"பள்ளி எழுந்தருளாயே!" - 3 [23]
"பள்ளி எழுந்தருளாயே!" - 3 [23]
கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! [3]
அழகிய குயிலகள் இனிமையாகப் பாடின;
கோழியினங்களும் கூவிவிட்டன;
சிறகடித்துப் பறக்க பறவைகளும் சலசலத்தன;
திருக்கோயிலில் சங்குகளும் ஒலித்தன;
வானத்து விண்மீன்களும் தம்மொளி குன்றின;
உதயக் கதிரொளியும் ஒன்று சேர்ந்தன;
தேவனே! எம்மீது விருப்பம் கொண்டு
நல்ல வீரக்கழல் அணிந்த உனது இரு
திருவடிகளையும் எங்களுக்குக் காட்டுவாயாக!
எவராலும் அறிந்துகொள்ள அரிதானவனே!
அடியவராம் எங்களுக்கு மட்டும்
அனுபவித்தற்கு எளிமையானவனே!
திருப்பெருந்துறையில் சீரோடு உறையும்
சிவபெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!
அருஞ்சொற்பொருள்:
குருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்; ஒருப்படுதல் - முன்னேறுதல்/மேலோங்குதல்.