Thursday, June 21, 2007

எட்டோண் எட்டு;எட்டும் வரை எட்டு!

எட்டோண் எட்டு; எட்டும் வரை எட்டு!

எட்டு எழுதணுமாம்; கொத்தனார் வந்து சொல்லியிருக்கிறார்.

அப்படி என்னதான் இந்த எட்டு எனப் பார்த்தால், ஆளாளுக்கு எழுதினதைப் பார்த்தா அவங்களை நினைச்சு சந்தோஷமா இருக்கு.
அதே சமயம், இவங்க எல்லாம் இப்படி அடுக்கியிருக்கறதுக்கு முன்னாடி, நாம என்னன்னு சொல்லமுடியும்னு, ஒரு பயம் அடிவயத்தைக் கவ்வுது.

அப்போதான், நம்ம இளா ஒரு பதிவு போட்டிருந்தாரு. அதைப் பார்த்ததும் கொஞ்ச தெம்பு வந்தது.

அதனால, அவருக்கு என்னோட முதல் நன்றி.

என் எட்டு இதோ!
சாதனைகள் ஏதுமில்லை.
ஆனால், மறக்கவொண்ணா நிகழ்வுகள்
நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1. தமிழ் பயிற்றுவித்த, சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் தமிழாசிரியாராக இருந்த "குண்டைய்யா" என எங்களால் அன்போடு அழைக்கப்பட்டவரின் சிறப்பு மாணவனாக இருந்தது. இன்னிக்கு எனக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச தமிழறிவு அவர் போட்ட பிச்சை.

2. என் தந்தையின் கனவு நனவாக, பி.காமில் இருந்து விலகி, மருத்துவம் படிக்கச் சென்று, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
[கொத்ஸ் கவனிக்க!]

3. 18 ஆண்டுகாலம், மனதுக்கினிய மருத்துவராகப் பணியாற்றியது. இப்போது சென்றாலும், ஒரு கூட்டம் குரோம்பேட்டையில் அன்புடன் சூழ்வதைப் பார்த்து, என் குழந்தைகள் மகிழ்வது.

4. சாதாரணமாக இருந்த ஒரு பிள்ளையார் கோயிலை விரிவாகக் கட்டலாம் என முடிவு செய்து, அத்தனை மக்களும் ஒன்றாக இணைந்து, ராவா, பகலா வேலை செய்து, பணம் திரட்டி, மிகச் சிறந்த அளவில் கும்பாபிஷேகம் செய்து முடித்தது. ... அந்தக் கோவில் இன்றும் சிட்லபாக்கத்தில் மங்கள விநாயகர் ஆலயம் என ஆன்மீகப் பணி ஆற்ரிக் கொண்டிருப்பது.

5. புறநகர்ப் பகுதிகளில் வராது, வரமுடியாது எனக் கருதப்பட்ட தனி அரங்குகள் கொண்ட பொருட்காட்சியை முதன் முறையாக, '80 களில், குரோம்பேட்டை எம்.ஐ.டி. விளையாட்டுத் திடலில் தொடர்ந்து 10 நாட்கள் வெற்றிகரமாக LINTEF [Lions' International Trade and Entertainment Fair] என்ற பெயரில் நடத்திக் காட்டியது.

6. ஒரு மே மாதம் 31ம் தேதி, திடீரென என் வலது கண் பார்வை இல்லாமல் போனது. பாரத் பந்த் என ஒன்று அன்று. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. அவசரத்துக்குக் கிடைத்த ஒரே டாக்டர் அகர்வால். அறுவை சிகிச்சை மூலமே விட்டுப்போன ரெடினாவை மீண்டும் இணைக்கமுடியும்; அதிகச் செலவாகும் இதற்கு என் சொல்லிவிட்டார்.

வீட்டிற்குச் செல்லும் வழியில், மதியம் 1 மணி இருக்கும், கிண்டி பாபா கோவில் வாசலில் வண்டியை நிறுத்துகிறேன்.
மூடியிருந்த கோவில் கேட்டைத் திறந்துவிட்டு, பாபா தரிசனம்! பத்ரிநாத்திடம் செல்லுமாறு அந்தக் கோவிலை நிர்வகித்து வந்த கீதம்மாவின் அன்பான அறிவுரை.

அப்படியே செய்ய, பத்ரிநாத்தும் அறுவை சிகிச்சையை உறுதிப்படுத்த, சங்கர நேத்ராலயாவில் அனுமதிக்கப் படுகிறேன். மறுநாள் அறுவை சிகிச்சை என முடிவாகிறது.அன்றிரவு வந்த டாக்டர் பத்ரிநாத் என்னைச் சோதிக்கிறார். அவராலேயே நம்ப முடியவில்லை. "டாக்டர். சங்கர்,நீ அதிர்ஷ்டசாலிப்ப்பா! உன்னோட ரெடினா தானே திரும்பவும் சேர்ந்திடுச்சு. இப்படி நிகழ்வது ரொம்ப அபூர்வம். "எனச் சொல்லி மறுநாள் ஒரு சிறு சிகிச்சையுடன் வீடு திரும்பியது!!

7. இரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய, இசைஞானி இளையராஜாவின் "திருவாசகம்" சி.டி. வெளிவர , துவக்கம் முதல் , வெளியீடு வரை ஒரு பெரும்பங்கு வகித்த TIS Foundation USA என்ற அமைப்புக்கு தலைமை தாங்கி, பல்வேறு இன்ப, துன்ப நிகழ்வுகளைச் சந்தித்து, இன்றும் ஒரு நிறைவு அனுபவமாக பலராலும் பாராட்டப்படுவது.

8. இணையத்தில் தற்செயலாக அறிமுகமாகி, பல்வேறு நண்பர்களைப் பெற்று, எழுதணும்னு நினைத்த பல விஷயங்களில், ஒருசிலவற்றையாவது எழுத முடிந்தது .

மேலே சொன்ன விஷயங்கள், அநேகமாக என் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதாவது, எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பேன் இதையெல்லாம்!
இப்ப உங்ககிட்டேயும்!

சொல்ல அழைத்த கொத்தனாருக்கு மீண்டும் ஒரு நன்றி.

இப்ப நான் ஒரு 8 பேரை அழைக்கணுமாம்.

1. குமரன்
2. செல்வன்
3. கோவி.கண்ணன்
4. ரவி கண்ணபிரான்
5. ஷைலஜா
6. அன்புத்தோழி
7. நாகை சிவா
8. வடுவூர் குமார்

எத்தனையோ பேர் இருந்தாலும், உடனே நினைவுக்கு வருபவர்கள் இவர்களே!
உங்களுக்கு இஷ்டமிருந்தால், வந்து எழுதுங்க.
கட்டாயமில்லை.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

_____________________________________
விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

OPTIONAL:

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP