருமே வரலைன்னு சொன்னே!
அத்தப் பத்திக் கவலைப்படாதே!
இது ஆருக்குப் போவணுமோ, அவங்களைப் போயிச் சேரும்!
அதுக்காவ, நான் சொல்ல வந்ததச் சொல்லாம் வுடவும் மாட்டேன்!

நீ மட்டும் இதுல கவனம் வைச்சு இத்த மட்டுமே கவுனி! சரியா?' எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

'வரலைன்றதை மட்டுந்தான் சொன்னேனே தவிர, அதனால எனக்கு வருத்தம்னு சொல்லவே இல்லியே, மன்னார்! நீ மேலே சொல்லு ! நான் கேட்கிறேன்!' என்றேன் நான்!
'ஞானும் உண்டு' என்றான் நாயர்!
'நீ சொல்லுடா! நான் கேழ்க்கறேன்!' என்றார் சாஸ்திரிகள்!

அன்புடன் எங்க எல்லாரையும் பார்த்தவாறே மன்னார் தொடர்ந்தான்!

'இந்தப் பாட்டை முந்தின பாட்டோடையும், அடுத்த பாட்டோடையும் சேர்த்துப் படிச்சுப் பொருள் வெளங்கிக்கணும்!

சரி, இதுல இன்னா சொல்லிருக்காருன்னு பாப்பம்!

'எல்லாம் மற என்னை இழந்த நலம் சொல்லுப்பா'ன்னு போன பாட்டுல கிளிமாரி கொஞ்சிக் கேட்டாரு அருணகிரிநாதரு!
இப்ப, இந்தப் பாட்டுல, அந்த நலம் இன்னான்னு சொல்ல வராரு!

வானோ? புனலோ? பாரோ? கனலோ? மாருதமோ?
அது ஆகாசமா? ... இல்லை!
தண்ணியா?.... அதுவுமில்ல!
அப்ப, ... இந்த பூமியா... ம்ஹூம்.. சான்ஸே இல்லை
இதுல்லாம் இல்லேன்னா,?... ஒருவேளை நெருப்பா இருக்குமோ?.... இல்லவே இல்லை!
அப்ப... நிச்சயமா அது காத்தாத்தான் இருக்கணும்! என்ன? அதுவுமில்லியா?

இப்பிடி ஒண்ணொண்ணா பஞ்ச பூதம் அஞ்சையும் இதில்ல, இதில்லன்னு தள்ளிகிட்டே பார்த்தா, ..........ஒண்ணு புரியுது எனக்கு! இந்தப் பஞ்ச பூதத்தையும் கைக்குள்ள வைச்சிருக்கறதே நீதானே! அப்போ, எப்பிடி, நீ இதுல ஒண்னுதான்னு சொல்லி ஒன்னியக் கொறைச்சுப் பேசறதுன்னு!

அப்ப, பஞ்ச பூதத்துக்கும் மேலான நீ இதுல ஒண்ணா இருக்கறதுக்குச் சான்ஸே இல்லை!

ஞானோ தயமோ நவினான் மறையோ

அப்பிடீன்னா, .... இன்னாமோ இதையெல்லாம் தாண்டின ஞானம்னு சொல்றாங்களே அதுவான்னா, ... அதுவும் இல்லை! ஏன்னா, அத்தயெல்லாந்தான் நாலு வேதமும் சொல்லுதுன்னு சொல்றாங்களே!

அப்ப,....இந்த ஞானத்தையெல்லாம் சொல்ற வேதமான்னா, அதும் இல்லியாம்! வேதத்துக்கே பொருளைச் சொன்னவன் நீன்னு தான் ஒனக்கு 'தகப்பன் சாமி'ன்னே ஒரு கதையும், பேரும் இருக்கு! அதுனால நீ அந்த வேதமும் இல்லை!

ஆஹா! இதென்னடா,' மதுரைக்கு வந்த சோதனை'ன்றமாரி கலங்கறாரு அருணையாரு!

'ஏன் இதெல்லாம் வருது? இந்த நான்ற நெனைப்பு இருக்கறதாலத்தானே? அந்த நானுன்றதுதான் இதுவோ'ன்னு ஒரு சந்தேகம் வருது! பொட்டுல அடிச்சாமாரி, அதுவும் இல்லைடான்னு ஒரு கொரலு உள்ளேர்ந்து வருது!

ஆரது கொரல் குடுக்கறதுன்னு பார்க்கறாரு!

இதுவரைக்கும் சொன்ன இத்தெல்லாம் இல்லைன்னா, ஒருவேளை இத்தயெல்லாம் நெனைக்கற இந்த மனசான்னு ஒரு கேள்வி கேக்கறாரு! அதுவும் இல்லைன்னு புரியுது! அதான் போன பாட்டுலியே சொல்ட்டாரே! இந்த மனசையெல்லாம் இள[ழ]ந்த நலத்தை எனக்குச் சொல்லுப்பான்னு கேட்டாரே... அப்ப எப்பிடி இந்த மனசான்னு நெனக்கமுடியும்னு செவுட்டுல அறைஞ்சமாரி, புரியுது!

அப்போ....... இந்த மனசும் இல்லை!

அப்ப......... எதான் இது?

இந்த 'எனை ஆண்ட இடம்'?

கோபுரத்துலேர்ந்து குதிச்சப்பக் காப்பாத்தினாரே..... ரெண்டு கையுலியும் வாங்கிக்கினு?

அதுவா? அந்த நிமிசமா?

பொம்பளை சொகமே பிரதானமின்னு திரிஞ்சவரை, 'சொல்லற! சும்மாயிரு!'ன்னு சொன்னாரே!... அந்த நேரமா?

இந்த எடம்ன்றதுலதன் சூட்சுமம் இருக்கு!

அதைத்தான் 'பொருளாவது'ன்னு சொல்லிக் குதிக்கறாரு இங்க!

என்னை இழந்த நலம்னு போன பாட்டுல சொன்னதோட பொருளு இதான்!

எந்த நேரத்துல, எந்த நொடியில, எந்த எடத்துல இந்த பொருளு அவருக்கு வெளங்கிச்சோ, அதான் அந்த எடம்! .... அந்த நலம்!!

இது வரைக்குமா இருந்த ஒரு சாதாரணமான ஆளு,....... 'என்னியே எடுத்துக்கோடா'ன்னு தன்னோட அக்காவே மாராப்பை விரிச்சுப்போட்டுக் சொல்ற அளவுக்குப் பொம்பளைப் பித்து புடிச்சு அலைஞ்சோமேன்னு மனசு வெறுத்துப்போயி, 'இனிமே உசுரோட இருந்து இன்னா பிரயோசனம்'னு நெனைச்சு கோவுரத்து உச்சிலேர்ந்து வுளுந்தவனை...... ரெண்டு கையால தாங்கிப் புடிச்சுக் காப்பாத்தி, 'முத்தைத்தரு'ன்னு ஒரு சொல்லையும் சொல்லி, 'இனிமே என்னியப் பத்தி மட்டும் பாடு!'ன்னு சொன்ன ஒரு அன்பான சாமியை நல்லாப் புரிஞ்சுகிட்ட அந்த நொடிதான்..'அவரை ஆண்ட எடம்'!!!!! அல்லாத்தியும் எளந்த நலம்!

அதுக்குத்தான் இந்த ரெண்டுபாட்டையுமே சேர்த்துப் படிக்கணும்னு சொன்னேன்!

அது மட்டுமில்ல!

அந்தக் கடைசி வார்த்தையுல கூட ஒரு குசும்பு பண்ணி வைச்சிருக்காரு!


சண்முகனேன்னு சொல்லி முடிக்குறாரு!

இந்த வார்த்தைய......., நேரம், நொடி, காலம் பொருளுல்லாம் எதுவுமே இல்ல! அல்லாமே நீதான் சண்முகா.....ன்னும் புரிஞ்சுக்கலாம்!

இல்லாங்காட்டிக்கு,... வானோ, புனலோ, பாரோ, கனலோ, மாருதமோ, ஞானோதயமோ, சொல்ற நாலு வேதமோ, நானோ, மனசோ..... இல்லைன்னா.... இத்தெல்லாம் இல்லாம என்னிய நீ கண்டுகிட்ட எடமோ, இதான் பொருளா ஆச்சா ஆறுமுகா?ன்னு முருகனையே கேக்கறாருன்னும் புரிஞ்சுக்கலாம்!

அடுத்த பாட்டையும் சேர்த்துப் பார்த்தியானா, எதுக்கு இப்பிடிச் சொன்னாரு.... இல்லைன்னா.... கேட்டாருன்னு புரியவரும்!' என ஒரு சஸ்பென்ஸோடு முடித்தான் மயிலை மன்னார்!

'சும்மா இதைப் படிச்சிருக்கேண்டா! ஆனா, நீ சொல்லச் சொல்ல, இதுக்குள்ள இத்தனை அர்த்தம் இருக்கான்னு மலைச்சுப் போய் நிக்கறேன் மன்னார்!' எனக் கண்களைத் துடைத்துக் கொண்டார் சாஸ்திரிகள்!

எதுவுமே சொல்லத் தெரியாமல் நானும் நாயரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்!
**********
[தொடரும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP