Sunday, July 30, 2006

வாழும் புன்னகையே! வருத்தம் விடு!

வாழும் புன்னகையே! வருத்தம் விடு!




வாழும் நாட்களிலே சோதனைகள் சில வரலாம்!
பாழும் உலகிதென்று வேதனையும் நாம் படலாம்!
மீளும் வழி ஏதென்று முயற்சிகள் செய்திடலாம்!
நாளையது மறந்து போய் நாட்களும் நகர்ந்திடலாம்!

ஆனால்.......,

வாழும் நாட்களே வேதனையாய்ப் போனதிங்கு!
பாழும் உலகினையே பழித்திங்கு வாழ்ந்திட்டாய்!
மீளும் வழி கிடைத்து முன்னேற்றம் அடைந்திட்டாய்!
நாளும் வளர்ந்திடவே நாள்தோறும் உழைத்திட்டாய்!

அடுத்த வீட்டுத் திண்ணையிலே அலங்காரமாய் வீற்றிருந்து
மிடுக்காய்ப் சொல்விடுத்து ஊராரைக் கவர்ந்திட்டு
துடுக்காய் வாழ்ந்தே துணையின்றிப் போய்ச்சேர்ந்த
அடுக்கான கதையென்று ஆயிரம் இங்குண்டு!

தன் நினைவில் திடம் வைத்து
தன் மனதில் அதை வளர்த்து
தன் காலம் முடியுமட்டும்
தன் நோக்குப் போல் வாழ்ந்து
தன்னோடு சிலரையும்
அதுபோலப் பாவித்து
தான் போன பின்னாடி
தன் நட்பைத் துணைக்கழைத்து
சென்றிட்ட அத்தைகள்
ஆயிரம் இங்குண்டு!

ஒவ்வொரு நிகழ்வுமே ஒரு நினைவை கொண்டு வைக்கும்
அவ்வாறு இதுவென்று அளவிட்டு மனம் பதைக்கும்
பாவியவள் கதையின்று என்கதையை ஒத்ததென்று
ஒருவாறு உள்ளமும் உணர்ந்தே துடித்துவிடும்!

ஆனால்.....,

உன்கதையோ அதுவல்ல!
எம் கதையை ஒத்ததல்ல!
தம்மோடு இணைத்திங்கு
விம்மிவிடும் நிகழ்வல்ல!

கட்டிய மனைவியிங்கு
முட்டியிலே அடிபட்டு
கட்டுகள் போட்டே
கட்டிலில் கிடக்கின்றாள்!

அன்றொரு நாள் அது போன்ற
துன்பமான நிகழ்வொன்றை
இன்று நான் ஒப்பிட்டு அவள்
துன்பம் உணர்கின்றேன்!

ஆனால்....,

நீ பட்ட பாடுகளை
நீள்கவிதையில் நீ வடிக்க,
மீளாச் சோகமன்றி
வேறொன்றும் உணரவில்லை!

உன் வலியின் தாக்கமது
என் மனதைத் தொட்டாலும்
நான் உணராக் காரணத்தால்
அனுதாபம் கொள்ளலன்றி
ஒரு வகையும் தெரிந்திலனே!

தெரிந்தவர் வீட்டினிலே சாவொன்று நிகழ்ந்தது
விரைந்தங்கு சென்றிட்டேன் மறைந்தவரின் நட்பெண்ணி
"பிரிந்தவர் உறவுக்கு பேரிழப்பு அது" என்று
புரிந்தாலும் எனை அதுவும் பலமாகத் தாக்கவில்லை
வருத்தத்தைத் தெரிவிப்பது மட்டுமே அல்லாமல்
வேறெதுவும் செய்யாமல் திகைத்தங்கு நின்று விட்டேன்

அவரவர் வலியின் பாரம்
அவரவர் வலியின் கோரம்
அவரவர் வலியின் சோகம்
அவரவரே உணர்ந்திடுவர்!

அடுத்தவர் என்னதான் அகமுடைந்து போனாலும்
தடுக்க இயலவிலையே எனத் துவண்டு போனாலும்
விடுத்தங்கே செய்வதெல்லாம் அனுதாபம் காட்டலன்றி
அடுத்திங்கே செய்வது என்னவென யாரறிவார்!

எனவே........,

தோழி நீ கலங்காதே! துவண்டிங்கு போகாதே!
வாழுகின்ற காலமட்டும் நாமிங்கு கூடி நிற்போம்!
வழித்துணையாய் வந்திடுவோம்! வலியதனைக் குறைத்திடுவோம்!
வீழுகின்ற நாட்களினிப் போனதென்று நீ உணர்வாய்!

எதிர்நீச்சல் போட்டின்று இன்னல்களைத் துரத்தி நின்றாய்!
புதுவாழ்வு கண்டிடவே புத்தொளியாய்ப் பூத்துவிட்டாய்!
இதுவரையில் பட்ட துன்பம் போதுமடி உந்தனுக்கு!
இதமாகச் சொல்கின்றேன்! இன்பமுறச் சிரித்திடுவாய்!

அனுதாபம் கண்டிங்கு அஞ்சி நீ நிற்காதே!
உன் சோகம் தனை உணர்ந்து சொன்னதென்று புரிந்திடுவாய்!
மென்மேலும் வளர்ந்திடவே வாழ்த்துகின்ற ஊக்கமிது!
இனிமேலும் கலங்கி நீ துன்பமதைக் கொள்ளாதே!

"வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வண்கணார் இல்"
எனும்
வள்ளுவன் வாக்கினை மனதில் கொண்டு......
வாழும் புன்னகையே! வருத்தம் விடு!

[வாழும் புன்னகை வித்யாவின் சோகமும் வருத்தமும் உணரப்படுபவை அன்று!
மாறாக, இப்படியா? என அலற வைக்கும் கோரம்!
அவர் மனவருத்தத்துடன் எழுதிய பதிவினைப் பார்த்ததும் என் மனதில் தோன்றியதை வார்த்தைகளில் வடித்திருக்கிறேன்,
ஆக்கபூர்வமான கருத்துகள் மட்டுமே இடவும் என அன்புடன் வேண்டிக் கோள்கிறேன்!
நன்றி!
வணக்கம்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP