Tuesday, October 30, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 28

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 28


முந்தைய பதிவு இங்கே!

26.
"ஒள்ளார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்." [264]

'இந்த காட்டுக்குள்ள ஒரு பெரிய சண்டை நடக்கப் போற மாரி ஒரு காட்சி எனக்குத் தெரிஞ்சுதுங்க.' எனச் சொல்லி நடந்ததை மீண்டும்
விவரித்தான் கந்தன்.

'வளக்கமா இது போல குறியெல்லாம் பூசாரி ஐயாவுக்குத்தானே வரும். முன்னப் பின்ன இந்தக் காட்டுக்குப் பளக்கமில்லாத ஒனக்கு வந்ததுதான் எனக்கு
ஆச்சரியமா இருக்கு. அதான் இதை நம்பறதா, வேண்டாமான்னு யோசிக்கறேன்' என்ச் சொல்லி முகவாயைத் தடவினார் தலைவர்.

எனக்கு இந்த உலக ஆத்மாவைப் பத்தித் தெரியும் எனச் சொல்ல நினைத்த கந்தன் வாயை அடக்கிக் கொண்டான்.

'இந்தக் காட்டுல, அதுவும் இந்த முத்துமலைப் பக்கம், இதுவரைக்கும் யாரும் வந்து சண்டையெல்லாம் போட்டதில்ல' எனத் தொடர்ந்தார் முத்துராசா.

'என் கண்ணுல பட்டதை நான் சொன்னேன். நம்பறதும், நம்பாததும் உங்க இஷ்டம்' எனச் சொல்லியபடி எழுந்தான் கந்தன்.

ஒரு கையால் அவனை அப்படியே உட்காரும்படி கம்பீரமாக ஒரு சைகை செய்த முத்துராசா, சற்று தணிந்த குரலில் கூடியிருந்த மற்றவர்களுடன் தீவிரமாகப் பேசத் தொடங்கினார்.

கந்தனுக்கு இங்கே வந்ததே தவறோ என ஒரு பயம் பிடித்துக் கொண்டது!

சிறிது நேரத்துக்குப் பின், முத்துராசா அவனை நோக்கிப் பார்த்து லேசாகச் சிரித்தார்.

தான் சொன்னது சரிதான் என ஒரு நம்பிக்கை பிறந்தது இப்போது!

முத்துராசா அவனைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்.


'ரொம்ப நாளைக்கு முன்னாடி எங்கேருந்தோ இந்தக் காட்டுக்கு ஒரு சித்தர் வந்தாரு. 'இங்க ஒரு பஞ்சம் வரப் போவுது. உடனே அம்மனுக்கு ஒரு பூசை போடுங்க'ன்னு
சொல்லிட்டு காட்டுக்குள்ள போயிட்டாரு. நாங்களும் உடனே ஒரு குறையும் வைக்காம ஒரு பெரிய பூசை போட்டோம்! ஒரே வருசந்தான். எல்லாம் சரியாயிருச்சு. அதுக்கப்பறம்,இங்க எல்லாமே ஒரு வரைமுறைக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்குது. இந்த எல்லைக்குள்ள எந்த ஒரு கெட்ட காரியமும் நடந்ததில்ல. ஆனா, அதே சமயம், இது மாரி நடக்கற சகுனத்துக்கெல்லாம் ஒரு அர்த்தம் இருக்குன்னும் எங்களுக்குத் தெரியும். காட்டுக்குள்ள நடக்கற எல்லாத்துக்குமே ஒரு காரண காரியம் இருக்கு.
அதே போல, இதுக்கும் எதுவோ ஒரு காரணம் இருக்குன்னு பூசாரி கூட சொல்றாரு.'
எனச் சொல்லிவிட்டு தன் கூட இருந்தவர்களைப் பார்த்து,

'நாளையிலேருந்து, கொஞ்சம் கடுமையாவே நம்ம எல்லைக்குள்ள போக்குவரத்தையெல்லாம் கட்டுப்படுத்துங்க. சந்தேகப்படற மாரி யாராச்சும்
வந்தா, உடனே பிடிச்சுக் கட்டிப் போடுங்க' எனக் கட்டளைகள் பிறப்பிக்க ஆரம்பித்தார்.

'இனி நமக்கு இங்கே வேலை இல்லை' எனத் தெரிந்து, கந்தன் மெதுவாக வெளியே வந்தான். நடந்தான்.

நடந்த அனைத்துமே அவனுக்கு ஒரு பிரமிப்பை உண்டு பண்னியது.

தான் சொல்லியது தவறாகப் போயிருந்தால், தன் நிலைமையே ஆபத்தாயிருக்கும் என நினைத்தபோது, ஒரு பயம் தோன்றியது.

பூசாரி சொன்னது நினைவுக்கு வந்தது.
.........இப்ப.. இந்த நிமிஷம் நடக்கறதுதான் நிஜம்! இதைச் சரியாக் கவனிச்சியானா
நாளைக்கு என்ன நடக்கும்னு உனக்கே புரியும். ஆனா, எல்லாரும், இதைச் செய்யறதில்லை! நேத்து என்னா ஆச்சு, நாளைக்கி என்னா
நடக்கும்னே காலத்தை ஓட்டறாங்க! இன்னிக்கு நடக்கறதைப் பாத்து, அதை சரியாச் செஞ்சோம்னா, எல்லாமே நல்லா நடக்கும்.இன்னிக்கு
சாவறதோ, இல்லை நாளைக்கு சாவறதோ நம்ம கையுல இல்லை. சாமிதான் நாளைக்கு என்ன நடக்கும்னு முடிவு பண்னறாரு. அது கூட எதுக்குன்னா,
ஒரு சில சரியான நடத்தையால, அதைக் கூட மாத்தறதுக்கு
நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறதுக்குத்தான்! எல்லாம் விதிப்படி நடக்கும்'..........

இப்ப நான் சொன்னதை ராசா நம்பாமப் போயிருந்தா, என் உசுருக்கே ஆபத்தாயிருக்கும். அப்படிப் போயிருந்தா, என்ன ஆயிருக்கும்?
ஒண்ணுமில்ல.சாமிக்கு நடக்கப்போறத மாத்தக் கூடாதுன்னு பட்டிருக்கும். அவ்ளோதான். ஆனாக்க, நான் நிம்மதியா போயிருப்பேன்.
வெறுமன ஊருல ஆடு மேச்சுகிட்டிருந்த நான், மதுரைக்கு வந்து, ஒரு பெரிய ஓட்டலையே நிர்வாகம் பண்ணினது,இந்தக் காட்டுக்கு வந்து பொன்னியைப் பாத்தது .... இது போதுமே.... நாளைக்கு செத்துப் போனாக்கூட நான் எதிர்பார்த்ததை விட அதிக்மாவே எனக்கு கடவுள் கொடுத்திருக்காருன்னு நிம்மதியா போயிருவேன்!

சிரிப்பு வந்தது கந்தனுக்கு. அப்படியே ஒரு பாறை மேல் உட்கார்ந்தான்.

திடீரென ஒரு பெரிய காற்று வீசியது. இலைகள் பறந்தன. மரங்கள் வேகமாக ஆடின.ஒரு பெரிய புழுதி மண்டலம் கிளம்பி அவன் கண்களை
மறைத்தது. காற்றின் வேகம் தாங்காமல் கந்தன் கண்களை மூடிக் கொண்டான்.

சற்று நேரம் பொறுத்து மெதுவாகக் கண்களைத் திறந்தான்.

அவன் முன்னே தெரிந்த காட்சி அவனை அப்படியே நடுங்கச் செய்தது!

இடையில் கட்டிய ஒரு காவித்துணியுடனும், ஒரு நீண்ட வெண்ணிற தாடியுடனும், கையில் ஒரு மூங்கில் கம்புடனும் ஒரு ஆறடி உயரமுள்ள
மனிதர் அவன் எதிரில் நின்று கொண்டிருந்தார். அவர் தோளில் ஒரு வெண்கழுத்துடன் கூடிய கழுகு ஒன்று அலட்சியமாக உட்கார்ந்திருந்தது!


தன் கையில் இருந்த கம்பை அவன் முகத்துக்கெதிராக நீட்டியபடி, கொஞ்சம் கடுமையான குரலில் அவனைப் பார்த்துக் கத்தினார்!
'யார் இங்கே கழுகுங்களைப் பார்த்து குறி சொன்னது? நீதானா அது?'

கந்தன் ஒரு கணம் அவரது தோற்றத்தைப் பார்த்து நடுங்கினான். அதே நேரம் ஒரு இனம் புரியாத தைரியம் அவனுக்குள் சுரந்தது. இவரிடம்
துணிவாகப் பேசலாம் என ஏதோ ஒன்ரு உள்ளுக்குள் சொல்லியது.

தலையைக் குனிந்தபடியே, பணிவாகச் சொன்னான், ' அது நாந்தாங்க. ஒருவேளை அது உண்மையா இருந்தா இந்த காட்டுவாசிங்களை எல்லாம் காப்பாத்தலாமேன்னு தான்....'.

மூங்கில் கம்பு மெதுவாக இறங்கி அவன் முகவாய்க்கட்டையை நிமிர்த்தியது. வாகா மண்டையில போடறதுகுத்தான் நிமிர்த்தறாரு என நினைத்தான் கந்தன்!

அவன் மனம் ஒரு கணம் பொன்னியை நினைத்தது.
சகுனங்கள் எல்லாம் சரியாத்தான் சொல்லியிருக்கு. இதோ என் எதிரி என்னை இப்போ ஒரே போடா போட்டு என் கதையை முடிக்கப் போறார்.

'எப்பிடி உனக்கு அது தெரிஞ்சுது?' கம்பை அவன் மோவாயில் இருந்து எடுக்காமலே அடுத்த கேள்வி வந்தது.

இப்போதைக்குப் பிழைத்தோம் என்ற துணிவில், 'அதான் அந்தப் பறவைங்க என்கிட்ட சொன்னது மாரி எனக்குப் பட்டுது. இந்தக் காட்டை காப்பாத்துன்னு என்னைப் பாத்து சொன்னது போல எனக்குத் தோணிச்சு. அதன் சொன்னேன்' என்றான் கந்தன்.

'சாமி செய்ய நினைச்சதை மாத்தறதுக்கு உனக்கு என்ன அதிகாரம் இருக்கு?'

'நீங்க சொல்ற சாமிதான் அவங்களைக் காட்டிச்சு. அந்தக் கழுகுகளையும் காமிச்சுது. அவங்க சொன்னதையும் எனக்குப் புரிய வெச்சுது. எல்லாம் சாமி எழுதின விதிப்படிதான் நடக்குது.' பயத்தில் பூசாரி சொன்னதையே கொஞ்சம் மாற்றிச் சொன்னான் கந்தன்.

ஒரு சிறிய புன்னகையுடன் அந்த மனிதர் கம்பை தரையில் ஊன்றியபடியே கந்தனைப் பார்த்துச் சொன்னார், ' எழுதினதை மாத்தறதுக்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது. அடுத்த தடவை இது மாதிரி குறி சொல்றப்ப இதை நெனைப்புல வெச்சுக்க.'

'ஒரு சண்டை வரப் போகுதுன்னு மட்டும் தான் நான் பார்த்தேன். அது எப்பிடி முடியும், யாரு ஜெயிப்பாங்கன்னு எனக்குத் தெரியாது' எனச் சற்று பயம் கலந்த மரியாதையுடன் சொன்னான் கந்தன்.

வந்த மனிதரின் முகத்தில் ஒரு திருப்தி கலந்த சந்தோஷம் தெரிந்தது கந்தனின் இந்த பதிலால்.

'அது சரி, உன்னைப் போல ஒரு ஆளு இங்க, இந்தக் காட்டுல என்ன பண்றே?' என்று அன்புடன் கேட்டார்.

'நான் என் விதி என்ன சொல்லுதோ, அதைத் தேடிகிட்டு வந்திருக்கேன். அதெல்லாம் உங்களுக்குப் புரியாது.' என்றான் கந்தன்.

'ஓ, அப்படியா?' எனச் சிரித்தபடியே அவனருகில் சென்று அந்தப் பாறையில் அமர்ந்தார் அந்த மனிதர்.

'நான் உன்னோட தைரியத்தை சோதனை பண்ணத்தான், கம்பை உன் முகத்துமேல வைச்சேன். தைரியம் இருக்கறவனுக்குத்தான் உலகத்தோட ஆத்மாவைப் புரியும்'

கந்தன் அவரை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தான். உலக ஆத்மா என்ற சொல் அவனுக்கு ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணியது அவரிடம்!

'இவ்ளோ தூரம் வந்திட்ட அப்புறம், நீ பின் வாங்கக் கூடாது. காடு நல்ல இடம்தான். ஆனா, அதுக்காக இங்கேயே நீ தங்கிடக் கூடாது.
இங்கே ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஒரு சோதனை வரும்,
இன்னும் ஒரு நாளைக்குள்ள. அதையெல்லாம் தாண்டி, நீ உசுரோட இருந்தியானா, என்னை வந்து பாரு. எங்கேன்னு கேக்காத. உனக்கு வேணும்னா, உன்னால என்னைக் கண்டுபிடிக்க முடியும்.... வெள்ளைப்பாறை தாண்டி வந்தியானா.....' எனச் சொல்லியவாறே, பாறையிலிருந்து குதித்தார் அந்த மனிதர்.

விறு விறுவென நடந்து மறைந்தார்!

கழுகு அவர் தோளிலிருந்து கிளம்பித் தெற்கு நோக்கிப் பறந்தது.

கந்தன் சித்தரைப் பார்த்து விட்டதை உணர்ந்தான்!
*********************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 27

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 27

முந்தைய பதிவு இங்கே!




25.

"அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்

திறனறிந்தான் தேர்ச்சித்துணை." [635]

காலைப் பூஜைகளை முடித்துவிட்டு, கோயில் கதவைச் சாத்தியபடியே வெளியே வந்தார் மாயன் பூசாரி.

கோயில்னா பெருசா ஒண்ணும் இல்லை.திண்ணை வெச்ச ஒரு பெரிய குடிசை. உள்ளே ஒரு மேடை. அதுமேல இரண்டு சாமி சிலைகள்.
பக்கத்தில் முனையில் எலுமிச்சம்பழம் சொருகிய ஒரு அருவாள். பெரிய அகல் விளக்குகள் இருபக்கமும். அவ்வளவுதான்!



நீண்ட உயரத்திலிருந்து பின்புலத்தில், கொல்லியருவி அழகாக விழுந்து கொண்டிருந்தது!

"ஆத்தா!எல்லாரையும் காப்பாத்து!" எனச் சொல்லியவாறே, திண்ணையில் உட்கார்ந்து, மடியில் கட்டியிருந்த ஒரு பொட்டலத்தைப் பிரித்து, அதில் மடக்கி வைத்திருந்த புகையிலையை எடுத்து, ஒரு துண்டைக் கிள்ளி வாயில் அடக்கினார்.

காலைப் பூஜை முடிந்து, இனி மதியச் சாப்பாட்டுக்கு நேரம் இருந்தது! பேச்சுத்துணைக்கு எவரும் அகப்படுகின்றார்களா என ஒரு பார்வை விட்டார்.

தூரத்தில் கந்தன் வருவது தெரிந்தது.

'முத்துராசா வூட்டுல நேத்து அந்த வெள்ளைக்காரனோட பாத்த புள்ள தானே இது' எனக் கண்களைச் சுருக்கிக் கொண்டே பார்த்தார்.

வயது எழுபதுக்கு மேல் இருந்தாலும், கட்டுக் குலையாத தேகம். கறுத்த மேனியில் திரளான புஜங்கள். நரைத்த தலையில் அள்ளி முடித்து உயரக் கட்டிய அடர்ந்த சிகை. முறுக்கி விட்ட கட்டு மீசை வெள்ளையாக, அடர்த்தியாக, இந்த வயதிலும்!! மழித்து வழிக்கப்பட்ட தாடை. பார்த்தாலே ஒரு
கம்பீரம் கலந்த மரியாதை தரும் தோற்றம்.

'யாரப்போவ் அது! புதுசா வந்த புள்ளதானே! சித்த இங்க வாங்கய்யா! என்ன இவ்வளோ பரபரப்பா வரீங்க?' என மரியாதையோடு வரவேற்றார் பூசாரி.

'என்னமோ சண்டை வரப்போகுது. எனக்கு அப்படி ஒரு காட்சி தெரிஞ்சுது' என அவரிடம் ஒருவித அவசரத்துடன் சொன்னான் கந்தன்.

'காட்டுக்குள்ள வந்தாலே இப்படிப்பட்ட காட்சியெல்லாம் வரும், புதுசா வர்ற ஆளுங்களுக்கு!' எனச் சிரித்தார் பூசாரி.

'அப்படியில்லீங்க' எனச் சொல்லி தான் கண்ட, காட்சியை விவரித்தான் கந்தன்.

எந்த ஒரு காட்சியும்,... அது ஒரு ஓலையைப் படித்ததாலோ, இல்லை, மேகங்களின் அசைவைக் கணித்தோ, அல்லது, பறவைகளின் போக்கைக் கவனித்தோ,.... உலகில் நடக்கப்போவதைக் காட்டும் என்பதை உணர்ந்த மாயன் அவன் சொன்னதைக் கவனமாகக் கேட்டார்.

காட்டில், மலையில், தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போகும் சாதாரண ஆட்களும் உண்டு; அதையும் தாண்டி, இது போல சில
நிகழ்வுகளைக் கவனித்து, அதன் பொருளை அறியும் மனிதரும் உண்டு. அவர்கள்தான் பூசாரி போன்ற சிலர். காட்டுக்கே ராசான்னு இருக்கறவங்க கூட, இவர்களைக் கேட்காமால் எதுவும் செய்ய மாட்டார்கள்.
கடவுள் எல்லாவற்றையுமே நல்லதாகத்தான் எழுதியிருக்கிறார் என்றாலும், அதனை இது போன்ற சிலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஒரு தனி
அக்கறை, மதிப்பு, பயம், மரியாதை!

அப்படிப்பட்ட ஒருவராக இந்த மலைக்காட்டில் அனைவராலும் மதிக்கப்படும் மாயன் பூசாரி, இந்த விஷயத்தைக் கேட்டதும், சற்று நிமிர்ந்து
உட்கார்ந்தார்.

'என்ன சொல்றே நீ? கொஞ்சம் விவரமாச் சொல்லு' எனச் சற்று பதட்டத்துடன் கேட்டார்.

கந்தன் மீண்டும், தான் இரு கழுகுகள் பறந்ததையும், ஒரு கழுகு மற்றொன்றைத் தாக்கியதையும், அதே சமயம், ஒரு கூட்டம் ஆயுதங்களுடன்
இங்கு வருவது போல ஒரு காட்சி தன் கண் முன்னே தெரிந்ததையும் விவரித்தான்.

மாயன் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.


பக்கத்தில் இருந்த ஒரு செடியில் இருந்து, கையில் அகப்பட்டதைப் பிடித்துக் கிள்ளி, தன் முன்னே போட்டார்.

'இந்த இலையப் பாத்து, அது எப்படி என் முன்னால விளுந்துதுன்னு பாத்து, என்ன நடக்கப் போவுதுன்னு நான் சொல்லிடுவேன்.
என்ன நடக்கப் போவுதுண்றது என் கையில இல்லை. அது சாமிக்கு மட்டுமே தெரியும். சரியான சமயத்துல, சாமி சொல்லும். எப்பிடி சொல்லும்? அதுக்குத்தான் என்னைப் போல ஆளுங்களை அது அனுப்பியிருக்கு! எங்க மூலமா அது பேசும்!
இப்பத் தெரியுற காட்சிகளை வெச்சு நான் நடக்கப் போறது என்னன்னு சொல்லுறேன். அதான் சூட்சுமம். இப்ப.. இந்த நிமிஷம் நடக்கறதுதான் நிஜம்! இதைச் சரியாக் கவனிச்சியானா நாளைக்கு என்ன நடக்கும்னு உனக்கே புரியும். ஆனா, எல்லாரும், இதைச் செய்யறதில்லை! நேத்து என்னா ஆச்சு, நாளைக்கி என்னா நடக்கும்னே காலத்தை ஓட்டறாங்க! இன்னிக்கு நடக்கறதைப் பாத்து, அதை சரியாச் செஞ்சோம்னா, எல்லாமே நல்லா நடக்கும்.இன்னிக்கு சாவறதோ, இல்லை நாளைக்கு சாவறதோ நம்ம கையுல இல்லை. சாமிதான் நாளைக்கு என்ன நடக்கும்னு முடிவு பண்னறாரு. அது கூட எதுக்குன்னா, ஒரு சில சரியான நடத்தையால, அதைக் கூட மாத்தறதுக்கு நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறதுக்குத்தான்! எல்லாம் விதிப்படி நடக்கும்'

ஒரு சில நிமிடங்கள் அந்த இலையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

தலையை இப்படியும், அப்படியுமாய் ஒரு சில நொடிகள் ஆட்டினார்.

'நீ சொன்னதுல எதுவோ விசயம் இருக்கு. போ! போயி, முத்துராசாவைப் பாரு. அவன்கிட்ட நீ பாத்ததைச் சொல்லுவோம்!' என ஒரு
தீர்மானத்துடன் சொன்னார்.


கூடவே எழுந்தார்!

***************

கந்தனும் பூசாரியும் தலைவரின் வீட்டை அடைந்தனர்.

'ஐயா இருக்காரா?' என வாசலில் நின்ற ஆளைக் கேட்டார் பூசாரி.

'கொஞ்சம் இருங்க' எனச் சொல்லிவிட்டு,உள்ளே போனவன், சற்று நேரத்தில் வந்து,'ஐயா உள்ளே வரச் சொன்னாரு' எனத் தெரிவித்தான்.

உள்ளே போன கந்தன் ஒரு நொடி திகைத்து நின்றான்.

ஒரு தலைவனின் வீடு எப்படி இருக்கும் என இதுவரை கற்பனையில் கூட சிந்தித்திருக்காத அவனுக்கு உள்ளே பார்த்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

பதப்படுத்தப்பட்ட மான் தலைகளும், கொம்புகளுடன் கூடிய காட்டெருமைத் தலைகளும் அங்கங்கே நிறுத்தப்பட்டிருந்தன. சந்தனத்தில்
இழைக்கப்பட்ட சிலைகளும், தேக்கினால் செய்யப்பட்ட சிற்பங்களும் அறை முழுதும் பரவிக் கிடந்தன. நல்ல தேக்கினால் செய்யப்பட்ட ஒரு
உயர்ந்த கட்டில் நடுவில் இருத்தப்பட்டு, அதில் முத்துராசா வீற்றிருந்தார். அகில், சந்தன வாசம் அறை முழுதும் மணம் வீசியது.
முத்துராசாவுக்கு பக்கத்தில் இன்னும் சில ஆட்கள் உட்கார்ந்திருந்தனர்.


"இந்தப் பையன் என்னமோ பார்த்தேன்னு சொல்றான்! அது எனக்கும் கொஞ்சம் முக்கியமானதாப் படுது! அவன் வாயாலியே அதைக் கேளுங்க!" எனப் பூசாரி கந்தனை முன்னே தள்ளினார்!

'என்ன விசயம் தம்பி? பூசாரி என்ன சொல்றாரு?' என அன்புடன் கேட்டார் முத்துராசா!
************************

அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP